12.12.10

சீமான் விடுதலை சொல்லாத செய்தி...

உண்மைத் தமிழன் என்ற பதிவரின் ‘சீமான் கைது சொல்லும் செய்தி...’ என்ற பதிவில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் (National Security Act) அவரை சிறையில் வைக்க அதிகாரம் இல்லாத அதிகாரி கையெழுத்திட்ட உத்தரவு செல்லாது என்று உயர்நீதிமன்றத்தால் சீமான் விடுவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டி, ‘ஏன், இந்த சட்ட மீறல் முன்னரே அரசு வழக்குரைஞருக்குத் தெரியாதா? இந்த உத்தரவு சட்ட விரோதமானது என்று அரசுக்கு சுட்டிக் காட்டியிருக்கலாமே’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரது பதிவில் காணப்படும் விடயங்கள் குறித்து சில விளக்கங்கள்...


தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA), அந்நியச் செலவாணி மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் (COFEPOSA) மற்றும் தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள குண்டர்கள் சட்டம் (The Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug-offenders, Forest-offenders,Goondas, Immoral Traffic Offenders, Slum-grabbers and Video Pirates Act,1982) போன்ற சட்டங்கள் ஒரு குற்றம் செய்ததற்காக தண்டனையை அளிக்கவல்ல சட்டங்கள் என்பதை விட, ஒரு குற்றம் நிகழாமல் இருக்கவும் பொது ஒழுங்கைக் காப்பதற்குமான சட்டங்கள் என்றுதான் கூற முடியும்.

அதாவது மற்ற குற்றவியல் சட்டமுறைகளினால், ஒரு குற்றம் நிகழ்வதை தடுக்க இயல்வதில்லை என்ற அடிப்படையில், குறிப்பிட்ட சில வகை குற்றங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட நபரை குறிப்பிட்ட காலம் சிறையில் அடைத்து வைக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்ட சட்டங்கள்.

அடிப்படையில் இந்த மாதிரியான சட்டங்கள் நமது நாடு ஏற்றுக்கொண்ட குற்றவியல் சட்டமுறைகளுக்கு விரோதமானதுதான். ஆனால், இவை போன்ற சட்டங்கள் நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட பொழுதெல்லாம், நமது நீதிமன்றங்கள் இந்தச் சட்டங்களை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டன. இல்லை, ‘என்கவுண்டர்’தான் ஒரே முடிவு என்று காவல்துறை கருதுவதாலும் இருக்கலாம்.

முதலில் கைது செய்யப்படுகையில், சீமான் செய்ததாக கூறப்பட்ட குற்றங்கள் சாதாரண வகையைச் சார்ந்தவை. எளிதில், அவர் பிணையில் வந்து விடலாம். எனவே அவர் வெளியில் இருந்தால், தேசப்பாதுகாப்புக்கு அல்லது பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளலாம் என்று அரசு ‘நினைத்ததால்’ அவர் தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே சீமான் சிறையில் அடைக்கப்பட்டது, செய்த குற்றத்திற்காக அல்ல. மாறாக, செய்யக்கூடும் என்று கருதப்பட்ட செயலுக்காக!

எனவேதான் தடுப்புக் காவல் என்பது, நாகரீகமான குற்றவியல் சட்டமுறைக்கு எதிரான முறை என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அடுத்தது நீதிமன்ற தீர்ப்பு. சீமான் தேசபாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலை புரியலாம் என்பது, சம்பந்தப்பட்ட அலுவலரின் (காவல்துறை ஆணையாளர்) உள்ளார்ந்த திருப்தியை (subjective satisfaction) பொறுத்தது. அது சரியா அல்லது தவறா என்ற கேள்விக்குள் நீதிமன்றம் அதிகம் செல்லாது. எனவேதான் தடுப்புக் காவல் (preventive detention) வழக்குகளில், நுட்பமான காரணங்களை (technical reasons) வைத்தே சிறை வைக்கப்பட்டவரை விடுவிக்க இயலும். அதாவது, அவருக்கு அளிக்கப்பட்ட ஆவணங்கள் நேர்த்தியாக நகலெடுக்கப்படவில்லை அல்லது அதனை கையளிக்க ஒருநாள் தாமதமாகி விட்டது போன்ற காரணங்கள் கூட எடுத்துக் கொள்ளப்படும். சீமான் வழக்கில், ஆணையாளர் இல்லாமல், அவரது பொறுப்பில் இருந்தவர் கையெழுத்திட்டவர் செல்லாது என்ற காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், இதற்கும் அரசு தீர்ப்பினைப் பற்றி என்ன நினைக்கும் என்று கவலைப்படாத நீதிபதியினை தேடி சீமானின் வழக்குரைஞர்கள் ஓட வேண்டியிருந்தது என்பது வேதனையான உண்மை!

எனினும், தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர், குற்றம் ஏதும் செய்ததற்காக சிறை வைக்கப்படாதலால், நுட்ப காரணங்களை காட்டி அவர்களை விடுதலை செய்வது நீதிபதிகளுக்கும் திருப்தியளிக்கும் செயலாகவே இருக்கும்.

காவலர்களுக்கும் திருப்திதான். ஏனெனில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை தாமதப்படுத்தி, தங்களுடைய நோக்கத்தில் வெற்றி பெற்று விடுவார்கள். தடுப்புக் காவல் ஓராண்டு வரைதான். வழக்கு முடிவதற்குள் ஐந்து மாதம் முடிந்து விடும். போதுமே!

எனவே நுட்ப தவறுகளைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை. தினமும் உயர்நீதிமன்றங்களில் பல தடுப்புக் காவல் வழக்குகள் ஏற்கனவே கூறப்பட்ட தீர்ப்புகளின் (precedents) அடிப்படையில்தான் ரத்து செய்யப்படுகின்றன. சிறை வைக்கப்பட்டவர்களும் ‘ஆளை விட்டால் போதும்’ என்று ஓடி விடுவார்கள்.

சீமான் வழக்கில் நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக கூறப்படுகிறது. அதற்கு அதிகாரி தவறு செய்துள்ளார் என்பதோடு, கெட்ட எண்ணத்துடன் (malafide intention) செயல்பட்டுள்ளார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்பதை...

மதுரை
12/12/10


பிகு : ஈழத்தில் போர் தீவிரமடைந்த நிலையில், இங்கிருந்து வெடிமருந்துகள் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பொழுது, இந்தியாவின் பாதுகாப்புக்கோ அல்லது இங்கு பொது ஒழுங்கிற்கோ அது பாதகமான செயலல்ல என்று வாதிடப்பட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

8.12.10

உச்ச நீதிமன்றம் பிடித்த புலிவால்!

"ஒரு சாதாரண மன்னிப்பு போதும். கடைசி தடவையும் இதைத்தான் கூறினோம். நாங்கள் கூறுவதை யோசித்துப் பாருங்கள்”

இப்படி, ‘ஒரு மன்னிப்பை பெயருக்கு நீங்கள் கேட்டுவிட்டால், நாங்களும் இத்துடன் பிரச்னையை முடித்துக் கொள்வோமே’ என்று இறைஞ்சிக் கொண்டிருப்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள்! இறைஞ்சப்படும் நபர் ‘வழக்குரைஞர் பிரசாந்த் பூசன்’. முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான சாந்தி பூசனின் மகன்!!

இப்படி நடக்கும் என்பது நான் முன்பே அறிந்திருந்ததுதான்.

பிரசாந்த் பூசன், நீதித்துறையில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடி வருபவர். தெஹல்கா நாளிதழுக்கு அளித்த பேட்டி ஓன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தானறிந்தவரை 8 நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று பேட்டியளித்தார். உடனே உச்ச நீதிமன்றத்தின் செல்லப்பிள்ளையான ஹரீஷ் சால்வே, பிரசாந்த் பூசன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்று முறையீட, விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் உச்ச நீதிமன்றம் பிரசாந்த் பூசன் மீது அவமதிப்பு வழக்கு (criminal contempt) தொடர்ந்தது.

வழக்குரைஞர் தொழில் தர்மங்களை (Professional Ethics) காற்றில் பறக்கவிடும் ஹரீஷ் சால்வேயா என்னைப் பற்றி குறை கூறுவது என்று வெகுண்டெழுந்த பிரசாந்த் பூசன், நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் (affidavit) ஹரீஷ் சால்வேயின் யோக்கியதையை வெளுத்துக் கட்டினார்.

உச்ச நீதிமன்றத்திற்கு அப்பொழுதுதான், தான் பிடித்திருப்பது புலி வால் என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால், வேறு எதுவும் செய்வதற்கு முன்பாக நடந்ததுதான் வேடிக்கை!

'என் மகனையா குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறீர்கள்?' என்று பொங்கி எழுந்த சாந்தி பூசன், ‘அவன் என்ன 8 தலைமை நீதிபதிகள் என்றுதானே கூறினான். இந்தா புடித்துக் கொள்! இந்த இந்த தலைமை நீதிபதி, இன்ன இன்ன ஊழல் புரிந்தார் என்று ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து...முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்து பார்’ என்று உச்ச நீதிமன்றத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்தார்.

"இது என்னடா குட்டி எட்டடி பாய்ந்தால், தாய் பதினாறு அடி பாய்கிறது’ என்று அஞ்சிய நீதிபதிகள்...சாந்தி பூசன் இப்படி ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து தங்களுக்கு சவால் விட்டதை கண்டு கொள்ளாதது மாதிரி, பிரசாந்த் பூசனைப் பார்த்து கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள்.

***

நேற்று நீதிபதிகள் பிரசாந்த் பூசனின் வழக்குரைஞரான ராம் ஜேத்மலானியிடம் இவ்வாறு கெஞ்சிக் கொண்டிருந்த பொழுது கூட சாந்தி பூசன், என் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்ற எனது மனுவை விசாரிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது நீதிபதி கபீர், ‘அதெல்லாம் தேவையில்லை’ என்று பூசி மெழுகி விட்டார்.

ஜேத்மலானியும் தன் பங்குக்கு, ‘பூசனின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதமான மறுப்பும் இல்லை. எனவே அவர் உண்மை என நம்பி கூறியவை குறித்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது’ என்று வாதிட வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

***

போன வாரம்தான் தலைமை கண்காணிப்பாளர் (Chief Vigilence Commissioner) மாசற்ற நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று உறுமிய பொழுது, அரசு தலைமை வழக்குரைஞர் ‘அப்படியானால், நீதிபதிகள் நியமனத்தையும் அதே அளவுகோலில் அளக்க நேரிடும்’ என்று ஏறக்குறைய ஒரு மிரட்டலை விடுத்தார்.

எந்த நீதிபதியும், ‘பிரச்னை இல்லை. எங்களையும் மாசற்ற நேர்மை (impeccable integrity) என்ற அளவு கோலில் அளக்கலாம்’ என்று தலைமை வழக்குரைஞரின் சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னாள் நீதிபதி கிருஷண ஐயர்தான், தலைமை வழக்குரைஞர் எப்படி அவ்வாறு கூறப்போயிற்று என்று ஹிந்துவில் எழுத, தலைமை வழக்குரைஞர் தான் ‘அப்படியொரு அர்த்தத்தில் கூறவில்லை’ என்று ஒரு விளக்கமளித்தார்.

