16.1.09

அழிப்பது ‘புலி’களின் குணமே!

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியப் பெண்களுக்கான தேசிய கூட்டமைப்பு (National Federation of Indian Women) என்ற சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிப் பேராண்மை மனுவினை (Writ Petition) தாக்கல் செய்தது. அதாவது தணிக்கை குழுவினரால் (Censor Board) தடை செய்யப்பட்ட திரைப்படக் காட்சிகளையும், பாடல்களையும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பேருந்துகளில் ஓளி/ஒலிபரப்புவதை தடுக்க போதிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வேண்டும் மனு.


பொதுவாக எனக்கு இது போன்ற மனுக்களில் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது. நானும் வழக்குரைஞர் நண்பர் ஒருவருக்காக முன்பு 'அரசு அனுமதித்த நபர்கள் தவிர மற்றவர்கள் தங்களது வாகனங்களில் சிவப்பு விளக்கினை பயன்படுத்துவதை உடனடியாக தடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்' என்று ஒரு மனு தாக்கல் செய்து அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் ஏதும் பலன் இல்லை!


‘இன்னார்’ சிவப்பு விளக்கினை பயன்படுத்துவதாக கூறி ஒரு அவமதிப்பு மனு (Contempt Petition) போடலாமா? என்றால், வழக்கு தாக்கல் செய்த நண்பர் ‘ஏன், நான் ஒழுங்காக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா’ என்கிறார்.



***


சமீபத்தில் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு வழக்குரைஞர்களின் கருத்துகளை கேட்டபின்னர், ‘படக்காட்சி என்றால் சரி, படக்காட்சியோடு இணையாத பாடல் (Audio without any accompanying visual display) மட்டுமென்றால் அந்தப் பாடல் காட்சி தணிக்கைத் துறையினரால் தடை செய்யப்பட்டிருந்தாலும் திரைப்பட சட்டத்தின் (Cinematograph Act) எந்த ஒரு பிரிவினையும் மீறியதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.


ஆனாலும் குத்துப்பாட்டு போடுபவர்கள் ஒரேடியாக மகிழ்ந்து விட வேண்டாம். வெறும் பாடல் என்றாலும், பாடல் வரிகள் அநாகரீகமாக (obscene) இருக்கும் பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.


இந்திய தண்டனைச் சட்டத்தின் 294ம் பிரிவு மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும்(annoy) வண்ணம் அநாகரீகமான பாடல்களைப் (obscene songs) பாடினால் மூன்று மாத தண்டனைக்கேதுவான குற்றம் என்று கூறுகிறது. இந்தப் பிரிவின் மற்றொரு பகுதி அநாகரீக செயல் (obcene act) புரிந்தாலும் குற்றம் என்று கூறுவதால், அநாகரீக பாடல்களை ஒலிபரப்புவதும் குற்றமே!


‘அப்சீன்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு பொருத்தமான தமிழ் வார்த்தை எனக்குத் தோன்றவில்லை. தமிழறிஞர்களைக் கேட்டால், முதலில் அப்சீன் என்றால் என்னவென்று வரையறு என்பார்கள்.


***


அநாகரீக பாடல் கூடாது. இந்தப் பாடலைப் பாடலாமா?

இதோ வருகுது யுத்தம்
துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்


பகைவனுக்கருள்வது பிழை
வா

பகைவனை அழிப்பது முறை
ம்ம்ம்...பொறுப்பது புழுக்களின் குணம்
அழிப்பது புலிகளின் குணமே!

எட்டிப்போ
இதோ வருகுது புலி
யுத்தத்தால் அடாவடி ஒழியுது
மனோபலம் வருகுது மொத்தத்தில்


பாடாவிட்டாலும் நேற்று கேட்டேன், ஏதோவொரு பண்பலை வானொலியில்!

விக்ரம் படத்தில், இளையராசா இசையமைப்பில், கமல்காசன் பாடிய இந்தப் பாடலுக்கு படம் வெளிவந்த காலகட்டத்தில் சில எதிர்ப்புகள் இருந்ததாக படித்த ஞாபகம். தற்பொழுது இல்லை போலும்.



நமது பேச்சுரிமை அதிகரித்திருப்பதற்காக நாம் மகிழலாம்!


மதுரை
160109









கண்ணுக்கு விருந்து...

13.1.09

வலைபதியும் நீதிபதிகள்!

கிழக்கு பதிப்பகம், பத்ரி நாராயணனை ஒருமுறை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அமெரிக்காவில் உள்ள பொருளாதார பேராசிரியர் ஒருவரும், நீதிபதி ஒருவரும் இணைந்து சட்டம், அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களைக் குறித்து விவாதிக்கும் ‘பெக்கர் போஸ்னர் வலைப்பதிவு’ (Becker-Posner-blog) என்ற பதிவினை எனக்கு அறிமுகப்படுத்தி, ‘இது போல இந்தியாவிலுள்ள நீதிபதிகளும் பதிவு எழுத முன் வருவார்களா?’ என்று வினவினார்.

