12.6.06

பல்கிவாலா...



சமீபத்தில், சட்டமேதை நானி பல்கிவாலாவின் பல்வேறு உரைகளின் தொகுப்பான "வி, த இண்டியன்ஸ்" என்ற புத்தகம் படித்தேன். அவரது சொற்பொழிவுகளின் தொகுப்பு என்றாலும், முதலில் இருப்பது "நாம் நமது விதியின் எஜமானர்களா?" என்று அவர் போகிற போக்கில் எழுதிய கட்டுரை. ஐன்ஸ்டைனில் இருந்து ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வரை துணைக்கழைத்து மாந்தீரிகம், 'எதிர்காலத்தை கணித்தல் ஆகியவை விடை காண முடியாத ரகசியங்கள்' என்ற ரீதியில் முடியும் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் சுவராசியமானவை.

மும்பையில் நடந்த ஒரு இரவு விருந்தில் டாக்டர் ஹோமி பாபா கலந்து கொண்டாராம். அப்போது 'அதீதமான சில சக்திகள் இருப்பதாக' கூறி லக்னோவைச் சேர்ந்த எளிமையான ஒரு மனிதனை அவரிடம் அறிமுகப்படுத்தினார்களாம். மற்றவர்களின் வறுபுறுத்தலுக்கு இணங்கி ஹோமி பாபா அவனை சோதிக்க சம்மதித்தாராம். தனது பர்ஸிலிருந்து ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அதைப் பார்க்காமலேயே தனது கால்சாராய் பக்கவாட்டுப் பையில் வைத்து அதன் எண் என்னவென்று வினவினாராம். லக்னோ மனிதன் தனது மனதைப் படித்துவிடக் கூடாது என்று நோட்டின் எண்ணை அவரும் பார்க்கவில்லையாம். ஆனாலும், லக்னோ மனிதன் நோட்டின் எண்ணை சரியாக கூறி அனைவரையும் வியக்க வைத்தானாம். பின்னர் ஹோமி பாபாவை சந்தித்த பல்கிவாலா 'அந்த நிகழ்வுக்கு ஏதாவது விஞ்ஞான விளக்கம் இருக்கிறதா?' என்று கேட்டதற்கு ஹோமி பாபா, 'அவ்வாறு ஏதும் இல்லை என்றாராம்'.

***************

மற்றொரு சம்பவம் பல்கிவாலாவின் சொந்த அனுபவம். 1975ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்திராகாந்தியின் தேர்தல் செல்லாது என்று அறிவித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இடைக்கால தடை உத்தரவு பெற்றபின்னர் விமானத்தில் பம்பாய் திரும்பிக் கொண்டிருந்தாராம். பக்கத்து இருக்கையில் காவியுடையணிந்த எளிமையான மனிதர் அமர்ந்திருந்தாராம். அவர் பல்கிவாலாவிடம் நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்று வினவ, சுருக்கமாக நடந்தவற்றைக் கூறினாராம். அந்த மனிதர் தான் பங்களூரில் உள்ள காந்தி ஆசிரமத்தை சேர்ந்தவர் என்றும் இந்தியாவின் பல பாகங்களுக்கும் பயணம் செய்து திரும்பிக் கொண்டிருப்பதாகவும் கூறி பங்களூரில் உள்ள ஒரு தீர்க்கதரிசி கூறிய சில விபரங்களை பல்கிவாலாவிடம் தெரிவித்தாராம்.

"நாம் மே'1975ல் பங்களூரை விட்டு கிளம்பும் பொழுது அவர் என்னிடம் இந்திரா தேர்தல் வழக்கில் தோற்றுப் போவார் என்றும் ஆனால் அதற்குப் பிறகு அவர் உலகிலேயே சக்திவாய்ந்த பெண்மணியாக மாறி விடுவார் என்று கூறினார்"

"அவர் ஏற்கனவே உலகின் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர்தானே! இதை விட அவர் இன்னும் எப்படி சக்திவாய்ந்தவராக மாற முடியும்?" பல்கிவாலா.

"எனக்குத் தெரியாது. அவர் கூறியதை அப்படியே உங்களிடம் கூறுகிறேன்" என்றாராம்.