***

சமீபத்தில்தான், ஜேத்மலானி உச்ச நீதிமன்றத்தில் வேறு ஒரு குண்டினை வீசினார். குஜராத் படுகொலைகள் சம்பந்தமான விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவினை கூறியிருந்தது. ஆனால் உத்தரவினை கூறிய நீதிபதி ‘வைப்பு நிதி ஊழலில்’ (Provident Fund Scam) சம்பந்தப்பட்டவர் என்று பரவலான பேச்சு இருந்தது. பின்னர் அந்த நீதிபதி ஒய்வு பெற்று விட்டார். ஆயினும் குஜராத் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில், ஜேத்மலானி, ‘சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருக்கும் ஒரு நீதிபதி, சிபிஐ சம்பந்தப்பட்ட வழக்கில் கூறிய தீர்ப்பு செல்லாது’ என்று ஒரே போடாக போட்டார்.

இந்த தொடர் தாக்குதல்களில் உச்ச நீதிமன்றத்தின் மாண்பு (dignity) வெலவெலத்துப் போயிருக்கிறது என்பதுதான் உண்மை.

சாந்தி பூசனின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டவைகளுக்கு எவ்வித மறுப்பும் இல்லை. அவை உண்மையெனில், குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும். உண்மை இல்லை எனில் சாந்தி பூசன் மீது குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும்.

"ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம், ‘ஏன் அந்த எட்டு தலைமை நீதிபதிகள் மீது இன்னமும் குற்ற வழக்கு தொடரப்படவில்லை’ என்று உறுமும் நாள் வந்தால்தான், அந்த மாண்பு காப்பாற்றப்படும்.

கவனிக்கவும், ஊழல்வாதிகள் என்று குறிப்பிடப்படுவது, எட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்ல. எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்!! நூறு கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டுக்கான தலைமை நீதிபதிகளின் யோக்கியதையே இப்படி என்றால், மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள்......உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள் (Judicial Magistrates) ஆகியோரின் நேர்மை?

ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் அவன் இந்த நாட்டைக் காப்பாற்றட்டும்

மதுரை
08/12/10

3.12.10

திடீர் சைலேந்திரபாபுகள்…


இந்த நிதிபதி எத்தனை லஞ்சம் கொடுத்து, வாங்கி இந்த பதவிக்கு வந்தாரோ!...


என்னைக்கு நாடு உருப்பட போவுதோ??? இந்தமாதிரி நீதிபதி இருந்தா லஞ்சம் வாங்குறதுல இந்திய no 1 ஆய்டும்......


ஐயா, கணம் நீதிபதி அவர்களே, இந்திய குட்டிச்சுவராய் ஆவதற்கு தங்களின் தீர்ப்பு ஒன்றே போதும். இனி அரசு ஊழியர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நீதியரசர் அந்த அரியணையில் இருந்து கூறுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு தீர்ப்பு என்றே கருதப்படும் என்கிற அடிப்படை விசயமே தெரியாத ஒருவரை அரசு இருத்தி இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. நன்றி. வளரட்டும் லஞ்சம்! நாசமாகட்டும் இந்தியா!! நிறையட்டும் உங்கள் கை !!!...


இந்தியா நீதி செத்து விட்டது இரண்டாவது முறையாக 1 . பாப்ரி மஸ்ஜித் வழக்கு 2. லஞ்ச வழக்கு . இந்தியன மானம் எங்க?...


அய்யா, நீதி மான்!!!!!! அவர்களே உங்கள் வீட்டில் முதலில் ரெய்டு நடத்த வேண்டும் அய்யா, எவ்வளவு லஞ்சம் கொடுத்து நீதி மான்!!!!!!! ஆநீர்களோ வெட்கம் கெட்ட தீர்ப்புக்கு அதரவு வேறு? வெட்கம் கெட்ட செயலுக்கு அதரவு வேறு?...


நாடே குட்டிசெவரா போகுதுன்க்ராதுக்கு இது நல்ல உதாரணம். நீதிபதி லஞ்சம் கொடுத்து வந்திருப்பருன்னு தோணுது....


இதை சொல்ல எவ்வளவு லஞ்சம் வாங்கினீங்க ? அப்போ மக்கள் வரி கட்டாமல் இருக்கலாம்னு சொல்லுங்க ? இல்லே அவங்களக்கு சம்பளம் இல்லேன்னு சொல்லுங்க.....


இவரு எங்கியோ நல்ல லஞ்சம் வாங்கறாரு போல. அதா மறைக்க இப்படி ஒரு தீர்ப்பு , மக்களே உஷாரு...


நான் இந்தியன் என்று சொல்வதற்கு வெட்க படுகிறேன். இப்படி ஒரு சட்டம் எந்த நாட்டிலும் இருக்காது. இப்படி ஒரு தீர்ப்பை இந்த உலகத்தில் எந்த ஒரு நீதிபதியும் தரமாட்டார்.


mr judge you are not make country proud there is nothing different between you and terrorist

***

மேற்கண்ட அனைத்து அர்ச்சனைகளுக்கும் உரிய, நீதிபதி தற்பொழுது நீதித்துறையில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க சாட்டையை சுழற்றியிருக்கும் ‘ஹீரோ’ மார்கண்டேய கட்ஜு என்றால் ஆச்சரியமாக இருக்கலாம்.

தமிழகத்தின் முக்கியமான தினசரிகளில் ஒன்றான ‘தினமலர்’ கட்ஜூ அவர்கள் வேடிக்கையாக நீதிமன்றத்தில் கூறிய ‘ஜோக்’கை ஏதோ அவர் கூறிய சேரியமான (serious) கருத்து என்பது போல தனது வாசகர்களுக்கு கடத்த, அந்த பத்திரிக்கையின் ‘படித்த’ ‘வெளிநாடுகளில் வசிக்கும்’ பல்வேறு வாசகர்கள் கூறிய முன்னிகைகளின் சில துளிகள்.

சந்தேகமிருந்தால், ‘அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து’ என்ற இந்த செய்தினை படிக்கவும்.

நன்கு படித்த, கணணி உபயோகித்து செய்தியினைப் படிக்கும் அளவிற்கு வசதியுள்ள வாசகர்களே இப்படியென்றால், உடனடியாக யாரையும் மோகன்ராஜாகவும், சைலேந்திரபாபுவாகவும் மாற்றுவது நமது ஊடகங்களுக்கு எவ்வளவு என்பது புரியலாம்.

மதுரை
03/12/10

1.12.10

ஏன் கூடாது என்கவுண்டர்கள்...

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீதான உச்சநீதிமன்ற நீதிபதியான கட்ஜுவின் பாய்ச்சலை, ’ஜுடீசியல் எனகவுண்டர்’ என்று குறிப்பிட்டதாலோ என்னவோ, கட்ஜூ என் ஹீரோ’ ‘அந்த மாட்டில் தேவையான ஒன்றுதான்’ என்ற எதிர் வினைகள்.


உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு தீர்ப்பினைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு எதிராக தீர்ப்பு கூறிய பின்னர், அதனை ஏற்றுக் கொள்ளாத மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, தனது தீர்ப்பில் ‘ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் தீர்ப்பு அவருக்கு எதிராக இருப்பினும், நீதிபதி கட்ஜு வேறு பலன்களை எதிர்பார்த்து இப்படி ஒரு தீர்ப்பு எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டிருந்தால், அடுத்த நாள் செய்தித் தாள்களில் இவ்வாறு செய்தி வந்திருக்கும்


‘உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சத்திற்கு மயங்கி ஐந்து நீதிபதிகள் பெஞ்சு தீர்ப்பிற்கு புறம்பாக தீர்ப்பு எழுதியுள்ளார்...மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு கடும் கண்டனம்’


செய்தியினை படிக்கும் வாசகர்களுக்கு, கட்ஜுவையும் தெரியாது. அவர் என்ன தீர்ப்பு கூறினார் என்றும் தெரியாது. ஆனால், ’இவனை எல்லாம் இப்படித்தான் போட்டுத் தள்ளனும். உச்ச நீதிமன்றமா? கொக்கா? என்று கை தட்டியிருப்பார்கள்’


***

கட்ஜூ தனது தீர்ப்பில் மேலும், ‘சில நீதிபதிகள் தங்களது சொந்த பந்தங்களை அதே நீதிமன்றத்தில் (அல்காபாத்) வழக்குரைஞர்களாக பணியாற்ற வைக்கிறார்கள். பணியாற்றத் தொடங்கிய சில வருடங்களிலேயே, நீதிபதிகளின் மகன்களும் உறவினர்களும் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள். பெரிய வீடு, ஆடம்பர கார்கள் மற்றும் அளப்பறிய வங்கிச் சேமிப்பு என சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்’ என்றும் கூறுகிறார்.


இதே கருத்தை பல ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களும் கூறலாம். ஆனால் அவை யாவும் குற்றச்சாட்டுகள். அவ்வளவுதான். அவற்றை ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. ஆனால் குற்றச்சாட்டுகள் தீர்ப்பாக உருமாறு முன்னர், அந்த தீர்ப்பு யாருக்கு எதிரானதோ அவரது கருத்து கேட்கப்பட வேண்டும். இல்லை அந்த தீர்ப்பு இல்லாநிலையது (void). ஏனெனில் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதுவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது.


நீதிமன்ற தாள்வாரங்களில் பேசப்படும் கிசுகிசுக்களை தனது தீர்ப்பில் கட்ஜு நுழைத்தால், அதுவும் அதிகார துஷ்பிரயோகமே!


***

கட்ஜு, உண்மையிலேயே ஹீரோவாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். ‘ஏன், தங்கள் பதவிக்கு பெருமை சேர்த்த பல உயர்நீதிமன்ற நீதிபதிகளால் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை’ என்பதற்கான காரணத்தை, தனது தீர்ப்பில் அல்ல, தான் அவ்வப் பொழுது எழுதும் பத்திரிக்கை கட்டுரைகளில் தெரிவித்திருக்கலாம்.


சமீபத்தில் ஒரு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகையில், குறிப்பிட்ட இரு நபர்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று கொலேஜியத்தில் பங்கு வகித்த நேர்மையான ஒரு நீதிபதி எழுத்து மூலம் தெரிவித்த எதிர்ப்பினையும் (dissenting note) மீறி அந்த நபர்களை நீதிபதிகளாக எப்படி உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது என்று கேட்டிருக்கலாம்.


இன்று, ‘ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம் ‘ஏன் வைப்பு நிதி ஊழலில் சம்பந்தப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கவில்லை’ என்று மைய புலனாய்வு அமைப்பைப் பார்த்து அன்று உறுமவில்லை என்று விளக்கியிருக்கலாம்.


சாந்தி பூசன், தனக்குத் தெரிந்து எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதோடு நில்லாமல், யார் யார் என்ன என்ன ஊழல் செய்தார்கள் என்ற விபரத்தை சத்திய பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து ’முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து கொள்’ என்று சவால் விட்ட பிறகும் அவரை ஒன்றும் செய்யாமல் உச்ச நீதிமன்றம் பதுங்கி பின் வாங்குவது ஏன் என்று மற்ற நீதிபதிகளிடம் சண்டை பிடித்திருக்கலாம்.


அல்லது, இப்படி வெளிப்படையாக கூறிய பின்னரும் ஏன் அந்த தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று மத்திய அரசை சாடியிருக்கலாம்.


விஜிலன்ஸ் கமிசனர் வழக்கில், மத்திய அரசு வழக்குரைஞர் ‘ இப்படிப் பட்ட பதவி வகிப்பவர்களுக்கு ‘மாசற்ற் நேர்மை’ (impeccable integrity) இருக்க வேண்டுமென்று கூறினால், அதே அளவுகோலில் நீதிபதி பதவி வகிப்பவர்களையும் அளக்க வேண்டியிருக்கும்’ என்று பூடகமாக ஒரு மிரட்டல் விட்டதை ஏதோ அவர் கூறியது காதிலேயே விழவில்லை என்பது போல உச்ச நீதிமன்றம் நடிப்பது ஏன்? என்பதை வியந்திருக்கலாம்.


