2.10.06

விஷம் கக்கிய பாம்பு!

முன்னுரை

கடன் வாங்குவதற்கு பழமையான, அதே சமயம் எளிமையான வழி பிராமிசரி நோட்டு (promissory note). புரோ நோட்டு என்பது கடனை திருப்பிச் செலுத்துவதாக உறுதி கூறி எழுதிக் கொடுக்கப் படும் ஒரு ஆவணம். நிறுவன பங்குகளைப் போல பிராமிசரி நோட்டில் எளிதில் மாற்ற வல்ல பல வசதிகள். மேலும் மேலும் பிராமிசரி நோட்டினை வைத்து தொடரப்படும் வழக்குகளில் வாதிக்குச் சாதகமான சில அனுகூலங்கள் உண்டு. பொதுவாக பிராமிசரி நோட்டு வழக்குகள் எளிதில் முடிந்து விடும்...அந்த கையெழுத்தே மோசடி என்று பிரதிவாதி வழக்காடாத பட்சத்தில். அப்படி ஒரு பிராமிசரி நோட்டு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. எதிர் வழக்காட வந்தவர், திறமையான அதே சமயம் தைரியம் மிகுந்த ஒரு வக்கீல். பொதுவாக புரோ நோட்டு வழக்குகளில் நீதிபதிக்கு அதிக வேலையில்லை. தீர்ப்பது எளிது...

நீதிபதி கேட்டார் பிரதிவாதி வக்கீலிடம், 'என்ன...வழக்கை எதிர் நடத்தப் போகிறீர்களா?'

'ஆமாம், யுவர் ஹானர்'

'புரோ நோட்டு கேஸு என்ன டிபன்ஸ் (defense)' அசுவராசியமாக நீதிபதி. அவருக்குத் தெரியும் கட்சிக்காரனிடம் பீஸ் கறப்பதற்கென்றே வம்படியாக சிலர் வழக்கு நடத்துவர் என்று.

'நான் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன், யுவர் ஹானர்' உடன் வந்தது பதில்.

'என்ன! ம்ம்ம்...என்ன சாட்சி' பொதுவாக ஒரு பத்திரதின் பெயரில் கடன் பெற்றவர்கள் எழுத்து பூர்வமாகவே அதனை திருப்பிச் செலுத்துவர். ஆனால் அப்படி பணம் செலுத்தியதற்க்கான குறிப்பு எதுவும் அந்த புரோ நோட்டில் காணப்படவில்லை.

'ஒரல் (oral) யுவர் ஹானர்' ஒரல் என்பது வாய்மொழிச் சாட்சி.

'ஓ! ஓரலாஆஆ....' நீதிபதி கேலியாக இழுத்தார்.

சற்றும் தயங்காமல் அந்த வக்கீல், முகத்தை மிகவும் žரியஸாக வைத்துக் கொண்டு, குரலை உயர்த்திய படி, 'In the Sessions Courts, Your Honour, they are sending people to gallows on the evidence, which is ORRRAAALLL......'

"கிரிமினல் நீதிமன்றங்களில் குற்றவாளிகளை வெறும் வாய்மொழிச் சாட்சியின் அடிப்படையில் தூக்கு மேடைக்கே அனுப்புகிறார்கள். பிசாத்து, பிராமிசரி நோட்டுக்கு அதனை நம்பக் கூடாதா?' என்பதுதான் அதன் அர்த்தம் என்றாலும்...இறுதியில் அவர், அந்த நீதிபதி கேலியாக 'ஒரலாஆஆ' என்று சொன்னதற்கு இணையாக தானும் அப்படியே திருப்பியடித்ததுதான் வேடிக்கை.

நீதிபதிக்கு முகம் சுண்டிப் போனது. பேசாமல் வழக்கை ஆரம்பிக்க உத்தரவிட்டார்.

