27.1.13

’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா?


’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பின்னர்தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்’ என்ற நீதிபதியின் உத்தரவு தேவையானதுதானா, என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அதற்கு இரு காரணங்கள் உள்ளன.

முதலாவது, அரசு முடிவு ஒன்றினை, சட்ட ரீதியில் அமைந்ததா (either legal or within the powers/jurisdiction) என்பதை ஆராய சட்டப்பிரிவுகளையும் முன் தீர்ப்புகளையும் (Precedents) ஆராய்வதுதான் நீதிமன்றத்தின் முக்கியப் பணி. அவ்வாறு ஆராயும் பொழுது பொருண்மை சார்ந்த விடயங்களை (Issues of fact) கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் ஒரேடியாக நிராகரித்து விடமுடியாதுதான். ஆனால், சம்பந்தப்பட்ட முடிவு எடுக்கப்படுகையில் அரசின் முன்னிருந்த தகவல்களை/காரியங்களை (Materials) மட்டுமே நீதிமன்றம் கருத்தில் கொண்டால் போதுமானது. அதாவது, அவ்விதமான முடிவினை எடுப்பதற்கு அரசின் முன்னிருந்த தகவல்கள்/காரியங்கள் சரியானவையா அல்லது போதுமானவையா என்று ஆராய்வது மட்டுமே நீதிமன்றத்தின் அடுத்த பணி.

விஸ்வரூபம் பிரச்னையில், திரைப்படத்தினை அரசு அதிகாரி எவரும் பார்க்கவில்லை. எனவே அரசு உத்தரவானது திரைப்படத்தைப் பார்த்து எடுக்கப்படவில்லை. எனவே அரசின் முன் இல்லாத ஒரு ஆவணத்தை நீதிமன்றம் பரிசீலிக்க ராஜ்கமல் நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கில் பார்க்க தேவையில்லை என்றே கருதுகிறேன்.

இரண்டாவது காரணம், நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்கு விஸ்வரூபம் படத்திற்கு அளிக்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றோ அல்லது எவரையேனும் அவமானப்படுத்துவதால் (Defame) அல்லது பிற காரணங்களுக்காக தடை செய்ய வேண்டும் என்றோ அல்ல. அப்படியான வழக்குகளில், நீதிமன்றம் திரைப்படத்தினை பார்க்கும் அவசியம் எழுகிறது.

ஆனால், தற்பொழுது உள்ள வழக்கு இத்திரைப்படம் வெளியிடப்பட்டால் எழும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை தவிர்க்கும் வண்ணம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர்களை அரசு கேட்டுக் கொண்ட உத்தரவு சரியானதுதானா என்பதை ஆராயும் வழக்கு. 144 தடை உத்தரவு என்பது தற்காலிகமானது.

ஏனெனில், நான் அறிந்தவரை திரைப்படத்தினை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசிற்கு இல்லை. விஸ்வரூபம் இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருந்தாலோ அல்லது இதன்மூலம் இரு சமுதாய மக்களுக்கிடையே பகைமை தூண்டிவிடப்பட்டாலோ, அதற்கான பிரிவுகளின்படி குற்ற வழக்கு தாக்கல் செய்து திரைப்படத்தின் பிரதிகளை கைப்பற்றலாம். ஆனால் அவ்விதமான தீவிர முடிவினை விஸ்வரூபம் பிரச்னையில் எடுக்க போதிய அடிப்படையோ, ஆதாரமோ இல்லை.

எனவே, அரசு உத்தரவிற்கு அடிப்படை இஸ்லாமிய அமைப்புகளின் புகார் மற்றும் அவர்களின் மிரட்டல். முக்கியமாக, அந்த மிரட்டலை செயல் வடிவம் கொடுத்து, மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்ப்படுத்தும் அவர்களது ஆற்றல் ஆகியவைதான். இம்மிரட்டலை செயலாக்கி அதனால் பொது அமைதி கெடக்கூடும் என்று கருதுவதற்கு அரசுத்தரப்பில் ஏதேனும் ரகசிய தகவல்கள் (Intelligence Report) போன்ற காரியங்கள் உள்ளனவா? அவை எவ்வளவு தூரம் நம்பத்தகுந்தவை? அப்படியே இருந்தாலும் அப்பிரச்னைகளை சமாளிக்க அரசிடம் போதிய வலு இல்லையா? என்பதைத்தான் நீதிமன்றம், என்னுடைய கருத்தின்படி, ஆராயத் தேவையே தவிர படத்தின் உள்ளடக்கத்தை வைத்து அல்ல.

