16.5.06

விதிவிலக்குகள்



‘இவங்க திருச்சியில் இருந்து வந்துருக்காங்க...’ எனது சீனியர் அட்வோகேட் சுட்டிக்காட்டிய பெண்ணை, இருக்கையில் மேலும் வசதியாக அமர்ந்தபடி நேராகப் பார்த்தேன். வயது முப்பத்தி ஐந்துக்கு அதிகமாக இருக்காது. முகப்பவுடர் தேவையேயில்லாத நல்ல சிவந்த நிறம் என்றாலும், அதிகமாக முகபவுடர் கவனம் எடுத்துக் கொண்டு பூசியிருந்தது போலத் தோன்றியது. குண்டு என கணிக்கலாம் என்றாலும் உயரத்தைக் கணக்கில் எடுக்கையில், ‘நல்ல தாட்டியான உடம்பு’ என்பதுதான் சரியாக இருக்கும். வடிவான முகம். ஒரு வழக்குரைஞரின் அலுவலகத்துக்குப் சற்றும் பொருத்தமில்லாத வகையில் அளவுக்கு மிஞ்சிய நகைகள் கழுத்திலும் கைகளிலும் பளபளத்தன. ஏதோ நேர்முகத்தேர்வுக்கு வந்திருப்பவரைப் போல கண்களில் ஒரு மிரட்சியுடன், இருக்கையின் விளிம்பில் அமர்ந்து மேசையில் கையூன்றியிருந்தார். நான் அந்த அறையின் வாசலைப் பார்த்தபடி சீனியரின் மேசையின் பக்கவாட்டில் இருக்கும் வழக்கமான எனது நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அந்த அறைக்கும் சாலையில் முகம் பதித்திருந்த முன்பக்க அறைக்கும் இடையே வாசல்தான். கதவு எதுவும் கிடையாது. சாலையில் இருந்து அலுவலகத்துக்குள் நுழையும் எவரும், என் கண்ணோடு கண் பொருத்தாமல் உள்ளே வர முடியாது. பல சமயங்களின் இந்த நாற்காலி இருக்குமிடத்தின் முக்கியத்துவம் கருதி, புதிதாக வரும் கட்சிக்காரர்கள், எதிரே இருக்கும் சீனியரை கவனிக்காமல் ‘நான்தான் பெரிய வக்கீல்’ என்ற எண்ணத்தில் என்னிடம் பேச ஆரம்பித்து விடுவதுமுண்டு.

என் கண்கள் அந்தப் பெண்ணின் மீது பதிந்திருந்தாலும், மனது, அவர் என்னைப் பார்த்து கைகூப்பியதையோ, அவருக்கு அடுத்த நாற்காலியில், அந்தப் பெண்மணியின் தோற்றத்துக்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் சாதாரண சட்டை வேட்டியில் கறுத்த நிறத்தில், கிராமத்து மனிதரைப் போல இருந்தவர் தானும் சற்று எழுந்தபடியே கைகூப்பியதையோ பொருட்படுத்தாமல், இன்னமும், முன் அறையில் இருந்த பெஞ்சில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியின் மீதே பதிந்திருந்தது.

