25.10.12

சைபர் கிரைம்!


‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது சென்னை இணைய குற்ற தடுப்பு காவலர்களிடம் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டு புகார் அளித்த வலைப்பதிவர்களின் பதிவுகள் மூலம் மேற்போக்காக இதனைப் பற்றி அறிய முடிகிறது.

இந்தப் புகாரின் பெயரில், மூர்த்தி காவலர்களால் விசாரிக்கப்பட்டதாகவும் பின்னர் ‘போலி டோண்டு’வால் உருவாக்கப்பட்ட பதிவுகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. விசாரணை நிலுவையில் இருப்பதாக தெரிவித்தாலும், மூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டாரா அல்லது முன் ஜாமீன் பெற்றாரா என்ற விபரம் தெரியவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னர், இணைய குழுமங்கள் மூலம் விவாதித்துக் கொண்டிருக்கையில், ஒரு பெரிய எழுத்தாளருக்கும் முக்கிய பதிவர் ஒருவருக்கும் பிரச்னை உருவாகி எழுத்தாளர் மற்றவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க என்னிடம் ஆலோசனை கோரினார். இணையத்தில் ஏற்ப்படும் பிரச்னைகள், இணையத்தை தாண்டி வெளி உலகிலும் கசிந்து ‘ஜானி குவஸ்ட்டு’ கார்ட்டூன் சித்திரங்கள் போல உண்மையிலேயே காயத்தை ஏற்ப்படுத்தி விடுமோ என்று அஞ்சுகிறேன் என்று எழுதினேன்.

போலி டோண்டு பதிவுகளை தொடர்ந்து கவனித்து வந்தவன், இறுதியில் அதீத வெறுப்பின் உச்சத்தில் (or frustration) விடப்பட்ட சில கொலை மிரட்டல்களை கண்டு அதிர்ந்து போனேன். ‘இறுதியில் இதற்கு ஒரு முடிவுதான் இருக்கிறது. அது டோண்டுவின் கொலையாகக் கூட இருக்கலாம்’ என்ற தொனியில் எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவரின் மனநிலையில் அந்த மிரட்டல் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல என்று நினைத்தேன். நல்லவேளை பிரச்னை விரைவில் முடிவுக்கு வந்தது.

‘போலி டோண்டு’ பிரச்னை முடிவுக்கு வந்தாலும், காவலர் விசாரணை மற்றும் அதன் பக்க விளைவுகள் தமிழ் இணையத்தில் பெரிய மாறுதலை கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. Tamil Web World has lost its innocence!

-oOo-

தமிழ் இணையத்திற்கு வெளியே எனக்கு சாருநிவேதிதாவைத் தெரியாது, பின் நவீனத்துவம் தெரியாது...இங்கு பதிவர்களால் சங்கோஜமின்றி உபயோகிக்கப்படும் வார்த்தைகள் பல தெரியாது!

இங்கு எழுதப்படும் கருத்துகளும், அவை விவாதிக்கப்படும் தொனியும், உபயோகப்படுத்தப் படும் வார்த்தைகளும், வெளி உலகம் அறியாதவை!

உதாரணத்திற்கு மதுரை உயர்நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு நெருக்கமான ஒன்றிரண்டு வழக்குரைஞர்களைத் தவிர யாருக்கும், எந்தவொரு நீதிபதிக்கும், பணியாளருக்கும் வலைப்பதிவுகளைப் பற்றி தெரியாது. நான் தமிழில் இவ்வாறு எழுதுகிறேன் என்பதே ஆச்சரியமாக இருக்கும்.

வெளி உலகால் அதிகம் அறியப்படாதலாயே இங்கு வரைமுறையின்றி பல விடயங்கள் எழுதப்படுகின்றன. ஜெயமோகன் எம்ஜிஆர், சிவாஜியை பற்றி இணயத்தில் எழுதியதை ஆனந்த விகடன் வெளி உலகத்திற்கு கொண்டு சென்றதன் விளைவு நாம் அறிந்ததே!

எனவேதான் என்னுடைய அச்சம், தமிழ் வலைப்பதிவுகள் காவலர்களின் கண்காணிப்பில் வருகையில், எதிர்காலத்தில் மோசமான சில பின் விளைவுகள் நிகழலாம் என்பதுதான். சமயங்களில் சில நீதிபதிகள் நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறித்து வகுப்பெடுக்கையில், ‘ஆமாம், இந்தக் கண்ணியத்தை எல்லாம் எவ்வித எல்லைகளுமின்றி அங்கு இணையத்தில் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று என் நண்பர்களிடம் கிசுகிசுப்பேன்.

-oOo-

சரி, காவலர்களால் என்ன பிரச்னை?

