26.2.12

வேளாச்சேரியும், ப்ரமக்குடியும்…


முதலில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனில் ஆரம்பிக்கும். பின்னர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலைகாரனை போட்டுத் தள்ளினால் என்ன என்ற எண்ணம் பிறக்கும். அடுத்து கொள்ளைக்காரன்

கோவையில் கடந்த வருடம் நடைபெற்ற ‘மோதல்சாவு பற்றிய எனது கட்டுரையொன்றில்தான் இவ்வாறு நான் குறிப்பிட்டேன். நான் கூறியது போல கடந்த வாரம் கொள்ளைக்காரர்களையும் சுட்டுத்தள்ளியாயிற்று. இனி தனிப்பட்ட நபர்களின் சொத்துப் பிரச்னையில் தலையிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்ட வேண்டியதுதான் பாக்கி.

ஆனாலும், நம்பிக்கையளிக்கும் ஒரு விடயம், காவல்துறை இந்த முறை நடந்து கொண்ட முறை. பத்திரிக்கைச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, தனது ‘ஈகோவுக்கான சவாலாக வங்கிக் கொள்ளையை எடுத்துக் கொண்ட காவல்துறை அவசரகதியில் செயல்பட்டு பல ஓட்டைகளை விட்டுள்ளது. இம்மோதல் சாவுகள் குறித்து நாளை நீதிமன்றத்தில் அல்லது மனித உரிமை ஆணையத்தில் நடக்கப் போகும் விசாரணையில், காவல்துறை பல தர்ம சங்கடமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

முக்கியமாக, தேவையில்லாமல் ஊடகங்களின் வாயிலாக கசியவிடப்படும் ‘வட இந்தியர்கள்தாம் இங்கு பெரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்என்பது போன்ற கருத்துகள் கொள்ளையர்களின் மாநிலமான பீகாரில் தமிழகத்திற்கு எதிரான பொதுக்கருத்தினை உருவாக்கி, மோதல்சாவு குறித்து நடக்கவிருக்கும் விசாரணையில் காவலர்களுக்கு எதிரான நிலையை பீகார் அரசே எடுக்க வேண்டிய சூழல் கூட ஏற்ப்படலாம்.

இத்தாலியர் ஒருவர் இந்தியாவில் சிறைபிடிக்கப்படுகையில், இத்தாலிய அரசு அவருக்கான சட்டப்பாதுகாப்பினை முழுமையாக அளிக்க முன் வருகையில், பீகார் அரசு அப்படிச் செய்யாது என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

மோதல் சாவு நிகழ்வுகளில் காவலர்களின் பாதுகாப்பு அரசுத்தரப்பில் கிடைக்கும் ஆதரவு. ஆனால் தேவையில்லாமல் ‘வட இந்தியர்கள் என்ற ரீதியில் பிரச்னையை கொண்டு செல்வதன் மூலம், ஒரு மாநில அரசு காவலர்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தால், சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு பிரச்னை ஏற்ப்படலாம்.

இதனை எதிர்பார்த்துதான் நேற்று, ‘கொள்ளையர்களுக்கு நக்ஸலைட் தொடர்பு என்ற செய்தி கசியவிடப்பட்டது என்று நினைக்கிறேன்.

சைலேந்திரபாபுவுக்கு சமர்ப்பித்த முதலில் குறிப்பிட்ட எனது பதிவினை திரிபாதிக்கும் சமர்ப்பிக்கிறேன்.

-oOo-

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் கூட இப்படித்தான். முதலில் சம்பந்தப்பட்ட காவலர்கள் ‘கெத்தாகத்தான் இருந்தார்கள். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தற்பொழுது சிபிஐ விசாரணையை துவக்கியுள்ளது. முறையாக புலன் விசாரணை நடத்தப்பட்டால் சிலருக்கு பிரச்னை ஏற்ப்படலாம் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

முக்கியமாக, மரணமடைந்த ஐவரில் இருவரின் மரணம் பிரச்னை ஏற்ப்படுத்தலாம். கலவரத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஐவர் பலியானார்கள் என்பது காவல்துறையின் வாதம். அப்படியானால் இருவர் மரணமடைந்தது கைகள் மற்றும் கால்களின் எலும்புகள் முறியும் வண்ணம் தாக்கப்பட்டதால் என்று அவர்களின் பிணக்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. யார் இவர்களை இவ்வாறு தாக்கினார்கள் என்று ஆராயப்பட்டால், சம்பந்தப்பட்டவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்ப்படலாம்.

-oOo-

நேற்று ஹெராயின் பற்றிய நேஷசனல் ஜியாகிரபி ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையே எனது எட்டு வயது மகள் கேட்ட கேள்வி, ‘டிரக்ஸ் அவங்க பெர்சனல் பிராப்ளம், அதுக்கு எதுக்கு போலீஸ் அவங்களை புடிக்கணும்

தூக்கி வாரிப் போட்டது எனக்கு!

மதுரை
26/02/12

Labels: , ,

17.2.12

ஏன் ஆ.ராசா, கடவுள்?


‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேசியை எடுக்கும் அவர், ‘ஹலோ’ ‘ஹலோ’ என்று கத்திவிட்டு வெறுப்பாக காலி சட்டியில் அலைபேசியை வீசி எறிவார்’

தற்போதய சூழ்நிலையில் எவ்விதமான சுவராசியமுமில்லாத இத்திரைப்பட காட்சியமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியில் அடிக்கடி காண்பிக்கப்பட்டு நம் மனதில் உறைந்து போன நகைச்சுவைக் காட்சி!

ஆனால், அந்த நகைச்சுவையின் பின்னே ஒளிந்திருக்கும் குரூரமான மனநிலைதான் இன்றும், ‘விலைமதிப்பற்ற அலைக்கற்றையை இலவசமாக சிலர் கொள்ளையடிப்பதா? வாங்கிக் கொள்ளட்டும் அதனை வசதியிருப்பவர்கள்’ என்று தர்ம அடிக்கும்பல் (lynching mob) போல ‘பொது ஏலம்’ ‘பொது ஏலம்’ என்று வலியிறுத்தும் ஊடகங்களை ஆட்டுவிக்கிறது.

சமூகத்தில் நடுநிலையில் இருப்பவர்களான பால் விற்பனையாளர்களையெல்லாம் தாண்டி அலைபேசிகள் இன்று அடிமட்டம், ஏன் எந்தமட்டத்திலும் இல்லாத பிச்சைக்காரர்கள் வரை புழக்கத்திற்கு வந்து விட்டது என்றால், அலைக்கற்றை ஏறக்குறைய இலவசம் என்ற அரசின் கொள்கையன்றி வேறெதுவும் இல்லை.

-oOo-

வளர்ச்சிக்கான முக்கியத் தேவை, தொலைதொடர்பும், போக்குவரத்தும் என்பது நமது நாட்டில் பல ஆண்டுகளாக உணரப்படவே இல்லை. தொலைபேசி என்பது ஆடம்பரமாகவே கருதப்பட்டு, சமூகத்தின் நடுத்தர வர்க்கத்தினருக்கே அவ்வசதி மறுக்கப்பட்டு வந்ததை நாற்பது வயதை கடந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

தொலைபேசி வசதியில்லாத ஒருவன், தான் நிற்கும் சமூக அடுக்கிலிருந்து இருந்து மேல் அடுக்கிற்கு செல்ல முன்பு எடுத்த முயற்சியில் இன்று தன் கையில் அலைபேசியை வைத்திருக்கும் ஒருவன், நூற்றில் ஒரு பங்கு முயன்றால் போதும். அதே வளர்ச்சியை எட்ட முடியும்.

வசதி வாய்ப்பு அற்றவர்களின் வளர்ச்சியில் அலைபேசி எவ்வாறு பங்கெடுக்க முடியும் என்பதை நான் அடிக்கடி நினைவு கூறும் ஒரு உதாரணத்தைக் கொண்டே விளக்க முடியும். மும்பையில் இருக்கையில் பல இளம் வழக்குரைஞர்கள் அலைபேசியை மட்டும் வைத்துக் கொண்டு தங்கள் கட்சிக்காரர்களுடன் அனைத்து தொடர்புகளையும் ஏற்ப்படுத்திக் கொண்டு தங்கள் தொழிலை புரிவதை கவனித்திருக்கிறேன். இவர்கள், வழக்குரைஞர் குடும்பங்களில் பிறந்தவர்கள் இல்லை. அலுவலகம் வாடகைக்கு பிடிக்கும் அளவுக்கு வசதியான குடும்பங்களில் பிறந்தவர்களும் இல்லை. பெரிய சட்ட நிறுவனங்களில் இணைந்து பணியாற்ற இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. வேறு ஒரு வழக்குரைஞரின் அலுவலகத்தில் போதிய வருமானம் இன்றி இளைய வழக்குரைஞராக பணியாற்றுவதற்கு அவர்களது குடும்ப சூழ்நிலை இடம் கொடுக்காது.