வக்கீலின் பதில் அந்த சந்தர்ப்பத்தில் சரியான வாதம் என்றாலும்...சட்டத்தின் படி அதில் பல ஓட்டைகள் இருக்கிறது. உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஒரு வழக்கினை நிரூபிக்க சாட்சிகள் அவசியம். வாய்மொழிச் சாட்சிகள் மற்றும் ஆவணச்சாட்சிகள் (Oral Evidence and Documentary Evidence). 'வாய்மொழிச் சாட்சி (மனிதர்கள்) பொய் பகரலாம் ஆனால் ஆவணங்கள் பொய் கூற இயலாது' என்பது சட்டக் கருத்து. எனவேதான் உலகம் முழுவதும் உள்ள சட்டங்கள், ஆவணச் சாட்சி இருப்பின் அதனை எதிர்த்து வாய்மொழிச்சாட்சியினை அனுமதிப்பதில்லை.

ஆனால் பொதுவாக குற்றவியல் வழக்குகளில் வாய்மொழிச் சாட்சியே பிரதானம். எப்படி கொலை நடந்தது என்று எந்த ஆவணத்தினை வைத்து நிரூபிப்பது. எனவே மனிதர்களின் வாய் வார்த்தையினை வைத்துதான் வழக்கு நிற்க முடியும். அதே காரணத்திற்காகத்தான் குற்றவியல் வழக்குகளில் சாட்சிகளின் குறுக்கு விசாரணை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சாட்சி கூறுவது உண்மையல்ல என்று எடுத்துரைக்க, குற்றம் சாட்டப் பட்டவரிடம் உள்ள ஒரே ஆயுதம் குறுக்கு விசாரணைதான். உரிமையியல் (civil) வழக்குகளில் அப்படியல்ல. ஆவணத்தை வைத்து வழக்கு உண்மையா? பொய்யா? என்பது விளங்கி விடும்.

ஆக சில நபர்களின் வாய் வார்த்தைகளில்...ஒரு குற்றவாளியினை தூக்கு மேடைக்கு அனுப்பமுடியும். நான் இவ்வளவு விளக்கமாக சொல்லிக் கொண்டு போவது, எங்கனம் ஒரு கிரிமினல் வழக்கில் பல ஆவண சாட்சிகள் செய்ய முடியாத ஒரு காரியத்தை, சிலரின் வாய் வார்த்தைகள் சாதித்தது என்பதை சொல்வதற்காகத்தான்.

சட்டக் கருத்தெல்லாம் இந்த வழக்கில் முக்கியமில்லை. அதைவிட முக்கியம் இந்த வழக்கு எப்படி அமெரிக்க மக்கள் நீதியினை நிலை நாட்ட உறுதியுடன் நிற்கிறார்கள் என்பதற்கும், எவ்வாறு அங்கு சாதாரண மக்கள் தங்கள் கஷ்டங்களை பொருட்படுத்தாமல், நியாயத்திற்காக சில தியாகங்களை செய்ய முன் வருகிறார்கள் என்பதற்கும் ஒரு முக்கிய உதாரணம்.

அதையெல்லாம் மீறி....இதன் பின்ணயில் உள்ள வேதனைகளும்......எவ்வாறு அமெரிக்க நாடு ஒரு அருவருக்கத்தக்க நிலையிலிருந்து, தன்னையும் தனது அமைப்புகளையும் மீட்டெடுத்துக் கொண்டது என்பதனையும் நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மெட்கார் இவர்ஸ் (Medgar Evers), பைரான்-டீ-ல-பெக்வித் (Byron de la Beckwith) என்ற பெயர்களை கேள்விப்பட்டிருந்தால்...இந்த வழக்கினைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதனை அறியா ஒரு சிலரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.