‘இந்திய நிலையில் அப்படியொரு சாத்தியக்கூறு இல்லை’ என்றேன்.

ஆனால் இன்று தற்செயலாக வலையினை மேய்கையில், பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் கண்ணன் அவர்கள் கடந்த இருவருடங்களாக வலையில் எழுதி வரும் Justice Kannan, being non-judgmental என்ற பதிவு கண்ணில் பட்டது.


***

நீதிபதி கண்ணன், தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் மிக முக்கியமானதும், பழமையானதுமான சட்ட சஞ்சிகையான Madras Law Journalல் ஆசிரியராக, நீதிபதியாக பதவியேற்கும் முன்பு வரை பணியாற்றியவர்.

சட்ட சஞ்சிகை (Law Journal) என்பது, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தொகுத்து வெளியிடப்படும் பத்திரிக்கை. வாரசஞ்சிகைகளும் உண்டு, மாத சஞ்சிகைகளும் உண்டு. இவைகளை வாங்கி தொடர்ந்து படிப்பதன் மூலம், வழக்குரைஞர்கள் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அவற்றை தங்களது வழக்குகளில் பயன்படுத்துவார்கள்.
இவ்வாறான சட்ட பத்திரிக்கைகளின் தொகுப்பே, நாம் வழக்குரைஞர்களின் அலுவலகங்களில் காண்பது.

நீதிபதி கண்ணன், வழக்காடுவதோடு, எழுதுவதிலும் அதிக ஆர்வம் காட்டுபவர். பல்வேறு சட்டம் சம்பந்தமான கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

பல ஆண்டுகளாக நீதிபதியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சமீபத்தில்தான் அந்த வாய்ப்பு இவரை தேடி வந்தது. தமிழகத்தில் இவர் பதவியேற்றாலும், சில மாதங்களிலேயெ பஞ்சாப் உயர்நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.


***


மணற்கேணி தினத்தந்தி என்றால், நீதிபதி கண்ணனின் வலைப்பதிவு ஹிந்து படிப்பது போல இருக்கும். தீவிரமாக சட்டம் பற்றி அறிந்து கொள்ள அந்த வலைப்பதிவினை நாடலாம். இந்தியாவில் சட்டம் பற்றி விவாதிக்கும் மற்றொரு வலைப்பதிவினை எனக்கு பத்ரிதான் அறிமுகப்படுத்தினார். ஏற்கானவே நான் இங்கு சுட்டிக்காட்டியுள்ள Law and other Things.


***

நீதிபதி கண்ணன், அவர் நீதிபதியாக பதவியேற்பதற்கு முன்பிருந்தே பதிவு எழுதி வருகிறார். நீதிபதிகள், அதுவும் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதிவு எழுதுவது சாத்தியமான ஒன்றா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. முக்கியமாக நீதிபதி பாஸ்னர் கண்ணனைப் போல பேராண்மை (writ) மனுக்களை விசாரிக்கவல்ல நீதிபதியல்ல என்றே நினைக்கிறேன்.

பேராண்மை மனுக்களை விசாரிக்கவல்ல நீதிபதிகள், சமூகத்தை பாதிக்கும் பல விடயங்களில், தங்களை சொந்த கருத்துகளை அனைவரும் அறியும் வண்ணம் இவ்வாறு வெளிப்படுத்துவது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு கூட முக்கியமான விடயங்களில் ஹிந்துவில் கட்டுரை எழுதுகிறார்.

நீதிபதிகள், பொதுக்கூட்ட மேடைகளில் தங்களது கருத்துகளை தொடர்ந்து வெளிப்படுத்துகையில், கட்டுரை எழுதுவதும் வலைப்பதிவதும் சாத்தியமான ஒன்றுதான்.

உண்மையில், நீதிபதிகள் தங்களது சொந்தக் கருத்துகளை தீர்ப்பில் வெளிப்படுத்துவதை விட தங்களது சொந்த வலைப்பதிவில் வெளிப்படுத்துவது சரியான ஒரு செயலாகவே இருக்க முடியும்.

ஆனால், வலைப்பதிகையில் பதிபவர், தனது பதிவினை ஒட்டி எழும் விவாதத்திலிருந்து விலகியிருப்பது சாத்தியமில்லை. முக்கியமாக எதிர்வினைகளை அனுமதிக்கையில், சில தர்மசங்கடமான நிலைகளுக்கு வலைப்பதிபவரை இட்டுச் செல்லலாம்.

எனினும், இந்தியாவில் வலைப்பதியும் முதல் நீதிபதி கண்ணனானகத்தான் இருக்க முடியும். இந்த அவரது முயற்சி வரவேற்க்கத்தகுந்ததுதான்.


