15.12.06

அப்சலும், க்ரீமி லேயரும் - 6 (இறுதி)

சமீப காலமாக, ‘இட ஒதுக்கீடு அல்ல, இடப் பங்கீடு என்பதே சரியான வார்த்தை, என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. கவர்ச்சிகரமாக இருக்கிறது என்ற அளவிலேயே, இவ்வாதத்தினை கண்ணுற்ற நான் பின்னர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அரசியலமைப்பு சட்டக்குழுவில் நடைபெற்ற விவாதத்தினை படிக்கையில் இடப்பங்கீடு என்ற கருத்தில் மிகவும் வலு இருப்பதாக உணருகிறேன். இந்த வகையான ஒரு விவாதம் துரதிஷ்டவசமாக இது வரை உச்ச நீதிமன்றத்தின் முன் நடந்த எந்த வழக்கிலும் வைக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏனெனில், கிரீமி லேயர் குறித்தான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் எவற்றிலும் இவ்வகையான வாதம் பற்றி குறிப்பு இல்லை.

கிரீமி லேயர் பாகுபாட்டினை உச்ச நீதிமன்றம் வகுத்ததில், எனது சிற்றறிவிற்கு பட்ட வகையில் சட்ட ரீதியிலான காரணம் இல்லை என்றே தோன்றுகிறது. உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையினை நம்மிடையே நிலவும் ‘இட ஒதுக்கீட்டின் பலன்களையெல்லாம், பிற்ப்படுத்தப்பட்டவர்களில் முற்ப்படுத்தப்பட்டவர்களே எடுத்துக் கொண்டு கீழ் மட்டத்தின் அதன் பலன்கள் சென்று சேராமல் தடுக்கிறார்கள்’ என்ற சாதாரண நடுத்தர வர்க்கத்து பொதுக்கருத்தினை வைத்தே அணுகியுள்ளது. இந்த ஒரு காரணத்தினை தவிர வேறு வலுவான காரணங்கள் எதுவும் இது வரை க்ரீமி லேயர் குறித்தான தீர்ப்புகளில் இல்லை!

இந்த பொதுக்கருத்திற்கு ஒரு சட்ட முலாம் பூசும் வண்ணம், மண்டல் கமிஷன் வழக்கில் பிற்ப்படுத்தப்பட்டவர்களில் முற்ப்படுத்தப்பட்டவர்களான ‘க்ரீமி லேயர்’ ஒரு தனி வகுப்பாக கருத்தப்பட்டு அந்த வகுப்பு ‘சமூக மற்றும் கல்வியில் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு’ என்பதின் விளக்கத்திற்குள் வராத வகுப்பாக கருதப்பட வேண்டும் என்று விளக்கம் மண்டல் கமிஷன் வழக்கில் கூறப்படுகிறது.

‘இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக பிற்ப்படுத்தி வைக்கப்பட்டவர்களை உயர்த்தும் ஒரு முறை அல்லது முற்ப்படுத்தப்பட்டவர்களுடன் போட்டியிட முடியாத வகுப்பினரை கை தூக்கி விடும் ஒரு கருவி’ என்ற பரவலான கருத்து சரியாக இருக்குமிடத்து இவ்வாறு ‘க்ரீமி லேயரையுமா கை தூக்கி விட வேண்டும்?’ என்ற கேள்வி எழுவது இயல்பே! ஆனால், இட ஒதுக்கீடு என்பது இவ்வாறு ‘கை தூக்கி விடும்’ கருவி மட்டுமல்ல. மாறாக இந்த நாட்டில் வசிக்கும் பல்வேறு மக்கள் குழுக்கள் அனைத்தும், போதுமான அளவில் அரசின் அதிகாரத்தில் பங்கேற்க வைக்கும் ஒரு ‘இடப் பங்கீடு’ என்று கூறப்பட முடியுமானால் அவ்வாறான ஒரு கேள்வி எழாது.

