23.12.12

நீதியை குலைக்கும் நியதிகள்…


 

தபேதார், அலுவலக உதவியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் போன்ற கடைநிலைப் பணியாளர்களும் அரசு ஊழியர்கள் என்பது உண்மைதான். தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமகன்கள் அனைவருக்கும் சம வாய்ப்பளித்து அவர்களில் சிறந்தவர்களைத்தான் பணியமர்த்த வேண்டும் என்பதும் சட்டப்படியான கோரிக்கைதான். முக்கியமாக, மற்ற ஊழியர்களைப் போலவே, இவர்களது பணியிடங்களும் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே நிரப்பப்பட வேண்டும். சவுக்கு வலைத்தளத்தின் குற்றச்சாட்டு சட்டத்தின்படியும் நியாயத்தின் அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே!

ஆயினும் வேறொரு கோணத்தில், இப்பிரச்சினையை ஆராய்ந்தால் போட்டியின்றி இவ்வாறு நீதிபதிகளின் பரிந்துரையின் அடிப்படையில் இக்கடைநிலை ஊழியர்களை நியமிப்பதில் பெருத்த அநீதி விளைந்துவிடவில்லை என்பதாகவே தோன்றுகிறது.

-oOo-

உயர்நீதிமன்ற பணியாளர்கள் அனைவருமே, வேறு அரசுத்துறை தலையீடு ஏதும் இல்லாமல், உயர்நீதிமன்றத்தால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். தனது ஊழியர்களை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை, உயர்நீதிமன்றம் சுதந்திரமான அமைப்பாக செயல்பட தேவையான ஒன்றாக கருதப்படுகிறது.

ஆயினும், உயர்நீதிமன்ற பணியாளர்கள் ‘சென்னை உயர்நீதிமன்ற சரிவீஸ் விதி’களின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட முடியும். இவ்விதிகளின்படி பணியாளர் நியமனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும். மற்றபடி இன்ன முறையில் பணியாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று இல்லை. எனவே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டரீதியிலான அவசியம்.

ஆனால் கடைநிலை ஊழியர்களின் தேர்வு?

நான் அறிந்தவரை தமிழ்நாடு அரசு அடிப்படை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி வரையறுக்கப்பட்டு இருந்தாலும், உயர்நீதிமன்ற விதிகளில் கடைநிலை ஊழியர்களுக்கான கல்வித் தகுதி வகுக்கப்படவில்லை.

எவ்வாறு இருப்பினும், கடைநிலை ஊழியத்திற்கு தகுதியானவரா என்று எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தி எவ்வாறு நிர்ணயிப்பது? அவ்வாறு நிர்ணயித்தாலும், அங்கும் இதே நீதிபதிகள்தான் நேர்முகத் தேர்வின் முடிவை தீர்மானிக்கப் போகிறார்கள்.

-oOo-

ஒவ்வொரு முறையும் சத்துணவு கூடங்களில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது, பல நியமனங்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்படும். முக்கியமாக சத்துணவு கூட பணியாளர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. திட்ட பணியாளர்கள்தாம். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவரால் இட ஒதுக்கீட்டினை பின்பற்றி நேர்முகத் தேர்வு நடத்திதான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆயினும் ஒன்றிரண்டு நியமனங்கள் நீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்படுவதுண்டு. சமீபத்தில் ஒரு நீதிபதி, சத்துணவு பணியாளர்கள் தமிழகம் முழுமைக்குமான பொதுவான ஒரு தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூற, பிரச்னை டிவிஷன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது.

சத்துணவுக்கூட சமையலரையும், ஆயாவையும் எந்த பொதுத்தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்று புரியவில்லை

சத்துணவு கூட பணியாளர் நியமனம் பற்றிய வழக்குகள் நீதிமன்றத்தில் வருகையில் ‘அந்த கலெக்டர் நினைக்க மாட்டாரா? தான் ஒரு மாவட்டத்திற்கே கலெக்டர். எனக்குப் பிடித்த ஒரு சத்துணவு பணியாளரைக் கூடவா நான் நியமிக்கக் கூடாது’ என்று எனக்குத் தோன்றும்.

-oOo-

ஒருவர் கடைநிலை ஊழியம் சிறப்பாக செய்வாரா என்று நேர்முகத் தேர்வு நடத்தி ஒரு நீதிபதி தேர்ந்தெடுக்காமல், தானறிந்த ஒருவரை, தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை நேரிடையாக பரிந்துரைத்தால் குடிமக்களின் சம உரிமையானது (Right to Equality) நடைமுறையில் பாதிக்கப்படுவதில்லை என்றே நான் எண்ணுகிறேன்.

சம உரிமை என்பதே இங்கு ஒரு கானல் நீர்தான். அனைத்துப் பாடங்களுக்கும் தனியே பயிற்சி எடுக்கும் வசதிமிக்க ஒரு மாணவனுக்கும், எந்தவித பின் உதவிகளும் அற்ற அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் இடையே என்ன சமநிலை இங்கு இருக்கிறது. ஆயினும் அவர்கள் இருவரும் சமமாகவே பாவிக்கப்படுகின்றனர். குறைகளற்ற வேறு வழிகள் தெரியாத சூழ்நிலையில் நமது தேர்வுகளில் சமநிலை இருப்பதாக நம்மை நாமே பலமுறை சமதானப்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவுதான்!

கடைநிலை ஊழியம் புரிய முன்வரும் அனைவருமே, ஏழை அல்லது கீழ் மத்தியதர வர்க்கத்திலிருந்து வருகிறார்கள். அந்த வேலையை புரிய தகுதியுள்ள அவர்களிலிருவரில் ஒருவருக்கு அந்த வேலை கிடைப்பதில், பெரிய அநீதி ஏதும் விளைவதில்லை. உயர்நீதிமன்ற நீதிபதி நிலையில் யாரும், இந்த வாய்ப்பினை துஷ்பிரயோகம் செய்வதில்லை. மாறாக, தம்மைச் சுற்றியுள்ள துயரப்படும் குடும்பங்களில் ஏதோ ஒரு குடும்பத்தின் கஷ்டத்தைப் போக்கவே பெரும்பாலும் இவ்வாறு பரிந்துரைக்கிறார்கள்.

உயர்நீதிமன்ற நீதிபதியொருவரை, அவரது ஊரினைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் அண்டை அயலார்கள் என்று பலர் இவ்வாறு கடைநிலைப் பணியினைப் பெற அணுகும் வாய்ப்பு உண்டு. இன்றைய சூழலில் நீதிபதி பதவி வகிப்பதாலேயே, சமூகத்திலிருந்து முற்றிலும் அந்நியப்பட்டு நிற்க வேண்டுமென்பது ஒரிருவரைத் தவிர மற்றவர்களுக்கு சாத்தியமில்லை. இரண்டு நிமிட நேர்முகத் தேர்வில் ஒருவரின் தகுதி, தேவையை அறிவதை விட இரண்டு வருட பரிச்சயத்தில் ஒருவரை தேர்ந்தெடுப்பதை ’அநீதி’ என்று என்னால் நிராகரிக்க முடியவில்லை.

அப்படியாயின் நீதிபதியைத் தெரிந்திராத மற்றவருக்கு அநீதியில்லையா என்றால், இருவரில் யாராவது ஒருவர் வேலையின்றி நிற்க வேண்டியதைத்தான் சுட்ட வேண்டியிருக்கிறது. ஏன், தனியார் நிறுவனங்கள் பலவற்றிலும், கடைநிலை ஊழியர்கள் அங்குள்ள மேலதிகாரிகளின் பரிந்துரைப்படிதான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நிர்வாகம் அதனால் ஏதும் பாதிப்படைவதில்லை.

உயர்நீதிமன்றத்தில் கடைநிலை ஊழியம் செய்வதை யாரும் லட்சியமாக கொள்ளாத வரையில், நீதிபதியை அறிந்திராத ஒருவர் தான் அறிந்திருக்கும் வேறு ஒரு நிறுவனத்தை அணுகுவதுதான் இங்கு நிதர்சனம்!

