7.5.06

ஷாபானு?



நான் சிறு பையனாக இருந்தபோது ‘வாட்டர் கேட் ஊழல்’ என்ற வார்த்தைகளை அடிக்கடி மற்றவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். இந்த ஊழலில் சிக்குண்ட அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் ராஜினாமா செய்து, அவருக்குப் பின்னர் பதவியேற்ற ஜெரால்ட் ஃபோர்ட் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நிக்சனுக்கு மன்னிப்பு அளித்தார். தன் முன் மண்டியிட்ட நிக்சனுக்கு ஃபோர்ட் (பாவ)மன்னிப்பு வழங்குவது போல அப்போது வந்த (தினத்தந்தி?) கருத்துப்படம் எனக்கு நினைவிருக்கிறது. இந்த மன்னிப்பு(அம்னெஸ்டி) சில கண்டனங்களுக்குள்ளானது. ஃபோர்ட் தனது சுய சரிதையில் ‘அமெரிக்க மக்கள் தங்களது முன்னாள் ஜனாதிபதியை சிறைக்கம்பிகளுக்கு பின்னர் பார்க்க சகிக்க மாட்டார்கள்’ என்று தனது செயலுக்கு காரணம் கூறியிருந்தார். பல வருடங்கள் கழித்து ‘அது என்ன வாட்டர் கேட் ஊழல்?’ என்பதை நான் தெரிந்து கொண்ட போது ‘சப்’பென்று கிவிட்டது. ‘இவ்வளவுதானா? நம்ம வீராணம், சுடுகாட்டு ஊழலுக்கு முன்னர் இது எம்மாத்திரம்?’ என்று இருந்தது. ஸ்காண்டல் என்ற ஆங்கில வார்த்தையை ஊழல் என்று மொழிபெயர்த்ததால் வந்த வினை!

இந்த வாட்டர்கேட் தந்த அனுபவம், நமது நாட்டில் ‘ஷாபானு வழக்கு’ என்ற பதமும் மக்களிடையே பல தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தியிருக்குமோ என்ற கவலை எனக்கிருக்கிறது. எனெனில் இந்தியாவில் மதவாதத்தை ஏற்படுத்திய முக்கிய காரணியாக இவ்வழக்கு குற்றஞ்சாட்டப்படுகிறது. அதாவது இந்து மதவாதம் நமது நாட்டில் தழைத்தோங்க, இவ்வழக்குதான் காரணம் என்ற வகையில், ‘சிறுபான்மை இனத்தவர் ஏதோ மிகப்பெரிய சலுகையை அரசை மிரட்டிப் பெற்றுவிட்டதாக’ பலர் கருதும் வகையிலேயே இது இன்றளவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தியாவின் அரசியல் சரித்திரத்தையே ஒரளவு, உண்மையிலேயே புரட்டிப் போட்ட இவ்வழக்கின் அடிப்படை வெறும் 179 ரூபாய் என்பது வேதனைக்குறிய ஒரு தகவல்.

ஒரு இஸ்லாமிய ஆணுக்கு தனது பிள்ளைகள், அம்மா, தாத்தா பாட்டி ஏன் உறவினர்களைக் கூட காப்பாற்றும் கடமை இருக்கிறது. அதே போல மனைவியையும் காப்பாற்றும் கடமையும் இருக்கிறது. ஆனால், விவாகரத்துக்கு பின்னர் ‘இதத்’ என்னும் காலம் முடியும் மட்டும்தான் காப்பாற்றும் மதரீதியிலான கடமை இருக்கிறது. இதத் என்பது விவாகரத்து முடிந்து மூன்று மாத காலங்கள். அதாவது, விவாகரத்துக்கு முன்னர் அப்பெண் கருத்தரித்து...பின்னர் தகப்பன் யார் என்ற கேள்வி எழுந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக இந்த ‘இதத்’ காலம். இக்காலத்துக்குள் அப்பெண் மறுவிவாகம் செய்ய இயலாது.

இஸ்லாமிய மதக் கோட்பாடுகள்படி திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒப்பந்தமே தவிர என்றும் அறுத்துப் போடவியலாத ஒரு ‘புனிதமான சடங்கு’ இல்லை. எனவே, விவாகரத்துக்குப் பின்னரும் ‘ஒரு ஆணிடமிருந்து ஒரு பெண் பணம் பெறுவது நற்செயலல்ல’ என்ற என்ற கோட்பாட்டில் விளைந்ததுதான் இந்த ஜீவனாம்ச பிரச்னை.

