8.7.08

நீதிமன்ற புறக்கணிப்பும்...சோம்பேறி மனதும்





கடந்த ஒரு வாரமாக வழக்குரைஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களை புறக்கணித்து வருகின்றனர். இவ்வாறான் தொடர்ச்சியான போராட்டங்களில் வழக்கமாக பங்கு எடுக்காத, மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞர்களும் நீதிமன்றங்களை புறக்கணிப்பதால், தமிழக நீதித்துறையில் பெரும் பிரச்னை எழுந்துள்ளது.

வழக்குரைஞர்கள் இவ்வாறு நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது, முறையல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறினாலும், இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது இது வரையில், தமிழகத்தை பொறுத்தவரை நீதித்துறை அறியாத ஒன்று.

ஏனெனில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நீதித்துறையினரும் வழக்குரைஞர் சமுதாயத்திலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதால், இருவருக்கும் இடையில் நிலவும் நெருக்கமான உறவு கடினமான நடவடிக்கைகளை எடுக்க தடையாக உள்ளது.

பல சமயங்களில், நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கை என்பது மிகச்சிலரான வழக்குரைஞர்களால் முன் வைக்கப்பட்டு மற்றவர்கள் எதற்கு வம்பு என்று ஒதுங்கிக் கொள்ள நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஓரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை...தொடர்ந்த புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது, கட்சிக்காரர்கள் பலரின் அடிப்படை உரிமையினை பாதிக்கும் ஒரு செயல் என்பதை பல வழக்குரைஞர்கள் அறிந்திருந்தாலும்...ஏதும் செய்ய இயலாத நிலையில் உள்ளனர்.

-oOo-

வழக்குரைஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்கள் பலமுறை வெற்றி பெருவதில்லை. ஓரளவிற்கு பிறகு வழக்குரைஞர்கள் சோர்ந்து...போராட்டங்கள் நீர்த்துப் போகிறது. வழக்குரைஞர்களும் அதற்காக வெட்கப்படுவதில்லை.

லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினால், அது பொது மக்கள் அனைவரையும் பாதிக்கிறது. போராட்டம் தொடங்கும் முன்னே பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகி...அரசு நடவடிக்கை எடுக்க முன் வருகிறது.


ஆனால் வழக்குரைஞர் போராட்டங்களில், நீதிமன்றத்தை அணுகும் மிகச் சிறிய அளவிலான, அதிலும் குற்றவியல் நீதிமன்றங்களை அணுகும் மக்கள் கூட்டத்தினரே பாதிக்கப்படுகின்றனர்.

தற்பொழுதும், ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வந்தாலும்...பெரிய செய்தி ஏதும் இல்லை. இறுதியில் வழக்குரைஞர்கள் அமைச்சர்களாக இருக்கும் தங்களது சமுதாயத்தை சார்ந்தவர்கள் மூலமாக காரியத்தை முடித்துக் கொள்வார்கள்...அதுதான் புத்திசாலித்தனமும் கூட!

-oOo-

கடந்த வாரம் எழுந்த தசவதார இரைச்சலில் அதிகமாக கேட்டது ‘ஹாலிவுட் படங்களுக்கு நிகரான உலகத்தரம்’ என்ற வார்த்தை!

‘அமெரிக்காதான் உலகம்’ என்று அமெரிக்கர்கள்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்...நாமும் கூடவா?

70 கோடியில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தொழில் நுட்பத்தில் எடுக்க முடியுமென்றால்...அந்த மடையர்கள் ஏன், 1000 கோடியினை படமெடுப்பதற்கு வீணாக்குகிறார்கள்?

-oOo-

வலைப்பதிவர்கள் அரைவேக்காடுகள் என்ற ரகசியம் உட்பட தமிழகத்தில் எல்லாவற்றையும் அறிந்த ‘ஞாநி’ இந்த வார குமுதத்தில் ஊட்டி மலையில் அமைக்கப்படும் ஆராய்ச்சி மையத்தினால் வனப்பகுதிக்கு ஏற்ப்படப் போகும் பாதிப்பினைப் பற்றி கவலைப்படுகிறார்.

