27.10.12

ஹைதராபாத் பயணக் குறிப்புகள் 2


ஹைதராபாத் என்றாலே சிறுவயது முதல் உடனடியாக என் மனதில் தோன்றும் ஆர்வம், ‘சாலார் ஜங் மியூசியம்’!.

‘அங்கு ஒரு கடிகாரம் இருக்கும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒரு சிறு மனிதன் வெளியே வந்து அங்கிருக்கும் மணியை அடித்து விட்டு உள்ளே சென்று விடுவான்’

‘திரைச்சீலையால் முகத்தை மூடியவாறு ரெபேக்கா சிலை (Veiled Rebecca) இருக்கும்’ என்று எனது பாட்டியிடம் சிறுவயதில் கேட்ட கதைகளிலிருந்தே, தொடரும் ஆர்வம்.

‘அது எப்படி ஒரு சிறு மனிதன் கடிகாரத்துக்குள்ளே இருக்க முடியும்’ ‘எப்படி திரைச்சீலையை கல்லில் வடிக்க முடியும்’ என்று சிறுவயதில் கொண்ட வியப்பு தற்பொழுதும் இல்லையென்றாலும், சாலார் ஜங் மியூசியத்தில் அடியெடுத்து வைத்ததும், ஏதோ எனது பாட்டியின் கை பிடித்து உள்ளே செல்லும் சிறுவனைப் போல உணர்ந்தேன்.

-oOo-

மியூசியத்தை பொறுமையாக பார்க்க வேண்டுமாயின், அரை நாள் குறைந்தது பிடிக்கும். பலவிதமான ஆடை, அலங்காரப் பொருட்கள் பெண்களை மிகவும் கவரும். ஆனால், சுமார் ரூ 15,000 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ள நிஜாமின் நகைகளை பார்க்க முடியாது. அரிதாகத்தான் இதுவரை ஒன்றிரண்டு முறை நகைகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆயினும், மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களே பார்க்கப் போதுமானவையாக இருக்கும்.

உள்ளே செல்வதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். காமிரா அனுமதி இல்லை. ஆனாலும், காமிரா நமது பைகளை வெளியேயே வைத்துப் போக இலவசமாக லாக்கர் வசதி உள்ளது. செல் போன்களை அனுமதிக்கிறார்கள்.

உணவு எடுத்துச் செல்ல தேவையில்லை. உள்ளேயே தரமான உணவு விடுதி உள்ளது.

-oOo-

ஹைதராபாத் என்றால் அடுத்து நினைவுக்கு வருவது சார்மினார். நான் சென்றது ஈத் காலம் என்பதாலா அல்லது எப்பொழுதுமே அப்படித்தானா என்று தெரியவில்லை, சார்மினாரை சுற்றி அவ்வளவு நெருக்கடி!

‘Absolute Chaos’ என்றால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது. சாலை முழுவதும் மனிதக் கூட்டம், மோட்டார் பைக்குகள், ஸ்கூட்டர்கள், ஆட்டோ ரிக்‌ஷாகள், கார்கள். நல்ல வேளை நான் அதற்கு தனியே ஒரு ஓட்டுநரை ஏற்ப்பாடு செய்திருந்தேன். எப்படித்தான் அந்த மனிதக் கூட்டத்தில் காரை செலுத்த முடிந்ததோ தெரியவில்லை.

சார்மினார் பகுதியில் ஓரளவிற்கு வாகனங்கள் செல்ல முடிகிறதென்றால், அதற்கு ஹைதராபாத் போக்குவரத்து காவலர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

எனவே, சார்மினார், சாலார் ஜங் மியூசியம் இரண்டுக்கும் போக எளிதான முறை ஒரு ஆட்டோ எடுத்துக் கொள்வதுதான்.

சார்மினார் மேலே ஏறிப்பார்க்கலாம். பெரிய வரிசை இருந்ததால் நான் போகவில்லை. ஆனாலும் இருபுறமும் உள்ள கடைகளில் பெண் பிள்ளைகளுக்கு வேண்டிய சிறு சிறு அலங்காரப் பொருட்கள் கிடைக்கிறது

சாலை ஓரத்தில் பழம்பொருட்களை வைத்து விற்கிறார்கள். நான் சன் டையலோடு இணைந்த திசை காட்டி ஒன்றை வாங்கினேன். பாதி விலைக்கு பேரம் பேசியிருக்கலாம். நான் கூச்சத்தில் முக்கால்வாசி விலைக்கு கேட்க உடனடியாக கொடுத்து விட்டார்கள்!

