29.7.06

ராமாயணத்தில் அரசியல்!

நிறுவன நிர்வாகம் சம்பந்தமான கூட்டங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றவர்களுக்கு ஒரு அனுபவம் நேர்ந்திருக்கும். நிறுவன தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் நிர்வாகம் சம்பந்தமாக மற்ற அலுவலர்களின் கருத்துக்களுக்கு தாம் மதிப்பளிப்பதாகவும் அவற்றை வரவேற்பதாகவும் கூறியிருந்தாலும், நிர்வாக கூட்டங்களில் ஒரு பிரச்னையை பற்றி விவாதிக்கையில் முதலில் வெளிவருவது அவரது கருத்தாகத்தான் இருக்கும். பல தலைகள் அவர் சொல்லி வருகையிலேயே, 'எஸ்..எஸ்' என்று மோதித்த வண்ணம் இருக்கும். சில சமயம் தலைவரது உரை முடிந்த பின்னர் ஒன்றிரண்டு அப்பாவி முந்திரி கொட்டைகள் ஏதாவது சொல்லி வைக்க, அவர்கள் பக்கம் இருந்தே சில 'உச்..உச்'கள் எழும். 'பாவி, சீக்கிரம் கூட்டம் முடிந்து வெப்பம் மிகுந்த இந்த அறையை விட்டு போக விட மாட்டான் போல இருக்கிறதே' என்ற ரகசிய அங்கலாய்ப்புகள்.

நிறுவன தலைவரோ அவரது மனநிலைக்கு ஏற்ப கோப பார்வையிலிருந்து... அனுதாப பார்வை வரை ஏதாவது பார்வையில் முந்திரிக் கொட்டைகளைப் பார்ப்பாரே தவிரமோதிக்கும் பார்வை நான் கேள்விப்பட்டது வரையிலும், தெரிந்த வரையிலும் இருக்காது. மிக நல்ல மனநிலையில் இருப்பவர் தன் கருத்துக்கு மாறுபட்ட கருத்தினை கடைசி வரையில் கேட்டாலும்...இறுதி முடிவு அவர் முதலில் எடுத்த நிலைதான் பெரும்பாலாக இருக்கும்.

பல சமயங்களில் மாறுபட்ட கருத்தினை சொல்பவரைப் பார்த்து 'ஏன் இப்படி?' என்று அவரை மடக்கிப் போடும் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதை வைத்தே அவர் குடைந்தெடுக்கப்படுவார். ஆனால், எந்த ஒரு கூட்டத்திலும் 'ஆமாம் சாமி'களைப் பார்த்து 'ஏன் இந்த ஆமாம்?' என்று எந்த ஒரு நிர்வாகத் தலைவரும் கேட்கும் பக்குவத்தை எதிர்பார்க்க முடியாது. அப்படி ஒரு தலைவர் கேட்டால் அந்த ஆமாம் சாமி'யின் நிலை தர்ம சங்கடம்தான். அப்படி ஒரு சங்கடத்தினை சமீபத்தில் படித்து வியந்து போனேன்.

பௌதீகத்தில் எப்படி நியூட்டனின் முதல் விதி இரண்டாவதி விதி முக்கியமோ அதே அளவுக்கு முக்கியாமான சில கொள்கைகள் நவீன நீதிப்பரிபாலனத்திலும் அரசு சார்ந்த நிர்வாகத்திலும் உண்டு. 'எந்த ஒரு விசாரணையிலும் இரு தரப்பையும் விசாரித்த பின்னரே நீதி வழங்கப்பட வேண்டும்' என்பது முதல் விதி. இரண்டாவது விதி 'எந்த ஒரு தீர்ப்புக்கும் அது வழங்கப்பட்ட காரணம் விளக்கப்பட வேண்டும்' என்பது. நீதி வழங்குபவர் ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவே இருக்கலாம். ஆனால் அவர் தனது தீர்ப்புக்கான காரணத்தை விளக்க வேண்டும். நீதி மன்றங்கள் மட்டுமல்லாமல் அலுவலக மற்றும் எந்த விதமான நிர்வாக விசாரணை மற்றும் உத்தரவுகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

முதல் விதி பின்பற்றப்பட்டிருந்தால் பாண்டியன் நெடுஞ்செழியனால் கோவலனை தண்டித்திருக்க முடியாது. இரண்டாவது விதி பின்பற்றப்பட்டிருந்தால் ரோம ஆளுஞர் பிலாத்துவால் இயேசு கிறிஸ்துவை தண்டித்திருக்க முடியாது. அவர்கள் மீது குற்றம் சொல்ல முடியாது. ஏனேனில் இத்தகைய சிறந்த கருத்துக்கள் நவீன யுகத்தின் கண்டுபிடிப்புகள். ஆங்கிலேயர் நம்க்கு அளித்த கொடைகள்...இல்லை அப்படி நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

வால்மீகி ராமாயணத்தில் ஒரு காட்சி!

ஸ்ரீராமருக்கும் சீதாபிராட்டிக்கும் திருமணம் முடிந்து அயோத்தியில் வசித்து வருகையில், தசரதர் தனது மூத்த மகனாகிய ஸ்ரீராமரை யுவராஜாவாக முடிசூட்ட எண்ணம் கொண்டு ராஜசபையை கூட்டுகிறார்.

