10.6.06

பயணிகள் கவனிக்கவும்...

வெளிநாடு எதற்கும் நான் விமானத்தில் பயணித்ததில்லை என்றாலும், மும்பைக்கும் சென்னைக்கும் பன்னாட்டு விமான தளம் மூலம் பயணித்திருக்கிறேன். மும்பையில் இருந்து சென்னை வழியாக வெளிநாடு செல்லும் அல்லது வெளிநாடுகளில் இருந்து சென்னை வழியே மும்பை வரும் விமானங்களை நான் எப்போதும் தேர்ந்தெடுப்பது வழக்கம். காரணம், இவற்றில் கட்டணம் மற்ற விமான கட்டணங்களில் பாதியளவுதான். ஒரே கஷ்டம் தூக்கத்தை இழந்து நடு இரவில் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

மும்பை பன்னாட்டு தளத்தில் அநேகமாக அறிவிக்கப்பட்ட கன்வேயர் பட்டியில் குறிப்பிட்ட விமானத்தின் பெட்டிகள் வராது. பயணிகள் டிராலியுடன் அங்குமிங்கும் அலைவது பரிதாபமாக இருக்கும். அந்த எரிச்சலையும் மீறி எனக்கு ஏற்படும் ஒரு சந்தேகம், ‘ஒரு ரயில் நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கூட இல்லையே. கன்வேயரில் வரும் பெட்டியினை யாராவது அபேஸ் செய்து விட்டால்’ என்பதுதான். ஆயினும் அந்த சந்தேகத்தினை யாரிடமும் இதுவரை தெரிவிக்க தைரியம் வந்ததில்லை. ‘திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் முன்சீட்டுக்கு முண்டியடிக்கிறவனெல்லாம் விமானத்தில் போனால் இப்படித்தான் புத்தி போகும்’ என்று கேட்பவர் நமது உண்மை நிலவரத்தை போட்டுடைத்தால் என்ன செய்வது என்ற சிறு பயம்!

ஆனால், ‘பெட்டியினை சுடும் ஆசாமிகள் விமானத்திலும் பறக்கிறார்கள்’ என்று கடந்த வாரம் படித்த செய்தி, வெட்கத்தை கொஞ்சம் தள்ளி வைத்து சந்தேகத்தை வெளிப்படுத்த தைரியம் தருகிறது. ‘இதுவரை வெளிநாடுகளில் இருந்து டெல்லி வழியாக மும்பை வரும் விமானங்களில்தான் இவ்வாறு பெட்டிகள் களவாடப்பட்டிருப்பதாக’ ஏப்ரல் ஆஆறாம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. இந்த ஆசாமிகள் டெல்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் பறந்து வந்து, மும்பை விமான நிலையத்தில் கிடைக்கும் பெட்டியினை எடுத்துக் கொண்டு கம்பியை நீட்டி விடுகிறார்களாம். குறிப்பாக நினந் ஷா என்ற மாணவர் லண்டனில் இருந்து மும்பை வருகையில் இவ்வாறு தனது நகைகள், சான்றிதழ்கள் அடங்கிய பெட்டியினை இழந்திருக்கிறார். பிரிட்டிஷ் ஏர்வேஸில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த கார்த்திக் நடராஜனும் தனது பெட்டியினை இழந்திருக்கிறார்.

‘விமான கம்பெனிகள் என்ன பிசாத்தா? அதெல்லாம் பொருள் காணாமல் போனால், லட்ச லட்சமாக நஷ்ட ஈடு தருவார்கள்’ என்று அப்பாவித்தனமாக பயணிகள் யாரும் தைரியம் கொள்ள வேண்டாம். பேருந்து அல்லது ரயிலில் அதுவும் இந்தியாவில் பயணம் செய்கையில் கூட அவர்களது கவனக்குறைவால் பொருள் இழப்பு ஏற்படுகையில், அந்த பொருளின் பண மதிப்பினை நஷ்ட ஈடாக பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், விமானம் மூலம் பயணம் செய்கையில் நமது பெட்டி காணாமல் போகையில், ‘எடைக்கு 20 அமெரிக்க டாலர்’ மட்டுமே நஷ்ட ஈடாக வழங்கப்படுகிறது. அதாவது உங்கள் பெட்டியின் எடை பத்து கிலோ என்றால், அதற்குள் இருந்தது மண்ணாங்கட்டியானாலும் சரி, மாசற்ற தங்கமானாலும் சரி, கிடைக்கும் இழப்பீட்டு தொகை வெறும் 200 டாலர்கள். அதற்கு மேல் ஒரு பைசா கிடைக்காது! ஏதோ நான், இந்தியா நிலையை மட்டும் குறிப்பிடவில்லை. நீங்கள் உலகின் எந்த மூலைக்கு பயணித்தாலும் இதே நிலைதான். ஏனெனில் 1955ம் வருடம் ‘ஹேக்’கில் ஏற்பட்ட பன்னாட்டு ஒப்பந்தத்தின் மூலம் உலகம் முழுவதும் நஷ்ட ஈடு குறித்து ஒரே மாதிரியான சட்டம்தான். ஆக, இந்த எடைக்கு 20 டாலர் தொகையும் அப்போது நிர்ணயிக்கப்பட்டதுதான். இன்று வரை ‘இந்த் தொகையை அதிகரிக்க வேண்டும் அல்லது இம்முறையை சீரமைக்க வேண்டும்’ என்று எந்த அரசுக்கும் தோன்றவில்லை. விமான நிறுவனங்களுக்கு இதானல் கொண்டாட்டம்!

‘நுகர்வோர் நீதிமன்றங்கள்’ நமது நாட்டில் சர்வரோக நிவாரணிகள். இவ்விதமாக பெட்டிகளை இழந்த பல பயணிகள் மெத்த நம்பிக்கையோடு வழக்குகளை லட்சக்கணக்கான தொகைக்கு தாக்கல் செய்வதுண்டு. விமான நிறுவனங்கள் வழக்கினை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லவும் தயங்குவதில்லை. இறுதியில் பயணிக்கு கிடைப்பதென்னவோ எடைக்கு 20 டாலர்தான். மேஜர் அஸ்வானி சிந்தாணியின் வழக்கு பரிதாபமானது. இவர் தில்லியிலிருந்து ஐவரி கோஸ்ட்டுக்கு துபாய், அடிஸ் அபாபா வழியாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார். நாலு பெட்டிகளை எடுத்துச் சென்றதால் 30 ஆயிரம் ரூபாய் வேறு கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கடைசியில், ஒரு பெட்டி அவர் கையில் கிடைக்கவேயில்லை. 50,000 பெட்டியின் மதிப்பாகவும், அதிகமாக வசூலிக்கப்பட்ட தொகையான 30 ஆயிரத்திற்காகவும் வழக்கு தொடர்ந்தார். இறுதியில் கிடைத்தது எடைக்கு 20 டாலரும் 30 ஆயிரத்தில் நாலில் ஒரு பங்கான 7500 ரூபாயும்தான். இந்தப் பணமும் கிடைப்பதற்குள் ஏழு ண்டுகள் ஓடி விட்டது!

இதற்கு நாம் செய்யக் கூடியது என்ன? அதிகமாக இந்தியாவில் இருந்து வெளிநாடு பயணிப்பவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுபவர்கள். இவர்கள் ஒரு குழுமமாக இருப்பதால் இந்தப் பிரச்னை குறித்த ஒருமித்த பொதுக்கருத்தினை உருவாக்கி அதை அரசின் பார்வைக்கு கொண்டு செல்லலாம். மீண்டும் ஒரு சர்வதேச மாநாடு கூட்டப்பட்டு இழப்பீடு விஷயத்தில் நுகர்வோருக்கு சாதகமாக சட்டம் இயற்ற வழி செய்யலாம்.

இந்த தொலைநோக்கு செயலை விடுத்து தற்போதுள்ள நிலையில் பயணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள செய்யக் கூடியது ‘இவ்விதமான சிக்கல்களை சமாளிக்கத்தக்கதாக காப்பீடு செய்து’ கொள்வதே! சிட்டிபாங்க் மற்றும் டைனர்ஸ் கிளப் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் இவ்வித இழப்பிலிருந்து காக்கிறது. பெட்டிகள் கிடைக்க தாமதமாகி, அதனால் ஏற்படும் அவசர செலவுகளுக்கு கூட காப்பீடு கிடைக்கிறது.

காப்பீடு செய்து கொள்ளும் அளவிற்கு போக வேண்டுமா என்று நினைப்பவர்கள் செய்ய வேண்டியது, கவனாயிருப்பது மட்டுமே! எவ்விதம் கவனமாயிருக்கலாம் என்று விமான நிறுவனங்கள் சில அறிவுரைகள் கூறுகின்றன. பணம், நகை மற்றும் விலையுயர்ந்த பொருட்களை உங்களது கை பெட்டியிலேயே வைத்தல் நலம். பெட்டியின் இரு பக்கமும் உங்கள் பெயர் விலாசம் எழுதுவது போல பெட்டிக்கு உள்ளேயும் உங்கள் பெயர், விலாசம் மற்றும் உங்கள் பயண விபரம் அடங்கிய காகிகத்தை வைத்தல் பயனளிக்குமாம். தொலைவிலிருந்தே அடையாளம் காணத்தக்க வகையில் உங்கள் பெட்டியினை வடிவமைப்பது அவசியம். ஒரே மாதிரியாக வரும் பெட்டிகளிடையே உங்கள் பெட்டியினை அடையாளம், ஒரு நொடியில் காண்பதற்காக இவ்விதம் வடிவமைக்க வேண்டும். முக்கியமாக, பெட்டி காணாமல் போனாலோ அல்லது தாமதமானாலோ ஏற்படும் உடனடி பிரச்னையை சமாளிக்கத் தக்கதாக சில ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மாற்றுத் துணி கூட இல்லாமல் விமான நிலையத்தில் அங்குமிங்கும் அலையும் அவலத்தையாவது தவிர்க்கலாம் அல்லவா? பெட்டியினை தகுந்த முறையில் எடை போடச் செய்து குறித்துக் கொள்ள வேண்டும். நிரஞ்சன் சிங் எனபவர் 34 கிலோ எடையுள்ள தனது பெட்டிக்காக தொடர்ந்த வழக்கில் கல்ப் ஏர் அதன் எடை 14 கிலோதான் என்று சாதித்தது. விலையுயர்ந்த பொருளை செக் செய்யும் பெட்டியில் வைக்கத்தான் வேண்டுமாயின் அதை தெரிவித்து அதற்காக தனியாக கட்டணம் ஏதாவது செலுத்த வேண்டியதாயில் செலுத்துதல் பின்னர் உபயோகமாயிருக்கலாம்.

இறுதியில், பெட்டி தொலைகையிலோ அல்லது தாமதமாகையிலோ உடனடியாக அந்த விமான நிறுவனத்தால் வழங்கப்படும் அறிக்கையினை வாங்கி அதில் அனைத்து விபரங்களையும் தெரிவித்து, சுங்க அதிகாரியின் ஒப்புதல் கையொப்பமுடன் விமானநிலையத்தை விட்டு வெளியேறுமுன்னே தாக்கல் செய்ய வேண்டும்.

கவனமாக இருங்கள்...பயணம் இனிதாகும்!

மும்பை
13/04/2004
(இக்கட்டுரைக்கு பொருத்தமான ஒரு தலைப்பினை அளித்து, அமீரக ஆண்டு விழா மலரில் வெளியிட்ட எனது இனிய நண்பர் சாத்தை ஆசீப் அவர்களுக்கு நன்றி)

1 comment:

மஞ்சூர் ராசா said...

அன்பு பிரபு,
முதலில் இன்றைய வலைப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.

உங்களின் கட்டுரை எங்களைப் போன்ற அரபு நாடுகளில் வாழ்பவர்களுக்கு மிகவும் பயன் தரக் கூடியதாக உள்ளது. நன்றாக விவரித்துள்ளீர்கள்.

தொடர்ந்து நல்ல கட்டுரைகளை எழுதுமாறுக் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் வாழ்த்துக்கள்.