சற்று நேரம் முன்பு, சிறிது தாமதமாக அலுவலகத்துக்குள் ஒருவித சலிப்போடு நுழைந்த எனக்கு ‘வீட்டுத்தோட்டத்தில் எதிர்பாராமல் பூத்த மலரைப்’ போல உற்சாகத்தைத் தந்தது அந்தச் சிறுமிதான். வழக்குரைஞர் அலுவலகங்களில் எப்போதாவதுதான் இப்படிப் பூ பூப்பதுண்டு. ஆர்வம் பொங்க, அவ்வறையில் இருந்த எல்லாப் பொருட்களையும் தொட்டு தொட்டுப் பார்த்துக் கோண்டிருந்தவள் திடீரென என்னை அருகில் பார்த்ததில் முகத்தில் ஒரு சின்ன திகைப்பு காட்டி நின்றாள். ஆறு வயது இருக்கும். அந்த் முகத்தில் பொங்கிய குழந்தைத் தனத்தை விட அவளது உடைதான் வேடிக்கையாக இருந்தது. வெள்ளை அரைக்கால் சாராய்க்குள் பொருத்திய வெள்ளை சட்டை, காலைப் பிடித்த காலுறை, கேன்வாஸ் ஷ¥ சகிதமாக, விளையாட்டுப் பயிற்சிக்கு போகும் ஒரு சிறுவனைப் போல இருந்தாலும் சிறிதாக வைக்கப்பட்ட சிவப்பு பொட்டும், காதிலாடிய கம்மல்களும் அவளை ஒரு பெண்ணாக அடையாளம் காட்டின. எப்படியோ குழந்தை! அதுவும் அலுவலகத்துக்குள்!! அவள் தலைமுடியை லேசாக கோதியபடியே உள்ளே நுழையும் போதுதான், இதோ, என் முன் அமர்ந்திருக்கும் பெண்ணை முதன் முதலாகப் பார்த்தேன். சீனியரிடம் கண்ணால் ஒரு வணக்கம் சொல்லியவாறே எனது இருக்கையில் அமர்ந்தவனிடம், அதுவரை எனது வருகைக்கு காத்திருந்தது போல ‘அவங்க திருச்சியிலிருந்து வந்திருப்பதாக’ ஆரம்பித்தார்.

‘சரி கொஞ்சம் இவங்க என்ன சொல்றாங்க, கேளு’ என்றபடி எனது கவனத்தை மீண்டும் ஈர்த்த சீனியர் அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘இப்ப சொல்லுமா’ என்றார். புதிய இடம், விநோத சூழல், அந்நிய மனிதர்கள்...முகத்தில் வேர்வை அரும்பியிருக்க சிறிது நேரம் தரையே பார்த்தபடி இருந்த அந்தப் பெண் திடீரென, ‘டாக்டருக்கும் எனக்கும் பழவாசலில் வச்சு கலியாணம் ஆச்சு’ என்று ரம்பித்தார்.

“டாக்டரா? யார்?” நான்.

“நீ இரும்மா. நான் சொல்றேன்” என்றவாறு இடைமறித்தார் அருகே அமர்ந்திருந்தவர்.

“நீங்க யாரு?”

“நான் இவளோட தாய்மாமங்க....எங்களுக்கு ஊரு தேனி பக்கம் கிராமங்க. இந்தப் பொண்ணு டாக்டர்கிட்ட மெடிக்கல் லேப் வேலை பாத்துதுங்க”

மீண்டும் டாக்டர் யார் என்பதைக் கேட்பதை விட வந்தவர்களை பேச விடுவது உத்தமம் என நினைத்து நான் பேசாமல் இருந்தேன். எனது எண்ணவோட்டத்தைப் புரிந்தவராக எனது சீனியர் சிகரெட்டை கையிலெடுத்தவாறு இடைமறித்தார், “ராமலிங்கமுன்னு திருச்சியில தனியா கிளினிக் வச்சுருந்தாரு. நம்ம கானா.மூனாவோட மருமகன்”

எனக்கு இப்போது கானா.மூனா யார் என்பதில் குழப்பம் நிலவியது. ஆனாலும் பேசாமல் தலையாட்டினேன். வந்தவரே தொடர்ந்தார், “ ரெண்டு வருஷம் அவர்கிட்ட இருந்துருக்குங்க. அதுக்குள்ள ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் இஷ்டப்பட்டுகிட்டு கலியாணம் கட்டிக்கிட்டாங்க’ என்றார். முதலில் அந்தப் பெண் ‘டாக்டரை தான் கலியாணம் செய்து கொண்டதாக’ கூறியது, எனது சீனியர் கானா.மூனாவோட மருமகன் என்று சொல்லியதோடு பொருந்தாமல் எங்கோ இடித்தது.

