19.10.09

ஞாநி, கருணாநிதி மற்றும் உச்சநீதிமன்றம்

கட்டாய உடலுறவு கொள்ள (கற்பழிக்க) முயற்சிப்பது பெரும் குற்றம் அல்ல என்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சின்கா, பண்டாரி ஆகியோர் தீர்ப்பளித்திருப்பது இ.வா.அதிர்ச்சி. இந்தியன் பீனல் கோட் 511-ம் பிரிவின் கீழ் கொலை முயற்சிதான் குற்றம். ஆனால், வன்புணர்ச்சி முயற்சி குற்றமாகாது. கற்பழிப்புக்கான செக்ஷன் 376-ன் கீழும் முயற்சியைக் குற்றம் சாட்ட முடியாது என்றனர் நீதிபதிகள். ஜார்கண்ட் மாநிலத்தில் தாரகேஸ்வர் சாஹே என்பவர் 12 வயது சிறுமியுடன் கட்டாய உறவுகொள்ள முயன்றார். செக்ஷன் 354-ன் கீழ் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் (மாடஸ்டி) குலைத்ததாக மட்டுமே தாரகேஸ்வரரைக் குற்றம் சாட்டலாம் என்று தீர்ப்பு தரப்பட்டது!


பத்தி எழுத்தாளர் ஞாநி தனது சட்ட அறிவினை வெளிச்சம் போட்டுக் காட்டும் மற்றொரு பதில்!

முதலாவது வன்புணர்வுக்கு முயற்சிப்பது பெரும் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாரகேஸ்வர் சாஹே வழக்கில் கூறவில்லை. இரண்டாவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 511ன் கீழ் கொலை முயற்சி குற்றம் என்று குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் எங்கும் குறிப்பிடவில்லை. மூன்றாவது 376ம் பிரிவின் கீழ் முயற்சியை குற்றம் சாட்ட முடியாது என்றும் நீதிபதிகள் கூறவில்லை. நான்காவது, சாஹே கட்டாய உறவு கொள்ள முயன்றார் என்று நிரூபிக்க தகுந்த சாட்சிகள் இல்லை என்பதை ஞாநி அறியார். ஆயினும் நேரில் பார்த்தது போல முயன்றார் என்று எழுத துணிகிறார்.

உண்மையில், ஞாநி அந்த தீர்ப்பை படிக்கவில்லை. ஆனால் தீர்ப்பைப் பற்றி இந்தியன் எக்சுபிரசு இதழில் வந்த செய்தியினை படித்திருக்கிறார். அந்த செய்தியில் குறிப்பிடப்படும் 511, 376 மற்றும் 354 ஆகிய பிரிவுகளை ஞாநி, அது என்ன என்று புரியாமலேயே தனது வாசகர்களுக்கு எடுத்து ஊட்டியுள்ளார்.

தமிழ் பத்தி எழுத்தாளர்களின் தரம் இந்த அளவுக்கு, திண்ணையில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிக்கும் அளவிற்கு தாழ்ந்து இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை!

-oOo-


சாஹே என்பவர் ஒரு சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்றார் என்று குற்றம் சாட்டப்படுகிறார். வன்புணர்வு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375ல் விளக்கப்படுகிறது. சாஹே மீதான குற்றம் அப்படி முயற்சித்தார். பிரிவு 511 என்பது எந்த ஒரு குற்றத்தையும் செய்ய முயற்சித்தால், அந்த குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி வழங்கப்படலாம் என்று கூறும் பிரிவு. எனவே சாஹே குற்றம் சாட்டப்பட்டது 375 மற்றும் 511ன் கீழ்.

ஆனால் கொலை முயற்சிக்கு மட்டும் தனியே பிரிவு உள்ளது. பிரிவு 307ன் படி கொலை முயற்சிக்கு 10 வருடம் தண்டனை வழங்கலாம் என்று உள்ளதால், கொலை முயற்சிக்கும் 511க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

சாஹே வழக்கின் சாட்சிகளை பரிசீலித்த நீதிபதிகள், வன்புணர்வு கொள்ள முயற்சித்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால், சாட்சிகள் சாஹே சிறுமியை மானபங்கப்படுத்தியுள்ளார் (outraging the modesty of a woman) என்பதை நிரூபிக்க போதுமான சாட்சிகள் உள்ளன என்று கூறி அதற்கான பிரிவு 354ன் கீழ் சாஹேயை தண்டித்துள்ளனர்.

