22.9.07

நீதிமன்ற அவமதிப்பு - நீதிக்கு அவமரியாதை?

கடந்த வெள்ளிக்கிழமை, மும்பை ‘மிட் டே’ பத்திரிக்கையாளர்கள் சிலரை, நீதிமன்றத்தின் மாண்பினை குறைப்பது போல செயல்பட்டதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி (Contempts of Courts Act’1971) தண்டனையளித்துள்ளது.

தண்டிக்கப்பட்டவர்கள் ‘நாங்கள் உண்மையைத்தானே கூறினோம்’ என்ற வாதத்தினை ஏற்றுக் கொள்ளாததின் மூலம் நீதிமன்றம் தனது கடிகார முள்ளினை இருபது ஆண்டுகள் பின்னோக்கி திருப்பியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைப் பொறுத்தவரை ‘உண்மை’ என்பதை எதிர்வாதமாக (truth as a defence) ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலாவது அதன் கடுமையினை குறைக்க வேண்டும் என்று பரந்த நோக்குள்ளவர்கள், குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் பலரும் எழுப்பிய கோரிக்கையினை கொள்கையளவில் இல்லையென்றாலும், மனதளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற நிலையில் டெல்லி நீதிமன்றம்...நமது நீதித்துறை, நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்ப்பட்டுள்ள அசுரத்தனமான தொழில்நுட்ப வளர்ச்சியினை காண விரும்பாமல் தனது கண்களை இன்னமும் இறுகக் கட்டியுள்ளது போல தோன்றுகிறது.

இன்று இணையத்தில் காணக்கிடைக்கும் அவதூறான என்பதன் எல்லையையும் தாண்டி வைக்கப்பட்டுள்ள பல்வேறு விமர்சனங்களோடு ஒப்பிடுகையில் ‘மிட் டே’யின் விமர்சனம் ஒரு தாலாட்டு!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ‘டெல்லி சீலிங்’ வழக்கு பற்றியும், டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது உத்தரவுகள் மூலம் கொடுத்த நெருக்கடிகளையும் பத்திரிக்கை படிக்கும் வழக்கமுள்ளவர்கள் அறிந்ததுதான்.

அந்த வழக்கு நடைபெறும் பொழுதே, அப்போதைய தலைமை நீதிபதி சபர்வாலின் மகன்கள், நீதிபதியின் வீட்டினை தங்களது வியாபாரத்திற்கு பயன்படுத்தியதைத்தான் ‘மிட் டே’ கிண்டலடித்து கருத்துப்படம் வெளியிட்டது. இந்த செய்தியில் உண்மையில்லை என்று இதுவரை ஏதும் கூறப்படவில்லை!

கருத்துப்படம் வெளியிடுகையில் சபர்வால் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே அவரைப் பற்றி கூறப்படும் விமர்சனம் நீதிமன்ற அவமதிப்பாகாது என்ற வாதத்தினையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இப்படியொரு நுட்பமான (technical) வாதத்தினை மிட் டே வைத்திருக்கவே தேவையில்லை. தங்கள் செய்தி உண்மைதான் என்ற அளவோடு, துணிச்சலாக நின்றிருக்கலாம்.


***

சபர்வால் ஓய்வு பெற்றவுடன், ‘வாக் த டாக்’ என்ற நிகழ்ச்சியில் பேட்டியளித்தார். அப்போது அவர் சாதாரணமாக குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது!

அதாவது சீலிங் வழக்கு நடைபெற்ற பொழுது, பாதிக்கப்பட்ட அவரது உறவினர் ஒருவர் அவரை சந்தித்து, வழக்கில் மெத்தனப் போக்கை கடைபிடிக்க வேண்டியதாகவும், ஆனால் தான் அவ்வாறு நடந்து கொள்ளாததால் உறவினர் அவருடன் பேச்சு வார்த்தையினை நிறுத்தியதாகவும் கூறினார்.