வந்தவரை இப்போது கையமர்த்தி எனது சீனியரே தொடர்ந்தார். “கேளு. டாக்டருக்கு ஏற்கனவே கலியாணம் ஆகி, தஞ்சாவூரில் மெடிக்கல் படிக்கும் ஒரு பையன் இருக்கிறான். ஆறு வருஷத்துக்கு முன்னால அவர்கிட்ட லேப் டெக்னீஷியனாக இருந்த இந்த அம்மாவோட தொடர்பு ஏற்பட்டுருக்கு. அந்தக் குழந்தை இவருக்கும் டாக்டருக்கும் பிறந்ததுதான். பின்னால கலியாணம் செஞ்சுகிட்டதா சொல்றாங்க. எப்படியோ, இதனால டாக்டர் வீட்டில பிரச்னை. என்ன ஆச்சோ, பழநிக்கு சாமி கும்பிடன்னு போன டாக்டர், அங்கே சூசைடு பண்ணிகிட்டாரு. வெளியெல்லாம் டாக்டர் ஹார்ட் அட்டாக்கில செத்துட்டதா சொல்றாங்க. ஆனா உண்மையில சூசைடுதான் பண்ணிகிட்டாரு’

சீனியர் சாதாரணமா சொன்ன இந்த வாக்கியத்தில் அதிர்ந்து போனேன். கண்கள் வெளியே எங்களது குமாஸ்தாவுடன் இப்போது எதையோ பேசிக்கொண்டிருந்த குழந்தையை தேடியது.

ஓரளவுக்கு விஷயம் புரிபடுவது போல இருந்தாலும் கேட்டேன், “சரி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. கலியாணம் எப்படி செஞ்சுகிட்டீங்க. ரிஜிஸ்டர் பண்ணீங்களா?”

“ரிஜிஸ்டரெல்லாம் பண்ணல. டாக்டர் அதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாரு. னா பழவூர் கோவிலில எனக்குத் தாலி கட்டினாரு. பூசாரிதான் நடத்தி வச்சாரு.”

“சரி, கலியாணம் முக்கியமில்லை. இந்தப் பொண்ணோட பர்த் சர்டிபிக்கட்டில அவர் பெயர் இருக்கா?”

“இல்லீங்க. அவர் பெயரை மாற்றிக் கொடுத்தார். அவருக்கு அதில ரொம்ப பயங்க. ஸ்கூல்ல கூட அவர் பெயரைக் குடுக்கக் கூடாதுன்னுட்டார். ரொம்ப அப்புராணிங்க அவரு” என்றார் பரிதாபமாக.

“ஆனா, நிறைய் பேருக்கு டாக்டர் இவங்க கூட இருந்ததும், இது அவர் குழந்தைதாங்குறது தெரியுமுங்க” கூட வந்தவர் அவசரமாக கூறினார்.

“ஆமாம். ஆமாம்” அந்தப் பெண் வேகமாக தலையாட்டினார்.

“சரி சொல்லுங்க, டாக்டருக்கு சொத்து, கித்து இருக்கா?” வந்தவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்டு நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்.

“அது நிறைய இருக்குதுங்க. திருச்சியிலேயே நிறைய வீடு, நிலம் இருக்குதுங்க. இங்க மதுரையில கூட இருக்கு” தாய்மாமன் பதிலளித்தார்.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் சொல்றங்க...” என்றவாறு அந்தப் பெண் தொடர்ந்தார்.