திரைப்படம் இஸ்லாமியர்களை புண்படுத்துவதாக இல்லை என்று நீதிபதி கருதினாலும், இஸ்லாமிய அமைப்புகள் விடுத்த மிரட்டலை தக்க முறையில் சமாளிக்க போதிய நடவடிக்கை (to mobilize forces) எடுக்க நேரம் தேவைப்படுகிறது என்று அரசு கூறினால், நீதிமன்றம் பொது அமைதியை கருத்தில் கொண்டு அதனை ஏற்றுக் கொள்ளலாம்.

உதாரணமாக பொதுக்கூட்டம் நடத்துவது சட்டரீதியில் நமது உரிமைதான். ஆனால் தற்பொழுது பொது அமைதியை கருத்தில் கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளது. அதனால் அங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொள்கிறது.

அதே போல, இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக நீதிபதி கருதினாலும், 144 தடை உத்தரவு அமுல்படுத்தும் அளவிற்கு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்ப்படாது என்று நீதிமன்றம் கருதினாலும் பாதிக்கப்பட்ட அமைப்புகளுக்கு காவலர்களிடம் தகுந்த குற்றப் புகார் அளிக்கவோ மற்றும் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவோ உரிமையளித்து அரசு உத்தரவினை தள்ளுபடி செய்வதுதான், ராஜ்கமல் நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கில் சரியான உத்தரவாக இருக்க முடியும் என்பது என்னுடைய கருத்து.

பல வழக்குகளில் நீதிமன்றங்கள், அதற்கே உரித்தான ஆர்வத்தில் (enthusiasm) அவ்வழக்கின் காரியங்களையும் மீறி மற்ற புறகாரணிகளையும் ஆராய முற்ப்படுகின்றன. அவை முழுமையான நீதியை (complete justice) வழங்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தின்பால் அமைந்தது என்றாலும் அநேகம் முறை வழக்கின் போக்கினை மாற்றி மேலும் குழப்பத்திற்குத்தான் வழி வகுக்கும் என்பது, நீதிபதிகளுக்கு தக்க மரியாதையுடன் நான் கருதும் எனது சொந்த கருத்து.

எது எப்படியெனினும், நீதிபதி அரசு உத்தரவினை ரத்து செய்வார் என்றே எண்ணுகிறேன்.

மதுரை
27/01/13 

5 comments:

சார்வாகன் said...

அருமை நண்பரே,
ஆகவெ வழக்கு கமல்ஹாசன் ,தமிழக அரசு இடையேதான். இப்போது நீதி மன்றம் அரசு உத்தரவை தள்ளுபடி செய்தால் அரசு உயர்நீதிமன்றம் செல்ல விரும்பாத நிலையில், சில இஸ்லாமிய தலைகள் தனிப்ப்ட்ட முறையில் பட வெளியீட்டுக்கு எதிராக தடை வாங்க இயலுமா?

நன்றி!!

PRABHU RAJADURAI said...

தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரலாம். ஆனால் அது சாத்தியமில்லை என்பது படத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி இணையத்தில் படித்து அறிகையில் தெரிகிறது

UNMAIKAL said...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் விஸ்வரூபம் அடுத்தது என்ன? என்ற தலைப்பில் விஷரூபத்திற்கு
பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன்,
விஷகருத்துகள் முறைதனா?
மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க வகையில் உரை நிகழ்த்தினார்.


இங்கே சொடுக்கவும் >>>>> விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா?

prasanna said...

Mr. Prabhu,

The handling of Vishwaroopam's release has been very political from the beginning. Kamal as a business man had clearly stated his intention to explore new business avenues considering the age of technology.

After settling the DTH issue and with impending release date, a group of bureaucrats cave in to a so-called protest by right wing protectors of a religion.

Now, with Mr. Venkataraman, the judge who viewed the film, also caving in to the Government pressure, I think "freedom of expression" is seriously under question!

When CBFC certifies a film and is deemed fit for a release, why does Government play a nanny role? This is Democracy at its worst and a classic example of either carrying a personal grudge against Kamalhassan by vested interest or suppressing free opinion of artists for the sake of the religious oppressors.

Now, where have all the moderate or liberal muslims gone? This raises the question of intolerance shown recently to a writer Manushyaputhiran.

Jesus. Live and let live! I think, you have vouched so much on Judge (before the judgement was passed) with questionable integrity. But I have to disagree strongly with the judgement!

To me what is more worrisome is the debatable judgement from a person supposedly defending the Constitution than the right-wing loonies!

கல்வெட்டு said...

பதிவிற்கு நன்றி
அரசின் 144 பற்றியோ அல்லது பொதுவான சட்டம் ஒழுங்கு பற்றியோ விவாதம் இல்லாமல் படத்தில் என்ன உள்ளது என்றே நகர்கிறது இந்தப் பிரச்சனை