Showing posts with label rape. Show all posts
Showing posts with label rape. Show all posts

1.3.11

'விவேக்'(கமற்ற) நீதி!

உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மீண்டும் ஒரு பிரச்சினையை அவரைச் சுற்றி உருவாக்கியுள்ளார். இதுவும் பெண்ணுரிமை அமைப்புகளை கோபம் கொள்ளச்செய்யும் ஒரு செயல் என்றாலும், அதிஷ்டவசமாக அநேகரால் கண்டுகொள்ளப்படாமல், வெறும் பத்திரிக்கைச் செய்தியோடு முடிந்து போய் உள்ளது.


1997ம் ஆண்டு இளம் பெண் ஒருவர் மூன்று நபர்களால் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார். குற்றத்தை விசாரித்த நீதிமன்றம் 10 ஆண்டுகள் தண்டனை விதித்தது. கூட்டு வன்புணர்வுக்கு (Gangrape) குறைந்தபட்ச தண்டனையே 10 ஆண்டுகள். பொதுவாக, தண்டனை சட்டங்களில் அதிகபட்ச தண்டனைதான் குறிப்பிடப்படும். வன்புணர்வு குற்றம் விதிவிலக்கு!

பின்னர் உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்ய, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நீதிபதிகள் கட்ஜு மற்றும் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்குள் 14 ஆண்டுகள் கழிந்து விட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர் திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயாகியிருந்தார் குற்றவாளிகள் ஏறக்குறைய 31/2 ஆண்டுகள் சிறையில் இருந்திருந்தனர். குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் ஏதோ சமரசம் ஏற்ப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

மேற்கண்ட காரணங்களை மட்டும் குறிப்பிட்டு, இந்த வழக்கில் பத்து ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை வழங்க போதுமான மற்றும் சிறப்பு காரணங்கள் (adequate and special reasons) இருப்பதாக கூறி, குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் கழித்த 31/2 ஆண்டுகளை அவர்களுக்கான தண்டனையாக கூறி அவர்களை கட்ஜு விடுவித்துள்ளார்.

கூடுதலாக, குற்றவாளிகள் மூவரும் தலா பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50,000/- கொடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கொடுக்காவிட்டால் வருவாய் வசூல் சட்டப்படி வசூல் செய்யப்பட வேண்டுமாம். அதற்குப் பதிலாக உடனடியாக கொடுக்கப்பட்டால் தீர்ப்பு என்றிருந்தால், அங்கேயே கட்டியிருப்பார்கள். இனி, எங்கே போய் அவர்களிடம் வசூல் செய்வது?

வருவாய் வசூல் சட்ட (Revenue Recovery Act) சிக்கல்கள் கட்ஜுவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை!

பிரச்னை அதுவல்ல, மாறாக ‘சுமார் பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிட்ட ஒரு தீர்ப்பில், கூட்டு வன்புணர்வாளர்களுக்கான தண்டனையை 31/2 வருடங்களாக குறைக்க முடியுமா’ என்பதுதான். தீர்ப்பில் கூறப்பட்ட போதுமான மற்றும் சிறப்பு காரணங்கள் உச்ச நீதிமன்றம் வரும் அனைத்து வன்புணர்வு வழக்குகளிலும் இருக்கும்.

சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கடந்து போவதோ பாதிக்கப்பட்டவருக்கு திருமணம் ஆவதோ, அவருக்கு குழந்தைகள் பிறப்பதோ, குற்றவாளிகள் 31/2 ஆண்டுகள் சிறையில் கழிப்பதோ, ஏன் அவர்களுக்குள் சமரசம் ஆவதோ அனைத்து வழக்குகளிலும் உள்ள அம்சம்தான். அப்படியென்றால் அவை எப்படி சிறப்பான காரணங்கள் ஆகும்?

போதுமான காரணம்? நிச்சயமாக கிடையாது.

