17.5.06

அட்லாண்டிக்கு அப்பாலும்...



ஜெரால்ட் ஜான்சன் என்பவர் எழுதிய 'தி சுப்ரீம் கோர்ட்' என்ற கையடக்கமான புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பழைய புத்தகக்கடையில் எதேச்சையாகப் பார்த்த 1963ம் வருட புத்தகம். சுப்ரீம் கோர்ட் என்பது அமெரிக்க உச்ச நீதிமன்றம். சாமான்யர்களுக்காக (lay persons) எளிமையான மொழியில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதன் வரலாறு, செயல் முறை, அதிகாரம் இவற்றைப் பற்றி எழுதியுள்ளார். அரசின் மற்ற இரு தூண்களான சட்டமன்றம் (legislature) அமைச்சகம் (executive) ஆகியவற்றைப் பற்றியும் இது போன்ற இரு நூல்கள் எழுதியிருக்கிறார்.

புத்தகத்தில் 'த பவர் ·ப் த சுப்ரீம் கோர்ட்' என்ற பாகம் சுவராசியமானது. செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்கர்கள் அட்லாண்டிக் சமுத்திரத்திற்கு அப்பாலும் நாகரீகமடைந்த ஒரு உலகம் இருப்பதை அதிகமாக உணர்கிறார்கள் என்ற போதிலும், இந்தப் புத்தகம் எழுதப்பட்ட 1962ம் ண்டு அவர்களின் உலக நோக்கு எவ்வாறாக இருந்தது என்பதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தி அதிகாரங்களைப் பற்றி எழுத விழைந்த ஆசிரியரின் பார்வை ஒரு சான்று.

"நாகரீகமடைந்த அனைத்து நாடுகளிலும் ஏதாவது ஒரு வகையான மேல்நிலை நீதிமன்றங்கள் இருந்தாலும், நீதிமன்றப்பணிகளுக்கும் அப்பாற்பட்ட கடமை, உரிமையினை தன்னகத்தே கொண்டதினால் அமெரிக்க உச்ச நீதிமன்றமானது மற்ற அனைத்து நாட்டு நீதிமன்றங்களிலிருந்தும் வித்தியாசப்படுகிறது. அது அரசின் மூன்றின் ஒரு பங்காகும். முக்கியமாக, நாடு இன்று எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதோடு, நாளை எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கிறது."

"மற்ற நாட்டு நீதிமன்றங்கள் சட்டம் என்ன என்பதை தீர்மானிப்பதோடு தங்கள் பணியினை முடித்துக் கொள்கின்றன. ஆனால் அமெரிக்க உச்ச நீதிமன்றமோ ஒன்றல்ல, பல தடவைகள் சட்டமன்றத்தின் பணியாகிய சட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் தீர்மானித்துள்ளன"

ஜெரால்ட் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தனித்தன்மை வாய்ந்த அதிகாரமாக கூறுவதை நாம் 'நீதிபதியால் ஏற்படுத்தப்படும் சட்டம்' எனக் கூறலாம். அதாவது சட்டத்தில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. முதலாவது எழுதப்படாத சட்டம். பக்கத்து வீட்டுக்காரரின் நாய் வேலியை தாண்டிக் குதித்து வந்து உங்களைக் கடித்து வைத்தால் உங்களுக்கு அவர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று எந்த சட்டமன்றமும் எழுத்த்¢ல் எழுதி நிறைவேற்றவில்லை. ஆனால் தர வேண்டும். முக்கியமாக பிரிட்டிஷ் அரசியலமைப்புச் சட்டமே எழுதப்படாததுதான். இரண்டாவது எழுதப்பட்ட சட்டம். இதற்கு அனைவருக்கும் தெரிந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உதாரணமாக கூறலாம். மூன்றாவதுதான் ஜெரால்ட் கூறும் 'நீதிபதி ஏற்படுத்தும் சட்டம்' (Judge Made Law). அதாவது நீதிபதி கூறும் எதுவும் சட்டமாகக் கூடிய அபாயம்!

