25.12.09

எங்களுக்காக அழ வேண்டாம், ‘தி இந்து’வே!




நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனையை, ‘தூக்கம் வருகிறது என்று இந்த வருடம் தவிர்த்து விட்டாலும், காலை எட்டு மணிக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆயினும் கோவிலுக்கு வெளியேதான் இடம்!

பாதிரியார் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் ‘வெளிநாட்டு பழக்கமான கிறிஸ்துமஸ் குடில் வைத்தல், மரம் வைத்தல்என்பவற்றின் காரணங்களைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார். சுவராசியமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இறுதியில், அதனால்தான் இந்த வருடம் நமது கோவிலின் குடிலானது ஈழ மக்களின் துயரினை எடுத்துக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுஎன்று கூறியது உடனடியாக கவனத்தை ஈர்த்தது.

அந்த குடிலினை நோக்கி  நகர்ந்தேன்.......பின்னணியில் சிவப்பு நிறத்தில் ஈழ வரைபடத்துடன் ‘தூங்காதே தூங்காதே எங்கள் துயர் தீரும் வரை தூங்காதேஎன்று தொடங்கும் பாடல் வரிகளுடன் ‘பாலகன் இயேசுவைவாழ்த்தும் வாசகங்களால் அமைந்த குடில்.

இயேசு பிறந்த குடிசையின் கூரை கெரில்லாப் படைக்கான துணியில் வேயப்பட்டிருந்தது!

-oOo-

வருடா வருடம் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட ஆராதனையில் கண்டிப்பாக ஈழ மக்களின் துயர் ஏதேனும் ஒரு வகையில் பங்கு பெறும் மக்களிடம் நினைவூட்டப்படுகிறது என்று அப்பொழுதுதான் தோன்றியது.

கிறிஸ்தவத்தின் மற்ற பிரிவுகளில் உள்ள போதகர்கள், பொது விடயங்களில் தங்களது கருத்தினை எப்பொழுதேனும் வெளிப்படுத்துவதை பார்த்ததில்லையெனினும், கத்தோலிக்க பிரிவிலுள்ள பாதிரிகளில் சிலர் வெளிப்படையான மனித உரிமை ஆர்வலர்களாகவும், இடது சாரி சிந்தனையுள்ளவர்களாயும் இருப்பதை பார்க்கிறேன்.

நான் அவ்வாறு சந்தித்த பலர், தங்களது ஆழ்மனதில் இறைமறுப்பாளர்களாகவும் இருப்பார்கள் என்ற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு!

-oOo-

கிறிஸ்தவ அமைப்புகள், தங்களது ஆராதனையில் இவ்வாறு ஈழ மக்களின் துயரினை நினைவு கூறுகையில், இந்து மத அமைப்புகளுக்கு ஏன் அவ்வாறு தோன்றுவதில்லை.

சிதம்பரம், ஸ்ரீரங்கம் கோவிலை விடுங்கள்......முருகனின் அறுபடைவீடுகளில் முக்கியமான பழனி, திருச்செந்தூர் ஆலயங்களில் கூட ஈழ மக்களை முன்னிருத்தி வழிபாடு ஏதும் செய்யப்பட்டதாக செய்திகள் ஏதும் இல்லையே!

மனிதர்கள் கைவிடலாம்...கடவுளர்களும் கூடவா?

-oOo-

நான்காம் ஈழம் போர் உக்கிரமடைந்திருந்த பொழுது இந்த நாடு சிங்களர்களுக்கானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்என்றும் ‘சிறுபான்மையினர் எங்களுடன் இங்கு வாழலாம். ஆனால் சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் தகுதியில்லாத உரிமைகளை கோர இயலாது என்றும் கூறினார். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை ‘கோமாளிக்கூட்டம்என்று வர்ணித்ததன் மூலம் தான் பணியாற்றும் அரசாங்கத்திற்கு ராஜரீக தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்தினார். சமீபத்தில் ‘தற்போதய சூழலில் மாநிலங்களுக்கு அதிகாரம் தரும் 13ம் சட்டத்திருத்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்என்று கூறி அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.

இவ்வாறு, சிரீலங்கா முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகாவின் ‘இனவாதத்தை குறிப்பிட்டு தலையங்கம் எழுதும் நாளிதழ்...
                                                  
‘தி இந்து’!

ஆனால் எழுதிய தேதிதான் முக்கியம். பொன்சேகா தனது இனவாதத்தினை, வார்த்தைகளில் விஷமாக கொட்டிக் கொண்டிருந்த காலத்தில், ‘தி இந்துஅதைக் கண்டித்து மூச்சு விடவில்லை. ஏனெனில் ‘alls fair in love and war’!

தற்பொழுது பொன்சேகாவால் ராஜபக்சேவிற்கு பிரச்னை என்றவுடன், ‘தி இந்து இறந்த காலத்திற்குச் சென்று தலையங்கம் எழுதுகிறது.

சரிதான், லங்க ரத்னாவின் ஆதங்கம் நியாயமானதுதான்!

-oOo-

இந்த தலையங்கம் வெளிவந்த அதே நாளில் ‘தி இந்துவின் முதல் பக்கம் முழுவதும் வெளிவந்த செய்தி என்னவென்று தெரிந்தால் இன்னமும் வே(தனை)டிக்கையாக இருக்கும்.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், காங்கிரஸ் முதல்வர் அசோக் சவானைப் பற்றி மராத்தி பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளைப் போன்ற விளம்பரங்களைப் பற்றிய இந்துவின் புலனய்வு அறிக்கை!


விளம்பரத்தை செய்திகளைப் போல வெளியிடுவது தவறு என்று இது வரை தெரியாது. தெரியாமல், நான் ‘தி இந்துவில் வெளியாகும் இலங்கைச் செய்திகளை விளம்ப்ரம் என்று இதுவரை நினைத்து வந்தேன்...

மதுரை
25/12/09

3.12.09

நள்ளிரவு பூதங்களும் ஒர் அமெரிக்க பின் லேடனும்...



இன்னும் இரு நாட்களில் துயரமான ஒரு சம்பவத்தில் முதல் வருட அஞ்சலி. ஏற்கனவே உலகின் கவனமும் முழுவதையும் நியூயார்க்கின் பக்கம் திருப்புவதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டது. யாரும் எதனையும் மறந்துவிடக்கூடாது என்னும் அமெரிக்காவின் ஆதங்கம் புரிகிறது. நாமும் மறக்கவில்லை. உயிரையும், உறவினர்களையும் இழந்த அனைவரும் உங்களையும் என்னையும் போன்ற வானரர்கள்தான். அவர்கள் அனைவருக்கும் நமது அஞ்சலி.

முஷாரஃபோடு போட்டி போட்டுக் கொண்டு அமெரிக்கா கிளம்பி விட்ட வாஜ்பேயி இன்றய செய்தித்தாளின் ஒரு மூலையில் சின்னதாக வந்திருக்கும் ஒரு பெட்டிச் செய்தியினை பார்த்திருக்க வாய்ப்பில்லை. பார்த்திருந்தாலும், பல வருடங்களுக்கு முன்னர் ஒரு இந்திய நகரத்து மக்கள் சந்தித்த துயரம், அமெரிக்காவின் துயரத்திற்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை என்றும் ஆனால் சம்பந்தப்பட்ட பின் லேடன்கள் இன்னமும் வெளியே என்றும் ஒரு விநாடி சிந்தித்திருப்பாரா என்பதும் சந்தேகம்தான்.