சமூகத்தின் கடைக்கோடியில் நிற்கும் இவர்களைப் போன்ற வழக்குரைஞர்களும், வசதிமிக்க எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் மற்ற வழக்குரைஞர்களுக்கு நிகராக தொழில் செய்ய முடிகிறதென்றால், அதற்கு காரணம் ஏறக்குறைய இலவசமாக கிடைக்கும் தொலைத் தொடர்பு வசதிதான்.

இந்த உதாரணம் அனைத்து தொழிலுக்கும் பொருந்தும். ஏன், இன்று எழுத ஆர்வமுள்ள எவருக்கும் தமது கருத்தினை இணையத்தில் பதிந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தால், தங்களது ஆக்கத்தை புத்தகமாகவும் பதிப்பித்து அடுத்த கட்டத்துக்கு போவது எளிதாக உள்ளது. பெரிய எழுத்தாளர்கள் என்று அறியப்படுபவர்களோடும் சரிக்கு சரியாக நின்று வாசகர்கள் விவாதம் செய்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் இயங்கும் பத்திரிக்கை நிறுவனங்களோடு அறிமுகமில்லாத ஒரு எளிய எழுத்தாளருக்கு கிடைக்காத வாய்ப்பு தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள எழுத்தாளன் ஒருவனுக்கும் இன்று கிடைக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொலைத்தொடர்பு வசதியை மக்களிடமே விலை பேசும் கொள்கையை அரசு கை விட்டதினால்தான்.

-oOo-

தொலைபேசி நிறுவனங்களுக்கு விற்க்கப்படும் அலைக்கற்றை இறுதியில் விற்க்கப்படுவது நாட்டின் வளர்ச்சியில் தங்களின் பங்கினைப் பெற நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாதாரண மக்களிடம்தான். அலைபேசி சேவை கட்டணங்களை தீர்மானம் செய்ய ‘டிராய்’க்கு (TRAI) அதிகாரமுண்டு. தற்பொழுது நிலவும் போட்டியின் காரணமாக, விலை குறைவாக இருப்பதை கவனத்தில் கொண்டு விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஆயினும், எந்தக் காலத்திலும் டிராய் சேவையின் அதிகபட்ச விலை அல்லது குறைந்தபட்ச விலை ஆகியவற்றை நிர்ணயிக்கலாம். அவ்வாறு நிர்ணயிப்பது, சேவை நிறுவனம் அந்த சேவைக்காக செய்துள்ள முதலீட்டிற்கான நியாயமான வட்டி விகிதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமென டிராய் நெறிமுறைகள் கூறுகின்றன.

அவ்வாறான நிலையில், அலைக்கற்றையை பெறுவதற்கு ஒரு நிறுவனம் அரசிற்கு செலுத்தும் தொகையையும் அதன் முதலீடாக கணக்கில் எடுக்கப்படும். அலைக்கற்றை இலவசமாக அளிக்கப்படும் பட்சத்தில், சேவை நிறுவனத்தின் செலவினங்கள் மட்டுமே முதலீடாக கணக்கில் எடுக்கப்படும். எனவே, 1.75 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை விற்று இருக்க முடியும் என்றால், அந்த கோடியை இறுதியில் செலுத்தப் போவது, சேவையை பயன்படுத்தும் சாதாரண மக்கள்தான்.

டிராய் இவ்வாறு சேவைக்கட்டணத்தை நிர்ணயிக்கையில், அலைக்கற்றையை குறைந்த விலைக்கு பெற்ற நிறுவனம், தான் லஞ்சமாக செலுத்திய பணத்தை முதலீடாக காண்பிக்க முடியாது. ஏன், உரிமம் பெற்ற நிறுவனம் தனது பங்குகளை வேறு நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்றதையும் செலவுத் தொகையாக காட்ட முடியாது. அனைத்தும் விதிப்படி நடக்கும் என்ற ஒரு சட்டக் கற்பனையில் (legal fiction), அலைக்கற்றைக்கு கொடுக்கப்படும் லஞ்சமானது, சேவை நிறுவனங்களின் லாபத்திலிருந்து கொடுக்கப்படும் பங்குதானேயொழிய வாடிக்கையாளர்களின் பணமல்ல, என்பதுதான் உண்மை!

பேருந்து வழித்தட உரிமங்களையே எடுத்துக் கொள்வோம். மதுரையிலிருந்து தேனி, கம்பம் செல்லும் வழித்தடத்தின் மதிப்பு ஒரு கோடியை எட்டுகிறது. ஆனால், வழித்தடமானது இலவசமாகவே அரசால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படுகிறது. வழித்தட உரிமையை ஏலம் விட்டால், அரசுக்கு பல கோடி கிடைக்கும்தான். ஆனால், இதுதான் பேருந்து கட்டணம் என்று அரசு நிர்ணயிக்க முடியாது.


தற்பொழுது, எனக்குள்ள பயம் அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் யாராவது, தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள பேருந்து வழித்தட உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து விடுவார்களோ என்பதுதான்!

மதுரை
17/02/1

Labels: , ,

4.2.12

சோனியா தேசத்துரோகியா?


Sonia's govt has not only looted the nation, it has also brought disrepute to a non-controversial Army and its general - the greatest treason” S.Gurumurthy in Twitter

தினம் தினம் இந்தியாவின் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் எழுப்பப்படும் ஒரு சாதாரண சட்டப்பிரச்னை எப்படி சோனியா மீதான தேசத்துரோக குற்றமாக உருப்பெருகிறது என்பதை பார்க்கும் பொழுது, இந்தியாவில் கவலைப்படுவதற்கும், நீதிமன்றங்கள் தங்களது பொன்னான நேரத்தை செலவழிப்பதற்கும் வேறு பிரச்னைகளே இல்லையா, என்று தோன்றுகிறது.

இன்று ஆங்கில பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில், மத்திய அரசு ஏதோ படுகொலை செய்து விட்டு உச்ச நீதிமன்றத்தின் முன் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதைப் போலவும், நீதிபதிகள், ’இத்தோடு நீ தொலைந்தாய் போ’ என்று எச்சரித்துக் கொண்டிருப்பதைப் போலவும் தலைப்புச் செய்திகள்!



இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங், 1951ம் ஆண்டில் பிறந்தவர். ஆனால் தேசிய பாதுகாப்பு கல்லூரி (National Defence Academy) சேர்வதற்கான தனது மனுவில் தனது பிறந்த வருடத்தை 1950 என ‘தவறுதலாக’ அளிக்க அந்த வருடமே அவர் பிறந்த வருடமாக அவரது பணிப்பதிவேட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் பணியில் சேர்வதற்கு முன்னரே, பிறந்த வருடத்தை சரி செய்வதற்காக மனு கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் இது நாள் வரை தவறு சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் வி.கே.சிங் இந்த வருடமே பணிமூப்பு அடைந்து விடுவார்.

சரி செய்யப்பட்டால் அடுத்த வருடம்தான் பணிமூப்பு அடைவார். அவ்வாறு அவருக்கு மேலும் ஒரு ஆண்டு கிடைக்கும் பொழுதில் அவருக்கு பின்னே ‘இதோ அடுத்து நாம்தான் தலைமை தளபதி’ என்று காத்திருக்கும் நபர் முதல் அவருக்கு பின்னே மற்றவர் என சங்கிலித் தொடர் போல நின்று கொண்டிருக்கும் பலரின் எதிர்பார்ப்பில் மண்!

முன்னரே இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டிருந்தால், பலர் இவ்வளவு ஆர்வமுடன் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், கடைசி நேரத்தில் செய்யப்படும் மாற்றம் ராணுவத்தின் மற்ற தளபதிகளிடையே அதிருப்தியை ஏற்ப்படுத்தலாம் என்பதால் அரசு கையை பிசைந்து கொண்டு நிற்கிறது.

இந்தப் பிரச்னை அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருப்பதுதான். உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் இப்படி கடைசி நேரத்தில் பிறந்த தேதியை மாற்றி பணிக்காலத்தை நீட்டித்துக் கொள்வதை தடுத்து பல தீர்ப்புகளைக் கூறியுள்ளது.

வி.கே.சிங் பிரச்னையில் ’அவர் உடனடியாக தேதியை மாற்ற மனு கொடுத்து விட்டார். ஆனால், ராணுவம்தான் அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது’ என்ற வாதம் அவருக்கு சாதகமாக இருந்தாலும், இவ்வளவு நாட்கள் கழித்து நீதிமன்றத்தை அணுகியதால் (Latches) பரிகாரம் ஏதும் அளிக்க இயலாது என்று கூறும் வண்ணமும் பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.

எனவேதான், அரசு தலைமை வழக்குரைஞர் வாஹனாவாட்டி அவர்கள், தற்சமயம் சிங் அவர்களின் பிறந்த தேதியை அவரது பணிப்பதிவேட்டில் மாற்ற இயலாது என்று சட்டக்கருத்தினை அரசுக்கு தெரிவித்துள்ளார்.



