4.6.06

தமிழில் சட்டம்?


விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் பொருளாதாரம் போன்ற கல்விகளை தமிழில் பெறுவது பற்றி நடைபெறும் விவாதங்களில் சட்டங்களை தாய் மொழியில் படிப்பது பற்றி அதிகம் பேசப்படாதது சிறிது வியப்புக்குறியதாக உள்ளது. ஏனெனில், மற்ற துறைகளைப் போலன்றி சட்டப் படிப்பானது பெருமளவில் நமது நாட்டிலேயே நமது மக்களுக்காக மட்டுமே பணிபுரியத் தக்க வகையில் இருக்கிறது. எனவே தமிழில் படித்து விட்டு நான் அமெரிக்கா போக முடியுமா என்ற கேள்வி எழ இங்கு அதிகம் வாய்ப்பில்லை. ஆயினும், இங்கு சட்டங்கள் ஆங்கிலத்திலேயே இயற்றப்படுகின்றன. ஆங்கிலத்திலேயே நீதிமன்றங்களில் ஆராயப்படுகின்றன.

சட்டங்களை மொழிபெயர்க்கும் பணி பெருமளவில் நடைபெறுகிறது என்றாலும், நடைமுறையில் செல்லத்தக்க சட்டமென்பது அது இயற்றப்பட்ட மொழியிலிலேயே இருத்தல் சில நடைமுறைச் சிக்கல்களால் அவசியமாகிறது. அதாவது 'இந்தியன் பீனல் கோடி'னை தமிழில் 'இந்திய தண்டனைச் சட்டமாக’ மொழி மாற்றம் செய்யப்பட்டிருப்பினும், அவ்வாறாக மொழிபெயர்க்கப்பட்ட சட்டமானது வெறுமே படிப்பனுபவமாக மட்டுமே பயன்படுமின்றி நீதிமன்றங்களில் செல்லத்தக்க வகையில் ஏற்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. ஏனெனில் மூலத்திற்கும் மொழி பெயர்ப்பிற்கும் அர்த்தம் வித்தியாசப்பட்டு போகலாம். போகலாம் என்ன, போகும். சில சமயங்களில் சட்டத்தினை விளங்கிக் கொள்ள முற்படுகையில் சின்னச் சின்ன வார்த்தைகள் கூட முக்கியத்துவம் பெறுகின்றன. அப்படியிருக்கையில் மொழிபெயர்ப்பினையும் நடைமுறைப் படுத்துகையில் பெரும் குழப்பம் ஏற்படலாம். அதற்கு தமிழிலேயே சட்டம் இயற்றப்படல் வேண்டும். ஆனால் இந்தியா முழுமைக்கும் பொருந்தும் வண்ணம் மத்திய அரசு சட்டமியற்றுகையில் தமிழிலோ, இந்தியிலோ எப்படி இயற்ற முடியும்? எனவே சட்டத்துறையில் தாய்மொழியினை கொணர்வதற்கு வழி இருக்கிறதா என்பதை மொழி பற்றிய அறிஞர்கள்தான் சிந்தித்து விடை காண முயல வேண்டும்.

சட்ட வரைவாளர்களின் போதிய மொழியறிவின்மையாலோ அல்லது மொழியின் குறைபாடாலோ, ஆங்கிலத்தில் சட்டமியற்றுகையிலேயே சின்ன சின்ன வார்த்தைகள் கூட எவ்வித பிறழ்ச்னைகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஒரு வழக்கினை உதாரணமாக கூற விரும்புகிறேன். மொழிப் பிறழ்ச்னை பற்றி சிந்திப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கலாம்.

வருமான வரி சட்டத்தினைப் (Income Tax Act' 1922) பற்றி அறிந்திருப்பீர்கள். அதன் பிரிவு 80-P கூட்டுறவு சங்கங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியினைப் பற்றி கூறுகிறது. பொதுவாக விவசாயத் தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு எனப்தை அறிந்திருப்பீர்கள். எனவே இந்தப் பிரிவிலும் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்படும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அதன் பொருட்டு கிடைக்கும் வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. சரி இந்தப் பிரிவில் அதனை எப்படி குறிப்பிடுகிறார்கள்? "a co-operative society engaged in the marketing of the agricultural produce of its members"

படிப்பதற்கும் பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாக உள்ள இந்த வரியிலுள்ள ஒரு சிறு வார்த்தை வருமான வரித்துறையை பல நீதிமன்றங்களில் அலைகழித்து பல கோடி ரூபாய் வருமான இழப்பினை ஏற்படுத்தியது என்றால் நம்ப முடிகிறதா? பிறழ்ச்னை அந்த வரியிலுள்ள 'of' என்ற வார்த்தையில் இருக்கிறது. இந்த வரியின் அர்த்தத்தினை இவ்வாறு தமிழில் கூறலாம் "தனது உறுப்பினர்களின் விவசாய விளைபொருட்களை விற்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் கூட்டுறவு சங்கம்" இதனை விவசாயத்தில் நேரிடையாக ஈடுபடும் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட கூட்டுறவுச் சங்கங்கள் மட்டுமல்லாது விவசாயப் பொருட்களை வாங்கி விற்கும் விவசாயிகள் அல்லாதவர்களை உறுப்பினர்களாக கொண்ட கூட்டுறவு சங்கங்களும் பயன் பெற முயன்றன.

