31.3.08

‘ஞாநி’களும் மேற்போக்காக மேய்தலும்...

திருமணத்தை ரத்து செய்வதற்கான உரிமை குரான் விதிகளின்படி இஸ்லாமியப் பெண்களுக்கும் உண்டு என்று அறிவித்து அதற்கான விதிமுறைகளை வெளியிட்டிருப்பதற்காக அனைந்திந்திய முஸ்லீம் சட்ட வாரியத்துக்கு இ.வா.பூச்செண்டு” - எழுத்தாளர் ஞாநி!

‘ஞாநிகளுக்கு எதற்கு அறிவு? என்ற எனது பதிவினை தொடர்ந்து, தனது கருத்துகளை ‘செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்’ என்று தனது வலைப்பதிவில் எழுதிய வெங்கட் “அது பின்நவீனத்துவமோ, மரபு மாற்றமோ, சூடேற்றமோ, சூடான் அரசியல் விவகாரமோ இவர்கள் பல சமயங்களில் மேம்போக்காக மேய்ந்துவிட்டு அடுத்தவாரமே தங்கள் மேதமையை அச்சிலேற்றிவிடுவார்கள்” என்று எழுதியதற்கு ஒரு உதாரணம்தான் மேலே காணும் பூச்செண்டு!

முதலில் ஞாநி குறிப்பிடுவது முஸ்லீம் சட்ட வாரியம் அல்ல. மாறாக முஸ்லீம் பெண்கள் சட்ட வாரியம். அடுத்து மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது விதிமுறைகள் அல்ல. மாறாக, இஸ்லாமியர்களின் திருமண ஒப்பந்தமான நிக்காநாமாவின் வடிவம் (model form).

இஸ்லாமிய சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board) என்பது 1973ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு. ‘அனைத்திந்திய’ ‘வாரியம்’ என்ற வார்த்தைகள் அதன் பெயரில் இருந்தாலு அரசு சார்ந்த ஒரு அமைப்பல்ல. மாறாக பொது சிவில் சட்டம் என்ற அரசின் கொள்கைக்கு எதிரான ஒரு அமைப்பு (pressure group).

2005ம் ஆண்டு நிக்காநாமா இவ்வாறு இருக்கலாம் என்று ஒரு வடிவத்தினை இந்த அமைப்பு வெளியிட்டது. இந்த அமைப்பின் தீர்மானங்கள் இஸ்லாமியப் பெண்களின் பிரச்னைகளை போக்குவதாக இல்லை என்று சில இஸ்லாமியப் பெண்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இஸ்லாமியப் பெண்கள் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board). இரு அமைப்புகளையும் இங்குள்ள இஸ்லாமியர்கள் சீந்துவதில்லை.

இரு வாரங்களுக்கு முன்னர் இந்த பெண்கள் அமைப்பு தனது நிக்காநாமாவை வெளியிட்டது. உடனே, மற்ற நிறுவனத்திடம் இருந்து, தேவையற்றது (irrelevant) என்ற கண்டனம் வந்து விட்டது!

ஆனால் ‘ஞாநி’ நடப்பது என்ன ஏது என்று புரியாமலேயே கண்டனம் தெரிவித்த அமைப்பிற்கு பூச்செண்டைக் கொடுத்துவிட்டார்.

-oOo-

நான் மேலே கூறும் விபரங்கள் அனைத்தும், சிறிது நேரம் செலவழித்து இணையத்தில் தேடினாலேயே கிடைக்கும். எழுதும் விஷயத்தில் சிறு ஆராய்ச்சி கூட செய்ய விரும்பாதவர்கள்தான் இன்றைய தமிழ் பத்தி எழுத்தாளர்கள்.

சாருநிவேதிதா தனது கட்டுரையொன்றில் துருக்கி இந்தியாவை விட மிகவும் ஏழை நாடு என்று குறிப்பிடுகிறார். பின்னர் ஒரு முறை வெறுமே துருக்கியை ஏழை நாடு என்று தனது மற்றொரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டதையும் வாசிக்க நேர்ந்தது.

இந்தியாவிற்கு எதிரான துருக்கியின் பொருளாதார வலிமையினை சுமார் பத்து விநாடி நேரத்தில் இணையத்தில் கண்டுபிடித்து விடலாம். ஆனால், யார் எம்மை கேள்வி கேட்பது என்ற தைரியம்தானே இவ்வாறு இவர்களை எழுத வைக்கிறது.

சுசூகியும், யமாஹாவும் வரும் வரை இந்திய பஜாஜும், ராஜ்தூத்தும் இப்படித்தான் ‘வாகனம் என்றால் இரு சக்கரத்தில் சென்றால் போதும்’ என்ற வகையில் நடந்து கொண்டன. தற்பொழுது அவைகள் இருக்கும் இடம் தெரியவில்லை.

-oOo-

எழுத்தாளர் சுஜாதா கூட இதற்கு விதிவிலக்கல்ல... ‘சுஜாதா வீட்டு லாண்டிரிக்கணக்கை கூட வெளியிடுவார்கள்’ என்று வைக்கப்பட்ட ஒரு விமர்சனத்தை கிண்டல் செய்யும் நோக்கோடு, சாவி இதழ் ஒருமுறை தனது பக்கங்களில் ஒன்றினை ‘லாண்டிரிக் கணக்கு’ ஒன்றினை வெளியிட்டது. யாரையோ நக்கல் செய்கிறோம் என்ற பெயரில், மறைந்த சா.விஸ்வநாதன் காசு கொடுத்து, தனது பத்திரிக்கை வாங்கியவர்களை அவமானப்படுத்தினார்.

அந்நியனுக்காக சுஜாதா செய்த ‘ஆராய்ச்சி’யினை இங்கு குறிப்பிட்டுள்ளேன்!

-oOo-

இறுதியாக தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது குறித்து விவாதங்கள் நடைபெற்ற காலத்தில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ‘தீராநதி’ யில் எழுதிய கட்டுரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைப் பற்றி கூறுவதைப் பார்க்கலாம்

இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. தமிழ் மொழி செம்மொழி என்று கிவிட்டால், அரசியல் சட்டம் எட்டாம் பிரிவின்படி, நவீன இந்திய மொழி என்று அதற்குக் கிடைத்து வரும் உரிமைகளும் சலுகைகளும் பாதிக்கப் படமாட்டா என்பது என்ன நிச்சியம்? ஒரே மொழி இரண்டு தகுதிகளுக்கும் உரியது காது என்று, மனித வள மேம்பாட்டுத் துறை கூறாது என்பது உறுதியா?

எழுத்தாளரின் கட்டுரை ‘ராயர் காபி கிளப்’ என்ற வலைக்குழுமத்தில் விவாதப் பொருளாகிய பொழுது நான் எழுதியது

தேர்ந்த எழுத்தாளரான கட்டுரையாசிரியர், இந்தக் கருத்துக்காக எந்த ஆராய்வின் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார் என்பது புரியவில்லை. அரசியல் சட்டத்தின் எட்டாம் பிரிவில் கண்ட மொழிகள் முதலில் நவீன இந்திய மொழிகள் என்று கூறப்படவில்லை. மேலும் அந்த அட்டவணையில் 14வது மொழி சமஸ்கிருதம். நான்காவது மொழி ஹிந்தி! அரசியலமைப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளில் பல சிறப்பு இடங்கள் ஹிந்திக்கும் சில சிறப்பு இடங்கள் சமஸ்கிருதத்திற்கும் உள்ளன. ஹிந்திக்கு அட்டவணைத்தகுதியும் ஆட்சி மொழித் தகுதியுமாக இரு தகுதிகள் இருக்கையில் தலையிடாத மனித வள மேம்பாட்டுத் துறை தமிழைக் கண்டதும் தலையிடுமோ?

