Showing posts with label Travel. Show all posts
Showing posts with label Travel. Show all posts

12.11.12

ஹைதராபாத் பயணக்குறிப்புகள் 3


கொண்டபள்ளி!

ஐதராபாத் சாலார்ஜங் அருங்காட்சியத்தில் இருந்த கலைப்பொருட்கள் கடையில், இந்தப் பெயரைக் கேட்டதும், ‘ஏதோ பரிச்சயமான பெயராக உள்ளதே’ என்று பொறி தட்டினாலும் புலப்படவில்லை.

விஜயவாடாவிற்கு அருகில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கொண்டபள்ளி என்ற கிராமத்தில் செய்யப்படும் மரப்பொம்மைகள் மிகவும் பிரபலமானவை எனப்படித்ததும் அந்த ஊரையும் பார்த்து செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்ப்பட்டது.

ஐதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு செல்லும் நெடுங்சாலையில் விஜயவாடாவிற்கு முன்னதாக சில மைல் தொலைவில், நெடுஞ்சாலையிலிருந்து இடது பக்கம் திரும்பினால் சுமார் பத்து கி.மீ, தொலைவில் மலையடிவாரத்தில், இருக்கிறது கொண்டபள்ளி

 

கொண்டபள்ளி சென்று பொம்மைகள் எங்கு கிடைக்கும் என்று கேட்டால் ஒரு தெருவை கைகாட்டுகிறார்கள். கண்ணாடி ஷோ கேஸ் உள்ள ஒரு கடையில் சென்று பார்த்த என் மனைவி பின்னர் அருகிலிருந்த ஓட்டு வீட்டினுள் சென்று பார்த்துக் கொண்டிருந்தார். நேரமாகவும் நானும் சென்று அந்தக் கடையில் பார்த்தால் பாரம் சுமந்து செல்லும் பெரிய மாட்டு வண்டி என்னைக் கவர்ந்தது. வேறு சில மரப்பொம்மைகளும் அருமையாக இருந்தன.


அருகிலிருந்த ஓட்டு வீட்டில் சில பொம்மைகளைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியை வலுக்கட்டாயமாக கடைக்கு அழைத்து மாட்டு வண்டியையும் வேறு சில பொம்மைகளையும் வாங்கிக் கொண்டு வெற்றிகரமாக திரும்பினோம். விலையும் ஏதோ வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்களே என்று அதிகமாகவெல்லாம் கூறவில்லை.

மதுரை வந்து பொம்மைகளை அருகருகே அடுக்கி வைத்தால், ’அருமையாக இருக்கிறதே’ என்று கடையில் வாங்கிய பொம்மைகள் இயந்திரத்தில் கடைந்து, இயந்திரத்திலேயே வர்ணம் பூசப்பட்ட பொம்மைகள். என் மனைவி வாங்கிய சிறு பொம்மைகள், கையிலேயே செதுக்கி, கையிலேயே வர்ணம் பூசப்பட்டு, ‘நாங்கள்தாம் கொண்டபள்ளியாக்கும்’ என்று என்னைப் பார்த்து கேலி செய்தது.

ஆயினும் கடையில் வாங்கிய பாரவண்டி கொண்டபள்ளிதான்!

விஜயவாடா பக்கம் போனால், கொண்டபள்ளி போக மறக்க வேண்டாம். நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பரிசளிக்க அருமையான மரப்பொம்மைகள் கிடைக்கிறது.

பொம்மைகளைப் பார்த்த எனது நண்பன் கூறினான், ‘கொண்டபள்ளி, நக்சல் தலைவர் சீத்தாராமையா ஊரல்லவா’


அட, ஆமாம். இதை எப்படி கவனிக்காமல் விட்டேன்!

 

மதுரை

11/11/12

27.10.12

ஹைதராபாத் பயணக் குறிப்புகள் 2


ஹைதராபாத் என்றாலே சிறுவயது முதல் உடனடியாக என் மனதில் தோன்றும் ஆர்வம், ‘சாலார் ஜங் மியூசியம்’!.

‘அங்கு ஒரு கடிகாரம் இருக்கும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒரு சிறு மனிதன் வெளியே வந்து அங்கிருக்கும் மணியை அடித்து விட்டு உள்ளே சென்று விடுவான்’

‘திரைச்சீலையால் முகத்தை மூடியவாறு ரெபேக்கா சிலை (Veiled Rebecca) இருக்கும்’ என்று எனது பாட்டியிடம் சிறுவயதில் கேட்ட கதைகளிலிருந்தே, தொடரும் ஆர்வம்.