ஒரு குற்றம் நடந்துள்ளதாக, காவலர்களிடம் புகார் அளித்தால் ‘முதல் தகவல் அறிக்கை’ (FIR) தயாரிப்பார்கள். பின்னர் அதன் மீதான விசாரணையை (Investigation) தொடங்குவார்கள். விசாரணைக்கு ஏதுவாக குற்றம்சாட்டப்படுபவர்கள் கைது செய்யப்படலாம். அதனை தவிர்க்க குற்றம் சாட்டப்படுபவர்கள் முன் ஜாமீன் பெற வாய்ப்புண்டு. அதனால், சிறைவாசத்தை தவிர்க்கலாமே தவிர நீதிமன்றத்தில் சரணடைந்து பின் பிணையில் வர வேண்டும். சரணடையும் தருணத்தில் சில அவமானங்களை சகிக்க நேரிடலாம். அதற்குப் பின்னரும் தினமும் சில காலம் காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ கையெழுத்திட நேரிடும். இதனால் ஏற்ப்படும் மன உளைச்சல் ஏராளம்.

முன் ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், இன்னும் மோசம். குறைந்தது மூன்று நாட்களாவது சிறையில் கழிக்க நேரிடும். மூர்த்தியின் வழக்கில், அவர் கைது செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். கைது என்பது கண்டிப்பானது அல்ல!

விசாரணை முடிந்து காவலர்கள் தங்களது இறுதி அறிக்கையினை (Final Report or Charge Sheet) தாக்கல் செய்வார்கள். விசாரணையில் குற்றம் நடைபெறவில்லை என்றால் வழக்கினை முடிக்க நீதிமன்றத்தினை கேட்டுக் கொள்வார்கள். இல்லை குற்றப்பத்திரிக்கை. அதற்குப் பின்னரே நீதிமன்ற விசாரணை!

இது அனைத்தும் முடிவதற்கு சில மாதங்களும் பிடிக்கலாம். சில ஆண்டுகளும் பிடிக்கலாம். விசாரணையில் இறுதியில் பல வழக்குகள் விடுதலையில் முடிந்தாலும் அதற்குள் அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஒரு தொழில்முறை குற்றவாளியாக இருந்தாலொழிய படும் பாடு சொல்லி மாளாது.

பலமுறை நாம், ‘இப்படி தப்பு பண்ணிட்டு தப்பிச்சு வந்துட்டானே’ என்று நினைக்கிறோம். ஆனால் குற்றவியல் வழக்குகளில் சிக்கி சின்னாபின்னமான குடும்பங்கள் பல உண்டு!

-oOo-

‘இணைய குற்றம் புரிந்தால்தானே, எனக்கு என்ன பிரச்னை?’ என்று வலைப்பதிவர்கள் பலர் நினைக்கலாம்.

இதனைப் பற்றி எழுத வேண்டும் என்று பலமுறை நினைத்தாலும், தேவையில்லாமல் ஒரு பீதியினை ஏற்ப்படுத்த வேண்டுமா என்பது மட்டுமல்லாமல், இந்த விபரங்களை யாரும் கெட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தி விடக்கூடாது என்று அச்சத்தாலேயே எழுதாமல் இருந்தேன். ஆயினும் தற்போழுது அதன் தேவை அதிகரித்துள்ளதாக உணருகிறேன்.

ஆள்மாறாட்டம், தகவல்களை திருடுவது, மோசடி போன்ற பலவகையான இணைய குற்றங்கள் இருந்தாலும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் (Information Technology Act’ 2000) பிரிவு 67ல் வரையறுக்கப்படும் குற்றம் கவனிக்கத்தகுந்தது. போர்னோகிராபி குற்றங்களை தடுக்கும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவினை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சுருக்கமாக அந்தப் பிரிவு,
‘Whoever publishes or transmits......any material which lascivious or appeals to the prurient interest or if its effect is such as to tend to deprave and corrupt person...extend to five years and with fine... என்று உள்ளது.

இந்தப் பிரிவில் மூன்று செயல்கள் குற்றமாகிறது. முதலிரண்டை விடுங்கள் அவற்றை lascivious அல்லது prurient interest என்பதற்கு விளக்கம் கூறுபவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். மூன்றாவது செயலாக கூறப்படுவது ஆபத்தானது. ஒரு ‘மனதைக் கெடுக்கும்’ எந்த ஒரு எழுத்துமே இங்கு குற்றமாகிறது.

அமெரிக்காவில் இருந்து எழுதப்படும் ஒரு வலைப்பதிவு திருநெல்வேலியில் உள்ள ஒருவரது மனதை கெடுப்பதாக கூறி வழக்கு பதிவு செய்வது என்பது காவலர்களுக்கு இயலும் செயல். அமெரிக்க வலைப்பதிவர் இந்தியா வரும் பொழுது, ஒரு விசாரணைக்கு வாருங்கள் என்று கூட்டிச் சென்று அப்படியே ரிமாண்ட் செய்து விட முடியும். பின்னர் அந்த வலைப்பதிவரின் எதிர்காலத்தையே சீரழிக்கவும் முடியும்.

கவனிக்கவும், வலைப்பதிவரை இந்தப் பிரிவின் கீழ் குற்றம் செய்ததாக நீதிமன்றம் தண்டிக்க வேண்டியதில்லை. அதிகபட்சம் வலைப்பதிவர் செய்யக் கூடியது, தான் எழுதியது இந்தப் பிரிவின் கீழ் வராது, குற்றமல்ல என்று கூறி உயர்நீதிமன்றத்தை அணுகி முதல் தகவல் அறிக்கையினை தள்ளுபடி செய்ய கோரலாம். அந்த காலகட்டத்திற்குள்ளாகவும் போதிய வேதனைகளை அந்த பதிவர் அனுபவித்து முடித்திருப்பார்.