மிகச் சாதாரணமாக, சற்றுப் பெருமையுடன் கூறிய இந்த விடயத்தில் என்னை வியப்பில் ஆழ்த்தியது, இந்திய நாட்டின் தலைமை நீதிபதியுடன் வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கு பற்றி பேச தைரியம் கொள்ளமுடியும் என்பது மட்டுமல்ல!

அவ்வாறு பேசியது கிரிமினல் சட்டப்படியும், நீதிமன்ற அவமதிப்பு சட்டப்படியும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றச்செயல் என்பதை அறிந்திருந்தும் நீதிபதி அதை கண்டு கொள்ளாமல் விட்டது மட்டுமல்லாமல் அதை சாதாரணமாக வெளியே கூறியது!!


***

எப்படியாயினும், தனது பெயரினை காப்பாற்றிக் கொள்வதற்காக ‘உண்மை’ என்பதை ஒரு வாதமாக உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

பல்வேறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில், உச்ச நீதிமன்றம் எத்தகையை குற்றச்சாட்டினையும் தாங்கிக் கொள்ளும் பரந்த தோள்கள் தனக்கு உள்ளது எனபதை வெளிப்படுத்தியுள்ளது.

டெல்லி உயநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ‘மிட் டே’ பத்திரிக்கையாளர்கள் தாக்கல் செய்யும் மேல் முறையீட்டில், உச்ச நீதிமன்றம் இன்னமும் பரந்த மனதுடன் தன்னை வெளிப்படுத்துதல் காலத்தின் அவசியம்.

மதுரை
21.09.07

மும்பை மிட் டே பத்திரிக்கை பற்றி எழுத வேண்டும்

15.9.07

கலீல் கிப்ரானும், குழந்தை வளர்ப்பும்!

திரைப்படப் பாடல்கள் எத்தனையோ கேட்கிறோம்…ஆயினும் கவித்துவமான வரிகள் உடனடியாக மனதில் பதிவதில்லை. ஆனால், முக்கியமான ஒரு சம்பவத்தோடு வரிகள் தொடர்பு கொள்ளும்போதுதான் அவற்றின் முழு அர்த்தமும் புரிகிறது. அல்லது யாரேனும் ஒருவர் அந்த வரிகளை எடுத்துக் கூறும் பொழுது…

லியோனி போன்றவர்கள் திரைப்படப் பாடல்களை வைத்து நடத்தும் பட்டிமன்றங்கள், சாதாரண மக்களிடம் அதிக வரவேற்பினை பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஏனெனில் அந்த சாதாரணர்களில் நானும் ஒருவன்!

சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு எழுதிய தீர்ப்பினை படிக்க நேரிட்டது. பிரிந்து வாழும் கணவனுக்கும் மனைவிக்குமான, குழந்தை யாரிடம் இருப்பது என்ற வழக்கமான பிரச்னைதான். ஆனால் நீதிபதி முன் வந்த பிரச்னை, குழந்தை தந்தைக்கு சார்பாக பிரமாண பத்திரம் (affidavit) தாக்கல் செய்ய முடியுமா? என்பதுதான். முடியாது என்று தனது தீர்ப்பில் கூறிய நீதிபதி, இறுதியில் கலீல் கிப்ரானின் கவிதையொன்றினை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

படித்த நான் வியந்து விட்டேன்! அந்தக் கவிதையில் வெளிப்படும் மனோதத்துவம் (child psychology) ஏதோ கடந்த பத்து வருடங்களில் தோன்றிய கருத்தாக்கம் என நினைத்திருந்தேன்…

அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். மூலத்திலிருந்து நேரடி தமிழாக்கம் கிடைத்தால் மகிழ்வேன்!

Your children are not your children.
They are the sons and daughters of Life's longing for itself.

They come through you but not from you,
And though they are with you yet they belong not to you.

You may give them your love but not your thoughts,
For they have their own thoughts.

You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow, which you cannot visit,
not even in your dreams.

You may strive to be like them, but seek not to make them like you.
For life goes not backward nor tarries with yesterday.

