Showing posts with label PIL. Show all posts
Showing posts with label PIL. Show all posts

7.10.12

கூடங்குளம் பொதுநல வழக்கு!


கூடங்குளம் அணு உலையினை நிறுவி இயக்குவது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கில் அணு உலையினை நிர்மாணிப்பதில் விதிகள் மீறப்பட்டுள்ளன எனவும் அந்த மீறல்கள் நேர்செய்யப்படாமல், உலையினை இயக்க முடியாது என்றுதான் வாதிட முடியுமே தவிர, அணு உலையே கூடாது என்றல்ல. அணு மின்சாரம் தேவையா இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவை சார்ந்தது. கொள்கை முடிவில் நீதிமன்றம் எளிதில் தலையிடாது.
 
எனவே, அணு உலை அமைக்கக் கூடாது என்று மக்கள் தொடர்ந்து தாங்கள் விரும்பினால் அரசை கோரலாம். போராடலாம். மக்களின் கருத்தினை ஒட்டியே அரசு தனது கொள்கை முடிவுகளை வகுத்துக் கொள்வதால், அக்கருத்தின் வெளிப்பாடான சுந்ததிரமான பேச்சு மற்றும் நடவடிக்கைகள் ( speech and expression) ஆகியவற்றை அனுமதிப்பது, மக்கள் நல ஆட்சியினை பேணும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.

இதன் காரணமாகவே, அணு உலை பற்றிய தங்கள் சொந்தக் கருத்தினை வடிவமைத்துக் கொள்ளாதவர்கள் கூட கூடங்குளத்தில் அணு உலையினை எதிர்த்து போராடுபவர்களின் மீதான அரசின் பல்வேறு அடக்கு முறைகளை கண்டிக்கும் சூழல் ஏற்ப்படுகிறது. முக்கியமாக, கடந்த மாதம் நடைபெற்ற அணு உலை முற்றுகை போராட்டத்தின் பொழுது, எவ்விதமான உடல் மற்றும் மனக்காயங்கள் இல்லாமல் சமாளித்திருக்க வேண்டிய ஒரு விடயம், சில அரசு அதிகாரிகளின் ஆணவப் போக்கால் மக்களுக்கும் அரசு இயந்திரங்களும் இடையே மிகப் பெரிய இடைவெளியை ஏற்ப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இரண்டு உயிர்களையும் பலி கொண்டுள்ளது.

இதற்காக நீதி விசாரணை கோரி, இரு பொது நல வழக்குகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டு, வாத பிரதிவாதங்கள் முடிந்து தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு என்ற நிறுவனத்திற்காக வழக்கு தாக்கல் செய்த எனது நண்பர் நீதிமன்றம் வர இயலாத சூழ்நிலையில் அவருக்காக நான் வாதிடும் வாய்ப்பு கிடைத்தது. மற்றொரு வழக்கினை தாக்கல் செய்தவர் அ.மார்க்ஸ்!


கூடங்குளம் வன்முறைக்கும், ராம்லீலா வன்முறைக்கும் ஒற்றுமை இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுக்காத சூழ்நிலையில், மற்றவர்களுக்கு என்ன பிரச்னை, என்ற எண்ணம்தான் மோலோங்கிய நிலையில், அதே போன்றதொரு உத்தரவை இந்த வழக்கில் எதிர்பார்க்க முடியாது. ’80 காவலர்கள் காயம்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களில் யார் ஒருவருக்கும் கூட காயம் படவில்லை’ என்பதே அரசின் வாதம்.

குற்ற வழக்கிற்கும், கைதுக்கும் அஞ்சி தனியாளாக யாரும் எதற்கும் முன் வர முடியாத சூழலில், பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் நிற்க வைப்பது இயலாத நிலை. எனவேதான், பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு உண்மை நிலையினை தெரிந்து கொள்வதற்கு யாரேனும் நீதிபதி தலமையில் விசாரணை வேண்டுமென்று வழக்கு. ஆனால், அவ்விதமாக விசாரணை நடத்த வேண்டுமென்று அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா, என்பது கேள்விக்குறி. அதிஷ்டவசமாக, அந்த கேள்வியினை அரசுத் தரப்பில் எழுப்பவில்லை.