“டாக்டர் வீட்டம்மா அவ்வளவு சரியில்லங்க. அடிக்கடி எங்கிட்ட சொல்லி அழக்கூட செய்திருக்காரு. பின்னால எனக்கும் அவருக்கும் பிடிச்சுப்போயி இவ உண்டாயிட்டாங்க. எங்க மாமா எல்லோரும் சொல்லி டாக்டர் என்னை கலியாணம் செய்துகிட்டாரு. அதுக்கப்புறம் நான் டாக்டர்கிட்ட வேலை பாக்கல. பொன்மலையில அவரோட வீடு ஒன்னு இருக்குது. அங்கதான் நாங்க இருந்தோம். எங்க விஷயம் தெரிஞ்சு போயி டாக்டர் வீட்டில ரொம்ப பிரச்னையாயிருச்சு. அடிக்கடி வந்து அழுவாரு”

அந்தப் பெண், எழுதி வைத்ததை வாசிப்பது போல எந்தவித தயக்கமுமில்லாமல் சொல்லிக்கொண்டே வந்தார். என் கண்கள் அவ்வப்போது முன்னறைக்கு அலைபாய்ந்தாலும் உன்னிப்பாக அவர் சொல்வதை கேட்டுக்கொண்டே வந்தேன்.

“இந்தப் பொண்ணு கூட வளர்ந்துட்டுது. நிறைய பீஸ் கொடுத்து பெரிய பள்ளிக்கூடத்துல எல்லாம் சேர்த்தாரு. நல்லா செல்வழிப்பாருங்க! அதுல எதுவும் குறையே வைக்கல. இந்த நகையெல்லாம் அவர் வாங்கிக் கொடுத்ததுதான்”

“ஆமாம் பெருசா பண்ணிப்புட்டாரு” தாய்மாமன் தனக்குள் முணுமுணுத்தார். அதைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் தொடர்ந்தார், “இந்தப் பொண்ணு ஸ்கூலுக்குப் போன பிறகுதான் டாக்டர்கிட்ட நாங்க இருக்கிற வீட்டை என் பெயருக்கு எழுதித்தர சொன்னேன். செய்யிற வேலையையும் விட்டாச்சு. ஒரு பொம்பளைப் புள்ளையும் ஆச்சு. எனக்குன்னு என்னங்க பாதுகாப்பு. அதனாலதான் கேட்டேன். டாக்டர் அவரோட சம்சாரத்துக்கிட்ட இதப்பத்தி சொன்னப்போ அந்தம்மா அவரைப் போட்டு பாடாப்படுத்திட்டாங்க. அவங்களோட ‘டார்ச்சர்’ தாங்க முடியாம பழநிக்கு சாமி கும்பிடப் போறன்னு போனவர் அங்கயே செத்துப் போயிட்டாருங்க” கண்களில் பொங்கிய கண்ணீர் அவரை மேலும் பேச விடவில்லை. நாங்கள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம்.

இதற்குள் தனது சிகரெட்டை முடித்திருந்த சீனியர் என் பக்கம் திரும்பி, “இப்ப டாக்டர் சம்சாரம் திருச்சியிலிருந்து இங்க மதுரைக்கு வந்துட்டாங்க. இப்ப அங்க திருச்சியில இருக்குற டாக்டரோட சொத்தையெல்லாம் கிரயம் பண்ண ஏற்பாடு செய்யிறாங்களாம். அதான் ஏதாவது செய்யுங்கன்னு இங்க வந்திருக்காங்க”

“இவ இருக்கிற வீட்டையும் விக்கிறாங்களாம். யாராரோ வந்து மிரட்டிட்டுப் போறாங்க. அதுவும் போச்சுன்னா இந்தப் பொண்ணும் புள்ளையும் நடுத்தெருவிலதான் நிக்கணும்” என்றார் தாய்மாமன் வேகமாக.

“சரி, நீங்க இப்போ வீட்டுச் செலவுக்கு என்ன பண்ணுறீங்க?” அவர் இவ்வளவு சொன்னதை நம்பாதது போல ஒலித்தது எனது கேள்வி.

“எனக்கு இப்போ வேலை ஒண்ணும் இல்லீங்க. அவர் வாங்கிக் கொடுத்த நகைகளை வித்துதான் காலத்தை தள்ளுறேன். வேற் ஏதும் வழியில்லைன்னா இவளைக் கூட அந்த ஸ்கூலிலிருந்து எடுக்கணும்” விதி தன்னைச் சுற்றி கோரமாக ஆடுவதை அறியாத அந்தக் குழந்தையோ இன்னமும் வெளியே விளையாடிக் கொண்டு இருந்தது.