ஒரு கொலை

மெட்கர் இவர்ஸ், தான் மரித்த 1963 ம் ஆண்டு, முப்பத்தியேழே வயது நிரம்பிய இளைஞர். அழகான மனைவி மைரில்லே (Myrile Evers) மற்றும் மூன்று சிறு குழந்தைகள். இவர்ஸ் வியட்நாமில் அமெரிக்க அரசுக்காக போரிட்டவர். பின்னர் சட்டக் கல்லூரியில் இடம் மறுக்கப்படவே, காப்பீட்டுப் பத்திர விற்பனையாளர். மிசிசிபியில் உள்ள ஜாக்ஸன் நகரில் அமைதியான இடத்தில் வீடு. வேறு என்ன குறை இருக்கப் போகிறது ஒரு மனிதனுக்கு......ஆனால் இவர்சுக்கு இருந்தது. 'மற்றவர்கள் போல தானும் ஒரு டிபார்ட்மெண்டல் கடையில் பொருட்கள் வாங்கவேண்டும்', 'மற்றவர்கள் போல தானும், தான் விரும்பும் ஒரு உணவு விடுதிக்கு தனது குடும்பத்துடன் செல்ல வேண்டும்', 'தனது பிள்ளைகளும் நல்ல பள்ளிக் கூடத்தில் சேர வேண்டும்', 'தன்னையும் மற்றவர்கள் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும்' என்ற சின்னச் சின்ன குறைகள்தான். மொத்தத்தில் தானும் தன்னைப் போன்ற கறுப்பின மக்களும் மனிதர்களாக மதிக்கப் படவேண்டும் என்ற ஒரே ஒரு குறைதான் அவருக்கு இருந்தது.

இவர்ஸால் மற்றவர்கள் போல இந்த குறைகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. 1954ம் ஆண்டு, அமெரிக்க உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் இனவாத பாகுபாடு கூடாது என்று தீர்ப்பு சொல்லியிருந்தாலும் இனவாத போக்கில் எவ்வித பெரிய மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. இவர்ஸ், 'கறுப்பின மக்கள் முன்னேற்றத்துக்கான தேசிய அமைப்பு' என்ற அமைப்பில் தீவீரமாக ஈடுபட்டு அதன் காரியதரிசியாக பயாற்றி வந்தார். அதன் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டமைக்காக அவருக்கு பல கொலை மிரட்டல்கள். வெள்ளை இனவாத பயங்கரவாத அமைப்பான கூ க்ளஸ் க்ளான் (ku klux klan KKK) அவரைக் கட்டம் கட்டியிருந்தது. அதனை அவரும் அறிந்தே இருந்தார். எனவேதான், விளையாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டிய வயதில் அவரது குழந்தைகளுக்கு... வெடிச்சத்தம் கேட்டால் எப்படி உடனே தரையோடு படுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தப் பயிற்ச்சிக்கும் ஒரு நாள் அவசியம் ஏற்பட்டது.

துரதிஷ்டமான அன்று இரவும் இவர்ஸ் வீடு திரும்ப வெகு நேரமாகி விட்டது. வழக்கம் போல அப்பா வருகைக்காக காத்திருந்த குழந்தைகள், அவரது கார் சத்தம் கேட்டதுமே, 'அப்பா வந்து விட்டார்' என்று துள்ளிக் குதித்தன. சில நொடிகள்தான்....அந்த இருளைக் கிழித்த வெடிச்சத்ததில் அதிர்ந்த மூத்த இரண்டு குழந்தைகளும் அடுத்து உடனடியாக, தங்கள் குட்டித் தம்பினை சேர்த்து தரையில் படுத்துக் கொண்டனர். மைரில்லே கதவை நோக்கி ஓடினார். அங்கே ரத்த வடிய கீழே விழுந்து கிடந்தார் இவார்ஸ். ஒரு கையில் சாவிக் கொத்து. மறு கையில் 'jim crow must go' என்ற வாசகம் எழுதப்பட்ட டி-சார்ட். 'அப்பா எழுந்திரு, அப்பா எழுந்திரு' என்ற குழந்தைகளின் அலறலில் மற்றவர்கள் வர, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார் இவர்ஸ். அவரது குடும்ப மருத்துவர், பிர்ட்டோன் அவரருகே குனிந்து, 'உங்களை சுட்டது யாரென தெரியுமா?' என்று வினவியதற்கு, 'டாக்டர்...ஓஓ..டாக்டர்' என்ற பதிலோடு இவார்ஸின் உயிர் பிரிந்து விட்டது.

