12.10.06

மகிழ்ச்சி!

(மரண தண்டனையினைப் பற்றிய எனது பதிவினைப் படித்த நண்பர் ஒருவர் என்னை தீவிரவாதி என்றதாக தமிழினி முத்துவின் பதிவில் படித்தேன்...நண்பரின் தீவிரத்தை குறைப்பதற்காக, நான் இணையத்தில் முதன் முதலில் எழுதியது)


“மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களில் ஒளிந்திருக்கிறது. இவ்விஷயங்களைக் கண்டு கொள்பவர்கள் மகிழ்ச்சியினையும் தேடிக்கொள்கிறார்கள்” என்று சில நாட்களுக்கு முன்பு படித்தேன். வலையக நண்பர்கள் பல பெயர்களில் குழுக்களை அமைத்துக் கொண்டு தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் சிறிய பல தகவல்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணமாக கூறலாம்.

இவ்விதமான சிறிய ஆனால் சுவராசியமான தகவல்களை தொகுத்து எழுதும் பிரபல எழுத்தாளரான சாருநிவேதிதா 'பிரட் உப்புமா' என்ற ஒன்றை எப்படிச் செய்வது என்று கூறி அது எவ்வாறாக கொத்துப் புரோட்டா போல இருக்கும் என்று சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வலைப்பக்கத்தில் சிலாகித்து எழுதியிருந்தார். அந்த எழுத்தாளர் லேசாக சொல்லிவிட்டுப் போன பைசா பெறாத சாதாரண ஒரு விஷயம், அதனைப் படிக்கையில் ஒரு ஐந்து வருடம் என்னை பின்னோக்கி இழுத்துச் சென்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பு மனைவி மகளை சென்னையிலேயே விட்டுவிட்டு, மும்பைக்கு வேலை காரணமாக தனியாக வந்தேன். ஹோட்டல் சாப்பாடு வெறுத்துப்போன நேரங்களில் நானே கண்டுபிடித்து 'யுரேகா' என்று கொண்டாடி பின்னர் அடிக்கடி எனது மனைவியிடம் பெருமையடித்துக் கொண்ட ஒரு 'ரெசிப்பி'க்கு வேறு ஒரு சொந்தக்காரரும் இருக்கிறார் என்று அந்த எழுத்தாளரின் கட்டுரையை படித்த பின்னர்தான் புரிந்தது.

சிலர் சமைத்துப் பறிமாறுவது அழகு. என் மனைவி உட்பட. ஆனால் சிலர் சாப்பிடுவதே அழகு. அப்படி எனக்கு ஒரு இஸ்லாமிய நண்பர் உண்டு. நான் அடிக்கடி அவரிடம் சொல்லியிருக்கிறேன், 'நான் மட்டும் பொண்ணாயிருந்தால், நீ சாப்பிடும் அழகுக்கே உன்னை கல்யாணம் பண்ணுவேண்டா' என்று. அப்படி ஒரு சாப்பாட்டு ரசனையாளர். மும்பைக்கு நான் வந்த ஒரே மாதத்தில் என்னையும், மும்பையினையும் பார்க்க வந்தவர், எனது 'பிரட் உப்புமா'வை சாப்பிட்டுப் பார்த்து விட்டு கொடுத்த சான்றிதழ்தான் 'கொத்துப் புரோட்டா மாதிரி இருக்குடா' என்பது. அதையே அந்த எழுத்தாளரும் ஐந்து வருடம் கழித்து எழுதி, நான் படிக்கையில் அட! என்று ஒரு சின்ன மகிழ்ச்சி. மும்பை நெரிசலில் ஒரு பத்து நிமிடம் மகிழ்ச்சியாக கழிந்ததாக அந்த எழுத்தாளருக்கு எழுதினேன்.

முதன் முதலாக மனதில் தைரியம் கொண்டு ஒரு எழுத்தாளருக்கு எழுத நேர்ந்ததற்கு வேறு இரண்டு காரணங்களும் இருந்தன. இப்போதும் அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. நான் கதைகள் படிப்பதை விட்டு வெகுகாலமாகி இப்போதுதான் இணையத்தில் வெளியிடப்படும் கதைகளை படித்து வருகிறேன். இலக்கியம் பற்றி அதிக பரிச்சயமோ அல்லது தெளிவான மதிப்பீடுகளோ எனக்கு இல்லை. ஆனால் ஒரு சிறிய சந்தேகம். அதாவது உங்களுக்கு இந்த காக்கா-பாட்டி-வடை-நரி கதை தெரிந்திருக்கும். இதனது வீச்சுக்கும், வசீகரத்துக்கும் சவால் விடக்கூடிய வேறு ஒரு கதை உண்டா? என்பது ஒரு கேள்வி.
எனக்குத் தெரிந்து இந்தக் கதை தெரியாமல் வளர்ந்த யாரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. என்னுடைய மகள் ஒரு ஐம்பது தடவையாவது இந்தக்கதையை என் மூலம் கேட்டிருப்பாள். ஆனால் என் சந்தேகம் இதுதான். இதுவும் ஒரு ஈசாப் கதைதானா? அல்லது தமிழகக் கதையா? இதனது மூலம் என்ன? எனது வலையகத்தில் சிலரைக் கேட்டேன். ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து வந்த கடிதங்கள் 'அங்கு இது அறியப்படவில்லை' என்று சொன்னது. நியுஸிலந்து நாட்டின் ஒரு கடிதம் 'இது ஈசாப் கதைதான்' என்றது. மற்றொன்று 'கேள்விப்பட்டிருக்கவில்லை' என்றது. இரானிலிருந்து ‘ஆ'மாம், இது ஒரு புகழ் பெற்ற கதை. எங்கள் புத்தகத்தில் உள்ளது' என்றார். ஈழத்துத் தங்கை சந்திரமதி 'இதுதான் நான் கேட்ட முதல் கதையா என்று அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன்' என்றார். இன்னமும் ஒரு தெளிவான பதில் கிடைக்கவில்லை என்பதால் இதைப் படிக்கும் யாரும் எனக்கு உதவலாம்.

உங்களுக்கு மூன்று அல்லது நான்கு வயதில் குழந்தையிருந்தால், சற்று நேரமுமிருந்தால், டெலிவிஷன் பார்க்காத ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்தில் இதைச் செய்து பாருங்கள். உங்கள் குழந்தை காக்காவாகவும், உங்கள் மனைவி/கண்வர் பாட்டியாகவும், நீங்கள், அட நீங்கள் யாராயிருந்தால் என்ன, நரியாகவும் மாறி ஒரு சின்ன 'skit' நாடகம் நடித்துப் பாருங்களேன். அந்த நாளில் முடிவில், அது ஒரு மகிழ்ச்சியான நாள் என்று குறித்து வைத்துக் கொள்வீர்கள். அந்த நாள் என்ன! இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட தற்போது எட்டு வயது நிரம்பிய எனது மகளிடம், அவள் எப்படி தனது சிறு கைகளை குவித்து நீட்டி, "பாட்டி பாட்டி எனக்கு வடை பசிச்சு வருது பாட்டி. ஒரு தொப்பை குடு பாட்டி" என்று வசனத்தை மாற்றி சொன்னாள் என்று சொல்லிச் சிரிக்கையில் வீட்டில் சில நிமிடங்கள் சந்தோஷ அலை பரவியது.

அடுத்து, இது ஒரு சந்தேகம் இல்லை. ஆனாலும் இதைப் படிக்கும் நண்பர்களும் இவ்வித அனுபவம் இருக்கும். நமது தமிழ் சினிமாக்களில் கதாநாயகியின் காதலைப் பெறுவதற்கு கதாநாயகன் படும் பாடு பெறும் பாடு. ஒரு படத்தில் பெரிய கட்டிடத்தில் இருந்து குதிக்கிறான். இப்படியெல்லாமா செய்வார்கள், முட்டாள்கள் என்று கேலியாகச் சிரிப்பதுண்டு. 'அட, நன்றாகப் படித்து பெரிய வேலைக்குப் போனால், அவங்கப்பன் 'அக்காளைக் கட்டிக்கிறயா இல்லை தங்கச்சியக் கட்டிக்கிறயா' என்று கேட்க மாட்டானா' என்று கிண்டலும் அடித்ததுண்டு. ஆனால் இந்த காதல் படுத்தும் பாடு!


ரொம்பக்காலம் முன்பு, எப்போது எப்போது என்பதெல்லாம் தேவையில்லை, பைக்கில் நண்பரோடு போய்கொண்டிருந்தேன். அந்த பஸ்-டாண்டை கடந்த போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எந்தப் பெண் என்பதும் இப்போது முக்கியமல்ல. ஒரு நிமிட நேரம்தான். கடந்து போயாகி விட்டது. நண்பரை அவரது வீட்டில் விட்டு விட்டு சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அந்த வழியே திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த பஸ்-டாண்டை கடந்த போது, கண்கள் என்னையறியாமல், இல்லை அறிந்தேதான் அந்தப் பெண்ணை தேடியது. அறிவு அப்போதே சொன்னது, 'முட்டாள் இரண்டு மணி நேரமாகவா டவுண் பஸ்ஸ¤க்கு நிற்ப்பார்கள்' என்று. ஆனால் காதல் கொண்ட மனம் கேட்கவில்லை. நினைத்துப் பார்க்கையில் இப்போதும் ஒரு சின்ன மகிழ்ச்சி!


மும்பை


(நக்கீரன், ரோசாவசந்த், உங்களது கேள்விகளுக்கு சிறு பதில் எனது முந்தைய பதிவில்...)

4 comments:

Anonymous said...

மிக அழகான பதிவு.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.. :)

நன்றி பிரபு (அண்ணா - for old times sake) :smile:

-மதி

Nakkiran said...

Pleasant one..

:-)

டண்டணக்கா said...

/*
பஸ்-டாண்டை கடந்த போது, கண்கள் என்னையறியாமல், இல்லை அறிந்தேதான் அந்தப் பெண்ணை தேடியது...
*/
:))))
Ok, leave the smiles apart...Have you ever tried anaylse why so? Especialy the concise and atomic influence of it?
...
I always wondered about it.