Showing posts with label court boycott. Show all posts
Showing posts with label court boycott. Show all posts

20.3.09

அமெரிக்காவைப் பார்...

நடந்து முடிந்த வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தத்தைப் பற்றி 19/03/09 தேதியிட்ட ‘இந்து’வில் அதன் அமெரிக்க வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் கவனத்தை ஈர்ப்பதாயிருந்தது. அதாவது அமெரிக்காவில், ஒரு வழக்காடி தன்னுடைய வழக்கினை தானே நடத்தக்கூடிய உரிமை உள்ளதாம். வழக்குரைஞர் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழ்நாட்டிலும் வழக்காடிகள் தங்களுடைய வழக்கினை தாங்களே நடத்தும் உரிமையினைப் பெற்றுள்ளார்களாம்.

இந்த கடிதத்தை பிரசுரித்ததன் மூலம், ‘இந்து’ பத்திரிக்கை ஒரு இந்திய வழக்காடிக்கு தனது வழக்கினை தானே வாதிடும் உரிமை இல்லை என்பது போன்ற தோற்றத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது. வாசகரும் சரி, இந்துவும் சரி அறியாத ஒரு விடயம் நமது நாட்டில் நிலவும் சட்டங்கள் நாகரீகத்திலும் மனித உரிமையைப் பேணுவதிலும், அமெரிக்க நாட்டிலுள்ள எந்த ஒரு சட்டத்திற்கு குறைவான ஒன்றல்ல. இங்கும் ஒரு வழக்காடிதான், தன்னுடைய வழக்கினை நடத்தும் முதல் உரிமை உள்ளவர். வேண்டுமானால் அவர் ஒரு வழக்குரை நியமித்துக் கொள்ளலாம். எனவே இந்த ஒரு சாதாராண உரிமைக்கு கூட அமெரிக்காவை தேடி ஓட வேண்டியதில்லை...

பல சமயங்களில், இங்கும் வழக்காடிகள் தங்களுடைய வழக்குகளை தாங்களே நடத்துவதுண்டு. ஒரு வழக்குரைஞருக்கு கிடைக்கும் உரிமையை விட சற்று மேலான உரிமை, ‘Party in Person’ என்று அழைக்கப்படும் அவர்களுக்கு உண்டு. வழக்கினை வாதிடுகையில், தனது வழக்கின் சாரத்தை விட்டு வெளியே சஞ்சரிக்கும் வழக்குரைஞர், நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்படுவார். ஆனால், வழக்காடி வாதிடுகையில், அவ்வித கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட முடியாது. எவ்வளவு தர்மசங்கடம் என்றாலும், நீதிபதி அவரது வாதத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். இல்லை, கதவுக்கு வெளியே சென்று ‘எனக்கு இங்கே நீதியில்லை. எனது வழக்கினை பேச எனக்கு உரிமை இல்லையா?’ என்று கத்த ஆரம்பித்து விடுவார்கள்.

அது மட்டுமில்லாமல், சட்ட ரீதியிலும் சில உரிமைகள் உண்டு. உரிமையியல் வழக்கில், கூறப்படும் தீர்ப்பில் அந்த தீர்ப்பினை எதிர்த்து எங்கு எவ்வளவு நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்று கூற வேண்டியதில்லை. நாமே, சட்டப்புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், வழக்காடி தானே வழக்கினை நடத்துகையில் தீர்ப்பில் அவற்றை குறிப்பிட்டாக வேண்டும். (Order 20 Rule 5A CPC)

சட்டமும், குடிமகன்கள் அனைவரும் சட்டத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்றே கருதுகிறது. சட்டம் இவ்வாறு கூறுகிறது என்பது எனக்குத் தெரியாது என்று வாதிட்டு யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.

சுப்பிரமணிய சுவாமி, கே.எம்.விசயன் ஆகியோர் தங்களது வழக்குகளை தாங்களே நடத்திய சில முக்கியமானவர்கள்.