-oOo-

உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ஒருவரின் மரணத்திற்கு சென்றிருந்தேன். சிறிய கிராமம். அவர் பணியாற்றிய சொற்ப வருடங்களில் ஒரிருவரை பணியிலமர்த்தியிருக்கலாம். ஆனால், ஊர்க்காரர்கள் அனைவரும் ஏதோ அவர் ஊருக்கே வேலை வாங்கித் தந்ததை மாதிரி பேசினார்கள். இதனை நாம் சாதாரணமாக, உயர்பதவி வகித்த வேறு எவருடைய மரணத்தின் பொழுதும் கேட்கலாம்.

கண்டிப்புக்கு பெயர் பெற்ற வேறு ஒரு நீதிபதியைப் பற்றி அவரது ஜூனியராக இருந்த மூத்த வழக்குரைஞர் ஒருவர், இன்னார் அவ்வளவு நாள் அவர் வீட்டில் வேலை செய்தார் ஆனா, ஜட்ஜ் ஆன பிறகு பிள்ளைக்கு வேலை கேட்டா ‘போடா போடா’னுட்டாரு என்றார்.

நியாயத்தின் கோட்டினை, உலகம் சற்று கோணலாக வரையும் பொழுது நாமும் கோணி நடந்து கொள்ள வேண்டுமா அல்லது கோட்டினை விட்டு விலகிச் செல்ல வேண்டுமா?

இவ்வளவு எழுதிய பின்னரும் என்னிடம் பதில் இல்லை!

மதுரை
23/12/12

12.11.12

ஹைதராபாத் பயணக்குறிப்புகள் 3


கொண்டபள்ளி!

ஐதராபாத் சாலார்ஜங் அருங்காட்சியத்தில் இருந்த கலைப்பொருட்கள் கடையில், இந்தப் பெயரைக் கேட்டதும், ‘ஏதோ பரிச்சயமான பெயராக உள்ளதே’ என்று பொறி தட்டினாலும் புலப்படவில்லை.

விஜயவாடாவிற்கு அருகில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கொண்டபள்ளி என்ற கிராமத்தில் செய்யப்படும் மரப்பொம்மைகள் மிகவும் பிரபலமானவை எனப்படித்ததும் அந்த ஊரையும் பார்த்து செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்ப்பட்டது.

ஐதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு செல்லும் நெடுங்சாலையில் விஜயவாடாவிற்கு முன்னதாக சில மைல் தொலைவில், நெடுஞ்சாலையிலிருந்து இடது பக்கம் திரும்பினால் சுமார் பத்து கி.மீ, தொலைவில் மலையடிவாரத்தில், இருக்கிறது கொண்டபள்ளி

 

கொண்டபள்ளி சென்று பொம்மைகள் எங்கு கிடைக்கும் என்று கேட்டால் ஒரு தெருவை கைகாட்டுகிறார்கள். கண்ணாடி ஷோ கேஸ் உள்ள ஒரு கடையில் சென்று பார்த்த என் மனைவி பின்னர் அருகிலிருந்த ஓட்டு வீட்டினுள் சென்று பார்த்துக் கொண்டிருந்தார். நேரமாகவும் நானும் சென்று அந்தக் கடையில் பார்த்தால் பாரம் சுமந்து செல்லும் பெரிய மாட்டு வண்டி என்னைக் கவர்ந்தது. வேறு சில மரப்பொம்மைகளும் அருமையாக இருந்தன.


அருகிலிருந்த ஓட்டு வீட்டில் சில பொம்மைகளைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியை வலுக்கட்டாயமாக கடைக்கு அழைத்து மாட்டு வண்டியையும் வேறு சில பொம்மைகளையும் வாங்கிக் கொண்டு வெற்றிகரமாக திரும்பினோம். விலையும் ஏதோ வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்களே என்று அதிகமாகவெல்லாம் கூறவில்லை.

மதுரை வந்து பொம்மைகளை அருகருகே அடுக்கி வைத்தால், ’அருமையாக இருக்கிறதே’ என்று கடையில் வாங்கிய பொம்மைகள் இயந்திரத்தில் கடைந்து, இயந்திரத்திலேயே வர்ணம் பூசப்பட்ட பொம்மைகள். என் மனைவி வாங்கிய சிறு பொம்மைகள், கையிலேயே செதுக்கி, கையிலேயே வர்ணம் பூசப்பட்டு, ‘நாங்கள்தாம் கொண்டபள்ளியாக்கும்’ என்று என்னைப் பார்த்து கேலி செய்தது.

ஆயினும் கடையில் வாங்கிய பாரவண்டி கொண்டபள்ளிதான்!

விஜயவாடா பக்கம் போனால், கொண்டபள்ளி போக மறக்க வேண்டாம். நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பரிசளிக்க அருமையான மரப்பொம்மைகள் கிடைக்கிறது.

பொம்மைகளைப் பார்த்த எனது நண்பன் கூறினான், ‘கொண்டபள்ளி, நக்சல் தலைவர் சீத்தாராமையா ஊரல்லவா’


அட, ஆமாம். இதை எப்படி கவனிக்காமல் விட்டேன்!

 

மதுரை

11/11/12

27.10.12

ஹைதராபாத் பயணக் குறிப்புகள் 2


ஹைதராபாத் என்றாலே சிறுவயது முதல் உடனடியாக என் மனதில் தோன்றும் ஆர்வம், ‘சாலார் ஜங் மியூசியம்’!.

‘அங்கு ஒரு கடிகாரம் இருக்கும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒரு சிறு மனிதன் வெளியே வந்து அங்கிருக்கும் மணியை அடித்து விட்டு உள்ளே சென்று விடுவான்’

‘திரைச்சீலையால் முகத்தை மூடியவாறு ரெபேக்கா சிலை (Veiled Rebecca) இருக்கும்’ என்று எனது பாட்டியிடம் சிறுவயதில் கேட்ட கதைகளிலிருந்தே, தொடரும் ஆர்வம்.

‘அது எப்படி ஒரு சிறு மனிதன் கடிகாரத்துக்குள்ளே இருக்க முடியும்’ ‘எப்படி திரைச்சீலையை கல்லில் வடிக்க முடியும்’ என்று சிறுவயதில் கொண்ட வியப்பு தற்பொழுதும் இல்லையென்றாலும், சாலார் ஜங் மியூசியத்தில் அடியெடுத்து வைத்ததும், ஏதோ எனது பாட்டியின் கை பிடித்து உள்ளே செல்லும் சிறுவனைப் போல உணர்ந்தேன்.

-oOo-

மியூசியத்தை பொறுமையாக பார்க்க வேண்டுமாயின், அரை நாள் குறைந்தது பிடிக்கும். பலவிதமான ஆடை, அலங்காரப் பொருட்கள் பெண்களை மிகவும் கவரும். ஆனால், சுமார் ரூ 15,000 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ள நிஜாமின் நகைகளை பார்க்க முடியாது. அரிதாகத்தான் இதுவரை ஒன்றிரண்டு முறை நகைகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆயினும், மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களே பார்க்கப் போதுமானவையாக இருக்கும்.

உள்ளே செல்வதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். காமிரா அனுமதி இல்லை. ஆனாலும், காமிரா நமது பைகளை வெளியேயே வைத்துப் போக இலவசமாக லாக்கர் வசதி உள்ளது. செல் போன்களை அனுமதிக்கிறார்கள்.

உணவு எடுத்துச் செல்ல தேவையில்லை. உள்ளேயே தரமான உணவு விடுதி உள்ளது.

-oOo-

ஹைதராபாத் என்றால் அடுத்து நினைவுக்கு வருவது சார்மினார். நான் சென்றது ஈத் காலம் என்பதாலா அல்லது எப்பொழுதுமே அப்படித்தானா என்று தெரியவில்லை, சார்மினாரை சுற்றி அவ்வளவு நெருக்கடி!

‘Absolute Chaos’ என்றால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது. சாலை முழுவதும் மனிதக் கூட்டம், மோட்டார் பைக்குகள், ஸ்கூட்டர்கள், ஆட்டோ ரிக்‌ஷாகள், கார்கள். நல்ல வேளை நான் அதற்கு தனியே ஒரு ஓட்டுநரை ஏற்ப்பாடு செய்திருந்தேன். எப்படித்தான் அந்த மனிதக் கூட்டத்தில் காரை செலுத்த முடிந்ததோ தெரியவில்லை.