அடுத்து அரசியல் சட்டத்தின் எட்டாம் பிரிவில் ஒரு மொழி இடம் பெறுவதால் அதற்கு ரூபாய் நோட்டில் இடம் பெறுவதை தவிர வேறு பெரிய உரிமையும், சலுகையும் இருப்பதாக நான் அறியேன். இல்லாத உரிமையும், சலுகையும் எவ்வாறு பாதிக்கப்படும் என ஆசிரியர் கூறுகிறார்? அரசியல் அமைப்புச் சட்டத்தில்இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளுக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் கூறப்படாத நிலையில் இந்த அட்டவணையில் குறிப்பிடாத மொழிகள் கூட தங்கள் வளர்ச்சிக்கான தொகையினை வேண்டிப் பெறலாம்.
இந்த எட்டாவது அட்டவணையே ஒன்றுக்கும் உதவாத, பயனற்ற அட்டவணை என்று முன்பு 'இந்திய ஆட்சி மொழி' என்ற கட்டுரையில் விளக்கமாக எழுதியிருந்தேன். என்னிடம் தற்பொழுது இல்லை. இராயர் கிட்டங்கியில்
எங்காவது புதைந்து கொண்டிருக்கலாம்.

தமிழ் செம்மொழி என்று அறிவிப்பதால் நன்மை ஏதாவது இருக்கிறதோ இல்லையோ தீமை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கட்டுரையாசிரியர் தனது கட்டுரையில் ஏதாவது தீமையை சுட்டிக்காட்டும் எண்ணத்துடன் பொதுவாக எழுதியது போல இருக்கிறது மேற்கண்ட வாசகம்


இன்று வரை எனது கருத்திற்கு யாரிடமிருந்தும் பதிலில்லை. எனது கருத்து தவறாகக் கூட இருக்கலாம். ஆனால், தகுந்த ஆய்வினன மேற்கொண்ட பின்னரே நான் எனது கருத்தினை எழுத துணிந்தேன். ஆனால், இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஏதும் ஆய்வினை புரியாமலேயே, தனது கருத்தினை எழுதினார் என்றே இன்றளவும் நம்புகிறேன்.

மதுரை
31.03.08


THERMAL POWER STATION, THOOTHUKUDI

30.3.08

‘ஞாநி’களுக்கு எதற்கு அறிவு?

மும்பையில் இருக்கையில், மிட் டே (Midday) டைம்ஸ் ஆப் இந்தியா (times of India) ஆகிய தினசரிகளில் ரஜ்தீப் சர்தேசாய், ஷோபா டே, கங்காதர், சுவாமிநாத ஐயர் மற்றும் பல பத்தி எளுத்தாளர்கள் (columnists) எழுதும் கட்டுரைகளை (column) மிகவும் ஆர்வமுடன் படிப்பேன். நாமும் இப்படி எழுதிப் பார்த்தால் என்ன என்ற ஆசை அவ்வப்பொழுது எழுந்தாலும், அவர்களைப் போல மொழியின் மீது ஆளுமையும், அறிவும் நமக்கு வாய்க்குமா என்ற பயத்தில், வெறுமே ஆசிரியருக்கு எழுதிய சில கடிதங்களோடு நிறுத்திக் கொண்டேன்.

முக்கியமாக எதாவது ஒன்றிற்கு பொருத்தமான ஆங்கில வார்த்தை என்னவென்று தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது?

மதுரைக்கு வந்த கடந்த சில வருடங்களில் நான் இழந்தது, ஆங்கில பத்தி எழுத்தாளர்களின் கட்டுரைகளை. ஆயினும் தமிழிலும் பாமரன், ஞாநி, சாருநிவேதிதா போன்றவர்கள் தொழில் முறையில் பத்தி எழுதுகிறார்கள். பாமரன் சாரு நிவேதிதா போன்றவர்களைப் போல ஞாநி எனக்கு சுவராசியமாக இருந்ததில்லை எனினும், அவரது கருத்துகள் இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

ஆனால், நேற்று குமுதத்தில் வாசிக்க நேர்ந்த ஞாநி அவர்களது கட்டுரை, மும்பையில் நான் கொண்டது எத்தனை அர்த்தமற்ற பயம் என்பதை விளக்கியது.

மனிதர் மொழி ஆளுமை, தமிழ் அறிவு எதுவும் பற்றிக் கவலைப்படாமல், தானும் ஒரு பத்தி எழுத்தாளன் என்று கூறிக்கொண்டு, எங்கெல்லாம் முடியவில்லையோ அங்கெல்லாம் ஆங்கில வார்த்தைகளை உபயோகித்தே எழுதியிருக்கிறார்.

ஆரம்பத்திலேயே ‘அவையெல்லாம் ‘சப்ஜெக்ட்டுக்கு’ முழு நியாயம் செய்யவில்லை’ என்கிறார். தான் நினைப்பதை எழுத்தில் வடிக்க சிரமப்படும், இயலாதவர்களும் இங்கு தொழில் முறை எழுத்தாளர்கள் என்று கூறிக்கொள்ள முடியுமென்றால், அவரது அரைகுறை எழுத்தினை காசுக்கு விற்கும் பத்திரிக்கை வாசகனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பது அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்?

ஹீரோ, சினிமா’ போன்ற வார்த்தைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு இன்று கதாநாயகன், திரைப்படம் என்ற வார்த்தைகள் சரளமாக எழுத்து உலகில் புழங்கி வந்தாலும் பாவம், அவருக்குத் தெரியவில்லை போலும். முரணாக, பின்னர் கதாநாயகன் என்ற வார்த்தையினை அவரே உபயோகிக்கிறார்.

கால்ஷீட் நேரத்துக்கு நடிக்க செல்லாமல்’ என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன என்பது ஏதோ, தன்னார்வர்த்தில் எழுதும் வலைப்பதிவாளர்களுக்கு தெரியாமல் இருப்பதில் அர்த்தமுண்டு. ஆனால், காசுக்கு எழுதும் ஞாநி போன்ற எழுத்தாளர்கள் அவசியம் அதனை கற்று பின் எழுத முயல வேண்டும்.

‘எழுப்பியிருக்கும் கேள்வி ஒரு படத்தின் கேப்டன் இயக்குஞரா? ஸ்டாரா? நடைமுறையில் அது ஸ்டார்தான் என்று இருந்த போதும் எல்லோருமே நியாயப்படி டைரக்டர்தான் கேப்டனாக இருக்க வேண்டும்’

தொடர்ந்து ஒரு விஞ்ஞானியைப் பற்றி எழுத முயல்பவர் ‘கணிதம், பயோமெடிக்கல், எஞ்ஜினீயரிங், மருத்துவம் சர்ஜரி................கார் டிரைவர், மெக்கானிக், டாக்டர், சினிமா இயக்குஞர், டி.வியில் வானிலை அறிவிப்பாளர்’ என்று இஷ்டத்துக்கு பண்பலை வானொலி அறிவிப்பாளர் மாதிரி பொளந்து கட்டுகிறார்.

பின்னர் கற்பிதங்கள் என்ற அதிகம் தெரிந்திராத வார்த்தையினை பயன்படுத்துபவருக்கு ‘பிரிலியண்ட்’ என்ற வார்த்தைக்கு தமிழில் தெரியாமல் தடுமாறுகிறார்.

இறுதியாக, ‘காற்றுப் பிரிதல்’ என்று எந்த மருத்துவரும், விஞ்ஞான மாணவரும் இயல்பாக பயன்படுத்தும் வார்த்தையினை தமிழில் எழுதினால், அதுவும் விஞ்ஞான ஆராய்ச்சியினைப் பற்றி எழுதுகையில் ‘பாரம்பரியம் மிக்க குமுதம்’ இதழுக்கு பொருந்தி வராது என்பதால் ‘farting’ என்று ஆங்கிலத்தில் எழுதுவதாக ஒரு சப்பைக்கட்டு வேறு!

அண்ணாமலையாரே இந்தப் புகழுரையினை கேட்டு சற்று, மேலுலகத்தில் நெளிந்திருப்பார்!

-oOo-

எனது சந்தேகம் இதுதான்.

பணம் வாங்கிக் கொண்டு எழுதும் ‘எழுத்தாளரான’ ஞாநிக்கு இருக்கும் தமிழ் அறிவினை விட எனது ஆங்கில அறிவு சற்று அதிகம் இருக்கலாம். ஏனெனில் நான் தமிழ் வார்த்தைகளை உபயோகித்து ஆங்கில கட்டுரை எழுதியதில்லை. ஹிந்துவில் எனக்கு பத்தி எழுத வாய்ப்பு தருவார்களா?

