26.8.07

சட்டப்படி சரியான தீர்ப்பா?

சட்டம் குறித்தான விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்ப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் ‘மக்கள் சட்டம்’ என்ற வலைப்பதிவில் மோட்டார் வாகன விபத்து குறித்து, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீதான விமர்சனத்தைக் கண்ணுற்றேன். அப்பாவி பயணிகளுக்கு, தீர்ப்பினால் ஏற்ப்படக்கூடிய பாதிப்பினைக் குறித்தான எச்சரிக்கையினை உடனடியாக மக்கள் முன் வலைப்பதிவு மூலம் வைத்தது நன்றியுடன் பாராட்டப்பட வேண்டிய செயல்.

விமர்சனத்தை, ‘ சட்டப்படி பார்த்தால், இந்த தீர்ப்பு சரியானதாக தோன்றலாம்’ என்று மக்கள் சட்டம் தொடங்கினாலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்படி சரியானதுதானா என்பது சந்தேகமே!

வாகன விபத்து காப்பீடுகளைப் பொறுத்து நான் அறிந்த வரையில், ‘இந்த தீர்ப்பு சட்டத்தின் பயணத்தினை பல ஆண்டுகள் பின்னோக்கி செலுத்தியுள்ளது’ என்பதே என் எண்ணம்!

***

நேஷனல் இன்ஸூரன்ஸ் கம்பெனி எதிர் அஞ்சனா ஷ்யாம் என்ற இந்த வழக்கில் 42 நபர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி (permit) பெற்ற பேருந்தில் 90 நபர்கள் பயணம் செய்கையில் விபத்து ஏற்ப்பட்டு சிலர் மரிக்க பலர் காயமடைகின்றனர்.

இவ்வாறு மோட்டார் வாகனத்தின் மூலமாக மரணமோ, காயமோ ஏற்ப்படுகையில் பாதிக்கப்படும் நபர்களுக்கு வண்டியின் உரிமையாளர் தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

ஆனால், நஷ்ட ஈட்டினை வழங்குவதற்கு உரிமையாளரின் பொருளாதாரம் பல சமயங்களில் இடம் கொடுப்பதில்லை. எனவேதான் மோட்டார் வாகனங்களை இயக்க கண்டிப்பாக வண்டிக்கு மூன்றாம் நபர் காப்பீடு அவசியம் (Third Party Insurance). அதாவது, இழப்பீட்டினை உரிமையாளர் சார்பாக காப்பீடு நிறுவனங்கள் நேரிடையாக வழங்கும்.

எனவே, எவ்வளவு காப்புத் தொகை (premium) செலுத்தப்பட்டிருப்பினும், வண்டிக்கு காப்பீடு என்று ஒன்று இருந்தால், அதில் யார் யாருக்கான காப்பீட்டினை கண்டிப்பாக காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தின் (Motor Vehicles Act’1988) 147ம் பிரிவு குறிப்பிடுகிறது.

147ம் பிரிவில் குறிப்பிடப்படாத நபர்களைப் பொறுத்தவரை தனியே காப்புத் தொகை (premium) செலுத்தாமல் காப்பீடு வழங்கப்பட வேண்டியதில்லை. அவர்களுக்கான காப்பீடு கட்டாயம் இல்லை என்பதால், வண்டி உரிமையாளர்கள் மூன்றாம் நபர் காப்பீடு மட்டுமே வாங்குவது இல்லை. காப்பீடு நிறுவனங்களும் அதை வலியுறுத்துவது இல்லை.

***

பிரிவு 147(1)(b)(ii)ல் ‘பொதுச் சேவை வண்டியின் பயணிக்கும் எந்த ஒரு பயணிக்கும் ஏற்ப்படும் மரணம் அல்லது காயத்திற்கான இழப்பீடு’ (against the death of or bodily injury to any passenger of a public service vehicle) என்று இருப்பதால், பேருந்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் காப்பீடு உண்டு என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது.

அதாவது வண்டியின் அனுமதியில் குறிப்பிடும் நபர்களுக்கும் அதிகமான அளவில் நபர்களை ஏற்றிச் சென்றால், அது மோட்டார் வாகன சட்டத்தின் பிற பிரிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்படி உரிமையாளரை அனுமதியினை ரத்து செய்வது போன்ற முறையில் தண்டிக்கலாமே தவிர ‘மூன்றாம் நபர் காப்பீடுகளுக்கும்’ அதற்கும் சம்பந்தமில்லை என்றே கருதப்பட்டது.