சார்மினார் பகுதியில் ஓரளவிற்கு வாகனங்கள் செல்ல முடிகிறதென்றால், அதற்கு ஹைதராபாத் போக்குவரத்து காவலர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

எனவே, சார்மினார், சாலார் ஜங் மியூசியம் இரண்டுக்கும் போக எளிதான முறை ஒரு ஆட்டோ எடுத்துக் கொள்வதுதான்.

சார்மினார் மேலே ஏறிப்பார்க்கலாம். பெரிய வரிசை இருந்ததால் நான் போகவில்லை. ஆனாலும் இருபுறமும் உள்ள கடைகளில் பெண் பிள்ளைகளுக்கு வேண்டிய சிறு சிறு அலங்காரப் பொருட்கள் கிடைக்கிறது

சாலை ஓரத்தில் பழம்பொருட்களை வைத்து விற்கிறார்கள். நான் சன் டையலோடு இணைந்த திசை காட்டி ஒன்றை வாங்கினேன். பாதி விலைக்கு பேரம் பேசியிருக்கலாம். நான் கூச்சத்தில் முக்கால்வாசி விலைக்கு கேட்க உடனடியாக கொடுத்து விட்டார்கள்!

-oOo-

சாலார் ஜங் மியூசியம், சார்மினார் இரண்டுக்குமே ஒரு நாள் பிடித்தது என்றாலும், ‘நன்றாகக் கழிந்த ஒரு நாள்’ என்றே தோன்றியது.

மதுரை
27/10/12

26.10.12

ஹைதராபாத் பயணக் குறிப்புகள் 1


கடந்த ஐந்து நாட்களாக, சாலை வழியே குடும்பத்துடன் ஹைதராபாத் பயணம்.

சென்னையிலிருந்து ஓங்கோல் வரைதான் நான்கு வழிச்சாலை (NH5). தரமும் சென்னை – மதுரை போல இல்லை. பின்னர் சிறிது தூரத்தில் இடது பக்கம் திரும்பினால் மாநிலச் சாலை (State Highway) கூகுளை நம்பியது தவறாகி விட்டது. இப்பொழுதான் சாலை அமைத்து கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே சாலை உடைந்து, மீண்டும் விஜயவாடா – ஹைதராபாத் ஹைவே (NH9) பிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

பின்னர் அங்கிருந்து ஹைதராபாத் 85 கி.மீட்டர்கள்தான்!

9 மணிக்கு சென்னையில் கிளம்பி 10 மணிக்கு புழலை தாண்டி ஹைதராபாத் ஹோட்டலை அடைய இரவு 9 மணியாகி விட்டது. ஹோட்டலை தேடி ஒரு மணி நேரம் சுற்றியதும் அடக்கம்.

வழியில் நல்ல உணவு விடுதிகள் இல்லை. உணவை சென்னையிலிருந்தே எடுத்துச் செல்வது நலம்

ஒரு மாநில தலைநகருக்கு மாநிலத்தின் மற்றொரு பகுதியிலிருந்து செல்லும் சாலை இந்த அளவிற்கா மோசமாக இருக்கும் என்று இருந்தது. தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை.

இந்த சாலை அமைத்து முடிக்க இரண்டு மூன்று வருடம் பிடிக்கலாம். அதுவரை 100 கி.மீ. அதிகமானாலும் பரவாயில்லை என்று விஜயவாடா வழியே ஹைதராபாத் செல்லுங்கள். வரும் பொழுது அப்படித்தான் வந்தேன். விஜயவாடாவிற்குள் சுற்றி உணவு உண்ட நேரம் உட்பட அதே நேரம்தான் ஆயிற்று.

-oOo-

ஹைதராபாத் – விஜயவாடா சாலை புதிய நான்கு வழிச்சாலை. இன்னமும் கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கவில்லை. இன்னமும் ஒரு மாதத்தில் ஆரம்பித்து விடுவார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் சில நகர்ப்பகுதிகளில், தமிழகத்தில் உள்ளது போல வேலி அமைக்கவில்லை. ஹைவே ஒட்டிய பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் நீக்கப்படவும் இல்லை. எனவே ஹைவே சில இடங்களில் சாதாரண சாலையாகி சாலையோர வியாபாரம், பைக் நிறுத்தம் என களை கட்டுகிறது.

நேரமிருப்பின் விஜயவாடாவை ஒரு சுற்று சுற்றுங்கள். மலைகளின் இடையே அமைந்த அழகான நகரம். நல்ல அசைவ உணவு விடுதிகள் இருந்தன (Ask for 11 to 11). கிருஷ்ணா நதியின் பிரமாண்டத்தை அதிசயிக்கையில் ‘பைசா வசூல்’ என்று இருந்தது!

விஜயவாடாவிலிருந்து ஓங்கோல் வரை 73ரூ கட்டணம் வாங்குகிறார்கள். ஹைவே என்று சந்தோஷமாக ஆரம்பித்த பயணத்தின் உற்சாகம் சீக்கிரமே வடிந்து விட்டது. சாலையில் தரம் மிகவும் மோசம். எங்குமே பாலம் கட்டப்படாமல்  ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு மாற்றுப் பாதை!

தேசிய நெடுஞ்சாலைத் துறை மீது நுகர்வோர் வழக்கு போடலாமா என்று யோசித்து வருகிறேன். சென்னை – கொல்கத்தா சாலை என்று பெரிதாக நினைத்தேன். இப்படி பல்லிளிக்கிறது.

எங்குமே இங்குள்ளது போல கூரை வேய்ந்த கட்டணம் வசூலிக்கும் இடம் இல்லை. ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் இடமும் இல்லை. டிரக்குகளை ஓரம்கட்டி நிறுத்தும் இடமும் இல்லை.

எப்படியோ, போன பாதைக்கு வந்த பாதை பரவாயில்லை. அது வரை நிம்மதி.

இறுதியாக ஹைதராபாத் நகருக்குள்ளும் சரி, ஹைவேயிலும் சரி. எந்த ஒரு இரு சக்கர வாகனமும், வேகமாக வரும் காரைப் பார்த்து பயப்படுவார்கள் என்று நினைத்து விடாதீர்கள். எவ்வித அச்சமும் இன்றி சாலையை பைக்கில் கடக்கிறார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

மதுரை
26/10/12

25.10.12

சைபர் கிரைம்!


‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது சென்னை இணைய குற்ற தடுப்பு காவலர்களிடம் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டு புகார் அளித்த வலைப்பதிவர்களின் பதிவுகள் மூலம் மேற்போக்காக இதனைப் பற்றி அறிய முடிகிறது.

இந்தப் புகாரின் பெயரில், மூர்த்தி காவலர்களால் விசாரிக்கப்பட்டதாகவும் பின்னர் ‘போலி டோண்டு’வால் உருவாக்கப்பட்ட பதிவுகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. விசாரணை நிலுவையில் இருப்பதாக தெரிவித்தாலும், மூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டாரா அல்லது முன் ஜாமீன் பெற்றாரா என்ற விபரம் தெரியவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னர், இணைய குழுமங்கள் மூலம் விவாதித்துக் கொண்டிருக்கையில், ஒரு பெரிய எழுத்தாளருக்கும் முக்கிய பதிவர் ஒருவருக்கும் பிரச்னை உருவாகி எழுத்தாளர் மற்றவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க என்னிடம் ஆலோசனை கோரினார். இணையத்தில் ஏற்ப்படும் பிரச்னைகள், இணையத்தை தாண்டி வெளி உலகிலும் கசிந்து ‘ஜானி குவஸ்ட்டு’ கார்ட்டூன் சித்திரங்கள் போல உண்மையிலேயே காயத்தை ஏற்ப்படுத்தி விடுமோ என்று அஞ்சுகிறேன் என்று எழுதினேன்.

போலி டோண்டு பதிவுகளை தொடர்ந்து கவனித்து வந்தவன், இறுதியில் அதீத வெறுப்பின் உச்சத்தில் (or frustration) விடப்பட்ட சில கொலை மிரட்டல்களை கண்டு அதிர்ந்து போனேன். ‘இறுதியில் இதற்கு ஒரு முடிவுதான் இருக்கிறது. அது டோண்டுவின் கொலையாகக் கூட இருக்கலாம்’ என்ற தொனியில் எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவரின் மனநிலையில் அந்த மிரட்டல் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல என்று நினைத்தேன். நல்லவேளை பிரச்னை விரைவில் முடிவுக்கு வந்தது.