-oOo-

வ்ன்புணர்வின் முக்கிய கூறு பிறப்புறுப்பில், ஆணுறுப்பை நுழைப்பது. எனவே அவ்வாறான் எண்ணமும், அதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு வகையான செயல்களை செய்வது வன்புணர்வாகாது. மாறாக பிரிவு 354ன் கீழ் வரும்.

இப்பொழுது மீண்டும் ஞாஞியின் பதிலினை படித்தால் எவ்வளவு தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்பது புரியும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இணையத்தில் கிடைக்கிறது. கொஞ்சம் நேரம் செலவழித்து படித்திருந்தால், இப்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது அபாண்டமாக பழி சுமத்தியிருக்க மாட்டார்...

-oOo-

ஆயினும் நீதிமன்ற அவமதிப்பு புரிந்துள்ளார் என்று போட்டு கொடுக்க மாட்டேன்.  ஆனால் ஞாஞி ஒன்றுமே இல்லாத விடயத்தில் சட்ட வல்லுஞர் போல நீதிமன்ற அவமதிப்பு என்கிறார்....அவமதித்தவர் கருணாநிதி அல்லவா?




நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்படுகிறார் என்று கூறுவதற்கும் நீதிமன்றத்தால் இழுத்தடிக்கப்படுகிறார் என்று கூறுவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு!

முதலாவது அரசு (காவல்துறை) மீதான விமர்சனம். இரண்டாவது நீதிமன்றம் மீதான விமர்சனம். ஆனால் இரு விமர்சனம் ஒருவர் வைப்பதற்கு நமது நாட்டில் உரிமை உண்டு. அதனை அவமதிப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாது.

கருணாநிதி கூறியது முதலாவது வகை. ஆயினும் அவரது பதிலினை படிக்கும் யாருமே, கேள்விக்கு பொருத்தமில்லாத பதிலினை கூறியிருக்கிறார் என்று கூறுவார்களே தவிர நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்று கூற மாட்டார்கள்.

ஆனால், ஞாஞிக்கு கருணாநிதி என்றாலே நிதானம் தவறி விடுகிறது.


-oOo-


நீதிமன்ற அவமதிப்பு என்பதே ‘பேச்சுரிமையை பாதிக்கும் ஒரு சட்டம் என்று முற்போக்குவாதிகளால் விமர்சனம் வைக்கப்படும் காலத்தில், ஞாஞி நீதிம்னற அவமதிப்பு பூச்சாண்டி காட்டுவது அபத்தமாக உள்ளது.

அது சரி, வன்புணர்வை சரி கட்டாய உடலுறவை ‘கற்பழிப்பு என்று குறிப்பிட்டு விளக்குபவர்கள் முற்போக்குவாதிகளாக இருக்க முடியாதுதான்.

மதுரை
19/10/09

17.10.09

சோனியாவை முந்திய கருணாநிதி!





ஆனந்த விகடன், குமுதம் மூலம் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பத்தி எழுத்தாளரான ஞாநி, தனது இணையதளத்தில் அளித்த ஒரு பதிலில் மேற்கண்ட கருத்தினை தெரிவித்துள்ளார்.

ஞாநி சட்டம் பற்றி எழுதும் பத்திகளில், ‘முழுமையான ஆய்வினை மேற்கொள்கிறாரா?’ என்ற எனது சந்தேகம் மேலும் வலுப்பெறும் வண்ணம், மேற்கண்ட பதிலிலும், தவறான சில கருத்துகளை கூறியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை பதில் முழுவதுமே தவறானது. நமது அரசியலமைப்பு சட்டம் வருவாய் தரக்கூடிய அரசுப் பணியில் இருப்பவர்கள் மட்டுமே பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதையோ அல்லது பதவி வகிப்பதையோ தடை செய்கிறது. (Art 102(1) (a) & 191) மற்ற பணி அல்லது சுயதொழில் மூலமாக வருவாய் ஈட்டுபவர்கள் பதவி வகிக்க எந்த தடையுமில்லை.

தனியார் பணி என்று கூட இல்லை, நகராட்சியில் கணக்காளராக உதவி கணக்காளராக பணியாற்றும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. (1985 (1) SCC 151 Ashok Kumar Bhattacharyya Vs Ajoy Biswas)

ஏன், தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தில் (Employees State Insurance Corporation ESI) மருத்துவராக பணியாற்றுபவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் ESIல் பணிபுரிவது அரசுப் பணியல்ல என்று கூறி அனுமதித்தது.

அடுத்த தவறு, இந்த தடையின் நோக்கம், ஞாநி கூறுவது போல ‘எம்.பி. பணி என்பது மக்களுக்கான சேவை’ என்பது அல்ல. மாறாக சட்டமன்ற ஊழியராக இருப்பவரின் கடமைகளை அவரது சொந்த நலன்கள் பாதிக்கக் கூடாது என்பதுதான் என்றும் மேற்கண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக் காட்டப்படுகிறது.