மதுரை
30.03.08

“Some men are born Mediocre, some men achieve mediocrity, and some men have mediocrity thrust upon them”


MY BELOVED THOOTHUKUDI

29.3.08

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி III

தனது கட்டுரையில் வெங்கட் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மொழிகளில் கிடைக்கிறதா? என்று ஒரு கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

பல சட்டங்களின் தமிழ் வடிவம் கிடைக்கும் என்றாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் எழலாம். உதாரணமாக சட்ட பிரிவுகளில் காணப்படும் 'shall', 'may', 'as' போன்ற வார்த்தைகளின் நுணுக்கமான அர்த்தம் பற்றிக் கூட பல சமயங்களில் விவாதம் நடைபெறுவதுண்டு. மொழி பெயர்ப்புக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் இவ்வாறு
நுணுக்கமாக ஆராய்கையில் குழப்பத்தை விளைவிக்கும். எனவே தமிழ் மொழிபெயர்ப்பு வெறுமே படிப்பு உபயோகத்திற்கே பயன்படும். ஆங்கில வடிவம் மட்டுமே செயல் வடிவம் பெறும். தமிழிலேயே சட்டமியற்றப்பட்டால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக, சட்ட வரைவுக்குழு டாக்டர்.ராஜேந்திர பிரசாதை அதனை ஹிந்தி மொழியாக்கம் செய்து வெளியிட அனுமதியளித்தது.

அதன்படி ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு சட்ட வரைவுக்குழு உறுப்பினர்கள் 1950ம் வருடம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியாக்கம் இரண்டிலும் கையெழுத்திட்டனர். மொழியாக்கத்தைப் படித்த நேரு, 'தான் அதில் ஒரு வார்த்தையை கூட புரிந்து கொள்ள முடியவில்லை' என்று கடிதம் எழுதினார்.

பின்னர் ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலையில்....ஹிந்தி வடிவம் இறுதியாக 1988ம் வருடம் முழுமை பெற்று அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்திய பிரிவு ஆர்டிகிள் 394Aன் படி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஹிந்தி தவிர்த்த மற்ற மொழிகளுக்கு இந்த உரிமையில்லை.

பொதுவாக சட்டங்கள், நீதிமன்ற முறைகள் தமிழிலோ அல்லது ஹிந்தியிலோ ஏற்படுத்தப்படுவதோ கடினமான காரியம். ஆனால் இயலாத காரியமல்ல. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும், முன்னேற்றமும் தேவை.

பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் லத்தீனே படித்தவர்களின் மொழியாக இருந்து பின்னர் ப்ரெஞ்சு அந்த இடத்துக்கு வந்தது. மெல்ல மெல்ல பின்னர் ஜெர்மன், ரஷிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க பல வருடங்கள் பிடித்தது.

-oOo-

இறுதியாக, நீதிமன்றங்கள் எவ்வாறு இந்த மொழிப் பிரச்னையில் வேறுபட்ட நிலையினை எடுத்து நீதிபதிகளும் ரத்தமும் சதையுமான மனிதர்கள் என்று உணர வைக்கிறது என்பதற்கு உதாரணமான வழக்குகள் இரண்டினைப் பார்க்கலாம்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்ற ‘தியாகி’களுக்கான ஓய்வூதிய (pension) திட்டம் ஒன்றினை அறிவித்தது.
உடனடியாக சுதந்திரப் போராட்ட ‘தியாகி’யான திரு.தளவாய் அவர்கள் இந்த ஓய்வூதிய திட்டம் 'ஹிந்தியை மேம்படுத்தி பரப்புமாறு மைய அரசினை வேண்டும்' அரசியலமைப்புச் சட்டத்தின் 351ம் பிரிவை பாதிக்கிறது என்ற வாதத்துடன் ஒரு நீதிப்பேராண்மை மனுவை தாக்கல் செய்தார்.

சென்னை நீதிமன்ற நீதிபதிகள், 'நிதிப் பகிர்வு சட்டத்தின் மூலம் மாநில அரசுக்கு இவ்விதமான திட்டத்திற்கு நிதி ஒதுக்க அதிகாரம் இருக்கிறது' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

தளவாய் உச்ச நீதிமன்றம் சென்றார்.

உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, 'இவ்விதமான ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி தமிழக அரசின் திட்டத்தினை செல்லாது என அறிவித்தனர்.

நீதிபதிகள் முக்கியமாக தீர்ப்பில் கூறிய வாசகங்கள் கவனிக்கத்தக்கது. 'தமிழக அரசின் இந்த திட்டம் பிளவுபடுத்தும் பிரிவினைவாத சக்தியினை உள்ளடக்கியது. ஏதாவது மாநிலம் ஹிந்திக்கு அல்லது வேறு மொழிக்கு எதிரான உணர்வுகளை தூண்டி விட முயன்றால் அத்தகைய முயற்சியானது மக்கள் விரோத, தேச விரோத செயல்கள். அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்' (AIR 1976 SC 1559)

எனவே தமிழக அரசின் திட்டம் செல்லாக் காசாகியது!


-oOo-

இவ்வாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் தில்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் வேறுபட்ட கோணங்களில் மொழிப் பிரச்னையை அணுகியது மற்றொரு வழக்கிலும் நேர்ந்தது.

1960ம் ஆண்டு கையெழுத்தான குடியரசுத் தலைவரின் உத்தரவினைத் தொடர்ந்து பல மைய அரசுத் துறைகள் தமது பணியாளர்களுக்கு கட்டாய ஹிந்தி பயிற்சி அளிக்கும் அறிவிப்பினை வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம். இவற்றை எதிர்த்து அப்போது நாடாளுமன்றத் தலைவராக இருந்த முரசொலி மாறனும் தபால் துறையில் வேலை பார்த்த ஒரு உதவி மேலாளரும் தனித் தனியே ரிட் மனுக்களை தொடர்ந்தார்கள். முரசொலி மாறனின் ரிட் மனு அவர் அந்த அறிவிப்பினால் பாதிக்கப்படுபவர் அல்ல என்ற காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் தபால் துறை உதவி மேலாளரின் ரிட் மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவுகள் அரசு மொழிகள் சட்டத்தின் பிரிவுக்கு மாறாக இருப்பதாக கூறி அவற்றை செல்லாது என அறிவித்தது. பிரச்னை உச்ச நீதிமன்றம் சென்றது.

தளவாய் வழக்கினை விசாரித்த அதே நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்சு, குடியரசுத் தலைவரின் உத்தரவும், அரசுத் துறை நிறுவனங்களின் அறிவிப்புகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணமாகவே உள்ளன. அவை அரசு மொழிகள் சட்டத்தின் பிரிவுகளை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக அவற்றிற்கு இசைந்தே உள்ளது' என்று கூறினர்.

மேலும், 'கட்டாய பயிற்சியானது வேலை நேரத்தின் பகுதியாகவே வழங்கப்படுகிறது. எனவே கட்டாயமாக அதில் கலந்து கொள்வது அவர்களது கடமை. இவற்றில் தேற வேண்டிய அவசியமில்லை. தேறாதலால் ஏதும் பாதிப்பில்லை. தேறிய்வர்களூக்கு ஊக்கத் தொகை (incentive like prizes and increase in pay) வழங்கப்படுவதால் மட்டுமே சமநிலை பாதிக்கப்படுகிறது என்பதல்ல' என்று கூறி மைய அரசு அலுவலக பணியாளர்களுக்கான கட்டாய ஹிந்தி பயிற்சியும் அதில் தேறுவதால் கிடைக்கும் ஊக்கத் தொகைகளும் சட்டத்திற்கு உட்பட்டதே என்று தீர்ப்பளித்தனர். (AIR 1977 SC 231)

இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி மட்டுமே.... ஆட்சி மொழி மட்டுமல்ல. அரசுப் பணிக்கான மொழியாகவும் அதனை முழுவதும் மாற்றும் வண்ணம் இந்திய மக்களாகிய நாம் செயல்பட நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் இந்தியர்கள் அனைவருக்கும் அறிவுறுத்துகிறது.

இனி உங்களது கருத்துகளை எதிர்நோக்கி...