இவ்வாறாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் தத்தம் மதச்சட்டங்களில் மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற வழி இருக்கிறது. இத்தகைய ஜீவனாம்சத்தில் அதிகபட்ச தொகை என்பது எதுவும் இல்லை. திருமணக்காலத்தில் மனைவி வாழ்ந்த வசதியைப் பொருத்தும், கணவனின் வருமானத்தைப் பொருத்தும் அது மாறுபடும்.

இந்த மதச்சட்டங்களோடு சம்பந்தப்படாத வேறொரு சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம். 1898ம் ண்டு முதலே நடைமுறையிலிருக்கும் இந்தச் சட்டம் குற்றவியல் வழக்குகள் எவ்விதம் நடத்தப்படவேண்டும் என வரையறுக்கும் ஒரு சட்டம். விநோதமாக இந்தச் சட்டத்தில், ஒரு பிரிவு ஒரு ஆணின் மனைவி, மைனர் பிள்ளைகள், பெற்றோர் அந்த ஆணால் காப்பாற்றப்பட வேண்டுமெனவும், இல்லை அவர்கள் அந்த ஆண் மீது வழக்கு தொடர்ந்து ஜீவனாம்சம் கேட்க முடியும் என்கிறது. ஒருவரை காப்பாற்றமால் நடுத்தெருவில் விடுவது ‘அடிப்பது, உதைப்பது’ போன்ற உடல்ரீதியிலான வன்முறை என்ற வகையிலேயே இப்படி ஒரு பிரிவு இங்கு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு மனைவி என்பது விவாகரத்து அடைந்த மனைவியையும் உள்ளடக்கும். எனவே ஒரு பெண் தனது கணவன் மீது மதச்சட்டத்தின் படி சிவில் வழக்கும், இச்சட்டத்தின்படி கிரிமினல் வழக்கும் ஜீவனாம்சத்திற்காக தொடரலாம். ஆனால், சிவில் வழக்கில் ஜீவனாம்சம் வழங்கப்பட்ட பின்னர், கிரிமினல் வழக்கில் தரப்பட்ட ஆணை செல்லாது. சிவில் வழக்கில் ஆணைக்கு கீழ்ப்படியாவிட்டால் கணவனது சொத்துக்கள் ஏலத்துக்கு வரும்...எனவே அது குரைக்கும் நாய். கிரிமினல் வழக்கிலோ சிறைத்தண்டனை. மேலும் வழக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாள் முழுவதும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். எனவே அதிக பட்சம் ஐநூறு ரூபாய் என்றாலும் அது கடிக்கும் நாய் (தற்பொழுது ஏதும் அதிக பட்ச தொகை இல்லை).

எனினும் கிரிமினல் வழக்கு சமூகத்தில் மிகவும் ஏழைகளாக, வசதி வாய்ப்புகள் உள்ளவர்களே பயன்படுத்துவர். நடுத்தர வர்க்கத்தினர் கூட அந்தப்பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. அப்படி ஒரு ஏழைதான் இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்ட ஷாபானு. திருமணம் முடிந்து 43 ண்டுகள் வாழ்க்கைக்கு பின்னர் அவரது கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார். முதலில் மாதாமாதம் கணவர் ஷாபானுவுக்கு ரூ.200 கொடுத்து வந்தார். ஆனால் மாதம் ரூ.500 கேட்டு ஷாபானு கிரிமினல் நீதிமன்றத்தில் கணவர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கிலிருந்து தப்பிக்க வழி என்ன என்று யோசித்த கணவர், ஷாபானுவை விவாகரத்து செய்துவிட்டு (இஸ்லாமிய மதத்தவர்கள் நீதிமன்றத்தை நாடாமலேயே ‘தலாக்’ என்ற முறைப்படி விவாகரத்து செய்ய இயலும்) ‘மெகர்’ என்று அழைக்கப்படும் தொகையினை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு, ‘ஷாபானு தன்னுடைய மனைவி இல்லையென்பதால் ஜீவனாம்சம் தனது மதச்சட்டத்தின்படி வழங்க வேண்டியதில்லை’ என்று வாதிட்டார். ஆனால் நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அது ஒன்றும் புதிய வழக்கல்ல. ஏற்கனவே பல இஸ்லாமிய பெண்கள் இப்படி கிரிமினல் வழக்கு தாக்கல் செய்து ஜீவனாம்சம் பெற்றுள்ளனர். ஷாபானுவுக்கு கிடைத்த ஜீவனாம்சம் மாதம் ரூ.25!!!

