24.8.07

உச்ச நீதிமன்றத்தில் இடப்பங்கீடு!

கடந்த 21ம் தேதியன்று, தமிழகத்தினை சேர்ந்த நீதிபதி திரு.சதாசிவம் உச்ச நீதிபதியாக பதவியேற்றது, தமிழக நீதித்துறையினை பொருத்தவரை முக்கியமான ஒரு நிகழ்வாகும். தமிழர் ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவது இயல்பான நிகழ்வுதான் என்றாலும், திரு.சதாசிவத்தின் நியமனம் முக்கியத்துவம் பெறுவது, அவர் தொடர்ந்து பணியில் நீடிக்கும் பட்சத்தில் வரும் 2013ம் வருடத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்ப்பார்.

அதாவது, திரு. பதஞ்சலி சாஸ்திரி இந்தியாவின் தலைமை நீதிபதியாக 1951-54 ஆண்டுகளில் பணியாற்றியதற்குப் பிறகு 2013ம் ஆண்டில் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது!

மதறாஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட திரு.சுப்பாராவ் கூட இந்தியாவின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார் என்றாலும், அவர் ஆந்திராவை சேர்ந்தவர். மேலும், ஆந்திராவிற்காக தனி உயர்நீதிமன்றம் ஏற்பட்ட பிறகு அங்கு பணியாற்றினார்.

எவ்வாறாயினும், தமிழ்நாட்டுக்கு மட்டுமே மதறாஸ் உயர்நீதிமன்றம் என்றான பிறகு தலைமை நீதிபதியானவர்கள் என்று எடுத்துக் கொண்டால், திரு.சதாசிவம் முதல் தமிழர் என்ற பெருமை பெறுவார்!

உயர் நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் வயது 62 என்றாலும், உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் 65 வயதில்தாலன் ஓய்வு பெறுவர்.

***

நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு சதாசிவத்தின் நியமனத்தில் ஒரு விடயம் வியப்பூட்டியிருக்கலாம். அதாவது மதறாஸ் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் தலைமை நீதிபதியான ஏ.பி.ஷா மற்றும் மகோபத்யாயா ஆகியோர் திரு.சதாசிவத்தினை விட சீனியர்கள்!

சமீபத்தில் சதாசிவம் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது, அங்கு தற்பொழுது தலைமை நீதிபதியாக பணிபுரியும் நீதிபதிக்கு கீழே இரண்டாமிடத்தில் பணிபுரியத்தான்...ஏன், தற்பொழுது ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணிபுரியும் கற்பகவிநாயகம் சதாசிவத்தின் சீனியர்!

உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் தலைமை நீதிபதியாக பதவியேற்பது, இந்திரா காந்தி காலத்தில் ஒரு முறை மீறப்பட்டாலும் முழுக்க முழுக்க பணிமூப்பு (seniority) அடிப்படையில்தான் என்றாலும், உச்ச நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவது பணிமூப்பு அடிப்படையில் மட்டுமல்ல.

தகுதி ? திறமை ?

பணிமூப்பினைப் போலவே அதுவும் ஒரு காரணியே தவிர முழுக்காரணமல்ல. நமது தலைமை நீதிபதி ஏ.பி.ஷா போன்றவர்கள் திறமை குன்றியவர்கள் என்றும் அர்த்தமல்ல.

பின்னர் காரணம்?

தமிழகத்தினை சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணனின் ஓய்விற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் தமிழர் எவரும் இல்லையென்பதுதான் காரணம். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு மாநிலம், மொழி, மதம், பால் (sex) ஒரு காரணமல்ல என்றாலும், எந்த ஒரு பிரிவினரும் தங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லையென்ற மனக் கசப்படைந்து விடக்கூடாது என்ற வகையில் ஒரு சமரச நிலை, நீதிபதி நியமனங்களில் பின்பற்றப்படுகிறது.

தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதி எவரும் இல்லையென்ற நிலையில் தமிழகத்தினை சேர்ந்த பிரபா ஸ்ரீதேவன் அல்லது ஆந்திராவினை சேர்ந்த மீனாகுமாரி அவர்களுக்கு வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

இதே நிலையில் முன்பு கேரளாவினை சேர்ந்த இஸ்லாம் மதத்தினை சேர்ந்தவரான பாத்திமா பீவி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் உச்ச நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் கவனிக்கத்தகுந்தது.

***

நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு தேவை என்ற விவாதங்கள் தற்பொழுது எழுப்பப்படுகின்றன...வகுப்புவாரி இட ஒதுக்கீடு இருக்கிறதோ இல்லையோ மற்ற இடப் பங்கீடுகள் அங்கும் எழுதப்படாத விதியாக பின்பற்றப்படுவதுதான் உண்மை!

எது எப்படியாயினும், சென்னை உயநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியேற்ற நாளிலிருந்து இங்கிருந்து மாற்றாலாகிச் சென்ற காலம் வரையிலும் எந்த ஒரு வழக்குரைஞர் மீதும் கடுஞ் சொல் ஏதும் பிரயோகிக்காத, பணியாற்றிய ஒவ்வொரு நாளிலும் தனது பணியில் முழுக்கவனம் செலுத்தி, பல்வேறு வழக்குகளில் சிறப்பான தீர்ப்பினை அளித்து இன்று தனது கடுமையான உழைப்பின் மூலம் நீதித்துறையில் மேன்நிலையினை அடைந்திருக்கும் நீதிபதி சதாசிவம் நம் அனைவரின் பாரட்டுக்கும் உரியவர்.

மதுரை
24.08.07


நீதிபதி கற்பகவிநாயகம் சீனியராக இருப்பினும் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை? இந்த கேள்விக்கு விடை கிடைக்காது. ஏனெனில் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது பற்றிய காரணங்களை, தகவல் அறியும் சட்டத்தின் (Right to Information Act’ 2005) மூலமும் பெற முடியாது!

4 comments:

வடுவூர் குமார் said...

கிட்டத்தட்ட 53 வருடங்கள் கழித்து கிடைத்துள்ளது.
சந்தோஷம்.
பகிர்ந்தமைக்கு நன்றி.

SnackDragon said...

//2013ம் ஆண்டில் //
2003 தானே.

அதுசரி நீதிகள் நியமந்த்தில் அரசியல் இல்லை என்றா சொல்லவருகிறீர்கள்?

சிவபாலன் said...

சார்,

பகிர்வுக்கு மிக்க நன்றி!

PRABHU RAJADURAI said...

கார்த்திக்,

இது என்ன டெவில்ஸ் அட்வோகேட் நிகழ்ச்சியா என்ன?