27.10.06

விண்டோஸும் நானும்...

"விண்டோஸ்" என்றால் என்ன? அது மற்ற மென்பொருட்களினும் எப்படி வேறுபடுகிறது என்று தாங்கள் உணர்ந்த அனுபவத்தைக் விவரிக்கவும்?" இப்படி ஒரு கேள்வியை கேட்டது க்ருபா ஷங்கர், சில வருடங்களுக்கு முன்னர் மரத்தடி குழுமத்தில். அதற்கு என்னுடைய பதில்...

'விண்டோஸை மறைக்கப் போடப்படும் ஸ்கிரீன்தான் மென்பொருள். விண்டோஸ் கடினப்பொருளாக இருக்க வேண்டும்' என்று எழுதும் அளவிற்கு நான் அறிவிலி இல்லையெனினும் எனது கம்பியூட்டர் அனுபவங்களை கேட்டால் அதற்கு கிட்டத்தில் வருவேன் போல. மூன்று வருடங்களுக்கு முன்னர் கணணி ஒரு கனவாகவே இருந்து..பின்னர் ஏதோ விளையாட்டுக் கருவி என்று வாங்கியது. அதற்கு முன்னர் வலையத்தைப் பற்றிய யூகங்கள் எல்லாமே பெரிய கதையாக எழுதலாம். எனினும், கணணியை வாங்கப் போன இடத்தில் நான் முழிப்பதை வைத்தே அந்தப் பெண், 'உங்களுக்கு இது தெரியும்தானே இதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது தெரியும்தானே' என்று பல முறை கேட்டார்கள். அவர்களிடம், விண்டோஸ் மென்பொருளோடு தரப்படும் விளக்கப் புத்தகத்தை காண்பித்தவாறு, 'நான் இதை முழுவதும் படிக்கும் வரை இதை தொடப்போவதில்லை. ஒவ்வொன்றாக படித்தே இயக்குவேன்' என்று சவால் விட்டேன். (பல நாட்கள் கழித்துதான் தெரிந்தது, மும்பையிலேயே 3500 ரூபாய்க்கு ஒரிஜினல் விண்டோஸ்98 வாங்கிய முட்டாள் நான் மட்டும்தான் என்பது). அவள் கேட்டதில் தவறில்லை. ஏனெனில், 'என்ன சாப்ட் வேர் லோட் பண்ண வேண்டும்' என்று கேட்ட பொழுது என்ன சொல்வது என்று குழம்பி, வெட்கம் பார்க்காமல், கம்பியூட்டர் விற்கும் போது என்னென்ன செய்வீங்களோ அதெல்லாம் செய்யுங்க' என்றேன். ஆனை வாங்கியவன் அங்குசம் வாங்க யோசிப்பது போல விற்பனையாளரிடமே லஜ்ஜையின்றி, 'ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கேன். ஏதாவது சிடி இருக்கா?' என்றேன். அவரும் மிகவும் பெருந்தன்மையாக, 'இந்தாங்க ஒரு கலைக்களஞ்சியம்' வச்சுருக்கேன்' என்றார். மிகவும் சந்தோஷமாகி விட்டது.

கணணி வீட்டுக்கு வந்ததும் எல்லாம் மாறிவிட்டது. பொறியாளர்கள் ஒவ்வொன்றாக லோடு செய்யும் போது கலர் கலராக படங்கள் தோன்றுவதும்...இசை வருவதும் நான், மனைவி, மகள் பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களை எவ்வளவு சீக்கிரம் துரத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் துரத்தியாகி விட்டது.

ஆசையாய் அந்த கலைக்களஞ்சியத்தை பிரித்து உள்ளே அனுப்பினால்...ஒன்றும் வரவில்லை. எங்கெங்கோ உள்ள ஐகான்களை அமுக்கி, பலனில்லை. எப்படியோ மை கம்பியூட்டரில் திறந்து அங்குள்ள சிடி படத்தை அமுக்கி...சிடியில் உள்ள போலடரையெல்லாம் ஒவ்வொன்றாக திறந்து பார்க்கிறேன். மூச்சுக் காற்று என் முதுகில் புஸ் புஸ் என எனது மனைவியும் மகளும் பின்னே... ஒவ்வொரு பைலாக திறக்க ஏதோ சில செய்திகள்...சில மேப்கள் அதுவும் பகுதி பகுதியாக. சுமார் ஒரு மணி நேரம் அதிலேயே கழிந்தது. அவ்வளவுதானா என்றிருந்தது.... 'சரி, இது ·பிரீ சிடியில்லையா? இவ்வளவுதான் இருக்கும்' என்று ஒரு சமாதானத்தோடு அன்று கழிந்தது. எனது பதில் மீது எனது மனைவிக்கும் நம்பிக்கை இல்லை. எனக்கும் நம்பிக்கை இல்லை. ஆனாலும், ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்ளாத ஒரு மெளனம் நிலவியது. பல நாட்கள் என் மனைவி அருகில் இல்லாத போது நான் அந்த சிடியை உள்ளே போட்டு முயற்சி செய்வதும் அவர்கள் அருகே வந்தவுடன் வேறு எதையோ நோண்டுவதுமாக கழிந்தது. இப்படியாக இருக்கும் போதுதான் ஒரு முறை என் நண்பன், 'அட அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்' என்றான். இந்த ஒரு வார்த்தை போதாதா...ஏதோ இன்ஸ்டால்...அதன் பின்னர் ஒரு நாள் எப்படியோ ஏதையோ பிடித்து அமுக்கினால்...இன்ஸ்ட்ரகஷன் தானாக வர வர...ஆஹா! என்ன ஒரு அருமையான என்சைக்ளோபீடியா! படங்கள் என்ன? வீடியோக்கள் என்ன? ஆனால் அன்றும் மனைவி என்னிடம் ஏதும் கேட்கவில்லை. நாந்தான் அசடு போல வழிந்தேன். பின்னர்தான் ஆட்டோரன் எல்லாம் நான் அறிந்தது. பின்னர் அறிந்த மற்றொன்று, அந்த சிடி டிவி சாரி மானிட்டரோடு கொடுக்கப்பட்ட இலவச சிடி என்று!

அடுத்து ஒரு நாள் விண்டோஸ் வரவில்லை. விற்பனையாளரைப் பிடித்து டோஸ் மேல் டோஸாக விட்டுக் கொண்டிருந்தேன். அவர் வருகிறேன் வருகிறேன் என்றார். இரண்டு நாள் ஆயிற்று. இதற்குள் பலமுறை ஸ்டார்ட் செய்திருப்பேன். மற்ற விஷயமென்றால் கோபத்தில் உதைத்திருப்பேன். 50000 ரூபாயாயிற்றே! எரிச்சலில் பிளாப்பி டிரைவில் இருந்த பிளாப்பியை தூக்கி கடாசினேன். ஒரு தட்டு ....அட...இதோ விண்டோஸ்! இரண்டாவது பாடம்.

பின்னர் விண்டோஸ் என்னைப் படுத்தியதை விட அதை நான் போட்டு படுத்தியதுதான் அதிகம். முதலில் எனது பெயரில் ஒரு போல்டர்....அந்த போல்டரை திறந்தவுடன் எனது பெயரை பெரிதாக பார்த்தவுடன் என்ன ஒரு மகிழ்ச்சி...அட நம்ம பெயரெல்லாம், திரையில் வருகிறதே என்று. சினிமாத் திரையில் டைரக்ஷன் என்று என் பெயர் வந்த மாதிரி ஒரு மகிழ்ச்சி! அடுத்த ஒரு வருடத்தில் எனது கணணியில் பைல்கள் மற்றும் போல்டர்கள் பெயர் மாற்ற்ம்...இட மாற்றாம் செய்தது போல வேறு யாருடைய கணணியிலும் செய்திருக்க முடியாது. போதாதற்கு நான்கு பார்ட்டிஷன்கள் வேறு. இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கே என்று...பாவம் இந்த விண்டோஸ். இப்போது எனது டெஸ்க் டாப்பில் புதிய பெயர்களில் சீராக நான் போல்டர்களையும் ஷார்ட் கட்களையும் அடுக்கியிருப்பது போல யாருடைய கணணியிடமும் பார்த்ததாக எனக்கு நினைவில்லை.

