27.7.06

மெளனத்தின் அலறல்...

'யுதனேஸியா' (euthanesia) என்ற ஆங்கில வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நற்கொலை என்று தமிழ்ப்படுத்தலாம். அதாவது தீராத வியாதிப்பட்டு கடுமையான உடல் வேதனைகளை நித்தம் நித்தம் அனுபவித்து வருபவர்களுக்கு நிரந்தரத்தீர்வாக மரணத்தை ஏற்படுத்தும் செயல். தற்போது உலகம் முழுவதும் மெல்ல மெல்ல அங்கீகரிக்கப்பட்டு வரும் இந்த தீர்வு சரியா? தவறா? என்று பல வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. நீங்களும் இந்த வாதத்தில் ஒரு கருத்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தால் 'அருணா ஷன்பாக்'கை பற்றித் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

'சடக் சாந்தினி'. அருணாவை பார்க்கும் போதெல்லாம் தனக்கு இந்த வார்த்தைகளே ஞாபகத்துக்கு வந்ததாக மும்பை கேஇஎம் மருத்துவமனையில் (King Edward VII Memorial Hospital) அவருடன் பணியாற்றிய மூத்த செவிலி துர்கா மேத்தா குறிப்பிடுகிறார். 'சடக் சாந்தினி' என்பது குஜராத்தி பிரயோகம். 'தனது கிரகணங்களால் மின் அதிர்ச்சியை தரவல்ல சிறிய நிலா என்பதுதான்' அதன் அர்த்தம். உண்மையிலியே அருணாவுக்கு அந்த பிரயோகம் மிகப் பொருத்தம்.

இந்தியாவின் மேற்கு கடற்கரை கொங்கன் பிரதேசத்தைச் சார்ந்தவர் அருணா ஷன்பாக். கொடுமையான அந்த சம்பவம் நிகழ்ந்த போது 25 வயது நிரம்பிய அழகிய பெண். அவர் பணியாற்றிய மும்பை மாநகராட்சியால் நடத்தப்பட்ட கேஇஎம் மருத்துவமனையில் அருணா மிகப் பிரபலம். அவரது பிரபலத்துக்கு அவரது அழகு மற்றும் திறமை மட்டுமன்றி விதிகளை கடைபிடிப்பதில் அவர் காட்டிய உறுதியும் எதையும் துணிச்சலாக எதிர் கொள்ளும் சுபாவமுமே காரணமாக இருந்தது. படபடப்பாக அவர் பேசும் வார்த்தைகள் சிலறால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டாலும் அதே மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய சுந்தீப் சர்தேசாயை கவர்ந்ததில் அதிக ஆச்சர்யம் இல்லை. அருணா-சுந்தீப் காதல் அந்த மருத்துவமனை முழுவதும் அறியப்பட்டு, திருமணத்திற்கான நாளைத் இருவரும் தேடிக் கொண்டு இருந்தார்கள். 'அருணாவுக்கு என்ன கவலை? அதிஷ்டசாலி அவள்' என்றுதான் அவளுடன் பணியாற்றிய அனைத்து செவிலிகளும் நினைத்துக் கொண்டிருந்தனர்.


அருணா பணியாற்றி வந்தது 'நாய்கள் அறுவை மற்றும் ஆராய்ச்சிப் பிரிவி'ல். சில நாட்களாக அடிக்கடி நாய்களுக்கான இறைச்சி காணாமல் போய் வந்தது. அருணாவின் சந்தேகம் அந்தப் பிரிவில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிய சோகன்லால் பாரத வால்மீகி மீதுதான். ஏற்கனவே ஆராய்ச்சிக்கான நாய்களை இரக்கமில்லாமல் கொடுமையான முறையில் கையாளுவதற்காக அருணா சோகன்லாலை பலமுறை கண்டித்து இருக்கிறாள். காணாமல் போன நாய் உணவுகளைப் பற்றி கேட்டதற்கு, 'சிஸ்டர், எப்படியும் மருத்துவர்கள் கையால் சாகப் போகிற நாய்களைப் பற்றி ஏன் எப்போதும் கவலைப்படுகிறீர்கள். அவற்றிற்கு வலித்தால் என்ன? பட்டினி கிடந்தால் என்ன?' என்று திமிராக பதிலளித்தான். அதற்காக அருணா அவனை கடுமையான சொற்களால் கண்டிக்க வேண்டியிருந்தது, 'மறு முறை இவ்வாறு நடந்தால், அவன் வேலை உடனடியாக போய் விடும்' என்று எச்சரித்தாள்.