You are the bows from which your children as living arrows are sent forth.
Let your bending in the Archer's hand be for gladness

கலீல் கிப்ரான் கவிதைப் புத்தகத்தினை வாங்கிப் படித்திருந்தால், இந்தக் கவிதையின் அர்த்தத்தினை மனம் முழுவது வாங்கியிருக்காது. நீதிபதி சந்துரு தனது தீர்ப்பில் பொருத்தமாக இதனை கையாண்டது, என்றும் எனது மனதில் இந்த வரிகளை ஏற்றி விட்டது! அவருக்கு நன்றி!!

மதுரை
14.09.07

ஆனால், நீதிபதிகள் தாங்கள் எழுதும் தீர்ப்பில், கவிதையோ, கருத்தோ தங்கள் சுயவிருப்பில் ஏற்றுவது எவ்வளது தூரம் சரியான செயல் என்பதில் எனக்கு சந்தேகமுண்டு!

நீதிபதி ஸ்ரீவத்ஸவா கூட இப்படித்தானே!

10.9.07

கர்ப்பிணிக்கு மரண தண்டனை!

ரஜினிகாந்தும், பிரபுவும் இணைந்து நடித்த திரைப்படம். பெயர் ஞாபகம் இல்லை. இருவரும் சிறையில் கைதிகள். அதே சிறையில் பாண்டியன் தூக்குத் தண்டனையினை எதிர்நோக்கியிருக்கும் கைதி. பாண்டியன் நிரபராதி என்று அறியும் ரஜினியும் பிரபுவும் சிறையிலிருந்து வெளியே சென்று உண்மையான குற்றவாளியினை கண்டுபிடிப்பதென்று தீர்மானம் செய்கின்றனர்.

அதற்குள் பாண்டியனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால்?

அதற்காக, இருவரும் சேர்ந்து பாண்டியனின் காலை உடைத்து விடுவார்கள். அதாவது, உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை தூக்கிலிட முடியாது என்று கூறுவார்கள். இது சரியாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் என்னை வெகுநாட்களாக தொடர்கிறது.

கதாசிரியர் ஒருவேளை சிறைச்சாலை சட்டத்தில் (Prision Act) உள்ள ஒரு பிரிவினை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன். சிறைச்சாலை சட்டத்தில் சிறைக் குற்றங்கள் என சில வரையறுக்கப்பட்டு அதற்கு சிறைக்குள்ளேயே தண்டனை வழங்கலாம் என்று இருக்கிறது. அதாவது Penal Diet எனப்படும் உணவினை கொடுப்பது முதல் சவுக்கடி போன்ற தண்டனைகள். ஆனால், சிறைச்சாலை சட்டத்தின் பிரிவு 50, அவ்வாறான தண்டனை கொடுப்பதற்கு முன்னர் சிறை மருத்துவர், கைதிக்கு அவ்வாறான தண்டனையினை தாங்கக் கூடிய உடல் வலிமை உள்ளதா என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். எனவே, சிறைக்குற்றங்களுக்கான தண்டனைகளுக்குத்தானே தவிர மற்ற தண்டனைக்கு அல்ல.


***

ஏனெனில், மற்ற தண்டனைகளை குறித்து சிறை அலுவலர்கள் முடிவெடுக்க இயலாது. முக்கியமாக மரண தண்டனையினை தள்ளிப்போடும் அதிகாரம் உயர்நீதிமன்றங்களுக்கே (High Court) உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரை விசாரித்து முதலில் தண்டனை தருவது அமர்வு நீதிபதி (Sessions Judge) என்றாலும், மரண தண்டனையினை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்து அந்த உத்தரவினை பெறும் அமர்வு நீதிபதி 28 நாட்களுக்குள் தண்டனை தேதியினை நிர்ணயித்து நிறைவேற்றுதல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


***

உயர்நீதிமன்றம் இரு சந்தர்ப்பங்களில்தான் தண்டனையினை தள்ளிப்போட இயலும். குற்றவாளி உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய விரும்பினால் அல்லது குற்றவாளி ஒரு கர்ப்பிணிப் பெண்ணாய் இருக்கும் பட்சத்தில்.

