17.1.08

அலங்காநல்லூர் சல்லிக்கட்டு படங்கள்

அலங்காநல்லூரில் இன்று சல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை வீர விளையாட்டு என்பதை விட திறமை விளையாட்டு (game of skill) என்பது வீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்று விளையாட்டினை பார்த்த எனக்கு தோன்றியது.

மாட்டினை அணையும் தூரம் சில அடிகளே! மாட்டிற்கு துன்புறுத்துதல் என்பது இல்லை. மாட்டினை அடித்தலோ வாலைப்பிடித்து இழுத்தலோ இல்லை. இழுத்த இரு வீரர்கள் உடனடியாக அகற்றப்பட்டனர். வாலைப்பிடித்து இழுத்தல் அணையும் வீரர் மாட்டிலிருந்து அகல வசதியாகவே செய்யப்படினும்.

முக்கியமாக வீரர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மற்றும் தோழமை எந்த ஒரு விளையாட்டிலும் காணமுடியாதவை...அது பற்றி விரிவாக எழுத வேண்டும்.

இப்போதைக்கு நான் கூற விரும்புவது, பதிவர்கள் எழுதிய பல விடயங்கள் இந்த வழக்கினை மேலெடுத்துச் செல்ல உதவும். உதாரணமாக, சுந்தர் கூறிய தற்காப்பு பேட் கட்டிக்கொள்வது. இந்த வழக்கில் யாரும் இதுவரை சிந்திக்காத ஒரு விடயம். அந்த யோசனைக்கு நன்றி....உச்ச நீதிமன்றத்தில் எனது பதில் மனுவில் இந்த யோசனையை தெரிவிக்கப்போகிறேன். நன்றி!

மதுரை
17.01.08



ATOP THE TREE TO SEE SALLIKATTU TO SEE BIGGER IMAGE CLICK THE PITCURE


FROM VADIVASAL INTO THE ARENA


ACTION IN THE ARENA


A FEW INCHES MORE TO VICTORY


HOWZAAT!


DEFEAT AND VICTORY


THE WINNER TAKES IT ALL


A CHALLENGE...


...ACCEPTED


FIREBALL


BRAVING THE SKY TILL THE END TO WITNESS THE VALOR - CHIVALRY OR IDIOCY

16.1.08

சக் தே! பில்லா மற்றும் சில படங்கள்...


Big Temple, Thanjavur


ஷோலேயைத் தவிர வேறு எந்த ஹிந்திப்படமும் எனக்குப் பிடித்ததில்லை பார்ப்பதிலும் விருப்பம் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தேன், ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா’ (Satya) பார்க்கும் வரை!

இத்தனைக்கும் நான் ‘சத்யா’ கேபிள் இணைப்பில் மோசமான ஒலித்தரத்துடன் பார்த்தேன். ஆனாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு என்னை சத்யா நினைவுகள் துரத்தியடித்ததற்கு முக்கிய காரணம், அதன் தெளிவான திரைக்கதை, திரைத் தொகுப்பு...முக்கியமாக அதன் யதார்த்தம்!

மும்பையில் எனது முதல் நாள் அனுபவம், சத்யாவின் முதல் நாள் அனுபவத்தை ஒத்திருந்ததும் ஒரு காரணம். தேவையற்ற இரு பாடல்களை எடுத்துவிட்டால்...ஹாலிவுட்டின் காட் பாதர் படத்திற்கு இணையான ஒரு படம்.

சமீபத்தில் நான் பார்த்த பிளாக் ஃபிரைடே (Black Friday) ஓரளவிற்கு சத்யா அனுபவத்தினை கொடுத்தது. மும்பை குண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் நடைபெற்ற புலன் விசாரணையைப் பற்றி எவ்வித பாரபட்சமும் இன்றி, எடுக்கப்பட்ட சுவராசியமான ஒரு படம். ஏறக்குறைய ஆவணப்படம் என்றாலும், விறுவிறுப்பில் எந்த ஒரு திரில்லர் ரக படத்திற்கும் குறைவில்லாதது. ஸ்பீல்பெர்க்கின் மியூனிக் (Munich) படம் போன்றதொரு முயற்சி.