’மிஸ்டர் அட்டார்னி ஜெனரல், நாங்கள் அப்பழுக்கில்லாதவர்கள். வேண்டுமென்றால், எங்களை சோதித்துப் பாருங்கள்’ என்று எந்த நீதிபதியிடமிருந்தும் குரல் வரவில்லையே’ என்று வருத்தப்பட்டிருக்கலாம்.


இந்த கிருஷ்ண ஐயர் வேறு, சமய சந்தர்ப்பம் தெரியாமல், ’அட்டார்னி ஜெனரல் எப்படி அப்படி சொல்லப் போயிற்று, விடாதே அவரை ஒன்றில் இரண்டு பார்த்து விடு’ ஹிந்துவில் கட்டுரை எழுதி உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார். அவரிடமாவது ‘ஐயா நாங்க கைப்புள்ள... எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’ என்று கொஞ்சம் அழுதிருக்கலாம்...


இதையெல்லாம், செய்திருந்தா அது ஹீரோயிசம்!


மதுரை
02/12/10

28.11.10

கட்ஜூவின் என்கவுண்டர்!

உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ நமது உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த பொழுது, எனது மூத்த வழக்குரைஞர், ’அவரது தீர்ப்புகள் செல்லுமா?’ என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினார். ‘ஏன் சார்?’ என்றால்…

‘அவர்தான் பதினாறு வயசை தாண்டவில்லையே. மைனர் சொன்ன தீர்ப்பு செல்லுமா?’ என்றாரே பார்க்கலாம்.

18 வயதுக்குள் செய்யப்படும் செயல்கள் குற்றமாகாது என்ற தைரியத்தில்தான், கட்ஜூ அவர்கள் அலகபாத் நீதிமன்றத்தை அவமதிக்க துணிந்துள்ளார் போல!

மூன்று நாட்களுக்கு முன்னர் தான் கூறிய தீர்ப்பு ஒன்றில், அலகபாத் உயர்நீதிமன்ற தனி நீதிபதி கூறிய தீர்ப்பு சட்டம் சாராத ‘வேறு பலன்களுக்காக’ கூறப்பட்டுள்ளதாக தனது தீர்ப்பில் குற்றம்சாட்டியுள்ளார் (as these interim orders are clearly passed on extraneous consideration).

ஒரு தீர்ப்பினைப் பற்றி சட்டரீதியில் விமர்சிக்கலாம். சட்டம் சாரத வகையில் கூட குறை கூறலாம். ஆனால் அந்த தீர்ப்பினை நீதிபதி வேறு பலன்களுக்காக கூறியுள்ளார் என்று கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்த அடிப்படையில் கட்ஜூ கூறியவை, ஒரு தீர்ப்பில் கூறப்பட்டிருப்பினும், நீதிமன்ற அவமதிப்பே!

தனி நீதிபதியில் உத்தரவு சட்டப்படி சரியான ஒரு உத்தரவா இல்லையா என்ற மேல் முறையீட்டில், தீர்ப்பினை பற்றி எவ்விதமான விமர்சனத்தையும் கூற கட்ஜுவிற்கு உரிமை உண்டு. ஆனால், உத்தரவு வேறு பலன்களுக்காக கூறப்பட்டுள்ளதாக கூறியது, நீதித்துறையின் அனைத்து நெறிமுறைகளையும் மீறிய ஒரு செயல்.

ஒரு நீதிபதி, அதுவும் பாராளுமன்ற ஒட்டெடுப்பு முறை மூலமே பதவி நீக்கம் செய்யப்படத்தக்க ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி வேறு பலன்களுக்காக தீர்ப்பு கூறுவது என்பது, பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய அளவுக்கு முறை தவறிய செயல். மட்டுமல்லாமல் அந்த நீதிபதியை சிறையில் அடைக்க வேண்டிய குற்றச் செயல். ஆனால், கட்ஜு, நீதிமன்ற நடைமுறை, இயற்கை நீதி போன்றவை இந்த நாட்டின் நீதிதுறையின் ஆதர்ச விதிகள் என்பதையெல்லாம் மறந்து, மிகச் சாதாரணமாக ஒருவரை குற்றவாளி என்று கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்பில் தான் வகிக்கும் மிக உயர்ந்த ஒரு பொறுப்பின் முக்கியத்துவத்தையும் தனது தீர்ப்பில் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும், 100 கோடி மக்கள் தொகையுள்ள இந்த நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்பது புரியாமல் செயல்பட்டுள்ளார்.

இந்த நீதித்துறை தாக்குதலின் ‘Judicial Encounter’ அதிர்ச்சியிலிருந்து யாரும் மீளவில்லை போல. மூன்று நாட்களாகி விட்டன. இனிதான் பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பதை!

***
இவ்வாறு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது, கட்ஜுவுக்கு ஒன்றும் புதிதல்ல. தனது அளவுக்கு மீறிய ஆர்வத்தால் இப்படித்தான் வார்த்தைகளை கொட்டி, பின் மாட்டிக் கொள்வார்.

கடந்த மாதம்தான், திருமணம் இல்லாமலேயே இருவர் சேர்ந்து வாழும் முறை பற்றிய தீர்ப்பில், வைப்பு (keep) என்ற வார்த்தையினை பயன்படுத்தி வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்கிடம் வாங்கி கட்டினார். (If a man has a `keep' whom he 1maintains financially and uses mainly for sexual purpose and/or as a servant it would not, in our opinion, be a relationship in the nature of marriage)

இங்கே ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். கட்ஜு எப்படி அப்பழுக்கில்லாத நேர்மையானவரோ அதே போன்று, பெண்களிடம் பரிவு மிக்கவர்.

***

நிர்வாகம் அதன் வேலையை செய்யட்டும். நீதிமன்றங்கள் அதனுடைய வேலையை மட்டும் செய்யட்டும்’ என்பதில் கட்ஜு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். நிர்வாகத்திலோ அல்லது சட்டமியற்றுதலிலோ நீதிமன்றங்கள் தலையிடுவதைக் கண்டால் அவருக்கு பொறுக்காது.

அந்த வேகத்தில், நுகர்வோர் நீதிமன்றங்கள் தேவையான அளவிற்கு உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பினை தள்ளுபடி செய்கையில், உயர்நீதிமன்றத்தோடு நிற்காமல், இடைக்கால உத்தரவு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் தனது தீர்ப்பில் ஒரு கை பார்த்தார். கூட இருந்த நீதிபதி பயந்து போய் தனியே தீர்ப்பு எழுதி, அதோடு நிற்காமல், ‘For the views been taken herein, I regret to express my inability to agree with Brother Katju, J. in regard to the criticisms of various orders passed in this case itself by other Benches. I am of the opinion that it is wholly inappropriate to do so. One Bench of this Court, it is trite, does not sit in appeal over the other Bench particularly when it is a coordinate Bench. It is equally inappropriate for us to express total disagreement in the same matter as also in similar matters with the directions and observations made by the larger Bench. Doctrine of judicial restraint, in my opinion, applies even in this realm. We should not forget other doctrines which are equally developed viz., Judicial Discipline and Respect for the Brother Judges’ State of UP Vs. Jeet Bisht 2007 (6) SCC 586’ என்று அதே தீர்ப்பில் கட்ஜுவையும் விமர்சிக்க வேண்டியதாயிற்று.

***
ஆயினும், மேற்கண்ட தீர்ப்பு வெளிவந்த சில நாட்களில், பல்வேறு குற்றச் செயல்களுக்காக குற்றம் சுமத்தப்பட்ட பெண்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு மறுவாழ்வு கொடுப்பது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கினை வேறு இரு நீதிபதிகள் ஏற்க மறுத்து, அவ்வகையான வழக்குகளை நீதிமன்றம் விசாரிக்கலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்தப் பிரச்னை பெரிதாக கிளம்ப தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், ‘பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய தடை இல்லை’ என்று அறிவிக்க வேண்டியதாயிற்று.

***
ஆயினும் கட்ஜுவை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு, அடுத்த வருடமே ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் தற்காலிக பணியாளர்களாக வேலைக்கு சேர்பவர்களை பின்னர் நிரந்தரமாக்குதல் கூடாது என்று முன்பு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு உமா தேவி (JT 2006 (4) SC 420) என்ற வழக்கில் ஒரு தீர்ப்பு கூறியிருந்தது.

ஆனால், பின்னர் கட்ஜுவும் மற்றொரு நீதிபதியும் இருக்கும் இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு முன்பு பணி நிரந்தரம் சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கு வர கட்ஜு பணி நிரந்தரம் செய்யலாம் என்பதோடு நிற்காமல், உமா தேவியின் வழக்கு யூக்லிட்டின் தேற்றம் போல அப்படியே கடைபிடிக்க வேண்டியதில்லை’ என்றும் கூறினார் (we find that often Uma Devi's case (supra) is being applied by Courts mechanically as if it were a Euclid's formula without seeing the facts of a particular case. பூரன் சந்திர பாண்டே வழக்கு 2007 (11) SCC 92)

ஒரே வருடத்தில் மற்றொரு நிரந்தரமாக்குதல் பிரச்னை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு முன்பு வந்த பொழுது (தயானந் வழக்கு 2008 (10) SCC 1) பூரன் சந்திர பாண்டே வழக்கில் கட்ஜூவின் தீர்ப்பினை வெறுமே ஒரு கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, மற்ற உயர்நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும் ஒரு முன்தீர்ப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்ப்பு கூறப்பட்டது (In the light of what has been stated above, we deem it proper to clarify that the comments and observations made by the two-Judges Bench in UP State Electricity Board vs. Pooran Chandra Pandey (supra) should be read as obiter and the same should neither be treated as binding by the High Courts, Tribunals and other judicial foras nor thwe find that often Uma Devi's case (supra) is being applied by Courts mechanically as if it were a Euclid's formula without seeing the facts of a particular case)

முக்கியமாக இந்த தீர்ப்பில் நீதிபதிகள், மற்ற உயர்நீதிமன்றங்களுக்கு கூறுவது போல கட்ஜுவிற்கு ‘நீதித்துறையின் மாண்பினை’ போற்றுவது குறித்து கடுமையான வார்த்தைகளில் அறிவுறுத்தியிருந்தனர்.

வேடிக்கையான அம்சம் என்னவென்றால், நீதித்துறையின் ஒழுக்கத்தை பேண வேண்டியது குறித்து அறிவுறுத்த மூன்று நீதிபதிகள் பயன்படுத்திய வரிகள், ஜீட் பிஸ்ட் வழக்கில் கட்ஜு கூறிய தீர்ப்பிலுள்ள வரிகள்!

***

இந்த முறை கட்ஜு சற்று அகல கால் வைத்துள்ளார்...யார் காலை தட்டி விடப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

மதுரை
28/11/10

12.11.10

சபாஷ்! சைலேந்திரபாபு

சைலேந்திரபாபுவிற்கு சபாஷ் போடத் தோன்றுகிறது. அவரது தியாகம் வியக்க வைக்கிறது. எனெனில், மோகன்ராஜ் என்கவுண்டர் முடிவு எடுத்ததும் (அவர் மறுத்தாலும், தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து அதுதான் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இணையத்திலும் கூட போலி என்கவுண்டர் என்ற ஒன்று இருக்கிறது என்பதே தெரியாமல், என்கவுண்டர் என்றால் வாழத்தகுதியில்லாத ஒருவனை காவலர்கள் போட்டுத்தள்ளுவது என்ற அர்த்ததில்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்) அவர் மனதில் ஒரு முறை கேரளாவின் லக்ஷ்மணா, குஜராத்தின் வன்சாரா, தில்லியின் ரஜ்பீர் சிங், மும்பையின் தயா நாயக் ஆகிய பெயர்கள் மனதில் ஓடியிருக்கும். அந்தப் பயத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு கொடூரன் மோகன்ராஜ் என்கவுண்டர் (sic) செய்து விடலாம் என்ற முடிவினை அவர் எடுத்திருந்தால், அந்த தியாத்தை வியந்து ‘சபாஷ்’ போடுவதில் என்ன தவறு இருக்க முடியும்.