எனினும், நீதிபதி தலமையிலான விசாரணையிலும் பெரிதாக ஏதும் விளைந்து விடாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவ்விதமான விசாரணை தொடர்ந்து இவ்விதமான செயல்கள் நடக்க இயலாத சூழ்நிலையை ஏற்ப்படுத்தும். அதே போன்று நடந்த பிரச்னையை மக்கள் மன்றத்திற்கு முன் எடுத்துச் செல்லும் ஒரு கருவியாக இந்த வழக்கு பயன்படலாம். பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது என்றாலும், நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு, அரசு இயந்திரங்களுக்கு தொடர்ந்து தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்தியது. அடுத்து நடைபெறப் போகும் முற்றுகை போராட்டத்தில் ‘எவ்விதமான வன்முறை செயலுக்கும் இடம் கொடுத்து விடக்க்கூடாது’ என்று தற்பொழுது காவலர்களுக்கு கண்டிப்பாக உத்தரவிடப்பட்டதில் இந்த வழக்கின் பங்கும் உண்டு.

எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லைக் காவல்படை விமானியின் அகங்காரப் போக்கால் உயிரிழந்த மீனவர் குடும்பம் தகுந்த நஷ்ட ஈடு வேண்டியும், விமானியின் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியும் நீதிமன்றத்தினை எளிதில் அணுகும் வண்ணம், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் பயன்படலாம்.

எல்லா வழக்குகளிலும், முக்கியமாக பொது நல வழக்குகளில், வெற்றி என்பது வழக்கில் கோரப்பட்ட பரிகாரத்தை பொறுத்து அமைவதல்ல. மாறாக, பல்வேறு பக்கவிளைவுகளினால் ஏற்ப்படும் நன்மைகளும் வழக்கின் வெற்றியை நிர்ணயிக்கின்றன. கூடங்குளம் வழக்கில் என்ன நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மதுரை
07/10/12

3.5.09

சு.சுவாமியின் வெற்றி!

ஸ்ரீதரன் : இதுவரை உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீங்கள் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்துள்ளீர்கள்?

சுசுவாமி : எண்ணிலடங்காதது (I have lost count). ஆனால் அவையனைத்திலும் நான் வென்று விட்டேன். அவையனைத்தும் பொதுநல வழக்குகள்
. சுப்பிரமணியன் சுவாமி, சிபி (sify) இணையதள அரட்டையில்...

-oOo-

ஆமாம் வென்றுதான் விட்டார்...

22/12/03 தேதியிட்ட ஏசியன் டிரிபியூன் (Asian Tribune) இதழில் வெளிவந்த ‘சுவாமி, சிறீலங்கா தமிழ் அகதிகளுக்காக மற்றொரு வழக்கினை வென்றெடுத்துள்ளார் (Swamy wins another legal battle for Sri Lankan Tamil Refugees)’ என்ற தலைப்புச் செய்தியின்படி, வென்றுதான் விட்டார்.

அட! இலங்கைத்தமிழ் அகதிகளுக்காக அப்படியென்ன சட்ட சிக்கலை தீர்த்து விட்டார் என்ற ஆர்வம் ஏற்படாமல், வெறுமே செய்தியை மட்டும் படித்தால் சுவாமி தனது எண்ணிலடங்கா பொதுநல வழக்கு வெற்றிகளில், இந்த ‘வெற்றி’யையும் சேர்த்துக் கொள்வது நியாயமாகத்தான் இருக்கும்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பது, அதே செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் வழக்கின் தீர்ப்பினையும் படித்தால்தான் புரியும்.

வழக்கம் போலவே இந்த முறையும் சுவாமி தன்னை ஒரு ‘நன்கு அறியப்பட்ட அரசியல்வாதியாகவும், ராஜதந்திரியாகவும் (statesman)’ மதராசு நீதிமன்றம் முன்பு அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘2003-04ம் ஆண்டிலும் அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் (கல்லூரிகள்) தமிழகத்திலுள்ள சிறீலங்கா தமிழ் அகதி மாணவர்களுக்காக தனியே இடங்களை உருவாக்கி, அவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும்’ என்ற பரிகாரம் வேண்டி, பேராணை மனு எண் 26463/03 என்ற வழக்கினை தாக்கல் செய்கிறார்.

அதாவது தமிழக அரசு தானாகவே 1996ம் ஆண்டு முதல் கல்லூரிகளில், அவைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கும் அதிகமாக இடங்களை உருவாக்கி அவற்றை சிறீலங்கா தமிழ் அகதிகளுக்கு ஒதுக்கி வந்ததாகவும், 2003ம் ஆண்டிலிருந்து அந்த ஒதுக்கீடு (reservation) நிறுத்தப்பட்டதால் அதனை தொடர வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வழக்கு.

