20.5.06

சர்ஜிகல் கத்தி!

ஞாயிற்றுக் கிழமை அப்பாவுடன் போனில் பேசிக் கொண்டிருந்த போதும் வழக்கம் போலவே சிரிப்புதான். கெல்லியினைப் பற்றி சொல்லிக் கொண்டிந்தார். கெல்லி ஐரிஷ்காரர். அவர்தான் சுரங்கம் தோண்டும் கோடாலி போன்ற உபகரணங்களுக்கான பொறுப்பாளி மற்றும் 'ஸ்டோர் கீப்பர்'.

அப்பாவுக்கு அன்று நல்ல ஒரு கோடாலி தேவைப்பட்டது. சுரங்கத்தின் உட்புற சுவர்களைத் தாங்கும் மரத்தாலான உத்திரத்தினை செதுக்க வேண்டியிருந்தது. கெல்லியின் அறையில் நல்ல கூர்மையான ஒரு கோடாலி அப்பாவின் கண்களில் பட்டது. அதனை எடுக்க குனிகையில் பாய்ந்து வந்தார் கெல்லி, 'இல்லை. இல்லை... எடுக்காதே! அது எனது சர்ஜிகல் கத்தி'

ஆம், சுரங்கத் தொழிலாளர்களின் பார்வையில் உண்மையிலேயே அது ஒரு சர்ஜிகல் கத்திதான். தொழிலாளர்களுக்கு பணமுடையாயிருபின் அவர்கள் போகுமிடங்களில் ஒன்று கெல்லியின் அறை. ஒரு தேர்ந்த மருத்துவரைப் போல நேர்த்தியாக, கெல்லி அவரது 'சர்ஜிகல் கோடாலி' கொண்டு, தொழிலாளியின் விரல்களில் ஒன்றை துண்டாக்கி விடுவான். பின்னர் தொழிலாளி, சுரங்கத் தொழில் விபத்துக்கான நீதிமன்றத்தினை அணுக, இரக்கமுள்ள நீதிபதியும் சும'ர் 500 பவுண்டுகள் வரை, விரலை இழந்த தொழிலாளியின் 'வலி மற்றும் வேதனை'களுக்காக ஈட்டுத் தொகையினை அளிக்க உத்தரவிடுவார்.

இந்த சர்ஜரி தொழிலினால் கெல்லிக்கு நல்ல உபரி வருமானம். ஈட்டுத் தொகையில் 20 சதவிகிதமல்லவா அவரது கமிஷன். அதிகம்தான் என்றாலும் வாங்கிய பணத்துக்கு நிகரான, திறமை அவரிடம் இருந்ததாம். ஆனாலும் ஒரு முறை ஒரு துரதிஷ்டமான தொழிலாளியின் இரண்டு விரல்களை ஒரே வீச்சில் துண்டித்து விட்டாராம். செய்வதையும் செய்துவிட்டு சாதரணமாக சொன்னாராம், 'இன்றைக்கு எனக்கு நாள் சரியில்லை. அதான் இப்ப்டி...'

அப்பாவின் நண்பர் டான்க் ப்ராம்லியின் கதைதான் இன்னும் சோகமானது. அவருக்கு கெல்லியிடம் நம்பிக்கையில்லை. ஏற்கனவே மற்றொரு விரலுக்காக கெல்லியிடம் அநியாய தண்டம் அழுததில் அவருக்கு கொஞ்சம் அவர் மீது கோபம் இருந்தது. எனவே தானாகவே ஒரு விரலை செதுக்கிக் கொண்டார். பின்னர் வழக்கம் போல 'கிரேமவுத் (Greymouth) மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்டஈட்டு வழக்கில் ஆஜராக வேண்டியிருந்தது. அதற்கிடையின் நீதிபதிக்கு டாப்ஸன் சுரங்கத்தினைப் (Dobson Mine) பற்றியும் அதன் வழக்கத்துக்கும் அதிகமான 'விரல் துண்டிப்பு' விபத்துக்களைப் பற்றியும் சந்தேகம் வந்து விட்டது. நீதிமன்றத்திலேயே, டாப்ஸன் சுரங்கத்திலிருந்து விரல்கள் துண்டிக்கப்பட்டு நஷ்ட ஈட்டுக்காக தாக்கல் செய்யப்படும் வழக்குகள், நியூஸிலாந்தின் இதர அனைத்து சுரங்கங்களை விட அதிகமாக இருப்பதாக' கூறி, அதனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் பணித்திருந்தார்.