ஒருவேளை வழக்கில் போதுமான சாட்சிகள் இல்லாது இருக்கலாம். வழக்கை முழுமையாக விசாரித்தால், குற்றவாளிகளை விடுவிக்க வேண்டிய சூழல் இருந்திருக்கலாம். குற்றம் நடைபெற்றதா என்ற சந்தேகம் கூட எழுந்திருக்கலாம். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவருக்கு ஏதேனும் நஷ்ட ஈடு பெற்றுத் தரலாமே என்ற நல்ல எண்ணமும் கட்ஜுவுக்கு இருந்திருக்கலாம்.

ஆனால் இது முறையல்ல. சிரமம் பார்க்காமல் ஐந்து பக்கங்களில் தெளிவான காரணத்தைக் கூறி ஒரு தீர்ப்பினை எழுதியிருக்கலாம். ஆனால் ஐந்து வரிகளில் முடிந்து போன இந்த தீர்ப்பு, மக்களிடையே என்னவிதமான எண்ணத்தை ஏற்ப்படுத்தும்?

‘பணத்தை அட்வான்ஸாக கட்ட வேண்டுமா, அல்லது இன்ஸ்டால்மெண்டில் கட்டினால் போதுமா?’


மதுரை
02/03/11

12.11.10

கோயம்புத்தூர் டுமீல்! டுமீல்!!

2008ம் ஆண்டு வாரங்கல்லில் பொறியியற் கல்லூரி மாணவி ஸ்வப்னிகாவும் அவளது நண்பியும் மூன்று இளைஞர்களால் அமிலத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 21 நாட்கள் போராடிய ஸ்வப்னிகா மரித்துப் போனார். ஆனால் அதற்கு முன்பாகவே, கைது செய்யபப்ட்ட மூன்று இளைஞர்களும் புலன் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சென்ற காவலர்களை தாக்க முயன்றதாக கூறி, சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆந்திர மக்களின் கோபம் கைதிகள் கொல்லப்பட்டதால் தணிக்கப்பட்டது.


***

2010ம் ஆண்டு கோயம்புத்தூரில் 9 வயது முஸ்கானும் அவளது தம்பியான ரித்திக்கும் வாகன ஓட்டியால் பணத்துக்காக கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்து சில நாட்களில் புலன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி மோகன்ராஜ் காவலரை தாக்க முயன்றதாக கூறி, சுட்டுக் கொல்லப்பட்டார்.

***

1978ம் ஆண்டு புது தில்லியில் கீதா சோப்ரா என்ற 16 வயது சிறுமியும் அவளது தம்பியானா சஞ்சய் சோப்ரா என்ற 14 வயது சிறுவனும் பில்லா, ரங்கா என்ற இருவரால் பட்டப்பகலில் கடத்தப்படுகிறார்கள். கடத்திய கார் விபத்துக்குள்ளாக, குழந்தைகள் இருவரும் கொல்லப்படுகிறார்கள். தில்லி மட்டுமல்லாமல் இந்தியாவே இந்தச் செயலைப் பார்த்து அதிர்ந்தது. கொலைகாரர்கள் மீதான வழக்கு விரைந்து நடத்தப்பட்டு 1982ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்கள்.


***

1990ம் ஆண்டு கொல்கத்தாவில் 14 வயது ஹீதல் பரேக் என்ற சிறுமி தனஞ்சய் சட்டர்ஜி என்ற வீட்டு பாதுகாவலரால் பலாத்காரப்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறாள். கொல்கத்தா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்ப்படுத்திய இந்தச் செயலுக்காக வழக்கு தொடரப்பட்டு 2004ம் ஆண்டில் தனஞ்சய் தூக்கிலிடப்பட்டார்.

***

2000ம் ஆண்டு தர்மபுரியில் கல்லூரி பேருந்து ஒன்று அரசியல் போரட்டத்தில் எரிக்கப்பட்டது. மூன்று விவசாயக் கல்லூரி மாணவிகள் இறக்க நேரிட்டது. தமிழகத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்ப்படுத்திய இந்தக் குற்றத்திற்கு 2007ம் ஆண்டில் விசாரணை நீதிமன்றத்தால் மூன்று குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு 2010ல் உறுதி செய்யப்பட்டுள்ளது.