நண்பர் டாக்டர் புரூனோ மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் இது குறித்து கேட்கப்பட்ட வினாவினை சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தார். குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 416 ‘தள்ளிப் போட வேண்டும்’ (shall postpone) என்றுதான் குறிப்பிடுகிறதே தவிர எவ்வளவு நாள் என்று கூறவில்லை!

எனவே நீதிமன்றம் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதனை தீர்மானிக்கலாம். தள்ளிப்போட வேண்டும் என்று கூறும் அதே பிரிவு ‘ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்’ (may commute) என்றும் கூறுகிறது. பயன்படுத்தப்படும் பதம் may என்று இருப்பினும் சட்டத்தின் நோக்கம் புரிவதால், நான் தேடிய வரை இந்திய நீதிமன்றங்களால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்த பின்னரும் ஏதும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அல்லது அது குறித்த வழக்கு ஏதும் இல்லை!

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கும், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குற்றத்தில் அவரது பங்கினை அடிப்படையாக வைத்துதானே தவிர, காவலில் அவருக்கு குழந்தை பிறந்ததை வைத்து அல்ல…

Jail Manual எனப்படும் சிறைச்சாலைக்கான நடைமுறை விதிகளில் சிறையில் அடைக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களைப் பற்றிய நடைமுறைகள் இருப்பதாக அறிகிறேன் என்றாலும், கர்ப்பிணிக்கான தூக்குத் தண்டனையினை தள்ளிப்போடுதல் பற்றி கூறப்படும் வாய்ப்பில்லை. சட்டமே அளிக்காத ஒரு உரிமையினை நடைமுறை விதிகள் அளிக்க முடியாது.

எனவே டாக்டர் குறிப்பிட்ட மருத்துவ மேற்படிப்பில் கேட்கப்பட்ட கேள்வி தெளிவான ஒரு கேள்வி இல்லை என்றே நினைக்கிறேன்.

மதுரை
10.09.07

சிறையில் குழந்தை பெறும் பெண்கள் மற்றும் அவர்களோடு அடைக்கப்படும் குழந்தைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று நமது உச்ச நீதிமன்றம் பொது நல வழக்கு ஒன்றில் பல்வேறு கட்டளைகளை (directions) பிறப்பித்துள்ளது.

8.9.07

முனைவர்களும் டாக்டர்களும்...

நடிகர் விஜய், ஜேப்பியார் போன்றவர்களுக்கு சமீபத்தில் தமிழக பல்கலைக்கழகம் ஒன்று ‘கெளரவ டாக்டர்’ பட்டங்களை வழங்கியது. எதிர்பார்த்தது போல கேலியுடனே இந்தச் செய்தியானது அணுகப்பட்டது. கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டங்களும், இழுத்து வைத்து கிண்டலடிக்கப்பட்டது.

உலகம் முழுவதும், இவ்வாறாக பல்கலைக் கழகங்கள் ஏதேனும் சுயலாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் ‘கெளரவ டாக்டர்’ பட்டங்கள் வழங்குவது பல்கலைக் கழகங்கள் தோன்றிய நாள் முதல் உள்ள வழிமுறைதான். அதைப் போலவே, இவ்வாறான பட்டங்கள் சர்ச்சைக்குள்ளாவதும் உலகளாவிய ஒரு விடயம்தான். மார்கரெட் தாட்சர் முதல் ஜியார்ஜ் புஷ் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆயினும், கெளரவ டாக்டர் பட்டங்களை மற்ற டாக்டர் பட்டங்களோடு ஒப்பிடுவது அறியாமையே அன்றி வேறல்ல. மேலும் மோசம், மருத்துவர்களை குறிப்பிடும் ‘டாக்டர்’ என்ற அடைமொழியோடு ஒப்பிடுவது. மருத்துவர்கள் டாக்டர் என்ற பொதுவான ஒரு பதத்தினை தங்களது தொழிலினை அடையாளப்படுத்த குறிப்பிட்டுக் கொண்டால், டாக்டர் என்ற பதம் தனது அர்த்தத்தினை இழந்துவிட வேண்டுமா என்ன?