‘போலி டோண்டு’ பிரச்னை முடிவுக்கு வந்தாலும், காவலர் விசாரணை மற்றும் அதன் பக்க விளைவுகள் தமிழ் இணையத்தில் பெரிய மாறுதலை கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. Tamil Web World has lost its innocence!

-oOo-

தமிழ் இணையத்திற்கு வெளியே எனக்கு சாருநிவேதிதாவைத் தெரியாது, பின் நவீனத்துவம் தெரியாது...இங்கு பதிவர்களால் சங்கோஜமின்றி உபயோகிக்கப்படும் வார்த்தைகள் பல தெரியாது!

இங்கு எழுதப்படும் கருத்துகளும், அவை விவாதிக்கப்படும் தொனியும், உபயோகப்படுத்தப் படும் வார்த்தைகளும், வெளி உலகம் அறியாதவை!

உதாரணத்திற்கு மதுரை உயர்நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு நெருக்கமான ஒன்றிரண்டு வழக்குரைஞர்களைத் தவிர யாருக்கும், எந்தவொரு நீதிபதிக்கும், பணியாளருக்கும் வலைப்பதிவுகளைப் பற்றி தெரியாது. நான் தமிழில் இவ்வாறு எழுதுகிறேன் என்பதே ஆச்சரியமாக இருக்கும்.

வெளி உலகால் அதிகம் அறியப்படாதலாயே இங்கு வரைமுறையின்றி பல விடயங்கள் எழுதப்படுகின்றன. ஜெயமோகன் எம்ஜிஆர், சிவாஜியை பற்றி இணயத்தில் எழுதியதை ஆனந்த விகடன் வெளி உலகத்திற்கு கொண்டு சென்றதன் விளைவு நாம் அறிந்ததே!

எனவேதான் என்னுடைய அச்சம், தமிழ் வலைப்பதிவுகள் காவலர்களின் கண்காணிப்பில் வருகையில், எதிர்காலத்தில் மோசமான சில பின் விளைவுகள் நிகழலாம் என்பதுதான். சமயங்களில் சில நீதிபதிகள் நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறித்து வகுப்பெடுக்கையில், ‘ஆமாம், இந்தக் கண்ணியத்தை எல்லாம் எவ்வித எல்லைகளுமின்றி அங்கு இணையத்தில் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று என் நண்பர்களிடம் கிசுகிசுப்பேன்.

-oOo-

சரி, காவலர்களால் என்ன பிரச்னை?

ஒரு குற்றம் நடந்துள்ளதாக, காவலர்களிடம் புகார் அளித்தால் ‘முதல் தகவல் அறிக்கை’ (FIR) தயாரிப்பார்கள். பின்னர் அதன் மீதான விசாரணையை (Investigation) தொடங்குவார்கள். விசாரணைக்கு ஏதுவாக குற்றம்சாட்டப்படுபவர்கள் கைது செய்யப்படலாம். அதனை தவிர்க்க குற்றம் சாட்டப்படுபவர்கள் முன் ஜாமீன் பெற வாய்ப்புண்டு. அதனால், சிறைவாசத்தை தவிர்க்கலாமே தவிர நீதிமன்றத்தில் சரணடைந்து பின் பிணையில் வர வேண்டும். சரணடையும் தருணத்தில் சில அவமானங்களை சகிக்க நேரிடலாம். அதற்குப் பின்னரும் தினமும் சில காலம் காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ கையெழுத்திட நேரிடும். இதனால் ஏற்ப்படும் மன உளைச்சல் ஏராளம்.

முன் ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், இன்னும் மோசம். குறைந்தது மூன்று நாட்களாவது சிறையில் கழிக்க நேரிடும். மூர்த்தியின் வழக்கில், அவர் கைது செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். கைது என்பது கண்டிப்பானது அல்ல!

விசாரணை முடிந்து காவலர்கள் தங்களது இறுதி அறிக்கையினை (Final Report or Charge Sheet) தாக்கல் செய்வார்கள். விசாரணையில் குற்றம் நடைபெறவில்லை என்றால் வழக்கினை முடிக்க நீதிமன்றத்தினை கேட்டுக் கொள்வார்கள். இல்லை குற்றப்பத்திரிக்கை. அதற்குப் பின்னரே நீதிமன்ற விசாரணை!

இது அனைத்தும் முடிவதற்கு சில மாதங்களும் பிடிக்கலாம். சில ஆண்டுகளும் பிடிக்கலாம். விசாரணையில் இறுதியில் பல வழக்குகள் விடுதலையில் முடிந்தாலும் அதற்குள் அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஒரு தொழில்முறை குற்றவாளியாக இருந்தாலொழிய படும் பாடு சொல்லி மாளாது.

பலமுறை நாம், ‘இப்படி தப்பு பண்ணிட்டு தப்பிச்சு வந்துட்டானே’ என்று நினைக்கிறோம். ஆனால் குற்றவியல் வழக்குகளில் சிக்கி சின்னாபின்னமான குடும்பங்கள் பல உண்டு!

-oOo-

‘இணைய குற்றம் புரிந்தால்தானே, எனக்கு என்ன பிரச்னை?’ என்று வலைப்பதிவர்கள் பலர் நினைக்கலாம்.

இதனைப் பற்றி எழுத வேண்டும் என்று பலமுறை நினைத்தாலும், தேவையில்லாமல் ஒரு பீதியினை ஏற்ப்படுத்த வேண்டுமா என்பது மட்டுமல்லாமல், இந்த விபரங்களை யாரும் கெட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தி விடக்கூடாது என்று அச்சத்தாலேயே எழுதாமல் இருந்தேன். ஆயினும் தற்போழுது அதன் தேவை அதிகரித்துள்ளதாக உணருகிறேன்.

ஆள்மாறாட்டம், தகவல்களை திருடுவது, மோசடி போன்ற பலவகையான இணைய குற்றங்கள் இருந்தாலும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் (Information Technology Act’ 2000) பிரிவு 67ல் வரையறுக்கப்படும் குற்றம் கவனிக்கத்தகுந்தது. போர்னோகிராபி குற்றங்களை தடுக்கும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவினை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சுருக்கமாக அந்தப் பிரிவு,
‘Whoever publishes or transmits......any material which lascivious or appeals to the prurient interest or if its effect is such as to tend to deprave and corrupt person...extend to five years and with fine... என்று உள்ளது.

இந்தப் பிரிவில் மூன்று செயல்கள் குற்றமாகிறது. முதலிரண்டை விடுங்கள் அவற்றை lascivious அல்லது prurient interest என்பதற்கு விளக்கம் கூறுபவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். மூன்றாவது செயலாக கூறப்படுவது ஆபத்தானது. ஒரு ‘மனதைக் கெடுக்கும்’ எந்த ஒரு எழுத்துமே இங்கு குற்றமாகிறது.

அமெரிக்காவில் இருந்து எழுதப்படும் ஒரு வலைப்பதிவு திருநெல்வேலியில் உள்ள ஒருவரது மனதை கெடுப்பதாக கூறி வழக்கு பதிவு செய்வது என்பது காவலர்களுக்கு இயலும் செயல். அமெரிக்க வலைப்பதிவர் இந்தியா வரும் பொழுது, ஒரு விசாரணைக்கு வாருங்கள் என்று கூட்டிச் சென்று அப்படியே ரிமாண்ட் செய்து விட முடியும். பின்னர் அந்த வலைப்பதிவரின் எதிர்காலத்தையே சீரழிக்கவும் முடியும்.

கவனிக்கவும், வலைப்பதிவரை இந்தப் பிரிவின் கீழ் குற்றம் செய்ததாக நீதிமன்றம் தண்டிக்க வேண்டியதில்லை. அதிகபட்சம் வலைப்பதிவர் செய்யக் கூடியது, தான் எழுதியது இந்தப் பிரிவின் கீழ் வராது, குற்றமல்ல என்று கூறி உயர்நீதிமன்றத்தை அணுகி முதல் தகவல் அறிக்கையினை தள்ளுபடி செய்ய கோரலாம். அந்த காலகட்டத்திற்குள்ளாகவும் போதிய வேதனைகளை அந்த பதிவர் அனுபவித்து முடித்திருப்பார்.