***

1998ம் ஆண்டு சென்னையில் சரிகா ஷா என்ற 20 வயது கல்லூரி மாணவி இளைஞர்கள் சிலரின் சீண்டலில் இருந்து தப்பிக்க முயன்றதில், விபத்தில் பலியானார். தமிழகமே கொந்தளித்தது. கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டது. தமிழ்நாடு அரசு பெண்களை சீண்டுவதற்கு எதிரான கடுமையான சட்டம் பிறப்பித்தது.


***

1999ம் ஆண்டு புது தில்லியில் ஜெஸிக்கா லால் என்ற மாடல் உயர் ரக கேளிக்கை விடுதி ஒன்றில் மனு சர்மா என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆங்கில ஊடகங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்ப்படுத்திய இந்தச் செயலுக்காக மனு சர்மா கைது செய்யபப்ட்டாலும், விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஊடகங்கள் கொந்தளித்தது. பின்னர் தில்லி உயர்நீதிமன்றம் மனு சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து, உச்சநீதிமன்றத்தால் 2010ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.

மனு சர்மா, முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் பேரன்.

***

1996ம் ஆண்டு புது தில்லியில் பிரியதர்ஷினி மட்டூ என்ற 25 வயது சட்டக் கல்லூரி மாணவி பலாத்காரப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சந்தோஷ்குமார் சிங் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஊடகங்கள் கொதித்து எழுந்தது. தில்லி உயர்நீதிமன்றம் சந்தோஷ்குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. அக்டோபர் 2010ல் உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.


சந்தோஷ்குமார் சிங்கின் தந்தை பாண்டிச்சேரியின் காவல் துறைத் தலைவராக இருந்தவர் (IG of Police).

***

1990ம் ஆண்டு சண்டிகரில் ருசிகா கிர்கோத்ரா என்ற 14 வயது சிறுமி பிரதாப் சிங் ரத்தோர் என்பவரால், டென்னிஸ் பயிற்சியின் போது சீண்டப்படுகிறார் (molest). பின்னர் ரத்தாரால் ருசிகாவின் குடும்பம் பலவித இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதியாக 1993ல் ருசிக்காவின் சகோதரர் பொய்வழக்கு ஒன்றில் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்தரவதைக்குள்ளாக்கப்படுகிறார். மனமுடைந்த ருசிகா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ருசிகா தற்கொலை செய்து கொண்ட அன்று ரத்தோர் கேளிக்கை விருந்து ஒன்றின் மூலம் கொண்டாடுகிறார். சிலமாதங்களில் அவர் ஹரியானா மாநில காவல்துறை கூடுதல் தலைவராக பொறுப்பு ஏற்கிறார். பின்னர் அவர் மாநில காவல் துறை தலைவராகவும் பொறுப்பு ஏற்றார்.

1998ல் ருசிகா வழக்கினை விசாரிக்க சி பி ஐக்கு உத்தரவிடப்பட்டது. டிசம்பர் 2009ல் ரத்தோருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஊடகங்கள் பெரிய அளவில் இதனை செய்தியாக்க மேல் முறையீட்டில் தண்டனை 18 மாதங்கள் என அதிகரிக்கப்பட்டு முதல் முறையாக ரத்தோர் சிறைக்கு அனுப்பப்பட்டார். 11/11/10 அன்று உச்ச நீதிமன்றம் ரத்தோரை பிணையில் விடுவித்துள்ளது.

ருசிகாவின் தந்தை ரத்தோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்.

***

2006ம் ஆண்டில் நோய்டாவில் 7 வயது முதல் 12 வயது வரையிலான பல (எழைக் குழந்தைகளை பாலியல் பலாத்காரப்படுத்தி கொன்றதாக மனிந்தர் சிங் பாந்தர் என்ற தொழிலதிபர் மீதும் கோலி என்ற அவரது வேலையாள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. 2009ல் விசாரணை நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. சில மாதங்களில் உயர்நீதிமன்றம் பாந்தரை விடுதலை செய்தது. வேலையாள் கோலி மீதான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. பாந்தர் மீது மேலும் 5 கொலை வழக்குகள் உள்ளன.