“சரி, என்ன சொல்ற. இவங்க ‘ரைட்’ என்ன?” சீனியர் என் முகத்தைப் பார்த்தார். “இருங்க சொல்றன்” பின்னால் எட்டி புத்தகத்தை எடுத்தேன். அடுத்த அரை மணி நேரமும் புத்தகங்களோடு கழிந்தது. இந்துக்களுக்கான சொத்துரிமை பற்றிய சட்டப்புத்தகத்தில் கிடைக்க வேண்டிய விடை ‘திருமணச் சட்டத்தில்’ இருந்தது.

“இதைப் பாருங்க. நைண்டீன் செவண்டி சிக்ஸ் அமெண்ட்மெண்ட்” என்றவாறு புத்தகத்தை சீனியரின் கைகளில் திணித்தேன். அவர் அதைப் படித்துக் கொண்டிருக்கையிலேயே தொடர்ந்தேன், “ நல்லவேளை இந்த புரொவிஷனை எழுவத்தி ஆறில் திருத்தியிருக்காங்க. இல்லையென்றால் அவ்வளவுதான்” என்றவன் அந்தப் பெண்மணி பக்கம் திரும்பி, “ஒருத்தர் ஏற்கனவே கல்யாணம் கியிருக்கும் போது திரும்பவும் பண்ணிகிட்டா, அது சட்டப்படி செல்லாது. அதனால உங்க கல்யாணமும் செல்லாது. ஆனா, சட்டப்படி செல்லாத கல்யாணம் மூலம் பிறக்குற குழந்தைகளும் மற்ற குழந்தைகள் மாதிரிதான். ஆனால் அப்படிப்பட்ட குழந்தைகள் அதனோட அப்பா, அம்மா சுயமா சம்பாதித்த சொத்தில் மட்டும்தான் மற்ற குழந்தைகள் போலவே பங்கு கேட்க முடியும். நீங்கள் உங்களுக்கு சொத்து எதுவும் கேட்க முடியாது ஆனால் வேற ஒன்று இருக்கு” என்று சிறிது மூச்சு வாங்கியவன், “உங்களுக்கு சொத்தில் உரிமை இல்லைன்னாலும், சாகும் வரை டாக்டருடன் தொடர்ந்து ஒரு மனைவி மாதிரியே வாழ்ந்ததை நிரூபித்தால்...டாக்டருடைய சொத்தில் இருந்து வரும் வருமானத்தில் இருந்து மாதாமாதம் மெயிண்டெனன்ஸ் கேட்க முடியும். சட்டத்தில இப்படி தெளிவா இல்லைன்னாலும், நிறைய தீர்ப்பு இதுக்கு சாதகமா இருக்கு...” என்றேன் உற்சாகமாக. அவர்கள் இருவரும் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தனர், எதுவும் பேசத் தோன்றாமல். நான் பேசுவதை அவர்கள் புரிந்து கொண்டார்களா என்ற சந்தேகம் திடீரென தோன்ற, சட்டென்று நிறுத்தி, “ஆமா, டாக்டருடைய தனிப்பட்ட பெயரில் எத்தனை சொத்துக்கள் இருக்கும்?” என்றேன்.

“அது நிறைய இருக்கும் சார்...ரெண்டு மூணு கோடி மதிப்பு இருக்கும்” என்றார் தாய்மாமன் இளக்காரமான ஒரு தொனியில்.

“சரி, டாக்டருக்கு ஒரு மகந்தானே”

“மாம். ஒரு பையந்தான். போன வருஷந்தான் மெடிக்கல் சேந்தாரு”

புத்தகத்தில் இருந்து தலையை தூக்கிய சீனியரிடம், “ஸ்டெரியிட் கேஸ். இந்தம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டு, அது டாக்டரோட குழந்தைன்னு புரூவ் பண்ணிட்டா போதும். மூணுல ஒரு பங்கு இவங்க குழந்தைக்கு. கோர்ட் பீஸ் கூட கட்ட வேண்டாம். பாப்பர் கேஸா போட்டுரலாம்” சொத்துக் கணக்கை வைத்து என் மனதில் பீஸ்கணக்கு ஒன்று தனியாக ஓடிக் கொண்டு இருந்தது.

