9.5.06

ஷரியா?

ஷரியா மட்டும்தானா?
தமிழ் இணைய உலகில் தாராள எண்ணங்களுக்கு ஆதரவாக நிற்கும் மிகச் சிலரில் திரு.பத்ரி நாராயணன் முதன்மையானவர். எவ்வித தீவிரமான எண்ண நிலைப்பாட்டிற்கும், ஆதரவளிக்கிறாரோ இல்லையோ அவ்விதமான எண்ண வெளிப்பாட்டிற்கு தகுந்த மதிப்பளிக்கக்கூடியவராக இருக்கும் இவர் தனது சமீபத்திய வலைப்பதிவில் ‘பிரிட்டனில் ஷரியா - சரியா?’ என்ற தலைப்பில் கூறியிருக்கும் சில கருத்துகள் எனக்கு ஆச்சரியமளிப்பதாக இருந்தது.

மாறி வரும் உலக சூழ்நிலையில், பிரிட்டனில் வசிக்கும் கணிசமான இஸ்லாமிய மக்கள் ஷரியா சட்டத்தை தாங்கள் வசிக்கும் பகுதியில் வரவேற்க தயாராக இருப்பதாக வந்த நாளிதழ் செய்தியினைப் பற்றி எழுத முயன்றவர் தனது பதிவின் இறுதியில் “ஷரியா விதிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை. எந்த மதக்குழுவும் தனக்கென சிவில் சட்டங்களை எதிர்பார்ப்பதும் அதற்கென போராடுவதும் சரியாகத் தெரியவில்லை......................இந்தியாவிலும் இது போன்ற தனிச் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடுவதுதான் என் வியப்பிற்கு காரணம்.

‘காமன் சிவில் கோடு’ என்று நம்மில் பலரால் அறியப்பட்ட பொது உரிமையியல் சட்டம் பற்றிய விவாதமே வீண் வேலை என்பது எனது கருத்தாயினும், இங்கு நான் எழுத விழைந்தது, ‘பொது சிவில் சட்ட’ மாயையில் தாராள எண்ணம் கொண்டவர்களும் எளிதில் சறுக்குகிறார்கள், என்ற எனது எண்ணம் வலுப்பட்டதைத்தான். ஷரியா என்றாலே நம்மில் பலருக்கு மனதில் தோன்றுவது ‘கண்ணுக்கு கண்’ ‘பல்லுக்கு பல்’ என்ற மோசேயின் விதிதான். வேடிக்கை என்னவென்றால் இந்த விதியினை மோசே மூலமாக மனித குலத்துக்கு அளித்ததே ‘பிதா குமாரன் பரிசுத்த வி’ என்று டோனி பிளேர் தினமும் வணங்கும் திரித்துவத்தின் முதலாமவரான பிதாதான். வேடிக்கை இருக்கட்டும், ஒரு இந்தியனாக பிறந்து, வளர்ந்து, பயின்ற சூழலில் எனக்கு ‘கண்ணுக்கு கண்’ என்ற சட்டம் ஒரு மனித உரிமை மீறலாகத் தெரிகிறது. ஆனால், மரண தண்டனைக் கைதி சாகடிக்கப்படுவதை நாற்காலி போட்டு அமர்ந்து வேடிக்கை பார்க்க அனுமதிக்கும் அமெரிக்க சட்டங்களும் அதே அருவருப்பை ஏற்படுத்துகின்றன. கார்களில் ஸ்பிரே பெயிண்ட் வைத்து கிறுக்கிய சிறுவனுக்கு சவுக்கடி கொடுத்த சிங்கப்பூர் சட்டமும், ஒரு இந்தியனின் பார்வையில் சகிக்க முடியாததாக இருக்கிறது. ‘தண்டனை என்பது மன மாற்றத்திற்குத்தானேயொழிய பழி வாங்குவதற்கல்ல’ என்ற இந்திய சட்ட முறைகளை பயின்ற எனக்கு இந்த மூன்று சட்டங்களுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. ‘ஷரியா விதியினை எதிர்பார்ப்பதே அபத்தம்’ என்று பத்ரி அவர்களைப் போலவே நம்மில் பலரும் எளிதில் கூறிவிடுகிறோம். ஆனால் மற்ற அபத்தங்கள் நம்மில் பலருக்கு கண்ணில் படுவதில்லை. நமது இந்திய ஸ்மிருதிகளில் கூட பாலியல் குற்றங்களைப் பொறுத்தவரையில் எந்த உறுப்பினால் சம்பந்தப்பட்ட குற்றம் புரியப்பட்டதோ அதனை அறுக்க வேண்டும் என்று இருக்கிறது. இஸ்லாமியர்களைப் பற்றிய தவறுதலான பொதுப்படுத்துதலுக்கு ‘ஷரியா மட்டுமே அபத்தம்’ என்று எளிதில் தீர்ப்பெழுத நம்மால் முடிவதும் ஒரு உதாரணமாக குறிப்பிடலாம்.