அந்தச் செய்தியின் தலைப்பு 'Warren Anderson's Extradition: Government will make effort'. யார் இந்த வாரன் ஆண்டர்சன்? என்று உங்களில் யாரவது கேட்டால், உங்களை தவறு சொல்ல மாட்டேன். அது மூன்றாம் உலக நாடுகளின் தலைவிதி. ஒரு பதினெட்டு வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது.

நான் சிறுவனாக இருக்கையில் கேட்ட கதைகளில் கொள்ளி வாய்ப் பிசாசுகள் நடு இரவில் முழித்துக் கொண்டு உலா வரும் என்று கூறப்படுவதுண்டு. அப்படி ஒரு நாள் நிஜமாகவே நடந்தது, போபாலில். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து நாலாம் வருடம், டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி, சரியாக நள்ளிரவு தாண்டி அரை மணி நேரத்தில் 'மெத்தில் ஐசோசயனைடு' என்ற ரூபத்தில் பிசாசுகளும், பூதங்களும், பேய்களும், யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவன தொழிற்சாலையில் இருந்த தொட்டியில் இருந்து கிளம்பி நகரம் முழுவதும் கோர தாண்டவம் ஆடியது.

காலை விடிவதற்குள் ஏற்கனவே 2500 உயிர்கள், பெரும்பாலும் குழந்தைகள் பலியாகியிருந்தது. இரண்டொரு நாட்களில் பலியான உயிர்கள் 4000. நிரந்தர ஊனமடைந்தோர் எண்ணிக்கை குறைந்தது 20,000. அதற்கு இரண்டு மடங்கு மற்ற பல வகைகளில் காயமடைந்தவர்கள். வரப் போகும் பின் விளைவுகளையும், ஊனமுடன் பின்னர் பிறந்த குழந்தைகளையும் நான் சேர்க்கவில்லை. இதுதான் 'போபால் விஷ வாயு விபத்து'. விபத்தினை விட அதற்குப் பின்னர் நிகழ்ந்ததுதான் கவனத்துக்கு குறியது. முதலில் நடந்தது விபத்தா?

விபத்து நடந்து சில நாட்களிலேயே, Ambulance Chasers என்று கேலியாக அழைக்கப் படும் அமெரிக்க விபத்து சம்பந்தமான வக்கீல்கள் இந்திய மண்ணில் குமிந்து விட்டனர். இங்கு ‘நீர்மாலை வக்கீல்கள்’ என்று கிண்டல் செய்யப் படும் வக்கீல்கள் இவர்கள்தான். ஆனால் இதையெல்லாம் மீறி, இவர்களால் சாதாராண மக்கள் அடைந்த பலன்கள் ஏராளம்.

அந்த வக்கீல்களின் செலவிலேயே நூற்றுக் கணக்கான வழக்குகள் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன. வெற்றி பெற்றால் கிடைக்கும் நஷ்ட ஈட்டுத்தொகையில் ஒரு பகுதி வக்கீலுக்கு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில். அத்தகைய ஒரு ஏற்பாடு பிரிட்டிஷ் சட்டத்தினைப் பின்பற்றும் இந்தியாவில் குற்றம். இந்திய அரசாங்கம் சும்மா இருக்காதல்லவா? வழக்கம் போல Bhopal Gas Leak Disaster (Processing of Claims) Act என்ற சட்டம் கொண்டு வந்தது. அதன்படி எல்லா வழக்குகளையும் அரசுதான் நடத்த வேண்டும் என்று சொன்னது. பின்னர் தன் பங்குக்கு தானும் ஒரு வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்தது. எல்லா வழக்குகளும் ஒரே நீதிமன்றதின் முன்பு கொண்டு வரப்பட்டது.

யூனியன் கார்பைடு விபத்து இந்தியாவில் நடந்ததால் அமெரிக்க நீதிமன்றங்கள் அந்த வழக்குகளை விசாரிக்க கூடாது என்று வாதிட்டது. காரணம் அனைவரும் அறிந்தது. பாவம், இந்திய அரசாங்கம் தனது அட்டானி ஜெனரல் மூலமாக, 'இந்திய நீதிமன்றங்களை விட அமெரிக்க நீதிமன்றங்களில்தான் இத்தகைய விபத்து இழப்புகளுக்கு முழுமையான நீதி கிடைக்கும்' என்று வாதிட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இறுதியில் அமெரிக்க நீதிமன்றம் யூனியன் கார்பைடுக்கு சாதகமாக, 'வழக்கு இந்தியாவில்தான் நடக்க வேண்டும்' என்று தீர்ப்பளித்தது.

அது ஒரு தவறான தீர்ப்பு என்பது எனது கருத்து. அதோடு விட்டதா, இந்திய நீதித்துறை வழங்கப் போகும் தீர்ப்பை, 'சரியான நெறிமுறை கையாளப்படவில்லை' என்ற காரணத்தில் யூனியன் கார்பைடு பின்னர் அமெரிக்க நீதிமன்றத்தில் எதிர்க்கும் உரிமையினையும் அதற்கு தந்தது.

கொடுமை! இந்திய நீதித்துறையில் ஆயிரம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், சரியான நெறிமுறை இல்லை என யாரும் கூறி விட முடியாது. பிரதிவாதி மற்றும் குற்றம் சாட்டப் படுபவர்களுக்கும் இந்திய சட்டத்தில் கிடைக்கும் பாதுகாப்பு வேறு எங்கும் கிடையாது. கடந்த ஒரு வருடமாக அமெரிக்க அரசு செய்வது போல, எந்த வித வெளிப்புற தொடர்பும் இன்றி கைது செய்வதெல்லாம் இங்கு நடக்காது.

இந்திய மண்ணுக்கு வந்த பிறகு அமெரிக்க வக்கீல்களுக்கு வேலையில்லாமல் போய் விட்டது. இந்திய அரசுதான் ஒரே வாதி. வழக்குத் தொகையோ 3.3 பில்லியன் டாலர்!

-oOo-

ஐந்து வருடங்கப்ள் ஓடியது. டிரையல் கோர்ட் இடைக்கால வாரணமாக யூனியன் கார்பைடு 350 கோடி இந்திய ரூபாய்கள், தர வேண்டும் என உத்தரவிட்டது. யூனியன் கார்பைடு செய்த அப்பீலில், உயர்நீதிமன்றம் அதனை 250 கோடியாக குறைத்தது. யூனியன் கார்பைடு உச்ச நீதிமன்றம் சென்றது. இடைக்கால நிவாரணத்தை பற்றித்தான் மேல்முறையீடு.

மேல்முறையீடு நிலுவையில் இருக்கையில், திடீரென ஒரு சமரசம். யூனியன் கார்பைடுவுக்கும் இந்திய அரசுக்கும். பாதிக்கப் பட்ட யாருக்கும் இதில் சம்பந்தமில்லை. நீதிமன்றமும் அதனை ஒத்துக் கொண்டது. அதாவது யூனியன் கார்பைடு மொத்தமாக 470 மில்லியன் யு.எஸ் டாலர்கள் (1989-ல் ஒரு டாலர் 25 ரூபாய் என்று னைக்கிறேன்) வழங்க வேண்டும்.

இந்த சமரசம் பெரிய சர்ச்சையினை கிளப்பியது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டி மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. உச்ச நீதிமன்றமோ ஒன்றும் செய்ய இயலாது என்று கையை விரித்து விட்டது. அதாவது இந்த தீர்ப்பின் படி இறந்தவர்களுக்காக சுமார் 4000 முதல் 12000 டால்ர்கள் வரையும், நிரந்தர ஊனமடைந்தவர்களுக்காக சுமார் 2000 முதல் 8000 டாலர்கள் வரையும், காயமடைந்தவர்களுக்கு சுமார் 1000 முதல் 2000 டாலர்கள் வரை கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் கூறியது. ஈட்டுத் தொகையில் ஒரு தொகையினை பாதிக்கப் பட்டவர்களுக்காக ஒரு மருத்துவமனை கட்டவும் ஒதுக்கியது.