பேசாமல் இருந்த சீனியரை மேலும் உற்சாகப்படுத்துவதாக நினைத்து, “கேஸ் முடியற வரைக்கும் எல்லாம் காத்திருக்க வேண்டாம். உடனே ஒரு சூட்டை பைல் பண்ணிட்டு எந்தச் சொத்தையும் விக்கக்கூடாதுன்னு ‘இண்டெரிம் இன்ஜக்ஷன்’ ஒன்னு வாங்கிரலாம். தன்னால வழிக்கு வந்துருவாங்க”

“எல்லாச் சொத்தும் இல்லீங்க. அந்த வீடுதான்...வாங்கிக் கொடுத்துட்டீங்கன்னா போதும்” அந்தப் பெண்.

“அட நீங்க வேற! உங்க பொண்ணுக்கு டாக்டருடைய எல்லா சொத்தில இருக்குற ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் மூணுல ஒரு பங்கு ரைட் இருக்கு. அவங்க ஒண்ணும் பண்ண முடியாது”

அதற்கு மேலும் பொறுக்க முடியாத சீனியர், “இல்லடா! அவங்க சமரசம் பேச சொல்றாங்க. கானா.மூனா நம்ம டிஸ்ட்ரிபியூட்டர் அசோசியேஷன் தலைவர் இல்லையா? அதான்” இப்போது எனக்கு கானா.மூனா யாரென்று தெரிந்தது. தென்மாவட்டங்களில் திரைப்பட விநியோகத்தில் முக்கியமான புள்ளி. சீனியர் மீது மரியாதை வைத்திருப்பவர்.

“கானா மூனாவோட பேசினேன். அவரானால்...எதுவானாலும் எம்மகதான். நான் அவள் விஷயம் எதிலும் தலையிட முடியாதுன்னுட்டார்” சீனியர். சில நிமிடங்கள் இப்போது உள்ளே வந்து அப்பெண்ணின் மடிமீது அமர்ந்த குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“எனக்கொரு யோசனை. அந்தப் பையன் மெடிக்கல் படிக்கிறதா சொன்னீங்களே. அவனோட முதல்ல நாம பேசுவோம். பின்னால அவன் மூலமா அவங்க அம்மாகிட்ட பேசுவோம். அவனை இங்கே கூப்பிட முடியுமா?” நான்.

“சரி, கானா மூனாட்ட சொல்லி அவனை இங்க நாளைக்கு அனுப்ப சொல்றேன். பார்க்கலாம்” என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்தார் சீனியர். அவர்கள் கிளம்புவதற்கு முன்னர் குமாஸ்தாவிடம் சொல்லி, ஒரு சாக்லேட் பார் வாங்கி வரச் செய்து அந்தக் குழந்தையிடம் கொடுத்தேன். நான் கொஞ்சம் ஓவராக போகிறேனோ என்று சீனியர் நினைத்துக் கொள்ளப்போகிறார் என்று சிறிது பயமாகவும் இருந்தது.