ஏறக்குறைய 40 குழந்தைகள் அந்தப் பகுதியில் 2005 முதல் 2007 வரை காணாமல் போயிருக்கின்றன. அந்தக் குழந்தைகளின் படங்கள் கிடைக்கவில்லை…


தொழிலதிபர் பாந்தர் காவலர்களின் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்வதாக, தெகல்கா மட்டும் சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

***

பிப்ரவரி’ 2008. பட்டாலா மாவட்டம், பஞ்சாப். தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தலித் சிறுமி சோனு மாஸி, பிந்தா மாஸி என்ற இரு சகோதரர்களால், கடத்தப்பட்டு பலாத்காரப்படுத்தப்பட்டு கொன்று விட்டனர். காவலர்கள் சகோதரர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


நவம்பர்’2008. கான்பூர் மாவட்டம். உத்தர பிரதேசம். 16 வயது தலித் சிறுமி மூன்று இளைஞர்களால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். புனீத், சுனில், நரேஷ் என்ற இளைஞர்களை காவலர்கள் தேடி வந்தனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


ஆகஸ்ட்’2009. பீட் மாவட்டம், மஹாராஷ்டிரா. சுமிதா பவார் என்ற 15 வயது தலித் சிறுமி கோவில் அர்ச்சகர் மற்ற இருவரால் பலாத்காரப்படுத்தப்பட்டார். காவலர்கள் வழக்கினை பதிவதற்குப் பதிலாக, சுமிதாவை அடித்து துன்புறுத்தினர். தற்பொழுது, வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு விபரம் தெரியவில்லை.


செப்டம்பர்’2009. கேந்தரபாரா, ஒரிஸ்ஸா. 16 வயது தலித் சிறுமியை பணம் கேட்டு கடத்திய காந்தியா மாலிக் அவளை பலாத்காரப்படுத்தி பின்னர் அந்த சிறுமியின் பெற்றோரின் கண் எதிரிலியே அவளை உயிரோடு எரித்துக் கொன்றார். சிறுமியை கடத்திய பின்னர் புகாரினை விசாரிக்க மறுத்த காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாலிக்கை காவலர்கள் தேடி வருகின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


செப்டம்பர்’ 2010. நீல்கிரி, ஒரிஸ்ஸா. 6 வயது தலிச் சிறுமியை அவரது 20 வயது உறவினர் கடத்திச் சென்று பலாத்காரப்படுத்தி கொன்று விட்டார். ஊர்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விபரம் தெரியவில்லை.


செப்டம்பர்’ 2010. கான்பூர் மாவட்டம். உத்திரபிரதேசம். 15 வயது தலித் சிறுமி இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த புகாரை வாங்க மறுத்ததால், சிறுமி தற்கொலை செய்து கொண்டார். தற்பொழுது வழக்கு பதிவு செய்து இளைஞரை காவலர்கள் தேடி வருகின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.




செப்டம்பர்’ 2010. மாண்ட்லா, மத்திய பிரதேசம். ஆறு இளைஞர்கள் 14 வயது தலித் சிறுமியை கடத்திக் கொண்டு போய் பலாத்காரம் செய்து, அதனை செல்லிடைப் பேசியில் படம் பிடித்து சுற்றில் விட்டனர். அதன் மூலம் குற்றம் வெளியே தெரிய வந்து கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


ஏப்ரல்’2010. புது தில்லி. தன்னிடம் பாடம் படித்த 8 வயது தலித் சிறுமியை பலாத்காரப்படுத்தி கொன்ற டியூசன் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற அரசு தரப்பு வாதம் ‘இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு இல்லை’ என்று நிராகரிக்கப்பட்டது


***

ஏன் இவை அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்று சந்தேகம் கொள்பவர்கள், கூகுளில் “Minor Dalit, Rape, Murder” என்ற வார்த்தைகளை கொடுத்து தேடி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.