சத்யா பெருவெற்றி பெற்றது என்றாலும், பிளாக் ஃபிரைடே என்னவாயிற்று என்று தெரியவில்லை.


***

பிளாக் ஃபிரைடே பற்றி எழுதுவதற்குள்ளாக மற்றுமொரு படம் நேற்று முன்தினம் பார்த்த ‘சக் தே இந்தியா’ (Chak De India)

ஷாருக் கான், இந்திய ஹாக்கி அணியின் தலைவர். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக பெனால்டி அடியில் கோட்டை விட்டு ‘துரோகி’ என்று பட்டம் சூட்டப்பட்டு, ஹாக்கி உலகிலிருந்தே துரத்தப்படுகிறார். ஏழு வருடங்கள் கழித்து எப்படி இந்திய பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக முன் வந்து அதனை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் வெற்றி பெறச் செய்கிறார் என்பதுதான் கதை!

படத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள்...

ஷாருக் கான் படம் முழுக்க மடித்து விட்ட கைகளுடன் கூடிய வெள்ளை நிற முழுக்கை சட்டையில் படம் முழுவதும் வருவது.

நம்மவர்களுக்கு எரிச்சலூட்டும் அவரது வழக்கமான ஏதோ குளிரில் நடுங்குவன் போல பேசும் பாணியை கைவிட்டு சாதாரணமாக பேசியிருப்பது.

உணர்ச்சியில் பொங்கி, ஓவர் ஆக்டிங் செய்யக்கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வாறு செய்யாமல் அமைதியாகவும், ஆழமாகவும் நடித்திருப்பது. இத்தாலி உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் பெக்கென்பர் (beckenbauer) இருந்த அளவிற்கு இறுக்கமாக இல்லையெனினும், தேவைப்படும் அளவிற்கே உணர்ச்சி காட்டியிருப்பது.

முதலில் ஷாருக் கான் விளையாடுவதாக காட்டப்படும் காட்சிகள் தவிர மற்ற அனைத்து ஹாக்கி காட்சிகளையும் மிகவும் உண்மைத்தன்மையுடன் (authentic) அமைத்திருப்பது.

காதல், கத்தரிக்காய் என்று எதுவுமில்லாததால், கதையின் ஓட்டத்தையே குலைக்கும் டூயட் என்ற அருவருப்பு இல்லாமலிருப்பது. ஆயினும் இரு பாடல்களை பின்னணியில் இணைத்து சிறிது சமசரசம் செய்யப்பட்டுள்ளது.

சந்தர்ப்பம் இருந்தும் தேசபக்தியை தூண்டாமலிருந்தது. இறுதியில் கொடியைத் தூக்கிக் கொண்டு கூட யாரும் ஓடுவது போன்று காட்டாத தைரியம்.

முக்கியமாக, மிகவும் முக்கியமாக இப்படிப்பட்ட வித்தியாசமான திரைக்கதையினை கையாண்ட இயக்குஞர், தயாரிப்பாளரின் துணிச்சல்.

படத்தில் உருத்திய விடயம் ஒன்றுதான். கிரிக்கெட்டில் இந்தியா தோற்றால் ‘ஒழிஞ்சுது சனியன்’ என்று மகிழும் எனக்கே, கிரிக்கட் மட்டையுடன் தாக்க வருபவரை தடுத்து ‘பின்னிருந்து அடிப்பது கோழைகளின் செயல்’ என்று ஷாருக் சொல்வது. மற்றும் காதலராக வரும் கிரிக்கட் வீரரை இறுதியில் சிறுமைப்படுத்தியிருப்பது. ஆயினும் இயல்பான கோபம்தானே! சரி, வயிற்றெரிச்சல் என விட்டு விடலாம்.

இயல்பான முகங்கள், சாதாரண உடைகள். பார்ப்பது ஹிந்திப்படம்தானா என்ற ஆச்சரியத்தினை ஏற்படுத்திய இவ்வித முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.