ஷாபானு இந்த ஜீவனாம்ச தொகையை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். தொகை ரூ.179க உயர்த்தப்பட்டது. கணவர், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குப் போக விதி விளையாடியது. ‘கிரிமினல் ஷரத்துப் படி மனைவியென்பவள் எப்போதும் மனைவிதான். மதச்சட்டம் இதில் தலையிட முடியாது’ என்று கூறி கணவரின் அப்பீலை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் வழக்கம் போலவே சில அறிவுரைகளை வழங்கி, செய்தித்தாள்களில் இவ்வுத்தரவு செய்தியானது. இந்தியா பற்றிக் கொண்டது!!

பல வழக்குகளில் இஸ்லாமியப் பெண்கள் ஜீவனாம்சம் பெற்றதெல்லாம் மறந்து போய், அனைவருமே மத வல்லுஞர்களாகவும், சட்ட வல்லுஞர்களாகவும் மாறி தீயை வளர்த்தனர். போராட்டம். சில நகரங்களில் கலவரம் வெடித்தது. விஷயம் பாராளுமன்றத்தையே உலுக்கி, இறுதியில் அன்றைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி பணிந்து பாராளுமன்றம், ‘இஸ்லாமியப் பெண்கள் (விவாகரத்தின் போது பாதுகாப்பு) சட்டம்’1986 என்ற சட்டம் நிறைவேற்றியது. காங்கிரஸின் அசுரத்தனமான மெஜாரிட்டி இதற்கு பயன்பட்டது. யாருக்கும் எவ்வித பலனும், முக்கியாக இஸ்லாமியர்களுக்கு இல்லாத இந்த சட்டம் இந்துத்வா சக்திகளை உசுப்பிவிட்டது. சிறுபான்மையினர் தாங்கள் விரும்பியதை கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயம் பரப்பப்பட்டு இந்தியாவின் அரசியல் சதுரங்கம் வேகமான பல திருப்பங்களை பின்னர் சந்தித்தது. வேடிக்கை என்னவென்றால் இந்துத்வா சக்திகளை உசுப்பி விட்ட இந்தச் சட்டம் இஸ்லாமிய பெண்களின் உரிமையைப் பறிப்பதாக இன்றளவும் பேசப்படுகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து ராஜீவ் அமைச்சரவையில் இருந்த ஒரு இஸ்லாமிய அமைச்சர் பதவி விலகினார். ஆக, இஸ்லாமியர்களின் உரிமையை பறித்ததாக கருதப்படும் ஒரு சட்டம்...இந்துத்வா சக்திகளை வீறு கொண்டு எழ வைத்தது நமது இந்திய அரசியலில் மட்டுமே நிகழ்ந்த ஒரு ஆச்சர்யம்!

அரசு என்பவர் ஒரு பெரிய சவுக்கை வைத்திருக்கிறார். சிறுபான்மை அதனிடம் சென்று, ‘என்னை அடி. வலிதான் எனக்கு சுகம்’ என்கிறது. பொறுக்க முடியாத அரசு சவுக்கை சொடுக்குகிறது. பெரும்பான்மை, ‘இது என்ன அவன் கேட்டதையெல்லாம் செய்கிறாய். நான் என்ன மாற்றாந்தாய் பிள்ளையா?’ என்கிறது. அரசு உடனே, ‘அப்படியா, நீ எங்கோ பூசை செய்ய வேண்டுமென்று ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டிருந்தாயே. போ! போய் செய்து கொள்’ என்றது. நாடு ரத்தக் களறியானது.

ஆனாலும் அரசின் சவுக்கின் ‘சுளீர்’ சிறுபான்மைக்கு தற்போது உறைக்காமல், உறை போட்டு தடுத்தது சில புத்திசாலி நீதிபதிகள். அதைப் பார்ப்போம். இந்த புதிய சட்டத்தின் படி இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்துக்குப் பின்னர், கணவரும் சம்மதித்தாலே கிரிமினல் வழக்கு தொடர முடியும். இல்லை அவர்கள் தங்களது பெற்றோர்களை அணுக வேண்டும். அடுத்து உறவினர்களை அணுகலாம். கடைசியில் வக்ஃப் வாரியத்தை அணுகலாம்.