ஆனால் வருங்காலத்தில் பாதிக்கப் படபோகிறவர்களுக்காகவும், பாதிப்புடன் பிறக்கப் போகும் குழந்தைகளைப் பற்றியும் ஏதும் இல்லை. யூனியன் கார்பைடு இந்த தீர்ப்பினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது. ஏனெனில் இந்த சமரசம் இல்லையெனில், யூனியன் கார்பைடு திவாலாகி இருக்கும். இந்த திடீர் சமரசத்திற்கும், யூனியன் கார்பைடுவின் மகிழ்ச்சிக்கும் வேறு ஒரு காரணம் இருந்தது.

இந்த சமரசத்துக்கு சில தினங்கள் முன்பு, யூனியன் கார்பைடுவின் அமெரிக்க தொழிற்ச்சாலையினை சோதனையிட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் (legal formalities) முடிந்தது. இதில் என்ன யூனியன் கார்பைடுவிற்கு கவலை? அந்த சோதனை நடந்திருந்தால் யூனியன் கார்பைடுவின் அமெரிக்க தொழிற்சாலைக்கும் இந்திய தொழிற்சாலைக்குமான பாதுகாப்பு நெறிமுறைகளின் (safety standards) வித்தியாசம் வெட்ட வெளிச்சமாகியிருக்கும். இந்திய தொழிற்சாலையில் குறைவான பாதுகாப்பு நெறிமுறைகள் கையாளப் பட்டதாக (அதில் சந்தேகமும் இல்லை) ஆதாரம் கிடைத்தால் யூனியன் கார்பைடுவை அந்த ஆண்டவனே காப்பாற்றியிருக்க முடியாது. ஆனால் இன்றும் அது ஒரு சக்தி வாய்ந்த நிறுவனம்.

அத்தகைய ஒரு ஆதாரத்தின் விளைவு ஈட்டுத்தொகைக்கான சிவில் வழக்கினை விட யூனியன் கார்பைடு நிறுவன அதிகாரிகள், முக்கியமாக அதன் தலைவர், முதலில் கூறப்பட்ட வாரன் ஆண்டர்சன் மீதான கிரிமினல் வழக்கில் அதிகம். இந்த சமரசத்தில் இடம் பெற்றிருந்த ஒரு சாரம்சம் சம்பந்தபட்ட நபர்கள் மீதான அனைத்து கிரிமினல் வழக்குகளும் வாபஸ் வாங்கப்பட வேண்டுமென்பதுதான்.

இத்தகைய ஒரு சாரம்சம் இந்திய குற்றவியல் சட்டத்திற்கே மாறானது. சில சிறிய கிரிமினல் வழக்குகளைத்தான் வாபஸ் பெற முடியும். இதனை நமது சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் ஒத்துக் கொள்ள, மறு பரிசீலனை மனுவில் இந்தச் ஷரத்து நீக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அனைத்தும் வீணாகி விட்டது. அதன் பிறகு நடைபெற்றிருக்க வேண்டிய சோதனை நடந்ததாகத் தெரியவில்லை.

எனவேதான் நேற்று காலை வந்த செய்தியினை படித்ததும் எனக்கு சிரிப்பதா இல்லை அழுவதா என்ப்று தெரியவில்லை. ஆண்டர்சனிடம் இப்போது போய் கூறினால் போபாலா? அது எங்கிருக்கிறது? என்பார். எக்ஸ்ராடிஷன் எல்லாம் நடக்கிற சமாச்சாரமா? உலக வர்த்தக மைய தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா என்ன எக்ஸ்ரடிஷன் நடவடிக்கையா எடுத்தது. ரஷ்யா முதல் எல்லாருக்கும் ஒரே கேள்விதான். நீங்கள் எங்கள் பக்கமா? இல்லை அவர்கள் பக்கமா? ஒசாமாவை, முல்லா ஓமர் ஒப்படைக்க மறுத்த போது ஜியார்ஜ் புஷ்ஷை விட சந்தோஷமடைந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரே கல்லில் பல மாங்காய்களென எல்லாவற்றையும் பொளந்து கட்டிவிட்டார். அவருக்கு தெரியுமா? அமெரிக்காவில் ஒரு பின் லேடன் இருக்கிறார் என்றும் பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு அவர் இங்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்றும்.

வாரன் ஆண்டர்சனின் நாய்க்குட்டியினைக் கூட இங்கு பிடித்து வர முடியாது.

பி.கு. எற்கனவே கிரிமினல் வழக்கின் கடுமையான சட்டப் பிரிவுகள், இந்த வழக்கில் இருந்து நீக்கப் பட்டு விட்டன. தற்போது வெறும் அஜாக்கிரதை (negligence) வழக்குதான் என்று நினைக்கிறேன். இதற்காக ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் தலைவரைப் போய் தண்டிப்பதா என்றால், கையை பின்புறமாக கட்டி விலங்கிடப் பட்டு கூட்டிச்செல்லப் பட்டார்களே, என்ரான் நிறுவன அதிகாரிகள், அவர்களை கோவில் கட்டி கும்பிடலாம். அமெரிக்க மக்கள் என்ரான் ஷேர்களில் இழந்த பணத்தை விட இந்திய உயிர்கள் ஒன்றும் கேவலமானதல்ல...

19.10.09

ஞாநி, கருணாநிதி மற்றும் உச்சநீதிமன்றம்

கட்டாய உடலுறவு கொள்ள (கற்பழிக்க) முயற்சிப்பது பெரும் குற்றம் அல்ல என்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சின்கா, பண்டாரி ஆகியோர் தீர்ப்பளித்திருப்பது இ.வா.அதிர்ச்சி. இந்தியன் பீனல் கோட் 511-ம் பிரிவின் கீழ் கொலை முயற்சிதான் குற்றம். ஆனால், வன்புணர்ச்சி முயற்சி குற்றமாகாது. கற்பழிப்புக்கான செக்ஷன் 376-ன் கீழும் முயற்சியைக் குற்றம் சாட்ட முடியாது என்றனர் நீதிபதிகள். ஜார்கண்ட் மாநிலத்தில் தாரகேஸ்வர் சாஹே என்பவர் 12 வயது சிறுமியுடன் கட்டாய உறவுகொள்ள முயன்றார். செக்ஷன் 354-ன் கீழ் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் (மாடஸ்டி) குலைத்ததாக மட்டுமே தாரகேஸ்வரரைக் குற்றம் சாட்டலாம் என்று தீர்ப்பு தரப்பட்டது!


பத்தி எழுத்தாளர் ஞாநி தனது சட்ட அறிவினை வெளிச்சம் போட்டுக் காட்டும் மற்றொரு பதில்!

முதலாவது வன்புணர்வுக்கு முயற்சிப்பது பெரும் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாரகேஸ்வர் சாஹே வழக்கில் கூறவில்லை. இரண்டாவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 511ன் கீழ் கொலை முயற்சி குற்றம் என்று குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் எங்கும் குறிப்பிடவில்லை. மூன்றாவது 376ம் பிரிவின் கீழ் முயற்சியை குற்றம் சாட்ட முடியாது என்றும் நீதிபதிகள் கூறவில்லை. நான்காவது, சாஹே கட்டாய உறவு கொள்ள முயன்றார் என்று நிரூபிக்க தகுந்த சாட்சிகள் இல்லை என்பதை ஞாநி அறியார். ஆயினும் நேரில் பார்த்தது போல முயன்றார் என்று எழுத துணிகிறார்.