அரசியலமைப்பு சட்டக்குழு உறுப்பினர்களில் சிலர் ‘இட ஒதுக்கீடு’ என்ற அளவிலேயே இந்தப் பிரிவினை உணர்ந்து தங்களது கருத்தினை வைத்தாலும் அனைவரும் அவ்வாறு கருதவில்லை. உதாரணமாக மதறாஸ் இஸ்லாமிய உறுப்பினரான முகமது இஸ்மாயில் சாகிப் தனது உரையின் இறுதியில் கூறுவது கவனிக்கத்தக்கது,
‘Reservation in services is one of the measures we can adopt to bring about contentment among people. You can then say to the people, “Look here, you have your proper share in the services and you have nothing to complain” When people themselves find that they are given as good an opportunity as others, harmony will be there and so called communalism will not come at all ..... Therefore, I say that one of the ways of removing disharmony and producing harmony, is to make provision for the people’s representation in the services and to make them feel that they have got a real share and an effective share in the governance of the country’

குழுவில் உரையாற்றிய அனைவருமே, அரசுத்துறையில் போதுமான அளவில் அனைத்து வகுப்பினரும் பிரநிதித்துவம் பெற வேண்டும் என்ற அளவிலேயே இப்பிரச்னையினை அணுகியுள்ளதாக தெரிகிறது. இட ஒதுக்கீட்டிற்கு வழிகோலும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(4) கூறுவதும் அவ்வாறானதாகவே உள்ளது. அதாவது,
‘Nothing in this article shall prevent the state from making any provision for the reservation of the appointments or posts in favour of any backward class of citizen, which in the opinion of state, is not adequately represented in the services of the state’

எனவே இட ஒதுக்கீடு என்பது ஒவ்வொரு தனிப்பட்ட வகுப்பும் அரசு துறைகளில் போதுமான பிரநிதித்துவம் பெற வேண்டும் என்பதற்காகவே தவிர தகுதி குறைந்தவர்களை தூக்கி விடும் செயலல்ல என்ற கருத்து வலுவானதாகவே படுகிறது.

பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு (backward class) என்றால் என்ன என்ற கேள்வி குழுவின் விவாதங்களில் முக்கியமாக எழுப்பப்பட்டாலும், அதனை ஒரு வரையறைக்குள் கொண்டு வரவில்லை. ஏனெனில், சிறுபான்மையினர் இவற்றில் வருவார்களா என்ற சந்தேகம், சிறுபான்மை இன உறுப்பினர்களுக்கு இருந்தாலும், அவர்களையும் இந்த வரையறைக்குள் கொண்டு வர வேண்டுமென்பதாற்கவே ஜாதி (caste) என்று கூறாமல் வகுப்பு (class) என்று கூறப்பட்டதாக மண்டல் கமிஷன் வழக்கில் கூறப்பட்டது. மேலும், மார்க்சிய சிந்தனையிலான பொருளாதர அடிப்படையிலான வர்க்கம் என்று அர்த்தப்படவே படாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

எனவே ஒரு வகுப்பினை முன்னேற்றுவது என்பதனை விட அனைத்து வகுப்பிற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இந்தப் பிரிவின் நோக்கம் என்றே நான் நினைக்கிறேன். எனெனில், விவாதத்தின் இறுதியில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும், விவாதத்தினை முடித்து வைக்கும் வகையிலும் அம்பேத்கர் அவர்கள் பேசியது முக்கியமானதாகும்.
‘firstly, that there shall be equality of oppertunity, secondly that there shall be reservation in favour of certain communities which have not so far had a ‘proper look in’ so to say into the administration ..............................we had to reconcile this formula with the demand made by certain communities that the administration which has now- for historical reasons-been controlled by one community or a few communities, that situation must disappear and that the others also must have an opportunity of getting into public services’

இந்த விளக்கத்திற்கு பின்னரே அம்பேத்கர், மண்டல் கமிஷன் வழக்கில் பயன்படுத்தப்பட்ட 70 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட முடியுமா என்ற கருத்தினை எடுத்து வைத்து, எது பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு என்பதை அரசே தீர்மானிக்கட்டும் என்று கூறி விவாதத்தினை முடித்து வைத்தார். அம்பேத்கரின் இந்த விளக்கத்திற்கு பின்னரே இந்தப் பிரிவு அரசியலமைப்பு சட்டக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, நமது நாட்டில் ஜாதி ரீதியிலாகவோ, மத ரீதியிலாகவோ அல்லது மொழி ரீதியிலாகவோ தனித் தனி மக்கள் குழுக்கள் உள்ளன. காரணம் எதுவாக இருப்பினும், அரசு அதிகாரத்தில் ஒரு குழுவின் பங்கு மொத்த மக்கள் தொகையில் அதன் சதவிகிதத்திற்கு வெகுவான அளவில் குறைவாக இருக்கையில், அரசு அதிகாரத்தில் தமக்கு பங்கில்லை என்று கருத வாய்ப்பிருக்கிறது. அவ்வகையான பிளவினை தவிர்க்கவே இட ஒதுக்கீடு. இவ்வாறான நிலையில், ஒரு மக்கள் குழுவினை மொத்தமாக கணக்கில் எடுத்தல் மட்டுமே அரசியலமைப்பின் நோக்கத்தினை செயல்படுத்த ஏதுவாக இருக்கும்.

எனவே க்ரீமி லேயர் கொள்கை என்பது, சட்ட ரீதியிலானது அல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து. இட ஒதுக்கீட்டினை மேற்போக்காக அணுகுபவர்களுக்கு மட்டுமே, இது ஏதோ வலுமிக்க ஒரு கருத்து போல தோற்றமளிக்கும். உச்ச நீதிமன்றம் எவ்வாறு பொதுக்கருத்தினை ஒட்டி தனது க்ரீமி லேயர் சட்டத்தினை வகுத்துள்ளது என்பதற்கு சமீபத்திய உதாரணங்களை கூற முடியும்.

பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு, க்ரீமி லேயர் என்ற வகையில் உச்ச நீதிமன்றமானது எவ்வித விமர்சனத்துக்கும் ஆளாகாமல் தப்பித்துக் கொண்டது. ஏனெனில், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பதே, நான் ஏற்கனவே கூறியபடி தமிழகத்தினை தவிர பிற மாநிலங்களில் ஏதோ குற்ற உணர்வுடனே ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கருத்தாக உள்ள நிலையில் க்ரீமி லேயர் கொள்கையினை எதிர்த்து யாரும் வாயை திறக்கக் காணோம். ஆனால், நாகராஜ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அட்டவணைப் பிரிவினரிடையும் க்ரீமி லேயர் கொள்கையினை வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டதுமே, க்ரீமி லேயர் கொள்கைக்கு எதிரான கருத்துகள் வைக்கப்பட்டன. எதிர்வினைகள் பலமாக இருந்தது. உடனடியாக அட்டார்னி ஜெனரல் மிலன் பானர்ஜி ‘நாகராஜ் வழக்கின் முடிவு இந்திரா சஹானி வழக்கிற்கு மாறாக உள்ளது, எனவே அது ஏற்றுக்கொள்ளப்படாது’ என்கிறார் (இதனை எடுத்துக்காட்டி திரு.பத்ரி தனது வலைப்பதிவில் பிரச்னை முடிவுக்கு வந்ததாக எழுதுகிறார். பத்ரி அவர்களை இவ்விதமான கருத்தாங்களுக்கு ஒரு அடையாளமாக கொண்டால், ‘அப்பாடா, இதை இனி யாரும் கிளற வேண்டாம்’ என்ற தொனி புரியும்).

இந்துவில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் விஸ்வநாதன், நாகராஜ் வழக்கில் அட்டவணைப்பிரிவினருக்கு க்ரீமி லேயர் என்பதாக கூறப்படவில்லை என்று எழுதுகிறார். உடனே ‘ அட்டவணைப் பிரிவினருக்கு ஆபத்தில்லை. யாரும் கலவரப்படத் தேவையில்லை’ என்ற வகையில் இது குறித்த விவாதத்தினை அமர்த்தும் வண்ணம் ஒரு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஆந்திர அரசு அட்டவணைப் பிரிவினருக்குள் ‘உள் இட ஒதுக்கீட்டினை’ அமுல்படுத்தும் ஒரு சட்டம் கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றம், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்குள் BC, MBC என்று பிரிப்பதைப் போல அட்டவணைப்பிரிவினரை பிரிக்க இயலாது என்று கூறிய தீர்ப்பினை எடுத்துக் காட்டி பிற்ப்படுத்தப்பட்டவர்களைப் போல அட்டவணைப்பிரிவினரை கருதுதல் இயலாது என்றும் கூறப்பட்டது. இப்போது இந்த பிரச்னை முழுவதுமாக அமுக்கப்பட்டு விட்டது.

ஆனால், நாகராஜ் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகவே க்ரீமி லேயரை சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில், அந்த வழக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிரச்னை தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தினைப் பற்றியது. அந்த திருத்தத்தினை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் தெளிவாகவே கூறுகிறது
‘These impugned amendments are confined only to SCs and STs. They do not obliterate any of the constitutional requirements, namely, ceiling-limit of 50% (quantitative limitation), the concept of creamy layer ...................................We reiterate that the ceiling-limit of 50%, the concept of creamy layer ................... are allconstitutional requirements’

உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை எவ்வாறு எடுத்துக் கொண்டாலும், நான் கூற வருவது என்னவென்றால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடானது நாடு தழுவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றான கருத்தாக இருக்கையில், க்ரீமி லேயர் குறித்தும் வலுவான எதிர் கருத்து இல்லை. எனவே, பத்திரிக்கைகள் நாகராஜ் வழக்கில் க்ரீமி லேயர் பற்றிக் கூறப்பட்டதை பெரிய அளவில் செய்தியாக்க தேன் கூட்டினை கலைத்தது போல ஆவேசமான எதிர்ப்புகள் எழுந்தன. அதனை மட்டுப்படுத்தும் வண்ணமே, ஏற்கனவே கூறிய சப்பைக்கட்டுகள்!