ஒரு விசாரணை

இவர்சின் கொலையினைத் தொடர்ந்து நடந்த போலீஸ் விசாரணை, அப்பழுக்கில்லாதது என்பதை சொல்ல வேண்டும். இவர்சுக்கு தனிப்பட்ட வகையில் யாரும் எதிரிகள் இல்லை. எதிரி(கள்) க்ளானை சேர்ந்த அல்லது சேராத வெள்ளை இனவாதி(கள்). அதனை உறுதிப்படுத்தும் விதமாக, லீ சுவல்லி என்பவர், கொலை நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக, தான் பேருந்து நிறுத்தத்தில் ன்று கொண்டிருந்த போது, ஒரு வெள்ளையர் அவரை அணுகி, 'அந்த 'நீக்ரோ' எவர்ஸ் எங்கே வசிக்கிறான்?' என்று கேட்டதாக சொன்னார். 'நீக்ரோ' என்ற வார்த்தை ஸ்பானிய மொழியில் கறுப்பு என்று பொருள் பட்டாலும், பின்னர் அது அமெரிக்காவுக்கு அடிமைகளாக பிடித்து வரப்பட்ட ஆப்ரிக்கர்களின் சந்ததியினரைக் குறிக்கும், கேலி பொதிந்த ஒரு வார்த்தையாக உருமாறி விட்டது.

எவர்ஸ் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஜோ'ஸ் டிரைவ் என்ற மோட்டலின் சிப்பந்தி, கொலை நடந்த நேரத்தில், சவுக்கு போன்ற நீண்ட ஏரியல் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று அங்கிருந்து வேகமாக புறப்பட்டுப் போனதாக சொன்னார்.

விரைவில், போலீஸ் ஒரு கொலை வழக்குக்கு முக்கிய தடயமான ஆயுதம், அதாவது இந்த வழக்கில் துப்பாக்கியினை, எவர்ஸ் வீட்டுக்கு அருகில் இருந்த புதரில் இருந்து கண்டெடுத்தனர். அது ஒரு தொலைநோக்கி பொருத்தப்பட்ட 1917 மாடல், .03-06 எட்ஃபீல்ட் ரக ரைபிள். துப்பாக்கியினை விட போலீஸ”க்கு மகிழ்ச்சி தந்தது அதில் இருந்த கைரேகை. மேலும், எவர்ஸ் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாவும், கண்டெடுக்கப் பட்ட துப்பாக்கிக்கு பொருத்தமானது என்று வெடிப்பொருள் அறிக்கையும் (Ballastic Report) உறுதிப் படுத்தியது.

துப்பாக்கி பற்றிய விபரங்கள் வெளியானதுமே, தார்ன் மெக்கின்டையர் (Thorn McIntyre) என்பவர் போலீஸை தொடர்பு கொண்டு தான் அந்த துப்பாக்கியினை, பைரன் டி ல பெக்வித் (Byron De La Beckwith) என்பவருக்கு சில காலம் முன்பு விற்றதாக கூறினார். பெக்வித் யாரென்று தெரிந்ததும், போலீஸ் தங்களது விசாரணை ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டதை உணர்ந்தனர். ஆம், பெக்வித் தான் ஒரு இனவாதி என்பதை சொல்லிக் கொள்வதில் சற்றும் தயங்காத கூ க்ளக்ஸ் க்ளானை சேர்ந்தவர். அவரிடம் சவுக்கு போன்ற நீண்ட ஏரியல் கொண்ட ஒரு வெள்ளை ற கார் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியில் இருந்தது....அவரது கைரேகை!

எவர்ஸ் கொலை செய்யப் பட்டதினை கண்ணுற்ற நேரடி சாட்சி (Eye Witness) யாரும் இல்லையெனினும், சந்தர்ப்பவாத சாட்சிகள் (Circumstantial Evidence) பெக்வித்துக்கு எதிராக வலுவாக இருந்ததாக, போலீஸ் நம்பினர். போலீஸ’ன் நம்பிக்கை சரியானது என்பது குற்றவியல் நடைமுறை அறிந்த அனைவரும் ஒத்துக் கொள்ளக்கூடியது. பெக்வித்துக்கு எதிரான மற்றொரு ஆவணம், அவரது வீட்டினைச் சோதனையிடுகையில் கிடைத்த ஒரு விளம்பர புத்தகம். அதில் .03-06 தோட்டாக்களின் சக்தி மற்றும் அதன் குணாதிசயங்களைப் பற்றிய விபரங்கள் பெக்வித்தால் வட்டமிடப்பட்டு இருந்தது.