***
அடுத்த நாளும் அந்தக் குழந்தை அதே மாதிரி வெள்ளை உடையில். வேறு உடைகள் இல்லையா? இல்லை எடுத்து வரவில்லையா? என்று சந்தேகமாக இருந்தது. எப்படியோ நன்றாகத்தான் இருந்தது. சிறிது நேரத்திலேயே கானா மூனாவின் மானேஜர், டாக்டருடைய மகனை அழைத்து வந்து விட்டார். எனது எதிர்பார்ப்புக்கு மாறாக ‘பால் வடியும் அப்பாவித்தனமான’ முகம் கொண்ட சிறுவன். கண்கள் அலைபாய்ந்தபடி இருந்தன. ‘நானே பேசுகிறேன்’ என்று சீனியரிடம் சொல்லி அவனை முன்னறைக்கு அழைத்துச் சென்றேன். நான் இந்தத் தொழிலுக்கு வந்து சுமார் ஒரு வருட காலமே கழிந்திருந்ததால், திரைப்படங்களில் காண்பது போல வியத்தகு திருப்பங்கள் வாழ்க்கையிலும் ஒரு விநாடி நேரத்தில் நிகழ்வது சாத்தியம் என்று நினைத்திருந்தேன். நன்றாக மூச்சை வாங்கிக் கொண்டு, நான் படித்த ச்¢ல கதைகள், பார்த்த திரைப்படங்களை மனதில் நிறுத்தி சீரான குரலில் ஆரம்பித்தேன், “தம்பி, இந்தக் குழந்தையை பாருங்கள். இது அந்தம்மாவுக்கு பிறந்ததாக இருக்கலாம். னால் இது உங்க அப்பாவுடைய குழந்தை. இதை யாரும் மறுக்க முடியாது. மேலும் அனைவருக்கும் இதை டாக்டர் ராமலிங்கம் மகள் என்றுதான் தெரியுமேயொழிய அந்தம்மாவின் மகள் என்று சொல்ல மாட்டார்கள். உங்களுடைய ரத்தம். உங்களுக்கும் வேறு தங்கை தம்பி கிடையாது. இது உங்கள் தங்கைதானே?”

முகத்தில் வேறு சலனமின்றி நான் பேசுவதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டு வந்ததால், நான் சொல்வதை அவர் மோதிக்கிறாரா என்றெல்லாம் கவலைப்படாமல் மேலும் தைரியம் கொண்டு நான் தொடர்ந்தேன், “உங்களுக்கும் தெரிந்திருக்கும். உங்க அப்பா இதை நல்ல ஸ்கூலில் படிக்க வைத்து வசதியாக வைத்திருந்திருக்கிறார். ஆனால் இன்று இந்தப் பிள்ளைக்கு வேறு வழியில்லை. உண்மையில் இவளுக்கு உங்க அப்பா சொத்தில் மூன்றில் ஒரு பங்கு உரிமை இருக்கிறதென்றாலும், இவர்கள் கேட்பது, அவர்கள் இருக்கும் அந்த வீடும், ஒரு லட்ச ரூபாயும். இந்தக் குழந்தைக்காகத்தான் அதுவும். நாளை வாழ வழியின்றி மோசமான நிலைக்கு இந்தப் பிள்ளை தள்ளப்பட்டால் அது உங்க அப்பாவுக்குத்தன் அசிங்கம். இன்று இந்தக் குழந்தை நல்ல டிரெஸ் போட்டிருக்கு. நாளை முடியுமா என்பது உங்கள் கையில்தான். உங்கள் தங்கையை கஷ்டப்பட நீங்கள் விடக்கூடாது..அது உங்கள் அப்பாவுக்கு செய்யும் மரியாதை”

நான் பேசியதில் எனக்கு மிகுந்த திருப்தியாக இருந்தது. எங்கும் இடறாமல், தடங்கலின்றி எதிராளி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமலேயே சீராக பேசி விட்டேன். பெரிய மனிதனைப் போல மற்றவருக்கு அலோசனை சொல்லி சமசர முயற்சியை கைக்கொள்ளுவதில் பெருமையாகவும் இருந்தது. வந்த சிறுவனோ பேசும் போது என் கண்களையே கவனித்து வந்தவன், வீட்டிற்கு போய் அவன் அம்மாவிடம் கேட்டுச் சொல்வதாக மட்டும் கூறி விட்டு சென்றான்.