***

சக் தே பார்த்த பாவத்திற்காக நேற்று குழந்தைகளுடன் ‘பில்லா’ பார்த்து புண்ணியம் தேடிக் கொண்டேன். குட்டிப் பெண் ஒரு வாரமாக ‘பிக் டிவி’யில் (Big TV) சினிமா பார்க்க வேண்டும் என்று வேண்டியதால், சரி போவோமே என்று திருமணமான புதிதில் எடுத்த ‘குருதிப்புனல்’ முயற்சிக்கு பின்னர் மீண்டும் மனைவியுடனான, தமிழ்ப்பட முயற்சி.

கஷ்டம் அனுபவிக்கும் சில நேரங்களில் ‘அப்படியே செத்துப் போய் விட மாட்டோமா’ என்றிருக்குமே அந்த எண்ணம் நேற்று வந்தது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை செவியில் ‘இனிமே இங்க வருவியா, வருவியா’ என்று கேட்பது மாதிரி தொடர்ந்து அறைய படத்தில் நடி(ட)க்கும் அனைவரும் சிக்கென்ற உடையில் இறுதி வரை ஸ்லே மோஷனில் நடந்து கொண்டே இருந்தார்கள்.

தமிழில் இது ஹிட் படமாம்.

முன்பு ரஜினியின் பில்லாவை ‘துக்ளக்’கில் மூளையைக் கழற்றி பக்கத்தில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டிய படம் என்று விமர்சனம் எழுதி பாலாஜியிடம் வசமாக வாங்கிக் கட்டினார்கள். நான் தயாராக இல்லை!


***

‘பில்லா! இது இவனது சொந்தப் பெயரா?’ என்று படத்தில் ஒருமுறை குழம்புகிறார்கள். பில்லா, எண்பதுகளில் பிரபலமான ஒரு கிரிமினல். பில்லாவும் அவரது கூட்டாளியான ரங்கா என்பவரும் பணத்திற்காக இளம் வயது பெண்ணையும் அவரது சகோதரரையும் கடத்திச் சென்று கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டனர். பில்லி (பூனை) என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்தே இவருக்கு பில்லா என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது.

பில்லாவின் வெற்றிக்குப் பின்னர் ரஜினிகாந்த் பின்னர் ரங்கா என்ற பெயரிலும் ஒரு படத்தில் நடித்தார்.


Big Temple, Tanjore

பில்லாவை மோசமான ஒரு நடிப்புடன் பிரபு துரத்துவதை விட வேட்டையாடு விளையாடு கமலை அனுப்பியிருந்தால் இந்திய பீனல் கோடு பற்றிய பயம் இல்லாமல், ‘பொட்’ ‘பொட்’ என போட்டுத் தள்ளியிருப்பார். அந்தளவுக்கு பயங்கரமான கிரிமினல் கொலைகளை செய்கிறார் சூப்பிரண்டண்ட் ஆப் போலீஸ் ராகவன். ஆனாலும் கடைசியில் எவ்வித தண்டனையுமின்றி ஜோதிகாவை கல்யாணம் செய்கிறார்.

வேடிக்கை என்னவென்றால், இறுதியில் பல காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி என்று எழுத்து போடுகின்றனர்.

நன்றிக்குண்டானவர்கள் நெளிந்திருப்பார்களோ?

***

இல்லை என்கிறார் சாமி விக்ரம். நேற்று அவரது பட பேட்டியில் சாமி பட காட்சியினை காட்டினார்கள். ஊர்வலத்தை சமாளிக்க கத்தி, கபடாவுடன் இறங்குகிறார். படத்தைப் பார்த்து காவலதிகாரிகள் பாராட்டினார்கள் என்று கூறினார்.

நமது காவல்துறையை கேவலப்படுத்த வீரப்பன் தேவையில்லை...இரண்டு மூன்று தமிழ்ப் படங்கள் போதும்.

பில்லாவில் அதுதான் ஆறுதலிக்கும் விடயம். மலேசிய போலீஸை கேவலப்படுத்தியிருப்பார்கள்.


மதுரை
16.01.08


படத்திற்கும் பதிவிற்கும் சம்பந்தமில்லை...நம்ம பதிவில் நாம எடுத்த படத்தைத்தானே போடணும்

14.1.08

சல்லிக்கட்டு வழக்கும் நானும்!

இன்று தமிழகத்தின் முக்கிய செய்திகளில் ஒன்றாக அலசப்படும் சல்லிக்கட்டு வழக்கு, கடந்த 2006ம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயத்திற்கு (Rekla Race) அனுமதி கிடையாது என்று காவல்துறை வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தொடங்கியது.