வாஹனவாட்டியின் சட்டக்கருத்தினை ஏற்றுக் கொண்ட அரசும் தளபதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இரண்டு வருடம் தலைமை தளபதியாக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை ஒரு பெருமையாக ஏற்றுக் கொண்டு தளபதி கெளரவமாக பதவி மூப்பு அடைந்திருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தை அணுகி விட்டார்.

எது எப்படியிருப்பினும், ராணுவ சேவை விதிகளில் கூறியுள்ளபடியும் ஏற்கனவே பிறந்த தேதி மாற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் கூறியுள்ள பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில் ஒரு சட்டப்பிரச்னையாக தீர்க்க வேண்டிய ஒரு விடயம், ஊடகங்களின் அளவுக்கு மீறிய ஆர்வத்தாலும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் சிலரின் பொறுப்பற்ற பேச்சுகளாலும் அரசியலாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இதே பிஜேபி அரசுதான், இந்தியாவின் அறிவுஜீவி அட்மிரல் என்று போற்றப்பட்ட கப்பற்படை தலைமை தளபதியான (Chief of Naval Staff) விஷ்ணு பகவத்தை அவரது பணிக்காலத்திலேயே பதவி நீக்கம் (Dismiss) செய்தது. சிறீகிருஷ்ணா கமிஷன் முன்னர் கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஆஜரான அவரது மனைவியான நிலோபரை ‘அரை-முஸ்லீம்’ என்று தேவையின்றி குறிப்பிட்டு அரசுக்கு கடிதமெழுதிய தளபதிக்கு பதவி உயர்வும் கொடுத்தது!



ராணுவத்தை அரசியலாக்கியதில் காங்கிரசை விட பிஜேபிக்கு பெரும் பங்கு உண்டு.  

-oOo-

நேற்று கூட நீதிமன்றத்தில் நடைபெற்றது ஒரு சாதாரண விடயம். தளபதியின் மனுவை தள்ளுபடி செய்வதற்கு அரசு தன்னுடைய காரணத்தை கூறியிருக்க வேண்டும். மாறாக, தலைமை அரசு வழக்குரைஞரின் ஆலோசனையின்படி தள்ளுபடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். வழக்குரைஞர் கூறுவது ஆலோசனை. அதன் அடிப்படையில் ஏன் தளபதியின் மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூற வேண்டும். இல்லையென்றால், அரசு வழக்குரைஞர் ஏதோ முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தது போல ஆகி விடும்!

அப்படி ஒரு விரும்பத்தகாத நிலையினை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள், ‘இந்த உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளனர். திரும்பப் பெறவில்லையென்றாலும், அந்த உத்தரவை தள்ளுபடி செய்யும் நீதிபதிகள், அரசை மீண்டும் மனுவை பரிசீலித்து புதிய உத்தரவு பிறப்பிக்க கோர வேண்டும். அப்படியான சூழலில் தளபதி புதிய உத்தரவை எதிர்த்து மீண்டும் ஒரு பேராணை மனுவுடன் நீதிமன்றத்தை அணுக வேண்டும். வீண் கால விரயம்.

எனவேதான் நீதிபதிகள் தங்களது எரிச்சலை காட்டினர். வேறு ஒன்றும் இல்லை!

நீதிமன்றமே, இந்தப் பிரச்னையை மற்றுமொரு சட்டப்பிரச்னையாக தீர்க்கட்டும் என மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வதுதான், நாட்டின் நன்மைக்கான செயலாக இருக்கும்.

மதுரை
04/02/12

Labels: , ,

3.2.12

அலைக்கற்றை தீர்ப்பும் கொண்டாட்டமும்!


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அதன் முக்கிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் வழக்குரைஞர்களுக்கான அறைகள் அமைந்துள்ளன. அந்த அறைகள் போதுமானதாக இல்லை என்பதால் புதிதாக வழக்குரைஞர் வளாகம் ஒன்று கட்டப்பட்டது. புதிய வளாகத்திலுள்ள அறைகளும் காணாத நிலையில், அனைவரிடமும் மனுக்களைப் பெற்று அதற்கான குழு ஒன்று தனது நடைமுறைப்படி அறைகளை ஒதுக்கியது.

அறைகளைப் பெறுவதற்காக போட்டி நிலவிய அந்தச் சூழலில், அனைவருக்கும் சமவாய்ப்பளிக்கும் வண்ணமும், அறைகளை கட்டிய அரசிற்கு முழு வருமானம் பெரும் முறையுமாக ஒன்று இருக்குமாயின் அது பொது ஏலமாகத்தான் இருக்க முடியும்.

அப்படியான ஒரு பொது ஏலமானது அறைகளை விரும்பும் அனைவருக்கும் சம வாய்ப்பளித்திருக்கும். மற்றும், நகரின் மிகமிக முக்கியமான இடத்தில் அரசிடம் உள்ள மிகச் சொற்பமான கட்டிடத்திற்கு, அதன் மதிப்பிற்கு ஈடான வருமானத்தை அரசிற்கு பெற்று தந்திருக்கும்.

ஆனாலும், புதிதாக கட்டிய வழக்குரைஞர் அறைகள் பொது ஏலத்தில் விடப்படவில்லை.

ஏனெனில், ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் முக்கிய கட்டிடத்தில் அமைந்துள்ள அறைகள், சந்தை மதிப்பிலான வாடகை இன்றி, உயர்நீதிமன்ற குழு நிர்ணயித்த வாடகையினை கொடுத்து வரும் சூழலில், புதிய அறைகளை பெரும் வழக்குரைஞர்களிடம் இருந்து சந்தை மதிப்பிலான வாடகை பெறுவது, அவர்களுக்கிடையேயான சமநிலையை (Level Playing Field) பாதிக்கும். அதாவது ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரரிடம் இருந்து பெறும் கட்டணத்தில், அந்த வழக்கிற்கான அலுவலக செலவும் அடங்கும். ஒரே வகையிலான சேவைக்கு, தனது கூடுதலான அலுவலக செலவினால் புதிய அறையில் இருக்கும் வழக்குரைஞர் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க நேரிடும், அல்லது தனது நிகர கட்டணத்தை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் வழக்குரைஞர்களிடம் என்ன வாடகை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதையேதான் புதிய அறைகளுக்கும் நிர்ணயிப்பது நியாயமான செயலாக இருக்க முடியும்.

வழக்குரைஞர்கள் தங்களது தொழிலை கைக்கொள்ளுவதற்கு, அரசிடம் அரிதாக உள்ள முக்கிய இடம், குறைந்த வாடகைக்கு கொடுக்கப்பட முடியுமா? பொது ஏலத்தில் அறைகள் கொடுக்கப்படாதலால், எவ்வளவு நட்டம்?

அது நட்டம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

தனது குடிமக்களுக்கு நீதியை வழங்க வேண்டியது அரசின் முக்கிய கடமை. நீதியைப் பெறுவதற்காக பல குடிமக்களுக்கு வழக்குரைஞரின் உதவி தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் கட்டணம் பெறும் வழக்குரைஞர்கள் முதல் ஐம்பது ரூபாய் வாங்கும் வழக்குரைஞர்கள் வரை இருக்கிறார்கள். ஆனால், அந்த ஐம்பது ரூபாயைக் கூட கொடுக்க முடியாத மக்களும் நமது நாட்டில் உண்டு. அவர்களுக்கும், நீதியை அளிப்பதற்காகவே, அரசு இலவச சட்ட உதவியை அளிக்கிறது. அதாவது, வழக்குரைஞர் கட்டணத்தை தானே செலுத்த வேண்டிய கட்டாயம், மக்கள் நலம் பேணும் அரசிற்கு (Welfare State) உண்டு.

இந்தச் சூழ்நிலையில் சந்தை மதிப்பில் வழக்குரைஞர்கள் அறைகள் ஒதுக்கப்பட்டால், நூறு ரூபாய் கட்டணம் வாங்கும் வழக்குரைஞர் நூற்றி ஐம்பது ரூபாயும், ஐம்பது ரூபாய் வாங்கிய வழக்குரைஞர் நூறு ரூபாயும் வாங்க நேரிடும். அதுவரை ஐம்பது முதல் தொண்ணூற்று ஒன்பது ரூபாய் வரை கட்டணம் செலுத்த வசதி படைத்த குடிமக்களும் இலவச சட்ட உதவி மையத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும். இறுதியில் சந்தை மதிப்பில் பெற்ற வாடகையினை அரசு இலவச சட்ட உதவி மைய வழக்குரைஞர் கட்டணமாக திருப்பிச் செலுத்தும்!

-oOo-

சென்னை மாநகராட்சி அதற்குச் சொந்தமான இடங்களில், கட்டிடங்களை கட்டி கடைகளாக வாடகைக்கு விட்டுள்ளது. அந்தக் கடைகளுக்கும் போட்டி நிலவும் சூழலில், பொது ஏலம் நடத்தி சந்தை மதிப்பினை வாடகையாக பெறுகிறது. ஆனால், அதற்கான காரணம் இருக்கிறது.

வீட்டு வசதி வாரியம், தான் கட்டும் வீடுகளையும், மனைகளையும் அதிகளவில் மனுக்கள் இருக்கும் சூழலில் லாட்டரி (Lot) மூலம் ஒதுக்குகிறது. அதற்கான காரணம் தனியே இருக்கிறது.

அதைப் போல, முதலில் வருபவருக்கு முன்னுரிமை ( First come First serve) என்ற முறையும் நமது நாட்டில் சுதந்திரம் கிடைத்த நாள் முதலே ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு முறைதான். உதாரணமாக சிறுகனிம வளங்களை (Minor Minerals) எடுப்பது சம்பந்தமான உரிமங்கள் இந்த முறையில் கொடுக்கப்படுவதுண்டு. அப்படியான முறையில் உரிமங்களை அளிப்பதற்கும் விசேட காரணங்கள் உண்டு. அந்த முறையும் மற்ற முறைகளைப் போலவே, சமத்துவ உரிமையை (Right to equality) பாதிப்பதாக நீதிமன்றங்கள் கருதியதில்லை.

-oOo-

எந்த எந்த உரிமம் எந்த எந்த முறையில் கொடுக்கப்படலாம் என்பது அரசின் கொள்கை முடிவு. அரசு நிர்வாகம் மக்களுக்கு நேரிடையாக பதில் சொல்ல கடமைப்பட்டது. பல்வேறு காரண காரியங்களை ஆராய்ந்த பின்னரே அரசு ஒரு கொள்கை முடிவினை தீர்மானிக்கிறது. எனவேதான், நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவில் தலையிடுவதில்லை.

கண்மாய் பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளவாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குடிசை கட்டி வாழ்பவர்களை, அகற்றி நீர்வளத்தினைப் பெருக்குங்கள் என்று எளிதில் நீதிமன்றங்கள் நிர்வாகத்திற்கு கட்டளையிடலாம். ஆனால், அரசால் அப்படி கண்ணை மூடிக்கொண்டு தனது குடி மக்களை தூக்கி எறிந்து விட முடியாது. பல்வேறு காரணிகளையும், விளைவுகளையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். எனவேதான் நீதிமன்றங்கள் அரசு நிர்வாகத்தில் எளிதில் தலையிடுவதில்லை.

இதன் காரணமாகவே, இனி அலைக்கற்றை (Spectrum) உரிமத்தினை பொதுஏலம் மூலமாகவே அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், அதற்கெனவே அமைக்கப்பட்ட டிராய் (TRAI) க்கு கட்டளையிட்டுள்ளது எவ்வளவு தூரம் சரியான ஒரு தீர்ப்பாக இருக்க முடியும் என்பதில் எனக்கு ஐயமுண்டு!

ஏனெனில், 2003ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு புதிய உரிமங்களை ‘முதலில் வருபவருக்கு முதலில் உரிமம்’ என்ற அடிப்படையில் அளிக்க வேண்டும் என்று தீர்மானித்ததற்கு பிரத்யேக காரணங்கள் உண்டு. முக்கியமாக அரசு, அலைக்கற்றை உரிமத்தினை, தகவல் தொடர்பு மூலம் வளர்ச்சிக்கான ஒரு காரணியாகத்தான் பார்த்ததேயொழிய அரசின் வருவாயை பெருக்கும் ஒரு வளமாக கருதவில்லை.

’How would you empower citizens? There could be all sorts of technologies – one is cellphonesஇக்பால் காதிர் என்ற வங்காள தேச தொலைதொடர்பு தொழில்முனைவோர் கூறிய மேற்க்கண்ட கருத்தினை இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தனது தலையங்க பக்கத்தில் பிரசுரித்துள்ளதற்கு காரணமுண்டு!

இதனை உணர்ந்து கொண்டதாலேயே, டிராய் 2007ம் ஆண்டிலும், சிறு நகர, கிராமப்புறங்களிலும் அலைபேசிச் சேவை பரவலாக்கப்பட வேண்டும் என்றால் 2ஜி அலைக்கற்றை உரிமம் மட்டுமாவது ஏற்கனவே நிலுவையில் இருந்து வரும் முறையிலேயே அளிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுத்தது. ஏற்கனவே அதே முறையில் உரிமம் பெற்று அலைபேசி சேவை அளித்து வரும் நிறுவனங்களோடு புதிதாக உரிமம் பெறும் நிறுவனங்கள் போட்டியிட வேண்டுமாயின், புதிய உரிமங்களுக்குமான கட்டணமும் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகவே இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தது. டிராயின் இந்த முடிவு தவறான நோக்கத்துடன்  (Ulterior Motives) எடுக்கப்பட்டது என்றோ அல்லது கெட்ட எண்ணத்துடன் (Malafide) எடுக்கப்பட்டது என்றோ உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறவில்லை. அப்படியான ஒரு வாதமும் வைக்கப்பட்டதாக தெரியவில்லை.


2003ம் ஆண்டு தொடங்கி பொது ஏலம் மூலம் கிடைக்கும் அபரிதமான பணத்தை துறந்து உரிமங்கள் அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், 2ஜி உரிமங்கள் மட்டும் பொது ஏலம் மூலம் அளிக்கப்படாதலால் அரசுக்கு 1.7லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்றால், அந்தக் கூற்று பிழையானதாகும் (Fallacious). எனினும் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையிலும் தீர்ப்பிலும் தணிக்கையாளரின் (CAG) அறிக்கைக்குள் செல்லவில்லை!

வேடிக்கை என்னவென்றால், 2001ம் ஆண்டில் மத்திய அரசு பொது ஏலம் தவிர்த்து குறைந்த தொகைக்கு அலைக்கற்றை உரிமத்தை வாரி வழங்கி அரசுக்கு 11,000/- கோடி நட்டம் ஏற்ப்படுத்தி விட்டதாக நமது உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு உட்பட நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசின் வாதம் பொது மக்களின் நலனை முன்னிட்டு தொலை தொடர்பு வளர்ச்சிக்காக பொது ஏலம் கூடாது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றங்கள் அதில் தலையிட முடியாது என்பதாகும். இவ்வாறு வாதிட்டது காங்கிரஸ் அரசு அல்ல. மாறாக தற்பொழுது 1.7லட்சம் இழப்பு என்று உரக்கக் கத்தும் பிஜேபி அரசு!

பிஜேபி அரசுக்கு எதிராக 2001ம் ஆண்டில் 11ஆயிரம் கோடி என்று நமது உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்ட வாதம், மக்கள் நலனுக்கான கொள்கை முடிவிற்கு எதிராக பொது நலவழக்கா? என்று நிராகரிக்கப்பட்டதை யார் இன்று நினைவில் கொள்ளப் போகிறார்கள்.

எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக இரு அரசுகளாலும் பொதுமக்களின் நலனை முன்னிட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையினை உச்ச நீதிமன்றம், கூடாது என்பதோடு ஏற்கனவே அளிக்கப்பட்ட உரிமங்களையும் யார் தவறு செய்தவர்கள் யார் உரிமையோடு பெற்றவர்கள் என்று முழுவதும் ஆராயாமல் மொத்தமாக ரத்து செய்தது, ஒரு சரியான தீர்ப்பாக இருக்க முடியாது என்பது என் பணிவான கருத்து. இனி நிகழப் போகும் குழப்பங்களாலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படப் போகின்ற மறுஆய்வு (Review) மனுக்களாலும் எனது கருத்து நிலைபெறும் (vindicate) என்று நம்புகிறேன்.

-oOo-

1.7 லட்சம் கோடி!

இந்த தொகைதான் ராஜாவுக்கு எதிராக ஊடகங்களையும், மக்களையும் அதன் விளைவாக நீதிமன்றங்களையும் கொதித்து எழ வைத்தது. மற்றபடி இந்தத் தொகையினை மறந்துவிட்டு பார்த்தால், அலைக்கற்றை ஊழல் என்பது இந்தியா எங்கும் வியாபித்திருக்கும் ஊழல்களில் மற்றுமொரு ஊழல் என்ற வகையிலேயே இருந்திருக்கும்.



ராஜா எவ்வாறு சில நிறுவனங்களுக்கு சார்பாகவும், சில நிறுவனங்களை போட்டியிலிருந்து விலக்கும் வண்ணமும் முடிவுகளை எடுத்தார் என்பதை உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான காரணங்களை தனது தீர்ப்பில் கூறியுள்ளது. தீர்ப்பின் முடிவுகள் ராஜா மீது நடைபெறும் குற்ற வழக்கை பாதிக்காது என்று நீதிபதிகள் கூறியிருப்பினும், அமர்வு நீதிமன்றத்தை பொறுத்தவரை ராஜாவின் விதி மூடி முத்திரையிடப்பட்டது போலவே தோன்றுகிறது. ராஜா தன் மீதான குற்ற வழக்கிலிருந்து விடுதலையடைவது, இனி இறுதியில் அவர் தனது மேல்முறையீட்டிற்காக அணுகப் போகிற உச்ச நீதிமன்றத்தின் கைகளில்தான் உள்ளது.