ஷரியா நடைமுறைக்கு ஒவ்வாதவையா?
ஷரியா குற்றவியல் மட்டுமல்லாது உரிமையியல் சட்டங்களையும் உள்ளடக்கியது. இரு வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வசிக்கும் நாட்டில் ஷரியா குற்றவியல் முறையினை நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல. எனவே பிரிட்டனில் நடந்ததாக கூறப்படும் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட மக்கள் உரிமையியல் சட்டங்களைப் பற்றிதான் கருத்து கூறியிருக்கிறார்கள் என அனுமானிக்கிறேன்.

குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தவரை அரசு வழக்கு தொடுப்பவராகவும், நடத்துபவராகவும் இருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் பங்கு இந்திய, இங்கிலாந்து சட்டப்படி மிக மிக குறைவு. பெரிய குற்றங்களைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர் விரும்பினாலும், குற்றம் செய்தவரை விடுவிக்க இயலாது. எனெனில் குடிமக்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தினை அரசு நமக்கு அளித்து, அந்த உத்திரவாதம் காப்பாற்றப்பட தன்னால் இயன்றதை செய்ய குற்றவியல் சட்டம் மூலம் முயல்கிறது. தனிப்பட்டவரின் மதத்திற்கு இங்கு வேலையில்லை. மேலும் குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்டவரோ அல்லது அத்துமீறியவரோ வேறு மதத்தை சார்ந்தவராகவும் இருக்கலாம். எனவே அவர் மீது ஷரியாவை திணிக்க முடியாது. கவே, திரு.பத்ரி (அவர் இங்கு ஒரு உதாரணம்தான்) எழுதியதில் என்னை ஆச்சரியப்படுத்தியதாக நான் கூறுவது உரிமையில் சட்டங்களைப் பற்றிய அவரது கருத்துகள்தான்...

முதலில் ‘ஷரியா விதிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை’ என்று எதன் அடிப்படையில் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. இஸ்லாமிய திருமண, விவாகரத்து சட்டங்கள் முறையாக கைக்கொள்ளப்பட்டால் பிற திருமண சட்டங்களை விட முற்போக்கான கருத்துகளைக் கொண்டுள்ளதாக எண்ணுகிறேன். திருமண வைபவம் எளிதானது. நடைமுறைக்கு உகந்தது. முக்கியமாக வரதட்சணை என்பது நடைமுறையில் எப்படியோ, ஷரியாவில் இல்லை. திருமணம் என்பது ஒப்பந்தமே என்று அடித்துச் சொல்லி சிக்கலில்லாத விவாகரத்திற்கும் வழிகாட்டுகிறது.

இங்கு நமக்கு வரும் சந்தேகம், இஸ்லாமிய சட்டத்தில் ‘நாலு பெண்களை மணப்பதற்கு உள்ள அனுமதி’ மற்றும் ‘கணவனை நம்பியுள்ள விவாகரத்தான பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார பாதுகாப்பு’ பற்றியது. பொதுவாக இவ்விரண்டு முறைகளே இஸ்லாமிய சட்டத்தினை விரட்டி விரட்டி அடிப்பதற்கான அகில்லஸின் குதிகால்கள். இரண்டு பிரச்னைக்கும் உள்ள எளிய தீர்விற்கு, ‘இஸ்லாமிய மதசட்டமானது இரு தார மணத்தினை குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டத்தினையும், பெற்றோர், குழந்தைகள், மனைவிக்கு ஜீவனாம்சம் பெற்றுத் தரும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125வது பிரிவினையும் கட்டுப்படுத்தாது’ என்று கூறிவிட்டாலே போதுமானது. அதாவது ஷரியா சிவில் சட்டங்கள் மட்டும்தான் செல்லும். குற்றவியல் சட்டங்களைப் பொறுத்தவரை செல்லாது என்று கூறுவதே முறையானது.