ஏனெனில், இவ்வாறான காப்பீடு வழக்குகளில், ஒரு காப்பீடு நிறுவனம் சட்டத்தின் பிரிவு 149(2)(a)(b)ல் குறிப்படப்படும் காரணங்களுக்காக மட்டுமே காப்பீட்டினை மறுக்கலாம். அதாவது வண்டிக்கு சிவப்பு சாயம் பூசப்படக்கூடாது என்ற ஒரு நிபந்தனை காப்பீட்டில் இருப்பினும், சட்டம் அனுமதிக்காதலால் அதனை மீறியதாக கூறி காப்பீட்டினை மூன்றாம் நபர்களுக்கு மறுக்க இயலாது.

இந்தப் பிரிவில் தகுந்த உரிமம் இல்லாத ஓட்டுநர் ஓட்டுவது உட்பட பல காரணங்கள் கூறப்படினும், வண்டியின் அனுமதியில் கூறப்பட்டுள்ள நபர்களுக்கு மேலான நபர்கள் பயணம் செய்தல் என்ற காரணம் கூறப்படவில்லை!

ஓரளவிற்கு கிட்டே வருவது 149(2)(a)(i)(c) என்ற பிரிவு!

அதாவது வண்டியின் அனுமதிக்கப்பட்ட உபயோகத்திற்கு அன்றி வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துதல் (for a purpose not allowed by the permit under which the vehicle is used, where the vehicle is a transport vehicle)

அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது இந்தப் பிரிவின் கீழ் வராது. அதாவது விவசாயத்திற்காக அனுமதி பெற்ற ஒரு டிராக்டரில் குடி தண்ணீர் ஏற்றிச் செல்வது வேறு உபயோகம். ஆனால், அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது வேறு உபயோகம் என்று கூற முடியாது. அனுமதியினை மீறியது என்று மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.


***

ஆனால் உச்ச நீதிமன்றம், ஒரு சட்டத்தின் பிரிவுகளை இவ்வாறு தனியே படித்தல் கூடாது மாறாக முழுச் சட்டத்தினையும் ஒரு சேர படித்து பொருள் கொள்ள வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறியிருக்கிறது. அதாவது சட்டத்தின் பிற பிரிவுகளில் வாகனத்தின் அனுமதித்த அளவுதான் நபர்களை ஏற்ற வேண்டும் என்று இருப்பதால், எந்தவொரு பயணி (any passenger) என்பது அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தவிர மற்றவர்கள் இல்லை என்று கூறுகிறது.

மேலும் அனுமதிக்கும் அதிகமான பயணிகளைப் பொறுத்தவரை காப்பீடே (insurance cover) இல்லையென்பதால் 149ம் பிரிவினை கருத்தில் கொள்ளவே தேவையில்லை என்கிறது. ஏனெனில் 149ல் குறிப்பிடப்படும் நிபந்தனைகள் காப்பீடு இருந்தால் மட்டுமே பயன்படும்.

எனவே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிகமாக உள்ள 46 இழப்பீடுகளை மட்டும் காப்பீடு நிறுவனம் கொடுத்தால் போதும், அதனை 90 வழக்கில் வழங்கப்பட்ட இழப்பீட்டிலும் விகிதாச்சார முறையில் பகிர்ந்து கொடுக்க வேண்டும். மீதித் தொகையினன பாதிக்கப்பட்டவர்கள், வண்டி உரிமையாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது!


***

பிரிவு 149 பற்றி உச்ச நீதிமன்றம் கூறியது சரிதான் எனினும், 147வது பிரிவில் கண்ட ‘any passenger’ என்பதற்கு தந்த விளக்கம் சரியான முறையில் அமையவில்லை.

ஏனெனில், வண்டியின் உரிமையாளரிடம் இழப்பீட்டினை பெறுவது என்பது நடைமுறையில் பெரும்பாலும் சாத்தியமல்ல. எனவே இழப்பு இறுதியில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு. இதன் மூலம் ‘மூன்றாம் நபர் காப்பீடு’ என்பதே அர்த்தமற்றுப் போகிறது.