தொண்ணூறுகளில் கோவாவில், சூதாட்டத்திற்காக மாடுகளை மோதவிட்டு நடைபெறும் காளை சண்டையினை (bull fight) எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதனை தடை செய்து மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை உத்தரவிட்டிருந்ததை, சுற்றறிக்கைக்கு காரணமாக கூறப்பட்டிருந்தது.

இதனால் தமது கோவில் குடமுழுக்கு விழாவில் நடத்த உத்தேசித்திருந்த மாட்டு வண்டி பந்தயத்திற்கு அனுமதி வேண்டி, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்த கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் நமது உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையினை அணுகினார். வழக்கினை விசாரித்த நீதிபதி.பானுமதி விலங்குகள் பால் அன்பு கொண்டவர். விலங்குகள் குறித்தான சட்டங்களைப் பொறுத்து மேனகா காந்தி அவர்கள் தொகுத்துள்ள புத்தகம் ஒன்றினை துணைக்கு வைத்துக் கொண்டு மாட்டு வண்டிப் பந்தயம் என்ன சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் விலங்குகளை துன்புறுத்தும் அனைத்து வகையான போட்டிகளையும் அரசு தடை செய்ய மார்ச்’2006ல் உத்தரவிட்டார்.

ஆனால், இந்த வழக்கில் நீதிபதி தான் வழங்கும் தீர்ப்பானது ஏறக்குறைய பொதுநல வழக்கினை ஒத்திருப்பதாக உணரவில்லை. அவ்வாறு உணர்ந்திருந்தால், வழக்கினை அதன் முக்கியத்துவம் கருதி ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியினை வேண்டியிருப்பார். மேலும், இதே போன்றதொரு வழக்கில் மற்றொரு நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டதை நீதிபதி அறிந்திருந்தும், அதற்கு எதிர்மாறான தீர்ப்பினை அளித்தது சட்டப்படி சரியல்ல. அவ்வாறான நிலைமையிலும் அவர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நீதிபதிகளால் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்க வேண்டும்.

முக்கியமாக, அரசு தரப்பு எவ்வித வாதத்தினையும் வைக்காத நிலையிலும் மனுதார் தரப்பிலும் பெரிய அளவில் எவ்வித வாதமும் புரியப்படாத நிலையிலும், வழக்கின் எல்லைகளை மீறி, நீதிபதி ஏறக்குறைய தனது சொந்த எண்ணங்களை தீர்ப்பாக எழுதியது எவ்வளவு தூரம் சரியென்று தெரியவில்லை.

a judge is entitled to have his own opinion on an issue before him but the same will become a judgment only if the same is placed before the court and tested by an adverse opinion’ என்று பின்னர் இரு நீதிபதிகள் முன் நடந்த வாதத்தில், இதனை மனதில் வைத்தே நான் குறிப்பிட்டேன்.

***

2006 டிசம்பர் வரை தூங்கிய பிரச்னை, பொங்கல் நெருங்கவும் விழித்தது. சல்லிக்கட்டு நடத்தும் பலரும் அனுமதி வேண்டி பொதுநல வழக்காக இரு நீதிபதிகள் முன்பு வழக்கு தாக்கல் செய்ய, அலங்காநல்லூருக்காக நானும் ஒரு வழக்கு தாக்கல் செய்தேன். இதே வேளையில் சம்பந்தப்பட்ட மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்த அரசு, சல்லிக்கட்டு நடத்த வேண்டி தானும் உதவ முன் வந்தது. இந்தக் கால கட்டம் வரை சல்லிக்கட்டு என்பது, நீதிபதிகள், வழக்குரைஞர்கள் அனைவராலும் எதிர்மறை உணர்விலேயே அணுகப்பட்டு, சல்லிக்கட்டினை நீதிமன்றத்தினால் அனுமதிக்கவே முடியாது எண்ணமே இருந்தது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல!

ஆயினும் இவ்வித பின்வாங்கும் (defensive) எண்ணத்தினை கைவிட்டு முன்னேறும் (offensive) எண்ணத்தினை என்னுள் விதைத்தது, சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எனது நண்பரின் ஊரில் நான் பார்த்த சல்லிக்கட்டும், ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலும்.