மூன்றாவது தவறு தேவையில்லாமல், அம்பேத்கரையும் துணைக்கு அழைத்தது. மேற்கண்ட தடையினைப் பற்றிய எவ்விதமான விவாதமும் இல்லாமலேயே அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு அதனை ஏற்றுக் கொண்டது. எனவே அம்பேத்கர் அந்தப் பிரிவினைப் பற்றி என்ன கருதினார் என்பதும், ஞாநி எங்கே படித்தார் என்று விளங்கவில்லை.

எனவே சட்டமன்ற உறுப்பினர் பதவியினை ஒருவர் இழப்பதற்கு, அவருக்கு வேறு வருவாய் இருந்தால் மட்டும் போதாது. அந்த வருவாய் அரசுப் பணியில் இருப்பதால் ஈட்டப்பட்டால் மட்டுமே, தகுதியிழக்க முடியும்!

-oOo-


அதே வலைத்தளத்தில் காணப்படும் மற்றொரு பதில்!

எனக்கென்னவோ இந்தப் பதிலுக்காகவே, கேள்வி வடிவமைக்கப்பட்டதாக தோன்றுகிறது. இந்த பதிலினை எழுதியது தங்கபாலு என்றால் தவறு என்று கூறியிருக்க மாட்டேன். ஆனால், வாசகர் தெளிவு பெறுவதற்காக இந்தப் பதிலினை கூறும் தோரணையில் ஞாநி எழுதியிருப்பதால், சில விளக்கங்களை அளிக்க வேண்டியதிருக்கிறது.

இந்திய விடுதலைக்கு மகாத்மா காந்திதான் காரணம் என்று கூறுவதே எவ்வளவு தூரம் பொருத்தமானது என்று தெரியவில்லை. மவுண்பேட்டன்தான் காரணம் என்று கூறினால் அபத்தம். குடும்ப வன்முறை சட்டம் மகாத்மா வகை என்றால், தகவல் அறியும் சட்டம் மவுண்ட்பேட்டன் ரகம்!

தகவல் அறியும் சட்டத்தின் வரலாறு 1966ம் ஆண்டு இந்தியாவும் கையெழுத்திட்ட ‘சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்’ (International Covenant on Civil and Political Rights) என்பதில் இருந்து தொடங்குகிறது, அடுத்து 1975ம் ஆண்டில் இந்திராகாந்தி தேர்தல் வழக்கில் ராஜ் நாராயணன் கேட்ட சில விபரங்களை அளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம், இந்தற்கான தேவை வலுப்பெற்றது.

பின்னர் பல்வேறு முயற்சிகள். உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்புகளில் சர்வதேச ஒப்பந்தங்களை மதிப்பதின் அவசியத்தினை வலியுறுத்தியது (AIR 1997 SC 3011, AIR 1999 SC 625)

2000ம் ஆண்டில் வாஜ்பாய் அரசால் Freedom of Information Bill 2000, தாக்கல் செய்யப்பட்டது 2002ம் ஆண்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றாலும், சில குறைபாடுகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆயினும் அந்த காலகட்டத்திலேயே, ராம் ஜேத்மலானி அரசு உத்தரவு மூலம் தகவல்களை பெற வழி செய்தார். ஆனால் அதிகாரிகளின் ஒத்துழையாமையால் அதுவும் முழுமை பெறவில்லை.

இறுதியில், மன்மோகன்சிங் பிரதம மந்திரியானதும், தற்பொழுதுள்ள தகவல் அறியும் சட்டம்’2005 நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் சோனியாவின் பங்கு, அவர் தலைமையில் இயங்கிய தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) இந்த சட்டதினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது.

-oOo-

இந்தியாவிற்கு முன்னதாகவே 55 நாடுகள் இந்த சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டன. முக்கியமாக பாக்கிஸ்தானில் 2002ல் அவசர சட்டம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே, இந்தியாவில் இந்த சட்டமானது காலத்தின் கட்டாயம் என்றுதான் கூற முடியுமே தவிர, சோனியாவுக்கு இதற்கான பாராட்டுதலை ஒரு அரசியல்வாதி தெரிவிக்கலாம்....பத்திரிக்கையாளர் தெரிவிக்க முடியாது.