பதிவுதான் என்றில்லை, பதிவில் எழுதப்படும் எதிர்வினை, பதிவில் தோன்றும் பிற பதிவுகளுக்கான சுட்டிகள் என்பவற்றையும் transmit என்று கூறி குற்றச்செயலாக்கலாம். மீண்டும் வலியுறுத்துகிறேன். இது குற்றமில்லை என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறலாம். ஆனால், பொய் வழக்கு என்று காவலர்கள் மீது வழக்கு தொடர்வது கடினம். அதுவரை பட்ட கஷ்டம் வழக்கிலிருந்து தப்பித்தாலே பெரிது என்று நினைக்க வைத்திருக்கும்.

-oOo-

காவலர்கள் ஏன் வலைப்பதிவர்களை துன்புறுத்த வேண்டும்?

மூர்த்தி வழக்கில் காவலர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளனர் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால், காவலர்களில் சில கறுப்பு ஆடுகள் உள்ளது. சிவில் வழக்குகளில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதில் வல்லவர்கள். வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு இந்தியரோ அல்லது இந்தியாவில் பெரிய நிறுவனமொன்றில் அதீத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஊழியரோ என்றால் அவர்களுக்கு அது பொன் முட்டையிடும் வாத்து. இன்னும் விளக்கமாக கூறத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

-oOo-

இணைய குற்ற தடுப்பு காவலர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ்தான் இங்கு எழுதப்படுபவை குற்றமாகும் என்பதல்ல. இந்திய தண்டனைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்காகவும், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

முன்பு ஒரு முறை, டென்மார்க் இதழில் வெளியான முகமது நபி பற்றிய கேலிச் சித்திரங்களை தமிழ் பதிவர் ஒருவர் தனது வலைப்பதிவில் வெளியிட்டார். இதுவே ஆனந்த விகடனில் வெளியானால் என்ன நடந்திருக்கும்?

பதிவில் கேலிச் சித்திரம் வெளியிடப்பட்ட விபரம் வெளியில் தெரிந்தால், வெளி உலகில் என்ன நடந்திருக்குமோ, அதுவே இங்கும் நடந்திருக்கும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 A கூறுவது சுருக்கமாக, ‘Whoever with deliberate and malicious intention of outraging the religious feelings of any class.........................insults or attempts to insult the religion or religious beliefs of that class..........extend to three years or with fine’

இணையத்திலும் சுதந்திரமாக அனைத்து மதங்களைப் பற்றியும் எழுதப்படுகின்றன. இதற்கு இந்தியாவில் எந்த மூலையில் இருக்கும் எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்படலாம். இணைய குற்ற தடுப்பு பிரிவுதான் வர வேண்டும் என்பதல்ல!

மதம் மட்டுமில்லை. அரசியல் தலைவர்கள், புனித பசுக்கள், நீதிமன்றங்கள் இங்கு பதிவர்களால் சகட்டு மேனிக்கு புரட்டியெடுக்கப்படுகிறார்கள். சத்ரபதி சிவாஜியைப் பற்றி ஆர்குட்டில் எழுதினார் என்று பெங்களூர்வாசி ஒருவர் பட்ட பாட்டினை நாம் அறிவோம். அவர் தப்பித்தது, எழுதியது குற்றமில்லை என்பதால் அல்ல. எழுதியதே அவரில்லை என்பதால். நாளை சர்தார் வல்லபாய் படேலைப் பற்றி எழுதுகிறீர்கள். நள்ளிரவு கதவைத் தட்டி குஜராத் போலீஸ் உங்களை அள்ளிக் கொண்டு ஆமதாபாத் போனால், எப்படியிருக்கும்?

நடிகை குஷ்பு திருமணத்திற்கு முந்தைய பாலுறவு பற்றி கூறியது, இங்கு இணையத்தில் எழுதப்படும் சில கருத்துகளோடு ஒப்பிடுகையில் ஒன்றுமேயில்லை. ஒன்றுமே இல்லாமல் போனாலும், எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன? அதனால் அவர் அடைந்த தொல்லைகள் எத்தனை?

எனவே, நேரமும், கெட்ட எண்னமும் கொஞ்சம் பணமும் இருக்கும் எவராலும், எவருக்கும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தொல்லைகள் கொடுக்க இயலும் என்பதே என் அச்சம்!

மதுரை
230909

7.10.12

கூடங்குளம் பொதுநல வழக்கு!


கூடங்குளம் அணு உலையினை நிறுவி இயக்குவது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கில் அணு உலையினை நிர்மாணிப்பதில் விதிகள் மீறப்பட்டுள்ளன எனவும் அந்த மீறல்கள் நேர்செய்யப்படாமல், உலையினை இயக்க முடியாது என்றுதான் வாதிட முடியுமே தவிர, அணு உலையே கூடாது என்றல்ல. அணு மின்சாரம் தேவையா இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவை சார்ந்தது. கொள்கை முடிவில் நீதிமன்றம் எளிதில் தலையிடாது.
 
எனவே, அணு உலை அமைக்கக் கூடாது என்று மக்கள் தொடர்ந்து தாங்கள் விரும்பினால் அரசை கோரலாம். போராடலாம். மக்களின் கருத்தினை ஒட்டியே அரசு தனது கொள்கை முடிவுகளை வகுத்துக் கொள்வதால், அக்கருத்தின் வெளிப்பாடான சுந்ததிரமான பேச்சு மற்றும் நடவடிக்கைகள் ( speech and expression) ஆகியவற்றை அனுமதிப்பது, மக்கள் நல ஆட்சியினை பேணும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.

இதன் காரணமாகவே, அணு உலை பற்றிய தங்கள் சொந்தக் கருத்தினை வடிவமைத்துக் கொள்ளாதவர்கள் கூட கூடங்குளத்தில் அணு உலையினை எதிர்த்து போராடுபவர்களின் மீதான அரசின் பல்வேறு அடக்கு முறைகளை கண்டிக்கும் சூழல் ஏற்ப்படுகிறது. முக்கியமாக, கடந்த மாதம் நடைபெற்ற அணு உலை முற்றுகை போராட்டத்தின் பொழுது, எவ்விதமான உடல் மற்றும் மனக்காயங்கள் இல்லாமல் சமாளித்திருக்க வேண்டிய ஒரு விடயம், சில அரசு அதிகாரிகளின் ஆணவப் போக்கால் மக்களுக்கும் அரசு இயந்திரங்களும் இடையே மிகப் பெரிய இடைவெளியை ஏற்ப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இரண்டு உயிர்களையும் பலி கொண்டுள்ளது.

இதற்காக நீதி விசாரணை கோரி, இரு பொது நல வழக்குகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டு, வாத பிரதிவாதங்கள் முடிந்து தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு என்ற நிறுவனத்திற்காக வழக்கு தாக்கல் செய்த எனது நண்பர் நீதிமன்றம் வர இயலாத சூழ்நிலையில் அவருக்காக நான் வாதிடும் வாய்ப்பு கிடைத்தது. மற்றொரு வழக்கினை தாக்கல் செய்தவர் அ.மார்க்ஸ்!


கூடங்குளம் வன்முறைக்கும், ராம்லீலா வன்முறைக்கும் ஒற்றுமை இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுக்காத சூழ்நிலையில், மற்றவர்களுக்கு என்ன பிரச்னை, என்ற எண்ணம்தான் மோலோங்கிய நிலையில், அதே போன்றதொரு உத்தரவை இந்த வழக்கில் எதிர்பார்க்க முடியாது. ’80 காவலர்கள் காயம்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களில் யார் ஒருவருக்கும் கூட காயம் படவில்லை’ என்பதே அரசின் வாதம்.

குற்ற வழக்கிற்கும், கைதுக்கும் அஞ்சி தனியாளாக யாரும் எதற்கும் முன் வர முடியாத சூழலில், பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் நிற்க வைப்பது இயலாத நிலை. எனவேதான், பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு உண்மை நிலையினை தெரிந்து கொள்வதற்கு யாரேனும் நீதிபதி தலமையில் விசாரணை வேண்டுமென்று வழக்கு. ஆனால், அவ்விதமாக விசாரணை நடத்த வேண்டுமென்று அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா, என்பது கேள்விக்குறி. அதிஷ்டவசமாக, அந்த கேள்வியினை அரசுத் தரப்பில் எழுப்பவில்லை.