***

முதன் முதலில் சல்லிக்கட்டினை பார்த்த எனக்கு ‘இவ்வளவுதானா’ என்றிந்தது. சல்லிக்கட்டானது திரைப்படங்களாலும், ஊடகங்களாலும் காட்டப்படும் வகையில் மாட்டின் கொம்பினைப் பிடித்து அதனை சாய்ப்பதல்ல...யதார்த்தமாக திரைப்படம் எடுப்பதாக கூறப்படும் கமல்ஹாசனின் விருமாண்டி படத்திலேயே அவர் மாட்டினை அடக்கும் காட்சி நகைப்பிற்குரியதாக இருக்கும்.

மாறாக திட்டி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் மாடானது சுமார் 30 முதல் 50 அடி அகலமுள்ள மைதானம் வழியாக ஓட வேண்டும். அவ்வாறு ஓடும் மாட்டின் கொம்பினை ஒரு கையாலும், திமிலை மற்றொரு கையாலும் அணைத்துப் பிடித்தவாறு மாடுபிடி வீரர் குறிப்பிட்ட தூரம் (சுமார் 50 அடி) ஓட வேண்டும். இதனை அணைவது என்கிறார்கள்.

பொதுவாக மாட்டின் கொம்பில் பரிசினை கட்டுவதில்லை. திட்டி வாசலிலேயே அறிவிப்பாளரின் கையில் மாட்டிற்கான பரிசானது கொடுக்கப்படும். மாட்டினை அணைந்த வீரர் திரும்பி ஓடி வந்து பரிசினை பெற்றுக் கொள்கிறார். பல சமயங்கள் மாட்டினை அணைய முடியாது. அப்பொழுது மாடு வென்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு மாட்டின் உரிமையாளரிடம் கொடுக்கப்படும்.

சில மாடுகள் ஓடாமல், சடக்கென திரும்பி ‘வா ஒரு கை பார்க்கலாம்’ என்றவாறு திரும்பி நிற்கும். அப்பொழுது மட்டுமே விளையாட்டு சூடு பிடிக்கும்.

இந்த சமயத்தில்தான் ‘கோபல்ல கிராமம்’ நாவலில் ஒரு இடத்தில் தங்களது கிராமத்தினை ஏற்ப்படுத்திய பின்னர், நாயக்கர்கள் காடுகளில் திரியும் மாடுகளை பிடித்து வர வாலிபர்களை அனுப்புவார்கள் என்று படித்தது நினைவுக்கு வந்தது. ஆக, அணைவது என்பது மாட்டினை பிடித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதானே தவிர காளையோடு சண்டையிடுவது அல்ல என்று அனுமானித்தேன்

***

இதற்குப் பின்னர் வழக்கினை எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கவில்லை. விரைவில் பொங்கல் வருவதால், வழக்கினை இடைக்கால உத்தரவிற்காக நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அரசும் நிலைமையின் தீவிரம் கருதி விளக்கமாக, எங்களது மனுவினை ஒட்டி மேலும் பல தகவல்களுடன் தனது எதிர்மனுவினை தாக்கல் செய்திருந்தது.

எங்களது வழக்குகளோடு, சல்லிக்கட்டினை படம் வரையப் போய் மாட்டினால் குத்தப்பட்டு இறந்து போன ஒரு ஒவியரின் தந்தை இதனை தடை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. திடீரென, விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board) வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு, மடிக்கணணி, புகைப்படங்கள், பத்திரிக்கைச் செய்திகள் முதலியவற்றுடன் சல்லிக்கட்டினை தடை செய்ய வேண்டும் என்று கோரியது. அவற்றை பரிசீலிக்கும் எவருக்கும் ‘ஆஹா இத்தனை ரத்தம் சிந்துதலா’ என்று இருக்கும்.