***

நேற்று ஆய்வாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். கோவை என்கவுண்டர் பற்றி பேச்சுத் திரும்பிய பொழுது, ‘அண்ணாத்துரை ரொம்ப அப்பாவி. எப்படித்தான் சுட்டாரோ தெரியவில்லை’ என்று கூறினார்.

வர்கீஸை சுட்ட ராமச்சந்திர நாயரும் அப்பாவிதான். இப்படித்தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், கேரள காவலர்களால் கைது செய்யப்பட்ட நக்ஸல் வர்கீஸ், பின்னர் காவல்துறையோடு நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. ஆலயம் கூட கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைக்க மறுத்தது.

வர்கீஸ் கொல்லப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் கழித்து, அவரை சுட்ட ராமச்சந்திரன் நாயர் என்ற காவலர், தனது மனச்சாட்சியின் குரலுக்கு பயந்து ‘நான் இருந்தேன் என்பதற்கு சாட்சியாக” என்று ஒரு புத்தகத்தை எழுதி அதில் வர்கீஸை மேலதிகாரியின் உத்தரவுக்கு பணிந்து தான் சுட்டதாக கூறியிருந்தார்.

அந்தப் புத்தகம் அவரது ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ராமச்சந்திரன் நாயர், முன்னாள் IG லக்ஷ்மணா மற்றும் முன்னாள் DGP விஜயன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடைபெறுகையில் ராமச்சந்திரன் நாயர் இறந்து போக, கடந்த அக்டோபர்’ 2010ல் ஐஜி லக்ஷ்மணா குற்றவாளி என்று தீர்ப்புக் கூறப்பட்டு, 74 வயது லக்ஷ்மணா கடந்த ஒரு மாதமாக சிறையில்…

ஒருவேளை இருபது வருடங்கள் கழித்து அண்ணாதுரையும் தனது மனச்சாட்சிக்கு பணிந்தால்....சைலேந்திரபாபுவுக்கு துணையாக, எந்த ஊடகவியலாளரும் சிறைக்குச் செல்லப் போவதில்லை.

***

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்த லக்ஷர் தோய்பா பயங்கரவாதி சொராபுதீனை தீரமாக குஜராத் காவலர்கள் சுட்டுக் கொன்ற பொழுது, DIG வன்சாரா மீது சூட்டப்பட்ட புகழாரங்கள் முன்பு இன்று சைலேந்திரபாபுவிற்கு கிடைக்கும் புகழாரங்கள் எல்லாம் ஒன்றுமில்லை!

இன்று வன்சாராவிற்காக கவலைப்பட எந்த ஊடகமும் தயாரில்லை. பாவம், ராஜ்குமார் பாண்டியன். ஐ பி எஸ் அதிகாரியாக குஜராத் செல்லும் தான், அங்கு ஒரு கைதியாக சிறையில் வாட வேண்டியிருக்கும் என்பதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

இருபது வருடங்களுக்கு முன்னர் ஐ பி எஸ் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த சைலேந்திரபாபுவும் நினைத்திருக்க மாட்டார். ஒரு கொலையில் தனக்கும் பங்கிருப்பதாக, சந்தேகிக்கப்படுவோம் என்று…

***

எட்டு வருடங்களுக்கு முன்னர், தில்லி அன்சால் வணிக வளாகத்தில், இரு லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ACP ரஜ்பீர் சிங் கொண்டாடப்பட்டார். உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த ரஜ்பீர் சிங் 13 வருடங்களில் உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். காரணம் அவர் பணி செய்த 24 ஆண்டுகளில் 56 என்கவுண்டர்களை நடத்தியுள்ளார். ஆனால், கொடூர பயங்கரவாதிகளை ஒரு தனக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் சுட்டுத்தள்ளிய ரஜ்பீர் 2008ம் ஆண்டில் நிசமான ஒரு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டார். பல்வேறு நில கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபட்ட ரஜ்பீர், அதனால் ஏற்பட்ட ஒரு தகறாரில் ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

***

சுமார் 50 நபர்களை என்கவுண்டரில் விண்ணுக்கு அனுப்பிய மும்பை ஆய்வாளர் விஜய் சலாஸ்கர் கூட இப்படித்தான். ஒரு சிராய்ப்பு கூட வாங்கியதில்லை. அனால் நிசமாகவே ஒரு துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதி அஜ்மல் கசாபுடன். சலாஸ்கரின் பெயர் எழுதிய ரவை அன்றுதான் துப்பாக்கியிலிருந்து கிளம்பியது.

ஆனால், 85 நபர்களுக்கு மேல் போட்டுத்தள்ளிய மும்பையின் தயா நாயக் அந்த சண்டையில் பங்கெடுக்க முடியவில்லை. எனெனில் 2006ல் மும்பை தாதா உலக நடவடிக்கைகளில் அவருக்கும் பங்கிருப்பதாக வழக்கு தொடரப்பட்டு அவரே சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது.

பிரதீப் சர்மா…அவரது என்கவுண்டர்கள் 100ஐ தாண்டி வெகுகாலமாயிற்று. அவரும் தாவூது இப்ராகிமோடு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வேலை நீக்கம் செய்யப் பட்டார். தற்பொழுது நீதிமன்ற உத்தரவால் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சைலேந்திரபாபுவுக்கு கூட இப்படித்தான். முதலில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனில் ஆரம்பிக்கும். பின்னர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலைகாரனை போட்டுத் தள்ளினால் என்ன என்ற எண்ணம் பிறக்கும். அடுத்து கொள்ளைக்காரன். காலப்போக்கில் குற்ற உணர்வுகள் மரத்துப் போன பின், ‘இந்த லோக்கல் ரவுடியை கொஞ்சம் கவனியுங்கள். நான் உங்களைக் கவனிக்கிறேன்’ என்று ஒரு தொழிலதிபர் வந்தால் அதையும்தான் செய்து பார்ப்போமோ என்ற எண்ணம் வரலாம்.

தான் மறுத்தால் கூட, அண்ணாதுரை வந்து, ‘நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் இருந்தால் போதும்’ என்றால் முடியாது என்று கூற முடியுமா?

முடியாது என்று கூறினால், அண்ணாதுரை ராமச்சந்திரன் நாயர் போல ஒரு புத்தகம் எழுதினாலும் எழுதுவார் என்ற பயம் உருவாகுமல்லவா?

அதனால்தான் அவரது துணிவுக்கு ஒரு சபாஷ் போட வேண்டும் என்று தோன்றுகிறது.



மதுரை
131110

கோயம்புத்தூர் டுமீல்! டுமீல்!!

2008ம் ஆண்டு வாரங்கல்லில் பொறியியற் கல்லூரி மாணவி ஸ்வப்னிகாவும் அவளது நண்பியும் மூன்று இளைஞர்களால் அமிலத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 21 நாட்கள் போராடிய ஸ்வப்னிகா மரித்துப் போனார். ஆனால் அதற்கு முன்பாகவே, கைது செய்யபப்ட்ட மூன்று இளைஞர்களும் புலன் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சென்ற காவலர்களை தாக்க முயன்றதாக கூறி, சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆந்திர மக்களின் கோபம் கைதிகள் கொல்லப்பட்டதால் தணிக்கப்பட்டது.


***

2010ம் ஆண்டு கோயம்புத்தூரில் 9 வயது முஸ்கானும் அவளது தம்பியான ரித்திக்கும் வாகன ஓட்டியால் பணத்துக்காக கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்து சில நாட்களில் புலன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி மோகன்ராஜ் காவலரை தாக்க முயன்றதாக கூறி, சுட்டுக் கொல்லப்பட்டார்.

***

1978ம் ஆண்டு புது தில்லியில் கீதா சோப்ரா என்ற 16 வயது சிறுமியும் அவளது தம்பியானா சஞ்சய் சோப்ரா என்ற 14 வயது சிறுவனும் பில்லா, ரங்கா என்ற இருவரால் பட்டப்பகலில் கடத்தப்படுகிறார்கள். கடத்திய கார் விபத்துக்குள்ளாக, குழந்தைகள் இருவரும் கொல்லப்படுகிறார்கள். தில்லி மட்டுமல்லாமல் இந்தியாவே இந்தச் செயலைப் பார்த்து அதிர்ந்தது. கொலைகாரர்கள் மீதான வழக்கு விரைந்து நடத்தப்பட்டு 1982ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்கள்.


***

1990ம் ஆண்டு கொல்கத்தாவில் 14 வயது ஹீதல் பரேக் என்ற சிறுமி தனஞ்சய் சட்டர்ஜி என்ற வீட்டு பாதுகாவலரால் பலாத்காரப்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறாள். கொல்கத்தா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்ப்படுத்திய இந்தச் செயலுக்காக வழக்கு தொடரப்பட்டு 2004ம் ஆண்டில் தனஞ்சய் தூக்கிலிடப்பட்டார்.

***

2000ம் ஆண்டு தர்மபுரியில் கல்லூரி பேருந்து ஒன்று அரசியல் போரட்டத்தில் எரிக்கப்பட்டது. மூன்று விவசாயக் கல்லூரி மாணவிகள் இறக்க நேரிட்டது. தமிழகத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்ப்படுத்திய இந்தக் குற்றத்திற்கு 2007ம் ஆண்டில் விசாரணை நீதிமன்றத்தால் மூன்று குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு 2010ல் உறுதி செய்யப்பட்டுள்ளது.


***

1998ம் ஆண்டு சென்னையில் சரிகா ஷா என்ற 20 வயது கல்லூரி மாணவி இளைஞர்கள் சிலரின் சீண்டலில் இருந்து தப்பிக்க முயன்றதில், விபத்தில் பலியானார். தமிழகமே கொந்தளித்தது. கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டது. தமிழ்நாடு அரசு பெண்களை சீண்டுவதற்கு எதிரான கடுமையான சட்டம் பிறப்பித்தது.


***

1999ம் ஆண்டு புது தில்லியில் ஜெஸிக்கா லால் என்ற மாடல் உயர் ரக கேளிக்கை விடுதி ஒன்றில் மனு சர்மா என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆங்கில ஊடகங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்ப்படுத்திய இந்தச் செயலுக்காக மனு சர்மா கைது செய்யபப்ட்டாலும், விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஊடகங்கள் கொந்தளித்தது. பின்னர் தில்லி உயர்நீதிமன்றம் மனு சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து, உச்சநீதிமன்றத்தால் 2010ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.

மனு சர்மா, முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் பேரன்.

***

1996ம் ஆண்டு புது தில்லியில் பிரியதர்ஷினி மட்டூ என்ற 25 வயது சட்டக் கல்லூரி மாணவி பலாத்காரப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சந்தோஷ்குமார் சிங் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஊடகங்கள் கொதித்து எழுந்தது. தில்லி உயர்நீதிமன்றம் சந்தோஷ்குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. அக்டோபர் 2010ல் உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.