‘அது எப்படி ஒரு சிறு மனிதன் கடிகாரத்துக்குள்ளே இருக்க முடியும்’ ‘எப்படி திரைச்சீலையை கல்லில் வடிக்க முடியும்’ என்று சிறுவயதில் கொண்ட வியப்பு தற்பொழுதும் இல்லையென்றாலும், சாலார் ஜங் மியூசியத்தில் அடியெடுத்து வைத்ததும், ஏதோ எனது பாட்டியின் கை பிடித்து உள்ளே செல்லும் சிறுவனைப் போல உணர்ந்தேன்.

-oOo-

மியூசியத்தை பொறுமையாக பார்க்க வேண்டுமாயின், அரை நாள் குறைந்தது பிடிக்கும். பலவிதமான ஆடை, அலங்காரப் பொருட்கள் பெண்களை மிகவும் கவரும். ஆனால், சுமார் ரூ 15,000 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ள நிஜாமின் நகைகளை பார்க்க முடியாது. அரிதாகத்தான் இதுவரை ஒன்றிரண்டு முறை நகைகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆயினும், மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களே பார்க்கப் போதுமானவையாக இருக்கும்.

உள்ளே செல்வதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். காமிரா அனுமதி இல்லை. ஆனாலும், காமிரா நமது பைகளை வெளியேயே வைத்துப் போக இலவசமாக லாக்கர் வசதி உள்ளது. செல் போன்களை அனுமதிக்கிறார்கள்.

உணவு எடுத்துச் செல்ல தேவையில்லை. உள்ளேயே தரமான உணவு விடுதி உள்ளது.

-oOo-

ஹைதராபாத் என்றால் அடுத்து நினைவுக்கு வருவது சார்மினார். நான் சென்றது ஈத் காலம் என்பதாலா அல்லது எப்பொழுதுமே அப்படித்தானா என்று தெரியவில்லை, சார்மினாரை சுற்றி அவ்வளவு நெருக்கடி!

‘Absolute Chaos’ என்றால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது. சாலை முழுவதும் மனிதக் கூட்டம், மோட்டார் பைக்குகள், ஸ்கூட்டர்கள், ஆட்டோ ரிக்‌ஷாகள், கார்கள். நல்ல வேளை நான் அதற்கு தனியே ஒரு ஓட்டுநரை ஏற்ப்பாடு செய்திருந்தேன். எப்படித்தான் அந்த மனிதக் கூட்டத்தில் காரை செலுத்த முடிந்ததோ தெரியவில்லை.

சார்மினார் பகுதியில் ஓரளவிற்கு வாகனங்கள் செல்ல முடிகிறதென்றால், அதற்கு ஹைதராபாத் போக்குவரத்து காவலர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

எனவே, சார்மினார், சாலார் ஜங் மியூசியம் இரண்டுக்கும் போக எளிதான முறை ஒரு ஆட்டோ எடுத்துக் கொள்வதுதான்.

சார்மினார் மேலே ஏறிப்பார்க்கலாம். பெரிய வரிசை இருந்ததால் நான் போகவில்லை. ஆனாலும் இருபுறமும் உள்ள கடைகளில் பெண் பிள்ளைகளுக்கு வேண்டிய சிறு சிறு அலங்காரப் பொருட்கள் கிடைக்கிறது

சாலை ஓரத்தில் பழம்பொருட்களை வைத்து விற்கிறார்கள். நான் சன் டையலோடு இணைந்த திசை காட்டி ஒன்றை வாங்கினேன். பாதி விலைக்கு பேரம் பேசியிருக்கலாம். நான் கூச்சத்தில் முக்கால்வாசி விலைக்கு கேட்க உடனடியாக கொடுத்து விட்டார்கள்!

-oOo-

சாலார் ஜங் மியூசியம், சார்மினார் இரண்டுக்குமே ஒரு நாள் பிடித்தது என்றாலும், ‘நன்றாகக் கழிந்த ஒரு நாள்’ என்றே தோன்றியது.

மதுரை
27/10/12

26.10.12

ஹைதராபாத் பயணக் குறிப்புகள் 1


கடந்த ஐந்து நாட்களாக, சாலை வழியே குடும்பத்துடன் ஹைதராபாத் பயணம்.

சென்னையிலிருந்து ஓங்கோல் வரைதான் நான்கு வழிச்சாலை (NH5). தரமும் சென்னை – மதுரை போல இல்லை. பின்னர் சிறிது தூரத்தில் இடது பக்கம் திரும்பினால் மாநிலச் சாலை (State Highway) கூகுளை நம்பியது தவறாகி விட்டது. இப்பொழுதான் சாலை அமைத்து கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே சாலை உடைந்து, மீண்டும் விஜயவாடா – ஹைதராபாத் ஹைவே (NH9) பிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

பின்னர் அங்கிருந்து ஹைதராபாத் 85 கி.மீட்டர்கள்தான்!