பெக்வித் விரைவில் கைது செய்யப்பட்டு, எவர்சைக் கொன்ற குற்றத்திற்காக வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். பெக்வித்தோ எதற்கும் அசரவில்லை. தினமும் நீதிமன்றத்திற்கு புன்னகை மிஞ்சிய முகத்தோடும், கேலியோடும் வருவதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி தருவதுமாக....எதனைப் பற்றியும் கவலைப் பட்டதாக தெரியவில்லை.

திடீரென இரண்டு போலீஸ்காரர்கள், பெக்வித்தை கொலை நடந்த சமயத்தில் சம்பவ இடத்திலிருந்து 150 மைல் தூரத்திலுள்ள இடத்தில் பார்த்ததாக சாட்சி சொன்னார்கள். இதனை 'அலிபி' என்பார்கள். இதுவரை இந்த தகவலை யாருக்கும் தெரிவிக்காமல் அந்த போலீஸார் திடீரென சொன்னதால், அவர்களது நம்பகத்தன்மை கேள்விக் குறியானது என்றாலும்.....வழக்கின் முடிவில் ஜூரர்கள் எவ்வித முடிவும் எடுக்க முடியாமல் வழக்கு தள்ளிப் போடப் பட்டது. இறுதியில் ஜூரர்கள் எடுத்த முடிவு......இது வரை நீதியினை எதிர்பார்த்து காத்திருந்த மைரில்லேயின் தலையில் இடியாக இறங்கியது. ஆமாம், வழக்கு மெய்ப்பிக்கப் படவில்லை என, 'பெக்வித் குற்றமற்றவர்' என்ற முடிவிற்கு ஜூரர்கள் வந்தனர்.

மைரில்லேயினையும், மற்றும் சிலரையும் தவிர எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர், குறிப்பாக அரசு. ஏனெனில் இவ்வழக்கில் பெக்வித் தண்டிக்கப்படும் வேளையில் அதிக பிரச்னை ஏற்படும் என அரசு நம்பியது.

எல்லா நம்பிக்கைகளையும் இழந்த மைரில்லே, ஜாக்ஸன் நகரை விட்டே கிளம்பி வெகுதூரத்திலுள்ள கலிஃபோர்னியோ நகரத்தில் சென்று தனது மூன்று குழந்தைகளுடன் குடியேறிவிட்டார். அவர் தன்னுடன் சுமந்து சென்றது...அவரது கணவருடைய நினைவுகளையும்.....இனி தன் சொந்தக்காலில் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உறுதியும். அவற்றோடு ஒரு வைராக்கியத்தையும் அவர் சுமந்து சென்றார்.

விரைவிலேயே... ஜாக்ஸன் நகரமும், மிசிசிபி மாகாணமும் எவர்ஸையும் அவரது கொலையினையும் மறந்து போனது.......ஆனால் காலம் எவர்ஸை மறக்கவில்லை. அது எவர்ஸை மீண்டும் உயிர் பெற்று எழ வைத்தது.....சுமார் 26 வருடங்கள் கழித்து...


ஒரு செய்தி

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஒன்பதாம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி, ஜாக்ஸன் நகரில் வெளியாகும் 'க்ளேரியான் லெட்ஜர்' (Clarion Ledger) என்ற பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி, அமெரிக்க சட்டவியலில் முக்கியமான ஒரு மைல்கல்லுக்கு அடிப்படையாக விளங்கப் போகிறது என்பதை யாரும் முதலில் அறிந்திருக்கவில்லை.

"State Checked Possible Jurors in Evers Slaying"

என்ற தலைப்பில் ஜெரி மிட்சல் என்ற நிருபர் எழுதியிருந்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ஜாக்ஸன் நகர மக்கள் கவனத்தை கவர்ந்தது. அந்த தலைப்பின் அர்த்தம், 'எவர்ஸ் கொலை வழக்கில் அரசு, போதுமான ஜுரர்களை பெக்வித்துக்கு சாதகமாக சரிகட்டியிருந்தது'.