தற்போது கணவனால் கைவிடப்படும் இஸ்லாமிய பெண்கள் கிரிமினல் நீதிமன்றத்தை அணுகினாலே, கணவன்மார்கள் செய்யும் காரியம் ‘அவர்களை தலாக் செய்து விடுவது. ஏனெனில் விவாகரத்துக்குப் பிறகு அவர்கள் ஜீவனாம்சம் கேட்க முடியாது. ஆனாலும் இதற்கு வைத்தது பெரிய ஆப்பு, மும்பை உயர்நீதிமன்றம். முதலில் வந்த தீர்ப்பு தலாக் பற்றியது. அதாவது காரணமின்றி தலாக் செய்ய முடியாது என்பது. பின்னர் இதைப் பார்ப்போம். முக்கியமான தீர்ப்பு ‘இதத்’ காலத்தில் கொடுக்க வேண்டிய ஜீவனாம்சம்.

இரு வருடங்களுக்கு முன்னர் மூன்று நீதிபதிகள் அடங்கிய மும்பை உயர் நீதிமன்ற புல் பெஞ்சு, இஸ்லாமிய பெண் பாதுகாப்பு சட்டம்’1986ன் கீழ் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. புத்திசாலி நீதிபதிகள் கூறியதாவது, ‘சரிதான். இதத் காலம் முடியும் வரைதான் கணவன் மனைவிக்கு பணம் கொடுக்க முடியும். ஆனால் அப்படி கொடுக்கப்பட வேண்டிய அந்தப் பணம் அவளது வாழ்நாள் முழுவதும் அவளை போஷிக்கும் வண்ணம் போதிய அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்தப் பணம் அந்தப் பெண் திருமண காலத்தில் எவ்வித வசதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தாளோ அதனைப் பேணும் வண்ணம் இருக்க வேண்டும்’. இந்தத் தீர்ப்பின் படி ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய வேண்டுமெனில் கணவனுக்கு இதத் கால ஜீவனாம்சம் வழங்குவதற்கு முன்னர் விழி பிதுங்கி விடும். எனவே கருணை கொண்டு நீதிபதிகள் மேலும் கூறுகின்றனர், ‘சரி, மொத்தமாக கொடுக்க கஷ்டமாக இருக்கிறதா? இன்ஸ்டால்மெண்டில் கொடு’. இந்த வழக்கத்தை எங்கோ கேள்விப்பட்டது போல இருக்கிறதா? ஆமாம், பழைய மாதா மாதம் ஜீவனாம்சம்தான். ஒரு வழியாக முகத்தைச் சுற்றி மூக்கை தொட்டுவிட்டனர் மும்பை நீதிபதிகள். அதுவும் எப்படி? முன்பாவது அதிகம் ரூ.500/- தற்போது அப்பெண் திருமண வாழ்க்கையில் அனுபவித்த வசதிக்கு ஏற்ப...(Karim Abdul Rehman Shaikh v. Shehnaz Karim Shaikh and others (2000 (3) Mh.L.J. 555)

எனவே இஸ்லாமியப் பெண்களின் ஜீவனாம்ச உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளது. தற்போது மற்ற மதத்தினருக்கும் அவர்களுக்கும் ஜீவனாம்ச உரிமையில் வேறுபாடு இல்லை. பெரிதாக ஏதும் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒன்றுக்கும் உதவாத ஒரு சட்டத்தால், நாடு கடந்த பத்து வருடங்களில் சந்தித்த பிரச்னைகள் எத்தனை, எத்தனை?

மும்பை
11.08.2003

2 comments:

Anonymous said...

The minorities create a hue and cry.That was unnecessary.It helped only hindutva forces.To amend the law to nullify the verdict of SC is an act of appeasement.Uniform Civil Code is the solution to such issues.

PRABHU RAJADURAI said...

"பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்களின் பின்புலமாக ஷா பானு வழக்கு எப்பொழுதும் இருந்துவருகிறது. உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒரு முறை பொது ஷசிவில் சட்டம் குறித்த விவாதத்தைத் தொடங்கிவைத்துள்ள இச்சூழலில் முனைவர் தாஹிர் முகமது "மில்லி கெசட்" என்ற இந்திய இஸ்லாமியர்களால் நடத்தப்படும் மாதமிருமுறை இதழில் எழுதியிருந்த கட்டுரை இப்பிரச்சினை குறித்த சரியான தகவல்களையும் பார்வையையும் முன்வைத்துள்ளது இக்கட்டுரையின் மொழியாக்கம் இங்கே தரப்பட்டுள்ளது"
http://tamil.sify.com/kalachuvadu/fullstory.php?id=13298838