ஆயினும், சில நிறுவனங்களுக்கு சார்பாக ராஜா செயல்பட்டார் என்பது தீர்ப்பிலிருந்து உறுதியாகத் தெரிந்தாலும், ஏற்கனவே கூறிய காரணங்களால், அவர் நேர்மையாக நடந்து கொண்டிருந்தாலும் அரசுக்கு இதே வருவாய்தான் கிடைத்திருக்கும்.

ஏனெனில் தொடர்ந்த அரசின் கொள்கைப்படியும், டிராய் நெறிமுறைகள்படியும், யார் உரிமம் பெற்றிருந்தாலும் தற்பொழுது கிடைத்திருக்கும் உரிமத் தொகைதான் வசூலிக்கப்பட்டிருக்கும்.

எனவே, ராஜா நேர்மையாக நடந்து கொண்டிருந்தால், பொது ஏலம் தவிர்த்த உரிமம் வழங்குதல் முறையால் அரசுக்கு இழப்பு என்பது வெறும் கோஷமாகவே முடிந்து போயிருக்கும்.

ராஜாவின் தவறுகளுக்காக, அரசு சில காரணங்களுக்காக கடந்த பத்தாண்டுகளாக கைக்கொண்டு வரும் உரிமம் முறையை மாற்றக் கூறுவது, அலைக்கற்றையை ஒரு வருவாய் ஈட்டும் வளமாக பார்ப்பதும் சரியான ஒரு செயலாக இருக்கப் போவதில்லை. எதிர்காலத்தின் இதன் விளைவுகளை நாம் உணரலாம்.

மற்றபடி பொது ஏலத்திலும், உச்ச நீதிமன்றம் பட்டியலிட்ட ராஜாவின் மீறுதல்கள் மிகச் சாதாரணம். போபார்ஸ் ஊழலோ, ஹெச்டிடபிள்யூ நீர்மூழ்கி ஊழலோ, காமன்வெல்த் போட்டி ஊழலோ அல்லது இந்தியாவெங்கும் நித்தம் நித்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல்களோ பொது ஏலமோ இல்லை ஒப்பந்தப் புள்ளி முறையிலான தேர்ந்தெடுப்பில்தான் நடைபெறுகின்றன.

தமிழகத்தினைப் பொறுத்தவரை ஆளும்கட்சியின் ஆதரவு பெறாத எவரும், டாஸ்மாக் மதுக்கடை ஏலத்திலோ அல்லது பொதுப்பணித்துறை ஏலத்திலோ வெற்றி பெறவே முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவற்றைத் தடுக்க ஏதும் இயலாத ஊடகங்கள், பொது ஏலமே தீர்வு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினைக் கொண்டாடுவது குரூர நகைச்சுவை!

நீதித்துறையில் நேர்மையின் உருவமாக விளங்கிய ஏ.கே.கங்கூலி நேற்றோடு ஓய்வு பெற்று விட்டார். உச்ச நீதிமன்றத்தை விட்டு தன் வீட்டிற்கு செல்லும் வழியின், முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் சதீஷ் சர்மாவிற்கு எதிராக 1996ல் முன்னாள் நீதிபதி குல்தீப் சிங் கூறிய தீர்ப்பை கொண்டாடிய ஊடகங்களும் நினைவுக்கு வந்திருக்கும்.

ஆனால் 1999ல் அந்த தீர்ப்பிற்கு என்ன நேர்ந்தது என்பதும் நினைவுக்கு வந்த கங்கூலி ஒரு கணம் மனதிற்குள் புன்னகைத்திருப்பார்.

Anyway, well done Sir, your parting judgment is like the other Ganguly reaching his century with a sixer!

மதுரை
03/02/12


Labels: , ,

26.1.12

அமெரிக்க காஞ்சனா, ஆபத்தான காஞ்சனா


உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நீதிமன்ற வழக்கு விசாரணை பற்றிய படம் என்று பார்த்து ஏமாந்த மற்றொரு இல்லை எரிச்சலடைந்த படம் ‘தி எக்ஸார்சிசம் ஆஃப் எமிலி ரோஸ்’ (2005)

அப்படியும், அதனைப் பற்றி இங்கு பதிவிடுவதன் அவசியம், ‘மற்றுமொரு பயமுறுத்தும் வகையிலான படமாக மட்டுமே கடந்து போகாமல், உலகெங்கும், முக்கியமாக இங்கு விரவிக் கிடக்கும் பேய்விரட்டுதல் என்ற மூடநம்பிக்கையினை மருத்துவத்திற்கு மாற்றாக பார்ப்பவர்களிடம் விதைக்கூடிய வகையில் சார்பு நிலையில் அணுகியிருப்பதன் அரசியலைக் குறித்த ஆதங்கம்தானேயொழிய வேறில்லை.


கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட எளிமையான ஒரு குடும்பத்திலிருந்து நகரத்திற்கு உயர்கல்விக்காக எமிலி செல்கிறாள். அங்கு விடுதியில் தனியே தங்கியிருக்கும் எமிலியை பயங்கரமான வலிப்பு (Epilepsy) நோய் தாக்குகிறது. அதாவது வலிப்புடன், மனநோயும் (Psychosis). விஞ்ஞானத்தால் அப்படித்தான் அவளது அனுபவங்களை விளக்க முடியும். படிப்பினைத் தொடர முடியாத எமிலி வீட்டிற்கே திரும்பி வருகிறாள். நிலமை மேலும் மோசமாக, அவர்கள் சார்ந்திருக்கும் கோவில் பாதிரி, எமிலியை பேய் பிடித்திருப்பதாக நம்புகிறார். பேயை விரட்டும் அவரது முயற்சிகள் தோல்வியடைய, அதற்கு காரணம் எமிலி உட்கொள்ளும் மருந்துகள்தான் என்று கருதி, பாதிரி எமிலியை மருந்துகளை நிறுத்தச் சொல்கிறார். ஆயினும் பாதிரியின் முயற்சிகள் தோல்வியடைந்து எமிலி பரிதாபமாக இறந்து போகிறார்.

எமிலி இறந்தது பாதிரியின் அலட்சியத்தால் (Negligence) என்று அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடக்கிறது. ஒருவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்ற முடிவிற்கு வருவதற்கும் அதனை விரட்டுவதற்கும் அதீத கட்டுப்பாடுகளை வைத்திருக்கும் கத்தோலிக்க சபைக்கு அதனை மீறிய பாதிரியின் செயல் தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்த சபைக்கு பங்கம் வராமல் காக்க, ஒரு பெரிய சட்டநிறுவனத்தை பாதிரியின் வழக்கினை நடத்த ஏற்ப்பாடு செய்கிறது. ஆனால் இறுதியில் பாதிரி சபைக்கு கட்டுப்படாமல், ‘தான் செய்ததே சரி எனவும், உலகமாந்தர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கும் வண்ணம் கன்னிமேரி விருப்பத்தின்படி எமிலி தன்னை சாகக்கொடுத்தாள்’ என்றும் நிறுவ முயலுகிறார்.


விசாரணைக்கு பின்னர் ஜூரர்கள் பாதிரி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், திரைக்கதை ’பேய்பிடிப்பதும் சாத்தியம்தான், பேய்விரட்டுவதும் ஒரு சிகிச்சை முறையாக இருக்கலாம்’ என்பதை நிறுவும் சார்புநிலையில் (biased) எழுதப்பட்டு, ‘பேய்பிடி’ப்பதன் விஞ்ஞானம் புரியாதவர்கள் தங்களை மேலும் மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் மூடநம்பிக்கையில் மேலும் அமிழ்ந்து போக இந்த திரைப்படம் வாய்ப்பளிக்கிறது.

அதற்காகவே இந்தப் படத்தில் பல காட்சிகள் இருக்கிறது. நம்மை திகிலூட்டச் செய்வதற்காக திணிக்கப்பட்ட காட்சிகள் மட்டுமல்லாமல், பாதிரியின் வழக்குரைஞரின் (லாரா லின்னே) ஏற்ப்படும் அனுபவங்களும் படம் பார்ப்பவர்களை அந்த முடிவிற்கு தள்ளும் வகையிலேயே அமைந்துள்ளன.

நீதிமன்றத்தில் பேய்பிடிப்பதும் ஒரு சாத்தியம்தான் என்பதை நிறுவ வழக்குரைஞர் சாட்சிகளிடம் கேட்கும் கேள்விகளும், முன்னிறுத்தும் சாட்சிகளும், வாதங்களும் ஏற்றுக்கொள்ள இயலாதவை. சில சமயங்களில் அபத்தம் என்று நம்மை முணுமுணுக்கச் செய்பவை!

நல்லவேளை இந்தப் படம் தமிழில் வெளிவரவில்லை. வந்திருந்தால் வேப்பிலையடிக்காரர்களுக்கு தனி மவுசு வந்திருக்கும்.