"அவர் வேறு எதுவும் கூறினாரா?"

"ஆம். பிரதமருக்கு கிடைக்கும் இந்த அதீத சக்தி 1977 மார்ச்சில் முடிவடையும்"

"பின்னர் அவர் வேறு ஏதாவது கூறினாரா?"

"ஆம், இன்று பொதுவாழ்வில் முக்கியமான நபராகத் திகழும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தீராத நோய்வாய்ப்பட்டு அதன் காரணமான பின்னர் இரண்டு வருடத்தில் மரணமடைவார். இந்தியாவின் பிரதமராகும் லட்சியம் உள்ள ஒய்.பி.சவாண் தனது லட்சியத்தை அடைய முடியாது என்றும் கூறினார்"

அந்த மனிதர் கூறியதை மனதில் அசை போட்டவாறே வீட்டிற்கு வந்தால் 36 மணி நேரத்திற்குள் அவசர சட்டத்தை பிரகடனம் செய்ததன் மூலம் இந்திரா ஒரு சர்வாதிகாரியைப் போல அனைத்து அதிகாரம் பெற்றவராக மாறினாராம். தான் கேட்டவற்றை ராம்நாத் கோயங்காவிடம் கூறினாராம். அவசர காலம் முழுவதும் தான் கேட்ட வார்த்தைகள் அவரைச் சுற்றியே வந்ததாம். அவநம்பிக்கையும் துக்கமும் நிறைந்த அந்த நாட்கள் முழுவதும் மார்ச் 1977ல் அவை முடிந்து போகும் என்ற வார்த்தைகள் மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருந்ததாம். பின்னர் அந்த வார்த்தைகள் உண்மையாயின.

விமானத்தில் பம்பாய திரும்பிய அந்த நாளுக்கு பின்னர் அவர் இந்திராவை மறுபடியும் சந்தித்தது 1977 மார்ச் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நாள் மாலைதானாம். இந்திராவை சந்தித்த பல்கிவாலா அவரிடம், "இந்திராஜி, நான் கூறுவது உங்களுக்கு ஆறுதலாயிருக்கலாம். அலகாபாத் தீர்ப்பில் இருந்து இந்த தேர்தல் முடிவு வரையில் நடைபெற்றவையெல்லாம் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை போல இருக்கிறது" இந்திராவின் கண்களில் கண்ணீர் தோன்றியதாம். இந்திராவை அவ்வளவு சோகமாக பல்கிவாலா பார்த்த ஒரே சம்பவமும் அதுதானாம்.


பல்கிவாலா, கூறுவது தவறாக இருக்கலாம். ஆனால் பொய்யாக நிச்சயம் இருக்க முடியாது. அப்பழுக்கில்லாத வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் 'Freedom is like alcohol. It must be taken in moderation' என்று வேறொரு இடத்தில் அவர் கூறுவதைப் படித்தால் சிலர் கோபம் கொள்ளலாம்...

போகட்டும், ஆனால் 'அவசர நிலை மார்ச் 1977ல் முடிந்து விடும்' என்று பல்கிவாலாவுக்கு சொல்லப்பட்டதால் அவருக்கு ஒரு நிம்மதி! மற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? ம்ம்ம்ம்ம் தெரிந்து போனால் எதிர்த்து போராட்டம் செய்வதற்கு யாருமே முன் வர மாட்டார்களே! ஆக சிலரின் விளையாட்டுக்கு பலர் பகடைக் காய்கள் மட்டும்தானோ!!

*********************

மற்றபடி சொற்பொழிவுகளை புத்தகமாக பதிப்பிப்பதும் படிப்பது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமான காரியம் என்று தெரியவில்லை. ஒரு தலைப்பினை ஒட்டி கட்டுரையாக எழுதுவதற்கும் உரையாக நிகழ்த்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என நினைக்கிறேன். கட்டுரையில் விபரதானம் முக்கியம். உரைகளில் விபரங்களை விட பொதுவான வாக்கியங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு உரையினை படிக்கும் நேரத்தில் ஒரு கட்டுரையினை படித்தால் அதிக பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

No comments: