24.6.06

அபு சலேம்...

குஜராத் சுவாமிநாராயணன் கோவில் படுகொலைகள் நிகழ்ந்திராவிடில், மும்பை பத்திரிக்கைகளில் இன்னமும் அதிகமாக அலசப்பட்டிருக்கும் நபர் அபு சலேமாகத்தான் இருக்க முடியும். அபு சலேம் மும்பை தாதாக்களில் பிரபலமானவர். அவரை மும்பை தாதா என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. தாவூது, சோட்டா ராஜன் போல இவர் மும்பையினைச் சேர்ந்தவர் இல்லை. உத்தர பிரதேசத்திலிருந்து எண்பதுகளின் மத்தியில் மும்பைக்கு வந்து, தாதாவாகி, மும்பை தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பிறகு இந்தியாவினை விட்டு வெளியேறியவர்.

மும்பை மனீஷ் மார்க்கட்டில் சிறிய துணிக்கடை வைத்து நடத்திய இவர், பின்னர் எப்படியோ தாவூது இப்ராகிமின் முக்கிய தளபதியான சோட்டா ஷாகீலுக்கு காரோட்டியாக பணிபுரிந்திருக்கிறார். மனீஷ் மார்க்கட் மும்பையில் தரமான சைனீஸ் மற்றும் வெளிநாட்டு துணிகள், முக்கியமாக பெண்களுக்கான சுரிதார் துணிகள் வாங்க சிறந்த இடம்.

முதலில் காரோட்டியான இவர், பின்னர் சாமான்கள் ('ஆயுதங்கள்' என்று அர்த்தப்படுத்திக் கொள்ளவும்) கொடுத்தனுப்பும் குரியராக செயல்பட்டதால் 'அபு சாமான்' என்று அழைக்கப் பட்டு, அது மறுவி அபு சலேமானார். கெரில்லாக்களுக்கு நாம்-டி-கெரி இருப்பது போல மும்பை தாதாக்களுக்கும் அருமையான அலையஸ் பெயர்கள் உண்டு. சண்டையின் போது, கடித்து விடும் ஒரு பிரபல தாதாவின் பெயர் 'சலீம் குத்தா'! தாவூது இப்ராகிமுக்கு முக்கிய தளபதிகளாக இருந்தவர்கள் சோட்டா ராஜன் மற்றும் சோட்டா ஷாகீல். ஏற்கனவே 'படா ராஜன் இருந்ததால் இவர் சோட்டா ராஜன். குள்ளமானவராக இருந்ததால் மற்றவர் சோட்டா ஷாகீல். சோட்டா ராஜன் பின்னர் தாவூதின் எதிரி நம்பர் ஒன்றாக மாறியது வேறு கதை!

மும்பை தாதாக்கள் அனைவரும் சினிமாவில் காட்டப் படுவது போல கைத்துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு திரிவதில்லை. முக்கிய தாதாக்களிடம்தான் அவை இருக்கும். ஒரு திட்டம் தீட்டப் பட்டால், அதனை நிறைவேற்றுபவருக்கு சாமான் அனுப்பி வைக்கப்படும். வேலை முடிந்தவுடன் திருப்பி கொடுக்கப் பட வேண்டும். நல்ல ரக கைத்துப்பாக்கிகளின் விலை லட்சக்கணக்கில். சினிமாவில்தான் குண்டு தீர்ந்தவுடன் துப்பாக்கியினை எரிச்சலுடன் தூக்கி எறிவதெல்லாம்!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில், பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் மீது ஏகே 47 ரக துப்பாக்கியும் சில எறி குண்டுகளும் வைத்திருந்ததாகத்தான் வழக்கு. அந்த சாமான்களை சஞ்சயிடம் குடுத்த புண்ணியவான் அபு சலேம்தான். அந்த வழக்கில் இவரும் ஒரு முக்கிய குற்றவாளி. அந்த குண்டு வெடிப்புக்கு பிறகுதான் இவர் பிரபலம். எந்த ஒரு சுய தொழில் அல்லது நிறுவனம் அல்லது அரசியல் போலவே இந்த தாதாவாவதற்கும் தேவை ஒரு பிரேக் (brake). இந்த ஹையரார்க்கியின் (hierarchy) கீழ் மட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். பாதிக்கும் மேற்பட்டவர்களின் ஆயுசு இரண்டு அல்லது மூன்று வருடங்கள்தான், அதாவது அவர்களது பெயர் (identity) போலீஸ¤க்குத் தெரியும் வரை. ஒரே என்கவுண்டரில் ஐந்து பேரை சாய்ப்பதெல்லாம் சாதாரணம். சிலர் தப்பித்து மேல் மட்டத்துக்கு போய் விடுகிறார்கள். ஒரு சிலர் நல்லபடியாக செட்டில் கூட ஆகிவிடுகிறார்கள்.

நான் வசிக்கும் கட்டிடத்தில் சாதாரண குஜராத்தி குடும்பம் ஒன்று உள்ளது. ஒரு வயதான அம்மா. முதலில் என்னிடம் அடிக்கடி ஏதோ பேச முற்படுவார்கள். பின்னர் என் மனைவியிடம் அவர்கள் மகன் சிறையில் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். எனக்கும் கிரிமினல் வழக்குகளுக்கும் காத தூரம். கொலை வழக்கு என்று பிறகு அறிந்து கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் காந்தி ஜெயந்திக்காக விடுதலையாகி விட்டார் என்று சொன்னார்கள். பார்த்தால் என்னை விட வயதில் குறைந்த இளம் நபர். வந்த சில மாதங்களிலேயே வீடு முழுவதுமாக திருத்தி அமைக்கப்பட்டது. மொபைல் போனை தவிர்த்து வந்த நான், அவரே மொபைலை தூக்கிக் கொண்டு திரிவதைப் பார்த்து, கம்பெனி கணக்கில் ஒன்று வாங்கி விட்டேன். பிறகு புதிய ஹோண்டா ஸ்ப்லெண்டர் பைக். சில மாதங்களுக்கு முன் திருமணம். நானும் போயிருந்தேன். உடனே புது வீடு. ஒரு வாரத்துக்கு முன்னர் பார்க்கையில் ஒரு எஸ்டீமில் போய்க்கொண்டு இருந்தார்.

இதைப் படித்து, வேலையினை விட்டு யாரும் மும்பை வந்து விடாதீர்கள். இதெல்லாம் ஒரு லாட்டரி.! எண்பதுகளில் பிரபலமாக இருந்த எந்த ஒரு ஈழப் போராளியும் இப்போது இல்லை, பிரபாகரன், பாலசிங்கம் தவிர. இது ஒரு இயற்க்கையின் தேர்ந்தெடுப்பு. ஆனாலும் மனித முயற்சியினையும் நான் குறைத்துச் சொல்லவில்லை. இதனை எதற்க்காகச் சொல்கிறேன் என்றால், நமது இப்போதய சமூக, அரசியல், பொருளாதர சூழ்லையில் இந்த தாதாயிசத்தினை ஒழித்துக் கட்டுவது என்பது இயலாத காரியம். போலீஸ் ஒவ்வொரு தாதாவினையும் சுடும் போது, நமது அமைப்புகள் மற்றொருவரை அந்த வெற்றிடத்தினை நிரப்ப அனுப்பி வைக்கிறது.

மும்பை சேரிகளை பார்த்திருக்கிறீர்களா? அதற்கு நமது சிறைக்கூடங்கள் எத்தனையோ மடங்கு சுகாதாரமான இடம். இந்த சேரிகளை ஏற்படுத்துபவர்கள் வங்காளம், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்திலிருந்து நூற்றுக்கணக்கில் தினமும் இங்கு வரும் மக்கள். அப்படியாயின் அவர்களது சொந்த ஊர்களின் நிலமை இந்த சேரியினை விட மோசம் என்பதனை அனுமானிக்க பெரிய சிந்தனை தேவையில்லை. இந்த மக்களின் முக்கிய பொழுது போக்கு என்ன? சினிமா! அந்த சினிமாவில் வாழ்க்கையின் இன்பங்கள் என்று காட்டப் படும் அனைத்தும் அதே பாணியில் மும்பையினை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான நடன மையங்களில் கிடைக்கும். தமிழ்நாட்டிலோ அப்படி ஒன்றினை பார்க்க வாய்ப்பில்லாதலால் இதெல்லாம் நிழல் என்பதை புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ரசிகர் மன்றம் என்று சேவை செய்ய கிளம்பி விடுகிறார்கள். இரண்டாவது, அப்படி ஒன்று இருந்தாலும் பணத்துக்கு எங்கே செல்வது. மும்பையிலோ திரும்பிய பக்கமெல்லாம் கறுப்புப் பணம் கொட்டிக் கிடக்கிறது. பிறகு என்ன! முயற்சி ஒன்றுதான் பாக்கி.