சந்தோஷ்குமார் சிங்கின் தந்தை பாண்டிச்சேரியின் காவல் துறைத் தலைவராக இருந்தவர் (IG of Police).

***

1990ம் ஆண்டு சண்டிகரில் ருசிகா கிர்கோத்ரா என்ற 14 வயது சிறுமி பிரதாப் சிங் ரத்தோர் என்பவரால், டென்னிஸ் பயிற்சியின் போது சீண்டப்படுகிறார் (molest). பின்னர் ரத்தாரால் ருசிகாவின் குடும்பம் பலவித இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதியாக 1993ல் ருசிக்காவின் சகோதரர் பொய்வழக்கு ஒன்றில் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்தரவதைக்குள்ளாக்கப்படுகிறார். மனமுடைந்த ருசிகா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ருசிகா தற்கொலை செய்து கொண்ட அன்று ரத்தோர் கேளிக்கை விருந்து ஒன்றின் மூலம் கொண்டாடுகிறார். சிலமாதங்களில் அவர் ஹரியானா மாநில காவல்துறை கூடுதல் தலைவராக பொறுப்பு ஏற்கிறார். பின்னர் அவர் மாநில காவல் துறை தலைவராகவும் பொறுப்பு ஏற்றார்.

1998ல் ருசிகா வழக்கினை விசாரிக்க சி பி ஐக்கு உத்தரவிடப்பட்டது. டிசம்பர் 2009ல் ரத்தோருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஊடகங்கள் பெரிய அளவில் இதனை செய்தியாக்க மேல் முறையீட்டில் தண்டனை 18 மாதங்கள் என அதிகரிக்கப்பட்டு முதல் முறையாக ரத்தோர் சிறைக்கு அனுப்பப்பட்டார். 11/11/10 அன்று உச்ச நீதிமன்றம் ரத்தோரை பிணையில் விடுவித்துள்ளது.

ருசிகாவின் தந்தை ரத்தோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்.

***

2006ம் ஆண்டில் நோய்டாவில் 7 வயது முதல் 12 வயது வரையிலான பல (எழைக் குழந்தைகளை பாலியல் பலாத்காரப்படுத்தி கொன்றதாக மனிந்தர் சிங் பாந்தர் என்ற தொழிலதிபர் மீதும் கோலி என்ற அவரது வேலையாள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. 2009ல் விசாரணை நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. சில மாதங்களில் உயர்நீதிமன்றம் பாந்தரை விடுதலை செய்தது. வேலையாள் கோலி மீதான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. பாந்தர் மீது மேலும் 5 கொலை வழக்குகள் உள்ளன.


ஏறக்குறைய 40 குழந்தைகள் அந்தப் பகுதியில் 2005 முதல் 2007 வரை காணாமல் போயிருக்கின்றன. அந்தக் குழந்தைகளின் படங்கள் கிடைக்கவில்லை…


தொழிலதிபர் பாந்தர் காவலர்களின் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்வதாக, தெகல்கா மட்டும் சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

***

பிப்ரவரி’ 2008. பட்டாலா மாவட்டம், பஞ்சாப். தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தலித் சிறுமி சோனு மாஸி, பிந்தா மாஸி என்ற இரு சகோதரர்களால், கடத்தப்பட்டு பலாத்காரப்படுத்தப்பட்டு கொன்று விட்டனர். காவலர்கள் சகோதரர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


நவம்பர்’2008. கான்பூர் மாவட்டம். உத்தர பிரதேசம். 16 வயது தலித் சிறுமி மூன்று இளைஞர்களால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். புனீத், சுனில், நரேஷ் என்ற இளைஞர்களை காவலர்கள் தேடி வந்தனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


ஆகஸ்ட்’2009. பீட் மாவட்டம், மஹாராஷ்டிரா. சுமிதா பவார் என்ற 15 வயது தலித் சிறுமி கோவில் அர்ச்சகர் மற்ற இருவரால் பலாத்காரப்படுத்தப்பட்டார். காவலர்கள் வழக்கினை பதிவதற்குப் பதிலாக, சுமிதாவை அடித்து துன்புறுத்தினர். தற்பொழுது, வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு விபரம் தெரியவில்லை.


செப்டம்பர்’2009. கேந்தரபாரா, ஒரிஸ்ஸா. 16 வயது தலித் சிறுமியை பணம் கேட்டு கடத்திய காந்தியா மாலிக் அவளை பலாத்காரப்படுத்தி பின்னர் அந்த சிறுமியின் பெற்றோரின் கண் எதிரிலியே அவளை உயிரோடு எரித்துக் கொன்றார். சிறுமியை கடத்திய பின்னர் புகாரினை விசாரிக்க மறுத்த காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாலிக்கை காவலர்கள் தேடி வருகின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


செப்டம்பர்’ 2010. நீல்கிரி, ஒரிஸ்ஸா. 6 வயது தலிச் சிறுமியை அவரது 20 வயது உறவினர் கடத்திச் சென்று பலாத்காரப்படுத்தி கொன்று விட்டார். ஊர்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விபரம் தெரியவில்லை.


செப்டம்பர்’ 2010. கான்பூர் மாவட்டம். உத்திரபிரதேசம். 15 வயது தலித் சிறுமி இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த புகாரை வாங்க மறுத்ததால், சிறுமி தற்கொலை செய்து கொண்டார். தற்பொழுது வழக்கு பதிவு செய்து இளைஞரை காவலர்கள் தேடி வருகின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.




செப்டம்பர்’ 2010. மாண்ட்லா, மத்திய பிரதேசம். ஆறு இளைஞர்கள் 14 வயது தலித் சிறுமியை கடத்திக் கொண்டு போய் பலாத்காரம் செய்து, அதனை செல்லிடைப் பேசியில் படம் பிடித்து சுற்றில் விட்டனர். அதன் மூலம் குற்றம் வெளியே தெரிய வந்து கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


ஏப்ரல்’2010. புது தில்லி. தன்னிடம் பாடம் படித்த 8 வயது தலித் சிறுமியை பலாத்காரப்படுத்தி கொன்ற டியூசன் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற அரசு தரப்பு வாதம் ‘இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு இல்லை’ என்று நிராகரிக்கப்பட்டது


***

ஏன் இவை அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்று சந்தேகம் கொள்பவர்கள், கூகுளில் “Minor Dalit, Rape, Murder” என்ற வார்த்தைகளை கொடுத்து தேடி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.



மதுரை
121110

12.9.10

படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்...

செய்தித்தாள்களில் அடிக்கடி புதிது புதிதாக எதையாவது கண்டுபிடித்த விவசாயி, மெக்கானிக், மாணவர் என்று செய்தி வரும். அவற்றைப் படிக்கும் பொழுதெல்லாம், ‘தொலைக்காட்சி ரிமோட் தொலைந்து போனால் அதனைக் கண்டுபிடிக்கும் கருவியை யாராவது கண்டுபிடிக்கக் கூடாதா’ என்று தோன்றும்.


ஏனென்றால், எங்கள் வீட்டில் ரிமோட் சோபா இடுக்கில் இருந்து, சமையலறை மசாலா சாமான்களுக்கு இடையில் என்பது வரை எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கும். எப்பொழுதும் தேடிக் கண்டுபிடித்ததில்லை. இரண்டு நாட்கள் கண்ணாமூச்சி ஆடிய பிறகு, வேறு எதையோ தேடும் பொழுது ‘போதும் இந்த விளையாட்டு’ என்று அதுவாகவே வெளிப்படும்.


அதாவது பரவாயில்லை, தொலைக்காட்சியை போட்டுவிட்டு சோபாவில் சாய்ந்த பிறகுதான், ரிமோட்டை தொலைக்காட்சி அருகிலேயே வைத்து விட்டு வந்தது புரியும். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில், ‘தொலைக்காட்சிக்கு அருகிலிருக்கும் ரிமோட்டை சோபாவிலிருந்தபடியே இயக்கும் ஒரு ரிமோட் கண்டுபிடித்தால் நன்றாக இருக்குமே’ என்றும் தோன்றுவதுண்டு!


‘இந்த தொல்லை எல்லாம் வேண்டாமே’ என்று தொலைக்காட்சியினை நிறுத்தி விட்டால், நேற்றிலிருந்து எனது கைப்பேசியை காணவில்லை. வீட்டிற்குள்ளாகத்தான், ஒரு அரைமணி நேரத்தில் காணாமல் போய்விட்டது. அடிக்கடி எங்காவது மறந்து வைத்துவிடுகிறேன் என்பதற்காகத்தான் இருப்பதிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் கைப்பேசியை வாங்குவது. ஆனால், கைப்பேசி தொலைந்து போனால் கண்டுபிடிக்கும் கருவி கிடைத்தால் உடனே வாங்கி விடத் தயாராக இருக்கிறேன். அதற்காகவாவது, யாராவது அதனை கண்டுபிடிக்கலாம்.


அல்லது, ஒரே எண் உள்ள இரு சிம்கார்டுகளை கண்டுபிடிக்க தொலைபேசி நிறுவனங்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.


-oOo-


ஆனாலும், தொலைந்து போவதற்கு முன்பு அந்தக் கைப்பேசி ஒரு சிறு உபகாரம் செய்து விட்டுப் போயிருக்கிறது. எனக்கு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கட்சிக்காரர் உண்டு. அவரது அலுவலகத்தில் பதவி உயர்வு சம்பந்தமாக வழக்கு. வழக்கு சாதகமான நல்ல வழக்கு என்றாலும் நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பதால், வழக்கினை விசாரணைக்கு கொண்டு வர இயலவில்லை. அடிக்கடி தொடர்பு கொண்டு அழாத குறையாக புலம்பி எடுப்பார்கள். அவர்களிடம் இருந்து தொலைபேசி வந்தாலே எனக்கு பயம் வந்து விடும்.


முதன் முதலில் வழக்கையும், கட்டணத்தையும் அளிக்க வரும் பொழுது தேவதூதர்களாக காட்சியளிக்கும் கட்சிக்காரர்களின் முகம் நாளாக நாளாக அரக்கர்களைப் போல மாறிவிடும்!


அதனாலேயே நேற்று அந்த பெண்மணியிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததும் கிலி பிடித்தது. ஆனாலும் ஒரு நிம்மதி, குறுஞ்செய்திதானே என்று. அந்த நிம்மதி வெகுநேரம் நீடிக்கவில்லை. பின்னர் ‘Neengalthan en suvasam, ennam saappadu ellame’ என்று இருந்தால்...


ஆயினும், அந்தப் பெண்ணின் உருவத்திற்கும், அதீதமாக வெளிப்பட்டிருந்த காதலுணர்வுக்கும் என்னால் சம்பந்தப்படுத்த இயலாதலால், அவர்கள் வீட்டில் யாரோ ஒரு சிறு பெண் யாருக்கோ பதட்டத்தில் அனுப்பிய குறுஞ்செய்தி வழிதவறியதாகவே நினைத்தேன்.


கொஞ்ச நேரத்தில் மற்றொரு செய்தி ‘sir, sorry earlier message mistakenly sent’ என்று.


பின்னர்தான் புரிந்தது, ‘இனி அந்த அம்மாள் எப்படியும் என்னை அடுத்த ஒரு மாதத்திற்காகவாவது தொடர்பு கொள்ள மாட்டார்கள்’ என்று. ‘அட! இப்படிக் கூட ஒரு சாத்தியக் கூறு உள்ளதா’ என்று குஷியாக இருந்தது.