எந்த ஒரு சட்டரீதியிலான அல்லது நிர்வாக ரீதியிலான ஆய்வினையும் மேற்கொள்ளாமல், வெறுமே இந்துவிற்கு எழுதும் ஆசிரியருக்கான கடிதம் பாணியில் அமைந்த சுவாமியின் மற்றொரு பேராணை மனு!

முக்கியமாக, அரசியலமைப்புச் சட்டப்படி இம்மாதிரியான விடயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்ற சிறிய கவனம் கூட இன்றி, மாநில அரசு மீது வழக்கினை தாக்கல் செய்த அலட்சியம் குறிப்பிடத்தக்கது. பின்னர், நிதிமன்றம் இந்த தவறினை சுட்டிக் காட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தனியே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு மத்திய அரசாங்கம் பேராணை மனுவில் எட்டாவது எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.

சரி, மத்திய அரசினை எதிர்மனுதாரராக சேர்த்த பின்னர் என்ன நடந்தது?

பெரிய வாதப் பிரதிவாதம் எல்லாம் இல்லை. ‘இந்த விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஏற்கனவே கூறியபடி மத்திய அரசிடம் உள்ளது. மாநில அரசு விரும்பினால், கல்லூரிகளில் இடங்களை அதிகரித்து சிறீலங்கா தமிழ் அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசினை வேண்டிக் கொள்ளலாம்’ என்பதுதான் உத்தரவு.

பல சமயங்களில், வழக்கு தள்ளுபடி என்று கூறினால் வழக்காடிகள் வருத்தப்படுவார்களே என்பதால், அவர்கள் மீது மனமிரங்கும் நீதிமன்றம் தள்ளுபடி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், இவ்வாறு சட்டப்புத்தங்களில் ஏற்கனவே உள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தி வழக்கினை முடித்து வைக்கும்.

ஆனால் தற்பொழுது இந்த வகையான உத்தரவுகளை ‘வெற்றி’ என்று வழக்குரைஞர்களை அணுகும் படிக்காத பாமரர்களே ஏற்றுக் கொள்வதில்லை. ஏசியன் டிரிபியூன் தனது வாசகர்களின் தரம் பற்றி கொண்டிருக்கும் மதிப்பீடு வியப்பளிக்கிறது!

-oOo-

சரி, தீர்ப்புக்கு பின்னர் என்னதான் நடந்தது. ஒன்றும் நடக்கவில்லை.

சுவாமிக்கு இந்த விடயத்தில் உண்மையான ஆர்வம் இருந்திருந்தால், மத்திய மாநில அதிகார மையங்களில் தனக்குள்ள வலிமையை (influence) பயன்படுத்தி, அது கூட வேண்டாம் தமிழக முதல்வரை பொதுவில் வேண்டுவதன் மூலம் எளிதில் இதனை முடித்திருக்கலாம்.

அரசின் கொள்கை முடிவுகளில், நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை என்றாலும் கூட அவருக்கு வேண்டியது, நீதிமன்றம் என்ற பொது மேடை, அதைப் பயன்படுத்த ஒரு வழக்கு, ஒன்றுக்கும் உதவாத தீர்ப்பு என்றாலும் ‘சுவாமிக்கு வெற்றி’ என்ற பத்திரிக்கைச் செய்தி...

செய்தி உண்மைதான்....சுவாமிக்கு வெற்றிதானே!

மதுரை
03.05.09

28.4.08

பொதுநல வழக்குகள், நீதிபதிகள் மற்றும் தமிழ்!


உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளைக் குறித்து, சட்ட நிபுணர்கள் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் பதிவு ஒன்றினைப் பற்றி எனது முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டேன். சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்கள் பொதுநல வழக்குகளைக் குறித்து தெரிவித்த கருத்துகளைக் குறித்து சில பதிவுகளை அங்கு கண்ணுற நேர்ந்தது.

ஒரு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே வழக்கினை தாக்கல் செய்ய முடியும் என்பது பொது விதி.. பொதுநல வழக்கு என்பது, இந்த எல்லையினை உடைத்து வெளிக்கிளம்பியதாகும். அதாவது வழக்கில் நேரிடையாக சம்பந்தப்படாத ஒரு நபர் பொது நலனுக்குக்காக தொடரும் வழக்கே பொதுநல வழக்காகும் (Public Interest Litigation PIL).