மதுரை
121110

19.10.09

ஞாநி, கருணாநிதி மற்றும் உச்சநீதிமன்றம்

கட்டாய உடலுறவு கொள்ள (கற்பழிக்க) முயற்சிப்பது பெரும் குற்றம் அல்ல என்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சின்கா, பண்டாரி ஆகியோர் தீர்ப்பளித்திருப்பது இ.வா.அதிர்ச்சி. இந்தியன் பீனல் கோட் 511-ம் பிரிவின் கீழ் கொலை முயற்சிதான் குற்றம். ஆனால், வன்புணர்ச்சி முயற்சி குற்றமாகாது. கற்பழிப்புக்கான செக்ஷன் 376-ன் கீழும் முயற்சியைக் குற்றம் சாட்ட முடியாது என்றனர் நீதிபதிகள். ஜார்கண்ட் மாநிலத்தில் தாரகேஸ்வர் சாஹே என்பவர் 12 வயது சிறுமியுடன் கட்டாய உறவுகொள்ள முயன்றார். செக்ஷன் 354-ன் கீழ் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் (மாடஸ்டி) குலைத்ததாக மட்டுமே தாரகேஸ்வரரைக் குற்றம் சாட்டலாம் என்று தீர்ப்பு தரப்பட்டது!


பத்தி எழுத்தாளர் ஞாநி தனது சட்ட அறிவினை வெளிச்சம் போட்டுக் காட்டும் மற்றொரு பதில்!

முதலாவது வன்புணர்வுக்கு முயற்சிப்பது பெரும் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாரகேஸ்வர் சாஹே வழக்கில் கூறவில்லை. இரண்டாவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 511ன் கீழ் கொலை முயற்சி குற்றம் என்று குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் எங்கும் குறிப்பிடவில்லை. மூன்றாவது 376ம் பிரிவின் கீழ் முயற்சியை குற்றம் சாட்ட முடியாது என்றும் நீதிபதிகள் கூறவில்லை. நான்காவது, சாஹே கட்டாய உறவு கொள்ள முயன்றார் என்று நிரூபிக்க தகுந்த சாட்சிகள் இல்லை என்பதை ஞாநி அறியார். ஆயினும் நேரில் பார்த்தது போல முயன்றார் என்று எழுத துணிகிறார்.

உண்மையில், ஞாநி அந்த தீர்ப்பை படிக்கவில்லை. ஆனால் தீர்ப்பைப் பற்றி இந்தியன் எக்சுபிரசு இதழில் வந்த செய்தியினை படித்திருக்கிறார். அந்த செய்தியில் குறிப்பிடப்படும் 511, 376 மற்றும் 354 ஆகிய பிரிவுகளை ஞாநி, அது என்ன என்று புரியாமலேயே தனது வாசகர்களுக்கு எடுத்து ஊட்டியுள்ளார்.

தமிழ் பத்தி எழுத்தாளர்களின் தரம் இந்த அளவுக்கு, திண்ணையில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிக்கும் அளவிற்கு தாழ்ந்து இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை!

-oOo-


சாஹே என்பவர் ஒரு சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்றார் என்று குற்றம் சாட்டப்படுகிறார். வன்புணர்வு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375ல் விளக்கப்படுகிறது. சாஹே மீதான குற்றம் அப்படி முயற்சித்தார். பிரிவு 511 என்பது எந்த ஒரு குற்றத்தையும் செய்ய முயற்சித்தால், அந்த குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி வழங்கப்படலாம் என்று கூறும் பிரிவு. எனவே சாஹே குற்றம் சாட்டப்பட்டது 375 மற்றும் 511ன் கீழ்.

ஆனால் கொலை முயற்சிக்கு மட்டும் தனியே பிரிவு உள்ளது. பிரிவு 307ன் படி கொலை முயற்சிக்கு 10 வருடம் தண்டனை வழங்கலாம் என்று உள்ளதால், கொலை முயற்சிக்கும் 511க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

சாஹே வழக்கின் சாட்சிகளை பரிசீலித்த நீதிபதிகள், வன்புணர்வு கொள்ள முயற்சித்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால், சாட்சிகள் சாஹே சிறுமியை மானபங்கப்படுத்தியுள்ளார் (outraging the modesty of a woman) என்பதை நிரூபிக்க போதுமான சாட்சிகள் உள்ளன என்று கூறி அதற்கான பிரிவு 354ன் கீழ் சாஹேயை தண்டித்துள்ளனர்.