-oOo-


போனவாரம் ஞாநி எங்களது சங்கத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தார். ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்...’ என்பது தலைப்பு. சிறு அறிவிப்பு ஒன்றினை நகலெடுத்து ஆங்காங்கே ஒட்டியிருந்தார்கள். யாரோ ஒரு குறும்புக்கார வழக்குரைஞர் பேனாவில், படித்தவனுக்கு முன்னால் BL என்று எழுதி கீழே ‘ஜட்ஜ் ஆவான்’ என்று எழுதியிருந்தார்.


நான் கூட்டத்திற்கு போகவில்லை. கூட்டத்தில் பேசிய வழக்குரைஞர் ஒருவர் இதனை தனது பேச்சில் குறிப்பிட்ட பொழுது பெரிய கரகோஷமாம்!


எழுதியது யார் என்று எனக்குத் தெரியும். ஆனால் கூற மாட்டேன். சிரிக்கத் தெரியாத சில நீதிபதிகள் இருக்கின்றனர்...


-oOo-

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று நான்கு நாட்கள் நீதிமன்றம் விடுமுறை. இம்மாதிரி விடுமுறை வரும் பொழுது எல்லாம், தேங்கிக் கிடக்கும் பல வேலைகளை முடித்து விட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். கடைசி நாள் பார்த்தால், அப்படியேதான் இருக்கும்.


நாளை மீண்டும் நீதிமன்றம். ஏதோ சூன்யம் நிறைந்தது போல உள்ளது. இந்த மாதிரி தொடர் விடுமுறைகளுக்குப் பின்னர் மீண்டும் வேலை தொடங்கும் நாளும் கண்டிப்பாக விடுமுறையாக இருத்தல் வேண்டும். அடுத்த முறை நீதிமன்ற புறக்கணிப்பிற்காக, வழக்குரைஞர்கள் காரணம் தேடும் பொழுது இந்தச் சிறு கோரிக்கையையும் சேர்த்து விட வேண்டும்.


மதுரை
12/09/10

10.7.10

கே.எம்.விஜயனின் பிழைப்புவாதம்!

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரி வழக்குரைஞர்களில் ஒரு ‘சிறு பிரிவினர்’ சமீபத்தில் நடத்திய போராட்டத்தினைப் பற்றி மூத்த வழக்குரைஞர் திரு.கே.எம்.விஜயன் அவர்கள் ’தினமணி’ பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் அனுமதிக்கப்படலாமா? என்பது பற்றி தனது கருத்துகளை பதிவு செய்வதற்கு திரு.விஜயனுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், தமிழ் அனுமதிக்கப்பட வேண்டும் என்பவர்களை ‘சிறு பிரிவினர்’ என்றும் ‘அரசியலாக்கினர்’ என்றும் ‘உண்மை பேசத்துணிவில்லாத பொய்யர்கள்’ எனவும் ‘சட்டம் தெரியாதவர்கள்’ என்றும் அநாகரீகமான வார்த்தைகளில் கிண்டல் செய்வதற்கு அவருக்கு தார்மீக உரிமை இல்லை.

அதே போன்ற சாக்கடை மொழியில் அவரையும் திருப்பி மற்றவர்களால் கிண்டலடிக்க முடியும் என்பதை அவர் உணர வேண்டும்.

எந்த ஒரு உரிமைக்காகவும், வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் இருப்பதிலும், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதிலும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. ஆயினும் உண்ணாவிரதம் இருந்தவர்களில் சிலரை எனக்கு தெரியும் என்ற அளவில், தங்களை உயிரை பணயம் வைக்கும் அளவில் அவர்கள் சென்றனர் என்பதை நான் அறிவேன். தமிழுக்காக இல்லையென்றாலும், அவர்களது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ’விரைவில் யாராவது தலையிட்டு இவர்கள் உடல் நலன்’ காக்கப்படவேண்டும் என்பதற்காக நானும் இந்தப் போராட்டத்தில் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்தேன்.

எனவே இந்தப் போராட்டத்தில் அரசியல் காரணங்கள் ஏதுமில்லை என்று என்னால் கூற முடியும். ஏனெனில், அமைச்சர் மு.க.அழகிரி அவர்களை அவமானப்படுத்தியதால் விளையும் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்ற அச்ச உணர்வையும் மீறி போராட்டத்தில் சிலர் பங்கெடுத்ததையும் நான் அறிவேன்.

-oOo-

தமிழுக்காக வழக்குரைஞர்களில் ஒரு ’சிறுபிரிவினர்’ போராடினர் என்று விஜயன் கிண்டலடிப்பதில்தான் இந்தப் போராட்டத்தின் முழு அவசியம் புரிகிறது. சட்டத்தை படிக்க முடிந்தாலும், ஆங்கிலத்தை படிக்க முடியாது என்ற மனப்பான்மையால், இளம் வழக்குரைஞர்களில் ஒரு பெருங்கூட்டம் உயர்நீதிமன்றத்திலிருந்தே ஒதுங்கியிருக்கையில், உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் ‘பெரும்பிரிவினருக்கு’ இந்தப் போராட்டத்தில் என்ன அவசியம் இருக்கப் போகிறது.

உலக மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில், இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் ஒரு சிறு பிரிவினர்தான். ஏன இந்திய மக்கள் தொகையோடு ஒப்பிடுகையிலும் போராடியவர்கள் ஒரு சிறுபிரிவினர்தான் என்பதை திரு.விஜயன் மறந்துவிட்டார் போலும்.

-oOo-

அடுத்தது, விஜயனின் கட்டுரை எங்கும் பரவிக்கிடக்கும், ‘நான் சட்டம் அறிந்தவன்’ என்ற ஆணவமும் ‘மற்றவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள்’ என்ற ஏளனமும்தான்.

இந்தச் சுற்றறிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. இதை இன்றுவரை யாரும் எதிர்த்து வழக்குப் போடவில்லை. அப்படி ஒன்று இருப்பதே தெரியாதவர்கள்தான் உயர் நீதிமன்றத்தில் தமிழ் பற்றிப் பேசுகிறார்கள்

என்று கீழமை நீதிமன்ற நீதிபதில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தீர்ப்பு கூறலாம் என்ற உயர்நீதிமன்ற சுற்றறிக்கையினைப் பற்றி கூறுவதிலிருந்தே இவரது இந்த மனப்பான்மையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழுக்காக போராடி வரும் திரு.சோலை சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் இதற்கான பொது நல வழக்கு ஒன்றை கடந்த பெப்ருவரி மாதமே தாக்கல் செய்து, உயர்நீதிமன்றத் தரப்பு பதிலுக்காக நிலுவையில் உள்ளது என்பதை தனது கட்டுரைக்கு முன்பாக சற்று ஆய்வினை மேற்கொண்டிருந்தால், விஜயன் தெரிந்து கொண்டிருப்பார் (W.P.(MD)No.2394 of 2010)

’தினமணி’ பத்திரிக்கையினை வழக்குரைஞர்கள் யார் படிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில் எழுதியிருக்கலாம். ஆனால் கட்டுரை இணையத்திலும் வெளியாகியுள்ளது.

அடுத்து ‘தமிழர்கள், சட்டத்தின் முன்பாக உண்மையறியாத அப்பாவிகளாக இருக்கிறார்களே என்கிற ஆதங்கமே இக்கட்டுரைஎன்று ஒரு ஆதங்கத்தை அதே மேட்டிமைத்தனத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்படி ஒன்றும் தெரியாத அப்பாவிகளான தமிழர்களை இவர் கருதுவதால்தான், கீழமை நீதிமன்றங்களில் 80 விழுக்காடு மனுக்கள் ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்படுவதாக துணிந்து ஒரு பொய்யை இவர் கூற முயன்றுள்ளார். விஜயன் எந்த ஒரு கீழமை நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தியதில்லை. கீழமை நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பெருவாரியாக தாக்கல் செய்யப்படும் உரிமையியல் மற்றும் குற்றவியல் மேல்முறையீடுகள், சீராய்வு மனுக்கள் போன்ற எந்த ஒரு வழக்கினையும் எனக்குத் தெரிந்தவரை விஜயன் அவர்கள் நடத்தியதில்லை. நடத்தியிருந்தால் கீழமை நீதிமன்றங்களில் பெருவாரியான தீர்ப்புகள் தமிழில் கூறப்படுவதை அறிந்திருக்கலாம்.

நான் வழக்குரைஞர் தொழிலில், எனது முதல் வாதத்தினை தமிழில்தான் எடுத்து வைத்தேன். இன்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் வாதிட்டாலும் எனது எழுத்துபூர்வமான வாதத்தினை தமிழில்தான் தாக்கல் செய்கிறேன்.

எப்படியாயினும், 20 வருடங்களுக்கு முன்பு தமிழுக்கு இடமே இல்லாதிருந்த கீழமை நீதிமன்றங்களில் இன்று தமிழ் பெருவாரியாக இடம் பெற்றிருப்பதே, தமிழால் உயர்நீதிமன்றத்திலும் தாக்குப்பிடிக்க முடியும் என்பதற்கு சாட்சி!

ஏன், இன்று அரசு ஆணைகள், உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படுகின்றன. விஜயன் என்ன அரசு ஆணைகள் ஆங்கிலத்தில் இருந்தால்தான் என்னால் வழக்கு நடத்த முடியும் என்று கூறுகிறாரா என்ன? அல்லது அவர் நடத்திய எத்தனை வழக்குகளில் அரசு ஆணைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பின் நடத்தினார்?

விஜயன் பங்கு கொள்ளும் நீதிப்பேராணை மனுக்களை (Writ Petition) விட கீழமை நீதிமன்றங்களில் நடைபெறும் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் சட்டங்கள் நுணுக்கமாக அலசி ஆராயப்படுகின்றன. ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களையும், முன் தீர்ப்புகளையும் (Judicial Precedents) வாசித்து தமிழில் மனுதாக்கல் செய்வதிலோ, வாதிடுவதிலோ அல்லது தீர்ப்பு கூறுவதிலோ யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாது இருக்கையில், விஜயனின் ஆதங்கம் தமிழர்களுக்கானது அல்ல. மாறாக தனது பிழைப்பு சார்ந்தது என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

-oOo-

உயர் நீதிமன்றத்தில் தமிழ் என்று கேட்கும் வாதத்தில் உள்ள நடைமுறை ஓட்டைகளைப் பார்ப்போம். என்று கூறும் விஜயன் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தீர்ப்பை தன் மொழியில் எழுதினால், சட்ட பரிபாலனத்தில் மொழி வேற்றுமை காரணத்தால், பல மொழி சட்டத்தில் பல தீர்ப்புகள் முரணாக அமையும்என்ற ஓட்டை வாதத்தை வைக்கிறார்.

முதலில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரிதான் போராட்டமே தவிர தமிழில் தீர்ப்பு எழுத வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல. ஆங்கிலத்தில் தடையின்றி பேச அல்லது தவறில்லாமல் எழுதத் தெரியாத ஒரே காரணத்திற்காக வழக்குரைஞராக தொழில் புரியும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காகவும், வாதங்கள் தமிழில் வைக்கப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கைகள் எளிதாக இருக்கும் என்பதாலும், வந்திருக்கும் பெரும்பாலான பொதுமக்களுக்கு நீதிமன்றத்தில் நடப்பது புரிய வேண்டும் என்பதற்காகவும்தான் இந்தக் கோரிக்கை. எனவே உயர்நீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்படுவதில் யாருக்கும் ஆட்சேபணையில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு அது சாத்தியமுமில்லை.