பதிவுதான் என்றில்லை, பதிவில் எழுதப்படும் எதிர்வினை, பதிவில் தோன்றும் பிற பதிவுகளுக்கான சுட்டிகள் என்பவற்றையும் transmit என்று கூறி குற்றச்செயலாக்கலாம். மீண்டும் வலியுறுத்துகிறேன். இது குற்றமில்லை என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறலாம். ஆனால், பொய் வழக்கு என்று காவலர்கள் மீது வழக்கு தொடர்வது கடினம். அதுவரை பட்ட கஷ்டம் வழக்கிலிருந்து தப்பித்தாலே பெரிது என்று நினைக்க வைத்திருக்கும்.

-oOo-

காவலர்கள் ஏன் வலைப்பதிவர்களை துன்புறுத்த வேண்டும்?

மூர்த்தி வழக்கில் காவலர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளனர் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால், காவலர்களில் சில கறுப்பு ஆடுகள் உள்ளது. சிவில் வழக்குகளில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதில் வல்லவர்கள். வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு இந்தியரோ அல்லது இந்தியாவில் பெரிய நிறுவனமொன்றில் அதீத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஊழியரோ என்றால் அவர்களுக்கு அது பொன் முட்டையிடும் வாத்து. இன்னும் விளக்கமாக கூறத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

-oOo-

இணைய குற்ற தடுப்பு காவலர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ்தான் இங்கு எழுதப்படுபவை குற்றமாகும் என்பதல்ல. இந்திய தண்டனைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்காகவும், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

முன்பு ஒரு முறை, டென்மார்க் இதழில் வெளியான முகமது நபி பற்றிய கேலிச் சித்திரங்களை தமிழ் பதிவர் ஒருவர் தனது வலைப்பதிவில் வெளியிட்டார். இதுவே ஆனந்த விகடனில் வெளியானால் என்ன நடந்திருக்கும்?

பதிவில் கேலிச் சித்திரம் வெளியிடப்பட்ட விபரம் வெளியில் தெரிந்தால், வெளி உலகில் என்ன நடந்திருக்குமோ, அதுவே இங்கும் நடந்திருக்கும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 A கூறுவது சுருக்கமாக, ‘Whoever with deliberate and malicious intention of outraging the religious feelings of any class.........................insults or attempts to insult the religion or religious beliefs of that class..........extend to three years or with fine’

இணையத்திலும் சுதந்திரமாக அனைத்து மதங்களைப் பற்றியும் எழுதப்படுகின்றன. இதற்கு இந்தியாவில் எந்த மூலையில் இருக்கும் எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்படலாம். இணைய குற்ற தடுப்பு பிரிவுதான் வர வேண்டும் என்பதல்ல!

மதம் மட்டுமில்லை. அரசியல் தலைவர்கள், புனித பசுக்கள், நீதிமன்றங்கள் இங்கு பதிவர்களால் சகட்டு மேனிக்கு புரட்டியெடுக்கப்படுகிறார்கள். சத்ரபதி சிவாஜியைப் பற்றி ஆர்குட்டில் எழுதினார் என்று பெங்களூர்வாசி ஒருவர் பட்ட பாட்டினை நாம் அறிவோம். அவர் தப்பித்தது, எழுதியது குற்றமில்லை என்பதால் அல்ல. எழுதியதே அவரில்லை என்பதால். நாளை சர்தார் வல்லபாய் படேலைப் பற்றி எழுதுகிறீர்கள். நள்ளிரவு கதவைத் தட்டி குஜராத் போலீஸ் உங்களை அள்ளிக் கொண்டு ஆமதாபாத் போனால், எப்படியிருக்கும்?

நடிகை குஷ்பு திருமணத்திற்கு முந்தைய பாலுறவு பற்றி கூறியது, இங்கு இணையத்தில் எழுதப்படும் சில கருத்துகளோடு ஒப்பிடுகையில் ஒன்றுமேயில்லை. ஒன்றுமே இல்லாமல் போனாலும், எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன? அதனால் அவர் அடைந்த தொல்லைகள் எத்தனை?

எனவே, நேரமும், கெட்ட எண்னமும் கொஞ்சம் பணமும் இருக்கும் எவராலும், எவருக்கும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தொல்லைகள் கொடுக்க இயலும் என்பதே என் அச்சம்!

மதுரை
230909

47 comments:

Sridhar V said...

//காவலர்கள் ஏன் வலைப்பதிவர்களை துன்புறுத்த வேண்டும்?//

இதற்கு முன்மாதிரியாக திருச்சி தமிழர் ஒருவர் மும்பை போலிசால் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட சம்பவம் இருக்கிறதே. மராட்டிய மன்னன் சிவாஜியைப் பற்றிய அவதூறு தளம் அமைத்தார் என்று தவறான தகவலால் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டாலும், அவர் இழந்தது அதிகமே. நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தாலும் இழந்தது இழந்ததே :((

பதி said...

தெளிவாக பல விசயங்களை விளக்கியுள்ளீர்கள்...