அதாவது ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணம் செல்லும். ஆனால் திருமணம் புரிந்தவர் தண்டிக்கப்படலாம். இதே முறை இந்து சட்டத்திலும் உள்ளது. ஒருவர் இரண்டாவது திருமணம் புரிந்தால், குற்றவியல் வழக்கில் தண்டிக்கப்படுவார். ஆனால், இரண்டாவது திருமணம் செல்லாது என்றாலும் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்ச உரிமை உண்டு. அதே போல அத்தகைய திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சொத்துரிமையும் உண்டு. மேலும் ஒரு எளிய உதாரணம். இரு இந்து குழந்தைகளுக்கு மணம் செய்வித்தால் அது தண்டிக்கப்படக்கூடிய குற்றம். ஆனால் இந்து திருமண சட்டத்தின்படி அந்த திருமணம் செல்லும்.

இரு தார மணத்தினை குற்றமாக்கினால், இஸ்லாமியர்கள் ஒத்துக் கொள்வார்களா? ஒரு இஸ்லாமியர் ஒரு மனைவியை மட்டும் திருமணம் செய்வதினால் இறைவனுக்கு எதிராக பாவம் ஏதும் செய்கிறாரா என்ன? இறைவன் தடை செய்ததை செய்யுமாறு சட்டம் நிர்பந்தித்தால் அது தவறு. இறைவன் ‘வேண்டினால் செய்து கொள்’ என்று அனுமதித்ததை மற்றவர்களோடு இசைந்து வாழும் சூழல் கருதி செய்ய வேண்டாம் என்று சட்டம் கூறினால் தவறு ஏதும் இல்லை என்பதே என் கருத்து. இதனை இஸ்லாமியர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது எனது நம்பிக்கை. ஏனெனில் உங்களுக்கும் எனக்கும் தெரிந்த நடுத்தட்டு மக்களிடையே இரண்டாவது மணம் என்பது இல்லாத ஒன்று. கீழ்த்தட்டு மக்கள்தான் பிடிக்காத மனைவியை பழிவாங்கும் ஒரு கருவியாக இரண்டாவது மணம் புரிகின்றனர். இறை கடமையை நிறைவேற்றுவதற்காக யாரும் அவ்வாறு மணம் புரிவதாக தெரியவில்லை.

பம்பாய் உயர்நீதிமன்ற தீர்ப்பினால் ஜீவனாம்ச பிரச்னையும் புத்திசாலித்தனாமாக தீர்க்கப்பட்டுள்ளது (பார்க்க முந்தைய பதிவான ‘ஷாபானு’). அடுத்தது விவாகரத்து. விவாகரத்து விதிகளும் முறையாக கைக்கொண்டால் அவை முற்போக்கானதும், நடைமுறைக்கு உகந்ததுமானது. பெண்ணுக்கும் அத்தகைய விவாகரத்து உரிமை வேண்டுமென்றால் ஷரியாவில் கை வக்க வேண்டாம். முஸ்லீம் பெண்கள் விவாகரத்து சட்டத்தில் விவாகரத்துக்கான காரணங்களை எளிதாக்கிவிட்டால் ஆணும் பெண்ணும் விவாகரத்து பிரச்னையில் சம உரிமை படைத்தவர்களாகிவிடுவர். சிறிது சிறிதாக இந்து சட்டம் அதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கான சட்டமும் ஷரியா அனுமதிக்கும் அளவிற்கு எளிதான விவாகரத்தினை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது. சொத்துரிமையிலும் ஷரியாவில் பெண்கள் பெரிய அளவில் வஞ்சிக்கப்படவில்லை.