***

விலங்குகள் நல வாரியத்தின் வாதம், ‘ சல்லிக்கட்டிற்காக மாடுகள் சாராயம் கொடுக்கப்பட்டும், மிளகாய் பொடி தூவப்பட்டும், வால்கள் முறுக்கப்பட்டும் வெறியேற்றப்படுகின்றன. திட்டிவாசலில் இருந்து கிளம்பும் மாடும் உதைக்கப்பட்டும் அடிக்கப்பட்டும், வால்கள் பிடித்து இழுக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றன. எனவே, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் (The Prevention of Cruelty to Animals Act’1960) பிரிவு 11 (a) மீறப்படுகிறது என்பதாகும். அந்தப் பிரிவு கூறுவதாவது...
If any person beats, kicks, over-rides, over-drives, over-loads, tortures or otherwise treats any animal so as to subject it to unnecessary pain or suffering or causes or being the owner permits any animals to be so treated........he shall be punishable

***

எங்களது தரப்பு வாதம் அரசின் வாதத்தை ஒட்டியே அமைந்திருந்தது. எத்தனையோ நூற்றாண்டுகளாக எங்கள் கலாச்சாராத்தோடு ஒட்டியுள்ள இந்தப் போட்டியினை முழுவதுமாக தடை செய்வது தேவையற்றது. ஆதிகாலத்தில் மாடுகளை தன்னுடன் இசைந்து வாழும் நோக்கத்துடன், அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறமையினை வெளிப்படுத்தும் ஒரு போட்டியானது, இன்று மனிதர்களை காவு வாங்கும் ஒரு வருடாந்திர நிகழ்ச்சியாக போனது உண்மைதான். ஆனால் அரசு மட்டும் மனது வைத்தால், தகுந்த கட்டமைப்பு வசதிகளை (infrastructure facility) ஏற்ப்படுத்தி தர முன் வந்தால் தமிழர்களின் நாகரீகத்தினையும், கலாச்சாரத்தினையும் பறைசாற்றும் ஒரு நிகழ்ச்சியாக உலகின் முன் வைக்க முடியும்.

‘பலரும் நினைப்பது போல சல்லிக்கட்டில் உயிரிழப்பவர்கள், பெரும்பாலும் பங்குபெரும் வீரர்கள் அல்ல. வீரர்கள் மாடுகளோடு பழகி தகுந்த பயிற்சி பெற்றவர்கள். மாட்டின் கொம்பிலிருந்து தப்பிக்கும் லாவகம் அறிந்தவர்கள். போட்டி நடைபெறும் இடத்திற்கும் பார்வையாளர்களுக்கும் இடைவெளி ஏதும் கிடையாது என்பதால் பார்வையாளர்களே பெரும்பாலும் குத்தப்படுகிறார்கள். இவ்வாறாக மைதானத்திற்குள் குவிபவர்கள், ஜாலிக்காக சரக்கடித்து வரும் கிராமத்து இளைஞர்கள். இவர்களே பய உணர்வு ஏதும் இன்று மாடுகளின் மீது விழுபவர்கள். இவர்களை விலக்கி, மாடுபிடி வீரர்களுக்கு தகுந்த மைதானத்தினை ஏற்ப்படுத்திக் கொடுத்தால் உயிரிழப்புகளை தவிர்ப்பது இயலும்’

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம் 2007 பொங்கலை ஒட்டி சல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுத்தது. எங்களது வாதத்தினை ஒட்டி பார்வையாளர்களுக்கு தடுப்புச் சுவர் (barricade) கட்டப்பட்டது. இதனால் கடந்தமுறை அலங்காநல்லூரில் உயிரிழப்பு ஏதும் இல்லை. போட்டியாளர்களுக்கு தனி உடை வழங்கப்பட்டது. ஆயினும், இதுவும் போதாது என்பது எனது எண்ணம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் முறை வைத்து போட்டியாளர்களை அனுமதிக்கலாம். ஏனெனில் அதிகமாக போட்டியாளர்கள் இருப்பதும் குழப்பம் விளைவிக்கிறது.

***

எங்களது முக்கியமான மற்றொரு வாதம், ‘சல்லிக்கட்டு அதன் உண்மையான வடிவில் நடத்தப்பட்டால், உலகில் விலங்குகள் சம்பந்தப்படுத்தி மனிதன் நடத்தும் அனைத்து போட்டிகளிலும் நாகரீகமிக்கது’ என்பதாகும்.