ஆயினும் சில சந்தேகங்கள்..

//நேரமும், கெட்ட எண்னமும் கொஞ்சம் பணமும் இருக்கும் எவராலும், எவருக்கும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தொல்லைகள் கொடுக்க இயலும் //

அப்படியெனில், எதையும் எழுதவே கூடாதா??

ஏனெனில், இணைய ஊடக வளர்ச்சியானது கருத்துப் பரிமாற்றம் என்பதை விட செய்திப் பரிமாற்றத்திலும் முக்கியப் பங்காற்றுவதாக எண்ணுகின்றேன். ஒரு சிறிய மைனாரிட்டி கும்பல் பரப்பும் போலித்தகவல்கள் மட்டுமே வெளி வந்துகொண்டிருந்த காலத்திலிருந்து தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் நிலைமை பெருமளவு மாறியுள்ளது. ஆனால், செல்ல வேண்டிய தூரம் ஏராளம்.

இந்த மனம் புண்படும் போன்ற சாக்காட்டுகளைப் பற்றி எனக்கு சற்றே மாறுபட்ட கருத்து உள்ளது.

போனா நூற்றாண்டில், திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் (இன்றைய கன்னியாகுமாரி மாவட்ட பகுதிகள்) சில குறிப்பிட்ட இனப்பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுத்த எண்ணங்கள்/கருத்துக்கள் கூட மதிக்கத்தக்கவை தானா??.. அந்த கருத்துக்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நிலமை இன்று கூட மாறியிருக்குமா??

இன்றைக்கும் தமிழகத்தின் பெரும்பகுதிகளில், தென்மாவட்டங்களில், வட இந்தியாவின் பெரும் பகுதிகளிலும் நிலவி வரும் சாதிக்கொடுமையை நிகழ்த்துபவர்கள் வெளியே கொட்டும் தத்துவங்களின் பெயர் கூட கருத்துக்கள் தான்... அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் மனம் புண்படாமல் தான் அடுத்த கட்ட மாற்றங்களைப் பற்றி யோசிக்க வேண்டுமா?? ஏனெனில் சாதிக் கொடுமை, வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக கருத்து தெரிவிப்பது கூட யாரேனும்ம் மனதைப் புண்படுத்தும் அல்லவா??

விளக்கவும்...

Anonymous said...

First sensible post about what all can happen to you if you do cybercrime. Thanks Sir for the warning. Always remember once you write you can erase what you wrote in our blog, but not from the web. It is there somewhere and will come back to bite your back.

SurveySan said...

//எனவே, நேரமும், கெட்ட எண்னமும் கொஞ்சம் பணமும் இருக்கும் எவராலும், எவருக்கும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தொல்லைகள் கொடுக்க இயலும் என்பதே என் அச்சம்!
//

hm!

Anonymous said...

'Whoever publishes or transmits......any material which lascivious or appeals to the prurient interest or if its effect is such as to tend to deprave and corrupt person...extend to five years and with fine'

If so many publications including Kumudam, Vikatan, Times of India
will fall under this category.How many have been punished under this
category.

மாடல மறையோன் said...

Excellent blog post.

'Big brother is watching you' - Orwell wrote during the WW-II.

Now, such warning wont spring any surprise in us.

We are being watched every minute - and all that anonymity we enjoy in blog writing or internet surfing - will soon be a thing of past.

However, the whiteman will try to safeguard his individual liberty somewhat; whereas we Indians and Asians, will lose it completely.

Dickens was in his satirical best in his novel Hard Times in which, in a school, every student was assigned a number like our Police Constables.

When UIN (Unique Identification No) come to be tagged to each one of us, within 2011 - as Nilankeni assures, we, Indians, become numbers, not individuals. We deserve such insignificance.

Thanks for sharing a lot of legal information relevant to the bloggers.

saravana said...

Excellent Post!

You should have spend considerable time for this post. Thanks a lot!

Please Keep sharing your legal knowledge.

Anonymous said...

வரே வா.......... இது ஒன்னுதான் கெட்ட கேடுக்கு ரொம்பத் தேவை.

இன்னொரு லஞ்சம் வாங்குறதுக்கு தேவையான மாதிரி சட்டமும் எழுதிகிட்டாங்க போல்வே!!!!

போயி இருக்கிற அயோக்கிய அரசியல் வாதிகளை பூரா துடைச்சு சுத்தம் பண்ணிட்டு அப்புறம் வயித்த எரிஞ்சு உட்காந்து மனக் குமுறலை எழுதியாவது தீர்த்துக்கிறவிங்ககிட்ட வரச்சொல்லுங்க வக்கீலைய்யா, இதெல்லாம் ஒரு நாடா :((

TBCD said...

தகவல்களுக்கு நன்றி !

சென்ஷி said...

சிறந்த பதிவு!

PRABHU RAJADURAI said...

Sridhar,
I think, I have referred to the arrest of an innocent by Maharashtra Police

Pathy,
I have only pointed out the possibilities...enjoy blogging. You are free to criticize and express your opinions. Your strong opinions may hurt others and I would not blame you but take care not to give room for any wounded soul to take revenge on you by abusing the process of law.