மும்பை
26.12.03




OLD LIGHT HOUSE, RABBIT ISLAND, THOOTHUKUDI

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி II


ஹிந்தி வேண்டாம் என்றால் ஆங்கிலம் மட்டும் அந்நிய மொழியில்லையா? அதன் தேவை என்ன? உணர்வு பூர்வமாக அணுகினால் இந்த வாதம் சரியே! ஆனால் நடைமுறையில், இந்தியா ஒன்றுபட்டிருப்பதற்கு ஆங்கிலம் முக்கியமான ஒரு காரணம் என்று நான் உணர்கிறேன். இதை நான் சந்தித்த பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 345வது பிரிவின் படி மாநில அரசுகள் ஹிந்தியையோ அல்லது அந்தந்த மாநிலத்தில் பயன்படுத்தப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழியையோ தனது அலுவலகப் பணிகளுக்கான மொழியாக பயன்படுத்த அனுமதியளிக்கிறது.

348வது பிரிவின் படி குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று மாநில அரசு ஹிந்தியையோ அல்லது அந்த மாநிலத்தில் அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மொழியையோ அந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. இவ்வாறான ஒரு நிலையில் என்ன நிகழும்?

நீதிமன்றத்துக்கு நீதிமன்றம் குழப்பம் நிலவும். உயர் நீதிமன்றங்களில் இருந்து மேல் முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் செல்கையில் மேலும் குழப்பம். ஏறக்குறைய இவ்வாறான நிலையை கிறிஸ்தவர்களின் வேதத்தில் கூறப்படும் 'பாபேல் கோபுர' நிலைக்கு சட்ட மேதை எச் எம் சீர்வாய் ஒப்பிடுகிறார்.

ஆங்கிலம் ஒன்றே இந்த நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாக, நாட்டின் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்திருக்கும் பலர் அறிவர்.

-oOo-

1952ல் ஹிந்தியும், தேவநாகரி எண்களும் மாநில ஆளுஞர்கள், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிக்கும் உத்தரவில் பயன்படுத்தப்படலாம் என்பது நடைமுறைக்கு வந்தது.

1955ல் பிற அரசுப் பணிகளுக்காகவும் ஹிந்தி பயன்படுத்தப்படலாம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.

1956ல் அரசியலமைப்புச் சட்டம் விரும்பியபடி, ஹிந்தியின் பயன்பாட்டை அதிகரிக்க ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பி.ஜி.கெர் ஆணையம் தனது அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.

1959ல் கெர் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கோபிந் வல்லப் பந்த் தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற குழு தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆட்சி மொழியினைப் பற்றிய விவாதம் தொடங்கியது.

விவாதம் சூடு பிடிக்க, நேரு 'இந்தியாவின் அனைத்து மொழிகளும் அதன் தேசிய மொழிகளாக சமமாக மதிக்கப்படும். ஆங்கிலம் ஹிந்தியோடு தொடர்ந்து அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும். அதனை நீக்குவதற்கான கால அவகாசம் ஏதும் கிடையாது' என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.

ஆனால் தேசிய மொழி என்பது உணர்வு பூர்வமான பதம். சட்டபூர்வமான அங்கீகாரம் அதற்கு கிடையாது.

-oOo-

1960ல் ஹிந்தியை பரப்புவதற்காகவும், மைய அரசு அதிகாரிகளுக்கு ஹிந்தி பயிற்சி அளிப்பதற்காகவும், ஹிந்தி கலைச்சொற்கள், நடைமுறை வழக்கத்திற்காக ஹிந்தி கையேடுகள் உருவாக்கவும் மற்றும் உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் வண்ணம் ஹிந்தி சட்ட வரைவுகளை எழுதவும் அதிகாரமளித்து குடியரசுத் தலைவரின் உத்தரவு கையெழுத்தானது.

இந்த உத்தரவின்படி 45 வயதுக்கு குறைவான மைய அரசு அதிகாரிகள் கண்டிப்பான ஹிந்தி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். அதில் தேறாவிட்டால் தண்டனை ஏதும் கிடையாது என்றாலும் தேறியவர்களுக்கு ஊக்கத் தொகை போன்றவை வழங்கப்படும். ஹிந்தி பேசும் பகுதிகளில் உள்ள மைய அரசு பணிக்கான பணியாளர்களை நியமிக்கையில் அவர்களுக்கு தேவையான ஹிந்தி அறிவு இருத்தல் வேண்டும்.

1962ல் வெளியான ரயில்வே போர்டு அறிவிப்பு, 'ஹிந்தி பயிற்சி மிகவும் மந்தமாக இருப்பதாக கவலைப்பட்டு பயிற்சிக்கு வராத அலுவலர்கள் வேலைக்கு வராதவர்களாக கருதப்படுவார்கள்' என்று எச்சரித்தது.

போதாதா? தமிழக அரசியல் மொழிப் பிரச்னையில் மெல்ல மெல்ல புகையத் தொடங்கியது.

இதற்கிடையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பதினைந்து வருட கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. நேருவுக்கோ இரு பக்கமும் நெருக்கடி!

-oOo-

பதினைந்து ஆண்டுகள் ஆனாலும், ஆங்கிலத்தின் பிடியை நீக்க முடியவில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு 1965ம் வருடம் ஆட்சி மொழிகள் சட்டம்'1963 நடைமுறைக்கு வந்தது.

ஆட்சி மொழி என்னவோ ஒன்றுதான் என்றாலும் ஆட்சி மொழிகள் சட்டம் என்று பன்மையில் இந்த சட்டத்தின் தலைப்பு அமைந்திருப்பது சட்டத்தை இயற்றியவர்களுக்கே வெளிச்சம்!

இதன் மூலம் ஹிந்தி ஆட்சி மற்றும் அரசுப் பணிகளுக்கான மொழியென்றாலும், ஆங்கிலம் ஹிந்தியோடு சேர்ந்து பயன்படுத்தப் படலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் போராட்டம் தீவிரப்பட நேரு, 'ஹிந்தி பேசாத மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் நீக்கி ஹிந்தி மட்டுமே அரசு பயன்பாட்டு மொழியாக மாற்றப்பட மாட்டாது' என்று உறுதி கூறினார்.

இந்த உறுதிக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வகையில் 1968ல் ஆட்சி மொழிகளின் சட்டத்தில் 'அனைத்து சட்ட மன்றங்களும் ஆங்கிலத்தை நீக்கி ஹிந்தியை மட்டும் அரசு பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வரை, ஆங்கிலமும் ஹிந்தியோடு பயன்பாட்டு மொழியாக நடைமுறையில் இருக்கும்' என்று ஒரு திருத்தம் கொண்டு வரப்பட தமிழகம் அமைதியடைந்தது.

அதற்கிடையே இங்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய தி.மு.க ஆட்சிக்கும் வந்திருந்தது.

இதற்கிடையில் இந்த மொழிப்பிரச்னை முக்கியமான ஒரு மனிதரின் பதவியை காவு வாங்கியது. 1967ன் இறுதியில் 'ஆங்கிலத்தை விடுத்து ஹிந்திக்கு முதலிடும் கொடுக்கும் மந்திரி சபையின் கல்விக் கொள்கை' மீதான முடிவினை எதிர்த்து முன்பு கல்வி அமைச்சராக பணியாற்றிய வெளியுறவு மந்திரியும் சட்ட மேதையுமான எம்.சி. சாக்ளா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எது எப்படியோ, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஹிந்திக்கு மட்டுமே "முதலிடம்" என்று சொல்வதை விட ஹிந்திக்கு மட்டுமே "இடம்" என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும்.

அடுத்து இந்த மொழிப் பிரச்னை எப்படி நீதிபதிகளையும் பாதிக்கிறது என்று பார்க்கலாம்.

மும்பை
26.12.03

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி I


சமீபத்தில் 'பிராந்திய மொழிகளில் சிறந்த வலைப்பதிவாக' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'சைன் குவா நான்' என்ற வலைப்பதிவில் அதன் உரிமையாளரான வெங்கட் இந்து பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியினை முன்னிறுத்தி தனது கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார். இந்துப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியின் தலைப்பும் ஏதோ இந்தியாவின் ஆட்சி மொழி 18லிருந்து 22க உயருவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஊடகங்கள் பல சமயங்களில் சட்டத்தினைப் பற்றிய தவறான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன' என்று நான் அடிக்கடி கூறுவதற்கு 'இந்து'வின் செய்தியும் ஒரு உதாரணம்.