-oOo-

வ்ன்புணர்வின் முக்கிய கூறு பிறப்புறுப்பில், ஆணுறுப்பை நுழைப்பது. எனவே அவ்வாறான் எண்ணமும், அதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு வகையான செயல்களை செய்வது வன்புணர்வாகாது. மாறாக பிரிவு 354ன் கீழ் வரும்.

இப்பொழுது மீண்டும் ஞாஞியின் பதிலினை படித்தால் எவ்வளவு தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்பது புரியும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இணையத்தில் கிடைக்கிறது. கொஞ்சம் நேரம் செலவழித்து படித்திருந்தால், இப்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது அபாண்டமாக பழி சுமத்தியிருக்க மாட்டார்...

-oOo-

ஆயினும் நீதிமன்ற அவமதிப்பு புரிந்துள்ளார் என்று போட்டு கொடுக்க மாட்டேன்.  ஆனால் ஞாஞி ஒன்றுமே இல்லாத விடயத்தில் சட்ட வல்லுஞர் போல நீதிமன்ற அவமதிப்பு என்கிறார்....அவமதித்தவர் கருணாநிதி அல்லவா?




நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்படுகிறார் என்று கூறுவதற்கும் நீதிமன்றத்தால் இழுத்தடிக்கப்படுகிறார் என்று கூறுவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு!

முதலாவது அரசு (காவல்துறை) மீதான விமர்சனம். இரண்டாவது நீதிமன்றம் மீதான விமர்சனம். ஆனால் இரு விமர்சனம் ஒருவர் வைப்பதற்கு நமது நாட்டில் உரிமை உண்டு. அதனை அவமதிப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாது.

கருணாநிதி கூறியது முதலாவது வகை. ஆயினும் அவரது பதிலினை படிக்கும் யாருமே, கேள்விக்கு பொருத்தமில்லாத பதிலினை கூறியிருக்கிறார் என்று கூறுவார்களே தவிர நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்று கூற மாட்டார்கள்.

ஆனால், ஞாஞிக்கு கருணாநிதி என்றாலே நிதானம் தவறி விடுகிறது.


-oOo-


நீதிமன்ற அவமதிப்பு என்பதே ‘பேச்சுரிமையை பாதிக்கும் ஒரு சட்டம் என்று முற்போக்குவாதிகளால் விமர்சனம் வைக்கப்படும் காலத்தில், ஞாஞி நீதிம்னற அவமதிப்பு பூச்சாண்டி காட்டுவது அபத்தமாக உள்ளது.

அது சரி, வன்புணர்வை சரி கட்டாய உடலுறவை ‘கற்பழிப்பு என்று குறிப்பிட்டு விளக்குபவர்கள் முற்போக்குவாதிகளாக இருக்க முடியாதுதான்.

மதுரை
19/10/09

3.3.09

தீர்ப்புகள் விமர்சிக்கப்படலாம், முழுவதும் படித்த பின்னர்...




கடந்த மாதம், தில்லி உயர்நீதிமன்றம் ‘பாலியல் பலாத்கார’ வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனைக் காலத்தை 5 1/2 ஆண்டுகளாக குறைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பினை ரத்து செய்ய வேண்டுமென்று மகளிர் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மனுச்செய்யும் அளவிற்கு இந்த தீர்ப்பின் சாரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு, வழக்கம் போலவே இதனைப் பற்றிய செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள்தான் காரணம்.

‘குற்றவாளி இ.ஆ.ப (IAS) தேர்வில் தேர்ச்சி பெற்றதால், பலாத்கார வழக்கின் குற்றவாளியின் தண்டனையை 5 1/2 ஆண்டுக் காலமாக தில்லி உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது’ என்ற வகையிலே பத்திரிக்கை தலைப்புகள், ஏன் செய்தியே வெளியிடப்பட்டது.