-oOo-

சாலார் ஜங் மியூசியம், சார்மினார் இரண்டுக்குமே ஒரு நாள் பிடித்தது என்றாலும், ‘நன்றாகக் கழிந்த ஒரு நாள்’ என்றே தோன்றியது.

மதுரை
27/10/12

26.10.12

ஹைதராபாத் பயணக் குறிப்புகள் 1


கடந்த ஐந்து நாட்களாக, சாலை வழியே குடும்பத்துடன் ஹைதராபாத் பயணம்.

சென்னையிலிருந்து ஓங்கோல் வரைதான் நான்கு வழிச்சாலை (NH5). தரமும் சென்னை – மதுரை போல இல்லை. பின்னர் சிறிது தூரத்தில் இடது பக்கம் திரும்பினால் மாநிலச் சாலை (State Highway) கூகுளை நம்பியது தவறாகி விட்டது. இப்பொழுதான் சாலை அமைத்து கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே சாலை உடைந்து, மீண்டும் விஜயவாடா – ஹைதராபாத் ஹைவே (NH9) பிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

பின்னர் அங்கிருந்து ஹைதராபாத் 85 கி.மீட்டர்கள்தான்!

9 மணிக்கு சென்னையில் கிளம்பி 10 மணிக்கு புழலை தாண்டி ஹைதராபாத் ஹோட்டலை அடைய இரவு 9 மணியாகி விட்டது. ஹோட்டலை தேடி ஒரு மணி நேரம் சுற்றியதும் அடக்கம்.

வழியில் நல்ல உணவு விடுதிகள் இல்லை. உணவை சென்னையிலிருந்தே எடுத்துச் செல்வது நலம்

ஒரு மாநில தலைநகருக்கு மாநிலத்தின் மற்றொரு பகுதியிலிருந்து செல்லும் சாலை இந்த அளவிற்கா மோசமாக இருக்கும் என்று இருந்தது. தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை.

இந்த சாலை அமைத்து முடிக்க இரண்டு மூன்று வருடம் பிடிக்கலாம். அதுவரை 100 கி.மீ. அதிகமானாலும் பரவாயில்லை என்று விஜயவாடா வழியே ஹைதராபாத் செல்லுங்கள். வரும் பொழுது அப்படித்தான் வந்தேன். விஜயவாடாவிற்குள் சுற்றி உணவு உண்ட நேரம் உட்பட அதே நேரம்தான் ஆயிற்று.

-oOo-

ஹைதராபாத் – விஜயவாடா சாலை புதிய நான்கு வழிச்சாலை. இன்னமும் கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கவில்லை. இன்னமும் ஒரு மாதத்தில் ஆரம்பித்து விடுவார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் சில நகர்ப்பகுதிகளில், தமிழகத்தில் உள்ளது போல வேலி அமைக்கவில்லை. ஹைவே ஒட்டிய பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் நீக்கப்படவும் இல்லை. எனவே ஹைவே சில இடங்களில் சாதாரண சாலையாகி சாலையோர வியாபாரம், பைக் நிறுத்தம் என களை கட்டுகிறது.

நேரமிருப்பின் விஜயவாடாவை ஒரு சுற்று சுற்றுங்கள். மலைகளின் இடையே அமைந்த அழகான நகரம். நல்ல அசைவ உணவு விடுதிகள் இருந்தன (Ask for 11 to 11). கிருஷ்ணா நதியின் பிரமாண்டத்தை அதிசயிக்கையில் ‘பைசா வசூல்’ என்று இருந்தது!

விஜயவாடாவிலிருந்து ஓங்கோல் வரை 73ரூ கட்டணம் வாங்குகிறார்கள். ஹைவே என்று சந்தோஷமாக ஆரம்பித்த பயணத்தின் உற்சாகம் சீக்கிரமே வடிந்து விட்டது. சாலையில் தரம் மிகவும் மோசம். எங்குமே பாலம் கட்டப்படாமல்  ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு மாற்றுப் பாதை!

தேசிய நெடுஞ்சாலைத் துறை மீது நுகர்வோர் வழக்கு போடலாமா என்று யோசித்து வருகிறேன். சென்னை – கொல்கத்தா சாலை என்று பெரிதாக நினைத்தேன். இப்படி பல்லிளிக்கிறது.