Anonymous,
This blog, contrary to what it’s the title suggests is not on cyber crimes. On the other hand, it tries to speak about the fallout of exposing the blogs to others. I read with amusement RP Rajanayaham’s ‘Carnal Thoughts’. Why such stories, though they are interesting, are not published in our mainstream press? Immediately someone will file a case…This has happened to many TV Channels, Periodicals, Kushboo etc.

It is not that TOI or Ananda Vikatan are not prosecuted…In all the cases filed against Kushboo, India Today editor and publisher were also arraigned as a co-accused. They can meet the case with their resources…the question is whether an ordinary citizen can face the case with similar gusto?

I think, I stressed that it is not a question of punishment but the ordeal of undergoing a criminal prosecution.

PRABHU RAJADURAI said...

Saravana,

Thank you for your compliments. However I do not deserve it. Presently I am not finding time to write blog. Hence I compelled myself into write something but without any research. My Last three blogs are only ‘mokkais’

ஆர்.வேணுகோபாலன் said...

பல அருமையான தகவல்களை அளித்துள்ளீர்கள்! மிக்க நன்றி!

இராகவன் நைஜிரியா said...

ஐயா தங்கள் எழுதியிருப்பதைப் படித்தால், வலைப்பூவை விட்டு வெளியில் வந்துவிடலாம் போலிருக்கே...

பதி said...

//Pathy,
I have only pointed out the possibilities...enjoy blogging. You are free to criticize and express your opinions. Your strong opinions may hurt others and I would not blame you but take care not to give room for any wounded soul to take revenge on you by abusing the process of law.//

நீங்கள் சொல்வது புரிகின்றது. நான் உங்களுடன் விவாதிக்க கேட்கவில்லை. உண்மையிலேயே தெரிந்து கொள்ளத்தான் கேட்கின்றேன்.

நீங்கள் சொல்வதின் படி பார்த்தால் எது வேண்டுமானாலும் இணைய குற்றம் ஆகுமே?

இந்தி பற்றி, தீண்டாமை பற்றி, சினிமா விமர்சனம், அரசியல்வாதிகளைப் பற்றி என யார் எது சொன்னாலும் அது யாரேனும் மனதைப் புண்படுத்தி விட்டது என, எவர் மீதாவது புகார் கொடுக்கலாம் அல்லவா?

இல்லையெனில், நைஜீரியா இராகவன் சொல்லியிருப்பது போல், இணையத்திலிருந்து விலகியிருப்பதே மேல்....

Unknown said...

Definitely one of the best blogs about possibilities of misusing cyber crime law. Everyone need to be beware of what is being written by them.

cheena (சீனா) said...

mmmmmm -பயமாக இருக்கிறது - இப்படிப் பழி வாங்குவதற்கு சட்டத்தில் பல வழிகள் இருந்தாலும் - இப்படி ஒன்றும் சேர்க்கப்பட்டிருப்பதைக் கூறி நம்மை சாக்கிரதையாக இருக்கச் சொல்லும் இடுகை - தகவல பரிமாற்றத்திற்கு நன்றி

PRABHU RAJADURAI said...

Though for a long time I had the idea of writing about misusing law, I did not do so for the fear that I should not give room for creating unnecessary fear in the minds of the bloggers. Besides, I worried that no one should get wrong ideas about misusing the process of law.

We cannot afford to fear at everything. This may happen even otherwise. It is possible for your neighbour to lodge a complaint with the Police that you threatened to kill him, which is a serious offence under Section 506 (ii) of the IPC. It requires no evidence except the oral statement of the complaint. The case would not stand the scrutiny of law and anticipatory bails would be granted for this offence as a matter of course….but still one has to undergo a criminal prosecution.

It must be noted that filing a false complaint is also a criminal offence. If you have energies and time, you can chase him back to where he started but at the end of the day, you may feel enough is enough. Every blogger was angry at Poli dondu but now we pity Moorthy!

You may calculate the chances of you being foisted with such a case. The odds are at par with the chances of you, struck by a thunderbolt.

You might have heard about the misuse of Section 498A. If you are not, there is a blog on this subject by the affected individuals. I would begin my counseling to such persons that to take it in their stride as if they are affected by a mild attack. It is being treated like a common head ache but at the expenditure of some valuable time and money. We take care by watching our diet and doing regular exercise but not to the point of completely shunning meat or sweet. Is it not?

(Sorry for English. My kalappai is damaged)

மாடல மறையோன் said...

// They can meet the case with their resources…the question is whether an ordinary citizen can face the case with similar gusto?

I think, I stressed that it is not a question of punishment but the ordeal of undergoing a criminal prosecution.//

Yes, that is your point well taken, I hope, by the intensive bloggers also. For, I am just an amateurish one.

Your point will, however, act like a deterrent to bloggers from expressing themselves freely.

It will deter the so-called ordinary people the most. Barring a rare few, most Tamil bloggers are ordinary people.

'Man is born free but everywhere he is in chains' - Jean Jacques Rousseau. An eternal truth well said!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பயனுள்ள இடுகை. நன்றி.

புருனோ Bruno said...

//I think, I stressed that it is not a question of punishment but the ordeal of undergoing a criminal prosecution.//

நன்றாக கூறியுள்ளீர்கள்

butterfly Surya said...