எனினும், நீதிபதி தலமையிலான விசாரணையிலும் பெரிதாக ஏதும் விளைந்து விடாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவ்விதமான விசாரணை தொடர்ந்து இவ்விதமான செயல்கள் நடக்க இயலாத சூழ்நிலையை ஏற்ப்படுத்தும். அதே போன்று நடந்த பிரச்னையை மக்கள் மன்றத்திற்கு முன் எடுத்துச் செல்லும் ஒரு கருவியாக இந்த வழக்கு பயன்படலாம். பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது என்றாலும், நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு, அரசு இயந்திரங்களுக்கு தொடர்ந்து தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்தியது. அடுத்து நடைபெறப் போகும் முற்றுகை போராட்டத்தில் ‘எவ்விதமான வன்முறை செயலுக்கும் இடம் கொடுத்து விடக்க்கூடாது’ என்று தற்பொழுது காவலர்களுக்கு கண்டிப்பாக உத்தரவிடப்பட்டதில் இந்த வழக்கின் பங்கும் உண்டு.

எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லைக் காவல்படை விமானியின் அகங்காரப் போக்கால் உயிரிழந்த மீனவர் குடும்பம் தகுந்த நஷ்ட ஈடு வேண்டியும், விமானியின் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியும் நீதிமன்றத்தினை எளிதில் அணுகும் வண்ணம், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் பயன்படலாம்.

எல்லா வழக்குகளிலும், முக்கியமாக பொது நல வழக்குகளில், வெற்றி என்பது வழக்கில் கோரப்பட்ட பரிகாரத்தை பொறுத்து அமைவதல்ல. மாறாக, பல்வேறு பக்கவிளைவுகளினால் ஏற்ப்படும் நன்மைகளும் வழக்கின் வெற்றியை நிர்ணயிக்கின்றன. கூடங்குளம் வழக்கில் என்ன நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மதுரை
07/10/12

30.9.12

ஏன் என்ற கேள்வி...

என் பெயர் கான், ஆனால் நான் பயங்கரவாதியல்ல’ என்ற ஷாருக்கான் பட தலைப்பை, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட அது, தலைப்புச் செய்தியானது. அந்த செய்தியில் மதுரை மூத்த வழக்குரைஞர் ஒருவரின் மனதில் கடந்த ஒரு வருடமாக பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சிகளை தட்டியெழுப்பி, பத்திரிக்கையில் அதனை கொட்டி விட்டார். இந்துவில் வந்த செய்தியினை இந்த சுட்டியில் காணலாம்.

தொடர்ந்து நான் ‘தி ஹிந்து’விற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதனை ஹிந்துவில் வெளியிடுவார்களா என்பது தெரியாது. எனவே, அதன் நகல் இங்கே எனது பதிவில். விளக்கமாக மற்றொரு பதிவும் எழுத விருப்பம் உள்ளது.

Dear Editor,

The outbursts of Mr.Ajmal Khan, Senior Advocate, stirred by the recent observations made by the Supreme Court, quoting a film title are too important to be ignored. May be Mr.Khan’s claims appear to defy reason, emotional or that statistics can be rolled out to institute that there is adequate representation of muslims but the context of what he has propounded, if understood properly would reveal the ‘Khan syndrome’ exist in our mindset.

Mr.Khan, is known as a man of deep religious faith but his sense of charity not stopped with something associated with his religion, which this author can vouchsafe for. However, the ‘deep’ religious faith to be taken as a ground to conclude that one’s elevation would be threat to the security of our nation is too far fetched and leaving an impression, whether it is appropriate to leave the job of securing the integrity of this country of One billion in the hands of a Bureau, which ironically named itself as an Intelligence Bureau.

Mr.Khan, without any legal background inched his way into what he is today. With a soft spoken approach, has endeared himself to all the Judges of our High Court and legal fraternity. His professional integrity and honesty is second to none. Except tax matters, he has a fund of knowledge and experience in handling cases in all branches of law. He arguably having the maximum number of Juniors in Madurai High Court and the number of his appearances before Court is a matter of envy. Above all he lead the Madurai High Court Advocate’s Association for more than two consecutive terms. What else one needs to be qualified to adorn the chair of a Judge.

Mr.Khan was chosen by the Judges of our High Court, whom had the privilege to closely watch his conduct, knowledge and temperament. When the Collegium of Supreme Court has a doubt, it is in the fairness of things that it ought to have consulted the Collegium of our High Court, even informally, considering the seriousness of the matter. This is not an election of Pope but the selection of a Judge of a Democratic country, where there cannot be any room for arbitrariness.

However neither the case of Mr.Ajmal Khan is in isolation nor his outbursts are unprecedented. One of the finest Judges of our time Justice A.P.Shah was similarly insulted and expressed openly that he was ‘hurt’. A search in the internet would establish how Jurists are unanimous in their opinion that the best of the talents are neglected very often. Though we claim to live in a Democratic Republic, the people of this country are denied the knowledge on why Justice A.P.Shah was made to retire ‘hurt’ and why Mr.Ajmal Khan was dropped ‘unfit’ 

Perhaps we may know the reason in the future till then, let us relish the juicy gossips, flying thick in the corridors of the Court Halls!

G.Prabhu Rajadurai
Advocate

14.7.12

மூன்று பிரபலங்களும், வெட்டிப் பேச்சும்...


மூன்று பிரபலங்களைக் குறித்து சமீபத்தில் வந்த வதந்தி, விசாரித்தால் ஓரளவிற்கு உண்மையிருக்கலாம்

முதலாமவர் திரைப்பட இயக்குஞர். அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்திற்காக, உல்லாசத்திற்கு பெயர் பெற்ற நாடு ஒன்றில் சில நாட்கள் தங்க நேர்ந்தது. தினமும் படப்பிடிப்பிற்கு செல்வதும், பின்னர் விடுதி அறையில் வந்து நல்ல பிள்ளையாக தங்குவதுமாக இருந்தவரை, அந்த விடுதி வரவேற்பறை பெண்மணி கவனித்துக் கொண்டே இருந்தார். இயக்குஞர் விடுதியிலிருந்து விடைபெறும் சமயம் அந்தப் பெண், ‘திரைப்படம் எடுப்பதற்காகவோ அல்லது வேறு வேலைகளுக்கோ இங்கு பலர் வந்து தங்குகிறார்கள். அனைவரும் மற்ற நேரங்களில், மதுக்கூடத்தையோ அல்லது வேறு கேளிக்கைகளையோ தேடி போவார்கள். ஆனால், நீங்கள் அப்படி ஏதும் இல்லாமல் உங்களது அறைக்கு திரும்பி விடுகிறீர்கள். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கிறது. நானும் உங்கள் மதம்தான்,  நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?என்றாரார்.

இயக்குஞரோ, ‘தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும், அந்தப் பெண்ணுக்கு வேறு நல்ல கணவன் கிடைப்பார் என்று வாழ்த்தி‘ விடை பெற்றாராம்.


இரண்டாமவர், அரசின் முக்கியதுறை ஒன்றில் மிக உயர்ந்த பதவியிலிருப்பவர். சில மாதங்களுக்கு முன்னர், வேறு ஒரு உயர்ந்த பதவி வகிப்பதற்காக பிரச்னைக்குறிய ஒரு இடத்திலிருக்க நேரிட்டது. குடியரசு தினத்திற்கு முன்பு, கொடியேற்று விழாவை எப்படி நடத்துவது என்று விவாதிக்க தனது சகாக்களை அழைத்தார். இவரது ஆர்வத்தில் சகாக்கள் அதிர்ந்து போய் விட்டனராம். ‘ஏன் நாமெல்லாம் பிரச்னையில்லாமல் தொடர்ந்து செய்ல்படவேண்டாம் என்று நினைக்கிறீர்களா? இல்லாத வழக்கத்தை ஏற்ப்படுத்தி, வம்பில் சிக்கிக் கொள்ள வேண்டாம்என்றார்களாம். இவருக்கும் ஆச்சரியாமாம்...