எங்குமே இங்குள்ளது போல கூரை வேய்ந்த கட்டணம் வசூலிக்கும் இடம் இல்லை. ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் இடமும் இல்லை. டிரக்குகளை ஓரம்கட்டி நிறுத்தும் இடமும் இல்லை.

எப்படியோ, போன பாதைக்கு வந்த பாதை பரவாயில்லை. அது வரை நிம்மதி.

இறுதியாக ஹைதராபாத் நகருக்குள்ளும் சரி, ஹைவேயிலும் சரி. எந்த ஒரு இரு சக்கர வாகனமும், வேகமாக வரும் காரைப் பார்த்து பயப்படுவார்கள் என்று நினைத்து விடாதீர்கள். எவ்வித அச்சமும் இன்றி சாலையை பைக்கில் கடக்கிறார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

மதுரை
26/10/12

25.10.12

சைபர் கிரைம்!


‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது சென்னை இணைய குற்ற தடுப்பு காவலர்களிடம் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டு புகார் அளித்த வலைப்பதிவர்களின் பதிவுகள் மூலம் மேற்போக்காக இதனைப் பற்றி அறிய முடிகிறது.

இந்தப் புகாரின் பெயரில், மூர்த்தி காவலர்களால் விசாரிக்கப்பட்டதாகவும் பின்னர் ‘போலி டோண்டு’வால் உருவாக்கப்பட்ட பதிவுகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. விசாரணை நிலுவையில் இருப்பதாக தெரிவித்தாலும், மூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டாரா அல்லது முன் ஜாமீன் பெற்றாரா என்ற விபரம் தெரியவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னர், இணைய குழுமங்கள் மூலம் விவாதித்துக் கொண்டிருக்கையில், ஒரு பெரிய எழுத்தாளருக்கும் முக்கிய பதிவர் ஒருவருக்கும் பிரச்னை உருவாகி எழுத்தாளர் மற்றவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க என்னிடம் ஆலோசனை கோரினார். இணையத்தில் ஏற்ப்படும் பிரச்னைகள், இணையத்தை தாண்டி வெளி உலகிலும் கசிந்து ‘ஜானி குவஸ்ட்டு’ கார்ட்டூன் சித்திரங்கள் போல உண்மையிலேயே காயத்தை ஏற்ப்படுத்தி விடுமோ என்று அஞ்சுகிறேன் என்று எழுதினேன்.

போலி டோண்டு பதிவுகளை தொடர்ந்து கவனித்து வந்தவன், இறுதியில் அதீத வெறுப்பின் உச்சத்தில் (or frustration) விடப்பட்ட சில கொலை மிரட்டல்களை கண்டு அதிர்ந்து போனேன். ‘இறுதியில் இதற்கு ஒரு முடிவுதான் இருக்கிறது. அது டோண்டுவின் கொலையாகக் கூட இருக்கலாம்’ என்ற தொனியில் எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவரின் மனநிலையில் அந்த மிரட்டல் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல என்று நினைத்தேன். நல்லவேளை பிரச்னை விரைவில் முடிவுக்கு வந்தது.

‘போலி டோண்டு’ பிரச்னை முடிவுக்கு வந்தாலும், காவலர் விசாரணை மற்றும் அதன் பக்க விளைவுகள் தமிழ் இணையத்தில் பெரிய மாறுதலை கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. Tamil Web World has lost its innocence!

-oOo-

தமிழ் இணையத்திற்கு வெளியே எனக்கு சாருநிவேதிதாவைத் தெரியாது, பின் நவீனத்துவம் தெரியாது...இங்கு பதிவர்களால் சங்கோஜமின்றி உபயோகிக்கப்படும் வார்த்தைகள் பல தெரியாது!

இங்கு எழுதப்படும் கருத்துகளும், அவை விவாதிக்கப்படும் தொனியும், உபயோகப்படுத்தப் படும் வார்த்தைகளும், வெளி உலகம் அறியாதவை!

உதாரணத்திற்கு மதுரை உயர்நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு நெருக்கமான ஒன்றிரண்டு வழக்குரைஞர்களைத் தவிர யாருக்கும், எந்தவொரு நீதிபதிக்கும், பணியாளருக்கும் வலைப்பதிவுகளைப் பற்றி தெரியாது. நான் தமிழில் இவ்வாறு எழுதுகிறேன் என்பதே ஆச்சரியமாக இருக்கும்.