‘குறிப்பாக, காளைகள் சம்பந்தப்படுத்தி நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் காளைகள் கொல்லப்படுகின்றன அல்லது காயப்படுத்தப்படுகின்றன. ஸ்பெயினில் மனிதர்களை குறுகலான சந்துகள் வழியாக காளைகள் துரத்தும் போட்டிகளிலேயே சிமிண்ட் தரையில் ஓடுவதால் காளைகள் விழுந்து கால்களை முறித்துக் கொள்கின்றன.

ஆனால், சல்லிக்கட்டின் இன்றைய நிலையிலேயே காளைகளுக்கு காயம்படுவதில்லை. காளைகளுக்கு சாராயம் கொடுப்பதும், துன்புறுத்தி தயார்ப்படுத்துவதும் மாடுகளை தகுந்த மருத்துவரின் சோதனைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் தடுக்க முடியும். குதிரைப் போட்டிகளில், குதிரைகளுக்கு ஸ்டெராய்ட் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சியும் நடந்ததே!

மற்றபடி போட்டியாளர்கள் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்படுகையில் மற்ற அடித்தல், உதைத்தல் மாட்டின் மீது கும்பலாக பாய்ந்து அமுக்குதல் அனைத்தையும் தடுப்பது சுலபம். விதிகளை மீறி மாட்டினை பிடிக்கும் வீரர்களை வெளியேற்றலாம்.

மாட்டினை அணைவதும், விலங்குகளை துன்புறுத்துதல் என்று கூறமுடியுமா? சட்டமே தேவையற்ற வலி என்றுதானே கூறுகிறது.’.

இதற்கு பதிலளித்த விலங்குகள் நல வாரிய வழக்குரைஞர், ‘துன்புறுத்துதல் (cruelty) என்பது ஒரு விலங்கானது தனது இயற்கையான சூழலில் செய்யாத ஒரு செயலை செய்ய வைப்பது’ என்றார். போனவாரம் நான் சந்தித்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்களும் ‘எந்த மாடு தன்னை இவ்வாறு திட்டிவாசலில் இருந்து ஓட வைப்பதை விரும்பும்?’ என்றார்.

அன்று நான் ‘எந்த நாய் தன்னை ரிப்பன் கட்டி அலங்கரிக்க விரும்புகிறது. எந்த குதிரை தன் மீது ஒரு மனிதன் அமர்ந்திருக்க ஓட விரும்புகிறது. ஏன், The Performing Animals (Registration) Rules’2000 பந்தயத்தில் ஒரு குதிரையினை எட்டு முறை அடிக்கலாம் (whip) என்று அனுமதிக்கிறதே, அது துன்புறுத்துதல் இல்லையா? விலங்கு நல வாரியம் வேண்டுமானால் நகரங்களுக்கு சென்று குதிரைப் பந்தயம், நாய்க்காட்சி போன்றவற்றை நிறுத்தட்டுமே பார்க்கலாம்’ என்றேன்.

வருந்த வைத்த ஒரு விஷயம், விலங்கு நல வாரிய வழக்குரைஞரிடம் இருந்து உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்காக வாதாடிய வழக்குரைஞர் வரை, சல்லிக்கட்டில் மத உரிமை அடங்கியுள்ளதை ஒத்துக் கொள்ளவே மாட்டோம் என்பதுதான்.

‘சல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கீதையிலும் சொல்லவில்லை, பைபிளிலும் சொல்லவில்லை, குரானிலும் சொல்லவில்லை’ என்று மதுரையில் வாதிடப்பட்டதுதான் வேடிக்கை!

***

ஒரு நாள் முழுவதும் வாதங்களை கேட்ட நீதிபதிகள் 2007ம் வருடம் சல்லிக்கட்டினை அனுமதித்து இடைக்கால அனுமதி வழங்கினர். பின்னர் இறுதி விசாரணையிலும் அதே வாதமே புரியப்பட்டது. நீதிபதிகள் சல்லிக்கட்டின் தற்பொழுதைய நிலையில் துன்புறுத்துதல் இருப்பது உண்மைதான் எனினும், இதனை கட்டுப்படுத்த இயலும் என்று கூறி இதற்கான விதிமுறைகளை வகுக்க அரசினை பணித்தது. வழக்கம் போல இதனை கிடப்பில் போட்ட அரசு இன்று.... உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு (review) மனு தாக்கல் செய்து கொண்டு ஒரு அதிசயம் நிகழுமா என்று பார்த்தவாறு இருக்கிறது. தீர்ப்பின்படி அரசு விதிகளை வகுத்திருந்தால், இன்று அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் ஏற்ப்பட்டிருக்காது.