பொதுநல வழக்குகளால் நீதிமன்றங்கள் மக்களிடையே அடைந்த புகழ் குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் அவ்வப்போது, இவற்றை Paisa Interested Litigation அல்லது Publicity Interested Litigation என்று நீதிமன்றங்கள் நிராகரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

முக்கியமாக, பல சமயங்களில் இவ்வகையான வழக்கினை நிராகரிக்கையில் பொதுநல வழக்கு என்றால் என்ன என்று நீதிபதிகள் இவற்றை எந்த எல்லையினை மீறி இவை தோன்றியதோ அதே போன்றதொரு எல்லைக்குள் இதனை அடைத்து வரைமுறைப்படுத்த முயல்வதுதான் வேடிக்கை!

பொதுநல வழக்கு என்பதற்கு வரைமுறையினை (definition) ஏற்ப்படுத்த முயலும் நீதிபதிகளைப் பார்த்தால் எனக்கு பதினெட்டாம் நூற்றாண்டில் ‘முடிவில்லாமல் இயங்கும் இயந்திரத்தை’ உருவாக்குகிறேன் என்று அலைந்த பெளதீகவியலாளர்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

பொதுநல வழக்குகளை எந்த வரையறைக்குள்ளும் கொணராமல், அவற்றை அதன் போக்கில் நடை போட விடுவதுதான் சட்டத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யக்கூடியது.

-oOo-

மார்கண்டேய கட்ஜூ நமது உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கையிலும், அரசினை பல்வேறு பேராண்மை மனுக்களில் (writ petition) பாதுகாத்தார். ஆனால் அவரது உத்தரவுகள் செல்லாது என்று மூத்த வழக்குரைஞர் ஒருவர் கூறினார்.

‘அவருக்குதான் வயது பதினாறை தாண்டாதே...மைனர் தீர்ப்பு செல்லுமா?’ என்றாரே பார்க்கலாம்!

-oOo-

தீர்ப்பு என்றதுதான் நினைவுக்கு வருகிறது. இரு நாட்களுக்கு முன்னர் மேல்முறையீட்டு மனு (Appeal) தயாரிப்பதற்காக சார்பு நீதிபதி (Sub Judge) ஒருவரின் தீர்ப்பினை படித்த எனக்கு தீர்ப்பில் ஒரு வரி பிடிபடவில்லை. ‘இறந்தவர் இரும்பு முதலிய உலோகத்தால் செய்யப்பட்ட சாமான்கள் சம்பந்தப்பட்ட கணணியில் பட்டயப் படிப்பு படித்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது’ என்ற வரிதான் அது.

Metallurgy ஆ? தென்காசியில் அதெல்லாம் படிக்கிறார்களா என்று குழம்பி பின்னர் வழக்கு கட்டினை முழுவதும் புரட்டிய பின்னர்தான் அது என்ன படிப்பு என்று புரிந்தது. Diplomo in Computer Hardware!

வாகன விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட பல தீர்ப்புகளில் ‘இயற்பியல் சிகிச்சை’ என்ற வார்த்தை இடம் பெறும். எனக்கு தற்பொழுது பழக்கப்பட்ட அந்த வார்த்தையின் ஆங்கில மொழியாக்கம் ‘Physiotherapy’!

நீதிபதிகளுக்கான பயிற்ச்சிக் களத்தில் தமிழ் மொழியாக்கம் பற்றி, இராமகி ஐயாவை வகுப்பெடுக்க வேண்டுகோள் வைக்கலாம்.

-oOo-

‘என் வருகையை அறிவித்தவர் சுஜாதா’ என்று ஜெயமோகன் கூறியதை ‘இது போன்றவர்களின் வருகையை அறிவிக்கும் அபோஸ்தலராக எப்போது மாறினார் சுஜாதா?’ என்று சாருநிவேதிதா தனது கட்டுரையொன்றில் கிண்டலடித்திருக்கிறார்.

மற்றொருவரின் வருகையினை உலகுக்கு அறிவிக்கும் நபரைக் குறிக்க அப்போஸ்தலரை உதாரணப்படுத்துவது சரியாக வருமா? கிறிஸ்தவ விவிலியத்தை படித்தவர்கள்தான் கூற வேண்டும்.

பிரபு ராஜதுரை
28.04.08