ஆனால், ஊட்டி வனப்பகுதிக்கு பேரழிவை ஏற்ப்படுத்தியது அங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் என்பது புரியாமல்...புகைப்படங்களில் மட்டுமே அழகாகத் தோன்றும் தேயிலைத் தோட்டத்தின் படத்தை கட்டுரைக்கு பின்புலமாக பயன்படுத்தி கட்டுரையின் நோக்கத்தையே கேலிக்குறியதாக்கியதால், குமுதத்திற்கும் ஒரு குட்டு!

-oOo-

யார் கேள்வி கேட்டாலும், பக்கம் பக்கமாக எழுதி தன் ஞானத்தை முன்னிறுத்தும் ஜெயமோகன், வலைப்பதிவர்கள் சிலர் தர்மசங்கடமான கேள்விகளை எழுப்பியதற்கு மட்டும் ‘ஞாநி’யைப் போல பொங்கி பின் குமுதம் போல கேலி செய்து முடித்து விட்டார்.

கருணாநிதியின் ‘இலக்கியத்தை’ கேள்விக்குறியதாக்கிய பொழுதும், எம்ஜிஆர் சிவாஜியைப் பற்றி சுவராசியமாக கிண்டலடித்த பொழுதும்...ஜெயமோகனுக்கு அரணாக நின்றது வலைப்பதிவர்கள்தான்...

ஆனாலும், பயந்து போய் கட்டுரையைத் தூக்கி, ஆதரித்தவர்களை நட்டாற்றில் விட்டார் என்பது வேறு கதை!

-oOo-

உலக மகா இலக்கியம், சினிமா பேசும் சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்றவர்கள் இந்திய மசாலா திரைப்படங்களை அவ்வப்போது சற்று தடவிக் கொடுப்பது அவர்களின் நோக்கத்தினை சந்தேகிக்க வைக்கிறது.

தமிழ் வாசிக்கும் என் ஆர் ஐ இளைஞர்களை அடுத்து அவர்களது நம்பிக்கை......தமிழ் திரைப்படங்களாக இருக்குமா என்ற சந்தேகம்...

Lazy mind is devil’s workshop என்று சும்மாவா சொன்னார்கள்...I blame it on Advocate’s strike.

மதுரை
10.07.08




TERRACOTA IN MUMBAI BAZAR

உச்ச நீதிமன்றமும், குழப்பமான தீர்ப்புகளும்!



நமது உச்சநீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பில் கூறப்படும் சட்டக் கருத்துகளை இந்தியாவில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும். (Article 141 of Constitution of India) எனவே உச்சநீதிமன்றமானது தன் முன் உள்ள எந்த ஒரு வழக்கினையும் ஆய்ந்து அறிந்து தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஏனெனில் அவர்கள் தீர்ப்பில் எழுதக் கூடிய ஒவ்வொரு வாசகமும், இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் எடுத்துக் கூறப்பட்டு அந்த வாசகங்களில் கூறப்பட்டுள்ளவாறுதான், வழக்கானது தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வாதிடப்படுகிறது.

எனவே வேறு ஏதோ ஒரு நபர் நடத்திய வழக்கில் கூறப்படும் தீர்ப்பானது, அந்த வழக்கில் சம்பந்தப்படாத மற்றொரு நபரை பாதிக்கிறது!

ஆனால், பல்லாயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் எழும் வேலைப்பளுவின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ, உச்ச நீதிமன்றமானது வழக்கின் மீது முழுக்கவனமும் செலுத்த இயலாமல்.....தவறான அல்லது முன்னுக்குப் பின் முரணாக தீர்ப்பு கூறும் பொழுது அது, மற்ற நீதிமன்றங்களில் பெரும் குழப்பத்தை விளைவிக்கிறது.

முக்கியமாக, சமீப காலங்களில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏன் இவ்வாறு கூறுகிறது என்று புரிந்து கொள்ள முடியாமல், பல உயர்நீதிமன்ற நீதிபதிகளே புருவத்தை உயர்த்துகின்றனர்.

-oOo-

மோட்டார் வாகன சட்டப்படி மோட்டார் வாகனங்கள் கண்டிப்பாக காப்பீடு செய்திருக்க வேண்டும். அதனால், வண்டியினால் விபத்துக்குள்ளாகும் ஒரு நபருக்கு, அதன் உரிமையாளர் சார்ப்பில் காப்பீடு நிறுவனங்கள் நஷ்ட ஈட்டினை வழங்கும்.