***

யாரும் எதிர்ப்பார்க்கவில்லை, வாரியம் உச்ச நீதிமன்றம் செல்லும் என! ஆனால், அவர்கள் இப்படி செய்திருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட யாரையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல் அரசினையும், சல்லிகட்டு வேண்டாம் என்று கூறியவரையும் மட்டுமே சேர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீடு! அதில் ஒரு எக்ஸ்பார்ட்டி இடைக்கால தடை!!

எனவே வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளவே சம்பந்தப்பட்டவர்கள் ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டி வர, அரசு மட்டுமே தடையை நீக்க மனு செய்ய வேண்டிய நிலை!

சல்லிக்கட்டின் வரலாற்றினை எடுத்து வைக்க யாரும் இன்றி, ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று தலைமை நீதிபதி கூற என்னுடன் வந்த அலங்காநல்லூர் நண்பர் கொதித்துப் போனார். மீண்டும், இத்தனை நபர்கள் இறந்து போனார்கள் என்ற தகவல் மட்டுமே வைக்கப்பட தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். கவனமாக வளர்த்த மரம் சடாரென வெட்டப்பட்டது போல உணர்ந்தோம்.

இனி, இறுதி விசாரணையில் மட்டுமே, சல்லிக்கட்டினை ஒரு முறையான போட்டியாக மாற்றி, அதன் பாரம்பரியத்தினை காப்பாற்ற இயலும் என்ற வாதத்தினை நீதிபதிகள் புரியும் வண்ணம் வைத்தல் இயலும்.

வேடிக்கை, வழக்கின் முடிவில் திடீரென தலமை நீதிபதி, ‘வேண்டுமானால், மாட்டு வண்டி பந்தயம் நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறி வழக்கில் சம்பந்தமே இல்லாத ரேக்ளா பந்தயத்திற்கு ஒரு வரியில் அனுமதி கொடுத்து விட்டார்.

உண்மையில் ரேக்ளா பந்தயத்தில், மாடு படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அங்கே மேனகா காந்தி தீர்ப்பினைப் பார்த்து பொறுமிக் கொண்டிருக்கிறார்.

ரேக்ளா பந்தயத்தின் முடிவில் மாடுகள் நாக்கு தள்ளிப் போய், மரணத்தை எட்டிப் பார்த்து திரும்புகின்றன. மஞ்சுவிரட்டில், மாடுகளை ஊருக்குள் அவிழ்த்து விட்டு அவற்றை வாலிபர்கள் துரத்துகிறார்கள். துரத்துபவர்கள் களைப்படைந்தால், வேறு குழு தொடர்ந்து துரத்தும். இங்கும் மாடு முழுமையாக களைப்படைந்து, கடுமையான துன்பம் அனுபவிக்கும்...

ஆனால் சல்லிக்கட்டினை திறமையை வெளிப்படுத்தும் ஒரு கிராமப் போட்டியாக உருவாக இயலும் என்பது எனது தனிப்பட்ட கருத்தும் கூட!

மதுரை
14.01.08


விலங்கு ஆர்வலர்களுக்கு மேனகா காந்தியின் பின் செல்லும் ஆபத்து புரியவில்லை. மும்பையில் இருக்கையில் குஜராத்தி அமைப்பு ஒன்றின் விருதினை மேனகா அவர்கள் பெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிட்டது. மேனகா தனது பேச்சின் நடுவே, ‘பசுவின் பாலைக் குடிப்பது அதன் இரத்தத்தை அருந்துவது போன்றது. நான் எனது மகனுக்கு இதுவரை பசும் பாலோ, பால் பொருட்களோ கொடுத்ததேயில்லை’ என்றார்

அமுல் மாநிலத்தவர்களுக்கு மயக்கமே வந்து விட்டது!