உண்மையில், ஞாநி அந்த தீர்ப்பை படிக்கவில்லை. ஆனால் தீர்ப்பைப் பற்றி இந்தியன் எக்சுபிரசு இதழில் வந்த செய்தியினை படித்திருக்கிறார். அந்த செய்தியில் குறிப்பிடப்படும் 511, 376 மற்றும் 354 ஆகிய பிரிவுகளை ஞாநி, அது என்ன என்று புரியாமலேயே தனது வாசகர்களுக்கு எடுத்து ஊட்டியுள்ளார்.

தமிழ் பத்தி எழுத்தாளர்களின் தரம் இந்த அளவுக்கு, திண்ணையில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிக்கும் அளவிற்கு தாழ்ந்து இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை!

-oOo-


சாஹே என்பவர் ஒரு சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்றார் என்று குற்றம் சாட்டப்படுகிறார். வன்புணர்வு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375ல் விளக்கப்படுகிறது. சாஹே மீதான குற்றம் அப்படி முயற்சித்தார். பிரிவு 511 என்பது எந்த ஒரு குற்றத்தையும் செய்ய முயற்சித்தால், அந்த குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி வழங்கப்படலாம் என்று கூறும் பிரிவு. எனவே சாஹே குற்றம் சாட்டப்பட்டது 375 மற்றும் 511ன் கீழ்.

ஆனால் கொலை முயற்சிக்கு மட்டும் தனியே பிரிவு உள்ளது. பிரிவு 307ன் படி கொலை முயற்சிக்கு 10 வருடம் தண்டனை வழங்கலாம் என்று உள்ளதால், கொலை முயற்சிக்கும் 511க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

சாஹே வழக்கின் சாட்சிகளை பரிசீலித்த நீதிபதிகள், வன்புணர்வு கொள்ள முயற்சித்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால், சாட்சிகள் சாஹே சிறுமியை மானபங்கப்படுத்தியுள்ளார் (outraging the modesty of a woman) என்பதை நிரூபிக்க போதுமான சாட்சிகள் உள்ளன என்று கூறி அதற்கான பிரிவு 354ன் கீழ் சாஹேயை தண்டித்துள்ளனர்.

-oOo-

வ்ன்புணர்வின் முக்கிய கூறு பிறப்புறுப்பில், ஆணுறுப்பை நுழைப்பது. எனவே அவ்வாறான் எண்ணமும், அதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு வகையான செயல்களை செய்வது வன்புணர்வாகாது. மாறாக பிரிவு 354ன் கீழ் வரும்.

இப்பொழுது மீண்டும் ஞாஞியின் பதிலினை படித்தால் எவ்வளவு தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்பது புரியும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இணையத்தில் கிடைக்கிறது. கொஞ்சம் நேரம் செலவழித்து படித்திருந்தால், இப்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது அபாண்டமாக பழி சுமத்தியிருக்க மாட்டார்...

-oOo-

ஆயினும் நீதிமன்ற அவமதிப்பு புரிந்துள்ளார் என்று போட்டு கொடுக்க மாட்டேன்.  ஆனால் ஞாஞி ஒன்றுமே இல்லாத விடயத்தில் சட்ட வல்லுஞர் போல நீதிமன்ற அவமதிப்பு என்கிறார்....அவமதித்தவர் கருணாநிதி அல்லவா?




நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்படுகிறார் என்று கூறுவதற்கும் நீதிமன்றத்தால் இழுத்தடிக்கப்படுகிறார் என்று கூறுவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு!

முதலாவது அரசு (காவல்துறை) மீதான விமர்சனம். இரண்டாவது நீதிமன்றம் மீதான விமர்சனம். ஆனால் இரு விமர்சனம் ஒருவர் வைப்பதற்கு நமது நாட்டில் உரிமை உண்டு. அதனை அவமதிப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாது.

கருணாநிதி கூறியது முதலாவது வகை. ஆயினும் அவரது பதிலினை படிக்கும் யாருமே, கேள்விக்கு பொருத்தமில்லாத பதிலினை கூறியிருக்கிறார் என்று கூறுவார்களே தவிர நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்று கூற மாட்டார்கள்.

ஆனால், ஞாஞிக்கு கருணாநிதி என்றாலே நிதானம் தவறி விடுகிறது.


-oOo-


நீதிமன்ற அவமதிப்பு என்பதே ‘பேச்சுரிமையை பாதிக்கும் ஒரு சட்டம் என்று முற்போக்குவாதிகளால் விமர்சனம் வைக்கப்படும் காலத்தில், ஞாஞி நீதிம்னற அவமதிப்பு பூச்சாண்டி காட்டுவது அபத்தமாக உள்ளது.

அது சரி, வன்புணர்வை சரி கட்டாய உடலுறவை ‘கற்பழிப்பு என்று குறிப்பிட்டு விளக்குபவர்கள் முற்போக்குவாதிகளாக இருக்க முடியாதுதான்.

மதுரை
19/10/09

17.10.09

சோனியாவை முந்திய கருணாநிதி!





ஆனந்த விகடன், குமுதம் மூலம் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பத்தி எழுத்தாளரான ஞாநி, தனது இணையதளத்தில் அளித்த ஒரு பதிலில் மேற்கண்ட கருத்தினை தெரிவித்துள்ளார்.

ஞாநி சட்டம் பற்றி எழுதும் பத்திகளில், ‘முழுமையான ஆய்வினை மேற்கொள்கிறாரா?’ என்ற எனது சந்தேகம் மேலும் வலுப்பெறும் வண்ணம், மேற்கண்ட பதிலிலும், தவறான சில கருத்துகளை கூறியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை பதில் முழுவதுமே தவறானது. நமது அரசியலமைப்பு சட்டம் வருவாய் தரக்கூடிய அரசுப் பணியில் இருப்பவர்கள் மட்டுமே பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதையோ அல்லது பதவி வகிப்பதையோ தடை செய்கிறது. (Art 102(1) (a) & 191) மற்ற பணி அல்லது சுயதொழில் மூலமாக வருவாய் ஈட்டுபவர்கள் பதவி வகிக்க எந்த தடையுமில்லை.

தனியார் பணி என்று கூட இல்லை, நகராட்சியில் கணக்காளராக உதவி கணக்காளராக பணியாற்றும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. (1985 (1) SCC 151 Ashok Kumar Bhattacharyya Vs Ajoy Biswas)

ஏன், தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தில் (Employees State Insurance Corporation ESI) மருத்துவராக பணியாற்றுபவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் ESIல் பணிபுரிவது அரசுப் பணியல்ல என்று கூறி அனுமதித்தது.

அடுத்த தவறு, இந்த தடையின் நோக்கம், ஞாநி கூறுவது போல ‘எம்.பி. பணி என்பது மக்களுக்கான சேவை’ என்பது அல்ல. மாறாக சட்டமன்ற ஊழியராக இருப்பவரின் கடமைகளை அவரது சொந்த நலன்கள் பாதிக்கக் கூடாது என்பதுதான் என்றும் மேற்கண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக் காட்டப்படுகிறது.

மூன்றாவது தவறு தேவையில்லாமல், அம்பேத்கரையும் துணைக்கு அழைத்தது. மேற்கண்ட தடையினைப் பற்றிய எவ்விதமான விவாதமும் இல்லாமலேயே அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு அதனை ஏற்றுக் கொண்டது. எனவே அம்பேத்கர் அந்தப் பிரிவினைப் பற்றி என்ன கருதினார் என்பதும், ஞாநி எங்கே படித்தார் என்று விளங்கவில்லை.