ஞாநிக்கு உவப்பில்லாத மற்றொரு செய்தியும் இருக்கிறது. தமிழ்நாட்டில் தகவல் அறியும் சட்டம் 1997ம் ஆண்டு கருணாநிதி அரசால் இயற்றப்பட்டு அமுலில் இருந்து வருகிறது. தமிழக தகவல் அறியும் சட்டம்தான் இந்தியாவின் முதல் சட்டம். 1998ம் ஆண்டில் கோவாவில் இயற்றப்பட்டது. பின்னர்தான் மற்ற பல மாநிலங்களில்.

சோனியாவுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே கருணாநிதி, தகவல் அறியும் சட்டத்தினை இங்கு நடைமுறைப்படுத்திவிட்டார் என்பதற்காக ஞாநி கருணாநிதிக்கு பூச்செண்டை கொடுப்பாரா?

மதுரை
17/10/09

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஏன், விளையாட்டு மூலம் வருவாய் ஈட்டும் Professional Sportsperson களை தடை செய்யும் விதி ஏற்ப்படுத்தப்பட்டது தெரியுமா?






14.10.09

‘ஒரு பெண்’ என்றா தேடுவார்கள்?

நான் அடிப்படையில் ஒரு உரிமையியல் (civil) வழக்குரைஞர். குற்றவியல் வழக்குகளில் அவ்வப் பொழுது பங்கு கொண்டாலும், அவை பெரும்பாலும் காசோலை மோசடி, நில மோசடி போன்ற உரிமையியல் பிரச்னைகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரு கொலை வழக்கையாவது நடத்த வேண்டுமென்பதுதான் எனது உச்சகட்ட குற்றவியல் லட்சியம்!

மதுரை வந்த பொழுதில், மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீடு ஒன்றினை நடத்தித் தர வேண்டுமென்று, ஜூனியர் ஒருவர் கேட்கவும் உற்சாகமாக ஏற்றுக் கொண்டேன்.

குற்றம் சாட்டப்பட்டவர்...ம் வசந்தன் என்று வைத்துக் கொள்ளலாம். நகர பேருந்தில் பயணி. தனது இடம் வந்ததும், பேருந்தை நிறுத்த கேட்டுக் கொள்கிறார். நடத்துநர் அது விரைவுப் பேருந்து என்று அடுத்த நிறுத்தத்தில்தான் நிறுத்துகிறார். எரிச்சலுற்ற வசந்தன் இறங்கும் பொழுது படியில் நின்று கொண்டிருந்த நடத்துநரை தள்ளிவிட்டு இறங்கிச் சென்று விட்டார். தடுமாறி கொஞ்சம் ஏடா கூடமாக கீழே விழுந்த நடத்துநரின் விலா எலும்பு ஒன்று உடைந்து விட்டது.

நடத்துநரை கீழே தள்ளிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குச் சென்று விட்ட வசந்தன், அடுத்த நாள் செய்தித்தாளில் ‘பயணியால் தாக்கப்பட்ட நடத்துநர் மருத்துவமனையில் அனுமதி’ என்று பெட்டிச் செய்தியை துரதிஷ்டவசமாக பார்க்க நேரிட்டது. குற்ற உணர்வில் ‘அந்த நடத்துநரை தள்ளிவிட்ட நடத்துநர் தான்தான்’ என்று தாயாரிடம் கூற, அவரோ உடனே அரசு மருத்துவமனைக்குச் சென்று, அந்த நடத்துநரையே சந்தித்து தனது மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

நடத்துநருக்கு ஏற்பட்டதோ, இந்திய தண்டனைச் சட்டப்படி கொடுங்காயம் (grevious hurt) குற்றவாளியை எப்படி கண்டுபிடிப்பது என்று இருந்த காவலர்களுக்கு, அவராகவே வந்து மாட்டவும், உடனடியாக பிடித்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்து விட்டனர்.

கொடுங்காயத்துக்கு அதிகபட்ச தண்டனை ஏழு வருடம். குற்றவாளியின் எண்ணப்பாட்டினைப் பொறுத்து தண்டனை வழங்கப்படும். நீதிபதியோ கடுமையானவர். ஏழு வருடம் தீட்டி விட்டார்.

-oOo-

‘இதுக்கெல்லாமா ஏழு வருடம் கொடுப்பார்கள், மனிதத்தன்மையே இல்லையா?’ வழக்கைப் படித்த எனக்கு தோன்றியது இதுதான். ஒரு வருடமென்றாலும் எனக்கு இப்படித்தான் தோன்றியிருக்கும்.