மதுரை
26/01/12

Labels: ,

15.1.12

ஏமாற்றமளித்த கொலை வழக்கு!


ஒரு திரைப்படத்தைப் பார்த்த பின்னர், அதனைப்பற்றிய விபரங்களை ‘விக்கிபீடியா’ போன்ற இணைத்தளங்களில் படித்து முழுமையான அனுபவமாக இருக்கிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த திரைப்படங்களை பார்ப்பதில் பெரும் விருப்பம் உள்ள எனக்கு, எவ்வளவு தூரம் திரைப்படம் உண்மையிலிருந்து விலகியிருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பிறகுதான் தூங்கச் செல்ல முடிகிறது.

படத்தினை சுவராசியமாக அமைப்பதற்காக, திரைக்கதையில் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் (Cinematic Liberty) தேவையான ஒன்றுதான். பியூட்டிஃபுல் மைண்ட், தி கிரேட் டிபேட்டர்ஸ் போன்ற படங்களைப் பார்த்த பிறகு அவற்றின் உண்மைத்தன்மையை படித்த பிறகும் அந்தப் படங்களின் மீதான மரியாதை குறையவில்லை.

ஆனால், இருநாட்களுக்கு முன்னர் பார்த்த ‘மர்டர் இன் த பர்ஸ்ட்’ என்ற திரைப்படம் அவ்விதமான ஒரு அனுபவத்தை தராமல், ஏதோ நான் ஏமாற்றப்பட்டதைப் போல உணர்ந்தேன்.



கலிபோர்னியாவின் ‘அல்காட்ராஸ்’ சிறையில் தனிமைச் சிறையில் (Solitary Confinement) அடைக்கப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டு அதனால், சக கைதி ஒருவரை ஸ்பூனால் குத்திக் கொன்ற ஹென்றி யங் என்பவரின் மீது நடைபெற்ற வழக்கு பற்றிய படம் என்பதால் ஆர்வத்துடன் பார்த்தேன். உண்மைச் சம்பவமாக இல்லாதிருந்தால், இதனை ஒரு திரைக்கதையாகவே ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். எனினும், படத்தைப் பார்க்கையில் ‘என்னடா, மூன்று வருடங்களாகவா ஒருவனை தனிமைச்சிறையில் அடைத்து வைத்திருக்க இயலும்’ என்றிருந்தது.

நீதிமன்ற காட்சியில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது, மிகைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்.

ஆனாலும், தனிமைச் சிறையால் உடல்சிதைந்து, மனவளர்ச்சி குன்றிப் போன ஹென்றியாக நடித்திருக்கும் கெவின் பேக்கனின் ஒப்பனையும், உழைப்பும் அசாத்தியமாயிருந்தது.

இறுதியில் படத்தினைப் பற்றிய உயர்வான எண்ணங்கள் அனைத்தும், உண்மைச் சம்பவங்களை படித்த பின்னர் வடிந்து போனது. ஹென்றி தனிமைச் சிறையில் இருந்தது, மூன்று வருடங்கள் இல்லை, மாறாக சில மாதங்கள்தான் என்பது கூட உறுத்தலாக இல்லை. ஏனெனில், சில நாட்கள் தனிமைச் சிறை என்பதே கொடுமையானதும், மனித உரிமை மீறலுமான செயலாகும். மூன்று வருடங்கள் தனிமைச்சிறையில் ஒருவரால் உயிர் பிழைத்திருக்கவே முடியாது.


உறுத்தலான உண்மை, ஹென்றியின் கடந்தகாலம் பற்றியது. ஹென்றி சிறைக்கு வந்தது, வங்கிக் கொள்ளை சம்பவங்கள் மற்றும் கொலைக் குற்றத்திற்காக. ஆனால் படத்தில், தனது தங்கையுடன் சிறு வயதிலேயே அனாதையாக்கப்படும் ஹென்றி தங்கையின் பசியைப் போக்க, ஐந்து டாலர் திருடிய ஒரே குற்றத்திற்காக, சிறைக்கு அனுப்பப்படுகிறான்.

சாதாரணமாக நாம் தமிழ்ப்படங்களில் பார்க்கும் அரைமணி நேர பிளாஷ்பேக் சில நிமிடங்களில், அனால் அதே கழிவிரக்கத்துடன் ஓடி மறைகிறது.

தனிமைச் சிறையின் கொடுமை குறித்து பேச முயலும் படத்தில், மரண தண்டனை பற்றி பேச முயன்ற ‘விருமாண்டி’ என்ற தமிழ்ப்படத்தில் செய்யப்பட்ட அதே தவறு.

தனிமைச் சிறையோ, பிற சிறைக் கொடுமைகளோ மனித உரிமை மீறல் என்றால், பாதிக்கப்படும் நபர் அப்பாவியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கொடுஞ்செயல்கள் செய்தவர்களுக்கும் சேர்த்துதான் இக்கொடுமைகளுக்கு எதிரான வாதங்கள் உள்ள சூழ்நிலையில் ‘ஹென்றி அப்பாவி, அவனை எப்படி தனிமைச் சிறையில் அடைப்பீர்கள்?’ என்ற கேள்வி படத்தின் அடிநாதத்தை சிதைத்துப் போடுவதாக உணர்கிறேன்.

ஏமாற்றமளித்த திரைப்படம் ‘Murder in the first’

மதுரை
16/01/12

Labels: ,

ஞாயிற்றுக் கிழமை படுக்கையில் காப்பி!

பார்த்து ஒரு நாள் கழிந்துவிட்டது. ஆனாலும் ‘லாசே’யும் அவர் வேலை பார்த்த டென்மார்க் தேசத்து ‘ஸ்டோன் பண்ணையும்’ சக வேலையாட்களும், அதன் முதலாளியும் இன்னமும் மனதை விட்டு அகலமாட்டேன் என்கிறார்கள். நேற்றுப் பார்த்த ‘Pelle the conqueror’ என்ற டேனிஷ் திரைப்படம் பற்றிதான் குறிப்பிடுகிறேன். கதாநாயகன் என்னவோ, துரதிஷ்டம் பிடித்த லாசேவின் குட்டிமகன் பெல்லேதான். ஆயினும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே ஏதாவது ஒருவகையில் அவ்வப்பொழுது நினைவில் வந்து போகிறார்கள்.

ஒருவேளை படத்தின் கதாபாத்திரங்களை, அந்த பள்ளிக்கூட வாத்தியார் உட்பட அவர்களின் மிகைப்படுத்தப்பட்ட வகையில் பல தமிழ்ப்படங்களில் நாம் பார்த்தவர்களாயிருப்பதால், எழுந்த தாக்கமாகவும் இருக்கலாம்.

வறுமையால் ஸ்வீடனில் இருந்து துரத்தப்படும் லாசேவும் அவரது மகனும், வேலை தேடி டென்மார்க் தேசம் வந்தாலும், ‘குடியிருக்க ஒரு சிறு வீடு’ ‘ஞாயிற்றுக்கிழமை காலையில் படுக்கையில் கிடைக்கும் காப்பி’ என்ற அவர்களது ஆசை எட்டாக்கனியாகவே இருந்தாலும், நம்பிக்கையுடனே படம் முடிகிறது.


1910ம் ஆண்டு எழுதப்பட்ட புகழ்பெற்ற டென்மார்க் தேசத்து நாவலை படமாக்கியிருக்கிறார்கள். எனவே நாவலின் கிளைக்கதையில் இடம்பெற்றிருக்கும் பல பாத்திரங்கள் சுருக்கமாக வந்து போனாலும், அவர்களைப் பற்றிய முழுக்கதையையும், நம் மனதில் உணர்வுகளாக எழ வைத்தது இயக்குஞரின் திறமை என்றால், கண்ணை மூடிக்கொண்டாலும் படம் பார்ப்பது போன்ற உணர்வை அளித்தது, இசையமைப்பாளரின் திறமை!

ஆனால் படத்தில் அனைத்தையும் மிஞ்சி நிற்பது, லாசேவாக நடித்த மாக்ஸ் வான் சிடோ என்ற ஸ்வீடன் நடிகரின் நடிப்பு. லாசேவின் இயலாமையும், தோல்வியும், அவநம்பிக்கையும் அவரது உடல்மொழியிலேயே தெறிக்க அவ்வளவு இயல்பான நடிப்பு.

1989ம் வருடத்திற்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற பெல்லே எரொபிரென், (உச்சரிக்க சிரமப்படவேண்டாம். படத்தில் வரும் ஒரு சிறுவனின் பெயரை அவனது அம்மாவே சரியாக உச்சரிக்க முடியாதாம்) திரைப்பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்.