ஆனால், வாகன ஓட்டியிடம் முறையான உரிமம் இல்லையெனில் (not duly licensed) காப்பீடு நிறுவனம் காப்பீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளது என வாதிடலாம் என்று சட்டம் உரிமையளித்துள்ளது.

காப்பீடு என்பது ஒரு ஒப்பந்தம். எந்த ஒரு ஒப்பந்தத்திலும் அதன் விதிகளை ஒருவர் மீறும் பொழுது பொழுது அதன் பலன்களை அவருக்கு மறுக்கலாம் என்பது நியாயமே!

ஆனால், மோட்டார் வாகன விபத்துகளைப் பொறுத்தவரை பலனடைவது, வண்டியில் அடிபடும் மூன்றாவது நபர். எனவே, வண்டியோட்டிக்கு உரிமம் இல்லை என்று காப்பீடு நிறுவனம் நஷ்ட ஈட்டினை வழங்க மறுக்கையில், அவர் அதனை வண்டி உரிமையாளரிடம்தான் பெற வேண்டும். உரிமையாளர் போதிய பண வசதி படைத்தவராக இல்லாத பட்சத்தில் அது இயலாது. மற்ற சந்தர்ப்பங்களிலும் அது கடினமான ஒரு காரியம்.

ஆக, தவறு ஏதும் செய்யாத மூன்றாவது நபரின் உரிமை மறுக்கப்பட வேண்டுமா?

இதனை அடிப்படையாக கொண்டே, பல உயர்நீதிமன்றங்கள் இவ்வாறான காப்பீடு விதி மீறல் என்றால், காப்பீடு நிறுவனம் தான் ஏற்றுக் கொண்டபடி நஷ்ட ஈட்டினை மூன்றாவது நபருக்கு அளித்து, பின்னர் வேறு வழக்கு ஏதும் தொடராமல், தவறு செய்த வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறின!

இது ஒரு சரியான அணுகுமுறை என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

-oOo-

வண்டி உரிமம் பற்றிய பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருந்ததால், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் இந்த பிரச்னையில் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்ந்து, முக்கியமான தீர்ப்பு ஒன்றினை வழங்கியது. சுவரண்சிங் வழக்கு என்று கூறப்படும் தீர்ப்பில் (2004 ACJ 1) உச்சநீதிமன்றம் இவ்வகையான விதி மீறல்களை சிறிய மீறல்கள் (minor breaches) அடிப்படை மீறல்கள் (fundamental breaches) என்று இரு வகையாக பிரித்தது. அதாவது காப்பீடு வழங்கும் தனது கடமையிலிருந்து விலக்கப்பட காப்பீடு நிறுவனமானது, வெறுமே விதி மீறலை சுட்டிக்காட்டினால் மட்டும் போதாது. மாறாக, ஓட்டுநரிடம் முறையான உரிமம் இல்லாததே, விபத்து நடந்ததற்க்கான காரணம் என்றும் நிரூபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. (பாரா 82).

முறையான உரிமம் இல்லாதது என்பது இங்கு விபத்துக்குள்ளான வண்டியினை ஓட்டுவதற்கான உரிமம் இல்லாதது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இலகுரகவாகன உரிமம் (LMV) உள்ளவர் கனரக வாகனம் (HMV) ஓட்டுவது போன்ற மீறல்கள்.

ஓட்டுநருக்கு உரிமமே இல்லாதா பிரச்னைகளையும் இந்த வழக்கில் சேர்க்க முடியுமா என்பது சற்று குழப்பமாக இருக்கிறது. (பாரா 100 மற்றும் 102(iii)).

வெறுமே மீறல் அல்ல அடிப்படை மீறல் என்று நிரூபிக்க வேண்டும் என்ற கடமையோடு வழக்கிலிருந்து தப்பிக்க காப்பீடு நிறுவனங்கள் அந்த வகையான அடிப்படை மீறல்கள் உரிமையாளரின் கவனக்குறைவால் நடந்தது என்பதையும் நிரூபிக்க வேண்டும். (பாரா 102 (vi)).