நமது அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவின் ஆட்சி மொழி 'தேவநாகரி உருவில் எழுதப்படும் ஹிந்தி மட்டுமேயன்றி வேறு எந்த மொழியும் கிடையாது (ஆர்டிகிள் 343).

ஆனால் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து (1950) முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் மத்திய அரசு அலுவலக பணிகளுக்காக நீடிக்கலாம். ஆனாலும், இதற்குள்ளான காலத்திலேயே குடியரசுத் தலைவர் உத்தரவுப்படி ஹிந்தியும் ஆங்கிலத்தோடு சேர்ந்து அரசு அலுவலக பணிகளுக்காக பயன்படுத்தப் படலாம். இறுதியாக பதினைந்து ஆண்டுகள் கழித்தும் ஆங்கிலத்தின் பயன்பாட்டினை பாராளுமன்றம் தகுந்த சட்டமியற்றுவதின் மூலம் தொடரலாம். இதுதான் இந்த அரசியலமைப்புச் சட்டம் கூறுவது.

இவ்வாறாக ஆங்கிலத்தின் பயன்பாட்டினையாவது தென்னிந்தியாவை சேர்ந்த அரசியலமைப்பு வரைவுக் குழு (Constituent Assembly) உறுப்பினர்கள் போராடிப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமது அரசியலமைப்புச் சட்டத்தினை வடிவமைப்பதற்காக அரசியலமைப்பு சட்டவரைவுக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. பொதுவாக அனைவரும் இசைந்த ஒன்றுபட்ட கருத்துக்களினாலேயே சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன என்றாலும், இந்த மொழிப் பிரச்னையில் ஹிந்தி ஆதரவாளர்கள் குழுவினை பிளக்கும் அளவிற்கு சென்றனர்.

-oOo-

மொகலாயர்கள் வருகைக்குப் பிறகே ஒன்றுபட்ட இந்தியா உருவானது. அவர்களது தாக்கத்தால், பெர்ஷியா நீதிமன்ற மொழியாகவும் உருது வணிக மொழியாகவும் உருப்பெற்றன. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர் நமது நீதிமன்றங்கள், அரசு நிர்வாகம் மேலும் முறைப்படுத்தப்பட்டு ஆங்கிலத்தின் ஆட்சி ஏற்பட்டது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி ஹிந்துஸ்தானியை ஆட்சி மொழியாக வழி மொழிந்தார். அதாவது பெர்ஷிய தாக்கம் மிகுந்த உருதுவையும் சமஸ்கிருதத்தின் தாக்கம் மிகுந்த ஹிந்தியையும் இணைத்து உருவாக்க விரும்பிய மொழிதான் ஹிந்துஸ்தானி. காந்தியின் சமரசத்தின் நோக்கம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் இந்தியா மதரீதியாக பிளவுபட்டதும் ஹிந்துஸ்தானி முழக்கம் வலு இழந்து ஹிந்தி வலுப்பெற்றது.

இந்தியாவில் தேசிய மொழி என்பது ஏதும் இன்று வரை கிடையாது. ஏனெனில் ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் பெரும்பான்மையினர் கிடையாது. ஆனால் மற்ற மொழிகளை விடவும் ஹிந்தி பேசுபவர்கள் அதிகம் என்ற நிலையில் அரசியலமைப்புச் சட்டவரைவுக் குழுவிலும் அவர்களது தாக்கம் அதிகம் இருந்தது. அதில் சிலர் ஹிந்திதான் வேண்டும் என்ற தீவிரவாதிகளாக இருந்தனர்.

ஆனால் காங்கிரஸில் இருந்த மற்ற மொழி மிதவாதிகளின் ஆதரவாலும், அவர்களுக்கு நேரு அளித்த ஆதரவாலும் விளைந்ததே முன்ஷி-ஐயங்கார் பார்முலா என்றழைக்கப்படும் மேற்சொன்ன அரசியலமைப்பு சட்டப் பிரிவு.

'ஹிந்தி, ஹிந்துஸ்தானியை ஒதுக்காமல் அனைத்து மொழிகளிலிருந்து வார்த்தைகளை தழுவி நாட்டின் கலாச்சார ஒற்றுமையை பேணாத வகையில் அதை அரசு மொழியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்று நேரு சட்டவரைவுக்குழுவிடம் கூறியது குறிப்பிடத் தக்கது.

-oOo-

அவ்வாறு என்றால் ஹிந்துவின் செய்தியிலும், வெங்கட்டின் வலைப்பதிவிலும் குறிப்பிடப்படும் பதினெட்டு மொழிகள் என்ன வகையானவை? அரசியலமைப்புச் சட்டத்தின் இணைப்பாக பல பட்டியல்கள் (schedule) இருக்கின்றன. இவற்றில் இடம் பெற்றுள்ள மொழிகள்தான் இந்த பதினெட்டு மொழிகள். இவற்றை அட்டவனை மொழிகள் என்றே அழைக்க வேண்டுமேயொழிய ஆட்சி மொழிகள் என்று அழைப்பது தவறு.

இவற்றின் சிறப்புத் தகுதி என்ன?

எனக்கு அதிகம் தெரியவில்லை. தெரிந்தவரை ஆர்டிகிள் 344ன் படி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து ஐந்து மற்றும் பத்து ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவர் ஒரு ஆணையம் (Commission) ஏற்படுத்த வேண்டும். இந்த ஆணையத்தில் இந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகளில் ஒவ்வொன்றையும் பிரதிநிதித்துவம் செய்ய ஒரு உறுப்பினர் இடம் பெற வேண்டும்.

சரி, இந்த ஆணையத்தின் பணிதான் என்ன?

சுருக்கமாக கூறப் போனால் இந்திய அரசுப் பணியில் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆங்கிலத்தை மட்டுப்படுத்தி ஹிந்தியை பயன்படுத்தும் வழிகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவது.

இதே பிரிவினை எழுதியவர்களுக்கு வேறு ஒரு பயம் வந்து விட்டது. அரசுப் பணி எப்படியெனினும், தொழில், வணிகத் துறையில் ஆங்கிலம்தானே கோலோச்சுகிறது. மேலும் வணிகம், தொழில் போன்றவை இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே பரவலானது. இப்படி ஹிந்தி ஹிந்தி என்று அடித்துக் கொண்டால் அவை பாதிக்காதா?

எனவே இத்தகைய ஆலோசனைகளை வழங்குபவர்கள் நாட்டின் தொழில், விஞ்ஞான மற்றும் கலாச்சார முன்னேற்றத்தையும் ஹிந்தி பேசாத மாநில மக்களின் நலன்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

அடுத்து ஆர்டிகிள் 351லும் இந்த எட்டாவது பட்டியலில் கண்ட மொழிகள் பற்றி வருகிறது. இந்தப் பிரிவு முக்கியமானது. அதாவது மத்திய அரசாங்கம் இந்தியாவின் ஒன்றுபட்ட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அதனை வளப்படுத்த்தி அனைத்து மக்களும் அதை பயன்படுத்தும் வண்ணம் பரவலாக்க வேண்டும்.

எவ்விதம் வளப்படுத்த வேண்டும்?

நேரு விரும்பியபடி ஹிந்தியின் ஜீனியஸ்தன்மை கெட்டுவிடாத வண்ணம் ஹிந்துஸ்தானி மற்றும் எட்டாவது அட்டவணையில் கண்ட பிற மொழிகளின் அமைப்பு, ஸ்டைல், வெளிப்படுத்தும் தன்மை (expression) ஆகியவற்றை சுவீகரித்து வேண்டுமிடங்களில் வார்த்தைகளை முதற்கண் சமஸ்கிருதத்திலிருந்தும் இரண்டாவதாக மற்ற மொழிகளில் (அனைத்து மொழிகள்) இருந்தும் தழுவி வளப்படுத்தப்பட வேண்டும்.

எட்டாவது பட்டியலில் சேர்க்கப்படும் மொழிகளின் பணி இத்தோடு முடிந்தது. வேறு எந்தவிதமான சிறப்புத் தகுதியோ ஆட்சி மொழித் தகுதியோ இவற்றிற்கு இல்லை. ஒருவேளை மைய அரசுப் பணிக்கான தேர்வுகளை இந்த மொழிகளில் எழுதலாம் என்பது அடுத்த தகுதியாக இருக்கலாம். இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டிய அவசியமில்லை. நிலைமை இப்படியிருக்கையில் இதற்கெல்லாமா ஒரு போராட்டம்?