ஆனால், எதற்கு பேராணை மனு (Writ), எதற்கு உரிமையியல் வழக்கு (Civil Suit), எதற்கு மனு (Original Petition), எதற்கு நுகர்வோர் மனு (Consumer Complaint) என்ற விடயங்களை மெத்தப் படித்தவர்களே அறிந்து கொள்ள நேரம் செலவழிக்க விரும்பாத நமது நாட்டில், சாதாரண பொது மக்கள் தங்களது வழக்கினை தாங்களே நடத்தினார்கள் என்ற பத்திரிக்கைச் செய்திகளில், விக்கிரமாதித்யன் கதைகளை விட சற்று அதிக அளவில் உண்மையிருக்கலாம், அவ்வளவுதான்.

-oOo-

சட்ட சம்பந்தமான விடயங்களில் தாங்கள் ஆர்வமுடையவராக இருப்பின் கீழ்கண்ட சரியா, தவறா என்பதை யூகிக்கவும். பின்னர் ஒரு வழக்குரைஞரை தொடர்பு கொண்டு தங்களது சட்ட அறிவினை சரி பார்த்துக் கொள்ளலாம். எனது மற்ற பதிவுகளிலும், பதில்கள் இருக்கலாம்.

(எச்சரிக்கை: advocacy is an art of impossibility என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் நான். எனவே சரியா, தவறா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை)

(1) உங்களது வீட்டினை 3 வருடங்கள் கழித்து கண்டிப்பாக காலி செய்து தர வேண்டுமென்று ஒப்பந்தம் கையெழுத்திட்டு, வாடகைக்கு விடுகிறீர்கள். 3 வருடம் கழித்து வாடகைதாரர் ஒப்பந்தப்படி காலி செய்தாக வேண்டும்.

(2) உங்களது வங்கிக் கணக்கில் (Bank Deposit) தங்களது மனைவி பெயரை மட்டும் நாமினி (nominee) என காட்டியுள்ளீர்கள். உங்களது மரணத்துக்குப் பின்னர் உங்களது மகனுக்கும் உங்களது மனைவியோடு இந்து மத சட்டப்படி வாரிசுதாரர் என்ற வகையில் டிபாசிட் பணத்தில் உரிமை உண்டு.

(3) அதுவே காப்பீட்டு தொகைக்காக கொடுக்கப்படும் நாமினியாக இருந்தாலும் அதே உரிமை உண்டு

(4) உங்களது நிறுவனம், 3 வருடங்களுக்குள் வேலையை விட்டு செல்வதாயிருந்தால், 1 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்ற உறுதியினை பெற்று உங்களை வேலைக்கு அமர்த்துகிறது. அதற்கு ஆதரவாக (security) உங்களது சான்றிதழ்களை நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளீர்கள். ஒரு வருட காலத்தில் வேலையை ராசினாமா செய்து சான்றிதழ்களை பெற வேண்டுமென்றால் 1லட்சம் செலுத்தினால்தான் சான்றிதழ்கள் கிடைக்கும்.

(5) உயில் பத்திரத்தில் முத்திரைக் கட்டணம் (stamp duty) செலுத்த தேவையில்லை.

(6) உங்கள் நண்பருக்கு கடன் உறுதிச் சீட்டு (promissory note) மூலம் கடன் கொடுத்துள்ளீர்கள். மூன்று வருடம் காலம் முடியும் முன், கடனை திருப்பிச் செலுத்த மேலும் ஒரு வருட காலம் அவகாசம் வேண்டுகிறார். நீங்கள் கொடுக்க நினைத்தாலும், மற்றொரு நண்பர் 3 வருட காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் அவ்வளவுதான் என்கிறார்.

மேற்கண்ட விடயங்களில் தங்களது புரிதல்களையும், இந்த விடயம் சார்ந்த பிரச்னைகள் எழும் பொழுது, ஒரு வழக்குரைஞரின் ஆலோசனை பெறாமல் தங்களால் செயல்பட முடியுமா என்பதையும் சற்று சிந்தியுங்கள். பின்னர் உங்களுடைய இடத்தில் ஒரு சாமான்ய குடிமகனை வைத்து பாருங்கள்.