மதுரை
15/01/12

Labels: , , ,

25.12.11

முப்பது வெள்ளிக்காசுக்காய்…



நேற்று (24/12/11) தினகரன் நாளிதழைப் பிரித்த எனக்கு ஏதோ வித்தியாசமாக இருந்தது. கடந்த சில நாட்களாக, அதன் இரண்டு பக்கங்களில் வெளியிடப்பட்டு வந்த முல்லைப் பெரியாறு போராட்டம் சம்பந்தமான் புகைப்படங்களைக் காணவில்லை. இரண்டு பக்கம் என்ன, ஒரு பக்கம் இல்லை ஒரு புகைப்படம் கூட காணவில்லை!

ஆனால், தெளிவாக கண்ணில் பட்டது, கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் புகைப்படங்கள், செய்திகளில் அல்ல. கேரள அரசு விளம்பரங்களில். இரண்டு பக்கங்களில் அரை, அரைப்பக்க அளவில் ‘எதுவும் முக்கியத்துவம்இல்லாத, குறிப்பாக தமிழகத்துக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத கேரள அரசு விழாக்களைப் பற்றிய விளம்பரங்கள்.

Splendid Coincidence?

தற்செயலானதா, என்று நான் கூற வருவது, புகைப்படங்கள் இல்லாமல் போனதற்கும், கேரள விளம்பரங்கள் இடம் பிடித்தற்கும் இல்லை. இந்த பதிவினை தட்டச்சிக் கொண்டிருக்கையில், பின்புலத்தில் பதிவர் ரோசாவசந்த கூறிய சுட்டியினை பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் ‘கேளுங்கள் தரப்படும்பாடலில் ‘யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்காய் காட்டிக் கொடுத்தானேஎன்ற டேப் ராஜமாணிக்கத்தின் கணீர் வரிகள்!

-oOo-


அதாவது, ‘என்ன இந்தப் பிரச்னை இப்படி போய்க்கொண்டேயிருக்கிறது. அரசு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்என்ற வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்து பலரின் கவனத்திலிருந்து தப்பி விட்டது என்றே நினைக்கிறேன். அந்த கருத்து எழுதப்பட்ட தொனியிலிருந்தே, மூர்க்கத்தனமான ஒரு நடவடிக்கைக்கு காவல்துறையை தூண்டி விடுவது போல இருந்தது. மேலும், கம்பம் பகுதியில் நடப்பதை, எதோ அரசியல் கட்சிகளும், மொழி வெறியர்களும் தூண்டி விட்டு நடப்பது போலத்தான் சித்தரித்துள்ளது. உண்மையிலேயே, அரசியல் கட்சிகளோ அல்லது பிற இயக்க தூண்டுதலோ இல்லாமல் மக்கள் சுயமாகவே போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்கள் என்றால் அது முல்லைப் பெரியாறு போராட்டமும், கூடங்குளம் போராட்டமும் ஆகும். போராட்டத்தின் தீவிரம் உணர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் பிற இயக்கங்கள் தங்களை அதனோடு இணைக்க முயலுகின்றன. அவ்வளவுதான்.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் வைக்கோவிற்கே பெரிய அளவில் ஏதும் ஆதாயம் இந்தப் போராட்டத்தில் இருப்பது போலத் தோன்றவில்லை!

ஆனால், இதே டைம்ஸ் குழுமம் தில்லியில் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை ஏறக்குறைய ஸ்பான்ஸர் செய்தது. அன்னா ஹசாரேவின் போராட்டம் தில்லியை ஸ்தம்பிக்க வைத்தது என்று பெருமையடித்த டைம்ஸ், அப்போதும் இதைப் போலவே, காவல்துறை வேகமாக செயல்பட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தால், இரண்டு நாட்கள் முன்பு அதன் முதல் பக்கத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கு உள்நோக்கம் உண்டு என்று கூறியிருக்க மாட்டேன்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கும்பல் (mob) குறிப்பிடுவது எனது அனுமானத்தை வலுப்படுத்துகிறது.

டைம்ஸ் சரி, ஹிந்து கூட இன்னமும் முல்லபெரியார் என்றுதானே கூறுகிறது?

மதுரை
24/12/11



Times View 
For a government which listed law and order as its primary responsibility, the continued unrest and violence along the Tamil Nadu-Kerala border over the Mullaperiyar dam, is a poor reflection of the AIADMK regime’s administrative abilities. Day after day, for more than two weeks, the police force here has been grappling with protesters driven by regional jingoism whipped up through political statements and rallies. The stir has crippled interstate trade and travel, besides affecting the livelihood of thousands in both states. It is time the governments in both states joined hands to restore normalcy and sobriety

Labels: ,

15.12.11

டைம்ஸ் ஆப் கேரளா = 100 கோடி = முன்னாள் நீதிபதி!


தலைவலியும் வயித்து வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும், என்பது எத்தனை அருமையான பழமொழி!

சமீபத்தில்தான் கபில் சிபல், மற்றவர்களது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், சோனியா, மன்மோகன்சிங் ஆகியோர் பற்றி அவதூறாகவும் இணையம் எங்கும் பரவிக்கிடக்கும் விடயங்களை கட்டுபடுத்த முயற்சிக்கையில் அனைத்து இணைய பயன்பாட்டார்களாலும், பத்திரிக்கைகளாலும் விளாசித் தள்ளப்பட்டார்.

அவ்வாறு பேச்சு சுதந்திரத்திற்கு (freedom of expression) கொடி பிடித்து வந்ததில் டைம்ஸ் ஆப் இந்தியாவும் முன்னணியில் இருந்தது.

ஆனால், அந்த சூடு ஆறுவதற்கு முன்னதாகவே, டைம்ஸ் ஆப் இந்தியா தான் அவதூறு செய்யப்பட்டுள்ளதாக கூறி, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையின் சிறப்பு நிருபராகிய ராதிகா கிரி என்பவருக்கும் சம்பந்தப்பட்ட அவரது கட்டுரை வெளியான ‘வீக் எண்ட லீடர்’ என்றவலைத்தளத்திற்கும் அறிவிப்பு அனுப்பியுள்ளது.


ராதிகா கிரி தனது கட்டுரையில், சென்னையில் செயல்படும் ஆங்கிலப்பத்திரிக்கைகளில் முக்கியமாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் எப்படி மலையாளிகளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது என்றும், அதனால் அவை முல்லைப் பெரியார் பிரச்னையில் கேரள அரசு சார்பாக செயல்படுகின்றன என்றும் எழுதியுள்ளார். முல்லைப் பெரியாரை ‘முல்லபெரியார்’ என்ற மலையாளஉச்சரிப்பில் ஆங்கில் ஊடகங்கள் எழுதுவதை ஒரு எளிய உதாரணமாக குறிப்பிடும் ராதிகா,டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலம் ‘ஓண’த்திற்காக அலங்கரிக்கப்பட்டாலும், தமிழ் புதுவருடம்கொண்டாட அனுமதிக்கப்படவில்லை என்பதிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களை தனது கட்டுரைக்குஅடிப்படையாக குறிப்பிடுகிறார்.

ஒரு அலுவலகத்தில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஒரு பத்திரிக்கையாளரின் மனதில் எழும் எண்ணப்பாட்டினை (perception) கட்டுரையாக வடித்துள்ளார், ராதிகா கிரி.

இதுதான், தம்மை அவதூறு செய்துள்ளதாகவும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு உலை வைத்துள்ளதாகவும், இரு மாநில மக்களிடையே விரோதத்தை தூண்டியதாகவும் கூறி முதலில் ஒரு கோடி கேட்டு அறிவிப்பு அனுப்பிய டைம்ஸ்தனது இரண்டாவது அறிவிப்பில் 100 கோடி கேட்டுள்ளது.

பேச்சு சுதந்திரத்தை தூக்கிப் பிடித்துள்ளதாக கூறும் பத்திரிக்கையாலேயே, இந்த ஒரு சாதாரண அவதூறை தாங்க முடியவில்லை என்றால், தனது கட்சியின் தலைவியை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வலையெழுத்து மீது, ஒரு அரசியல்வாதி கபில் சிபல் நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவதை எப்படி நாம் விமர்சிக்க முடியும்!

-oOo-

டைம்ஸ் ஆப் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஒரே ஒரு விளக்கம்தான் (justification) கொடுக்க முடியும். அதற்கு உடனடியாக ரூ.100 கோடி தேவைப்படுகிறது. தான் அவதூறு (?) செய்த வேறு ஒரு நபருக்கு நஷ்ட ஈடாக டைம்ஸ் 100 கோடி கொடுக்க வேண்டியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் முதற்கொண்டு பல்வேறு நீதிபதிகளுக்கு பங்கிருப்பதாக சொல்லப்பட்ட புராவிடண்ட் பண்டு ஊழல் பற்றிய செய்தியொன்றில், டைம்ஸ் குழும தொலைக்காட்சியான டைம்ஸ்நவ், முன்னாஸ் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவராக பணியாற்றியவருமான பி.பி.சாவந்த் படத்தினை சில விநாடிகள், தவறுதலாகத்தான் ஓட விட்டது.