நேற்று ‘இந்து’வில் கூட அதிர்ச்சி (shocking) ஏற்ப்படுத்தக்கூடியதாக உள்ளது என்று ஆசிரியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி அலைகள் யாவும், ஒரு குற்ற வழக்கில் தண்டனையளிக்க நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தினை (jurisdiction & discretion) சரிவர ஆராயமல் ஒரு தீர்ப்பினை புரிந்து கொள்ள முயல்வதால் ஏற்ப்படுவது.

வழக்கில் பாதிக்கப்பட்டவர் 21 வயது நிரம்பிய பெண். குற்றவாளி 29 வயது நிரம்பிய ஆண். தன்னிடம் பாடம் படிக்க வந்த பெண்ணை தனது ‘ஆசை வார்த்தைகளால்’ மயக்கி பலமுறை உடலுறவு கொண்டிருக்கிறார். இடையில் தனக்கு ஏதோ காரியம் ஆக வேண்டுமென்று வேறு ஒரு ஒருவரின் ஆசைக்கும் இணங்கச் சொல்லியிருக்கிறார். பின்னர் தான் வாக்களித்தபடி அந்தப் பெண்ணை திருமணம் செய்யாதலால், விரிவாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு அந்தப் பெண் தற்கொலை செய்திருக்கிறார். கீழமை நீதிமன்றம் தற்கொலைக்கு தூண்டுதல், மற்றும் பாலியல் பலாத்காரம் என்ற இரு குற்றங்களுக்காக, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளித்தது.

உயர்நீதிமன்றம் வழக்கின் முழு விபரத்தை அறிந்து குற்றவாளி பாதிக்கப்பட்டவருக்கு ஏற்ப்பட்ட மன உளைச்சலை ஏற்ப்படுத்தியதைத் தவிர தற்கொலையினை நேரடியாக தூண்டவில்லை என்று கூறி தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவிலிருந்து குற்றவாளியை விடுவித்துள்ளது. பின்னர் நடந்து ‘பாலியல் பலாத்காரம்’ என்ற பிரிவில் ஆராய்ந்து சற்றுத் தயக்கத்துடனே குற்றவாளி என்று தீர்மானித்துள்ளது.

தீர்ப்பில் இருந்து பார்க்கையில், பாதிக்கப்பட்டவர் இறப்பதற்கு முன் எழுதிய கடிதமே (suicide note) இந்த வழக்கின் முக்கிய ஆவணமாக உள்ளது. என்னுடைய பார்வையில் அந்தப் பெண் தெள்ளத் தெளிவாக சிந்தித்து, குற்றவாளியை தப்பிக்கவே முடியாத வகையில் சிறைக்குள் தள்ள வேண்டுமென்ற முடிவோடு எழுதியுள்ளது போலத் தெரிகிறது. மற்றொரு நபரின் ஆசைக்கும் இணங்க வற்புறுத்தியதாக கூறியது மட்டும் அந்தக் கடிதத்தில் இல்லையெனில், காதலித்து ஏமாற்றியது என்ற வகையோடு இந்த தவறு நின்றிருக்கும். ஆயினும், இவ்வளவு தெளிவாக மற்ற விடயங்களை எழுதிய அந்தப் பெண், யார் அந்த மூன்றாவது நபர் என்ற விடயத்தை எழுதாமல் விட்டது, அதன் உண்மைத் தன்மையை பற்றிய சந்தேகத்தினை எழுப்புகிறது.

கடிதத்தில் ‘I had to attend to that person and make him happy’ என்று இருப்பினும் வற்புறுத்தப்பட்டார் என்ற அளவிலேயே அரசின் வாதமும் அமைந்தது.

ஆயினும் நீதிபதிகள், குற்றவாளிக்கு முதலிலிருந்தே அந்தப் பெண்ணை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்ற அடிப்படையில் நடந்தது பாலியல் பலாத்காரம் என்று தீர்மானித்துள்ளார்கள். இதுவும் எவ்வளவு தூரம் இதச பிரிவு 375ன் கீழ் வருகிறது என்று தெரியவில்லை.