மைக்ரோசாப்ட் வோர்ட் எல்லாம் விண்டோஸ்தான் என்று வெகு நாட்களாக நினைத்து வந்தேன். அது என்ன? சன் டிவிதான் கேபிள் டிவின்னு பலர் இங்க நினைப்பது மாதிரி விண்டோஸ்தான் கம்பியூட்டர்னும் நினைத்து வந்தேன். குழுமத்தில் மற்றவர்களின் உரையாடலைக் கவனித்ததால், என்னையறியாமலேயே நான் கற்ற பாடம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சாப்ட் வேர்...அதாவது அதனால் நேரடி பயனில்லை. பிற உபயோகமான மென்பொருட்கள் இயங்க அது ஒரு தளமாக இருக்கிறது. அதாவது வணிகப் பாடத்தில் மத்திய வங்கி (நம்ம ரிசர்வ் வங்கி) போலவும் சட்டப்பாடத்தில் அரசியலமைப்புச் சட்டம் போலவும்...சரிதானே

ஆனாலும் நேற்று சாலையில் நடக்கையில் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் இது....சரி மற்ற மென்பொருட்களை ஏற்றுவதற்கு விண்டோஸ் உதவி செய்கிறது. அப்படியாயின் முதன்முதலில் விண்டோஸை எப்படி கம்பியூட்டரில் ஏற்றுகிறார்கள். மென்பொருளே இல்லாதிருக்கையில் கம்பியூட்டரை ஆன் செய்தால் என்ன வரும்....கிருபா அடுத்தமுறை சென்னை வரும்போது மென்பொருள் இல்லாத ஒரு கம்பியூட்டரை ஆன் செய்து காட்டவும்....புண்ணியமாகப் போகும்.
மும்பை

( பின்னர் சென்னை சென்ற பொழுது, இந்த வேண்டுகோளை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு க்ருபா எனக்கு மென்பொருள் இல்லாத கம்பியூட்டரை போட்டு காண்பிக்கிறேன்னு நின்னான்...இப்ப கலியாணம் ஆயிடுச்சு அதானால நின்னார். நேரம் வாய்க்கவில்லை)

4 comments:

Anonymous said...

என் அனுபவம் போலவே இருக்கிறதே.

தமிழிலேயே கம்யூட்டர் வந்துவிட்டது என்று 'ழ' கணினி விளம்பர கட்டுரைகளை பத்திரிகைகளில் பார்த்துவிட்டு விற்பனையாளரிடம் தமிழ் கம்பியூட்டர் கேட்டபோது அது பத்திரிகைக் கடையில் தானே கிடைக்கும் என்பது போல அவர்கள் விழித்த விழியில் தான் கம்பியூட்டர் எல்லாம் தமிழில் இருக்காது என்பதும் அது இயக்க மென்பொருள் என்பதும் தெரிய வந்தது.

அவர்கள் அப்போதும் விண்டோஸ் 98 இன்ஸ்டால் செய்து கொண்டிருக்க நானோ விண்டோஸ் எக்ஸ்பி (தமிழ் கம்பியூட்டர் பத்திரிகையில் படித்தது) கேட்டு வாங்கி ஒன்றும் அறியாமலே விண்டோசை உழுது பழகியதை மறுபடி நினைவு படுத்தி விட்டீர்கள்! நன்றி. (இப்போது டெஸ்க்டாப் ஐகான்கள் எல்லாம் தமிழில்.... ஸ்கிரீன் சேவரில் கூட தமிழ் ஓடுகிறது. [marquee=தேமதுரத் தமிழோசை உலகமெலாம் கேட்கும் வகை செய்தல் வேண்டும்])

Gurusamy Thangavel said...

நான் ரொம்பநாளா மானிட்டர்தான் கம்ப்யூட்டர்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அதுமாதிரி ஒருமுறை DOSக்குள்ள போயிட்டு எப்படி விண்டோஸுக்கு வர்ரதுன்னு தெரியாமலும் முழிச்சிருக்கேன். உங்க பதிவு அதையெல்லாம் ஞாபகப்படுத்தி விட்டது.

ஞானவெட்டியான் said...

அன்பின் பிரபு,
தீநரியில் தங்கள் இடுகை படிக்க இயலவில்லயே! ஏதேனும் செய்யுங்கள்.

பாலராஜன்கீதா said...

டாஸ் மட்டுமே பழகிவிட்டு, விண்டோஸ் எதற்கு, மவுஸ் எதற்கு என்றெல்லாம் கேள்விகள் கேட்டவர்கள் நாங்கள் :-)))