17.7.06

அந்நியன்

இறுதியில் எனக்கும் 'அந்நியன்' திரைப்படம், அதுவும் முழுமையாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் பார்த்து வெகுநேரமாகியும் விக்ரமின் பலப்பரிமாண நடிப்பின் தாக்கம் மனதை விட்டு அகலவில்லை. பொதுவாக தமிழ் திரைப்படங்கள், 'படம் பார்ப்பவர்கள் எங்கே நாலு விஷயம் தெரிந்து கொண்டால் அடுத்தப் படத்துக்கு வராமல் போய் விடுவார்களோ' என்ற பயத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன என்று நான் நம்பினாலும், அந்நியனும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது வியப்பாக இருந்தது. கதை எழுதியதோ அல்லது வசனமெழுதியதோ எழுத்தாளர் சுஜாதாவாம்!

படத்தின் தொடக்கத்தில் ஒரு குடித்தனத்தில் வாடகைக்கு குடியிருக்கும் ஒரு பெண்ணுக்காக வக்கீலான விக்ரம் குடித்தன உரிமையாளர் மீது வழக்குத் தொடருகிறார். அதாவது உரிமையாளர் அதிக வாடகை பெறுவதாகக் குற்றச்சாட்டு. அதிகமாகப் பெறும் வாடகைக்கான அத்தாட்சியாக ஒரு துண்டுச்சீட்டினை விக்ரம் நீதிபதி முன்பு வைக்க, அது நிராகரிக்கப்பட்டு வழக்கும் தள்ளுபடியாகிறது. வாடகைதாரப் பெண்மணியும் 'என் விதி' என்று பரிதாபமாகச் செல்கிறார்.

'வாடகைக் கட்டுப்பாடு' என்றெல்லாம் பிரத்யேக வார்த்தைகளை உபயோகிக்கும் அளவுக்கு வசனத்தில் கவனம் செலுத்திய இயக்குநர் சற்று சட்டப்பிரிவுகள் மற்றும் சட்டமுறைகளை ஆராய்ந்திருக்கலாம். திரைப்படத்தில் வாடகைதாரரான பெண்மணி ரூ.600 வாடகை எனக்கூற உரிமையாளர் 'இல்லை ரூ.300தான்' எனக் கூறுகிறார். பெண்மணி செய்யக் கூடியது என்ன? நல்லதாகப் போயிற்று என பேசாமல் அடுத்த மாதம் முதல் ரூ.300 கொடுத்தாலே போதுமே? உரிமையாளர் வாங்க மறுத்தால் பண அஞ்சலில் அனுப்பலாம். இல்லை நீதிமன்றத்தில் மனுச்செய்து வாடகையினை அங்கேயே வைப்பீடு (deposit) செய்யலாம். ஏன் உரிமையாளர் ரூ.600 வாங்குகிறார் என்று நிரூபிக்க மெனக்கெட வேண்டும்? திரைப்பட விக்ரம் ஒரு மோசமான வக்கீலாக இருக்க வேண்டும்.