ஆயினும், தீர்ப்புகள் வேறு வேறு மொழியில் இருந்தால் முரண்படும் என்பதுதான் நகைச்சுவை. ஒரே மாதிரியான தீர்ப்புகளை ஒரே உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் இரு நீதிபதிகள் தருவதில்லை. வேறு வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள் கூற முடியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். எனினும், தமிழுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

-oOo-
அடுத்த வேடிக்கை, “ இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காடினாலும் அதன் தீர்ப்பு தமிழில் இருக்காது. ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அப்படியானால், தமிழில் வாதாடி, ஆங்கிலத்தில் தீர்ப்பா? ஒரேமொழி ஒழுங்காகத் தெரிந்தவர்களே குறைவு என்கிறபோது, தமிழில் பேசி ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதும்போது வரும் "இடைவெளி மாற்றம், புரிதல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு?என்று புலம்பியிருப்பது.
இன்று கீழமை நீதிமன்றங்கள் அனைத்திலும் ஆங்கிலத்தில் வாதாடி தமிழில் தீர்ப்புகள் எழுதுவதிலும், தமிழில் வாதாடி ஆங்கிலத்தில் தீர்ப்புகள் எழுதுவதிலும் எவ்வித சிரமமுமில்லை என்பதை விஜயன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இன்றும் வழக்காடிகள் நேரிடையாக ஆஜராகி நடத்தும் வழக்குகளில், தமிழில்தான் வாதிடுகிறார்கள். நீதிபதிகள் யாரும் புரிதல் இல்லை என்று சொல்வதில்லையே!
சாட்சிகள், தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதனை புரிந்து கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருவரை தூக்குமேடைக்கே அனுப்புகின்றனர். அங்கு இடைவெளிமாற்றம், புரிதல் எல்லாம் இல்லையா? உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தவறா? எதற்கெடுத்தாலும் பொதுநல வழக்கு போடும் விஜயன், உச்சநீதிமன்றத்தில் நீதி இல்லை என்று ஒரு பொதுநல வழக்கு போடட்டுமே!
விஜயன் இத்தோடு நிற்காமல் வழக்கமான உச்சநீதிமன்றத்தில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டுமே என்ற வழக்கமான பல்லவியையும் பாடியுள்ளார். “உயர் நீதிமன்றத்தின் மொழியானால் அதை மொழிமாற்றம் செய்து ஒரே மொழியான ஆங்கிலத்தில் பரிபாலனம் செய்வது தேவையா? நேரம், பொருள், நிதி விரயம் இல்லையா?”
இதனை எத்தனை முறை விளக்கினாலும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். சுருக்கமாக கூறினால் தற்பொழுதும் ஒரு உரிமையியல் அல்லது குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றம் செல்கையில் அனைத்து ஆவணங்களும் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. ஏன், நீதிப்பேராணை மனுக்களிலும் வழக்குரை தவிர வழக்கு ஆவணங்கள் தமிழில் இருப்பதால் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது.
-oOo-
சட்டம் சம்பந்தமான எவ்வித வாதங்களும் இல்லாத நிலையில், ‘ இன்று 80 நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆங்கில அறிவு இல்லாதிருந்தால் இன்று அவர்களுக்கு ஜீவாதாரமே இல்லைஎன்ற வாதம் வேறு. தமிழர்கள் வெளிநாட்டில் பிழைப்பதற்கும் இங்கு நீதிமன்றங்கள் நடத்தப்படுவதற்கும் என்ன சம்பந்தம். ஒரு மருத்துவரோ அல்லது பொறியாளரோ வெளிநாடுகளில் சென்று தொழில் புரிய முடியும். ஆனால் இங்குள்ள வழக்குரைஞர்கள் அங்கு தொழில் புரிய முடியாது. உலகமயமாக்கலில் அது சாத்தியமானாலும், 99 விழுக்காடு வழக்குரைஞர்களுக்கு இங்குதான் தொழில். உச்ச நீதிமன்றம் செல்ல முடியாது என்று கூறியிருந்தால் பொருத்தமாயிருக்கும்.
நீதிமன்றங்களில் தமிழ் என்பது வழக்குரைஞர்களின் தொழில் சார்ந்த விடயம் மட்டுமல்ல. வழக்காடிகளின் உரிமை சார்ந்த விடயமும் கூட. எனவே ஆங்கிலம் தெரிந்தால் அமெரிக்கா செல்லலாம் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
தமிழ் முழுமையான அளவில் இங்கு ஆட்சி மொழியானால், தமிழகத்தில் வசிக்கும் வேறு மாநிலத்தை சார்ந்தவர்களின் அடிப்படை உரிமைகளை அது பாதிக்கும் என்பதும் சொத்தை வாதம். தமிழ்தான் உயர்நீதிமன்ற மொழி என்று கேட்கவில்லை. தமிழிலும் வாதிட அனுமதி கொடுங்கள் என்பதுதான் கோரிக்கை என்ற பின்னரும் ஏன் இந்த சந்தேகம் என்பது புரியவில்லை.
இறுதியாக, வழக்கமான உள்கட்டமைப்பு முட்டுக்கட்டைகள். "எல்லா சட்டங்களின் தமிழாக்கம், தீர்ப்புகளின் தமிழாக்கம், தமிழ் சட்டமொழி, மொழியாக்கத்தில் வல்லுநர்களாக உள்ளோரின் தேர்வு இவை அனைத்தையும் செய்யாமல் வழக்காடு மொழியாக தமிழை அறிவிப்பது அரிசி இல்லாமல் வெறும் பாத்திரத்தில் சோறு வடிப்பதைப் போன்றது
தமிழ் வழக்காடு மொழியாவதற்கு இவை ஏன் தேவை என்பது புரியவில்லை. இன்று எந்த சட்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினை வைத்து கீழமை நீதிமன்றங்களில் வாதிடுகிறார்கள். ஏன் விஜயனே சட்ட நுணுக்கம் சம்பந்தமான இந்தக் கட்டுரையினை தமிழில்தானே எழுதியுள்ளார். அரசியலமைப்பு சட்டப் பிரிவு இவ்வாறு கூறுகிறது என்று கூறவில்லையா? சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு என்று இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டவில்லையா?
மற்றவர்களை பொய்யர்கள் என்றும் பேதமை என்றும் குருட்டு நம்பிக்கை என்றும் ’செம்மொழி’யில் சட்டம் சம்பந்தமான ஒரு கட்டுரையில் இவரால் சாட முடிகிறதே!
விஜயனின் அனைத்து வாதங்களையும் விட ‘நீதிமன்றத்தில் தமிழ் அனுமதிக்கப்படுவதால், பாதிப்படையப் போவது பொதுமக்கள்தான்’ என்று இறுதியில் அவர் அச்சுறுத்துவது அவரது பிழைப்புவாதம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
ஊடக பலம் அவர் வசம் உள்ளது. யாரையும் பொய்யர் என்று அவர் குற்றம் சாட்டலாம். சட்டம் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடலாம். ஏன், தனது நலத்தை பொதுமக்கள் நலம் என்று அச்சுறுத்தலாம்...

மதுரை
101710

24.6.10

தமிழ் வழக்காடு மொழியாகலாம், ஆனால்...

‘உயர்நீதிமன்றத்தில் ஏன் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்’ என்ற கேள்விக்கு ஏன் இருக்கக் கூடாது என்பதுதான் பதிலாக இருக்க முடியும். ஏனெனில் தமிழ் இங்கு பேசப்படும் மொழியாகவும், அலுவல் மொழியாகவும் இருக்கும் பட்சத்தில், வழக்காடு மொழியாகவும் இருப்பதுதான் இயல்பானது.

ஆங்கிலம் வழக்காடு மொழியாக தமிழகத்தில் இருப்பதுதான் விதியினை மீறிய செயல். அந்த விதிவிலக்கிற்கான காரணங்களுக்குள் தற்பொழுது யாரும் செல்லவில்லை. உலக அளவில் நமது தொடர்பின் எல்லைகளை விரித்துக் கொள்ளும் வகையிலும், இந்திய அளவில் ஒரு தொடர்பு மொழி என்ற வகையிலும் ஆங்கில பயன்பாட்டிற்கான முக்கியத்துவத்தைக் கருதி, நீதிமன்றங்களில் அதன் இருப்பிடத்தை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

ஆனால், தமிழுக்கும் ஏன் இடமில்லை என்பதுதான் கேள்வி?

‘தமிழுக்கு இங்கு இடமில்லை’ என்று வைராக்கியம் கொண்டவர்கள் கூட, அதற்கான தகுந்த காரணத்தை கூற முயலாமல், ‘தமிழ் இருக்கலாம். ஆனால்...’ என்றுதான் தங்களது வாதத்தினை வைக்க முன் வருகிறார்கள். தமிழ் இருக்கலாம் என்று அனைவரும் ஏற்றுக் கொண்டால், பின் ஏன் அடுத்த கட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதில் மெத்தனம் என்பது புரியவில்லை. அங்குதான் இந்த ‘ஆனால்...’ களுக்குப் பின் உள்ள நோக்கம் வெளிப்படுகிறது.

இதே ‘ஆனால்...’கள்தாம் இடப்பங்கீடு விடயத்திலும், அதனை எவ்வாறேனும் தடுத்து நிறுத்த முன்னிறுத்தப்பட்டன. ‘இடப்பங்கீடு தேவைதான். ஆனால் பிற்ப்படுத்தப்பட்டவர்கள் எத்தனை சதவீதம் என்ற புள்ளியியல் விபரங்கள் இல்லாத வகையில் அதனை எப்படி செயல்படுத்துவது’ என்பது போன்ற ‘ஆனால்’கள்தாம் அவை. புள்ளியியல் விபரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட அதே குரல்கள்தாம் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியா, என்றும் புலம்புகின்றன.

இதற்கெல்லாம் காலம், நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழகத்தில் எப்படி செயல்படுத்தினார்களோ அப்படியே செயல்படுத்த வேண்டியதுதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும்.

தமிழ் விடயத்திலும், ஆனால்... என்று இழுப்பவர்கள்களால்தான் பிறச்சினை. தமிழ் கூடாது என்று கூறுபவர்களை எதிர்கொள்வது எளிது. ஆனால்... என்று இழுப்பவர்களிடம்தான், எளிதில் ஏமாறிவிடுவோம். ஆனால் என்பவர்களுக்கு கூடாது என்று கூறுபவர்களை விட வேறு நோக்கம் இல்லை என்பதுதான் உண்மை. இல்லையெனில், ‘அது என்ன புடலங்காய் உள்கட்டமைப்பு’ என்று அடுத்து ஆக வேண்டியதை பார்த்திருப்பார்கள்.

ஏனெனில், தமிழுக்காக என்று உருவாக்க முடியாத உள்கட்டமைப்பு என்று பெரிதாக ஒன்றும் இருக்கப் போவதில்லை. நமது முன்னாள் தலைமை நீதிபதி உள்கட்டமைப்பை பற்றி கூறியது ’ஒரு கண்கட்டி வித்தை’ என்று நான் உணர்ந்திருந்தேன். தமிழில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்று கூறியது முதல் முட்டுக்கட்டை. மாவட்ட நீதிமன்றங்கள் முதல் முன்சீப் நீதிமன்றங்கள் வரை எந்த புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்க்காமல், தமிழில் வழக்குகள் நடத்தப்படுகிறது என்பதுதான் உண்மை.