வெளி உலகால் அதிகம் அறியப்படாதலாயே இங்கு வரைமுறையின்றி பல விடயங்கள் எழுதப்படுகின்றன. ஜெயமோகன் எம்ஜிஆர், சிவாஜியை பற்றி இணயத்தில் எழுதியதை ஆனந்த விகடன் வெளி உலகத்திற்கு கொண்டு சென்றதன் விளைவு நாம் அறிந்ததே!

எனவேதான் என்னுடைய அச்சம், தமிழ் வலைப்பதிவுகள் காவலர்களின் கண்காணிப்பில் வருகையில், எதிர்காலத்தில் மோசமான சில பின் விளைவுகள் நிகழலாம் என்பதுதான். சமயங்களில் சில நீதிபதிகள் நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறித்து வகுப்பெடுக்கையில், ‘ஆமாம், இந்தக் கண்ணியத்தை எல்லாம் எவ்வித எல்லைகளுமின்றி அங்கு இணையத்தில் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று என் நண்பர்களிடம் கிசுகிசுப்பேன்.

-oOo-

சரி, காவலர்களால் என்ன பிரச்னை?

ஒரு குற்றம் நடந்துள்ளதாக, காவலர்களிடம் புகார் அளித்தால் ‘முதல் தகவல் அறிக்கை’ (FIR) தயாரிப்பார்கள். பின்னர் அதன் மீதான விசாரணையை (Investigation) தொடங்குவார்கள். விசாரணைக்கு ஏதுவாக குற்றம்சாட்டப்படுபவர்கள் கைது செய்யப்படலாம். அதனை தவிர்க்க குற்றம் சாட்டப்படுபவர்கள் முன் ஜாமீன் பெற வாய்ப்புண்டு. அதனால், சிறைவாசத்தை தவிர்க்கலாமே தவிர நீதிமன்றத்தில் சரணடைந்து பின் பிணையில் வர வேண்டும். சரணடையும் தருணத்தில் சில அவமானங்களை சகிக்க நேரிடலாம். அதற்குப் பின்னரும் தினமும் சில காலம் காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ கையெழுத்திட நேரிடும். இதனால் ஏற்ப்படும் மன உளைச்சல் ஏராளம்.

முன் ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், இன்னும் மோசம். குறைந்தது மூன்று நாட்களாவது சிறையில் கழிக்க நேரிடும். மூர்த்தியின் வழக்கில், அவர் கைது செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். கைது என்பது கண்டிப்பானது அல்ல!

விசாரணை முடிந்து காவலர்கள் தங்களது இறுதி அறிக்கையினை (Final Report or Charge Sheet) தாக்கல் செய்வார்கள். விசாரணையில் குற்றம் நடைபெறவில்லை என்றால் வழக்கினை முடிக்க நீதிமன்றத்தினை கேட்டுக் கொள்வார்கள். இல்லை குற்றப்பத்திரிக்கை. அதற்குப் பின்னரே நீதிமன்ற விசாரணை!

இது அனைத்தும் முடிவதற்கு சில மாதங்களும் பிடிக்கலாம். சில ஆண்டுகளும் பிடிக்கலாம். விசாரணையில் இறுதியில் பல வழக்குகள் விடுதலையில் முடிந்தாலும் அதற்குள் அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஒரு தொழில்முறை குற்றவாளியாக இருந்தாலொழிய படும் பாடு சொல்லி மாளாது.

பலமுறை நாம், ‘இப்படி தப்பு பண்ணிட்டு தப்பிச்சு வந்துட்டானே’ என்று நினைக்கிறோம். ஆனால் குற்றவியல் வழக்குகளில் சிக்கி சின்னாபின்னமான குடும்பங்கள் பல உண்டு!

-oOo-

‘இணைய குற்றம் புரிந்தால்தானே, எனக்கு என்ன பிரச்னை?’ என்று வலைப்பதிவர்கள் பலர் நினைக்கலாம்.

இதனைப் பற்றி எழுத வேண்டும் என்று பலமுறை நினைத்தாலும், தேவையில்லாமல் ஒரு பீதியினை ஏற்ப்படுத்த வேண்டுமா என்பது மட்டுமல்லாமல், இந்த விபரங்களை யாரும் கெட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தி விடக்கூடாது என்று அச்சத்தாலேயே எழுதாமல் இருந்தேன். ஆயினும் தற்போழுது அதன் தேவை அதிகரித்துள்ளதாக உணருகிறேன்.

ஆள்மாறாட்டம், தகவல்களை திருடுவது, மோசடி போன்ற பலவகையான இணைய குற்றங்கள் இருந்தாலும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் (Information Technology Act’ 2000) பிரிவு 67ல் வரையறுக்கப்படும் குற்றம் கவனிக்கத்தகுந்தது. போர்னோகிராபி குற்றங்களை தடுக்கும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவினை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சுருக்கமாக அந்தப் பிரிவு,
‘Whoever publishes or transmits......any material which lascivious or appeals to the prurient interest or if its effect is such as to tend to deprave and corrupt person...extend to five years and with fine... என்று உள்ளது.

இந்தப் பிரிவில் மூன்று செயல்கள் குற்றமாகிறது. முதலிரண்டை விடுங்கள் அவற்றை lascivious அல்லது prurient interest என்பதற்கு விளக்கம் கூறுபவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். மூன்றாவது செயலாக கூறப்படுவது ஆபத்தானது. ஒரு ‘மனதைக் கெடுக்கும்’ எந்த ஒரு எழுத்துமே இங்கு குற்றமாகிறது.

அமெரிக்காவில் இருந்து எழுதப்படும் ஒரு வலைப்பதிவு திருநெல்வேலியில் உள்ள ஒருவரது மனதை கெடுப்பதாக கூறி வழக்கு பதிவு செய்வது என்பது காவலர்களுக்கு இயலும் செயல். அமெரிக்க வலைப்பதிவர் இந்தியா வரும் பொழுது, ஒரு விசாரணைக்கு வாருங்கள் என்று கூட்டிச் சென்று அப்படியே ரிமாண்ட் செய்து விட முடியும். பின்னர் அந்த வலைப்பதிவரின் எதிர்காலத்தையே சீரழிக்கவும் முடியும்.

கவனிக்கவும், வலைப்பதிவரை இந்தப் பிரிவின் கீழ் குற்றம் செய்ததாக நீதிமன்றம் தண்டிக்க வேண்டியதில்லை. அதிகபட்சம் வலைப்பதிவர் செய்யக் கூடியது, தான் எழுதியது இந்தப் பிரிவின் கீழ் வராது, குற்றமல்ல என்று கூறி உயர்நீதிமன்றத்தை அணுகி முதல் தகவல் அறிக்கையினை தள்ளுபடி செய்ய கோரலாம். அந்த காலகட்டத்திற்குள்ளாகவும் போதிய வேதனைகளை அந்த பதிவர் அனுபவித்து முடித்திருப்பார்.

பதிவுதான் என்றில்லை, பதிவில் எழுதப்படும் எதிர்வினை, பதிவில் தோன்றும் பிற பதிவுகளுக்கான சுட்டிகள் என்பவற்றையும் transmit என்று கூறி குற்றச்செயலாக்கலாம். மீண்டும் வலியுறுத்துகிறேன். இது குற்றமில்லை என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறலாம். ஆனால், பொய் வழக்கு என்று காவலர்கள் மீது வழக்கு தொடர்வது கடினம். அதுவரை பட்ட கஷ்டம் வழக்கிலிருந்து தப்பித்தாலே பெரிது என்று நினைக்க வைத்திருக்கும்.

-oOo-

காவலர்கள் ஏன் வலைப்பதிவர்களை துன்புறுத்த வேண்டும்?

மூர்த்தி வழக்கில் காவலர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளனர் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால், காவலர்களில் சில கறுப்பு ஆடுகள் உள்ளது. சிவில் வழக்குகளில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதில் வல்லவர்கள். வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு இந்தியரோ அல்லது இந்தியாவில் பெரிய நிறுவனமொன்றில் அதீத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஊழியரோ என்றால் அவர்களுக்கு அது பொன் முட்டையிடும் வாத்து. இன்னும் விளக்கமாக கூறத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

-oOo-

இணைய குற்ற தடுப்பு காவலர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ்தான் இங்கு எழுதப்படுபவை குற்றமாகும் என்பதல்ல. இந்திய தண்டனைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்காகவும், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

முன்பு ஒரு முறை, டென்மார்க் இதழில் வெளியான முகமது நபி பற்றிய கேலிச் சித்திரங்களை தமிழ் பதிவர் ஒருவர் தனது வலைப்பதிவில் வெளியிட்டார். இதுவே ஆனந்த விகடனில் வெளியானால் என்ன நடந்திருக்கும்?

பதிவில் கேலிச் சித்திரம் வெளியிடப்பட்ட விபரம் வெளியில் தெரிந்தால், வெளி உலகில் என்ன நடந்திருக்குமோ, அதுவே இங்கும் நடந்திருக்கும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 A கூறுவது சுருக்கமாக, ‘Whoever with deliberate and malicious intention of outraging the religious feelings of any class.........................insults or attempts to insult the religion or religious beliefs of that class..........extend to three years or with fine’

இணையத்திலும் சுதந்திரமாக அனைத்து மதங்களைப் பற்றியும் எழுதப்படுகின்றன. இதற்கு இந்தியாவில் எந்த மூலையில் இருக்கும் எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்படலாம். இணைய குற்ற தடுப்பு பிரிவுதான் வர வேண்டும் என்பதல்ல!

மதம் மட்டுமில்லை. அரசியல் தலைவர்கள், புனித பசுக்கள், நீதிமன்றங்கள் இங்கு பதிவர்களால் சகட்டு மேனிக்கு புரட்டியெடுக்கப்படுகிறார்கள். சத்ரபதி சிவாஜியைப் பற்றி ஆர்குட்டில் எழுதினார் என்று பெங்களூர்வாசி ஒருவர் பட்ட பாட்டினை நாம் அறிவோம். அவர் தப்பித்தது, எழுதியது குற்றமில்லை என்பதால் அல்ல. எழுதியதே அவரில்லை என்பதால். நாளை சர்தார் வல்லபாய் படேலைப் பற்றி எழுதுகிறீர்கள். நள்ளிரவு கதவைத் தட்டி குஜராத் போலீஸ் உங்களை அள்ளிக் கொண்டு ஆமதாபாத் போனால், எப்படியிருக்கும்?

நடிகை குஷ்பு திருமணத்திற்கு முந்தைய பாலுறவு பற்றி கூறியது, இங்கு இணையத்தில் எழுதப்படும் சில கருத்துகளோடு ஒப்பிடுகையில் ஒன்றுமேயில்லை. ஒன்றுமே இல்லாமல் போனாலும், எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன? அதனால் அவர் அடைந்த தொல்லைகள் எத்தனை?

எனவே, நேரமும், கெட்ட எண்னமும் கொஞ்சம் பணமும் இருக்கும் எவராலும், எவருக்கும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தொல்லைகள் கொடுக்க இயலும் என்பதே என் அச்சம்!

மதுரை
230909

7.10.12

கூடங்குளம் பொதுநல வழக்கு!


கூடங்குளம் அணு உலையினை நிறுவி இயக்குவது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கில் அணு உலையினை நிர்மாணிப்பதில் விதிகள் மீறப்பட்டுள்ளன எனவும் அந்த மீறல்கள் நேர்செய்யப்படாமல், உலையினை இயக்க முடியாது என்றுதான் வாதிட முடியுமே தவிர, அணு உலையே கூடாது என்றல்ல. அணு மின்சாரம் தேவையா இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவை சார்ந்தது. கொள்கை முடிவில் நீதிமன்றம் எளிதில் தலையிடாது.
 
எனவே, அணு உலை அமைக்கக் கூடாது என்று மக்கள் தொடர்ந்து தாங்கள் விரும்பினால் அரசை கோரலாம். போராடலாம். மக்களின் கருத்தினை ஒட்டியே அரசு தனது கொள்கை முடிவுகளை வகுத்துக் கொள்வதால், அக்கருத்தின் வெளிப்பாடான சுந்ததிரமான பேச்சு மற்றும் நடவடிக்கைகள் ( speech and expression) ஆகியவற்றை அனுமதிப்பது, மக்கள் நல ஆட்சியினை பேணும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.

இதன் காரணமாகவே, அணு உலை பற்றிய தங்கள் சொந்தக் கருத்தினை வடிவமைத்துக் கொள்ளாதவர்கள் கூட கூடங்குளத்தில் அணு உலையினை எதிர்த்து போராடுபவர்களின் மீதான அரசின் பல்வேறு அடக்கு முறைகளை கண்டிக்கும் சூழல் ஏற்ப்படுகிறது. முக்கியமாக, கடந்த மாதம் நடைபெற்ற அணு உலை முற்றுகை போராட்டத்தின் பொழுது, எவ்விதமான உடல் மற்றும் மனக்காயங்கள் இல்லாமல் சமாளித்திருக்க வேண்டிய ஒரு விடயம், சில அரசு அதிகாரிகளின் ஆணவப் போக்கால் மக்களுக்கும் அரசு இயந்திரங்களும் இடையே மிகப் பெரிய இடைவெளியை ஏற்ப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இரண்டு உயிர்களையும் பலி கொண்டுள்ளது.

இதற்காக நீதி விசாரணை கோரி, இரு பொது நல வழக்குகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டு, வாத பிரதிவாதங்கள் முடிந்து தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு என்ற நிறுவனத்திற்காக வழக்கு தாக்கல் செய்த எனது நண்பர் நீதிமன்றம் வர இயலாத சூழ்நிலையில் அவருக்காக நான் வாதிடும் வாய்ப்பு கிடைத்தது. மற்றொரு வழக்கினை தாக்கல் செய்தவர் அ.மார்க்ஸ்!


கூடங்குளம் வன்முறைக்கும், ராம்லீலா வன்முறைக்கும் ஒற்றுமை இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுக்காத சூழ்நிலையில், மற்றவர்களுக்கு என்ன பிரச்னை, என்ற எண்ணம்தான் மோலோங்கிய நிலையில், அதே போன்றதொரு உத்தரவை இந்த வழக்கில் எதிர்பார்க்க முடியாது. ’80 காவலர்கள் காயம்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களில் யார் ஒருவருக்கும் கூட காயம் படவில்லை’ என்பதே அரசின் வாதம்.

குற்ற வழக்கிற்கும், கைதுக்கும் அஞ்சி தனியாளாக யாரும் எதற்கும் முன் வர முடியாத சூழலில், பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் நிற்க வைப்பது இயலாத நிலை. எனவேதான், பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு உண்மை நிலையினை தெரிந்து கொள்வதற்கு யாரேனும் நீதிபதி தலமையில் விசாரணை வேண்டுமென்று வழக்கு. ஆனால், அவ்விதமாக விசாரணை நடத்த வேண்டுமென்று அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா, என்பது கேள்விக்குறி. அதிஷ்டவசமாக, அந்த கேள்வியினை அரசுத் தரப்பில் எழுப்பவில்லை.

எனினும், நீதிபதி தலமையிலான விசாரணையிலும் பெரிதாக ஏதும் விளைந்து விடாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவ்விதமான விசாரணை தொடர்ந்து இவ்விதமான செயல்கள் நடக்க இயலாத சூழ்நிலையை ஏற்ப்படுத்தும். அதே போன்று நடந்த பிரச்னையை மக்கள் மன்றத்திற்கு முன் எடுத்துச் செல்லும் ஒரு கருவியாக இந்த வழக்கு பயன்படலாம். பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது என்றாலும், நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு, அரசு இயந்திரங்களுக்கு தொடர்ந்து தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்தியது. அடுத்து நடைபெறப் போகும் முற்றுகை போராட்டத்தில் ‘எவ்விதமான வன்முறை செயலுக்கும் இடம் கொடுத்து விடக்க்கூடாது’ என்று தற்பொழுது காவலர்களுக்கு கண்டிப்பாக உத்தரவிடப்பட்டதில் இந்த வழக்கின் பங்கும் உண்டு.

எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லைக் காவல்படை விமானியின் அகங்காரப் போக்கால் உயிரிழந்த மீனவர் குடும்பம் தகுந்த நஷ்ட ஈடு வேண்டியும், விமானியின் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியும் நீதிமன்றத்தினை எளிதில் அணுகும் வண்ணம், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் பயன்படலாம்.

எல்லா வழக்குகளிலும், முக்கியமாக பொது நல வழக்குகளில், வெற்றி என்பது வழக்கில் கோரப்பட்ட பரிகாரத்தை பொறுத்து அமைவதல்ல. மாறாக, பல்வேறு பக்கவிளைவுகளினால் ஏற்ப்படும் நன்மைகளும் வழக்கின் வெற்றியை நிர்ணயிக்கின்றன. கூடங்குளம் வழக்கில் என்ன நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மதுரை
07/10/12