ஜெரால்ட் இதற்கு உதாரணமாக கூறுவதைப் பார்க்கலாம். அமெரிக்காவில் இனப்பாகுபாடு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட காலம் இருந்தது. இதன்படி ரயிலில் வெள்ளையர்களும், பிற நிறத்தவர்களும் பயணம் செய்ய தனித்தனி பெட்டி இருந்தது. வெள்ளையர்கள் பயணம் செய்யும் பெட்டியில் மற்றவர்கள் பயணம் செய்ய முடியாது. இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் 'பிளேஸி வழக்கு' என்ற வழக்கில் எழுகையில் 1896ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் 'இரு வெவ்வேறு பெட்டிகள் இருப்பதில் தவறில்லை. ஆனால் இரு பெட்டிகளும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்' என்று கூறி 'பாகுபாடு ஆனால் சமநிலை' (separate but equal) என்ற சட்டக் கொள்கையை வரையறுத்தன. அதற்குப் பிறகு ரயிலில் மட்டுமல்லாது மற்ற அனைத்து வகைகளிலும் இந்த கொள்கை பின்பற்றப்பட்டது. ஆனால் சமத்துவத்தை வலியுறுத்தும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த 'சமநிலையான பாகுபாடு' என்று எதுவும் கூறப்படாடத நிலையிலேயே நீதிபதிகள் ஏற்படுத்திய சட்டம் அமுலுக்கு வந்ததை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து ஜெரால்ட் இந்த சட்டக் கொள்கையின் அடுத்த நிலையினையும் உதாரணப்படுத்துகிறார். 'சமநிலையான பாகுபாடு' நிலை ஐம்பெத்தியெட்டு ஆண்டுகள் தொடர்ந்தது. எந்தவித சட்டத் திருத்தமும் ஏற்படவில்லை. ஆனால், மீண்டும் இந்தப் பிரச்னை 1954ம் ண்டு நீதிமன்றம் சென்றது. இந்த முறை பிர்சனை அரசு நடத்தும் பள்ளிகளில் வெள்ளையர் குழந்தைகளோடு மற்ற இனத்தவரின் குழந்தைகளும் சேர்ந்து படிப்பதைப் பொறுத்தது. அரசால் சமாளிக்க முடியாத சிக்கலான பிரச்னை என்றால் நீதிமன்றங்களிடம் தள்ளிவிட்டு கைகட்டிக் கொள்ளும் நமது இன்றைய அரசுகளைப் போலவே அரசு கைகட்டி வேடிக்கை பார்க்க, நீதிமன்றங்கள் 'ஒருங்கிணைப்பு' என்ற புதிய சட்டக் கொள்கையை வடிவமைத்தன. இதன்படி அரசுப் பள்ளிகளில் (public schools) அனைத்து இனக்குழந்தைகளும் ஒன்றாகப் படிக்க வேண்டும் என்பதாகும். ஆக, இந்த இரு கொள்கைகளை வடிவமைக்கையிலும் அரசோ, சட்டமன்றமோ ஏதும் செய்யவில்லை. இதுதான் சட்டம் என்பதை நீதிமன்றங்கள்தான் தீர்மானித்தன. இதுதான் நீதிபதியால் ஏற்படுத்தப்படும் சட்டம். இதைத்தான் ஜெரால்ட் அமெரிக்க நீதிமன்றங்களின் தனித்தன்மை என்கிறார். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்க முடியும்?