திரைப்படத்தின் இறுதியில் வரும் நீதிமன்ற அபத்தக் காட்சியினை நான் குறை கூறவில்லை. ஏனெனில் பார்க்கும் எவருக்கும் இது தமிழ் திரைப்படங்களுக்கேயுரிய அபத்தம் எனப்புரியும். ஆனால் ஏதோ புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்ட காட்சி போன்ற ஒரு நிகழ்வு வாடகைதாரர்- உரிமையாளர் இடையேயான உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி தவறான செய்தியினை படம் பார்க்கும் மக்களிடம் சென்று சேர்க்கிறது என்பதே எனது ஆதங்கம். ஒரு கட்டிடத்தின் வாடகை அதிகமானது என்று வாடகைதாரர் நினைக்கையிலோ அல்லது குறைவானது என்று உரிமையாளர் நினைக்கையிலோ, கட்டிடத்தின் 'நியாய வாடகை'யினை (fair rent) நிர்ணயிக்க வேண்டி நீதிமன்றத்தில் மனுச்செய்யலாம். விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றம் நிர்ணயிக்கும் வாடகையே, மனு தாக்கல் செய்த தேதியிலிருந்து வாடகைதாரர் கொடுக்க வேண்டிய வாடகையாகும். வாடகைதாரர் உரிமையாளர் பிரச்சினைகளில் பொதுவாக, உரிமையாளரே அடித்து துவைக்கப்படுபவராக (person at the receiving end) இருப்பதால் எனது அனுபவத்தில் உரிமையாளரே நியாய வாடகை மனு தாக்கல் செய்து வாடகையை உயர்த்திப் பெறுவதைப் பார்த்திருக்கிறேன். அதுவும் சென்னையில் பல சமயங்களில் நீதிமன்றம் நிர்ணயிக்கும் வாடகை உண்மையில் நிலவும் வாடகையினை (Market Rent) விடவும் அதிகம். ஏனெனில் குடியிருப்பு தவிர மற்ற காரணங்களுக்கான வாடகையினைப் பொறுத்தவரை நியாய வாடகை என்பது வருடத்திற்கு கட்டிடத்தின் சந்தை மதிப்பில் 9%. கட்டிட வயதினைப் பொறுத்த கழிவுகள் இருப்பினும் நியாய வாடகை சந்தை வாடகையினை மீறுவதுண்டு.

இறுதியில் கட்டிட வாடகை ஒப்பந்தங்கள் எழுத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. வாய்மொழியாகவும் இருக்கலாம். எனவே துண்டுச் சீட்டில் வாடகையினை குறித்துக் கொடுப்பது கூட ஆவணமாகலாம். படத்தில் உருவாக்கியுள்ளது போல அவ்வளவு எளிதில் நிராகரிக்க இயலாது.

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் யாருமே கொஞ்சமும் மூளையைக் கசக்க முன்வருவதில்லை. மூன்று ஸாங் இரண்டு ஃபைட்டுகளை எப்படி எப்படி எங்கெங்கு எடுக்க வேண்டும் என்று மட்டுமே சிந்திக்க முன்வருகிறார்களேயொழிய ஒரு பெண்மணி எப்படி வஞ்சிக்கப்பட்டும் நீதி கிடைக்காமல் தவிக்கிறாள் எனபதைக் காட்டும், சில நிமிடங்களே வரும் ஒரு சிறு காட்சியினை எப்படி புத்திசாலித்தனமாக அமைக்கலாம் எனச் சிந்திக்க முன்வருவதில்லை. ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் பாண்ட் வில்லனிடம் இருந்து தப்பிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், நடைமுறையில் இயலாததாயிருப்பினும் ரசிக்கத்தகுந்த வகையில் அவற்றில் ஒரு புத்திசாலித்தனம் இருக்கும். இங்கு ஒரு மண்ணும் இருக்காது... தப்பித் தவறி இருந்து விட்டால் அது எங்கோயிருந்து சுட்ட காட்சியாக இருக்கும். 'பிரேக் வயர் முழுவதும் உறுதியாக இருந்து எங்காவது ஒரு இடத்தில் பலகீனமாக இருந்தாலும் அறுந்து போகும்... தரமில்லாத பொருளை ஏண்டா தயாரிச்சேன்னு உறுமுற அந்நியன், தமிழ்த் திரை இயக்குநர்களைப் பார்த்து உறுமினால் நல்லது.

அது சரி, திருட்டுக் குறுந்தகட்டில் அந்நியன் பார்த்தால் கருட புராணத்தில் என்ன தண்டனை?


'அந்நியனில்' ஒரு காட்சி...
டாக்டர் நாசர்: அவருக்கு பிடித்துள்ளது மல்டிபிள் பெர்ஸனாலிட்டி டிஸாடர் என்கிற வியாதி...
மருத்துவ மாணவி சதா: அப்படீன்னா?

25.09.05

1 comment:

Nakkiran said...

//'அந்நியனில்' ஒரு காட்சி...
டாக்டர் நாசர்: அவருக்கு பிடித்துள்ளது மல்டிபிள் பெர்ஸனாலிட்டி டிஸாடர் என்கிற வியாதி...
மருத்துவ மாணவி சதா: அப்படீன்னா?///


Ha ha ha... poor student...