இக்கட்டுரை முழுவதும் நான் எடுத்து வைத்த எனது அனுமானங்கள் சரியாக இருப்பின், அட்டவணைப் பிரிவினருக்கும் க்ரீமி லேயர் கொள்கை பொருந்தும் என்று தெளிவாக ஒரு தீர்ப்பினை தர உச்ச நீதிமன்றம் தயங்கும். தொடர்ந்து நடக்கும் செய்திகள் எனது அனுமானம் சரியே என உணர்த்துகிறது.

இறுதியாக, பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே க்ரீமி லேயர், தாழ்த்தப்பட்டவர்களுக்கல்ல. க்ரீமி லேயர் கொள்கையினை வரையறுத்த மண்டல் கமிஷன் வழக்கு அட்டவணைப் பிரிவினருக்கல்ல என்று பிரச்னையினை தணிக்கும் எவருமே, ஏன் அவ்வாறு பொருந்தாது என்று கூறுவதில்லை. ஏனெனில், க்ரீமி லேயருக்கு ஏன் இட ஒதுக்கீடு கூடாது என்ற பொதுக்கருத்தினை சட்டக் கருத்தாக வைத்த உச்ச நீதிமன்றத்தின் காரணங்கள் அப்படியே அட்டவணைப் பிரிவினருக்கும் பொருந்தும். பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு க்ரீமி லேயர் என்றால், அட்டவணைப் பிரிவினருக்கும் அப்படியே!

ஆனால், அவ்வாறில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறுமானால், ‘பொதுக்கருத்துகளும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பாதிக்கும் ஒரு காரணி’ என்ற எனது அனுமானம் உண்மையாகும். அப்படி ஒரு நிலையில் அது அப்சல் வழக்கானாலும் சரி, இட ஒதுக்கீடு பிரச்னையானாலும் சரி......நீதிமன்ற தீர்ப்பினைப் பொறுத்து ஆர்ப்பாட்டங்கள் கூடாது என்று கூறுவதில் நியாயம் இல்லை, ஏனெனில் ஆர்ப்பாட்டம் என்பது பொதுக்கருத்தினை உருவாக்கும் முக்கியமான கருவிகளில் ஒன்றுதானே!
முடிந்தது...

(இந்த தொடர் கட்டுரை, நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் கூடாது என்று ‘எண்ணங்கள்’ பத்ரி நாராயணன் தனது பதிவில் எழுதியதால், உந்தப்பட்டு எழுதியது. இட ஒதுக்கீட்டின் நியாயங்களை வலியுறுத்தியோ அல்லது அப்சலுக்கு அளிக்கப்பட்ட தண்டனையினை குறித்ததோ அல்ல. அது குறித்து எழுதுவதாயின்.......மேலும் விளக்கமாக சிலவற்றை எழுத வேண்டியிருக்கும்)

4 comments:

டண்டணக்கா said...

Thanks for such a interesting article. Now, I can better understand your point of "common feelings" shouldn't be counted by a judge.

Thanks.

தருமி said...

//இட ஒதுக்கீடு சம்பந்தமாக அரசியலமைப்பு சட்டக்குழுவில் நடைபெற்ற விவாதத்தினை படிக்கையில் இடப்பங்கீடு என்ற கருத்தில் மிகவும் வலு இருப்பதாக உணருகிறேன்..//

சந்தோஷம்.

i will get back after going thru all your posts on this.
தலைப்பில் உள்ள இறுதி என்ற சொல்லுக்கு முன்னால் 'இப்போதைக்கு' என்று சேர்த்தால் சரியாக இருக்குமோ?

குழலி / Kuzhali said...

நன்றி பிரபு, உங்களின் இந்த தொடர் பதிவு சில சட்ட விடயங்களை புரியவைத்தது.... இந்த பதிவுகளை வருங்காலங்களில் இடஒதுக்கீடு பற்றி எழுதும்போது பயன்படுத்திக்கொள்ள அனுமதி கோருகிறேன்....

நன்றி

PRABHU RAJADURAI said...

Kuzhali,
Anyone has my permission to use whatever I say here in their articles. It is my honour. What I require is just an intimation that something else been written, connected to what I write here.