9 மணிக்கு சென்னையில் கிளம்பி 10 மணிக்கு புழலை தாண்டி ஹைதராபாத் ஹோட்டலை அடைய இரவு 9 மணியாகி விட்டது. ஹோட்டலை தேடி ஒரு மணி நேரம் சுற்றியதும் அடக்கம்.

வழியில் நல்ல உணவு விடுதிகள் இல்லை. உணவை சென்னையிலிருந்தே எடுத்துச் செல்வது நலம்

ஒரு மாநில தலைநகருக்கு மாநிலத்தின் மற்றொரு பகுதியிலிருந்து செல்லும் சாலை இந்த அளவிற்கா மோசமாக இருக்கும் என்று இருந்தது. தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை.

இந்த சாலை அமைத்து முடிக்க இரண்டு மூன்று வருடம் பிடிக்கலாம். அதுவரை 100 கி.மீ. அதிகமானாலும் பரவாயில்லை என்று விஜயவாடா வழியே ஹைதராபாத் செல்லுங்கள். வரும் பொழுது அப்படித்தான் வந்தேன். விஜயவாடாவிற்குள் சுற்றி உணவு உண்ட நேரம் உட்பட அதே நேரம்தான் ஆயிற்று.

-oOo-

ஹைதராபாத் – விஜயவாடா சாலை புதிய நான்கு வழிச்சாலை. இன்னமும் கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கவில்லை. இன்னமும் ஒரு மாதத்தில் ஆரம்பித்து விடுவார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் சில நகர்ப்பகுதிகளில், தமிழகத்தில் உள்ளது போல வேலி அமைக்கவில்லை. ஹைவே ஒட்டிய பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் நீக்கப்படவும் இல்லை. எனவே ஹைவே சில இடங்களில் சாதாரண சாலையாகி சாலையோர வியாபாரம், பைக் நிறுத்தம் என களை கட்டுகிறது.

நேரமிருப்பின் விஜயவாடாவை ஒரு சுற்று சுற்றுங்கள். மலைகளின் இடையே அமைந்த அழகான நகரம். நல்ல அசைவ உணவு விடுதிகள் இருந்தன (Ask for 11 to 11). கிருஷ்ணா நதியின் பிரமாண்டத்தை அதிசயிக்கையில் ‘பைசா வசூல்’ என்று இருந்தது!

விஜயவாடாவிலிருந்து ஓங்கோல் வரை 73ரூ கட்டணம் வாங்குகிறார்கள். ஹைவே என்று சந்தோஷமாக ஆரம்பித்த பயணத்தின் உற்சாகம் சீக்கிரமே வடிந்து விட்டது. சாலையில் தரம் மிகவும் மோசம். எங்குமே பாலம் கட்டப்படாமல்  ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு மாற்றுப் பாதை!

தேசிய நெடுஞ்சாலைத் துறை மீது நுகர்வோர் வழக்கு போடலாமா என்று யோசித்து வருகிறேன். சென்னை – கொல்கத்தா சாலை என்று பெரிதாக நினைத்தேன். இப்படி பல்லிளிக்கிறது.

எங்குமே இங்குள்ளது போல கூரை வேய்ந்த கட்டணம் வசூலிக்கும் இடம் இல்லை. ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் இடமும் இல்லை. டிரக்குகளை ஓரம்கட்டி நிறுத்தும் இடமும் இல்லை.

எப்படியோ, போன பாதைக்கு வந்த பாதை பரவாயில்லை. அது வரை நிம்மதி.

இறுதியாக ஹைதராபாத் நகருக்குள்ளும் சரி, ஹைவேயிலும் சரி. எந்த ஒரு இரு சக்கர வாகனமும், வேகமாக வரும் காரைப் பார்த்து பயப்படுவார்கள் என்று நினைத்து விடாதீர்கள். எவ்வித அச்சமும் இன்றி சாலையை பைக்கில் கடக்கிறார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

மதுரை
26/10/12

4.7.08

பயணம்-ரோடங் கணவாய் (Rohtang Pass)

மணாலி செல்கிறீர்களா? அங்குள்ள ரோடங் கணவாய் வரை செல்லாமல் திரும்புவதில் அர்த்தமேயில்லை. மணாலி எங்கிருக்கிறது என்பவர்களுக்கு ‘ரோஜா’ படம் எடுத்த இடம் என்றால் சட்டென்று புரியும்.

மணாலி என்பது இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000மீ உயரத்தில் அமைந்துள்ள கோடை வாஸஸ்தலம். வருடம் முழுவதும் சுற்றிலும் பனிசூழ்ந்திருக்கும் சிகரங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் பள்ளத்தாக்கு.

பனிச்சிகரங்களில் இருந்து உருகி வழியும் நீர் பியாஸ் (Beas/Vyas) நதியாக நுரை பொங்க மணாலி நகரின் நடுவே வேகமாக ஓடுகிறது.