ஏனெனில், இந்தப் பெயரினை வைத்தே, இவ்வகையான காப்பீட்டிற்கும், மற்ற காப்பீட்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஆம், மற்ற காப்பீடுகளைப் போல அல்லாமல், மூன்றாம் நபர் காப்பீட்டின் பயனாளி, அவரது முகத்தினைக் கூட அறியாத வண்டி உரிமையாளர். ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வித்தியாசத்தினை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே பயனாளி தவறு ஏதும் புரியாத பொழுது, அவர் தண்டிக்கப்படுவது நீதியின் பொருட்டு சரியான செயலாக இருக்க முடியாது. பயணிகள் பயணம் செய்யக்கூடாத சரக்கு வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவருக்கு காப்பீடு மறுக்கப்படுவதில் ஓரளவுக்கு நியாயம் உள்ளது. ஆனால், அனைத்து பயணிகளும் ஒரே கட்டணம் செலுத்தி பயணம் செய்கையில் எப்படி அவர்களுக்கு காப்பீட்டினை மறுக்க முடியும்?

மேலும் பல மோட்டார் வாகன விபத்துகளில், இந்தச் சட்டம் ஒரு சமுதாய நலனுக்கான சட்டம் (social welfare legislation) எனவே, இந்தச் சட்டத்தின் பிரிவுகளை, விபத்தில் பாதிக்கப்படுபவரின் நலனை கருத்தில் கொண்டு, அவருக்கு சாதகமாக அர்த்தம் (interpretation) கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் 147ல் கண்ட பிரிவு தெளிவாகவே இயற்றப்பட்டுள்ளது. நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளபடியென்றால், அந்தப் பிரிவில் passenger என்பதற்கு முன்பாக any என்ற வார்த்தை தேவையில்லை. முக்கியமாக, நலன் தரும் சட்டங்களில் (beneficial legislation) குறுகலான அர்த்தம் (narrow interpretation) கொள்ளக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம்தான் கூறியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் பி.வி.நாகராஜு எதிர் ஓரியண்டல் இன்ஸூரன்ஸ் (1996 ACJ 1178) என்ற வழக்கில் வழங்கப்பட்ட தனது தீர்ப்பினை கருத்தில் கொள்ளவில்லை. அந்த வழக்கில் சரக்கு வாகனத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்கிறார் ஒருவர். சரக்கு வாகனத்தில் பயணிகள் செல்வது தவறு என்பதுடன் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கும் அதிகம் பயணித்தனர். விபத்துக்குள்ளான வண்டிக்கான சேதத்தினை உரிமையாளர் காப்பீடாக கேட்கையில் மறுக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவ்வாறு அதிக நபர்களை ஏற்றிச் சென்றது விபத்துக்கான காரணமாக இல்லாத பட்சத்தில், அந்த மீறலை ஒரு அடிப்படையான மீறலாக எடுத்துக் கொண்டு காப்பீட்டினை மறுக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

இறுதியாக, இந்த வகையான பிரச்னைகளில் கிரிஜா பிரசாத் அகர்வால் எதிர் பார்வதி தேவி (2005 (2) TNMAC 65) என்ற வழக்கில், ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளை கொண்ட புல் பெஞ்ச் (Full Bench) தீர்ப்புதான் சரியானதாக இருக்கக் கூடும். இவ்வாறான விதி மீறல்கள் மூன்றாவது நபர்களை பாதிக்க கூடாது. வேண்டுமாயில் அதிகமான நபர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டினை, காப்பீடு நிறுவனங்கள் வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ள வேண்டியது என்பதுதான் சட்டப்படி மட்டுமல்ல நீதியின்பாலும் சரியான தீர்ப்பாக இருக்க முடியும்!

மதுரை
25.08.07


மோட்டார் வாகன விபத்து காப்பீடு குறித்து மேலும் அறிய...
http://marchoflaw.blogspot.com/2007/01/1.html

24.8.07

உச்ச நீதிமன்றத்தில் இடப்பங்கீடு!