என்னுடைய அனுமானத்தில் தாதாயிசம் வளர்வதற்கு முக்கிய காரணம் கறுப்புப் பணம். கறுப்புப் பணம் நமது நாட்டில் உருவாவதற்கு ஆயிரம் காரணங்கள். ஆனால் சிறிய முயற்சியும் பெரிய மனதும் இருந்தால் நாட்டை ஆள்பவர்களால் எளிதில் ஒழித்துக் கட்டப்படக்கூடிய பிரச்னை. ஆனால் என்ன செய்வது? தங்களது வாழ்க்கையே (existence) அதனை நம்பித்தான் இருப்பதாக அவர்கள் போலியாக நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

தாதாக்கள் குறி வைப்பது கறுப்புப் பணத்தை. நேர்மையான பணமென்றால் பலர் அதனைக் கொடுப்பதற்கு பதிலாக உயிரை விடத் துணிந்து விடுவார்கள். பாலிவுட்டிலியே நேர்மையானவர் என்று பெயரெடுத்த அமீர் கான், பத்திரிக்கைகளுக்கு தெரிந்தவரை எந்த ஒரு தாதாவின் மிரட்டலுக்கும் பணிந்தவரல்ல. கறுப்புப் பணத்தை தூக்கிக் கொடுப்பது எளிது. அதிக மனக்கஷ்டம் இல்லை. இரண்டாவது வெள்ளைப் பணத்தை குடுத்தால் அதனை எந்த கணக்கில் காட்டுவது. இந்திய என்ரான் கணக்கில் 60 கோடி ரூபாய் ‘இந்தியர்களுக்கு கற்பிப்பதற்காக’ என்று காட்டப் பட்டிருந்தது. போபோர்ஸ் மற்றும் என்ரான் ஊழல்கள் வெளியே தெரிந்ததற்கு முக்கிய காரணம் அந்தப் பணம் கணக்குப் புத்தகங்களில் காட்டப் பட்டிருந்த வெள்ளைப் பணம் என்பதால்தான். நான் இந்திய என்ரான் ஊழலைப் பற்றிச் சொல்கிறேன்.

மூன்றாவது முக்கியக் காரணம் நமது பொருளாதார, தொழில் அமைப்புகளில் இருக்கும் சட்ட மீறல்கள் மற்றும் லஞ்சம். இந்த தாதாக்கள் மற்றும் கிரிமினல்கள் தங்களை அறியாமலேயே சில வரைமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்கள். திருநெல்வேலியிலேயே பார்க்கலாம். லோக்கல் வட்டி ஆசாமி இருப்பார். அவருடைய மிரட்டும் தரத்துக்கு உங்களையும் என்னையும் கூட வந்து மிரட்டி பணம் கேட்கலாம். ஆனால் வரமாட்டார்கள். நீங்கள் யாரிடமாவது பிராமிசரி நோட்டு எழுதிக் கொடுத்து கடன் வாங்கியிருந்தால், அவரிடம் ஒரு தொகையினைக் கொடுத்து அதனை வாங்கிக் கொள்வார்கள். பின்னர்தான் உங்களிடம் வருவார், முழுப் பணத்திற்காகவும், மற்றும் வட்டிக்கும். அதே போலத்தான் வீடு காலி பண்ணும் பிரச்னையிலும். மிரட்டல் ஒன்றுதான் சொன்னபடி கேட்கிறாயா? அல்லது மேல் உலகம் செல்கிறாயா?. அவர்களது வலிமைக்கு யாரிடமும் போய் அப்படி மிரட்டலாம். ஆனால் அப்படிச் செய்வதில்லை. அதே போலத்தான் மும்பை தாதாக்களும். நியாயமாக நடக்கும் எத்தனையே தொழில்கள் உண்டு. அங்கு பிரச்னையில்லை. எனக்கு தெரிந்து சினிமா, ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் அதாவது பார் இவற்றை மும்பையில் நியாயமாகவும், தெளிவான கணக்குகளோடும் நடத்துவது இல்லை. ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் பற்றி எனக்குத் தெரியும். அநாவசியாமான சில சட்டங்கள் இவர்களை அதனை மீறும் வழியில் செலுத்துகிறது. சட்ட மீறல்கள் தாதாக்களுக்கான நேரடி அழைப்பு.