சீனியரை அந்தப் பெண்ணுடனும், அவளது மாமனுடனும் பேச விட்டு நான் அந்தக் குழந்தையும் விளையாடிக் கொண்டிருந்த அடுத்த அரை மணி நேரத்தில் கானா மூனாவின் வீட்டிலிருந்து தொலைபேசி! அவரது மானேஜர்தான் சுருக்கமாக நான்கே வரிகள் சீனியருடன் பேசி வைத்து விட்டார். ‘டாக்டரின் மனைவி ‘ஒரு தம்படிக்காசு கூட இந்தப் பெண்ணுக்கோ அல்லது இவரது குழந்தைக்கோ தானாக கொடுக்க மாட்டராம். மூணு பங்கோ நாலு பங்கோ, இந்தம்மா கோர்ட்டில கேஸ் போட்டு வாங்கட்டுமாம். அவர்கள் கவலைப்படவில்லையாம்’

இதைச் சொல்லிவிட்டு சீனியர் அந்த்ப் பெண்ணின் மாமனிடம் திரும்பி, “வேறு வழியில்லை. அவர் பேசுவதைப் பார்த்தால் டாக்டர் பொண்டாட்டி இவங்க மேல ரொம்ப கோவமா இருக்காங்க போல இருக்கு. கொஞ்சம் விடாப்பிடியான பொண்ணுன்னு கானா மூனா கூடச் சொன்னார். எனவே கேஸ் போட்டுடலாம். திருச்சியில இல்ல இங்க மதுரையில போடலாம். என்ன சொல்றீங்க?” என்றார்.

மாமனோ அந்தப் பெண்ணைப் பார்த்தார். கலங்கிய கண்களுடன் தலையை தூக்கியவர், “கேஸ் எங்க போடணும்னு சொன்னீங்க?” என்று நேரடியாக சீனியரின் கண்களைப் பார்த்து கேட்டார்.

“திருச்சியலதான் போடணும். அதுதான் நல்லது. பையனே வந்து பைல் பண்ணி எல்லாம் பாத்துக்குவான். நான் டிரையலுக்கு வரேன்”

ஒரு நிமிடம் மெளனமாக இருந்தவர் திடீரென கண்களை நன்கு துடைத்துக் கொண்டார். நிமிர்ந்து நன்றாக உட்கார்ந்தபடி தெளிவான குரலில், “ரொம்ப நன்றிங்க சார். டாக்டர் பெயரை திருச்சியிலோ மதுரையிலோ இருக்கிற கோர்ட்டில் இழுப்பது அவருக்கு நான் செய்யிற துரோகம். அதை நான் செய்ய முடியாது. அவர் பெயர் வெளிய வராம கோர்ட்டில் போடாமல் ஏதாவது செய்ய முடியும்னா சொல்லுங்க. மற்றபடி எதுவும் வேண்டாம்”

ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தவன், சீனியரே பேசாமல் இருப்பதைப் பார்த்து நிறுத்திக் கோண்டேன். சீனியரின் மெளனத்திலேயே அவரது பதிலைப் புரிந்து கொண்டவராக அந்தப் பெண், “அப்போ நாங்க வாரோம். தேங்ஸ்...வாங்க மாமா போகலாம்” என்று எழுந்து எங்கள் பதிலுக்கு காத்திருக்காமலேயே அவரது குழந்தையின் கையைப் பிடித்து, அவரது மாமன் பின் தொடர கூட்டிச் சென்று விட்டார்.

அதற்குப் பிறகு அவர்கள் மூவரையும் நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பார்க்க நேரிட்டதில்லை என்றாலும், அடிக்கடி அவர்களை நினைக்க மறப்பதில்லை.....

***
பி.கு. சம்பந்தப்பட்டவர்களின் நலன் கருதி அவர்களது பெயர்களையும், ஊர்களையும் மாற்றியுள்ளேன். மற்றபடி எதுவுமே கற்பனையில்லாத உண்மைச் சம்பவம் இது.


2 comments:

Anonymous said...

Interesting website with a lot of resources and detailed explanations.
»

Anonymous said...

Greets to the webmaster of this wonderful site. Keep working. Thank you.
»