-oOo-

இந்துவில் நான் மேலே குறிப்பிட்ட கடிதத்தினை எழுதிய வாசகர், சம்பந்தப்பட்ட வழக்காடிகள் plead செய்ததாக குறிப்பிடுகிறார். ப்ளீடு என்ற வார்த்தையினை உரிமையியல் சட்டப்படி எழுத்து பூர்வமாக முதலில் தாக்கல் செய்யப்படும் வழக்கினை குறிக்கவே பயன்படுத்துவோம். பொதுவாக, நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெறும் பொழுது ‘ப்ளீடிங்’ முதலியவற்றை வழக்குரைஞர்களே பார்த்துக் கொள்வார்கள். வழக்கினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அலுவலகத்தில் அதன் ஆய்வினை (scrutiny) முடித்து அதற்கு எண் வாங்கி நீதிமன்றம் முன்பும் கொண்டு வருவார்கள். பின்னர் வழக்காடியை உள்ளே அனுப்பி, வழக்கினை விசாரணைக்கு அனுமதிக்க (admit) வேண்டி இடைக்கால தடை உத்தரவும் (interim injunction, stay, direction etc.,) கோர வைப்பார்கள். அவ்வளவுதான்.

மற்றபடி வழக்காடிகளை இறுதி விசாரணைக்கு எல்லாம் அனுப்புவதில்லை.

வழக்குரைஞர்களின் போராட்டம் என்பது, நீதிமன்ற புறக்கணிப்புதான். வேலை நிறுத்தமல்ல. இதனால்தான், வழக்குரைஞர்கள் தங்களுடைய போராட்டத்தினை நாட்கணக்கில் தாங்க (sustain) முடிகிறது.

தொழிலாளர் போராட்டத்திற்கும், வழக்குரைஞர்களின் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இது புரியாமல், இந்து வாசகர்கள் அனைத்து வகைகளிலும் ஆதங்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக கடிதம் எழுதித் தள்ளி விட்டார்கள்.

-oOo-

மேற்கண்ட கடிதம் எழுதிய ரெக்சு அருள் (Rex Arul) அமெரிக்காவில் பொறியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தமிழார்வம் மிக்கவர். திருக்குறளில் மரண தண்டனை பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி வாசித்துள்ளார். என்னை பெயர் சொல்லி அழைக்க தயங்கி uncle என்று கூப்பிடுவார். உறவில் எனக்கு சகலை :-)

மதுரை
20.03.09

8.7.08

நீதிமன்ற புறக்கணிப்பும்...சோம்பேறி மனதும்





கடந்த ஒரு வாரமாக வழக்குரைஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களை புறக்கணித்து வருகின்றனர். இவ்வாறான் தொடர்ச்சியான போராட்டங்களில் வழக்கமாக பங்கு எடுக்காத, மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞர்களும் நீதிமன்றங்களை புறக்கணிப்பதால், தமிழக நீதித்துறையில் பெரும் பிரச்னை எழுந்துள்ளது.

வழக்குரைஞர்கள் இவ்வாறு நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது, முறையல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறினாலும், இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது இது வரையில், தமிழகத்தை பொறுத்தவரை நீதித்துறை அறியாத ஒன்று.

ஏனெனில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நீதித்துறையினரும் வழக்குரைஞர் சமுதாயத்திலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதால், இருவருக்கும் இடையில் நிலவும் நெருக்கமான உறவு கடினமான நடவடிக்கைகளை எடுக்க தடையாக உள்ளது.

பல சமயங்களில், நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கை என்பது மிகச்சிலரான வழக்குரைஞர்களால் முன் வைக்கப்பட்டு மற்றவர்கள் எதற்கு வம்பு என்று ஒதுங்கிக் கொள்ள நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஓரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை...தொடர்ந்த புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது, கட்சிக்காரர்கள் பலரின் அடிப்படை உரிமையினை பாதிக்கும் ஒரு செயல் என்பதை பல வழக்குரைஞர்கள் அறிந்திருந்தாலும்...ஏதும் செய்ய இயலாத நிலையில் உள்ளனர்.

-oOo-

வழக்குரைஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்கள் பலமுறை வெற்றி பெருவதில்லை. ஓரளவிற்கு பிறகு வழக்குரைஞர்கள் சோர்ந்து...போராட்டங்கள் நீர்த்துப் போகிறது. வழக்குரைஞர்களும் அதற்காக வெட்கப்படுவதில்லை.

லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினால், அது பொது மக்கள் அனைவரையும் பாதிக்கிறது. போராட்டம் தொடங்கும் முன்னே பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகி...அரசு நடவடிக்கை எடுக்க முன் வருகிறது.


