31.5.08

பன்றிக்கறியா, பால்பவுடரா?

சிந்திக்க உண்மைகள்’ என்ற வலைப்பதிவு கர்த்தரின் கட்டளைக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பன்றி இறைச்சியினை உண்ணலாமா? என்ற கேள்வியினை தனது இடுகையொன்றில் எழுப்புகிறது. அதற்கு ஆதாரமாக, பன்றியிறைச்சியினை உண்ணலாகாது என்ற கிறிஸ்தவ வேதாகமத்தின் லேவியராகமத்து (Leviticus) வசனத்தையும் மேற்காட்டுகிறது.

உண்மைதான். ஆனால் லேவியராகமம் கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்த பழைய ஏற்பாட்டிலுள்ளது (Old Testament). இயேசுவின் போதனைகளோ பழைய ஏற்பாட்டின் விதிகளை அப்படியே புரட்டிப் போட்டன! தயக்கமோ அல்லது பிற காரணங்களாலோ, இயேசு தன்னை ஒரு நாத்திகராக அறிவிக்காமல், பழைய யூதேய மதத்தின் நீட்சியாகவே கருத்துகளை முன்வைத்தார்.

மோசே ‘பல்லுக்குப் பல்’ என்றால் இயேசு ‘ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு’ என்கிறார். ஆயினும் கிறிஸ்தவர்களும் வேறு வழியின்றி பழைய ஏற்பாட்டினையும் வேதமாக ஏற்றுக் கொள்கின்றனர்.

இயேசு சிலுவையில் அறையுண்ட பின்னர் அவரது சீடரான பேதுரு (Peter) கிறிஸ்தவ மதத்தினை கட்டியெழுப்பினார். அவருக்கு பன்றியிறைச்சி சாப்பிடும் ஆசை வந்ததோ என்னவோ தெரியவில்லை, இறைவனின் தரிசனத்தில், ‘அனைத்து ஜீவராசிகளும் அவரது படைப்பாயிருக்க, பன்றி மட்டும் எப்படி சுத்தமில்லாததாயிருக்கும்’ என்று வெளிப்படுத்தியதாக கூற...கிறிஸ்தவர்களுக்கு அனைத்தும் அனுமதிக்கப்பட்டது.

நல்லவேளை, பேதுரு தரிசனம் கண்டார்...இல்லை, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் மிஷனரிகளுக்கு விசுவாச அறுவடைகளுக்குப் பதிலாக ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கும். பின்ன! பால்பவுடருக்காக, முயல் கறியை தியாகம் பண்ண முடியுமா?

-oOo-

பேதுருவும், பாலும் (Peter and Paul) அனுமதித்தாலும், குஜராத் அரசு அனுமதிக்க மறுக்கிறது.

சமண மதத்தின் முக்கியமான விழா ஒன்றின் பொழுது தொடர்ச்சியாக ஒன்பது நாட்களுக்கு, ஆமதாபாத்தில் உள்ள கசாப்பு மையங்களை (slaughter house) மொத்தமாக மூடச் சொல்கிறார்களாம். ‘தொழில் செய்வதற்கான தங்களது அடிப்படை உரிமை’ (fundamental right to carry on trade) பாதிக்கப்படுவதாக கசாப்புக் கடைக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினால்...முடிவு வழக்கம் போலத்தான்.

நீட்டி முழக்கி பல பக்கங்களில் ஏதேதோ கூறிவிட்டு இறுதியில் ‘கொஞ்ச நாள்தானே, அசைவ உணவுப் பிரியர்கள் ஒன்பது நாட்களுக்கு சைவ உணவுக்காரர்களாக இருக்கலாம், தப்பில்லை’ என்று பிரச்னையை முடித்து வைத்துள்ளார்கள். (As already stated above, it is a short restriction for a few days and surely the non-vegetarians can remain vegetarian for this short period)

சில உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை படிக்கையில் சட்டம் சார்ந்த தீர்ப்பா அல்லது ஆராய்ச்சி மாணவர் சமர்ப்பிக்கும் கட்டுரையா என்ற சந்தேகம் வருகிறது.

தற்பொழுது எனது சந்தேகம் இதுதான். கசாப்புக் கடைகளை மூடி, தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தால் மட்டும், அசைவர்களை ஒன்பது நாட்களுக்கு சைவர்களாக்கி விட முடியுமா?

ஸ்பென்ஸருக்கு போனால், பன்றி, மாடு, எறா எல்லாம் உறைந்த இறைச்சியாக கிடைக்கிறது. அட! வீட்டிலேயே குளிர்ப்பெட்டிக்குள் வாங்கி வைத்துக் கொள்ளலாம். இல்லை, இருக்கவே இருக்கு உப்புக் கண்டம், கருவாடு!

மார்க்கண்டேய கட்ஜுவுக்கு தெரியுமா, கருவாட்டு வாசனை!

-oOo-



OLD FORT : NEW DELHI




மதுரை
31.05.08