டான்க் ப்ராம்லியின் வழக்கு விசாரணைக்கு வந்தது. தான் கோடாலியினைத் தாங்கியபடி ஏணியில் ஏறிக்கொண்டிருக்கையில் திடீரென வழுக்கி விழுந்து விட்டதாகவும் அவரது கையிலிருந்த கோடாலி நழுவி அவரது விரலின் மீது விழுந்து விரலை துண்டித்து விட்டதாக கூறினார்.

நீதிபதி இந்த முறை ப்ராம்லியின் விளக்கத்தை நம்ப தயாரில்லை. சுரங்க மருத்துவரின் அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி கூறிவிட்டார். அதில் விரல் துண்டிக்கப்பட்டதனைத் தவிர வேறு சிராய்ப்புக் காயங்கள் கூட எதுவும் கூறப்படவில்லை. அதனை வைத்து அந்த இரக்கமற்ற நீதிபதி, 'ஏணியில் ஏறுகையில் கீழே விழுந்ததாக சொல்லும் ப்ராம்லியின் கூற்றில் உண்மையில்லை' என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்து விட்டாராம்.

பாவம் ப்ராம்லிக்கு நீதிமன்றத்திலிருந்து எவ்வித பணமும் கிடைக்காமல் வரவேண்டியதாகி விட்டது. விரலும் போயிற்று. அந்த விரல் ஏற்கனவே போன விரலோடு சேர்த்து இரண்டாவது விரல்.

இதைச் சொல்லி விட்டு அப்பா, 'இரண்டு கைகளிலும் ஒவ்வொரு விரலை இழந்த டாப்ஸன் சுரங்கத் தொழிலாளர்களைப் பார்ப்பது ஒன்றும் அரிதான விஷயமில்லை' என்றார். நானும் அப்படிப் பார்த்திருக்கிறேன், அப்பாவின் நண்பர் ப்ராம்லி உருவத்தில்.

'மரத்தில் இருக்கும் பலாய்க்காய்க்கு (பண்க்காய்க்கு) கையில் இருக்கும் களாக்காயே (கைவிரல்களே) மேல்' என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது...
(நியூசிலாந்து நாட்டிலிருந்து நண்பரொருவர் எனக்கு சுவராசியமான மடல்களை எழுதுவார். சுரங்க தொழிலாளியான அவரது தந்தை தனது அனுபவங்களை ஒலிநாடாவில் பதிந்து வைத்திருக்கிறார். அவர் கூறிய விஷயங்களை வைத்து எனக்கு வந்த மடல்கள் சிலவற்றை மொழிபெயர்த்தேன். இம்மடல்களை நான் இங்கு பதிய காரணம், தற்பொழுது சோஷியல் செக்கியூரிட்டி என்ற பெயரில் உழைக்காமல் காலத்தை ஓட்டுபவனுக்கும் பணத்தத இறைக்க இயலும் வண்ணம் நியூசிலாந்து போன்ற நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப சொந்த நாடுகளை விட்டு தொலைதூர தேசத்தில் வந்து குடியேறிய மக்களின் உழைப்பினை நினைவு கூறுவதே! இந்த பதிவும் இதனை தொடரும் அடுத்த இரண்டு பதிவுகளும் எனது நண்பருக்கு சமர்ப்பணம்.)

3 comments:

Anonymous said...

Nice! Where you get this guestbook? I want the same script.. Awesome content. thankyou.
»

Anonymous said...

I'm impressed with your site, very nice graphics!
»

துளசி கோபால் said...

வணக்கம். நல்லா இருக்கீங்களா?

மன்னிக்கணும். ஏழு வருசம் கழிச்சு இந்த இடுகையைப் பார்த்தேன்!

அதுவும் தாடி மாமா இடுகையில் உங்க பின்னூட்டம் வந்து உக்கார்ந்துருக்கு. என் கண்ணில் படவே இல்லை!!

//! வணக்கம்,
நலம்தானே!
உங்களை மனதில் நினைத்து ஒரு பதிவு எனது பதிவில்...உங்களுக்கு அனுப்பிய தனிமடல் திரும்பிவிட்டது...அதனால் இங்கே. மன்னிக்கவும்
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_20.html
பிரபு ராஜதுரை//

அப்பெல்லாம் இந்த கமெண்ட் மாடரேஷன் வந்து தகவல் ஏன் சொல்லலை?

சர்ஜிகல் கத்தியில் கூர்மை அதிகம்!