இந்திய தண்டனைச் சட்டத்தையோ, சொத்துரிமை மாற்றுச் சட்டத்தையோ தமிழில் மொழிபெயர்த்தாலும், அது ஒரு படிப்பனுபவமாக மட்டுமே பயன்படுமேயன்றி, நீதிமன்றத்தில் அதனை மட்டுமே அடிப்படையாக வைத்து வழக்கு நடத்தப்பட இயலாது. சட்டப்பிரிவுகளின் ஒவ்வொரு வார்த்தையும் என்ன அர்த்தத்தில் அந்த வாக்கியத்திலும், பிரிவிலும் பயன்படுத்தப்படுகின்றது என்று பல சமயங்களில் நீதிமன்றங்களில் வாதிடப்படுகையில், மொழிபெயர்த்த சட்டத்தினை வைத்து அதனை விளக்க (interpret) முடியாது. எனவே, தமிழில் புத்தகங்கள் இல்லை என்பது ஒரு தடையே அல்ல!

புதிதாக கணணிகள் வேண்டும் என்று கூட கூறப்படுகிறதாம். எத்தனை மொழிகளையும் எளிதாக தட்டச்சு செய்யும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்பட்ள்ள சூழ்நிலையில், கணணி ஒரு பிரச்னையே இல்லை. தமிழில் வழக்குரை (pleadings) தாக்கல் செய்யப்படும் பொழுது வழக்குகளின் புள்ளியியல் விபரங்களை சேகரிப்பதில் பிரச்னை இருக்கலாம். அதனைக் கூட வழக்குரை (pleadings) தமிழில் தாக்கல் செய்யப்பட்டாலும், வழக்குரை தலைப்பு (cause title) மற்றும் வழக்குரை அட்டை (docket) ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூட விதி வகுப்பதால், தீர்க்கலாம். இதனை எழுதும் இந்த அரை மணி நேர சிந்திப்பில் இந்த வழிமுறை புலப்படுகையில், நீதிமன்ற நிர்வாகத்தில் கற்றுத் தேர்ந்த அனுபவம்மிக்க அலுவலர்களால் எளிதில் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும்.

கணணியில், ஃபோனடிக் முறை தட்டச்சு இருப்பதால், தமிழ் தட்டச்சர்கள் தேவை என்பது எல்லாம் இல்லை. ஆனாலும் கூட, நீதிபதிகள் தாங்களாகவே விரும்பி தமிழில் தீர்ப்பு பகர விரும்பினால் மட்டுமே தமிழ் சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தட்டச்சர்களின் தேவை இருக்கும். தகுந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் வரையில், நீதிபதிகள் ஆங்கிலத்திலேயே தீர்ப்புகளை கூறலாம். தமிழும் வழக்காடு மொழி என்பதால், தமிழில்தான் தீர்ப்பு கூற வேண்டும் என்று யாரும் நீதிபதிகளை கட்டாயப்படுத்த முடியாது. எப்படியாயினும், உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் தமிழில் தீர்ப்பு பகர குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் ஆகலாம்.

தமிழ் இருக்கலாம்தான் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட  சூழ்நிலையில் தமிழ் தெரியாத நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்படுகிறார்களே என்ற வாதம் அர்த்தமற்றது என்றாலும், ஏன் தமிழ் தெரியாத நீதிபதிகள் இங்கு மாற்றப்பட வேண்டும் என்பதுதான் அதற்கு பதில். நேர்மையான, துணிச்சலான நீதிபதிகளுக்கு அந்த நேர்மைக்கு தண்டனையாகவும், அல்லது நேர்மையற்ற நீதிபதிகள் ஏதாவது பிறழ்ச்சினையில் சிக்கிக் கொள்கையில் அதிலிருந்து அவரை விடுவிக்கும் (relieve) நோக்கத்துடனும்தானே நீதிபதிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுகிறார்கள். உண்மையான அந்த காரணத்திற்கு எந்த சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்க இயலும்.

தலைமை நீதிபதி வெளிமாநிலத்திலிருந்து வருவது என்பதும் உபயோகமற்ற ஒரு சடங்கு என்றாலும், அவரைப் பொறுத்தவரை வேண்டுமானால் தனக்கென ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்துக் கொள்ள வேண்டியதுதான். எட்டு கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கான சம்பளம் ஒரு பொருட்டல்ல.

உச்ச நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் கூறியுள்ள மொழிபெயர்ப்பு பிரச்னையும், ஒரு தடையல்ல. ஏனெனில், தற்பொழுது கூட ஒரு உரிமையியல் வழக்கோ அல்லது குற்றவியல் வழக்கோ, உச்ச நீதிமன்றம் செல்லும் பொழுது அனைத்து கீழமை நீதிமன்ற நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. உயர்நீதிமன்ற தீர்ப்பு, வழக்கு ஆவணங்களில் பத்து சதவீத இடமே பிடிக்கிறது. ஏன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நீதிப்பேராணை மனுக்களிலும் () அனைத்து ஆவணங்களும் தமிழில் உள்ளன. எனவே உச்ச நீதிமன்றம் செல்கையில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது புதிதாக எழும் பிரச்னையல்ல.

இவை எதுவும் சாத்தியமில்லை என்றாலும், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்ப்படும் வரை தமிழில் வழக்குரைகளை ஏற்றுக் கொள்வதையாவது நிறுத்தி வைக்கலாம். ஆனால், எதுவுமே இல்லையென்பதில்தான் இந்த ஆனால்கள் மீது சந்தேகம் ஏற்ப்படுகிறது. அவர்கள் உண்மையில், தமிழ் கூடாது என்று கூற வருகிறார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தமேயன்றி வேறு அல்ல.

பலர் நேரிடையாக ‘அது என்ன தமிழ் வந்தால் நீதிமன்றத்தின் டிகோரம் என்னாவது, டீசன்ஸி என்னாவது?’ என்கிறார்கள் சமூக நீதி பிரச்னையில், ‘ரிசர்வேஷன் கூடாது, மெரிட்தான் கரெக்ட்’ என்று அதனால் பயனடைந்த அல்லது பயனடையப் போகும் ஒரு கூட்டம் சலித்துக் கொள்ளும். அதே போன்று இங்கும், தமிழில் வழக்காடுவதால், பயன்பெறப் போகும் நபர்கள்தாம் மற்ற ஆனால்களைப் போல அல்லாமல் நம்மிடம் நேரிடையாக இப்படி நக்கலடிக்க முற்ப்படுகிறார்கள்.

நேற்று கூட என்னிடம் அப்படிக் கேட்ட என்னிடம் ஒரு வழக்கினை நடத்த ஒப்படைக்க வந்த ஒரு ஜூனியர் வழக்குரைஞரிடம் ‘என் கடவுளே என்று இறைஞ்சுவது எப்படியிருக்கிறது’ என்றேன். ‘தாய்மொழியில் கேட்டால் வார்த்தையின் அர்த்தம் அதன் முழு வீரியத்தோடும் மனதை துளைக்கிறது அல்லவா? வாதங்களை தமிழில் வைப்பதன் பயன் அதுதான்’ என்றேன்

எது எப்படியோ, இந்த சட்டச்சிக்கல், கட்டமைப்புச் சிக்கல் அனைத்தையும் சற்றுத் தள்ளி வைத்து சிந்திதோமென்றால், நமது உயர்நீதிமன்றத்தினை அணுகும் 90 சதவிகித வழக்காடிகள் தங்களது பிரச்னைகளை தமிழில் சிந்திக்கிறார்கள். தமிழில் ஆவணங்களை எழுதுகிறார்கள், தமிழில் சண்டையிடுகிறார்கள். தமிழில் தங்களது வழக்குரைஞருடன் விவாதிக்கிறார்கள், தமிழில் தங்களது சாட்சிகளை விசாரிக்கிறார்கள். அப்படியிருக்கையில், முக்கியமாக அந்த 90 சதவிகிதத்தில் 80 சகவிகிதம் வழக்காடிகளுக்கு ஆங்கிலம் தெரியாத சூழ்நிலையில் ஏன் தங்களது வழக்குகளை தமிழில் நடத்தக் கூடாது? அதுதான் நியாயமென்றால், அதுதான் சிறந்தது என்றால் அதனை ஏன் ஆனால்களால் தள்ளிப்போட வேண்டும்.

ஆனால்களை தவிர்ப்போம். தமிழுக்கு ‘ஆம்’ என்போம்.

பிரபு ராஜதுரை
17/06/10

21.6.10

ஞாநி கொடுத்த பத்மஸ்ரீ!

You are incorrigible

என்று ‘மாஸ்க்படத்தில் காவலர் மீது ஜிம் கேரி பாய்வாரே, அப்படிப் பாய வேண்டுமென்று இருக்கிறது, பத்தி எழுத்தாளர் ஞாநி மீது!


அவரது இந்தத் தகவ்லுக்கு ஆதாரம் என்னவென்று தெரியவில்லை. இணையத்தில் தேடினால், இந்தியாவின் மக்கள் தொகையினை பெருமளவில் குறைக்க உதவிய ஆண்டர்சனுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கக்பட்டு அதற்கு ஓபாமா வாழ்த்தியதாகவும் ஒரு கிண்டல்தான் கண்ணில் பட்டது.

ஞாநி இவ்வளவு நல்லவரா?
-oOo-
யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தின் தலைவரான கேசுப் மஹிந்திரா பலரால் மதிக்கப்படும் ஒரு தொழில் அதிபர். அவரது சேவையினை பாராட்டி மத்திய அரசு ‘பத்ம பூசன்விருது அளிக்க முன் வந்தது. ஆனால் தன் மீது போபால் விபத்து குற்றவியல் வழக்கு நிலுவையிலுள்ளது என்று கூறி அவர் அதனை மறுத்து விட்டார்.
-oOo-

மற்றவர்கள் பலருக்கும் நிகழக்கூடிய அனுபவம் ஒன்று எனக்கு நிகழ்ந்ததேயில்லை. எனக்கு அதில் வருத்தமா இல்லை பெருமிதமா என்று தெரியாது. ஆனால் அப்படியொரு அனுபவம் வாய்க்க எனக்கு வாய்ப்பில்லை என்றுதான் நினைத்து வந்தேன்.

ஒன்றும் பெரிதாக் இல்லை... என்னைப் போலவே பெயர் கொண்ட மற்றொரு நபரை சந்திக்கையில் ஏற்ப்படக்கூடிய அசட்டுத்தனமான ஒரு உணர்வுதான் அது.

பிரபு என்ற பெயரும் ராஜதுரை என்பதும் பிரபலமான பெயர்கள்தான் என்றாலும், பிரபு ராஜதுரை என்று சேர்த்து விளிக்கையில் சற்று பிசிறு தட்டும் ஒரு பெயருடைய வேறு யாரும் இருப்பார்கள் என்று நான் நினைத்ததில்லை. யாதோங்கி பாராத் வகை திரைபப்டங்களில் வருவது போல ஏதோ சிறு வயதில் தொலைந்து போன சகோதரனை தேடுவது போல அவ்வப்பொழுது மற்றொரு பிரபு ராஜதுரையை தேடி வந்தாலும், உலகில் வேறு யாருக்கும் இல்லாத தனிப் பெயர் என்ற பெருமைக்கு பங்கம் வந்துவிடும் அபாயத்தை எண்ணி பயமாகவும் இருக்கும்.

அதற்கு வந்து விட்டது வேட்டு!

சமீபத்தில் இணையத்தில் வலை விரித்ததில் சிக்கியது இந்த தினமணி செய்தி


தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவர் எனது கட்சிக்காரர். அதனால் ஏதேனும் என்னுடைய பெயர் தவறுதலாக வந்து விட்டதா என்று தெரியவில்லை. விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.


உங்களுக்கும் யாரையாவது தெரியுமா? அல்லது பேஸ்புக்கில் இருப்பவரையாவது தெரியுமா?

Madurai
21/06/10