மேற்கண்ட விடயங்கள், இரு தரப்பினரின் வயது போன்றவற்றை ஆராய்ந்த நீதிபதிகள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை என்பது மிக அதிகம் என்று தீர்மானித்து, அவர் அது வரை சிறையில் கழித்த 5 1/2 ஆண்டுகளை மட்டும் போதுமானது என்று அவரை விடுதலை செய்துள்ளனர்.

நீதிபதிகள் பாலியல் பலாத்காரத்திற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்பதை கருத்தில் கொள்ளவில்லை. ஆயினும், குற்றவாளிக்கு சிறையில் அளிக்கப்படும் தண்டனைக் குறைப்பு (remission) போன்றவற்றை அனுசரித்தே 5 1/2 ஆண்டுகள் என்று கூறுகின்றனர்.

தீர்ப்பினை முடிக்கும் முன்னர், சிறையிலும் தண்டிக்கப்பட்டவர் நல்ல முறையில் நடந்து கொண்டார் என்பதை எடுத்துக் காட்டவே அவர் இஆப தேர்விலும் தேறியுள்ளார் என்று போகிற போக்கில் குறிப்பிடுகிறார்கள்...அவ்வளவுதான், அந்த ஒற்றை வரி ‘ஏதோ இஆப தேர்வில் தேறினால் தண்டனைக் குறைப்பு, அதுவும் வன்புணர்வு குற்றவாளிக்கா?’ என்று கண்டனத்தை ஏற்ப்படுத்தி விட்டது.

தண்டனை எவ்வளவு என்பதை கணிதம் (mathematical precision) மூலம் கூற முடியாது. வழக்கு விசாரணையில் நீதிபதியும் முன் வைக்கப்படும் பல்வேறு காரணிகளை ஆய்ந்து, அவை நீதிபதியிடம் ஏற்ப்படுத்தும் தாக்கத்தினைப் பொறுத்து அமைவது. அவையனைத்தையும், தெளிவாக தீர்ப்பில் கூற முடியும் என்பதும் இயலாதது. எனவே இவ்விதமான ஒற்றைப் பரிமாண விமர்சனங்கள், நீதிபதிகளை தட்டையான தீர்ப்பினைக் கூறும் இயந்திரங்களாக மாற்றி விடக்கூடும்!

நீதிபரிபாலனம் என்பது மூளை மட்டும் சார்ந்த விடயமல்ல...இதயத்திற்கும் கொஞ்சம் பங்கு உண்டு!

மதுரை
03.03.09


நேற்று இந்துவில் வெளிவந்த கடிதத்திற்கு நான் எழுதிய எதிர்வினை...



It is unfair on the part of the press to criticize the Delhi High Court, for its judgment, reducing the sentence of Ashok Rai, convicted for the offence of rape. It seems no one, including your reader who expressed shock in his letter published on 02.02.09 bothers to read the judgment before pouring vitriol on the Learned Judges, who only after weighing the entire circumstances of the case, in their wisdom thought fit to release the convict after 5 ½ years of incarceration. The much maligned observation on the ‘convict qualifying for IAS’ is made only as a passing reference at the end of Judgment to bolster the point that the convict had shown good conduct while in jail. It is another matter whether he is fit or legally entitled to work as a civil servant or not.

Instead, what weighed most in the mind of the Learned Judges was that what had happened between the victim and the culprit was not technically rape but a consensual sex, obtained on a false promise of marriage. The culprit was aged 29 and the victim 21 and had she exhibited a little more strong will, she could have succeeded in bringing the culprit into book, without losing her life. The way in which the suicide note was written, creates a suspicion in my mind that the victim, in a fit of rage and spirit of revenge has laid a well thought out plan to send the cheater for a long period behind the bars. Well, 5 ½ years is not a small period but still the Learned Judges could have stuck to the minimum period of 7 years and leaving the remission period to the concerned authorities.

In any case, it is not correct that convict’s qualifying for IAS was not cited by the Delhi High Court as the only reason for reducing the sentence.