ஜெரால்ட் இந்தப் புத்தகத்தை எழுதியதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்து விட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கொஞ்சம் சிரமம் எடுத்து படித்திருப்பாராயின் இவ்விதம் எழுதியிருக்க மாட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 141வது பிரிவு இந்திய உச்ச நீதிமன்றம் வரையறுக்கும் சட்டமானது அதன் கீழ் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் எனக் கூறுகிறது. இதே மாதிரியான அதிகாரம் உயர் நீதிமன்றங்களுக்கும் உண்டு. உண்மையில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் வானளாவியது என்றால் அது மிகையான ஒரு கருத்தாக இருக்க முடியாது. பாராளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டத்தையும் அது எத்தனை பெரிய மெஜாரிட்டியால் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் 'அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது' என செல்லா காசாக்கலாம். ஜனாதிபதியால் நியமிக்கப்படும் எந்த ஒரு அரசுப் பணியாளரையும், ஏன் ஜனாதிபதியையே தகுதியில்லாமல் பணியிலிருக்கும் பொருட்டு நீக்கலாம்...இன்னும் என்னன்னவோ!

பலமுறையல்ல எண்ணிலடங்கா முறை இந்திய உச்ச நீதிமன்றம் இதுதான் சட்டம்...இந்த முறையில்தான் சட்டம் பயணம் செய்ய வேண்டும் என்பதை வரையறுத்துள்ளன. முக்கியமான சமீபத்திய உதாரணம் கூற வேண்டுமென்றால் 'அசோசியேஷன் பார் டெமாக்ரடிக் ரிபார்ம்ஸ்' என்ற அமைப்பு தாக்கல் செய்த வழக்கில் 'வேட்பாளர்களிடம் இருந்து அவர்களது கல்வி, சொத்து விபரம், கடன்கள் மற்றும் குற்ற வழக்குகள் ஆகியவற்றைப் பற்றிய விபரங்களை கோர வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து இத்தகைய உத்தரவினை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. பதறிப்போன பிஜேபி அரசு உடனடியாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் புது சட்டப்பிரிவுகளை ஏற்படுத்தியது. இதன்படி, ஒரு வேட்பாளர் இந்த சட்டத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை மட்டுமே அளித்தல் போதுமானது. இதற்கு மேலாக எந்த நீதிமன்ற தீர்ப்போ அல்லது தேர்தல் ஆணைய உத்தரவோ வேண்டிய விபரங்களைத் தர வேண்டியதில்லை. ஆக, உச்ச நீதிமன்றம் ஏற்படுத்திய சட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்ய பாராளுமன்றத்தால் ஒரு சட்டம். 'விட்டேனா பார்' என்றது நீதிமன்றம் பியூசிஎல் (PUCL) தொடர்ந்த வழக்கில். 'அரசின் சட்ட திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை பறிப்பதாக இருக்கிறது' என்று கூறி அரசு சட்டம் செல்லாது என அறிவித்து விட இறுதியில் நீதிபதிகளின் சட்டமே வென்றுள்ளது. இதன் பலன்களை விரைவில் நடைபெறப் போகிற தேர்தலில் நாம் பார்க்கலாம்.

ஜெரால்டுக்கு தெரியுமா? அட்லாண்டிற்கு அப்பாலும் நாகரீகங்கள் இருக்கின்றன. அங்கும் நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவையும் சட்டத்தின் ஆட்சியை போற்றுகின்றன என்று. அதெற்கெல்லாம் அவருக்கு நேரம் ஏது? இந்தியா என்றாலே பசுக்கள் திரியும் சாலையும், அழுக்கு குழந்தைகளும் என்றல்லவா அவர்களது எண்ணமாக இருந்திருக்கிறது. 'பாவம் ஆசிரியர், இப்படி கரித்துக் கொட்டுகிறேனே' என்பவர்களுக்காக அவர் மேலும் எழுதுகிறார்.