ஆனால் வழக்குரைஞர் போராட்டங்களில், நீதிமன்றத்தை அணுகும் மிகச் சிறிய அளவிலான, அதிலும் குற்றவியல் நீதிமன்றங்களை அணுகும் மக்கள் கூட்டத்தினரே பாதிக்கப்படுகின்றனர்.

தற்பொழுதும், ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வந்தாலும்...பெரிய செய்தி ஏதும் இல்லை. இறுதியில் வழக்குரைஞர்கள் அமைச்சர்களாக இருக்கும் தங்களது சமுதாயத்தை சார்ந்தவர்கள் மூலமாக காரியத்தை முடித்துக் கொள்வார்கள்...அதுதான் புத்திசாலித்தனமும் கூட!

-oOo-

கடந்த வாரம் எழுந்த தசவதார இரைச்சலில் அதிகமாக கேட்டது ‘ஹாலிவுட் படங்களுக்கு நிகரான உலகத்தரம்’ என்ற வார்த்தை!

‘அமெரிக்காதான் உலகம்’ என்று அமெரிக்கர்கள்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்...நாமும் கூடவா?

70 கோடியில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தொழில் நுட்பத்தில் எடுக்க முடியுமென்றால்...அந்த மடையர்கள் ஏன், 1000 கோடியினை படமெடுப்பதற்கு வீணாக்குகிறார்கள்?

-oOo-

வலைப்பதிவர்கள் அரைவேக்காடுகள் என்ற ரகசியம் உட்பட தமிழகத்தில் எல்லாவற்றையும் அறிந்த ‘ஞாநி’ இந்த வார குமுதத்தில் ஊட்டி மலையில் அமைக்கப்படும் ஆராய்ச்சி மையத்தினால் வனப்பகுதிக்கு ஏற்ப்படப் போகும் பாதிப்பினைப் பற்றி கவலைப்படுகிறார்.

ஆனால், ஊட்டி வனப்பகுதிக்கு பேரழிவை ஏற்ப்படுத்தியது அங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் என்பது புரியாமல்...புகைப்படங்களில் மட்டுமே அழகாகத் தோன்றும் தேயிலைத் தோட்டத்தின் படத்தை கட்டுரைக்கு பின்புலமாக பயன்படுத்தி கட்டுரையின் நோக்கத்தையே கேலிக்குறியதாக்கியதால், குமுதத்திற்கும் ஒரு குட்டு!

-oOo-

யார் கேள்வி கேட்டாலும், பக்கம் பக்கமாக எழுதி தன் ஞானத்தை முன்னிறுத்தும் ஜெயமோகன், வலைப்பதிவர்கள் சிலர் தர்மசங்கடமான கேள்விகளை எழுப்பியதற்கு மட்டும் ‘ஞாநி’யைப் போல பொங்கி பின் குமுதம் போல கேலி செய்து முடித்து விட்டார்.

கருணாநிதியின் ‘இலக்கியத்தை’ கேள்விக்குறியதாக்கிய பொழுதும், எம்ஜிஆர் சிவாஜியைப் பற்றி சுவராசியமாக கிண்டலடித்த பொழுதும்...ஜெயமோகனுக்கு அரணாக நின்றது வலைப்பதிவர்கள்தான்...

ஆனாலும், பயந்து போய் கட்டுரையைத் தூக்கி, ஆதரித்தவர்களை நட்டாற்றில் விட்டார் என்பது வேறு கதை!

-oOo-

உலக மகா இலக்கியம், சினிமா பேசும் சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்றவர்கள் இந்திய மசாலா திரைப்படங்களை அவ்வப்போது சற்று தடவிக் கொடுப்பது அவர்களின் நோக்கத்தினை சந்தேகிக்க வைக்கிறது.

தமிழ் வாசிக்கும் என் ஆர் ஐ இளைஞர்களை அடுத்து அவர்களது நம்பிக்கை......தமிழ் திரைப்படங்களாக இருக்குமா என்ற சந்தேகம்...

Lazy mind is devil’s workshop என்று சும்மாவா சொன்னார்கள்...I blame it on Advocate’s strike.

மதுரை
10.07.08




TERRACOTA IN MUMBAI BAZAR