எனவே சட்டமன்ற உறுப்பினர் பதவியினை ஒருவர் இழப்பதற்கு, அவருக்கு வேறு வருவாய் இருந்தால் மட்டும் போதாது. அந்த வருவாய் அரசுப் பணியில் இருப்பதால் ஈட்டப்பட்டால் மட்டுமே, தகுதியிழக்க முடியும்!

-oOo-


அதே வலைத்தளத்தில் காணப்படும் மற்றொரு பதில்!

எனக்கென்னவோ இந்தப் பதிலுக்காகவே, கேள்வி வடிவமைக்கப்பட்டதாக தோன்றுகிறது. இந்த பதிலினை எழுதியது தங்கபாலு என்றால் தவறு என்று கூறியிருக்க மாட்டேன். ஆனால், வாசகர் தெளிவு பெறுவதற்காக இந்தப் பதிலினை கூறும் தோரணையில் ஞாநி எழுதியிருப்பதால், சில விளக்கங்களை அளிக்க வேண்டியதிருக்கிறது.

இந்திய விடுதலைக்கு மகாத்மா காந்திதான் காரணம் என்று கூறுவதே எவ்வளவு தூரம் பொருத்தமானது என்று தெரியவில்லை. மவுண்பேட்டன்தான் காரணம் என்று கூறினால் அபத்தம். குடும்ப வன்முறை சட்டம் மகாத்மா வகை என்றால், தகவல் அறியும் சட்டம் மவுண்ட்பேட்டன் ரகம்!

தகவல் அறியும் சட்டத்தின் வரலாறு 1966ம் ஆண்டு இந்தியாவும் கையெழுத்திட்ட ‘சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்’ (International Covenant on Civil and Political Rights) என்பதில் இருந்து தொடங்குகிறது, அடுத்து 1975ம் ஆண்டில் இந்திராகாந்தி தேர்தல் வழக்கில் ராஜ் நாராயணன் கேட்ட சில விபரங்களை அளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம், இந்தற்கான தேவை வலுப்பெற்றது.

பின்னர் பல்வேறு முயற்சிகள். உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்புகளில் சர்வதேச ஒப்பந்தங்களை மதிப்பதின் அவசியத்தினை வலியுறுத்தியது (AIR 1997 SC 3011, AIR 1999 SC 625)

2000ம் ஆண்டில் வாஜ்பாய் அரசால் Freedom of Information Bill 2000, தாக்கல் செய்யப்பட்டது 2002ம் ஆண்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றாலும், சில குறைபாடுகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆயினும் அந்த காலகட்டத்திலேயே, ராம் ஜேத்மலானி அரசு உத்தரவு மூலம் தகவல்களை பெற வழி செய்தார். ஆனால் அதிகாரிகளின் ஒத்துழையாமையால் அதுவும் முழுமை பெறவில்லை.

இறுதியில், மன்மோகன்சிங் பிரதம மந்திரியானதும், தற்பொழுதுள்ள தகவல் அறியும் சட்டம்’2005 நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் சோனியாவின் பங்கு, அவர் தலைமையில் இயங்கிய தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) இந்த சட்டதினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது.

-oOo-

இந்தியாவிற்கு முன்னதாகவே 55 நாடுகள் இந்த சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டன. முக்கியமாக பாக்கிஸ்தானில் 2002ல் அவசர சட்டம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே, இந்தியாவில் இந்த சட்டமானது காலத்தின் கட்டாயம் என்றுதான் கூற முடியுமே தவிர, சோனியாவுக்கு இதற்கான பாராட்டுதலை ஒரு அரசியல்வாதி தெரிவிக்கலாம்....பத்திரிக்கையாளர் தெரிவிக்க முடியாது.

ஞாநிக்கு உவப்பில்லாத மற்றொரு செய்தியும் இருக்கிறது. தமிழ்நாட்டில் தகவல் அறியும் சட்டம் 1997ம் ஆண்டு கருணாநிதி அரசால் இயற்றப்பட்டு அமுலில் இருந்து வருகிறது. தமிழக தகவல் அறியும் சட்டம்தான் இந்தியாவின் முதல் சட்டம். 1998ம் ஆண்டில் கோவாவில் இயற்றப்பட்டது. பின்னர்தான் மற்ற பல மாநிலங்களில்.

சோனியாவுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே கருணாநிதி, தகவல் அறியும் சட்டத்தினை இங்கு நடைமுறைப்படுத்திவிட்டார் என்பதற்காக ஞாநி கருணாநிதிக்கு பூச்செண்டை கொடுப்பாரா?

மதுரை
17/10/09

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஏன், விளையாட்டு மூலம் வருவாய் ஈட்டும் Professional Sportsperson களை தடை செய்யும் விதி ஏற்ப்படுத்தப்பட்டது தெரியுமா?






14.10.09

‘ஒரு பெண்’ என்றா தேடுவார்கள்?

நான் அடிப்படையில் ஒரு உரிமையியல் (civil) வழக்குரைஞர். குற்றவியல் வழக்குகளில் அவ்வப் பொழுது பங்கு கொண்டாலும், அவை பெரும்பாலும் காசோலை மோசடி, நில மோசடி போன்ற உரிமையியல் பிரச்னைகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரு கொலை வழக்கையாவது நடத்த வேண்டுமென்பதுதான் எனது உச்சகட்ட குற்றவியல் லட்சியம்!

மதுரை வந்த பொழுதில், மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீடு ஒன்றினை நடத்தித் தர வேண்டுமென்று, ஜூனியர் ஒருவர் கேட்கவும் உற்சாகமாக ஏற்றுக் கொண்டேன்.

குற்றம் சாட்டப்பட்டவர்...ம் வசந்தன் என்று வைத்துக் கொள்ளலாம். நகர பேருந்தில் பயணி. தனது இடம் வந்ததும், பேருந்தை நிறுத்த கேட்டுக் கொள்கிறார். நடத்துநர் அது விரைவுப் பேருந்து என்று அடுத்த நிறுத்தத்தில்தான் நிறுத்துகிறார். எரிச்சலுற்ற வசந்தன் இறங்கும் பொழுது படியில் நின்று கொண்டிருந்த நடத்துநரை தள்ளிவிட்டு இறங்கிச் சென்று விட்டார். தடுமாறி கொஞ்சம் ஏடா கூடமாக கீழே விழுந்த நடத்துநரின் விலா எலும்பு ஒன்று உடைந்து விட்டது.

நடத்துநரை கீழே தள்ளிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குச் சென்று விட்ட வசந்தன், அடுத்த நாள் செய்தித்தாளில் ‘பயணியால் தாக்கப்பட்ட நடத்துநர் மருத்துவமனையில் அனுமதி’ என்று பெட்டிச் செய்தியை துரதிஷ்டவசமாக பார்க்க நேரிட்டது. குற்ற உணர்வில் ‘அந்த நடத்துநரை தள்ளிவிட்ட நடத்துநர் தான்தான்’ என்று தாயாரிடம் கூற, அவரோ உடனே அரசு மருத்துவமனைக்குச் சென்று, அந்த நடத்துநரையே சந்தித்து தனது மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

நடத்துநருக்கு ஏற்பட்டதோ, இந்திய தண்டனைச் சட்டப்படி கொடுங்காயம் (grevious hurt) குற்றவாளியை எப்படி கண்டுபிடிப்பது என்று இருந்த காவலர்களுக்கு, அவராகவே வந்து மாட்டவும், உடனடியாக பிடித்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்து விட்டனர்.

கொடுங்காயத்துக்கு அதிகபட்ச தண்டனை ஏழு வருடம். குற்றவாளியின் எண்ணப்பாட்டினைப் பொறுத்து தண்டனை வழங்கப்படும். நீதிபதியோ கடுமையானவர். ஏழு வருடம் தீட்டி விட்டார்.