'அருணா இப்படித்தான். 'படார்' 'படார்' என பொரிந்து தள்ளி விடுவாள். மற்றபடி அவள் இதயம் தங்கம்' அருணாவின் சக செவிலிகள் இப்படி சொல்கின்றனர். 'அவன் ரொம்ப முரடன். நான் அவனை கவனித்துக் கொண்டு இருக்கிறேன். அடுத்த முறை இப்படி ஏதாவது நடந்தால், அவனைப்பற்றி கண்டிப்பாக முறையிடப் போகிறேன்' அருணா சோகன்லலைப் பற்றி தனது தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருக்க அங்கே அவனோ, ' அருணாவை மானபங்கப் படுத்தி பழி தீர்க்கப் போகிறேன்' என்று அவனது நண்பர்களிடம் கறுவிக்கொண்டு இருந்தான்.

அருணாவின் தோழிகள் பயந்த மாதிரியே ஒரு நாள் நடந்தது. அருணா இரவுப் பணியில் இருக்கும் போது ஒரு தனியறையில் சோகன்லால் 'சின்ன நிலா' என்று வியக்கப்பட்ட அருணாவை பலாத்காரப்படுத்திவிட்டான். அருணாவின் வாழ்க்கையையே ஒரு முடிவுக்கு கொண்டு வந்த அந்த சம்பவம் நடைபெற்றது நவம்பர் மாதம் 1973ம் ஆண்டு.

சம்பவம் உடனடியாக வெளியே தெரியவர, நடந்தது என்ன என்று விவரிக்கும் சக்தி அருணாவிடம் இல்லை. அருணா கத்தி யாரையும் உதவிக்கு கூப்பிட்டு விடக்கூடாது என்பதற்காக, சோகன்லால் நாய்களைக் கட்டிப்போடும் சங்கிலியால் அவளது கழுத்தை நெரித்து இருந்ததில் அவளது மூளைக்குப் போகும் ஆக்ஸிஜன் தட்டுப்பட்டு மூளையின் பல பாகங்கள் செயலிழந்து அருணா ஏறக்குறைய கோமா நிலையிலிருந்தார். பேசும் திறன் முற்றிலும் இல்லை.

முதலில் மறைக்க முயற்சிக்கப்பட்ட சம்பவம், 'தங்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு வேண்டி' மருத்துவமனை செவிலியர்கள் நடத்திய மூன்று நாள் வேலை நிறுத்தத்தால் பரபரப்பு அடைந்தது. அருணா தாக்குதலுக்காக 1973ம் வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற் வேலை நிறுத்தம்தான் இந்தியாவின் செவிலியர்கள் நடத்திய முதல் வேலை நிறுத்தம். விஷயம் முதல்வர் வரை சென்று சோகன்லால் கைது செய்யப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்காக அல்லாமல் தாக்குதல் மற்றும் வன்திருட்டு ஆகிய குற்றங்களுக்காகத்தான் 7 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டான்.

ஏனெனில் அருணாவோ எந்தவித உணர்வும் செயல் திறனும் இன்றி நீதிமன்றம் செல்லவோ அல்லது சாட்சி எதுவும் சொல்வதற்கான நிலையிலோ இல்லை. தொடர்ந்த சிகிச்சைகளினாலும், மழிக்கப்பட்ட தலையினாலும் 'சின்ன நிலா' என்று வர்க்கப்பட்ட அருணா கசக்கி எறியப்பட்ட குப்பைக் காகிதம் போல உருக்குலைந்து போனார்.

அருணா தாக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்து விட்டன. இப்போதும் மும்பை கேஇஎம் மருத்துவமனைக்கு நீங்கள் சென்றால் அதே வார்டில் அருணாவின் கதறல்களை நீங்கள் கேட்கலாம். அருணா இன்றும் உயிரோடு இருக்கிறார். எந்தவித உணர்வும் இன்றி பற்கள் உட்பட அவயவங்களில் எவ்வித பயனுமின்றி! அவருக்கு கண்பார்வை கிடையாது. நினைவு கிடையாது. பேச முடியாது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த கொடூரம் அவர் மனதின் ஆழத்திலிருந்து சகிக்க முடியாத அலறல்களாகவும் கதறல்களாவும் சில சமயங்களில் இதயத்தை சில்லிட வைக்கும் சிரிப்பாகவும் வெளிவருகிறது. அவர் மனதின் ஆளத்தில் உணர்வுகள் மிஞ்சி இருக்கின்றனவா? இல்லை ஆழ் மௌனம்தானா? என்பது யாருக்கும் தெரியாது.