ஆக, ‘ஷரியா நடைமுறைக்கு ஒவ்வாதது’ என்று பத்ரி அவர்கள் கூறுவது ‘தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான்’ என்ற தவறுதலான பொதுப்படுத்துதலுக்கு இணையான ஒரு கருத்து என்பது எனது எண்ணம்.

மதச் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டியவையா?
ஷரியா நவீன காலத்துக்கு உகந்ததா இல்லையா என்பதல்ல உண்மையில் நான் எழுத விரும்பியது. மாறாக ஒரே நாட்டில் வாழும் மக்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் ஏன்? என்று எழும் கேள்வியினைப் பற்றியே சில கருத்துகளை கூற முனைகிறேன்.

திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, ஜீவனாம்சம் மற்றும் தத்தெடுத்தல் பற்றியே தனித்தனி மத சட்டங்கள் (Personal Laws) உள்ளன. பிற அனைத்து சிவில் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. உதாரணமாக ஒப்பந்தச் சட்டம் (Contract Act), சொத்துரிமை மாற்றுச் சட்டம் (Transfer of Property Act) என்பவை அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவை. அவற்றை பொது சிவில் சட்டம் எனலாம். சரி, திருமணத்திற்கு. அதற்கும் ‘சிறப்பு திருமண சட்டம்’ (Special Marriage Act) என்ற பொது சட்டம் உள்ளது. எந்த மதத்தினை சேர்ந்தவரும் இதன்படி எவ்வித சடங்கு சம்பிரதாயங்களுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளாமல் பதிவாளர் முன்பு திருமணம் செய்து கொள்ளலாம். விவாகரத்திற்கு இந்திய விவாகரத்து சட்டம் (Indian Divorce Act) சொத்துரிமைக்கு? அதற்கும் உள்ளது இந்திய வாரிசுரிமை சட்டம் (Indian Succession Act). நீங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டவரா? இனி உங்களது சொத்து விபரங்களை தீர்மானிக்கப் போவது இந்திய வாரிசுரிமைச் சட்டமே! விவாகரத்திற்கு அணுக வேண்டிய சட்டம் இந்திய விவாகரத்து சட்டம். மைனர்கள் பாதுகாப்பு மற்றும் தத்து எடுத்தல் சம்பந்தமாக ‘கார்டியன்ஸ் அண்ட் வார்ட்ஸ் க்ட்’ உள்ளது. ஆக இந்தியாவில் தற்பொழுதே பொது சிவில் சட்டம் நடைமுறையில் இருப்பதுதான். மதச் சட்டத்தினை ஒழித்து பொதுவான சட்ட முறைக்குள் வர விரும்புகிறீர்களா? திருமணத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். எனவே ‘தாங்கள் எந்த மதமுமாக இல்லையென்றாலும் நாடு உங்களை இந்து மதமாக எழுதிக் கொள்கிறது’ என்பது இல்லை. மதமின்றி இருப்பதற்கு யாருக்கும் முழு உரிமை உண்டு!

இந்து மத சட்டம் படி திருமணம் செய்து கொண்டால்...இந்து மத சட்டம்படியே விவாகரத்து, ஜீவனாம்சம், மைனர்கள் பாதுகாப்பு என்பதே முறையானது. ஆனால் உங்கள் சொத்துகள் இந்து மத சட்டப்படி பிரிக்கப்பட வேண்டாம் என்று நினைக்கிறீர்களா...யார் யாருக்கு சொத்து சென்று சேர வேண்டுமென்று உயில் எழுதி வைக்கலாம். உயில்களைப் பற்றிய விதிகளைக் கூறும் இந்திய வாரிசுரிமைச் சட்டத்திற்குள் வந்து விடுவீர்கள். எனவே பொது சிவில் சட்டத்தினை விரும்பினால் யாரும் இங்கு தேர்ந்தெடுக்கலாம்.