அதனால் தான் அவதூறு செய்யப்பட்டதாக கூறி சாவந்த் வெகுண்டெழுந்தார். டைம்ஸ் நவ் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அதனை தனது தொலைக்காட்சியிலும் தெரிவித்தது. சாவந்த பெருந்தன்மையாக விட்டிருக்கலாம். டைம்ஸ் குழுமம் மீது புனே நீதிமன்றத்தில் 100 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

புனே நீதிமன்றம், வழக்கின் இறுதியில் டைம்ஸ் குழுமத்தை சாவந்திற்கு 100 கோடி நஷ்ட ஈடாக கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. இவ்வளவு பெருந்தொகை, சட்டமுறை அறிந்த அனைத்து நியாய் உணர்வுகளுக்கும் எதிரானது என்பதுதான் சட்ட வல்லுஞர்களின் கருத்தாக இருக்க முடியும். புனே நீதிமன்றம்தான் இப்படியென்றால் அதற்குப் பின்னர் ந்டந்ததுதான் வேடிக்கை!


டைம்ஸ் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. மேல்முறையீடு முடியும் வரை புனே நீதிமன்ற தீர்ப்பினை இடைக்கால தடை செய்ய வேண்டிய மனுவில், உய்ர்நீதிமன்றம் 20கோடியை தொகையாக வைப்பீடு செய்ய வேண்டுமென்றும் மீதி 80 கோடிக்கு வங்கி உத்தரவாதம் (Bank Gurantee) கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. வங்கி உத்தரவாதம் என்பது, அந்த தொகையை வைப்பீடு செய்வது போலத்தான். வேறு வழியில்லாமல் டைம்ஸ் உச்ச நீதிமன்றம் சென்றால், மும்பைஉயர்நீதிமன்றம் கூறியது சரிதான் என்று மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மூன்று நீதிமன்றங்களுமே, இதுவரை பழக்கத்தில் உள்ள சட்ட நடைமுறைகளின்படி நடந்து கொள்ளவில்லை என்பது உரிமையியல் வழக்குகளில் பரிச்சயமுள்ள யாரும் கூறுவர். அவதூறுக்கு இத்தனை பெரிய இழப்பீடு என்பது, நீதிமன்ற தீர்ப்புகளை கேலிக்கூத்தாக்கி விடும். ராஜீவ் கொலை வழக்கில் 26 குற்றவாளிகளுக்கும் தூக்குத்தண்டனை கொடுத்தது போலத்தான்.

தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் நடந்து கொண்டுள்ள முறைகள், மக்கள் ‘முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்றால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நஷ்ட ஈடா என்று கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கலாம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், டைம்ஸ் குழுமத்திற்கு வேறு வழியில்லை. 100 கோடி ரூபாய் பணத்தை கட்டித்தான் ஆக வேண்டும். அதற்குத்தான் சாதாரண ஒரு வலைத்தளம் மீது பாய்ந்துள்ளார்கள் போல!

மதுரை
15/12/11

Labels: ,

13.12.11

அரசற்ற நிலை நோக்கி வழிநடத்துகிறதா, இணையம்?


டேம் 999 படம் தடை செய்யப்பட்ட பொழுது, அதனை எதிர்த்து எழுந்த லிபரல் குரல்கள், சுப்பிரமணியன் சுவாமிக்கு ஹாவர்டு பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ள விடயத்தில் அதே வேகத்தில் எழவில்லை. உண்மையில், சுப்பிரமணியன் சுவாமியை சரியாக புரிந்து கொள்ள உதவிய அவரது டிஎன்ஏ கட்டுரையை வரவேற்று, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதுதான் சரியான செயலாக இருக்கும். மாறாக அதனை தடை செய்ய முயல்வதுதான் தவறு!

ஹாவர்டு பல்கலைக்கழகம், தனது அதீதமான எதிர்வினை மூலம் சுப்பிரமணியன் சுவாமிக்கு தேவையற்ற அனுதாபத்தை பெற்றுத் தந்துள்ளது.

இழப்பு சுவாமிக்கு அல்ல!

-oOo-

ஆனால், நமது நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை போற்றுபவர்கள் எங்கிருந்தெல்லாம் எழுகிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது, தலை சுற்றுகிறது. கபில் சிபல், ‘இணையத்தில் கட்டுப்பாடு வேண்டும் என்று ஆரம்பித்த பொழுது, அதனை எதிர்த்து அவரது வீட்டிற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னால் நிற்பது, ‘காஷ்மீர் கருத்துக்காக பிரஷாந்த் பூஷனை உச்ச நீதிமன்றத்திற்குள்ளாகவே சென்று தாக்கிய நபர்!


அடுத்து ‘Babasaheb Ambedkar enshrined Freedom of Expression in the Constitution & on his nirvan diwas, UPA seeks to snatch it! என்று துவிட்டியிருப்பது, நரேந்திர மோடி!!

-oOo-

கபில் சிபல் என்றதும் போட்டி போட்டிக் கொண்டு வந்து அனைவரும் அவரை மொத்தினார்கள். நேற்று மார்கண்டேய கட்ஜுவும் இணையத்தில் நிலவும் கட்டுக்கடங்காத சுதந்திரம் பற்றி பேசியுள்ளார். பெரிய எதிர்வினை, இதுவரை இல்லை. ஆனால் வரும் காலத்தில் பாதிக்கப்படுபவர்கள் ஒவ்வொருவராக, எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது இணைய கட்டுப்பாடு வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெறலாம்.

இணையத்தில் கட்டுப்பாடு உள்ளதோ இல்லையோ, நமது நாட்டில் நிலவும் சட்டப்படி இணையத்தில் எழுதப்படும் விடயங்களுக்காக, குற்றவியல் நடவடிக்கை யார் மீதும் எடுக்கப்படலாம் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். நமது குற்றவியல் சட்டப்பிரிவுகளை பரந்த அளவில் அர்த்தம் கொண்டால் (on a broader definition) அவ்விதமான விடயங்களுக்கு தளம் அமைத்துக் கொடுக்கும் முகநூல், துவிட்டர் போன்ற இணையதளங்களை நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களையும், குற்றத்திற்கு உடந்தையானவர்கள் என்று பொருள் கொள்ளலாம். எதற்கு இந்த வேண்டாத வேலை என்பதால், யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், எதிர்காலத்தில் இணைய பயன்பாடு மக்களிடையே மேலும் மேலும் பெருகும் பொழுது, பல பிரச்னைகளை இணையம் எதிர் கொள்ள நேரிடலாம்.

-oOo-


எது எப்படியிருப்பினும், இணையம் தரும் கட்டற்ற சுதந்திரமே, அரேபிய எழுச்சி முதல் முல்லைபெரியாறு கிளர்ச்சி வரை அடிநாதமாக இருப்பது போல எனக்கு ஏனோ தோன்றுகிறது. அன்னா ஹசாரே, கூடங்குளம் மற்றும் கடந்த மூன்று நாட்களாக கம்பத்தில் ஏற்ப்பட்டுள்ள மக்கள் எழுச்சியில் பொதுவான ஒரு வடிவம் (Pattern) இருக்கிறது. மூன்றுமே, அரசியல்கட்சிகளின் கட்டுப்பாட்டினை மீறி கிளர்ந்தவை. அவர்களது கோரிக்கை நிறைவேறக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று பரவலாக கருதப்பட்டாலும், அதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல், இதுதான் வேண்டும் என்று பெருத்த நம்பிக்கையுடன், போராட்டம் தொடர்ந்து தன்னை நடத்திக் கொண்டிருத்தல்.


முக்கியமாக, மிக முக்கியமாக, நாம் அடிக்கடி பார்த்து பழகிய மற்ற் போராட்டங்களைப் போல இல்லாமல், இம்மூன்று போராட்டங்களிலும் பங்கு பெருபவர்கள் மிகுந்த உற்சாகத்துடன், ‘இந்தப் போராட்டமில்லையென்றால் என் நிலை அதோ கதிதான் என்ற கலக்கம் ஏதுமின்றி இருப்பது. திடீரென வேலை பறிக்கப்பட்ட ஊழியர்களின் போராட்டங்களில் அவரவர்களின் தனிப்பட்ட எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கும். ஆனால் இம்மூன்று போராட்டங்களும் பங்கு பெறுபவர்களின் பொதுவான எதிர்காலம் பற்றியது. எனவேதான் சோர்வில்லாமல் இப்போராட்டங்கள் சுயமாகவே, தங்களை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது.


இப்போராட்டங்களுக்கான அடித்தளம், இணையமே என்றால், முல்லை பெரியாறுமா என்று தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை என அனுமானிக்கிறேன். உலகளாவிய வகையில், அரசற்ற (Anarchy) ஒரு நிலை நோக்கி இணையம் மக்களை வழிநடத்துகிறது.

அறுபதுகளில் தொடங்கி பின்னர் எழுபதுகளில் தேய்ந்து போன ஹிப்பி இயக்கம் போல, இவ்விதமான தன்னெழுச்சி போராட்டங்களும் ஒரு நாள் சலித்துப் போகலாம்...

மதுரை
13/12/11

Labels: , ,


View My Stats