இத்தனை குழப்பத்தில் தெளிவான, உருப்படியான ஒரு பிரிவு ஆர்டிகிள் 350. இதன்படி தனது குறைகளை போக்க மைய அரசுக்கு மனுச் செய்யும் ஒருவர் இந்தியாவிலோ பயன்படுத்தப்படும் எந்த மொழியிலும் மனுச்செய்யலாம். அது போலவே மாநில அரசுக்கு மனுச் செய்பவர் அந்த மாநிலத்தில் பயன்படுத்தப்படும் எந்த மொழியிலும் மனுச் செய்யலாம். ஆட்சி மொழியில் அல்லது பணிக்காக பயன்படுத்தும் மொழியில் இல்லை என்று நிராகரிக்க முடியாது. எந்த மொழியில் எழுதினாலும் குப்பைத் தொட்டிதான் என்பது வேறு விஷயம்.

பதினைந்து வருட காலத்தில் என்ன நிகழ்ந்தது என்பது அடுத்த பகுதியில்.

மும்பை
26.12.03


பி.கு. மொழி சரி, எண்களைப் பற்றி கூறுவது என்ன? அங்கும் குழப்பம். அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசுப் பணிக்காக 'சர்வதேச அமைப்பில் அமைந்த இந்திய எண்கள்' பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறது. மேலும் குடியரசுத் தலைவர் தேவநாகரி எண்களை பயன்படுத்தவும் உத்தரவிடலாம் என்கிறது. சர்வதேச அமைப்பில் அமைந்த இந்திய எண்கள் அரபிய எண்கள் என்பதற்கான இடக்கரடக்கலான பதம் என்கிறார் சட்ட மேதை எச்.எம்.சீர்வாய்.

22.3.08

நிலைத்த அன்பின் நீடித்த அடையாளம்?



செய்தித் தாள் படிப்பவரா நீங்கள்? அவ்வாறென்றால் சில நாட்களுக்கு முன்னர் ஆயுள் காப்பீட்டுக் கழகம்' குறித்த வழக்கு ஒன்றில் சென்னை மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினைக் குறித்த செய்தியினை படித்த ஞாபகம் இருக்கலாம். பலருக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கணிப்பு. அதாவது கொலையுண்ட ஒரு மனிதனின் மரணத்தினை விபத்தாகக் கருதி, டபுள் பெனிஃபிட்' எனப்படும் ஆயுள் காப்பீட்டின் இரட்டிப்பு பலனினை அவரது தந்தைக்கு அளிக்கச் சொல்லிய ஒரு தீர்ப்பு.


இச்செய்தியில் என்ன பெரிய கவனிக்கக் கூடிய அம்சம் என்று பலர் நினைக்கலாம். இவ்வாறாகவே நம்மில் பலர் ஆயுள் காப்பீட்டினை சற்று அலட்சியத்துடனே அணுகுவதாக எனக்குத் தோன்றுகிறது.


முதலில் காப்பீட்டுப் பத்திரத்திற்கான மனுவினை நிரப்புவதிலேயே பலர் அலட்சியப் போக்கினை மேற்கொள்கிறார்கள். "....ம்ம் எங்கே எங்கே கையெழுத்து போட வேண்டும் சொல்லுங்கள்!" என்று நமது அவசரத்தில் முகவர் எந்த எந்தக் கேள்விக்கு எவ்வாறு பதிலளித்துள்ளார் என்பதையே கவனிக்க மறந்து போகிறோம். முகவரோ, சங்கடமான கேள்விகளுக்கெல்லாம், அவரது விருப்பம் போலவே ஒரு பதிலினை எழுதி, பத்திரத்தினையும் வாங்கி நம்மிடம் அளிக்கிறார். நாமும், எவ்வித யோசனையுமின்றி அதனை மற்ற பத்திரங்களோடு பத்திரமாக வைத்துக் கொள்கிறோம். இவ்வித அலட்சியத்தின் பலனை பல வருடங்களுக்கு முன்னர் நான் ஏற்றுக் கொண்ட ஒரு வழக்கில் கண்ணுற நேர்ந்தது.

-oOo-


அந்த வழக்கின் வாதி மத்திய கிழக்கு நாட்டில் ஒரு தொழிலாளி. விபத்து ஒன்றில் காயமுற்ற அவர், வேலையிழக்க நேரிட்டது. இந்தியா திரும்பியவர் சிறிய இட்டிலிக்கடை நடத்தி வந்த தனது மனைவியின் பெயரில் அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஒரு காப்பீட்டுப் பத்திரம் வாங்கினார். ஏதோ ஒரு காரணத்தினால் மனைவி இறக்க நேரிட காப்பீடுப் பணத்தினை கோரியவருக்கு காப்பீட்டுக் கழகம் அளிக்க மறுத்தது. காரணம், மனுவில் அவர், 'பார்த்து வரும் வேலை' என்ற கேள்விக்கு, 'மத்திய கிழக்கு நாட்டில் தொழிலாளி' என்று பதிலளித்திருந்தார். 'ஆனால் காப்பீட்டுப் பத்திரம் வாங்கிய வேளையில் அவர் பணியில் இல்லை. எனவே தவறான தகவல் மூலம் பத்திரம் பெறப்பட்டது' என்பதே!

பலமுறை காப்பீட்டு நிறுவனத்துடன் முட்டி மோதிய பின்னர், நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தினை அணுக, 'இந்தத் தவறான பதில், காப்பீட்டினை பாதிக்கும் அளவிற்குப் பெரிய தவறுதல் இல்லை' என்று கூறி அவருக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

காப்பீட்டு நிறுவனம் சென்னைக்கு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் கூறப்பட்ட காரணம், 'காப்பீடு கிடையாது என்று மறுக்கப்பட்ட பின்னர் கொடுக்கப்பட்ட கால அளவிற்குள் அவர் நீதிமன்றத்தினை அணுகவில்லை' என்பதாகும். நல்ல வேளை, அவரோடு அவரது மைனர் மகன்களும் வாதிகள். மைனர்கள் மேஜராகும் வரை காலதாமத விதி பொருந்தாது. இதை நான் குறிப்பிட்ட மேல்முறையீட்டினை விசாரித்த நீதிபதிக்கும் நிம்மதி!


'நிலைத்த அன்பின் நீடித்த அடையாளம்' என்று விளம்பரப்படுத்தும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமா காலதாமத விதியினைக் கூறி ஒரு ஏழைத் தொழிலாளியின் வயிற்றிலடிப்பது?' என்ற வாதத்தினை நான் வைத்தாலும் நீதிமன்றம் அபராதத் தொகை ஏதும் விதிக்கவில்லை. ஏதோ இந்த மட்டுமாவது பணம் வந்ததே என்ற திருப்தி வாதிக்கும். ஆனால் அவர் இழந்தது சில வருடங்கள்!

-oOo-


பொதுவாக, ஆயுள் காப்பீட்டு மனுவினை ஒரு நகல் எடுத்து, நமது காப்பீட்டுப் பத்திரத்துடன் சேர்த்து பாதுகாத்தல் நலம். அதோடு நின்று விடாமல், நமது காப்பீட்டு பத்திரத்தில் உறுதி கூறப்பட்டுள்ள பலன்களைப் பற்றி, நமது வாரிசுகளிடம் சற்று விளக்கி வைத்திருத்தலும் நலம் பயக்கும். 'நெருப்பு என்றால் வாய் வெந்து விடாது'.


எனவே துரதிஷ்டமான ஒரு நிலைக்கு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதித்தலில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் பத்திரம் அளித்ததாலேயே, அதன்படி நிறுவனம் நடந்து கொள்ளும் என்பதற்கு உத்தரவாதமில்லை!


முக்கியமாக, இந்த 'விபத்திற்கான இரட்டிப்பு பலன்' (Double Benefit/ Accident Benefit) என்ற ஒரு உறுதியில் நிறுவனம் பின்வாங்கும் நிலை சில சமயங்களில் ஏற்படுகிறது. சில காப்பீட்டுப் பத்திரங்களில், 'With Accident Benefit' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, இயற்கையாக இன்றி விபத்தின் மூலம் மரணம் நேரிடுகையில் இவ்வகை காப்பீட்டின் பயனாளிகளுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும். விபத்து என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது, வாகன விபத்துதான். ஆனால் சட்டப்பிரகாரம், 'விபத்து' என்பதற்கு 'எதிர்பாராத நிகழ்வு' என்றே அர்த்தம்.