மூன்றாமவர், நாடறிந்த அரசியல்வாதி முதன்மையான பொறுப்பிலிருப்பவர். தனக்கு அந்த பொறுப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கும் ஒரு விடயத்தில் அவர் எடுத்த நடவடிக்கை, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட அதிக கோபத்திலிருந்தவரை பார்க்க இளம் அதிகாரி ஒருவர் சென்றிருந்தார். வெறுப்பில், தன் முன் இருந்த காகிதத்தில் கோட்டுப்படங்களை கிறுக்கிக் கொண்டே இருந்தவர், அதிகாரி பேச்சை எடுத்ததும், நீதிபதிகளை ‘இவர்களைப் பற்றி தெரியாதா?‘ என்ற ரீதியில் திட்டித் தீர்த்தாராம். அப்படி திட்டியதில் சில வார்த்தைகளை அச்சில் ஏற்ற இயலாதாம்...

-oOo-

கிரேக்க மூலத்திலிருந்து ட்ரிவியல் (Trivial) என்ற் ஆங்கில வார்த்தை உருவானதற்கு ஒரு கதை உண்டு. அந்தக் காலத்தில் பெண்கள் தத்தம் வீடுகளில் இருந்து பொருட்கள் வாங்க சந்தைக்கு செல்வார்கள். அப்படி மூன்று வழியில் (Tri + Via) இருந்து வரும் பெண்கள் சந்தைக்கு செல்லும் வழியில் ஒன்றாக கூடுகிறார்கள். ‘அப்படி செல்லும் வழியில் பெண்கள் என்ன பேசுவார்கள்?, அதுதான் ட்ரிவியல் பேச்சுஎன்று நான் சொன்னால், பெண்கள் அமைப்பு வைத்து என்னை கண்டிப்பார்கள்.
எனவேதான், ஆண்களும் இதற்கு விதிவிலக்க என்று விளக்கவே இந்தப் வெட்டிப் பேச்சு பதிவு!

சென்னை
14/07/12

11.7.12

அகிலேஷ் யாதவின் கொடை!



‘உத்திரப்பிரதேச முதல்வர் அம்மாநில சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு, மகிழுந்து வாங்குவதற்காக ரூ.20 லட்சம் அளிக்கப் போவதாக’ செய்தி வெளிவந்தவுடனேயே, ஊடகங்களில், முக்கியமாக ஆங்கில ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பு என்பதை விட, அந்த விமர்சனங்களில் மறைந்திருந்த கிண்டல்களும் புரிந்து கொள்ளக்கூடியதாகவே இருந்தது.

‘டாக்ஸ்பேயர் மனியிலிருந்து எம் எல் ஏக்களுக்கு காரா?’ என்ற எதிர்ப்பினை சமாளிக்க முடியாமல், அறிவித்த வேகத்திலேயே அகிலேஷ் அதனை திரும்ப பெற்றுக் கொண்டார்.

ஊடகங்கள் கிளப்பிய விமர்சனப் புழுதியில் ‘அந்த தொகை ஒன்றும் ‘பொனாசா’ இல்லை. பெரிய மகிழுந்து தேவைப்படும் உறுப்பினர்கள், அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் வரை செலவழித்து மகிழுந்து வாங்கிக் கொள்ளலாம் எனவும் பின்னர் அவர்களது பதவிக்காலம் முடிந்ததும் தேய்மானத்திற்காக கழித்தது போக, மீதி கிரயத் தொகையை கொடுத்து வண்டியை தாங்களே சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற அந்த திட்டத்தின் சாராம்சங்கள்’ விவாதிக்கப்படாமலேயே போயின.

சட்டமன்ற பிரதிநிதிகள் என்ன, பல தனியார் நிறுவனங்களே தங்களின் இடைநிலை நிர்வாகிகளைக் கவர, இதே வகையான திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். அநேக நிறுவனங்களில் இளநிலையில் இருக்கும் பொறியாளர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் மகிழுந்து வாங்குவதற்கான படிகள் அளிக்கப்படுகையில் லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் பதவி வகிக்கும் நபருக்கு ரூ 20 லட்சம் என்பது பெரிய தொகையல்ல.

ஆயினும் பழைமைவாத உடைகளோடும், நாட்டுப்புறத்தன்மையோடும், முரடர்களாக நம்முன் உருவகப்படுத்தப்பட்டுள்ள எம் எல் ஏக்களுக்கு மகிழுந்து என்பதால், நம்முடைய ஆழ்மனதில் ஏற்ப்படும் ஒவ்வாமையே இந்த எதிர்ப்பின் மூல காரணம் என்றே நான் நினைக்கிறேன்.

எம் எல் ஏக்களுக்கு இவ்வாறு பலன்கள் அளிக்கப்படுகையில் நம்மால் உணரப்படும் அசூயையான உணர்வு, பொருளாதார மந்தநிலையிலும் சில நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கில் அளிக்கப்படும் பலன்களை காண்கையில் வியப்பாக மாறுகிறது.

சர்வதேச பணச்சந்தையிலும், பங்கு வர்த்தகத்திலும் பல்லாயிரக்கணக்கான எண்களோடு உறவாடும் ஐஐஎம் நிர்வாகிகள், அதே திறமையினை பயன்படுத்தி ஒரு சட்டமன்ற தொகுதியிலாவது வெற்றி பெற்றதில்லை. ஏன், ஊடகங்களின் பெரிய ஆதரவு இருந்தும், சென்னையில் சில ஐஐடி தொழில்நுட்பவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஒன்று ஒரே தேர்தலோடு உடைந்து போனது.

மகிழுந்து ஒரு நிறுவனத்தின் நிர்வாகிக்கு தேவைப்படுவதை விட மக்கள் பிரதிநிதிக்கு அதிகம் தேவைப்படுகிறது. நகர்ப்புற சாலைகளை கடந்து பட்டி தொட்டியிலும் சுலபமாக சென்று வர பெரிய வகை மகிழுந்துகள் (SUV) ஏற்றதாக இருக்கும் என்று அகிலேஷ் நினைத்ததில் தவறில்லை.

நாடு இருக்கும் பொருளாதார நிலையில், இவ்வகையான செலவினங்கள் தேவையா என்பதும் வெற்று வாதமே! ஏனெனில், இதே பொருளாதார நிலை வேறு எந்த நிறுவன நிர்வாகிக்கும், மகிழுந்தினை மறுக்கவில்லை. மேலும் நாட்டின் பொருளாதார நிலை, நாட்டில் செயல்படும் நிறுவனங்களின் ஒட்டுமொத்தமான பொருளாதார நிலையோடு நேரடி தொடர்புடையதாகும்.

பல பிரதிநிதிகள் கோடீசுவரர்களாம். கோடீசுவரராக பணியில் சேருபவர் அவரது கோடிகளைக் கொண்டு வந்து கொட்ட வேண்டுமா. அதுவும், இந்த திட்டமானது சாதாரண நிலையிலிருக்கும் உறுப்பினர்களை மனதில் கொண்டே அறிவிக்கப்பட்டதாக அகிலேஷ் கூறுகிறார்.

வசதியாக உள்ள பிரதிநிதிகளை பார்க்கும் நாம், நடுத்தர நிலையில் இருந்து இயங்கும் பல பிரதிநிதிகளை மறந்து விடுகிறோம். திருநெல்வேலியில் நான் வழக்குரைஞராக பணியினை தொடங்கிய பொழுதில் நேரில் கண்டு பழகிய மூன்று பிரதிநிதிகளை இந்தக் கணத்தில் என் நினைவுக்கு வருகிறார்கள்.