-oOo-

‘இதுக்கெல்லாமா ஏழு வருடம் கொடுப்பார்கள், மனிதத்தன்மையே இல்லையா?’ வழக்கைப் படித்த எனக்கு தோன்றியது இதுதான். ஒரு வருடமென்றாலும் எனக்கு இப்படித்தான் தோன்றியிருக்கும்.

‘சரி, ஏற்கனவே சிறையில் இருந்த சில மாதங்களை தண்டனைக்காலமாக குறைக்கச் சொல்லலாம்’ என்று நினைத்து வழக்கைப் படித்த எனக்கு நியாயமான சந்தேகம் ஒன்று தோன்றியது. சம்பவம் நடந்ததற்குப் பிறகு வசந்தனை, நடத்துநர் சாட்சி விசாரணை பொழுதுதான் பார்க்கிறார். பின்னர் எப்படி, வசந்தநன்தான், நடத்துநரை தாக்கியவர் என்று காவலர்கள் கண்டுபிடித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்? என்ற சந்தேகம்தான் அது.

காவலர் வழக்குகளை சோடிக்கத்தான் செய்வார்கள். வசந்தனின் தாயார் நடத்துநரைப் பார்த்த விபரமெல்லாம் இல்லாமல் அவர்களாகவே வசந்தனை கண்டுபிடித்த மாதிரித்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவரும், தாக்குபவரும் முன்பின் அறிமுகம் ஆகாத நபராக இருக்கும் பட்சத்தில், காவலர்கள் தாக்கியவர் என்று ஒருவரை கைது செய்தவுடன் ‘identification parade’ நடத்துவது அவசியமானது.

மேல்முறையீட்டில், இந்த ஒரு கருத்தை வைத்தே எனது வாதத்தை வடிவமைத்த நான், இறுதியில் குற்றம் செய்யப்பட்டதாகவே இருப்பினும், இத்தகைய ஒரு செயலை நாம் அனைவருமே நமது வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் செய்யக் கூடியவர்களாகவே இருக்கிறோம். நமது அதிஷ்டம், நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைவதில்லை...அமைந்தாலும் விலா எலும்புகள் எப்பொழுதுமே உடைவதில்லை. இந்தச் செயலுக்கு ஏழு வருடம் என்பது நியாயமா? என்றும் ஒரு கேள்வியை வைத்தேன்...

ஒரு வாரம் கழித்து ஜூனியர் என்னைச் சந்தித்து, ‘சார், அப்பீலில் வசந்தனை முழுசா விடுவிச்சிட்டாங்க’ என்று கூறிய பொழுது தரையிலிருந்து எழும்பி கொஞ்சம் உயரத்தில் பறப்பது போல இருந்தது.

-oOo-

மணற்கேணி வலைப்பதிவுகளை தெரிந்தோ அல்லது தெரியாமலோ கண்ணுறுபவர்களைப் பற்றிய புள்ளிவிபரங்களை தரும் வலைத்தளத்தில், மிகுந்த சுவராசியத்துடன் நான் பார்ப்பது, ‘தேடுபொறியில் எந்த வார்த்தையினைத் தேடி மணற்கேணிக்கு வருகிறார்கள் என்பது’.

இரு நாட்களுக்கு முன்னர், ‘ஒரு பெண்’ என்ற இரு வார்த்தைகளை கூகிளில் தேடி இங்கு வந்திருக்கிறார் ஒரு நபர். பெண் என்று தேடலாம், ஒரு என்று கூட தேட வாய்ப்பு உண்டு. ‘ஒரு பெண்’ என்றா தேடுவார்கள்?

எந்த நோக்கத்தில் ஒருவர் ‘ஒரு பெண்’ என்ற வார்த்தைகளை கூகுளில் தேடியிருக்கக்கூடும்?. பொழுது போகாத நேரங்களில், இந்தக் கேள்விக்கான விடையினை தேட முயல்வதுதான் தற்பொழுது எனது பொழுது போக்கு.

-oOo-


நேற்று மூத்த வழக்குரைஞர் ஒருவர், ‘எதற்காக சென்னை மியூசிக் அகாடெமியில் மலையாளிகளை வேலைக்கு வைப்பதில்லை தெரியுமா?’ என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை. அவர் சொன்ன பதில்...மெக்ஸிகோ சலவைக்காரியெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

நீங்களும் பொழுது போகாத நேரங்களில் யோசித்துக் கொண்டிருந்தால் கண்டுபிடித்து விடலாம்.

எனக்கும் பல சமயங்களில் தோன்றும். ‘இங்கே கவிஞர், எழுத்தாளர் என்று பீற்றிக் கொள்கிறார்களே. sixக்கும்  sexக்கும் என்ன வித்தியாசம்? என்று ஒரு நண்பர் கேட்டு அதுக்கு ஒரு பதில் சொன்னாரே, அந்த கிரியேட்டிவிட்டி முன்னால இவங்க கற்பனையெல்லாம் தூசுன்னு’

யார் சொல்லியிருப்பா, இத முதல்லன்னு இப்ப யோசிச்சுட்டு இருக்கேன்!

மதுரை
141009

26.9.09

யாருமற்ற ஒருவனும், மோடியும்!

சோம்பேறித்தனம் கெட்ட குணம்தான். ஆனால் ஒரு நன்மை இருக்கிறது. திரையரங்குகளுக்கு செல்லாமல் இருப்பது. ஆக, ‘உன்னைப் போல ஒருவ’னையும் பார்க்கவில்லை.

முன்பெல்லாம் திரைப்படம் பார்க்காவிட்டாலும், தொலைக்காட்சிகளில் துண்டு துண்டாக பார்த்து மனதில் கதையை ஒட்டிக் கொள்ளமுடியும். தற்பொழுது அந்த வசதியும் இல்லை. ஆனாலும், ‘உன்னைப் போல ஒருவ’னைப் பொருத்தவரை வலைப்பதிவுகளில் எழுதிக் குவிப்பவற்றைப் படித்து படித்து, ஏதோ படம் பார்த்தது போலவே இருக்கிறது.

கமல்ஹாசனின் ஆழ்மனதில் இருப்பதை பிய்த்துப் பிடிங்கி வெளியே எடுத்து, ‘பார், இந்துத்வா’ என்று ஒரு பக்கமும், ‘இல்லை, இல்லை முற்போக்குத்தனம்’ என்று இன்னொரு பக்கமுமாக நின்று பதிவர்கள் விவாதித்து வருவது என்னைப் போல வாசகர்களின் மனதை பெண்டுலம் போல இங்கேயும் அங்கேயும் அல்லாட வைக்கிறது!

‘இந்துத்வாவும் இல்லை, முற்போக்குத்தனமும் இல்லை. கமல் ஒரு வியாபாரி. அவருக்கென்று பெரிய கருத்து எல்லாம் அவரிடம் இல்லை. அவ்வப் பொழுது சந்தையில் எந்தக் கருத்து விலை போகுமோ, அதை வைத்து படமெடுப்பது அவரது தந்திரம்’ என்றும் சிலர்.

கலப்பு மணத்தை ஆதரிக்கும் எவரும், வகுப்புவாதியாக இருக்க முடியாது என்று நான் கருதுவதாலும், கமல் ஹாசன் என்றுமே ஒரு கருத்தினை தெளிவாக வெளிப்படுத்தியது இல்லை என்பதாலும்...நான் ‘வியாபாரி’ வகுப்பில் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கமல் திரைப்படங்களை வைத்து, பெரிதாக சொத்து சேர்க்க நினைக்கவில்லை என்றால், ஒரு வியாபாரி தனது வெற்றியை வெறுமே தான் பெறும் பண லாபத்தை வைத்து மட்டுமே கணக்கிடுவதில்லை என்பதுதான் என்னுடைய பதில்.