பொதுவாக கிராம அளவில் விவசாயிகள் நேரிடையாக தங்களது விளை பொருட்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனைக்கு கொணர்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் விவசாய தொழிலினால் கிடைக்கும் வருமானம். வருமான வரி விலக்கு பெறுவதில் ஆட்சேபணையில்லை. ஆனால் நேரிடையாக இல்லாமல் பிற இடங்களில் வாங்கும் விவசாயப் பொருட்களை சந்தைக்கு அனுப்பும் கூட்டுறவு சங்கங்களின் வருமானம் விவசாயத் தொழிலினால் கிடைக்கும் வருமானமானமே என்று வகைப்படுத்தி வரி விலக்கு கொடுக்க இயலுமா? எளிமையாக இந்த வித்தியாசத்தினை கூற வேண்டுமென்றால் விவசாயம் செய்யும் விவசாயியின் வருமானத்திற்கும் அதனை வாங்கி விற்கும் தரகரின் வருமானத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா? ஆனால் பெரிய கூட்டுறவு சங்கங்கள் "agricultural produce of its members" என்றுதானே இருக்கிறது என்று வாதிட அதனை ஒத்துக் கொண்ட கேரள உயர்நீதிமன்றம் ‘வருமான வரி ஆணையர் எதிர் கேரள மாநில விற்பனை கூட்டுறவு சங்களின் கூட்டமைப்பு’ என்ற வழக்கில் அனைத்து சங்கங்களுக்கும் வரி விலக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஏனோ, கேரள மாநில வருமான வரி ஆணையர் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவில்லை.

ஆனால் பின்னர் இதே கேள்வி அசாம் மாநிலத்தில் எழுகையில் வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றமும் 'நிச்சயமாக, இவ்வாறு விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் வரிவிலக்கு அளிப்பது அரசின் நோக்கமல்ல' என்று கூறி சட்டத்தில் இடம் பெற்ற 'of' என்ற வார்த்தைக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்று கூறியது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை சுட்டிக் காட்டி கேரள ஆணையர், அடுத்த ஆண்டு வருமான வரி வசூலிப்பின் பொழுது அங்குள்ள சங்கத்தின் கழுத்தில் துண்டினைப் போட்டார். வழக்கு நீதிமன்றம் சென்றாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இம்முறை கேரள உயர் நீதிமன்றத்தினால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கேரள சங்கம் உச்ச நீதிமன்றம் சென்றது. ஏற்கனவே அசாம் வழக்கில் தீர்க்கப்பட்ட அதே கேள்வி அதை விட அதிக நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள், 'சட்டத்தில் இடம் பெற்ற 'of' என்ற வார்த்தையினை அவ்வளவு எளிதாக உதாசீனப்படுத்துவது முறையல்ல. சட்டமியற்றிய பாராளுமன்றத்தின் நோக்கமும் அப்படியிருக்க முடியாது' என்று கூறி தனது முந்தைய தீர்ப்பினை மாற்றியெழுத....வருமான வரித்துறைக்கு மீண்டும் தோல்வி!

பார்த்தது அரசு. இனி நீதிமன்றங்களை நம்பி பலனில்லை என்று தீர்ப்பு வெளிவந்த அதே டிசம்பர் 1998ல் ஒரு சட்ட திருத்தத்தினை கொண்டு வந்தது. அதன்படி "a co-operative society engaged in the marketing of the agricultural produce grown by its members" என்று மாற்றியது. இந்த திருத்தத்தினை முன் தேதியிட்டு (retrospective effect) கொண்டு வந்தாலும்.....ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ள வரிக் கணக்குகளை மீண்டும் திறக்கப் போவதில்லை என்று வேறொரு வழக்கில் வருமான வரித் துறைக்கான வழக்குரைஞர் நீதி மன்றத்தில் தேவையில்லாமல் சொல்ல, சட்டத்தினை எழுதியவரின் சிறு கவனக்குறைவிற்காக அரசு கொடுத்த விலை பல கோடி ரூபாய்கள்!

இந்த வழக்கினை படிக்கையில் ஆங்கிலத்தில் தவறாக இயற்றுவதற்கு பேசாமல் தாய்மொழியிலேயே சட்டத்தினை எழுதலாம் என்ற எண்ணம் வருகிறது. ஆனால், 'சட்டங்கள் தாய்மொழியிலேயே இருப்பது சிறந்ததா? அவ்விதமான முயற்சி வெற்றி பெறக்கூடியதா? ஒரே வழக்கில் பல சட்டங்களை பற்றி ஆராய வேண்டியிருப்பதால் சில சட்டங்களை மட்டும் தமிழில் இயற்றி மற்றவற்றை ஆங்கிலத்திலேயே இயற்றுவது சாத்தியமா?' என்ற கேள்வியினை யாராவது எழுப்பினால் தற்பொழுது என்னிடம் நிச்சயம் விடையில்லை!

(மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழினை அனுமதிக்க வேண்டும் என்று சில குழுக்கள் இங்கு போராடி வருகின்றன)

2 comments:

Anonymous said...

Hallo I absolutely adore your site. You have beautiful graphics I have ever seen.
»

Anonymous said...

Looks nice! Awesome content. Good job guys.
»