கடந்த 21ம் தேதியன்று, தமிழகத்தினை சேர்ந்த நீதிபதி திரு.சதாசிவம் உச்ச நீதிபதியாக பதவியேற்றது, தமிழக நீதித்துறையினை பொருத்தவரை முக்கியமான ஒரு நிகழ்வாகும். தமிழர் ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவது இயல்பான நிகழ்வுதான் என்றாலும், திரு.சதாசிவத்தின் நியமனம் முக்கியத்துவம் பெறுவது, அவர் தொடர்ந்து பணியில் நீடிக்கும் பட்சத்தில் வரும் 2013ம் வருடத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்ப்பார்.

அதாவது, திரு. பதஞ்சலி சாஸ்திரி இந்தியாவின் தலைமை நீதிபதியாக 1951-54 ஆண்டுகளில் பணியாற்றியதற்குப் பிறகு 2013ம் ஆண்டில் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது!

மதறாஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட திரு.சுப்பாராவ் கூட இந்தியாவின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார் என்றாலும், அவர் ஆந்திராவை சேர்ந்தவர். மேலும், ஆந்திராவிற்காக தனி உயர்நீதிமன்றம் ஏற்பட்ட பிறகு அங்கு பணியாற்றினார்.

எவ்வாறாயினும், தமிழ்நாட்டுக்கு மட்டுமே மதறாஸ் உயர்நீதிமன்றம் என்றான பிறகு தலைமை நீதிபதியானவர்கள் என்று எடுத்துக் கொண்டால், திரு.சதாசிவம் முதல் தமிழர் என்ற பெருமை பெறுவார்!

உயர் நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் வயது 62 என்றாலும், உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் 65 வயதில்தாலன் ஓய்வு பெறுவர்.

***

நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு சதாசிவத்தின் நியமனத்தில் ஒரு விடயம் வியப்பூட்டியிருக்கலாம். அதாவது மதறாஸ் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் தலைமை நீதிபதியான ஏ.பி.ஷா மற்றும் மகோபத்யாயா ஆகியோர் திரு.சதாசிவத்தினை விட சீனியர்கள்!

சமீபத்தில் சதாசிவம் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது, அங்கு தற்பொழுது தலைமை நீதிபதியாக பணிபுரியும் நீதிபதிக்கு கீழே இரண்டாமிடத்தில் பணிபுரியத்தான்...ஏன், தற்பொழுது ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணிபுரியும் கற்பகவிநாயகம் சதாசிவத்தின் சீனியர்!

உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் தலைமை நீதிபதியாக பதவியேற்பது, இந்திரா காந்தி காலத்தில் ஒரு முறை மீறப்பட்டாலும் முழுக்க முழுக்க பணிமூப்பு (seniority) அடிப்படையில்தான் என்றாலும், உச்ச நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவது பணிமூப்பு அடிப்படையில் மட்டுமல்ல.

தகுதி ? திறமை ?

பணிமூப்பினைப் போலவே அதுவும் ஒரு காரணியே தவிர முழுக்காரணமல்ல. நமது தலைமை நீதிபதி ஏ.பி.ஷா போன்றவர்கள் திறமை குன்றியவர்கள் என்றும் அர்த்தமல்ல.

பின்னர் காரணம்?

தமிழகத்தினை சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணனின் ஓய்விற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் தமிழர் எவரும் இல்லையென்பதுதான் காரணம். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு மாநிலம், மொழி, மதம், பால் (sex) ஒரு காரணமல்ல என்றாலும், எந்த ஒரு பிரிவினரும் தங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லையென்ற மனக் கசப்படைந்து விடக்கூடாது என்ற வகையில் ஒரு சமரச நிலை, நீதிபதி நியமனங்களில் பின்பற்றப்படுகிறது.

தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதி எவரும் இல்லையென்ற நிலையில் தமிழகத்தினை சேர்ந்த பிரபா ஸ்ரீதேவன் அல்லது ஆந்திராவினை சேர்ந்த மீனாகுமாரி அவர்களுக்கு வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

இதே நிலையில் முன்பு கேரளாவினை சேர்ந்த இஸ்லாம் மதத்தினை சேர்ந்தவரான பாத்திமா பீவி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் உச்ச நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் கவனிக்கத்தகுந்தது.

***

நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு தேவை என்ற விவாதங்கள் தற்பொழுது எழுப்பப்படுகின்றன...வகுப்புவாரி இட ஒதுக்கீடு இருக்கிறதோ இல்லையோ மற்ற இடப் பங்கீடுகள் அங்கும் எழுதப்படாத விதியாக பின்பற்றப்படுவதுதான் உண்மை!

எது எப்படியாயினும், சென்னை உயநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியேற்ற நாளிலிருந்து இங்கிருந்து மாற்றாலாகிச் சென்ற காலம் வரையிலும் எந்த ஒரு வழக்குரைஞர் மீதும் கடுஞ் சொல் ஏதும் பிரயோகிக்காத, பணியாற்றிய ஒவ்வொரு நாளிலும் தனது பணியில் முழுக்கவனம் செலுத்தி, பல்வேறு வழக்குகளில் சிறப்பான தீர்ப்பினை அளித்து இன்று தனது கடுமையான உழைப்பின் மூலம் நீதித்துறையில் மேன்நிலையினை அடைந்திருக்கும் நீதிபதி சதாசிவம் நம் அனைவரின் பாரட்டுக்கும் உரியவர்.

மதுரை
24.08.07


நீதிபதி கற்பகவிநாயகம் சீனியராக இருப்பினும் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை? இந்த கேள்விக்கு விடை கிடைக்காது. ஏனெனில் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது பற்றிய காரணங்களை, தகவல் அறியும் சட்டத்தின் (Right to Information Act’ 2005) மூலமும் பெற முடியாது!

19.8.07

இலவசமாக ஆற்றல்!

“ஓடும் ரயிலி இருந்து மின்சாரம் - விருதுநகர் மாணவர்கள் கண்டுபிடிப்பு” என்ற கொட்டை எழுத்து தலைப்பில் இன்றைய தினகரனில் ஒரு செய்தி. பொம்மை ரயிலுடன் மாணவர்கள் நிற்கும் வண்ணப்படம் மேலும் கண்களை ஈர்த்தது.

அதாவது, ரயில் பெட்டிகளின் மீது காற்றாலைகளை அமைத்து ரயில் ஓடும் பொழுது எதிர்த்திசையில் அடிக்கும் காற்றின் விசையால் மின்சாரத்தைப் பெறலாமாம்!

செய்தி அளிக்கும் புள்ளி விபரங்கள் நம்மை அப்படியே சந்தோஷ காற்றில் மிதக்க விடுகின்றன. ஒரு ரயிலில் தினசரி 320 கிலோ வாட் மின்சாரம், நாட்டில் ஓடும் ரயில்களில் இருந்து 50 நகரங்களுக்கு தேவையான மின் சக்தி, ரயில்களில் சிறு மாறுதல் செய்தால் மேட்டூர் அணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் போல 8 மடங்கு மின்சாரம்...இன்ன பிறவுமாக!!

சீக்கிரம், யாராவது பிரதமரின் விஞ்ஞான ஆலோசகருக்கு கூறினால், 123 ஒப்பந்தத்தினை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு அரசினை காப்பாற்றிவிடலாம்.

***
தவறு எங்கேயிருக்கிறது?

எனக்குப் புரியவில்லை. பன்னிரெண்டாம் வகுப்போடு பெளதீக அறிவினை நிறுத்திக் கொண்ட என்னிடமா இல்லை நான் கற்ற பெளதீக விதிகளிலா?

அல்லது நமது ஆசிரியர்களிடமா இல்லை இலவசமாக ஏதாவது கிடைத்து விடாதா என்றலையும் நமது அற்பத்தனத்திலா?

‘If wishes are horses, beggers would ride on it’ என்று கூறியது யார்?

மதுரை
190807

யா.பெரல்மானின் பொழுது போக்கு பெளதீகத்தினைப் படித்தவர்கள், ஓயாமல் இயங்கும் இயந்திரத்தினை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று ஐரோப்பாவில் அலைந்தவர்களின் வேடிக்கையான இயந்திரங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள்.

18.8.07

விருமாண்டியும் மரணதண்டனையும்

முன்பு நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ‘விருமாண்டி’ படம் பார்க்கும் வாய்ப்பு நேற்று வாய்த்தது. துரதிஷ்டவசமாக, முக்கால்வாசிப் படம்தான் பார்க்க முடிந்தது. எனவே, கதை இறுதியில் பயணிக்கும் பாதையினை அனுமானிக்க முடியவில்லை!

எனினும் உறுத்திய சில விஷயங்கள்...

மரண தண்டனைக்கு எதிரான படம் என்று கூறப்பட்டதனை வைத்து, படம் வெளி வரும் முன், இவ்வாறான விவாதங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் படங்கள் வரவேற்க்கப்பட வேண்டும் என்று பதிவெழுதினேன்.

ஆனால்...

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக மட்டுமே பணியாற்றிய திரு.வி.ஆர்.கிருஷ்ண ஐயரினை ‘Former Chief Justice, Supreme Court of India” என்று அறிமுகப்படுத்தியதில் முதல் சறுக்கல் தொடங்கியது.

இரண்டாவது, மரண தண்டனையினை எதிர்நோக்கியிருக்கும் தலைமையாசிரியரின் அறிமுகம், மரண தண்டனைக்கெதிரான விவாதத்தினையே கேலிக்குள்ளாக்குவது.

அதாவது, தவறு செய்யும் மாணவனை தலைமையாசிரியர் அடிக்க அவன் சுருண்டு விழுந்து செத்துப் போகிறான். மரண தண்டனை கொடுத்து விட்டார்களாம். மேலும், இறந்த சிறுவன் பள்ளித்தாளாளரின் மகன் என்பதும், தற்கொலைக்கு முயன்றேன் என்பதும் கவனிக்கக்தகுந்தது.

இவ்வாறான குற்றங்களுக்கு மரண தண்டனையினை பரிந்துரைக்கும் அளவிற்கு நமது சட்டங்கள் கொடூரமானவையும் அல்ல...நீதிபரிபாலான முறையும் மோசமானது அல்ல. உண்மையில் தலைமையாசிரியருக்கு ஆயுள் தண்டனை கூட வழங்கப்படமாட்டாது!

முக்கியமாக, மரண தண்டனைக்கெதிரான விவாதம் இதுவல்ல...ஏனெனில், மரண தண்டனனக்கு எதிரான குரல்கள், குற்றம் பெரிதா, சிறிதா அல்லது தெரிந்து செய்யப்பட்டதா, தெரியாமல் நிகழ்ந்ததா அல்லது குற்றவாளி இரக்கத்திற்கு உரியவனா அல்லது கொடூரனா என்று பார்ப்பதில்லை. நாதுராம் கோட்சே என்றாலும் சரி ஓசாமா பின் லேடனாக இருந்தாலும் சரி, மரண தண்டனை கூடாது என்றுதான் கூறுகிறார்கள்.

பல சமயங்களில், மரண தண்டனை எதிர்ப்பாளர்களை மடக்குவதற்காக வைக்கப்படும் கேள்வி, ‘சிறுமிகளை பாலியல் கொடுமைக்குட்படுத்தி கொலை செய்தவனுக்கு கூடவா, மரண தண்டனை கூடாது?’ என்பதாகும்.

எனவே விவாதம் மரண தண்டனை தேவையா இல்லையா என்பதுதானே தவிர, யாருக்கு என்பதல்ல!


ஏனெனில் யாருக்கு என்பதில்தால் பாரபட்சம் (discrimination) காட்டப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

மேலும், ஏஞ்சலா காத்தமுத்து (வலிய வரவழைத்துக் கொண்ட பெயரா?) ‘திருத்தி எழுதப்பட முடியாத தீர்ப்பு உண்டு, அதாவது மரண தண்டனை’ என்பதும் மரண தண்டனையினை எதிர்ப்போர் கைக்கொள்ளும் வாதமல்ல!

சில சமயம், அப்பாவிகளும் (innocents) தவறுதலான தீர்ப்புகளால், மரண தண்டனைக்கேதுவாகிறார்கள் என்பதல்ல, மரண தண்டனைக்கு எதிரான வாதம்...உண்மையில் குற்றவாளிக்கும் அல்ல என்பதுதான் அவர்களது வாதம்!!

மூன்றாவது, ஏஞ்சலா காத்தமுத்து?

அது என்ன, டாக்டர் இன் சிவில் லா? இயக்குஞர் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்டது இவ்வளவுதானா? மேலும் ‘கற்பழிப்பு’ என்ற பதம், பொலிடிக்கலி இன்கரக்ட் என்பது கூட புரியாதா, டாக்டரேட்டா?

சரி, கதையின் முடிவென்ன? கமலஹாசன் நிரபராதி என்பதா இல்லை அவருக்கு மரதண்டனை தேவையில்லை என்பதா? எப்படியாயினும், தமிழ்ப்பட ஹீரோயிச கிளீஷேயிலிருந்து, தப்பிக்க முயன்று தோற்ற மற்றொரு படம் என்பது புரிகிறது!

இவ்வாறு இரு வேறுபட்ட பார்வைகளில் திரைக்கதையினை நகர்த்துவது என்பது தமிழ் திரைப்படத்திற்கு புதிது...ஆனால் இவ்வகையான திரைக்கதைகளின் வெற்றி, உண்மையென்பது, பொய்க்கும் மெய்க்கும் நடுவே இருப்பது என்ற வகையில் அதனை ரசிகர்களின் யூகத்தில் விடுவதில் இருக்கிறதேயன்றி, இவன் கதாநாயகன் இவன் வில்லன் என்று விளக்குவதில் இல்லை...

விருமாண்டியில், கமல்ஹாசன் தமிழ் திரைக்கதையினை அந்த அளவிற்கு உயர்த்தியுள்ளாரா என்பது படத்தினை முழுவதும் பார்க்கும் பாக்கியம் வாய்த்தவர்கள்தான் கூற வேண்டும்.

மதுரை
18.08.078

ஒரு சமயம், ஏஞ்சலா, தனது பிறந்த ஊராக ‘கீழவெண்மணி’ என்று குறிப்பிடுவதன் காரணம் என்ன?

13.8.07

ஹாரி போட்டரும் சிவாஜியும்

“அப்பா, ஹாரி போட்டர் புத்தகம் வேணும்”

“சரி”

“முதல் நாளே வேணும்”

“ம்ம்...பார்க்கலாம்”

“அப்ப கண்டிப்பா வாங்கித்தருவீங்களா?”

“சரி...வாங்கலாம்”

“எனக்கு ஒன்று, அக்காவுக்கு ஒன்று”

உரையாடலை தொடராமல் எனது மகளையே சிறிது நேரம் பார்த்தேன்...


***

“இந்த ரெளலிங் எப்படி உன்னை ஒரு முட்டாளாக்கி வச்சிருக்கா, பார்த்தியா? முதல் நாள் ஹாரி போட்டர் புத்தகத்தின் விலை ஆயிரம் ரூபாய். ஒரு வாரம் வெயிட் பண்ணினால், பிளாட்பாரத்தில் பைரேட்டட் எடிஷன் நூறு ரூபாய்க்கு கிடைக்கும். அல்லது பேப்பர் பேக் எடிஷன் நானூறு ரூபாய்க்கு கிடைக்கும். புத்தகத்தை வெளியிட இத்தனை நாள் ஆனதே, இன்னும் ஒரு வாரம் தள்ளிப்போனது என்று நினைத்துக் கொண்டால் ஐநூறு ரூபாய் மிச்சப்படுத்தலாம் என்று உன்னை யோசிக்க விடாமல் தடுப்பது அவர்களது வியாபார தந்திரம்”

“சரி, முதல் நாளே வாங்க வேண்டும் என்பது கூட அதிகபட்சமான ரசிகத்தன்மை என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்ற எண்ணம், முட்டாள்தனமின்றி வேறென்ன?”

“வேறு எந்த பொருட்களுக்கும் இல்லாத ஒரு தன்மை புத்தகங்களுக்கு உண்டு. புத்தகத்தை, எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம், எத்தனை நபர்களும் படிக்கலாம். It can be consumed any number of time, without diminishing its utility. எனவேதான் எந்த புத்தகத்திற்கும் விலை நிர்ணயிக்க முடியாது. இப்படி அக்காவும் தங்கையும் ஒரே நாளில் ஒரே புத்தகத்தை வாங்குவோம் என்பது, புத்தகத்தின் இந்த மதிப்பையே குறைப்பதாகாதா?”

“ரெளலிங்கிற்கு உன்னைப் போன்ற ஏழ்மையான நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால், மூன்றாம் உலக நாடுகளில், குறைந்த விலைக்கு விற்கட்டுமே! தெரியுமா? இந்திய நாட்டில் பெரும்பான்மையோரின் ஒரு மாத சம்பளம் ஆயிரம் ரூபாயினை தொடுவதில்லை என்பது”

“இந்த வியாபாரிகள் உன்னை சிந்திக்க விடுவதில்லை. ஹாரி போட்டர் வெளியாகும் நாளில், ஏதோ உலகமே மாறி விடப்போகிறது என்ற மாயத்தோற்றத்தினை உருவாக்குகிறார்கள். இவர்களுக்காக இப்படியான கருத்தாக்கத்தை உன் போன்ற சிறுமிகளிடம் உருவாக்குவதற்கு பெரிதும் உதவுவது ஊடகங்கள்...”

“ஏதோ ஹாரி போட்டருக்காக இந்தியாவே ஏங்கிக் கிடப்பது போன்ற ஒரு தோற்றத்தினை, இவ்வாறு முழுப்பைத்தியம் பிடித்து அலையும் ஒரு சிறு கூட்டத்தினைக் காட்டி மற்றவர்களையும் முட்டாளாக்குகிறார்கள். முதல் நாளே வாங்கிப் படிக்காவிடில், போச்சு...என்ற நினைப்பினை உனக்கு ஊட்டி விடுகிறார்கள். அவ்வளவுதான்”

***

“ஒரு புத்திசாலி நுகர்வோர் எப்படியிருப்பான்? சந்தைக்கு வரும் ஒரு பொருளில் தரம் நன்றாக இருக்கிறதா என்பதை அறிந்து, பின்னரே வாங்க முடிவெடுப்பான். ஆனால், உன் போன்ற ரசிகர்கள்? பொருள் தரமோ, இல்லையோ...அது எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக வாங்க முடிவெடுக்கிறீர்கள்”

“இவ்வாறு உங்களை முடிவெடுக்க வைப்பதில்தால், இந்த வியாபாரிகள் வெற்றி பெறுகிறார்கள். அதற்க்காகத்தான் முதல் இரண்டு மூன்று நாட்களிலே விற்றுத் தீர்த்துவிட வேண்டும் என்று இவர்கள் அலைகிறார்கள். ஏனென்றால் சரக்கு மோசமாக இருந்து, அந்த எண்ணம் வெளியே பரவி விட்டால்?”

“பார்த்துக் கொண்டேயிரு, இதோ ஹாரி போட்டர் சாகிறான் இல்லை பிழைக்கிறான், இதுதான் கதை, அடுத்த மாதம் வெளிவருகிறது என்று சரடு விட்டுக் கொண்டு ஒரு போதை நிலைக்கு உங்களைப் போன்றவர்களை கொண்டு சென்று விட்டார்கள். ஆனால், எழுதி வைத்துக் கொள். ஹாரி போட்டர் வெளியான மூன்று நாட்களில் உன்னைச் சுற்றியுள்ள உலகம் முன்பு போலவே சுழன்று கொண்டிருக்கும்”

“நீ புத்திசாலி வாசகியா அல்லது முட்டாளா? என்பதை நீயே தீர்மானிக்கலாம்”

“சரி ஒரு புத்தகமே போதும்”


பிரபு ராஜதுரை
12.08.07


பின் குறிப்பு : தலைப்பில் ஏன் சிவாஜி.? கடந்த சில வாரங்களாக, சிவாஜிதானே ஹாட் டாபிக். மற்றபடி சிவாஜிக்கும் ஹாரி போட்டருக்கும் ஒற்றுமையில்லை!

இதுவெல்லாம் பிஸினென்ஸ் ஸ்டிராடஜி என்று மேனேஜ்மெண்ட் மாணவர்கள் வியக்கலாம். முன்னாபாய் படத்தில் நோயாளியை சப்ஜெக்ட் என்று சொல்லும் மருத்துவருக்கும், இண்டிபெண்டஸ் டே படத்தில், “ in the past twenty four hours, it has become very exciting” என்று வேற்று கிரக வாசிகளின் தாக்குதலை ஜனாதிபதியிடம் வியக்கும் விஞ்ஞானிக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை உண்டு!!