-oOo-


1993ம் வருடம் ஆந்திர மாநிலத்தினைச் சேர்ந்த கங்கா ரெட்டி என்பவர் வீட்டிலிருந்து வெளியே இழுத்து நக்ஸலைட்டுகளால் கொல்லப்பட்டார். நம்மில் பலரைப் போலவே இது ஒரு விபத்து அல்ல என்று கருதி விபத்தின் பலனினை அளிக்க மறுத்த காப்பீட்டு நிறுவனம், ஒரு படி மேலே சென்று, 'இது கலவரத்தில் நிகழ்ந்த மரணம். எனவே போர், மலையேறுதல், கலவரம் மூலம் நிகழும் மரணங்களுக்கு காப்பீடு அளிக்க வேண்டியதில்லை' எனவும் வாதிட்டது.


இந்த வாதங்களை நிராகரித்து தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் (National Consumer Disputes Redressal Commission) கலவரம், போர் போன்றவை சட்டரீதியிலான பதங்கள் அல்ல என்று விபத்தின் இரட்டிப்பு பலனை அளிக்க தீர்ப்பு கூறியது. ஆயினும் இன்றும் இப்பதங்களை காப்பீட்டுப் பத்திரங்களில் நீங்கள் பார்க்கலாம். காப்பீட்டு நிறுவனத்தின் வாதம் சரியென்றால், 'அமெரிக்காவின் மீதான போர்' என வருணிக்கப்படும் செப்டம்பர் 11 தாக்குதலில் மரணமுற்ற மக்களுக்கு காப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.


பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் நீதிமன்றங்கள் பாம்பு கடித்ததால் நேரிடும் மரணமும் விபத்தே என்று காப்பீட்டு நிறுவனத்திற்கு அறிவுறுத்த நேரிட்டது. 2001ம் வருடம் குஜராத்தில் நிகழ்ந்த கோரமான பூகம்பத்தில், இழந்த உயிர்களுக்கு விபத்திற்கான காப்பீடு உண்டு என்று ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தாமாகவே வலிய அறிவித்தது.


சமீபத்தில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பும் இவ்வாறான ஒரு சிக்கலினை பின்னர் எதிர்கொள்ள நேரிடும் ஒருவருக்குப் பலனளிக்கலாம். இந்த வழக்கில் விபத்து நேரிட்ட ஒருவர், விபத்து நடந்து 180 நாட்கள் கழித்து மரித்துப் போனார். காப்பீட்டுப் பத்திரத்தின்படி இரட்டிப்பு பலனடைவதற்கு, விபத்து நடந்து 180 நாட்களுக்குள் மரணம் சம்பவிக்க வேண்டும். மண்டி நுகர்வோர் நீதிமன்றம், இவ்விதி சமூக நலனுக்கு எதிரானது என்று கூறி, 'மரணத்திற்குக் காரணம் விபத்து என்று நிரூபிக்கப்பட்டாலே போதுமானது' என்று கூறியது.



இறுதியாக முதலில் கூறிய சென்னை வழக்கு. இந்த வழக்கிலும் ஏற்கனவே தேசியத் தீர்ப்பாயம் கூறிய தீர்ப்பினைக் கண்டுகொள்ளாமல், மீண்டும் காப்பீட்டு நிறுவனம் கலவரம் (Riot) என்று பழைய பல்லவியைப் பாடியது. ஆனால், சென்னை நுகர்வோர் தீர்ப்பாயம் மீண்டும் காப்பீட்டு நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டியதாயிற்று.இவ்வித சம்பவங்கள் அனைத்திலும், ஏதோ ஒரு உணர்வில் அல்லது அறிவுறுத்துதலில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். ஆனால் இவ்விதப் புரிந்து கொள்ளுதல் இன்றி பலர், 'ஏதோ அவர்கள் அளித்ததுதான் காப்பீட்டு பணம்' என்று எவ்வித எதிர்ப்பும் இன்றி கொடுத்ததை வாங்கிச் சென்றிருக்கலாம்...

மதுரை
21.10.05


WHEN IT STOPPED RAINING...

20.3.08

புனித வெள்ளியும், மூன்று மணி நேர பாடுகளும்!


நான் சிறுவனாயிருக்கையில், சலூனில் முடி வெட்டிக் கொள்வதை விட அச்சம் தரும் சடங்கு ஒன்று உண்டென்றால், அது புனித வெள்ளியன்று கோவிலுக்கு செல்வதுதான்!

கோடைக்காலம் தொடங்கியிருக்கும் மத்தியான வெயிலில் தொடர்ந்து மூன்று மணி நேரம் கோவிலுக்குள் உட்கார்ந்திருப்பது...இல்லை, உட்கார்ந்து, எழுந்து, பின் முட்டிக்காலிட்டு மீண்டும் உட்கார்ந்து, எழுந்து, முட்டிக்காலிட்டு என்று வறுத்து எடுக்கப்படுவது கொடுமை!

அதுவும் எங்கள் கோவில் உறுப்பினர்கள் பக்தியில் சிறந்தவர்கள், உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டினாலும் தொடர்ந்து ஜெபம் செய்வதில் சளைக்காதவர்கள்.

‘அடப்போங்கப்பா, இயேசுவுக்கே கஷ்டம் ஒரே நாளோடு போயிற்று...எனக்கு வருடா வருடம் இப்படி மூன்று மணிநேரம் இந்தப் பாடா’ என்று மனதிற்குள் நினைப்பதையும் வெளியில் சொல்ல முடியாது.

-oOo-

புனிதவெள்ளியில் கோவிலுக்கு செல்லும் பழக்கம் எப்போது நின்றது என்று நினைவில்லை. கல்லூரிக்கு சென்றதும், கொஞ்சம் கொஞ்சமாக கோவிலுக்கு செல்லும் பழக்கம் நின்று போனதோடு அதுவும் நின்றிருக்கலாம்.

ஆனால், மும்பையிலிருக்கையில் திடீரென ‘புனித வெள்ளிக்கு கோவிலுக்கு வர வேண்டும்’ என்று மனைவி வேண்டியதில், இது என்னடா புதுச்சோதனை என்றிருந்தது. நான் சார்ந்திருந்த புரொட்டஸ்டாண்ட் பிரிவினரைப் போல இல்லாமல், கத்தோலிக்கர்கள் ‘பூசை’யினை சுருக்கமாக முடித்துவிடுவார்கள் என்பதால் அவர்கள் மீது பரிவு இருந்தாலும், புனித வெள்ளி பூசையில் ஆழம் தெரியாமல் காலை விட நான் தயாராக இல்லை.

‘வெள்ளிக்கிழமை மத்தியானம் எல்லாம் ஆகாது. வேண்டுமானால் வியாழக்கிழமை மாலை பூசைக்கு வருகிறேன்’ என்றேன். இரவு நேரம், ஏதோ சினிமாவுக்கு போவது போல ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம் என்பதால்.

அதுவும் சரிதான் என்று சமரசமானார்கள். ஆனால் வியாழக்கிழமை மாலை எனது நண்பரை பார்க்க வேண்டியிருந்ததால், வெள்ளிக்கிழமை காலை பார்க்கலாம் என்றேன்.

வெள்ளிக்கிழமை காலையும் முடியவில்லை. அதற்காக மத்தியான நேரத்து மூன்று மணி நேர பூசையெல்லாம் வரமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். யார் கோவிலுக்குள் மூன்று மணி நேரம் உட்கார்ந்திருப்பது?

ஈஸ்டருக்கு போய்விட்டால் போயிற்று!

ஆனால், கத்தோலிக்கர்களுக்கு கிறிஸ்துமஸ் என்றாலும் சரி, புதுவருடமென்றாலும் சரி., ஈஸ்டரும் ஆகட்டும். நள்ளிரவில் கோவிலுக்கு போனால்தான் திருப்தியாக இருக்கும். அதற்கும் வந்தது ஆப்பு, உச்ச நீதிமன்ற உத்திரவு ஒன்றின் மூலம்.