"இவ்விதமாக 1954ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டாலும், அதனால் சட்டத்தை மாற்ற இயன்றதேயொழிய சமூகக் கொள்கையை முற்றிலும் மாற்ற முடியவில்லை. அது ஒரு சமூக பழக்கம். உச்ச நீதிமன்றத்திற்கு சமூக பழக்கத்தினை மாற்றுவது சட்டத்தினை மாற்றுவதை விட கடினமான காரியம். அந்தப் பணியில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் முழு வெற்றி பெற வில்லையெனினும் அநேக நாடுகளில் உள்ள பிற நீதிமன்றங்கள் அவ்விதம் முயலுவதை சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை"

முதலில் ஜெரால்ட் இனவெறியினை சமூக கொடுமை எனக்கூறவேயில்லை. சமூகப் பழக்கம் என்கிறார். அடுத்து, சமூக ஒருங்கிணைப்பு தேவை என்பதையும் வலியுறுத்தவில்லை. சமூக ஒருங்கிணைப்பு நீதிமன்றங்களில் போராடும் வழக்குரைஞர்களின் கவலை என்கிறார். இந்தப் புத்தகத்தின் நோக்கம் சமூக ஒருங்கிணைப்பு என்பதல்ல என்றாலும், ஆசிரியரின் முகம் தெரிகிறது. அடுத்து அநேக நாடுகளைப் பற்றிய அவரது அறிவு! Most Courts என்ற பதத்தினைப் பயன்படுத்துகிறார். எனக்குத் தெரிந்து 1954ல் மக்களிடையே இனப்பாகுபாடு பேணிய மற்றொரு நாடு தென் ஆப்ரிக்கா மட்டும்தான். இங்கு நாம் மதப்பாகுபாட்டை இனப்பாகுபாட்டுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. பாக்கிஸ்தானில் ஒரு இந்து முஸ்லீமாக மதம் மாறி அதன் ஜனாதிபதியாகலாம் (ராணுவத்தில் சேர்ந்து அரசை கவிழ்க்க வேண்டும் என்பது மற்றொரு தகுதி என்பது இருக்கட்டும்) ஆனால் ஒரு கறுப்பர் வெள்ளையராக மாறவே முடியாது. எப்படியோ, இந்திய நீதிமன்றங்கள் 'சமூக பழக்கம்' என்றெல்லாம் தங்களைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே இவை சமூகக் கொடுமைகள் என்று ஒவ்வொரு சமயத்திலும் தலையிட்டு சட்டத்தை வரையறுத்த வரலாற்றை யாராவது ஜெரால்ட் ஜான்சனுக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம்.

பெருமைக்காக கூறவில்லை. நாகரீகமடைந்த நாடு என்று கூறிக் கொண்ட அமெரிக்காவின் 1954ம் வருட இனப்பாகுபாடு வழக்கு இதே காலகட்டத்தில் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டிருந்தால் 'அனைவருக்கும் ஒரே பள்ளி' என்பதோடு இந்திய நீதிமன்றம் நின்றிருக்காது. 'இது என்ன காட்டுமிராண்டித்தனம்?' என்று நமது நாகரீகத்தையே சந்தேகப்பட்டிருக்கும்.

மும்பை
12.01.04





3 comments:

Boston Bala said...

அப்பொழுது (2004-இல்) படிக்கவில்லை. ஆனால், இன்றளவும் நிகழும் சங்கதிதான்... தொடர்புடைய இன்றைய செய்தி:

Schools Plan in Nebraska Is Challenged - New York Times: "In a constitutional challenge to a state law that would divide the Omaha public schools into three racially identifiable districts, the National Association for the Advancement of Colored People sued the governor of Nebraska and other state officials yesterday in federal court in Omaha, arguing that the law "intentionally furthers racial segregation."

An amendment that passed late in the legislative session required that the Omaha public schools be split by 2008 into three districts following the attendance areas of existing high schools. The lawsuit argues that because Omaha is racially segregated by neighborhood, dividing the district that way would create one largely black, one largely white and one mostly Hispanic district."

Anonymous said...

Great site loved it alot, will come back and visit again.
»

Anonymous said...

Interesting site. Useful information. Bookmarked.
»