பின்னர் மத சட்டங்கள் ஏன்? எனது கேள்வி ஏன் இருக்க கூடாது என்பதுதான். இந்திய அரசியலமைப்பு சட்டம் (Constitution of India), உச்ச நீதிமன்றம், சட்ட அறிஞ்ர்கள் அனைவரும் பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று கோரினாலும், இதுவரை எனக்கு ஏன் என்பது புரியவில்லை. முன்பு இதற்கான விவாதம் தேசிய அளவில் நடந்த பொழுது எழுதப்பட்ட தலையங்களை படித்தால் ‘மதங்களால் பிரிவுபட்டிருக்கும் மக்களை ஒருங்கிணைக்க உதவும்’ என்பதுதான் காரணமாக கூறப்படுகிறது. தனித் தனி சட்டங்கள் இருப்பதுதான் மக்கள் வெவ்வேறு மத எண்ணங்களில் வாழ்கிறார்கள் என்பது என்னைப் பொறுத்தவரை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அடுத்து தேசிய ஒருமைப்பாட்டைப் பேண பொதுச் சிவில் சட்டம் உதவும் என்பதும் நகைப்பிற்குறியது. தேசம் ஒன்றுபட்டு இருக்கத் தேவையானவை மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஆட்சியாளர்களும், சுபிட்சத்தை நோக்கி மக்களை நடத்தும் வண்ணம் அரசு எடுக்கும் முடிவுகளும் செயல்படுத்தும் திட்டங்களே தவிர வெறும் சட்டங்களும் கோஷங்களும் அல்ல.

இந்துத்வா அமைப்புகளாவது தங்களது ‘ஒரே நாடு ஒரே காலாச்சாரம்’ என்ற நோக்கத்தினை அடையும் கருவியாக ஒரே சிவில் சட்டம் என்ற கோரிக்கையினை பார்க்கிறார்கள் என அறிகிறேன். தாராள எண்ணவாதிகளால் இந்துத்வா இயக்கங்களின் ஒரே கலாச்சார நோக்கத்தினை ஏற்றுக் கொள்ள இயலுமா? இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. இந்து சட்டத்திலேயே அனைத்து இந்துக்களுக்கும் பொருந்தக் கூடிய பொதுவான சட்டம் கிடையாது. உதாரணமாக முற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே வழக்கமான சடங்குகல் இல்லாமல் திருமணம் செய்தால் அது செல்லாது. னால், தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வித சடங்கும் இன்றி திருமணம் செய்து கொள்கின்றனர். விவாகரத்திலும் முதலாமவர் ஏகத்துக்கும் மெனக்கெட இரண்டாமவர் சுலபமாக ‘அறுத்து கட்டிக்கொள்கிறார்’கள். சொத்துரிமை சட்டத்திலும் இவ்வாறு பிரிவுகள் உள்ளன. பழங்குடி மக்கள் காலங்காலமாக பின்பற்றி வரும் அவர்களுக்கே உரித்தான பழக்க வழக்கத்தினை பொது சிவில் சட்டம் என்ற பெயரில் தூக்கி குப்பையில் போட முனையும் செயலுக்கும், அருவருப்பானவர்கள் என்று ஜிப்ஸிக்களை கொன்று குவித்த ஹிட்லரின் செயலுக்கும் அதிகம் வித்தியாசமில்ல¨.

பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் நிலை என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அங்குள்ள அரசுகள் திருமணம், சொத்துரிமை போன்றவற்றில் தனிச் சட்டங்களை தனது குடி மக்களுக்கு மறுத்தால், அதனை ஒரு மோசமான மனித உரிமை மீறலாகவே நான் கருதுவேன். பிரிட்டானியர்கள் இங்கு குடியேறிய பொழுது தங்களுக்கென்று தனி திருமண, சொத்துரிமை சட்டங்களை ஏற்படுத்தவில்லையா? இதுவரை அது தவறு என்று யாராவது சுட்டு விரலை நீட்டியிருப்போமா? ஆனால் இஸ்லாமியர்கள் பிரிட்டனில் ஷரியா சட்டத்தினை எதிர்பார்த்தாலே, ‘அதற்காக போராடுவது சரியல்ல’ என்று உடனடியாக நம்மால் கூற முடிகிறது.