எழுபதுகளின் தாதாக்களான வரதராஜன், கரீம் லாலா, ஹாஜி மஸ்தான் போன்றவர்களுக்கு கடத்தல் கற்பகத் தரு. அளவுக்கும் அதிகமாக மூடி வைக்கப் பட்ட இந்தியப் பொருளாதாரம் காரணம். மெல்ல மெல்ல விதிகள் தளர்த்தப் பட கடத்தல் தனது வசீகரத்தினை இழந்தது. எண்பதுகளில் மும்பை ரியல் எஸ்டேட் அபரிதமான வளர்ச்சியடைந்து, தொண்ணூருகளின் மத்தியில் உச்சத்தை அடைந்தது. உங்களுக்குத் தெரியுமா? அப்போது மும்பை நாரிமன் பாயிண்ட் இடமதிப்பு டோக்கியோ மற்றும் மன்ஹாட்டன் இட மதிப்புக்கு இணையாக இருந்த்தது! அரசுக்கு பெரிய பலன் ஏதுமின்றி கோடிக்கணக்கில் பணம் கை மாறியது. ஆனால் அரசின் இடத்தை தாதாக்கள் நிரப்பினர். அரசுக்கு அதிக வரி கட்டுவதை விட இந்த தாதாக்களுக்கு சிறு வரி கட்டுவது பில்டர்களுக்கு எளிதாக இருந்தது. மேலும் இதர பல காரியங்களுக்கும் அவர்கள் உதவியாக இருந்தனர். பின்னர் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியடையவும் சினிமாவுக்கு தாவினர். முக்கியமாக தற்பொழுது பல ஹிந்தி சினிமாக்கள் தயாரிக்கப் படுவது இந்திய ரசிகர்களை விட வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை நம்பித்தான். கதைகள், காட்சிகள் மற்றும் பாடல்கள் அவர்களை குறிவைத்தே அமைக்கப் படுகிறது. தற்போது தாதாக்கள் சினிமாக்காரர்கள் பிரச்னையெல்லாம் வெளிநாட்டு வியோகம் மற்றும் பாடல் உரிமை பற்றித்தான். சினிமா முழுவதும் கறுப்புப் பணம். அதனை யார் கொடுப்பது? தாதாக்களைத் தவிர. ரியல் எஸ்டேட் வளர்ச்சியின் பணம் அவர்களிடம்தான் இருக்கிறது.

ரியல் எஸ்டேட், சினிமாவோடு ஒப்பிடும் போது ஹோட்டல் அதாவது மும்பையில் உள்ள லட்சக் கணக்கான பார்கள் ஒரு சிறிய மீன் (small change). ஆனால் தாதாக்கள் வளர்வதற்கு அது போதுமே! சட்ட மீறல்கள் பற்றிச் சொன்னேன். ஒரு சிறு உதாரணம். பார்கள் பதினொரு மணிக்கு மேல் இயங்க முடியாது. ஆனால் மும்பையில் வாழ்க்கை ஆரம்பிப்பதே பத்து மணிக்கு மேல்தான். பார்களை மூட முடியுமா? இங்குதான் அதன் சட்டம் சார்ந்த பாதுகாவலர்களான் போலீசும் சட்டம் சாராத காவலர்களான தாதாக்களும் உள்ளே நுழைகிறார்கள்.

தற்போது பெரிய தாதாக்கள் போதை மருந்து கடத்தல், தேச துரோக செயல்களில் இறங்கி சினிமாவை தங்கள் தளபதிகளிடம் விட்டு விட்டனர். தொண்ணூறுகளின் இறுதியில் உச்ச கட்டத்தை அடைந்த தாதாயிசத்தை, வலிமையாக கட்டுக்குள் கொணர்ந்தது மும்பையின் அப்போதைய இணை ஆணையர் நமது தமிழகத்தினை சேர்ந்த சிவானந்தம். இவரை வைத்து கம்பெனி என்ற படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நான் பார்க்கவில்லை. ஆனால் 'சத்யா' நான் பார்த்த இந்திய படங்களில் மறக்க முடியாதது. பார்க்காமல் விடாதீர்கள். நான் மும்பை வந்த புதிதில் நிலைமை அப்படித்தான் இருந்தது.

சிவானந்தம் போலீஸின் பார்வையில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் சமூகவியல் பார்வையில் இல்லை. அதற்கு சிவானந்தம் ஒன்றும் செய்ய இயலாது. அது நமது நாட்டை ஆளும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கையில் உள்ளது. நான் ஏற்கனவே சொன்னபடி, ஒவ்வொரு அபு சலேம் பிடிபடும் போதும் நமது சமுக, அரசியல், பொருளாதார மற்றும் சட்ட அமைப்புகள் மற்றொருவரை அந்த வெற்றிடத்திற்கு தள்ளி விடுகிறது.

(அபு சலேம் போர்ச்சுகலில் பிடிபட்ட புதிதில் எழுதியது...தற்பொழுது அவர் இந்திய காவலர்களின் கையில்...இன்று மறுபடியும் தேடிப்பிடித்து படிக்கையில் சுவராசியமாகத்தான் உள்ளது)

2 comments:

ROSAVASANTH said...

படித்தேன். மிக சுவாரசியமாக, ஆழமான முறையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி!

குழலி / Kuzhali said...

பிரபு மிக நன்றாக உள்ளது கட்டுரை.