‘கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்...’ என கமல் எப்பொழுதெல்லாம் வேறு மொழித் திரைப்படமோ அல்லது காட்சியோ அவரை பாதிக்குமோ, உடனே அதனை தமிழில் எடுக்க முயலுவார். அப்படியே ‘வெட்னஸ்டே’ படக் கருத்தால் அல்ல, படத்தால் பாதிக்கப்பட்டே உபோஒ தயாரித்துள்ளார் என்று, பாவம் ஒரு பெனிபிட் ஆப் டவுட் கொடுத்து விடலாமே!

-oOo-

‘காமன் மேன்’ என்ற பொதுப்புத்திக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றும் அதற்கு வெடிகுண்டு வைத்த பயங்கரவாதம்தான் தெரியும் என்றும் அதற்கு முன் நடந்த பயங்கரவாதங்கள் தெரியாது என்றும் வாதிடுபவர்கள் கூறுவதைத்தானே, திரைக்கதையிலும் சொல்லப்படுகிறது. நடைமுறையில் என்ன இருக்கிறதோ, அதை மாற்றாமல் கமல் எடுத்திருக்கிறாரே!

-oOo-

தீவிரவாதிகளாக, இஸ்லாமியர்களை காட்டியுள்ளாராம். குண்டு வைத்த குற்றத்திற்காக, இஸ்லாமியர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டதே இல்லையா? இல்லாத ஒன்றை  படமெடுக்கவில்லையே. நிசத்தை பிரதிபலிப்பதுதானே திரைப்படமும்.

ஆனால் இந்த வாதத்திற்கு எதிராக ‘இஸ்லாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் இல்லை. ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்கள்’ என்று ஒரு சந்திராயன் கண்டுபிடிப்பு எடுத்து வைக்கப்படுவதுதான் விந்தை!



அரசிடமும், நிலுவையிலுள்ள சட்ட அமைப்புகளிலும் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று (தவறாக) நினைப்பவர்களால்தான், மற்றவர்களின் கவனத்தை கவர பயங்கரவாதம் முன்னெடுக்கப்படுகிறது.

‘அந்நியனி’ல் இருந்து ‘உபோஒ’ வரை இதைத்தானே சொல்கிறார்கள். ஏன், கமலே ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வரும் பாடல் காட்சியில் ‘டுமீல் டுமீல்’ என்று சும்மா நிற்பவர்களைக் கூட போட்டுத் தள்ளுகிறாரே.

வேடிக்கை என்னவென்றால், காமன் மேனை, படத்தில் ஒரு இந்து என்று அந்தப்பக்கமும், இல்லை முஸ்லீம் என்று இந்தப்பக்கமும் வாதிடுகிறார்கள். ஆனால், மயிரினைப் பிளப்பது போல் ஆராய்ந்து, ‘...ம் காமன் மேன் குண்டு வைக்குமளவுக்கு துணிவதால்தான் அவரை முஸ்லீமாக காட்டியுள்ளார்கள்’ என்ற அளவிற்கு வாதம் வளரவில்லை!

எனவே படம் யதார்த்தத்தை பிரதிபலிப்பதுதான்...

-oOo-

அப்படியாயின், படத்தில் வரும் முஸ்லீம் தீவிரவாதிக்கு மூன்று மனைவிகளாமே? இங்கு இடிக்கிறது.

படத்திலுள்ள காமன் மேனுக்கு குண்டு வைப்பது மட்டுமே தீவிரவாதமாக தெரிந்தது யதார்த்தம். அவரது கேரக்டரை சிதைக்க கதாசிரியருக்கு உரிமை இல்லை. ஆனால் கதையில் வரும் ஒரு முஸ்லீம் பாத்திரத்திற்கு மூன்று மனைவியை உருவாக்குவது கதாசிரியர். ‘ஹம் பாஞ் அவுர் ஹமேன் பச்சீஸ்’ என்று குஜராத் முதல்வர் மோடியால் உருவாக்கப்பட்ட பொதுப்புத்தியால் கட்டமைக்கப்பட்டவர்தான் கதாசிரியர் என்று யாராவது வாதிட்டால்...என்னிடம் எதிர்வாதம் இல்லை.

வசனம் எழுதியவர் எனக்குத் தெரிந்தவரை அப்பழுக்கு இல்லாத மனிதாபிமானி. அவருக்குதான் முஸ்லீம் நண்பர்கள் நிறைய இங்கு உண்டே...கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். எத்தனை முஸ்லீம்கள் இங்கு மூன்று, வேண்டாம் இரண்டு மனைவியாவது வைத்திருக்கிறார்கள் என்று.

எனக்குத் தெரிந்து இரண்டு மனைவிகள் கட்டியவர் எழுத்தாளர் பாலகுமாரன். ஆனால் அவர் இந்து. கலைஞர் இஸ்லாமியர் இல்லை.

கமல்?

அவர் யாருமற்றவர்

-oOo-

உபோஒனில் ஒரு நாளில் தீவிரவாதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கமல் கேட்டு அவர்கள் கமலிடம் ஒப்படைக்கப்படுவதாக கதை செல்கிறது என்று அனுமானிக்கிறேன்.

ஒரு நாளில் அது சாத்தியமில்லை. காந்தகாரில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த விமான பயணிகளை மீட்க இந்திய சிறையில் இருந்த தீவிரவாதிகள் நாம் விடுவிக்கவில்லை. ஏனெனில் இவ்வாறு விடுவிப்பதற்கு சட்டம் இடம் கொடுக்காது. அவர்களுக்காக மனு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் விடப்பட்டார்கள். எதையும் சட்டப்படி செய்ய வேண்டுமே!

பொதுவாக தீவிரவாதிகளோடு பேரம் பேசுவது ஒரு கலை. அந்தக் கலையின் வெற்றி தீவிரவாதிகளோடு பேசி எவ்வளவு நேரம் வாங்க முடியுமோ அவ்வளவு நேரம் வாங்குவதில் இருக்கிறது. காந்தகார் விமான நிலைய கடத்தலில் அவர்களோடு தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த உரையாடல்களை படித்திருக்கிறேன்.

மோகன்லால் சட்டச்சிக்கலை எல்லாம் கமல்ஹாசனிடம் எடுத்துச் சொன்னாரா என்பது தெரியவில்லை. அதற்காக படத்தை பார்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால் ரவி சிரீனிவாஸ் இங்கு அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது புரியாமல் எடுக்கப்பட்ட படம் என்று வாரியிருப்பதிலிருந்து, ஏமாற்றம்தான் மிஞ்சும் என நினைக்கிறேன்.

மதுரை
26/09/09


பி.கு. ‘அவர் யார் என்ற கேள்விக்கு யாருமற்றவர் என்பதுதான் பதிலாக இருக்க முடியும்என்று யார் யாரைப் பற்றி குறிப்பிட்டார் என்ற கேள்விக்கு பதில் யாரிடமாவது உள்ளதா?

க்ளூ: ஈழத்தமிழர்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ளலாம். 

20.9.09

பிரபலங்களும், சங்கடங்களும்...



நீதிபதி கண்ணன் தனது வலைப்பக்கத்திற்கு மூடு விழா நடத்திக் கொண்டிருக்கிறார். வலையுலகம், பிரபலமானவர்களுக்கு என்று தனி இருக்கை தருவதில்லை. அங்குதான் தர்மசங்கடமே!