தகவல்களுக்கு நன்றி.

ஜோதிஜி said...

கெட்ட நேரம், கெட்ட எண்ணங்கள்

உண்மைதான்.

புதிய பாதையை உணர்த்தியமைக்கு நன்றி. செந்திலுக்கும்.

செல்வமுரளி said...

நல்ல அறிவுறுத்தல். ஆனால் கருத்து சுதந்திரம் என்ற ஒன்றுதான் இங்கே மிகப்பெரிய சுதந்திரம். அதை நாம்தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்

Balakumar Vijayaraman said...

தகவல்களுக்கு நன்றி.

Unknown said...

Timely thoughts. Thanks for the lantern!

Unknown said...

Timely thoughts. Thanks for the lantern!

Anonymous said...

Sir,

Can this be a solution?

The bloggers can send their posts to somebody in abroad and post it via their IP without explicitly telling their identity. like 'Payon', 'IdlyVadai'.




Anonymous said...

அருமையான பதிவு!
நன்கு தகவல்களை திரட்டியிருக்கிறீர்கள்!
நன்றி!!

ராஜ் said...

சார்...அருமையான பதிவு..எளிமையான விளக்கங்கள்...Hats off... :)
பதிவை உங்கள் அனுமதி இல்லாமல் தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்...இந்த பதிவு பலரை சென்று அடைய வேண்டும்....

கிருஷ்ண மூர்த்தி S said...

mm

கிருஷ்ண மூர்த்தி S said...

மிகச் சரியான நேரத்தில்,போதுமான எச்சரிக்கைக் குறிப்புக்களோடு வெளிவந்திருக்கும் பதிவு இது!போலி டோண்டு விவகாரத்தில் நடந்ததுமாதிரியே இல்லாவிட்டாலும் கூட, இப்போது இணையத்தில் தங்கள் மனம்போன போக்கில் எழுதிவிட்டு, அப்போம் புகார், கைது என்று வந்த பிறகு சமரசத்துக்கு முயற்சி செய்ததாகவும் எதிர்த்தரப்பு அதை நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், போதுமான எச்சரிக்கைகளை செய்திருக்கிறீர்கள். எவரையும் தொட்டுச் சொல்லாமல் குறிப்பிடாமல் அதே நேரம், இங்கே உள்ள தண்டனைச் சட்டங்கள் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்படுகிற வாய்ப்பு இருக்கிறது என்பதையும்.நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள்! குறிப்பாக தகவல் தொழில் நுட்பச்சட்டத்தின் பிரிவு 67 இன் கீழ்

/ஒரு ‘மனதைக் கெடுக்கும்’ எந்த ஒரு எழுத்துமே இங்கு குற்றமாகிறது./

இதை இந்தப்பதிவைப் படிக்கிறவர்கள், பகிர்ந்து கொள்கிறவர்கள் எந்த அளவுக்குப் புரிந்து கொள்வார்கள் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை.இரண்டு அதற்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து, ஒரு பத்துப் பின்னூட்டமும் வந்து விட்டால் இணையத்தின் சர்வாதிகாரமும் எங்களிடமே என்ற மெத்தனம், அலட்சியம் வந்து வார்த்தைகளை விடுகிரவர்களை நான் நீண்டகாலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

/Whoever publishes or transmits....../

எழுதியவர் மட்டுமல்ல, அதை ஆதரித்தோ, பகிர்ந்துகொண்டோ பின்னூட்டமிடுகிறவர்கள் கூட இங்கே சிக்குவார்கள், சிக்கவைக்க முடியும் என்பதே இங்கே இணையப்போராளிகள் பலருக்கும் தெரியாது. நல்ல நேரத்தில், சரியான தெளிவைக் கொடுக்கும் பதிவு. மிகவும் நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

thanks for the info. sir.

என்னை மாதிரி சின்ன வயசுல எருமை மாடுகளை எப்படி மேய்ச்சேன் அப்படின்ற மாதிரி மட்டும் எழுதிட்டு, வேணும்னா கூடவே ஆத்திச் சூடி நாலை எழுதிட்டு போய்டுறது பாதுகாப்பானதுனு தோணுது.

ஒன்னொரு ஆப்சன் மேலே அண்ணன் சொன்னா மாதிரி எல்லாரும் வலைதளத்தை முடிட்டு சனநாயகம் வாழ்க.... கருத்துச் சுதந்திரம் வாழ்க... கான்ஸ்டிடூசன் வாழ்கனு வீதியில கோசம் போட்டுட்டு......

வழக்கம்போல மனசுக்குள்ள கோவப்பட்டுகிட்டு.... புழுங்கி சாகலாம்....:-)))))))))

வாழ்க தமிழகம்......

ராஜ நடராஜன் said...

இந்த பதிவு சட்டம் என்ன சொல்கிறது என்று தெளிவு ப்டுத்தினாலும் பலருக்கும் ஆணியே புடுங்க வேண்டாம் என்ற உணர்வையே உருவாக்கும் ஆபத்தான மறுபக்கமும் உள்ளது.