குளிர்காலத்தில் மணாலி நகர் முழுவதும் பனி சூழ்ந்து, அப்பொழுதும் செல்வதற்கு அருமையாக இருக்குமாம்.

-oOo-

ரோடங் கணவாய், மணாலியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் சுமார் 5500 மீ உயரத்தில் அமைந்துள்ள கணவாய். ரோடங் கணவாயினை கடந்து அந்தப்பக்கம் இறங்கினால் லெ பின்னர் லடாக் செல்ல பாதை உள்ளது.

ரோடங் பாதை கோடைக்காலத்தில்தான் திறந்திருக்கும். செல்ல விரும்புவர்கள் காலை 4 மணிக்கே மணாலியிருந்து கிளம்பிவிட வேண்டும். போகும் வழியிலேயே குளிர் உடைகள் வாடகைக்கு கிடைக்கும். பிரச்னை என்னவென்றால், பேரம் பேச நம்மை அனுமதிக்காமல் ஓட்டுநர்கள் அவசரப்படுத்துவார்கள்.
உண்மையில் ரோடங்கில் ஸ்வெட்டர் அதற்கு மேல் ஒரு ஜாக்கெட்டுடன் சமாளித்து விடலாம். முக்கியமான தேவை கையுறையும், காலுக்கு ரப்பர் பூட்டும்தான்.

மணாலிக்கு வரும் 90 சதவிகித பயணிகள் சுமார் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மர்தி ஐஸ் பாயிண்ட் என்ற இடத்தோடு திரும்பி விடுவார்கள். ஆனால் பனியினை அதன் சுத்தமான அழகோடு (virgin beauty) பார்க்க விரும்பினால், மர்தியை 6 மணிக்குள்ளாக கடந்து விட வேண்டும். அதற்கு பிறகு அனுமதிக்க மாட்டார்கள்.

4 மணிக்கே கிளம்புவதற்கு காரணம் அதுமட்டுமல்ல. ரோடங்கில் முதல் பத்து வண்டிக்குள்ளாக நாம் போனால்தான் ரோடங் அருகே நிறுத்த இடம் கிடைக்கும்.

‘ரோடங்’கின் அழகு!

போய்த்தான் பாருங்களேன்...தற்பொழுதுக்கு புகைப்படத்தை அழுத்தி பெரிதாக்கிப் பார்க்கலாம்.

அது இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து!!!


(ZERO POINT...அந்தப் பக்கம் இறங்கினால்...லடாக் சென்று விடலாம்.











காலையில் முதல் ஆளாக சென்றால், ரோடங் முழுவதும் விலங்கினங்களின் கால்தடங்கள்!


-oOo-

ஞாநியைத் தொடருவது சுவராசியமாகத்தான் இருக்கிறது. ‘இந்தியாவில் ஓரின உறவு சட்டப்படி இன்னமும் குற்றமாக இருந்து வருகிறது’ என்பவர் அடுத்து ‘பலதார மணமும் இந்து(ச்) சட்டப்படி குற்றம்தான்’ என்கிறார்.

அப்படியா?

மதுரை
040708

30.12.07

பயணம் 1 - வேட்டங்குடி


Vettangudi Birds Sanctuary

மதுரை - மேலூர் - திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். அதிக அளவில் பிரபலமாகாத இந்த சரணாலயத்திற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு இருநாட்களுக்கு முன்பு போனது நல்ல அனுபவம்.

பறவைகளைப் பார்ப்பதற்கு வசதியாக உயரமான கண்காணிப்பு கோபுரம் உள்ளது. சரணாலயத்தை ஒட்டி உள்ள குடியிருப்பினை விட வேறு மனித இடையூருகள் இருக்காது. பறவைகளுக்கு தொந்தரவு என, கிராம மக்களும் தீபாவளிக்கு வெடி கூட வெடிப்பதில்லை.


Rest in Nest

மதுரை மேலூர் 30கி.மீ. பின்னர் மேலூரிலிருந்து சுமார் 25கி.மீ ரம்மியமான சாலையில் பயணம் செய்தால், வேட்டங்குடி வந்துவிடும். ஆனால், வழியில் ரொட்டித்துண்டினை பாதியாக வெட்டியது போன்று குன்றுகளை அறுத்து கிரானைட் கற்பாளங்களாக மாற்றுவதை காணும் அவலத்தினை தவிர்க்க இயலாது!



Ascent

கடைகள் ஏதும் இல்லை என்பதால், உணவுப் பொருட்களும், தண்ணீரும் கொண்டு செல்வது நல்லது. பிளாஸ்டிக் தவிர்க்க இயலாது எனில், கையுடன் திரும்பக் கொண்டு வந்து விடவும்.


Descent

படங்களை பெரிதாக பார்க்க, படத்தின் மீது க்ளிக்கவும்!