சரி, பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்குவது ஏதோ பலனை எதிர்பார்த்து என்றாலும், பட்டங்களை பெறுபவர்கள் கிண்டலடிக்கப்படுவதும், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் அறியாமை தவிர வேறல்ல.

முனைவர் என்று தமிழில் பொருத்தமாக குறிப்பிடப்படும் டாக்டர் பட்டங்களே ஒரு துறையில் புதுமையாக ஏதாவது சாதனை படைப்பாளர்களுக்குத்தான் என்றால், முறையான கல்வி அதற்கு ஒரு முட்டுக் கட்டையாக இருப்பது அநியாயமில்லையா?

‘அறிவு என்பது ஒரு வருட பாடத்திட்டத்தினை ஒரு வார காலத்தில் மனப்பாடம் செய்து மூன்று மணி நேரத்தில் எழுதிக் குவிப்பதுதான்’ என்றால் நிச்சயம் நான் கூற வருவது தவறாக இருக்கலாம்…

ஆனால் அறிவும், சாதனையும் கல்விக்கூடங்களுக்கு வெளியேயும் கொட்டிக்கிடக்கிறது என்பதுதான் உண்மை.


***

கடந்த பொதுத் தேர்தலின் பொழுது, இந்தியாவின் அறிவுச் சுரங்கங்களாக கருதப்படும் ஐஐடியில் பயின்ற மாணவர்கள் சிலர் நன்கு திட்டமிட்டு தேர்தலில் போட்டியிட்டனர். அனைத்து தொகுதிகளிலும் இல்லை. ஒன்றிரண்டு தொகுதிகளில்தான்.

என்னவாயிற்று?

காப்புத் தொகையினை கூட பெறவில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் டாக்டர் பட்டங்களுக்கு தகுதியானவர்கள் என்றால், பெரும்பான்மை தொகுதிகளில் அநாயசமாக வெற்றி பெரும் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ பட்டங்களைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லையா?

சரி, தேர்தல்தான் இப்படி…அந்தக் கட்சியினையாவது தொடர்ந்து நடத்த முடிந்ததா? தேர்தல் முடிந்து ஒரு மாத காலத்திற்குள் பிளவு!

அண்ணாதுரை மறைவின் பொழுது மூன்றாவது இடத்தில் இருந்த கருணாநிதி, தலைமைக்கு வந்து ஏறக்குறைய நாற்பது ஆண்டு காலம் கட்சியினை காப்பாற்றி வரும் அறிவு, அரசியல் விஞ்ஞானம் முதுகலை பட்டம் பெறுபவரின் அறிவினை விட அதிகம்தான்.

அதே போல, எம்ஜிஆரின் மறைவிற்கு பின்னர் ஜானகி, ஜெயலலிதா என்று சமபலத்தில்தான் இருந்தனர். ஜானகியிடம் ஆட்சியும், வீரப்பன் போன்ற அனுபவசாலிகளும் இருந்தனர். ஆயினும், கட்சி முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஜெயலலிதா புதுமை படைத்தவரில்லையா?

கருணாநிதி கல்லூரி சென்று படித்தவரல்ல. ஆனால் அவரது தமிழறிவு இன்று தமிழக கல்லூரிகளில் முதுகலை தமிழ் படிக்கும் எந்தவொரு மாணவருக்கும் குறைந்ததாயிருக்காது. பல்கலைக் கழகங்கள் அவரை கெளரவிப்பதால் தங்களை தாழ்த்திக் கொள்வதில்லை.

பில் கேட்ஸுக்கு ஆமதாபாத் ஐஐஎம்மில் இடம் கிடைத்திருக்காது. ஆனால், இன்று அங்கு படிக்கும் மாணவர்கள் அவரது வியாபாரத்திறமையினை ஆராய்கின்றனர். வியாபார நிர்வாகத்தில் டாக்டரேட் அளிக்க முதுகலை பட்டம் பெறாத பில் கேட்ஸ் தகுதியானவர்தானே!