‘சரி, ஏற்கனவே சிறையில் இருந்த சில மாதங்களை தண்டனைக்காலமாக குறைக்கச் சொல்லலாம்’ என்று நினைத்து வழக்கைப் படித்த எனக்கு நியாயமான சந்தேகம் ஒன்று தோன்றியது. சம்பவம் நடந்ததற்குப் பிறகு வசந்தனை, நடத்துநர் சாட்சி விசாரணை பொழுதுதான் பார்க்கிறார். பின்னர் எப்படி, வசந்தநன்தான், நடத்துநரை தாக்கியவர் என்று காவலர்கள் கண்டுபிடித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்? என்ற சந்தேகம்தான் அது.

காவலர் வழக்குகளை சோடிக்கத்தான் செய்வார்கள். வசந்தனின் தாயார் நடத்துநரைப் பார்த்த விபரமெல்லாம் இல்லாமல் அவர்களாகவே வசந்தனை கண்டுபிடித்த மாதிரித்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவரும், தாக்குபவரும் முன்பின் அறிமுகம் ஆகாத நபராக இருக்கும் பட்சத்தில், காவலர்கள் தாக்கியவர் என்று ஒருவரை கைது செய்தவுடன் ‘identification parade’ நடத்துவது அவசியமானது.

மேல்முறையீட்டில், இந்த ஒரு கருத்தை வைத்தே எனது வாதத்தை வடிவமைத்த நான், இறுதியில் குற்றம் செய்யப்பட்டதாகவே இருப்பினும், இத்தகைய ஒரு செயலை நாம் அனைவருமே நமது வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் செய்யக் கூடியவர்களாகவே இருக்கிறோம். நமது அதிஷ்டம், நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைவதில்லை...அமைந்தாலும் விலா எலும்புகள் எப்பொழுதுமே உடைவதில்லை. இந்தச் செயலுக்கு ஏழு வருடம் என்பது நியாயமா? என்றும் ஒரு கேள்வியை வைத்தேன்...

ஒரு வாரம் கழித்து ஜூனியர் என்னைச் சந்தித்து, ‘சார், அப்பீலில் வசந்தனை முழுசா விடுவிச்சிட்டாங்க’ என்று கூறிய பொழுது தரையிலிருந்து எழும்பி கொஞ்சம் உயரத்தில் பறப்பது போல இருந்தது.

-oOo-

மணற்கேணி வலைப்பதிவுகளை தெரிந்தோ அல்லது தெரியாமலோ கண்ணுறுபவர்களைப் பற்றிய புள்ளிவிபரங்களை தரும் வலைத்தளத்தில், மிகுந்த சுவராசியத்துடன் நான் பார்ப்பது, ‘தேடுபொறியில் எந்த வார்த்தையினைத் தேடி மணற்கேணிக்கு வருகிறார்கள் என்பது’.

இரு நாட்களுக்கு முன்னர், ‘ஒரு பெண்’ என்ற இரு வார்த்தைகளை கூகிளில் தேடி இங்கு வந்திருக்கிறார் ஒரு நபர். பெண் என்று தேடலாம், ஒரு என்று கூட தேட வாய்ப்பு உண்டு. ‘ஒரு பெண்’ என்றா தேடுவார்கள்?

எந்த நோக்கத்தில் ஒருவர் ‘ஒரு பெண்’ என்ற வார்த்தைகளை கூகுளில் தேடியிருக்கக்கூடும்?. பொழுது போகாத நேரங்களில், இந்தக் கேள்விக்கான விடையினை தேட முயல்வதுதான் தற்பொழுது எனது பொழுது போக்கு.

-oOo-


நேற்று மூத்த வழக்குரைஞர் ஒருவர், ‘எதற்காக சென்னை மியூசிக் அகாடெமியில் மலையாளிகளை வேலைக்கு வைப்பதில்லை தெரியுமா?’ என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை. அவர் சொன்ன பதில்...மெக்ஸிகோ சலவைக்காரியெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

நீங்களும் பொழுது போகாத நேரங்களில் யோசித்துக் கொண்டிருந்தால் கண்டுபிடித்து விடலாம்.

எனக்கும் பல சமயங்களில் தோன்றும். ‘இங்கே கவிஞர், எழுத்தாளர் என்று பீற்றிக் கொள்கிறார்களே. sixக்கும்  sexக்கும் என்ன வித்தியாசம்? என்று ஒரு நண்பர் கேட்டு அதுக்கு ஒரு பதில் சொன்னாரே, அந்த கிரியேட்டிவிட்டி முன்னால இவங்க கற்பனையெல்லாம் தூசுன்னு’

யார் சொல்லியிருப்பா, இத முதல்லன்னு இப்ப யோசிச்சுட்டு இருக்கேன்!

மதுரை
141009