அதாவது விபத்துக்குள்ளான வண்டியின் ஓட்டுநரிடம் உள்ளது ஒரு போலி உரிமம். வண்டியில் உரிமையாளர், ‘அவர் என்னிடம் வேலைக்கு சேரும் பொழுது உரிமத்தை என்னிடம் காட்டினார். அதனை உண்மை என்று நம்பினேன். மேலும் அவர் நல்ல முறையிலேயே வண்டியினை ஓட்டினார்’ என்று சான்றளித்தால் உரிமையாளரின் கவனக்குறைவு என்று கூற இயலாது.

சரி, இவ்வாறு இரண்டு விடயங்களையும், காப்பீடு நிறுவனங்கள் நிரூபித்தாலும், நீதிமன்றங்கள் காப்பீடு நிறுவனத்தை அடிபட்டவருக்கு இழப்பீடு வழங்கக் கூறி அவற்றை வண்டி உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கும் உரிமத்தை அளிக்கலாம் என்று கூறப்படுவதுதான் இந்த தீர்ப்பின் சிறப்பம்சம்!

‘இந்த வழிமுறை பல்வேறு தீர்ப்புகளில் கூறப்படுகிறது. அதிலிருந்து விலக நாங்கள் விரும்பவில்லை’ என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் இந்த வழக்கில் கூறிய தீர்ப்பு உரிமம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முக்கியமான ஒரு மைல்கல் எனலாம்.

-oOo-

சுவரன்சிங் வழக்கு தீர்ப்பு வெளிவந்த சில மாதங்களில் குசும் ராய் ((2006) 4 SCC 250) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புரிந்து கொள்ள இயலாத ஒன்றாக இருந்தது. அதாவது அந்த வழக்கில் கார் ஓட்டுநரிடம் இலகுரக வாகன ஓட்டும் உரிமம் இருந்தது. ஆனால் அவர் ஓட்டியது ஒரு வாடகைக்கார். வாடகை வண்டி ஓட்ட விரும்புவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வில்லை (badge or endorsement) பெற வேண்டும்.
யாருக்கும் எளிதில் இது ஒரு அடிப்படை மீறல் அல்ல என்பது புரியும். அதனையும் கவனத்தில் கொள்ளாமல், வண்டி உரிமையாளர் கவனக்குறைவாக இருந்தாரா என்ற கேள்வியினையும் எழுப்பாமல் மேற்போக்காக வில்லை இல்லாதலாம் முறையான உரிமம் இல்லை என்று கூறி காப்பீடு நிறுவனம் இழப்பீடு அளிக்க தேவையில்லை என்று கூறியது.

ஆனாலும் இந்த வழக்கின் இறுதியில், தனது சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு (Article 142 of Constitution of India) வேறு ஏதோ ஒரு வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பினை முன்மாதிரியாக (precedent) கொண்டு காப்பீடு நிறுவனம் இழப்பீட்டினை அளித்து பின்னர் உரிமையாளரிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்று கூறியது.

அவ்வளது தூரம் வேறு ஏதோ ஒரு வழக்கினை முன்மாதிரியாக கொள்வதற்கு பதிலாக உரிமம் பற்றிய வழக்குகளில் மைல் கல்லாக விளங்கிய சுவரன்சிங் வழக்கினை முன் மாதிரியாக கொண்டிருந்தால் இந்தப் பிரச்னை எழுந்திருக்காது.

வேடிக்கை என்னவென்றால், குசும்ராய் வழக்கினை விசாரித்த் இரு நீதிபதிகளில் ஒருவர் சுவரன்சிங் வழக்கினை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர்!

ஆக, அடிப்படை மீறல் என்று சுவரண்சிங் வழக்கில் கூறப்பட்டது புறந்தள்ளப்பட்டு வாடகைக்கார் ஓட்ட தேவையான வில்லை இல்லாதது கூட காப்பீட்டினை மறுக்கும் ஒரு காரணியாக இந்த வழக்கு கூற முதல் குழப்பம்.

-oOo-

குசும்ராய் வழக்கிலாவது, கருணை கூர்ந்து நீதிபதிகள் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீட்டினை வழங்கி பின் உரிமையாளரிடம் வசூலித்துக் கொள்ள கூறினர். ஆனால், சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு தீர்ப்பில் அந்தக் கருணை கூட இல்லாமல், விபத்தில் தனது கணவனை பறி கொடுத்த ஒரு மனைவியையும், தந்தையை பறி கொடுத்த மூன்று சிறு பிள்ளைகளையும் தவிக்க விட்டிருப்பதுதான் கொடுமை!