பிரபலமானவர்கள், சாமான்யர்களை விட்டு விலகியிருப்பதே நல்லது. இல்லை, சசி தரூர் மாதிரி ஏடாகூடமாக மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். ஏதோ டிப்ளமோட் என்கிறார்கள். எதிரிலிருப்பவரின் மனநிலையினை படித்து, அவரை வசியம் செய்யும் வகையில் பேசும் திறமை வேண்டும் என்கிறார்கள். இவர்களது டிப்ளமோடிக் திறமை இவ்வளவுதானா என்று இருக்கிறது.

முன்பு ஒரு ‘டிப்ளமேட்’ தலையறுந்த கோழிகள் (headless chicken) என்று கூறி மாட்டிக் கொண்டார். இந்த ‘டிப்ளமேட்’ மாட்டுத் தொட்டில் (cattle class) என்று கூறி சிக்கலில் உள்ளார்.

மொழி அறிவு என்பது அவரவர் மனதிற்குள் பேசி மகிழ்வதற்கு அல்ல. மாறாக மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் சாதனம் அல்லவா? எனவே இந்த வார்த்தைகள் யாரை சென்று அடையப் போகிறது என்பதை தீர்மானித்து அதற்கு ஏற்ற மொழியினை பயன்படுத்துவதே சிறந்தது.

மாறாக என்னுடைய அகராதியில் இந்த பதத்திற்கு அர்த்தமே வேறு என்று எவ்வளவுதான் உரக்கக் கூறினாலும், யார் காதில் விழப் போகிறது?

தினகரன் போன்ற பத்திரிக்கைகளில், ‘சசி தரூர் விமான எகனாமி கிளாஸில் பயணிப்பது, மாட்டுத் தொழுவத்தில் இருப்பது போன்றது’ என்றார் என்று தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.


-oOo-

தினகரனின் மொழி பெயர்ப்பு குயுக்தியானதா என்று தெரியாது. ஆனால், நீதிபதி தினகரன் மீது சென்னை வழக்குரைஞர்கள் சிலர் அளித்த ஒரு புகாரில் குயுக்தியான (mischievous) மொழி பெயர்ப்பு ஒன்றினை கண்டேன்.

அந்த புகார் நகல் ஏதோ வலைப்பக்கத்தில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு இடத்தில், அவரது நிலத்திற்கு செல்லும் சாலைக்கு ‘Emperor of Justice P.D.Dinakaran Road’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கண்டேன். என்னடா, இவ்வளவு அருவெறுக்கத்தகுந்த பெருமை கொண்டவரா அவர் என்று நினைத்தேன். மீண்டும் ஒரு இடத்தில் அவ்வாறாக குறிப்பிடப்பட்டு அடைப்புக்குறிக்குள் ‘Needhi Arasar’ என்று இருந்தது.

ஐஸ்டிஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘நீதி அரசர்’ என்று இங்கு குறிப்பிடுகிறார்கள். அவலட்சணாக உள்ள அந்த பட்டத்தினை நீதிபதிகள் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றனரோ? ஈழத்தில் ‘நீதி நாயகம்’ என்று ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் குறிப்பிடுகிறார்கள். எனினும், நீதி அரசர் என்பதை தமிழ் நன்கு அறிந்த அந்த வழக்குரைஞர்கள் ‘Emperor of Justice’ என்று தங்களது புகாரில் மொழி பெயர்த்து இருந்தது, அவர்களது நோக்கத்தினை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஏனெனில் அந்தப் புகாரினை படிக்கும் தமிழ் தெரியாத எவருமே, இப்படிப்பட்ட அகங்காரம் கொண்டவரா, இந்த தினகரன்’ என்று நினைக்க வைக்கும். படிப்பவர்களின் மனதில் தினகரனைப் பற்றிய எண்ணம் ஒன்றினை ஏற்றி விட்டால், பின்னர் மற்ற விடயங்கள் அந்த எண்ணப்பாட்டுடனே அணுகப்படும்.

புகார் எழுதியவர்கள் சற்று கவனமுடனிருந்திர்க்கலாம்!

-oOo-

ஆனாலும் நமது நீதிபதிகள் பலரின் படோடாபகம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், வெளிப்படையாக இங்கு எழுதுவதற்கு நான் ஒன்றும் சசி தரூர் அல்ல!

மதுரை
20/09/09

நீதிபதிகள், அச்சங்கள்...



நீதிபதிகளைப் பற்றி என்க்குள் எழுந்த அச்சங்களில், எனது முந்தைய வலைப்பக்கங்களில் தெரிவித்திருந்த சில விடயங்கள் உண்மையாகி வருகிறது என்றாலும், அவை மகிழ்ச்சியளிப்பதாக இல்லை!


சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகள் தங்களது சொத்துக் கணக்கினை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறிய பொழுது, மத்தியதர வர்க்கம் முழுவது எழுந்து நின்று கை தட்டியதில், உச்ச நீதிமன்றம் பெருமிதப்பட்டது. ஆனால், அத்தகைய விபரங்கள் வெறுமே வெட்டிப் பேச்சு (gossip) பேசுவதற்கு மட்டுமன்றி வேறு யாதொன்றுக்கும் பலனளிக்காத ஒரு கட்டுப்பாடாக மட்டுமே இருக்கப் போவதல்லாமல், வேறொன்றுக்கும் உதவப் போவதில்லை என்று உணர்ந்த நான், அந்த தீர்ப்பினை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினேன்.




-oOo-


கடந்த வருடம் உச்ச உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் வெளிப்படையான அணுகுமுறை (Transparency) வேண்டும் என்ற கோரிக்கை பற்றி குறிப்பிட்ட நான், ‘ஆனால், மேலும் மேலும் நீதிபதிகளைப் பற்றிய தர்ம சங்கடமான செய்திகள் வெளி வர நேரிட்டால், நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறை மாற வேண்டும் என்ற பொதுக்கருத்து வலுப்பெறலாம்.’ என்று கூறியிருந்தேன்.


தற்பொழுது நீதிபதி. தினகரன் அவர்களைப் பற்றிய சர்ச்சையில், நீதிபதிகள் நியமனத்தில் கொலேஜியம் முறை தோற்று விட்டது. நீதிபதிகள் ஆணையம் (Judicial Commission) ஒன்றினை ஏற்ப்படுத்தி நீதிபதிகள் நியமிக்கப்படும் வண்ணம் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன!


-oOo-


நமது மத்தியதர வர்க்க ‘அம்பி’கள் எப்பொழுதும் ‘அந்நியனை’ தேடிக் கொண்டேயிருப்பார்கள். அவ்வப் பொழுது சில அந்நியன்கள் தோன்றி பின்னர் மறைந்து போவார்கள். பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் அப்படி ஒரு அந்நியனாக சமீபத்தில் முன்னிறுத்தப்பட்டார்.


விளைவு......அதற்கு முன்னர் வெளியே பலர் அறிந்திராத அவரது வலைப்பக்கத்தின் ஹிட்டுகள் எகிறியது. நான் சில மாதங்களுக்கு முன்னர் ‘வலைபதியும் நீதிபதிகள்’ என்ற எனது வலைப்பதிவில் "ஆயினும் குடிமக்களாகிய உங்களுக்கும் எனக்கும் உள்ள பேச்சுரிமை, அதை நமக்கு உறுதிப்படுத்தும் நீதிபதிகளுக்கு இல்லை, பாவம்!' என்று அச்சப்பட்டபடியே, தர்மசங்கடங்கள்


இறுதியில் ‘தொடர்ந்து வலைப்பதிவதா? வேண்டாமா?’ என்று ஹாம்லெட் குழப்பத்தில் இருக்கிறார்.


மதுரை
200909