இரு தனி நபர்கள் ஒப்பந்தம் செய்து கொள்கையில், ஒப்பந்த விதிகள் பொதுவான நியாயங்களுக்கு (Public Policy) விரோதமாக இல்லையெனில் மற்றவர்களுக்கு அங்கு தலையிட ஏதுமில்லை. அது அவர்களது தனிப்பட்ட பிறச்னை. மற்றவர்களை அது பாதிப்பதில்லை. அது போலவே மத சட்டங்களும், அந்தந்த மத குழுக்கள் தங்களுக்குள் இசைந்து ஏற்றுக் கொள்கையில் மற்றவர்களுக்கு ஏதும் பாதிப்பில்லை. ஒரு இஸ்லாமியர் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டால் பாதிக்கப்படும் நபர் ஒரு இஸ்லாமிய பெண்மணியே தவிர எந்த இந்துவுமல்ல...

மத சட்டங்கள் என்பவை பிற சட்டங்களைப் போன்றதல்ல. இந்துக்கள் கோவிலிலும், இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் தொழுவது அவரவர் மத விதிகள் பற்றியது. அவர்களது திருமணம், ஜீவனாம்சம் மற்றும் சொத்துரிமை போன்றவையும் அவரவர் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வசதிகள். அனைவரும் ஒரே கோவிலில் ஒரே முறையில்தான் தொழ வேண்டும் என்று கூறுவது இயலாதோ...அதே போல அனைவரும் ஒரே முறையில்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூற இயலாது.

எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பல மொழிகள் பேசும் மக்கள் கூட்டம் இங்கிருப்பதாகவும், பல மதங்களை அவர்கள் பின்பற்றுவதாகவும் வேற்றுமையில் ஒற்றுமையை பேணுவதாக நாம் பெருமைப்படவில்லையா? அதே போல அனைவருக்கும் அவரவர் தனிப்பட்ட உரிமையினை பாதுகாக்கும் வண்ணம் பல மத சட்டங்கள் இருப்பதை நாம் பெருமையாக கருதலாகாதா?

தனி மத சட்டங்கள் என்பவை, அவர்களது மத உரிமை, கடமைகளுக்கு அரசு ரீதியில் அளிக்கப்படும் அங்கீகாரம். இத்தகைய மத சட்டங்கள் இன்றி ஒருவர் தனது மதத்தினை பின்பற்றுதல் இயலாது. ஒரு கிறிஸ்தவர் தனது கோவிலில் முறையான பூசையின் நடத்தி பாதிரியார் முன்பாக திருமணம் செய்ய நினைக்கிறார் என்றால் அது அவரது மத கடமை. அதனை கைக்கொள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதற்கு தகுந்த உத்தரவாதம் தருகிறது. தனிச் சட்டங்களை ஒழிக்கிறோம் பேர்வழி என்ற பெயரில் அவ்வாறு திருமணம் செய்வது தடுக்கப்பட்டால் அந்தச் செயல் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள எந்த மதத்தினையும் பின்பற்றும் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். ஒரு பாஸிஸ்ட் அரசே அவ்வாறு நடந்து கொள்ள இயலும்.

தற்பொழுது நிலுவையிலுள்ள சட்ட முறைகளிலேயே அவ்வப்போது தேவையான மாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும்.
The beauty of life lies in its inequalities!

மதுரை
200306
இந்தக் கட்டுரைக்கான பதிலை திரு.பத்ரி நாராயணன் அவரது பதிவில் எழுதியிருக்கிறார்.

4 comments:

ROSAVASANTH said...

//இந்தக் கட்டுரைக்கான பதிலை திரு.பத்ரி நாராயணன் அவரது பதிவில் எழுதியிருக்கிறார்.//

எங்கே?

நன்றி!

PRABHU RAJADURAI said...

Here. Thanks

http://thoughtsintamil.blogspot.com/2006/03/blog-post_24.html

அட்றா சக்கை said...

திரு. பிரபு

தெளிவான அலசல். நடுநிலையான பார்வை. தற்போது தான் படிக்க முடிந்தது. நன்றிகள் பல

PRABHU RAJADURAI said...

இந்த இடுகையுடன் தொடர்பான இரு சுட்டிகள்
http://www.hindu.com/2003/09/06/stories/2003090600831000.htm

http://thoughtsintamil.blogspot.com/articles/thinnai_courts_18sep2003.html