மும்பையில் தாண்டியா கொண்டாட்டங்கள் இரவு பத்து மணி தாண்டிதான் வேகம் பிடிக்கும். பல இடங்களில் பன்னிரண்டு மணியையும் தாண்டி பத்து நாட்கள் உறக்கத்தை கெடுக்கும். அது குறித்து எழுந்த ஒரு வழக்கில், ‘இரவு பத்து மணிக்கு மேல் பொதுவில் ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கத்தோலிக்க நள்ளிரவு பூசைக்கும் வேட்டு வைத்து விட்டது.

எனவே கிறிஸ்துமஸ், புதுவருட பூசைகள் மும்பை பாந்த்ரா (Bandra) கோவில்கள் முன்னாள் இரவு 8.30க்கு ஆரம்பித்து 9.30க்கெல்லாம் முடித்து விட்டார்கள். சரி, ஈஸ்டருக்கும் பிரச்னை இல்லை என நினைத்தேன்.

-oOo-

ஈஸ்டருக்கு மலாடிலுள்ள (Malad) அக்கா வீட்டுக்கு போவதென்று முடிவாயிற்று. அங்கும் பூசை இரவு 8.30க்குத்தான். போனதுமே அக்கா சாப்பிடுகிறாயா என்று கேட்டாள். உணவின் மணம் என்னை இழுத்தாலும், ‘இன்னும் பசிக்கட்டும், அதுதான் பத்து மணிக்கு வந்து விடலாமே’ என நினைத்து வேண்டாமென்று விட்டேன்.

எனது மனைவியோ, ‘மூணு மணி நேரம் கோவிலுக்குள் உட்கார வேண்டுமா’ என்று வெள்ளிக்கிழமை பூசைக்கு வரவில்லை என்று எனது அம்மாவிடம் புகார் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

கோவிலில் பூசை சரியாக 8.30 மணிக்கு சாதாரணமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால், பாதிரியார் புரட்சிக்காரர் போல, இது என்ன அரசு உத்தரவு போடுவது என்று நினைத்தாரோ இல்லையோ, பேசினார் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார். எனக்கோ பசி வேறு, கோபம் தலைக்கேறியது. நாற்காலிகளை நெருக்கமாக வேறு போட்டிருந்ததால் அங்கும் இங்கும் அசைய முடியவில்லை.

பின்னரும் பூசையினை இழுத்தடித்தார்கள். கடைசியில் வீட்டுக்கு வருகையில் மணி பன்னிரண்டு. வந்த பின்னர்தான் புரிந்தது. பூசை முடிந்த நேரம் சரியாக 11.30!

‘வெள்ளிக்கிழமை கோவிலில் 3 மணி நேரம் உட்கார்ந்திருப்பதா, என்று கேட்டீர்கள் அல்லவா. அதற்குதான் இன்று 3 மணி நேரம் உட்கார்ந்தீர்கள்’ என்று எனது மனைவி கிண்டல் செய்ய, அக்காவும் நானும் ஒருவரையொருவர் பார்த்து அர்த்தமாக புன்னகைத்துக் கொண்டோம்.

அதன் அர்த்தம் எனது மனைவிக்கு புரியவில்லை.

-oOo-

வெள்ளிக்கிழமை பூசைக்கு கோவிலுக்கு போகும் கட்டாயம், எனக்கு எப்பொழுது நின்றது என்று தெரியவில்லையாயினும் எனது மூத்த அண்ணன் எப்பொழுது நிறுத்தினான் என்று எங்களுக்கு மறக்காது.

அவன் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த பின்னர், வீட்டு ஒழுங்குகளிலிருந்து தானாகவே சில சலுகைகளை உருவாக்கிக் கொண்டான். இவ்வாறுதான் புனித வெள்ளிக்கு முன்னர், ‘மூன்று மணி நேரமெல்லாம் என்னால் கோவிலில் உட்கார முடியாது’ என்று சொல்ல, ‘அப்படியென்றால் வியாழக்கிழமை மாலை சர்வீஸுக்கு போய் வந்து விடுவதாக எங்கள் அம்மாவுடன் சமாதானமாயிற்று.

அக்காவும் கூட போக, தனது நண்பர்களிடம் ‘இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் வந்து விடுவதாக’ அவன் கூறிப்போனது எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது.

ஆனால், சர்வீஸ் (தியானம்) ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்கள் இருக்கையில், மிக மிக அரிதாகவே மின் சப்ளை நிறுத்தப்படும் எங்கள் தெர்மல் நகரிலேயே (Thermal Nagar) மின் இணைப்பு துண்டிக்கப்பட கோவிலுக்குள் இருட்டில் விசிறியும் இல்லாமல் வேர்த்துக் கொட்ட உட்கார்ந்திருக்கிறார்கள். கடைசியில் மின் இணைப்பு வந்து கோவில் முடிந்த பொழுது சரியாக ‘மூன்று மணி’ நேரம் கடந்திருந்ததாம்.

வீட்டுக்கு வந்து அக்கா சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்!

Miracles do happen...sometimes

மதுரை
210308





VELANKANNI CHURCH

16.3.08

பெண்கள் தத்து எடுக்க இயலாதா?





‘திருமணம் நிலுவையில் இருக்கையில் இந்துப் பெண்கள் தத்து எடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம்’ (Hindu woman can’t adopt child when marriage holds)

இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினைப் பற்றி, 18.01.08 அன்று இந்து நாளிதழில் வெளிவந்த செய்தியின் தலைப்பு. இந்த தலைப்பானது, ஏதோ இந்து சட்டத்தில், தத்து எடுப்பது குறித்து ஆண்களுக்கு உள்ள உரிமை பெண்களுக்கு இல்லை என்பது போன்ற தோற்றத்தினை உருவாக்குகிறது.

ஆனால் அப்படி ஏதும் இல்லை என்பதுதான் உண்மை!

இந்து தத்துச் சட்டப்படி (Hindu Adoptions and Maintenance Act) திருமண உறவிலிருக்கும் ஆண், தனது மனைவியில் அனுமதியின்றி தத்து எடுக்க முடியாது. ஏனெனில், தத்து எடுத்த பின்னர் மனைவியும், தத்து தாய் (Adoptive Mother) என்ற சட்ட தகுதிக்கு உள்ளாவார் என்பதால் மனைவியின் அனுமதி கட்டாயம் தேவை. சுருக்கமாக, கணவன் மனைவி இருவரும் இசைந்தாலே தத்து எடுப்பது சாத்தியம்.

இப்படி ஆணுக்கு ஒரு கட்டாயம் இருக்கையில், பெண்ணிற்கு தனியாக தத்து எடுக்கும் உரிமையளித்து சட்டப்பிரிவு ஏதும் தேவையில்லையே!

***

உச்ச நீதிமன்றத்தின் முன் வந்த வழக்கில் அந்தப் பெண்ணில் கணவர் பலவருடங்களாக எங்கு சென்று என்னவானார் என்று தெரியவில்லை. திருமணமும் விவாகரத்து பெறப்படவில்லை. இவ்வாறான நிலையில் திருமணம் உறவு தொடருவதாகத்தான் கருதப்படும். எனவே அந்தப் பெண் தன்னிச்சையாக தத்து எடுத்ததாக, அவரது தத்து புத்திரனால் கூறப்பட்ட வாதம் நிராகரிக்கப்பட்டது.

பெண் பிரிந்து போய், விவாகரத்து பெறும் முன்னர் ஆணால் தன்னிச்சையாக தத்து எடுக்கப்பட்டிருந்தாலும், அதனையும் செல்லாது என்று இந்த தீர்ப்பினை வைத்தே கூற இயலும்.
இந்துவின் தலைப்பு, படிப்பவர்களை தவறான புரிதல்களுக்கு (misleading) இட்டுச் செல்லக்கூடும் என்றே நினைக்கிறேன்.

மதுரை
160308




EXPRESSIONS OF NATURE & CULTURE, ALAGAR KOIL, MADURAI

7.3.08

பறவைகள் பலவிதம்!

இன்றைய கோகுலம் இதழில், போன வருடம் எனது மகள் அனுப்பிய கவிதை...







இதனை எவ்வாறு கூறுவது என்று தெரியாதலால், கவிதை என்கிறேன். எனது நவீன கவிதை நண்பர்கள், இது கவிதையா? என்று சண்டைக்கு வர வேண்டாம் :-)


மதுரை
07.03.08