பிரேம்குமாரி வழக்கு என்று கூறப்படும் இந்த வழக்கின் (Appeal No.490/2008 Date 18/01/2008) தீர்ப்பினைப் படிக்கையில் லாரி ஓட்டுநருக்கு முறையான உரிமம் இல்லை என்றுதான் குறிப்பிடுகிறார்களே தவிர அது அடிப்படையான மீறலா? உரிமையாளரின் கவனக்குறைவு உள்ளதா? என்ற கேள்விகளை எழுப்பாமல், முன்னர் உரிமம் பற்றிய அனைத்து தீர்ப்புகளையும் பற்றி மட்டும் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் வண்டி உரிமையாளரிடம் இருந்து இழப்பீட்டினை வசூலித்துக் கொள்ளலாம் என்று மட்டும் கூறி வழக்கினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஐயா, அடிப்படை மீறல், உரிமையாளரின் கவனக்குறைவு என்பது இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டதாகவே கொள்வோம். ‘இழப்பீட்டினை வழங்கி வசூலித்துக் கொள்ளலாம்’ என்ற கொள்கையினை (pay and recover) சட்டக்கருத்தாகவே மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் முன்மொழிந்த பின்னர் தந்தையினை இழந்த மூன்று சிறு பிள்ளைகள் சம்பந்தப்பட்ட வழக்கில் அதனை பின்பற்றாமல் வேறு எந்த வழக்கில் பின்பற்றுவதாம்?

தீர்ப்பு எழுதிய இரு நீதிபதிகளுக்குத்தான் வெளிச்சம்!

08.07.08
மதுரை


பி.கு. வேடிக்கை என்னவென்றால் இந்த தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து தீர்ப்புகளிலும், சம்பந்தமில்லாத லக்ஷ்மி நாராயணன் தூத் மற்றும் மீனா வரியால் வழக்கு தீர்ப்பு உட்பட அனைத்து தீர்ப்புகளிலும் இந்த வழங்கி வசூலிக்கும் முறை ‘மூன்றாவது நபர்கள்’ வழக்கில் கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.





PETCHIPARAI DAM AND KALAKAD RANGE, WESTERN GHATS, INDIA

4.7.08

பயணம்-ரோடங் கணவாய் (Rohtang Pass)

மணாலி செல்கிறீர்களா? அங்குள்ள ரோடங் கணவாய் வரை செல்லாமல் திரும்புவதில் அர்த்தமேயில்லை. மணாலி எங்கிருக்கிறது என்பவர்களுக்கு ‘ரோஜா’ படம் எடுத்த இடம் என்றால் சட்டென்று புரியும்.

மணாலி என்பது இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000மீ உயரத்தில் அமைந்துள்ள கோடை வாஸஸ்தலம். வருடம் முழுவதும் சுற்றிலும் பனிசூழ்ந்திருக்கும் சிகரங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் பள்ளத்தாக்கு.

பனிச்சிகரங்களில் இருந்து உருகி வழியும் நீர் பியாஸ் (Beas/Vyas) நதியாக நுரை பொங்க மணாலி நகரின் நடுவே வேகமாக ஓடுகிறது.

குளிர்காலத்தில் மணாலி நகர் முழுவதும் பனி சூழ்ந்து, அப்பொழுதும் செல்வதற்கு அருமையாக இருக்குமாம்.

-oOo-

ரோடங் கணவாய், மணாலியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் சுமார் 5500 மீ உயரத்தில் அமைந்துள்ள கணவாய். ரோடங் கணவாயினை கடந்து அந்தப்பக்கம் இறங்கினால் லெ பின்னர் லடாக் செல்ல பாதை உள்ளது.

ரோடங் பாதை கோடைக்காலத்தில்தான் திறந்திருக்கும். செல்ல விரும்புவர்கள் காலை 4 மணிக்கே மணாலியிருந்து கிளம்பிவிட வேண்டும். போகும் வழியிலேயே குளிர் உடைகள் வாடகைக்கு கிடைக்கும். பிரச்னை என்னவென்றால், பேரம் பேச நம்மை அனுமதிக்காமல் ஓட்டுநர்கள் அவசரப்படுத்துவார்கள்.
உண்மையில் ரோடங்கில் ஸ்வெட்டர் அதற்கு மேல் ஒரு ஜாக்கெட்டுடன் சமாளித்து விடலாம். முக்கியமான தேவை கையுறையும், காலுக்கு ரப்பர் பூட்டும்தான்.