அருணாவின் கணவனாக வேண்டிய சுந்தீப் சர்தேசாய் அருணாவுக்காக நான்கு வருடங்கள் காத்திருந்து நம்பிக்கை இழந்த நிலையில் இன்று வேறு எங்கோ மனைவி மக்களுடன் இருக்கிறார். சோகன்லால் தண்டனைக் காலம் முடித்து தில்லியில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். அருணாவின் உறவினர்களும் நண்பிகளும் கொஞ்சங் கொஞ்சமாக கரைந்து போய் இன்று அருணாவின் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் மும்பை கேஇஎம் மருத்துவமனையில் அடுத்தடுத்து வேலைக்கு வந்து சேரும் மருத்துவர்களும், செவிலிகளும், பணியாளர்களும்தான். அவர்கள்தாம் இன்று அருணாவை தத்தெடுத்துக் கொண்டுள்ளனர். மும்பை கேஇஎம் மருத்துவமனையில் பயாற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் அருணா ஒரு காவல் தெய்வம் போல. செவிலியர்களின் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக அருணா ஷன்பாக் இந்த 53 வயதில், தாய் வயிற்றில் இருக்கும் கருவினைப் போல சுருங்கி இன்றும் மும்பை கேஇஎம் மருத்துவமனை வார்டில் படுத்திருக்கிறார்....

அருணாவுக்கு வேண்டியது வாழ்வா? இல்லை நற்கொலையா? என்பது மும்பையில் சிலசமயம் எழுந்து அடங்கும் ஒரு கேள்வி.

மும்பை
19.03.2003


Compliments to:-
Aruna's Story: The true account of a rape and its aftermath by Pinki Virani; Viking Penguin India, 1998

2 comments:

துளசி கோபால் said...

வணக்கம் பிரபு. நலமா?

இந்த வழக்கில் சோகன்லாலுக்குக் கொடுத்த தண்டனை ரொம்பவே குறைச்சல்தானே?

அருணாவுக்கு 'நற்கொலை' தரலாம். அவுங்களாலே எதுவுமே தானா செய்யமுடியாது. மனப்பீதி மட்டுமே
இருக்கும் என்ற நிலையிலே இது ஒரு விடுதலைதான்.

இங்கேயும் யூதனேஸியாவுக்கு ஆதரவு தெரிவிச்சு 'பில் பாஸ்' செய்யணுமுன்னு சிலர் ஆரம்பிச்சாங்க. ஆனா அது
முடியாமப் போச்சு. ஆஸ்தராலியாவுலெ டார்வின்லே மட்டும் இந்த முறையை ஆதரிச்சுச் சட்டம் பாஸ் ஆகி இருக்காம்.

இங்க நியூஸி ஆஸ்பத்திரிகளிலே மூளை இறந்து போச்சுன்னா, லைஃப் சப்போர்ட்டை எடுத்துடறாங்க. முதியோர்கள்
இல்லத்துலே பலர் படுகிற அவஸ்தையைப் பார்க்கும்போது இந்த முறையை நடைமுறைப்படுத்தினா எவ்வளவோ
நல்லதுதான்னு எனக்கு ஒரு தோணல் இருக்கு.

சயன்ஸ் ஃபிக்ஷன் மாதிரி, எதாவது ஒரு இடத்துலே ஒரு சுவிட்சை அமுக்கினால் 'டக்'னு வலி இல்லாமல் நொடியிலே
உயிர் போறதுக்கு ஒரு வழி இருந்தா எவ்வளோ நல்லா இருக்குமுன்னு நானும் கோபாலும் அடிக்கடிப் பேசிக்குவோம்.

மனுஷ வாழ்க்கையிலே எதாவது ஒருநாள், ஒரு சமயம், ஒரு நொடி 'போதும். இவ்வளோ வருஷம்
வாழ்ந்தது'ன்னு ஒரு எண்ணம் வருவதுகூட இயற்கையான நிகழ்வுதானோ?

PRABHU RAJADURAI said...

நன்றி திருமதி.துளசி

சோகன்லாலுக்கு தண்டனை போதுமா என்பது எனது இந்த சிறிய பதிவினை மட்டும் படித்து முடிவெடுக்க வேண்டிய விடயமல்ல. மூன்று வருடங்களுக்கு முன்னர் மரத்தடியில் எழுதியது. தற்பொழுது அருணா தனது போராட்டத்தினை முடித்துக் கொண்டாரா என்பது தெரியவில்லை.