சமூக கட்டமைப்புக்களின் தவறுகள்,அரசியல் சீர்கேடுகள்,மதம் என்ற அடிப்படையிலேயே தனிமனித விமர்சனங்கள்,நையாண்டிகள்,கோபங்கள்,சொற் துஷ்பிரயோகங்கள் என உருவாகின்றன.

இந்தப் பின்னூட்டமிடும் நேரத்தில் தொலைக்காட்சி குத்துப்பாட்டே தமிழ் கலாச்சாரம் என்பது போல் பாடிக்கொண்டிருக்கிறது.சிலரால் திணிக்கப்படுவதாலோ அல்லது பலரால் ரசிக்கப்படுகிற ஒன்றாலோ திரைப்படம் குறித்து விமர்சிப்பதும் கூடத்தான் சட்ட வரமுறைக்குள் தவறானதாகி விடும்.

மதம் பரப்பலும்,மதம் பரப்பலுக்கு எதிரான குரலும் இங்கே மும்முரமாக விமர்சனங்களாகிக் கொண்டிருக்கும் போது பாண்டி பஜார்,பாரிஸ் கார்னர் சந்துக்குள்ளும் மதம் பரப்பலுக்கான முட்டைகள் குஞ்சு பொறித்துக்கொண்டிருப்பதை காவல்துறை கண்டு கொள்வதில்லையென்பது போன்ற துணிவான பின்னூட்ட பதிவர்களின் கருத்தை பதிவுலகில் மட்டுமே கொண்டு வரமுடியும்.

இணையம் என்ற கருத்து பகிர்வுகள் இல்லாமல் போயிருந்தால் ஈழப்பிரச்சினை,2G,மீனவர் பிரச்சினை,முல்லைப்பெரியாறு,கூடங்குளம் போன்ற பிரச்சினைகள் அரசு கட்டமைப்பால் எப்படி மக்களுக்கு பிம்ப படுத்தியிருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

சொற் பிரயோக தவறுகள் தவிர்த்து கருத்துக்கள் என்ற அடிப்படையில் பதிவுகள் வளர்வதை வரவேற்கிறேன்.எனவே சட்டம் என்ன சொல்கிறது என்பதை உணர்ந்து கொள்வதும் அதே வேளையில் சுதந்திரமான கருத்துக்கள் வெளிவருவதும் அவசியமான ஒன்றே.இல்லையென்றால் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்யா என அவர்களின் கருத்துரிமையை நினைத்து வருங்கால சந்ததியும் பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

வவ்வால் said...

வழக்குரைஞர் சார்,

//இதனைப் பற்றி எழுத வேண்டும் என்று பலமுறை நினைத்தாலும், தேவையில்லாமல் ஒரு பீதியினை ஏற்ப்படுத்த வேண்டுமா என்பது மட்டுமல்லாமல், இந்த விபரங்களை யாரும் கெட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தி விடக்கூடாது என்று அச்சத்தாலேயே எழுதாமல் இருந்தேன். ஆயினும் தற்போழுது அதன் தேவை அதிகரித்துள்ளதாக உணருகிறேன்.//

அதான் உங்க பேரை சொல்லி என்னை கூட ஒருத்தர் மிரட்டினாரே , நீங்கள் தான் சட்ட ஆலோசனையும் சொல்லி தந்திங்கண்ணும் சொன்னார் :-))

//எனவே, நேரமும், கெட்ட எண்னமும் கொஞ்சம் பணமும் இருக்கும் எவராலும், எவருக்கும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தொல்லைகள் கொடுக்க இயலும் என்பதே என் அச்சம்!//

சட்டப்படி நிவாரணம் கிடைத்தாலும் காவல் துறை நினைத்தால் கஞ்சி காச்சிவிடும் என மக்களை மிரட்டும் விதமாக சொல்வதன் நோக்கம், அனைவரும் பொத்திக்கொண்டு பிழைக்கும் வேலையை மட்டும் பாருங்க என்பதா?

இங்கே காவல் துறையின் சட்ட துஷ்பிரயோகம் குறித்து சட்ட அறிஞராக உங்களுக்கு கருத்து எதுவுமே இல்லையா?

ஜனநாயகம் ,கருத்து சுதந்திரம் எல்லாம் எழுத்தில் தான், பாதிப்பு இல்லாமல் வாழணும் என்றால் அடங்கி வாழ பழகு என அருமையாக சொல்லியுள்ளீர்கள் :-))

நீங்கள் சொல்லும் யதார்த்தம் மிக சரியே, பதிவுலகில் கொஞ்சம் பிராபல்யமாக இருப்பவரே , அதிகம் அறியப்படாதவரை சட்டம் சொல்லி மிரட்டி ,சட்டம் என் கையில் என வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, பொது ஜனம் ஆமாம் சாமின்னு வாழப்பழகினால் தான் பிழைக்க முடியும், வாழ்க போலி சனநாயகம் :-))

சட்டம் அனைவருக்கும் சமம், எனவே சட்டத்தின் படி நமக்கும் நீதி கிடைக்கும் என பொது ஜனம் சட்டத்தினை மதிக்கும் வரையில் தான் ,அமைதி நிலவும், தொடர்ந்து சட்டத்தின் பெயரால் பொது ஜனம் வஞ்சிக்கப்பட்டால், எவனாவது ஒருவன் சட்டமாவது கிட்டமாவதுன்னு கிளம்பிடுவான்!
--------------
பெங்களூர் சட்டக்கல்லூரிகளில் எளிதில் சட்டம் படிக்கலாம்னு சொன்னாங்க, நானும் ஒரு சட்ட படிப்புக்கு பதிவு செய்யலாம்னு பார்க்கிறேன் :-))
-----------------

VANGAPESALAM said...

eni ellorum face book il irunthu veliya vanga

Udhay said...