'எனது முன்னோர்களைப் போலவே நானும் இந்த நாட்டினை ஒரு தாய் தனது குழந்தையை பேணுவது போல அரசாண்டிருக்கிறேன். இப்போதோ நான் வயோதிகன். எனவே எனது மூத்த மகனை யுவராஜாவாக நியமித்து அவரிடம் ராஜ்ய பரிபாலனப் பொறுப்பை அளிக்க விருப்பம் கொண்டுள்ளேன்' என்று சபையிடம் கூறிய தசரதர், அதோடு நிறுத்தாமல் ஸ்ரீராமருடைய குணநலன்களையும் நிர்வாகத் திறமையையும் அந்தச் சபைக்கு விரிவாக எடுத்துரைத்து, இறுதியில் 'மேன்மைதாங்கிய இந்த ராஜசபை எனது விருப்பத்தை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டுகிறேன்' என்று முடிக்கிறார்.

எதிர்பார்த்தபடியே 'அப்படியே ஆகக்கடவது' என்ற மகிழ்ச்சி நிரம்பிய ஒன்றிணைந்த குரல்கள் ராஜசபையிலிருந்து எழுகிறது.

தசரதர் விடவில்லை, 'நீங்கள் என் கருத்தோடு ஒத்துப்போவது சரிதான். ஆனால் அதற்க்கான காரணத்தை யாரும் சொல்லவில்லை. அது நல்லதல்ல. எனவே அறிவார்ந்த இந்த சபை உறுப்பினர்கள் எதற்காக தாங்கள் என் விருப்பத்தை அங்கீகரிக்கிறீர்கள் என்பதனை கூறவேண்டும்' என்கிறார்.

சபை உறுப்பினர்கள் அதன்பின்னர் அசடு வழிந்தபடியே ஸ்ரீராமரின் தகுதிகளையும் திறமையையும் விவரிக்கையில் தசரதரின் மனம் மகிழ்கிறது.

ராமாயணம் முழுவதுமே ஸ்ரீராமரின் அரும்பெரிய குணநலன்களை விளக்கும் காட்சிகளும் உரையாடல்களும் நிறைந்திருப்பதால், இந்த ஒரு காட்சியின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படவில்லை என்று தோன்றுகிறது. இந்த ஒரு நிகழ்ச்சியிலேயே தசரதர் ஒரு பெரிய மரியாதைக்குரியவராகிறார்.

அவர் அயோத்தி நாட்டின் மாமன்னர். கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் குதிக்கக் கூடிய நான்கு இளவரசர்கள். முதலில் தசரதர் ராஜசபையின் அனுமதியினை கோரவே வேண்டியதில்லை. மரபு மீறி எதுவும் அவர் செய்ய முயலவில்லை. ஸ்ரீராமர் பட்டத்து இளவரசர். மன்னராக முடிசூடுவது அவரது உரிமை. ஆனாலும் தசரதர் ராஜசபையை கூட்டி தனது விருப்பத்தைக் கூறுவதோடு நிற்காமல் அதற்கான காரணத்தையும் மன்னராக முடிசூடுவதற்கு ஸ்ரீராமருக்கு உள்ள தகுதிகளையும் எடுத்துரைக்கிறார். இதனை கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், 'ஆமாம் சாமி' போட்ட சாமிகளிடம் 'ஏன் இந்த ஆமாம்?' என்று விளக்கச் சொல்கிறாரே அதுதான் அவரது புத்திசாலித்தனத்தின் உச்ச நிலை. வியக்க வைக்கிறார் தசரதர் தனது பெருந்தன்மை மற்றும் ராஜதந்திரத்தால்...

நவீன நிர்வாகத் தலைவர்கள் ராமாயணத்தில் கற்க வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது!

ராமாயணம் உண்மையில் நடைபெற்றதா? அதுவும் பல லட்சம் வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க முடியுமா? என்ற சந்தேகங்கள் இருந்தாலும், வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டது குறைந்தது சுமார் 2400 வருடங்களுக்கு முன்னர் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மை. இதே கால கட்டத்தில் கிரேக்கத்தில் தோன்றிய ஜனநாயக்கொள்கைகளுக்கு சற்றும் குறைவில்லாத உயரிய ராஜ்ய பரிபாலன முறை இந்திய துணைக்கண்டத்தில் சிந்திக்கப்பட்டு இருந்தது நமக்கு பெருமையளிக்கும் ஒரு விஷயம்.


மும்பை
20.12.02

2 comments:

ஜயராமன் said...

மிக அருமையான பதிவு.

வழங்கிய தங்களுக்கு நன்றி.

இராமாயணத்தில் மேனேஜ்மெண்ட் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அனுமனிடமிருந்து பேச்சு வன்மையும் ப்ராஜக்ட் மேனே
ஜ்மெண்ட்யையும் கற்றுக்கொள்ளலாம் என்றும் படித்திருக்கிறேன். இம்மாதிரி விஷயங்களை மேலும் விவரித்தால் என்னைப்போன்றவர்கள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். மேலும் தொடருங்கள்.

தங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள். நன்றி

ബൂപതി said...

இதைத்தான் கருணாநிதியும் செய்திருக்கிறார் வேறு விதமாக. தயாநிதியை உயர்த்தினார். 2004 இல் கட்சியில் சேர்ந்த அழகிரியை உயர்த்தினார். கனிமொழிக்கு உடனடி எம்.பி பதவி.நடுநிலையாளர்களுக்கே அய்யோ பாவம் ஸ்டாலின் எவ்வளவு நாளாகக் காத்திருக்கிறார் என்று தோன்றவைத்தார். அவர் வேறு சக்கர நாற்காலியில் வந்த்தார். கட்சிக்காரர்கள் இன்னும் ஏன் ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என்று நினைக்க வைத்தார். போனால் போகிறது என்று தான் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தது போல் காட்டிக் கொண்டார். அவர் நினைத்திருந்தால் என்றைக்கோ ஸ்டாலினிக்கு மிகப் பெரிய உயரத்தைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் ஸ்டாலினின் உயர்வு படிபடியானது என்ற தோற்றத்தை உருவாக்கியது தான் அவரது தந்திரம்.