ரமணி நல்லதம்பி என்ற பெயரை இன்று நெல்லையிலேயே யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1989லும் 1991லும் இருமுறை காங்கிரசு கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். குறுகிய காலத்திலேயே தனது துணிச்சலான அரசியல் மற்றும் சட்டமன்ற செயல்பாட்டினால் கருணாநிதி, செயலலிதா ஆகிய இருவரின் கவனத்தையும் கவர்ந்தவர். ஆனால் அதே வேகத்தில் அரசியலிலிருந்து காணாமல் போனார். சில காலம் கழித்து ‘நக்கீரன்’ அட்டையில் புற்றுநோயால் தாக்கப்பட்டு சாகும்தறுவாயிலிருந்த ரமணியின் புகைப்படத்தை கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள். ரமணியும், வழக்குரைஞராக பணியாற்றிய அவரது கணவராகிய நல்லதம்பியும் தங்களது சொற்ப வருமானத்தையும் ரமணியின் சிகிச்சைக்காகவே செலவிட்டு வறுமையில் தள்ளப்பட்டு நிற்கையில், அவர் சார்ந்திருந்த கட்சியே அவரை கைவிட்டு விட்டதுதான் கொடுமை!

இதே காலகட்டத்தில் அதிமுகவிலிருந்து நெல்லை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையா என்பவரையும் நான் அறிவேன். அரசு வழக்குரைஞராக இருக்கையிலேயே அவரது நேர்மைக்கும் கண்ணியத்துக்கும் பெயர் பெற்றவர். ஓரளவு வசதியானவராயினும்,  ஐந்து வருடம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியதை வைத்து, எவ்விதத்திலும் தமது செல்வத்தையோ, செல்வாக்கையோ விரிவுபடுத்தியவரல்ல. இவரும் இளம்வயதிலேயே இறந்து போனதுதான் துரதிஷ்டம். முதல்வரின் காலில் கட்சிக்காரர்கள் அனைவரும் ‘பொத்’ ‘பொத்’ என்று விழுந்து கொண்டிருக்கையில், ‘வேலையா அண்ணன் விழுந்தாரா, இல்லையா?’ என்பதுதான் எங்களிடையே அப்பொழுது புதிராக உலவிய சந்தேகம்!

1967லிருந்தே திமுக பிரதிநிதியாக பலமுறை பணியாற்றிய ஏ.எல்.எஸ் என்று அழைக்கப்படும் ஏ.எல்.சுப்பிரமணியன் பற்றி கூட ஏதும் கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லை. நான் அறிந்தவரை அரசியலுக்காக தனது சொத்துக்களை இழந்தவர் என்றுதான் இவரைப் பற்றியும் கூறுவார்கள்.

இவர்களில் ரமணி நல்லதம்பி கொஞ்சம் பயர்பிராண்ட். ஆனால் மற்ற இருவரும் அதிர்ந்து பேசி கூட நான் எப்பொழுதும் பார்த்ததேயில்லை. சட்டமன்ற உறுப்பினர் என்றதும், எனக்கு இவர்கள்தாம் நினைவுக்கு வருகிறார்கள்.

இவர்களைப் போன்று, எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் இருக்கலாம். உத்திர பிரதேசத்திலும் இருக்கலாம். தங்களது அரசியல் செயல்பாட்டிற்காகவும், மக்கள் பிரச்னைக்கான உழைப்பிற்காகவும், அரசு செலவில் ஒரு மகிழுந்து கிடைக்குமாயின், அது ஒரு பொருத்தமான பலனாகத்தான் இருக்க முடியும்.

ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் அகிலேஷின் திட்டத்தில் ஏதும் குறைகளை என்னால் காண இயலவில்லை.

மதுரை
11/07/12

22.6.12

தலைவன் செயல் தவறாகாது!



முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜு, அதிபர் சர்தாரி மற்றும் பிரதம்ர் கிலானி விடயத்தில் பாக்கிஸ்தான் உச்சநீதிமன்றம் நடந்து கொண்டதை விமர்சித்து எழுதிய கட்டுரை, ‘தி ஹிந்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய இரு நாளிதழ்களிலும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

அந்த கட்டுரையில், நடைமுறைச்சிக்கல்களால் அதிபர், பிரதமர் போன்றவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள கட்ஜுவின் கருத்து கவனிக்கத் தகுந்தது. குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து, அதிபரை பாதுகாக்கும் பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டப்பிரிவினை எடுத்துக் காட்டி, பாக்கிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிபர் சர்தாரி விடயத்தில் சற்று அதிகப்படியாக நடந்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டும் கட்ஜு, தனது வாதத்திற்கு ஆதரவாக அரசனின் எந்த செயலும் குற்றமாகாது (King can do no wrong) என்ற ஆங்கில சட்டக்கருத்தினை முன் வைக்கிறார்.

இன்று இங்கிலாந்திலேயே வலுவிழந்து போன இந்த சட்டக்கருத்து ஆங்கில நீதிதுறை வரலாற்றில் பல்வேறு காலகட்டத்தில் கையாளப்பட்ட வரலாறு சுவராசியமானது.

-oOo-

கட்ஜுவின் கட்டுரையினை படிக்கும் பொழுதே, எனக்கு இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த ப்ரோஸ்ட்/நிக்சன் என்ற திரைப்படத்தில் ‘வாட்டர்கேட் விவகாரத்தில் தனது செயலை நியாயப்படுத்துவதற்காக நிக்சன் கூறும், ‘அதிபர் ஒரு செயலைச் செய்தால், அது குற்றமாகாது’ (When the President does it, that means it's not illegal) என்ற கருத்தினை நினைவுபடுத்தியது.

பதவி விலகிய ஒரு அதிபரை, தொலைக்காட்சி நிரூபர் ஒருவர் பேட்டி கண்டதைப் பற்றி ஒரு படமா, என்று அசுவராசியமாகவே எவ்விதமான அறிமுகமும் இல்லாமல்தான் படத்தினைப் பார்த்தேன். வியப்பாக இருந்தது, கொஞ்சம் கூட தொய்வில்லாமல் ஏதோ ‘த்ரில்லர்ரக படத்தினைப் பார்ப்பது போன்ற அனுபவம். ஒரு அரசியல் பேட்டியைக் கூட திரைக்கதையாக்குவதற்கு தனித்திறமை வேண்டும்.

அரசியலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு படம் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், தமது இளமைக்காலத்தில் கென்னடி/ நிக்சன் நாட்களைக் கடந்து வந்தவர்களுக்கு அருமையான நாஸ்டல்ஜிக் அனுபவத்தைக் கொடுக்கலாம்.

-oOo-

படத்தில் நிக்சன், ப்ரோஸ்ட் அணிந்திருக்கும் ‘ஸ்லிப் ஆன்ரக ஷூவைக் கண்டு வியப்பது எனக்கு வியப்பாக இருந்தது. அவ்வகையான லேஸ் இல்லாத ஷூக்கள் அமெரிக்காவில் அறிமுகமானது, 70களுக்கு பின்னர்தான் எனபது புதிய தகவல்.

‘ஆனால் லேஸ் வைத்து கட்டப்படும் ஷூக்கள்தான் ஆண் தன்மையோடு இருக்கும்என்று நிக்சன் கூறுவது முதன் முதலில் கியர் இல்லாத அல்டிஸ் காரை ஓட்டிய பொழுது எனக்குள் எழுந்த எண்ணத்தை நினைவுபடுத்தியது. ஒரு கையில் கியரைப் பிடித்துக் கொண்டு கார் ஓட்டுவதில் உள்ள ‘கிக்கியர் இல்லாத காரில் இல்லை!

‘மோட்டர் பைக்குகளை கிளப்ப விரல் நுனியில் சுவிட்ச் வைத்தாலும், கால்களால் உதைத்து கிளப்பவே ஆண்கள் விரும்புகிறார்கள்என்று ஒரு மார்க்கெட்டிங் நிறுவன சர்வே அறிக்கை தெரிவித்ததாக படித்திருக்கிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பதிவு ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவது போல இருப்பதால், ‘நான் எப்பொழுதும் ஸ்லிப் ஆன் ரக ஷூக்களையே அணிகிறேன்என்பதையும் சொல்லி வைக்கிறேன். ஆனால் காரணம், தினமும் லேஸை கட்டும் பொழுது ஆள்காட்டி விரலில் உரசி அலர்ஜியாகிறது என்பதுதான்.

கேஸ் கட்டுகளை நாடா கொண்டு கட்டி வைப்பதில் ஆரம்பித்த ஒவ்வாமை. தற்பொழுது, கேஸ் கட்டுகளையும் நானாக கட்டுவதை பொதுவாக தவிர்ப்பேன். ஆக்குபேஷனல் ஹஸார்ட்!

மதுரை
22/06/12