ஜேப்பியார்?

கான்ஸ்டபிளாக தனது வாழ்வினை துவக்கியவர்…..அரசியல் கட்சியின் நிர்வாகத்தில் தனது திறமையினை வெளிப்படுத்தியன் காரணமாகத்தானே, இன்று ஒரு கல்விக் கழகத்தினை நிர்வகிக்கிறார். முறையான கல்வியின் பெறும் ஒரு நபர் இந்திய ஆட்சிப்பணியிலமர்ந்து ஒரு அரசு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அமருவதை தனது லட்சியமாகக் கொள்கிறார். அதே போன்ற ஒரு பணியினை எங்கோ ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்த ஜேப்பியாரும் கைப்பற்ற முடிந்ததென்றால், அதற்கு அவரது அதிஷ்டம் காரணம் என்றால் அது வயிற்றெரிச்சல் அன்றி வேறில்லை!

விஜய்?

விஜய் மோசமான ஒரு நடிகராக இருக்கலாம். ஆனால், தமிழ் திரையுலகில் ரஜினி, கமலுக்கு பின்னர் விநியோகஸ்தர்களால் நம்பப்படும் ஒரு நடிகர். இந்நிலைக்கு அவர் உயர்ந்தது, சந்திரசேகருக்கு மகனாக பிறந்தது மட்டுமா?

பல திரைப்பட நடிகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குஞர்களும் தங்கள் வாரிசுகளை களமிறக்குகிறார்கள். அனைவரும் ஜெயிப்பதில்லை.

தனது ஆரம்ப காலத்தில், அவர் சந்தித்த கிண்டலும் கேலியும் பழைய ஊடகங்களை புரட்டியவர்களுக்கு தெரியும். அவரை அறிமுகப்படுத்தியதில் சந்திரசேகருக்கும், விஜயகாந்திற்கும் பங்கிருக்கலாம். புதிய பாதையினை காட்டியதில் பாசிலுக்கு பங்கிருக்கலாம்…பின்னர் வெற்றியினை தக்க வைத்துக் கொண்டதும், வேகமான் ஒரு ஸ்டைலினை தனக்கென உருவாக்கிக் கொண்டதும் அவரது திறமையின்றி வேறில்லை!

எனவே, இவர்கள் சாதனையாளர்களே….இவர்களது சாதனைகள் சமுதாயத்திற்கு எவ்வளவு தூரம் பயனுள்ளது என்பது கேள்வியில்லை! ஆனால் கெளரவ டாக்டர் பட்டம் இல்லை….முனைவர்கள் என்று தமிழில் அழைக்கத் தகுந்த பட்டத்திற்கு தகுதியானவர்கள்தாம்.


***

நான், மதுரையில் தொழிலினை தொடங்கிய புதிதில் நாகர்கோவிலில் இருந்து ஒரு நபர் என்னிடம் வந்தார். அங்கு புதிதாக ஆரம்பிக்கப்படும் மருத்துவக் கல்லூரியில் தற்காலிக பணியாக ‘அலுவலக உதவியாளர்கள்’ தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், தனக்கு அந்த வேலையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். காரணம், அவரது நிலம் முன்பு ரயில் நிலையத்திற்காக அரசால் ஆர்ஜிதம் செய்யப்பட்டதாம். அதற்கு ரயில் நிர்வாகம் அளிக்கும் வேலையில் முன்னுரிமை வழங்க கோரலாம் என்று தெரிவித்தேன்.

பேச்சு வாக்கில் அவரது கல்வித் தகுதி என்ன என்று கேட்டேன். முதுகலை விலங்கியல் என்றவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் டாக்டரேட் கூட வாங்கியிருக்கிறேன் என்று கூறினார்.

இன்றும் மனதில் வலித்துக் கொண்டிருக்கிறது!


மதுரை
08.09.07