மணாலிக்கு வரும் 90 சதவிகித பயணிகள் சுமார் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மர்தி ஐஸ் பாயிண்ட் என்ற இடத்தோடு திரும்பி விடுவார்கள். ஆனால் பனியினை அதன் சுத்தமான அழகோடு (virgin beauty) பார்க்க விரும்பினால், மர்தியை 6 மணிக்குள்ளாக கடந்து விட வேண்டும். அதற்கு பிறகு அனுமதிக்க மாட்டார்கள்.

4 மணிக்கே கிளம்புவதற்கு காரணம் அதுமட்டுமல்ல. ரோடங்கில் முதல் பத்து வண்டிக்குள்ளாக நாம் போனால்தான் ரோடங் அருகே நிறுத்த இடம் கிடைக்கும்.

‘ரோடங்’கின் அழகு!

போய்த்தான் பாருங்களேன்...தற்பொழுதுக்கு புகைப்படத்தை அழுத்தி பெரிதாக்கிப் பார்க்கலாம்.

அது இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து!!!


(ZERO POINT...அந்தப் பக்கம் இறங்கினால்...லடாக் சென்று விடலாம்.











காலையில் முதல் ஆளாக சென்றால், ரோடங் முழுவதும் விலங்கினங்களின் கால்தடங்கள்!


-oOo-

ஞாநியைத் தொடருவது சுவராசியமாகத்தான் இருக்கிறது. ‘இந்தியாவில் ஓரின உறவு சட்டப்படி இன்னமும் குற்றமாக இருந்து வருகிறது’ என்பவர் அடுத்து ‘பலதார மணமும் இந்து(ச்) சட்டப்படி குற்றம்தான்’ என்கிறார்.

அப்படியா?

மதுரை
040708

1.7.08

கருத்தும், கவிதையும்...காமக்கதையும்...



அரிஜித் பசாயத்.....உச்ச நீதிமன்றத்தில் தற்பொழுது பணியாற்றும் நீதிபதிகளில் சுறுசுறுப்பு மிக்கவர். நெருங்கி வரும் தனது பணி ஓய்விற்குள்ளாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு வழக்குகளில் தீர்ப்பு கூற வேண்டும் என்ற தாகத்துடன் செயல்படுகிறார். அதே போல பரபரப்பிற்கும் பஞ்சமில்லாதவர்.

சமீபத்தில் பிரிந்து வாழும் கணவன் மனைவிக்கிடையே, ‘குழந்தை யாரிடமிருப்பது’ என்ற வழக்கினை விசாரித்த இவர், ‘இந்து திருமண சட்டம் திருமணங்களை உடைக்கவே பயன்படுகிறது’ என்பது போல ஒரு கருத்தினை உதிர்க்க அது பத்திரிக்கைகளில் பெரிய செய்தியாக வெளிவந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது நீதிமன்றத்தில் வாதிடப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியின் பெயர் நேரு என்பதை அறிந்தவர், ‘குற்றவாளிகளிடம் இருந்து தேசத்தலைவர்களின் பெயர்களை பறிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று முழங்க அதுவும் செய்தியானது!

முதலாவது கருத்தாவது ஒரு விவாதப் பொருள். இரண்டாவது அபத்தம்.

எதுவாயினும், நீதிபதிகள் இவ்வாறு தங்களது சொந்த கருத்துக்களை உதிர்க்க நீதிமன்ற அறையினைப் பயன்படுத்துவது ஒரு வகையில் அதிகார துஷ்பிரயோகம்தான் என்பது எனது தாழ்மையான கருத்து.

தங்களது தீர்ப்புகளில் நீதிபதிகள் கவிதையினையும், திருக்குறள் போன்றவற்றை நுழைப்பது கூட அப்படித்தான்.