***

எதிர்காலத்தில் நானும் நீதிபதியாகக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், என்னால் இந்த பதிவினை தொடர முடியுமா என்று நான் சிந்திப்பதுண்டு. நீதிபதி கண்ணன் நம்பிக்கை தருகிறார். ஆயினும், சந்தேகம் இருக்கிறது.

நீதிபதி ஒருவேளை இதன் சட்டச்சிக்கல்களைப் பற்றி எழுதலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆயினும் குடிமக்களாகிய உங்களுக்கும் எனக்கும் உள்ள பேச்சுரிமை, அதை நமக்கு உறுதிப்படுத்தும் நீதிபதிகளுக்கு இல்லை, பாவம்!

மதுரை
120109





KODAIKANAL, FOUR YEARS AGO...

9.1.09

ஆடு மேய்க்கும் பயங்கரவாதியும், ‘ஐயா’ வீடும்!

ஆடு மேய்ப்பது ஒரு குற்றம் என்றால், அதைத் தவிர வேறு ஏதும் குற்றச் செயலில் ஈடுபடாதவர்கள்தாம், அவர்கள் இருவரும்...

அவர்களது கிராம எல்லைக்குள், கம்பீரமாக ஓங்கியுயர்ந்து புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டிடத்தினைப் பார்த்து, மற்ற கிராமவாசிகளைப் போல பெருமைப்பட்டவர்கள்தாம் அவர்கள்.

‘இது நம் கட்டிடம்’ ‘நம்மைப் போன்ற மக்களுக்கானது’ என்று மக்களாட்சித் தத்துவம் அவர்களை நினைக்க வைத்திருந்தது.

அதனால்தான், தங்களது ஆடுகளுக்காக, கட்டிடத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மதில்சுவர் மீது ஏறி தழைகளை ஒடிப்பதும் ஒரு தவறென்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.


***

அவர்களது துரதிஷ்டம், அந்தக் கட்டிடத்தில் பெருமைமிகு பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவரின் கண்களில், ஏதோ உள்ளேயே கட்டப்பட்டிருந்த தனது வீட்டில் திருட வந்தவர்களாகப் பட்டனர். அல்லது நாடு முழுவதும் எழுப்பி விடப்பட்டிருக்கும், பய உணர்ச்சியில் (fear psychosis) தன்னை தாக்க வந்தவர்களாகவும் நினைத்திருக்கலாம்.

‘விடாதே, பிடி அவர்களை’ என்றாராம், தனது காவலர்களிடம்.

இருவரில் ஒருவர் சுதாரிப்புடன் ஓட, மற்றவர் தான் என்ன செய்துவிட்டோம் என்று ஓடவில்லை.

தனது காவலரிடம் ஓடியவரை ‘அவனை சுடு’ என்று உத்தரவிட்டதாகவும், காவலர் தயங்கி மறுத்ததாகவும் தகவல்.

***

பிடிபட்டவரை, அருகிலிருந்த காவல் நிலைய அதிகாரி, மூன்று நாட்கள் தனது காவலிலேயே வைத்திருந்தாராம். கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது, முக்கியமான சட்டம்.

காவல் அதிகாரி இரக்கமானவர். பிடிபட்டவரின் உறவினர்களை, ‘ஐயாவைப் பார்த்து இரக்கம் காட்டச் சொல்லுங்கள். அவர் சொன்னால், வழக்கு ஏதும் இல்லாமல் விட்டு விடுகிறேன்’ என்று சொல்லித்தான் மூன்று நாட்கள் வைத்திருந்தாராம்.

ஆண்களாகப் போனால் ‘ஐயா’ கோபப்படுவார் என்பதால், பெண்களெல்லாம் கிளம்பி ஐயாவைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றாலும், ஐயாவை பார்க்க முடியவில்லையாம்.

வேறு வழியில்லாமல், காவல் அதிகாரி, ‘ஐயா வீட்டில் மரச்சாமான்களை திருட சுவரேறிக் குதிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்து’ நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார். ‘ஐயா வீட்டிலேயேவா’ என்று ஜாமீன் தாக்கல் செய்ய ஆளில்லை. தாக்கல் செய்தவரும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்னரே தயக்கத்தில் வாபஸ் வாங்கி விட்டாராம்.

***

ஏறக்குறைய ஒரு மாத நீதிமன்ற காவலுக்குப் பிறகு தற்பொழுது பிணை மனு (bail application) தாக்கல் செய்யப்பட்டு, கிடைத்து விட்டது!

நீதிபதி, ‘ஐயா வீடென்றால் பிணை கொடுக்கக் கூடாது என்றா இருக்கிறது?’ என்று வியந்தாராம்!

எனக்கும் வியப்பு, ‘அரசுக் கட்டிடத்தினை பயங்கரவாத தாக்குதலில் இருந்து எப்படிக் காப்பது’ என்று குழை ஒடிக்க வந்த பயங்கரவாதியை முன்னிருந்தி, தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருவதால்...

மதுரை
09.01.09






MUMBAI - PUNE HIGHWAY, DURING MONSOON...