Excellent Post!
Keep sharing your legal knowledge.

Unknown said...

1976-ல் நாடெங்கும் எமர்ஜென்ஸி அமூல்படுத்தப்பட்டபோது ஜலந்தரில் வெளியாகிக்கொண்டிருந்த வீர் ப்ரதாப் நாளிதழின் தலையங்கத்தில் எதுவுமே எழுதப்படாமல் தலையங்க பகுதி முழுவதும் வெற்றிடமாக இருந்தது.

அதன் குறுக்கே ஒரு பெரிய ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை இருந்தது. அதன் மேல் உருது எழுத்துக்களில் இப்படி எழுதப்பட்டிருந்தது “என்னால் புலம்பவும் முடியாது, விண்ணப்பிக்கவும் முடியாது, என் விதி மூச்சுமுட்டிச் சாவதே” என்று...

Unknown said...

இதில் எரிச்சல்லூட்டக்கூடிய என்று ஒரு வார்த்தை இருப்பதாக அறிகிறேன். (Irritation) உண்மையா?

அப்படியெனில் நீங்க "ஹைய்யா எங்க தெருவுல ஒரு வாரமா கரண்ட்டே போவலயேன்னு" ஸ்டேட்டஸ் போட்டா, ஒரு மாசம் கரண்டு வராத எனக்கு அதப்பாத்தா எரிச்சல் வரும் தானே?

அப்ப நான் கம்ப்ளைண்ட் குடுத்தா, உங்கள தூக்கி உள்ள வெப்பாங்களா? என்ன கொடும சார் இது :(

இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க எத்தனிக்கிறேன் - உங்கள் அனுமதியோடு.

Unknown said...

Thanks for your information...

PRABHU RAJADURAI said...

Dear Koothadi,

You have my permission to translate or transmit any of my blogs but with a compliment to me. There is no such word as irritate in the relevant section

Prabhu Rajadurai

வருண் said...

***அமெரிக்காவில் இருந்து எழுதப்படும் ஒரு வலைப்பதிவு திருநெல்வேலியில் உள்ள ஒருவரது மனதை கெடுப்பதாக கூறி வழக்கு பதிவு செய்வது என்பது காவலர்களுக்கு இயலும் செயல். அமெரிக்க வலைப்பதிவர் இந்தியா வரும் பொழுது, ஒரு விசாரணைக்கு வாருங்கள் என்று கூட்டிச் சென்று அப்படியே ரிமாண்ட் செய்து விட முடியும். பின்னர் அந்த வலைப்பதிவரின் எதிர்காலத்தையே சீரழிக்கவும் முடியும். ***


சரி, உங்க கணக்குப் படி, ஒரு திருநெலவேலிக்காரணுக்குப் பிடிக்காமல் அமெரிக்காவிலேயிருந்து ஒரு தமிழன் கருத்தைச் சொல்லிட்டான்னா, அமெரிக்காவில் உள்ளவன் இந்தியா வரும்போது, அவனை அரஸ்ட் செய்யலாம்.

இப்போ கருத்துச் சொன்ன தமிழன், அமெரிக்க குடிமகன்/சிட்டிஷன், அவன் சொன்ன கருத்து அமெரிக்காவில் இருந்து என்றாலும் பிடிச்சு உள்ள போடுவீங்களா, என்ன?

PRABHU RAJADURAI said...

வருண்,

அமெரிக்காவில் அமெரிக்க குடிமகன்களுக்கு நேர்ந்த குற்றத்திற்கு பின் லேடன் சவூதி குடிமகன் என்பதால் விட்டு விட முடியுமா?

PRABHU RAJADURAI said...

இந்தப் பதிவு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்டது. தற்பொழுது மீள்பதிவு என்பதை புரிந்து கொள்ளவும். பின்னூட்டப்பகுதியில் நான் ஆங்கிலத்தில் எழுதிய இரு விளக்கங்களை சேர்த்தே படிக்கவும்

Unknown said...

அருமையான பதிவு

J.P Josephine Baba said...

கருத்துக்கள் ஆளுபவர்களுக்கும் உண்டு ஆளப்படுவர்களுக்கும் உண்டு. சனநாயக நாட்டில் மகேசன் கருத்தை விட மக்கள் கருத்தே பலம் பெற வேண்டும். அதையே வலைப்பதிவுகள் செய்கின்றன. அவ்வகையில் தகவல் தொழிநுட்ப சட்டம் மக்களை கருத்துக்களை ஒடுக்கும் சட்டம், அரசியல் அமைப்பு நமக்கு தரும் கருத்து உரிமைக்க்கு எதிரான சட்டம். ஆகவே எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தருமி said...

என்ன பண்றதுன்னு தெரியலையே ...!