எனக்குத் தோன்றும் ஒரு கருத்தினை அல்லது நான் ரசித்த ஒரு கவிதையினை மற்றவர்களோடு இவ்வாறு ஒரு பதிவு எழுதுவதன் மூலம் பகிர்ந்து கொள்ளுவதில் எனக்கு ஒரு இன்பம் ஏற்ப்படுகிறது. ஆனால், இதற்காக நான் செலவழிப்பது, எனது கணனியும் மின்சாரமும்!

அவ்வாறின்றி அந்த இன்பத்தினைப் பெற எனது பதவி தரும் சில வசதிகளை நான் பயன்படுத்துவது, ஏறக்குறைய அலுவலக ஊர்தியினை சொந்த காரியங்களுக்கு பயன்படுத்துவது போன்ற ஒரு செயல்தான்.

-oOo-

எழுத்தாளர் ஞாநியை குறை கண்டுபிடிப்பது வரவர உற்சாகம் தரும் ஒரு செயலாக இருக்கிறது. கடந்த வார குமுதத்தில் ‘ஓரின சேர்க்கை’ என்பது இந்திய சட்டப்படி குற்றம் என்பது போல எழுதியிருக்கிறார். குறை என்று கூற முடியாது. ஆனாலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு சில விளக்கங்கள் உதவலாம் என்பதால்...கொஞ்சம் காமக்கதை!

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377ஐ மனதில் வைத்து எழுதியிருப்பார் என நினைக்கிறேன். தமிழில் மொழி பெயர்க்கப் போவதில்லை.

“Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with imprisonment for life, or with imprisonment of either description for term which may extend to ten years, and shall also be liable to fine.
Explanation. -Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offence described in this section”

ஆக இந்தப் பிரிவின் கீழ் குற்றம் என்பது ஓரினபாலரை மட்டும் குறி வைக்கவில்லை என்பதை அறியலாம்.

-oOo-

அது என்ன ‘carnal intercourse against the order of nature’?

சென்னை வழக்கு ஒன்றில் (Brother John Antony Vs State 1992 CrLJ Mad 1352) இதனை விரிவாக ஆராய்ந்த நமது நீதிமன்றம் மூன்று வகையான sodomy, buggery மற்றும் bestiality போன்ற பாலியல் வக்கிரங்கள் (sexual perversions) இந்த குற்ற விளக்கத்திற்குள் அடங்கும் என்று கூறுகிறது.

முக்கியமாக sodomy என்பதன் விளக்கம் கவனிக்கத்தக்கது. மீண்டும் தமிழில் மொழி பெயர்க்கப் போவதில்லை.

Non coital carnal copulation with a member of the same or opposite sex e.g. per anus or per os (mouth)

இந்த விளக்கத்தின் மூலம், ஓரினசேர்க்கையோ, ஈரினசேர்க்கையோ குற்றமும் தண்டனையும் அனைவருக்கும் பொதுதான் என்பதை அறியலாம்.

எனது கேள்வி இதுதான்...

Are you sure, you have not ever committed any crime, punishable under law with life imprisonment?

-oOo-

பதிவாளர் பாலபாரதி தனது விடுபட்டவை பதிவில், ‘காவல்துறை வாகனங்களுக்கு’ இன்ஸூரன்ஸ் (காப்பீடு) சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவது கிடையாது. அதனால் அதில் அடிபட்டு விட வேண்டாம் என்று எழுதியிருக்கிறார்.

காவல்துறை மட்டுமல்லாது, அனைத்து அரசு வாகனங்களுக்கும், மோட்டர் வாகன சட்டமானது (Motor Vehicle Act) கட்டாய காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கிறது. அதற்காக வண்டியில் அடிபடுபவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்காது என்பதல்ல. அரசிடம் இருந்து பெற முடியும்.

வாகன விபத்தில் அடிபடுபவர்களுக்கு வாகன உரிமையாளர் நஷ்ட ஈடு தர வேண்டும். உரிமையாளரிடம் அவ்வளவு பணம் இருக்காது என்பதால், காப்பீடு நிறுவனங்கள் தருகின்றன. அரசு அவ்வாறு கூற முடியாதே!

இவ்வாறு கிடைக்கும் நஷ்ட ஈடு, விபத்து நடந்தவுடன் அரசு தன்னிச்சையாக அறிவிக்கும் உதவித்தொகையல்ல. அது வேறு!

-oOo-



QUTUB MINAR, NEW DELHI



மதுரை
01.07.08