10.7.06

மரத்தடி...

வக்கீல்களில் சிவில் வக்கீல், கிரிமினல் வக்கீல் என்று கேள்விப்பட்டு இருந்தாலும் மரத்தடி வக்கீல்கள் என்று ஒரு வகுப்பு உண்டு. இந்த மரத்தடி வக்கீல்கள் சிறு குற்றங்களை விசாரிக்கும் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு வெளியே மரத்தடியில் பார்க்கலாம். இப்போது பார்க்கலாமா என்றால் தெரியாது. மும்பை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளில் பார்த்திருக்கிறேன். அழகிய சூட், டை சகிதமாக கோர்ட்டில் நீங்கள் நுழையும் முன்னரே 'மே ஐ ஹெல்ப் யூ' என்று உங்களை அணுகுவர். இவர்களைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை என்றாலும், ஏழை எளியவர்களுக்கு சகாயமான விலையில் நீதியை வாங்கித்தருபவர்கள். ஆனாலும், இவர்களது ஒரு நாள் வருமானம், பெரிய வக்கீல்களே பொறாமைப்படும் அளவுக்கு இருப்பதுண்டு. தமிழ் நாட்டில் இப்படிப் பார்த்ததில்லை. அதற்கு ஒரு காரணமும் உண்டு. அது உண்மை என்று நினைப்பதற்கு தகுந்த காரணங்களும் உண்டு.

நான் சொன்னது மாதிரியான ஒரு மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டு. நீதிபதி முன்னர் அந்த குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜர் படுத்தப்பட்டார்.

நீதிபதி கேட்டார்' 'உன் வக்கீல் எங்கே?'

'வக்கீல் இன்னும் வைக்கலய்யா'

'வக்கலயா!' நீதிபதிக்கு எரிச்சல், 'அங்க வெளிய போயி, மரத்தடியில யாரவது வக்கீல் இருப்பாங்க. போயி கூட்டிக்கிட்டு வா'

'சரிங்கய்யா'

வெளியே சென்ற நபர் சில நேரம் கழித்து திரும்ப வந்தார்.

'என்ன யாரயாவது கூட்டிக்குட்டு வந்தயா' நீதிபதி அத்ட்டினார்.

'அங்க ரெண்டு வக்கீல் பேசிக்கிட்டிருந்தாங்கையா. என்னன்னு கேட்டாங்க. அவங்ககிட்ட நீங்க சொன்னத சொன்னேன்'

'வரேன்னு சொன்னாங்களா?' ஜட்ஜ் அவசரப்படுத்தினார்.

'இல்லீங்கய்யா, அவங்க சொன்னாங்க...முன்னால அது மாதிரி மரத்தடி வக்கீல் அங்க இருந்தாங்களாம். பெறவு அவங்கெல்லாம் ஜட்ஜா வேலை கிடச்சு போய்ட்டாய்ங்களாய்யா. இப்ப யாரும் அப்படி இல்லயாம்'

(ஜட்ஜ்களை பற்றி எழுதினால் நீதிமன்ற அவமதிப்பு வருமாமே! இந்த ஜோக்கை சொன்னதே ஒரு ஜட்ஜ்தான்)

1 comment:

Anonymous said...

//தமிழ் நாட்டில் இப்படிப் பார்த்ததில்லை.//

தமிழ் நாட்டிலும் உண்டு. சின்ன வித்தியாசம். மரத்தடிக்கு பதிலாக, அந்தந்த கோர்ட்டுக்கு அருகாமையிலேயே இருப்பார்கள்.