இந்த விஷயம் வழக்கு நடந்த 1964-ம் ஆண்டே அரசல் புரசலாக ஜாக்ஸன் மக்கள் அறிந்திருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், மாகாண ஆளுஞர் நீதிமன்ற வளாகத்திலேயே குற்றம் சாட்டப்பட்டிருந்த பெக்வித்தை வாஞ்சையாக கட்டியணைத்தார் என்ற செய்தி அப்போதே வெளியானது. மேலும் மிசிசிபி அரசு, பெக்வித்துக்கு எதிரான தீர்ப்பினை அஞ்சியது.

முன்னதாக, அரசு 1950-ம் வருடம் இறையாண்மைக் குழுமம் (Sovereignty Commission) என்ற அமைப்பினை இனவாத பிரிவினையினை மேம்படுத்தும் பொருட்டு ஏற்படுத்தியிருந்தது. எவர்ஸ் வழக்கில் அந்த குழுமம், பெக்வித் விடுதலைக்கு வேண்டி, சாதகமான ஜூரர்களை நியமிப்பதில் மற்றும் சரிகட்டுவதில் முழுதாக ஈடுபடுத்தப்பட்டு அதன் காரணமாகவே பெக்வித் விடுதலை செய்யப்பட்டார் என்ற ஆராச்சியினைத்தான் மிட்செல் கட்டுரையாக வடித்திருந்தார். வழக்கின் அனைத்து ஜூரர்களும் வெள்ளையின ஆண்கள். மிட்சல் அதில் கூறினாரா என்று தெரியாது, பல போலீஸ் மற்றும் நீதிபதிகள் கூட குற்றம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாக செயல்பட்டனர் என்று நான் படித்தேன்.

ஆனாலும், கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க சமுதாயம் அதன் கண்ணோட்டம் மற்றும் இனவாதத்துக்கு எதிரான குரல்களில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இறையாண்மைக் குழுமம் என்ற பெயரில், அரசு நிறுவனமே இனவாதத்தினை போற்றுவதெல்லாம் பழங்கனவாகியிருந்தது. எனவே மிட்சலின் இந்த கட்டுரை ஜாக்ஸன் மக்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இரண்டொரு நாளில், கலிஃபோர்னியோவில் குடியேறிவிட்ட மைரில்லேவின் பேட்டியுடன் மிட்சல் தனது அடுத்த கட்டுரையினை எழுதியிருந்தார். மைரில்லே, எவர்ஸ’ன் கொலையாலும் தனக்கு கிடைக்காத நீதியினாலும் மனம் சோர்ந்து விடவில்லை. தானும் தனது பிள்ளைகளும் நல்ல கல்வியினைப் பெற்று சமூக முன்னேற்றமடைவதுதான், எவர்ஸுக்கு தான் செலுத்தக் கூடிய சிறந்த அஞ்சலி என்பதை அறிந்திருந்தார். தனது தொடர்ந்த கல்வியின் பயனாக லாஸ் ஏஞ்சல் நகரின் பொதுப் பணித்துறையின் ஆணையர் என்ற பதவியில் இருந்தார். அவரது மகன்களும் மகளும் கூட நல்ல நிலமையில் இருந்தார்கள். ஆனாலும் எவர்ஸின் கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற வைராக்கியம் அவரை விட்டுப் போகவில்லை. அந்த வைராக்கியத்தின் காரணமாகவே, இருபத்தைந்து வருடங்களாக அவர் ஒரு ஆவணத்தினை கட்டிக் காத்து வந்தார். அது, எவர்ஸ் கொலைவழக்கின் அனைத்து விபரங்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள். அந்த பேட்டியில் மைரில்லே எவர்ஸ் கொலை வழக்கு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கிடையில், ஜாக்ஸன் நகர அட்டார்னிக்கும் அவரது உதவி அட்டார்னியான பாபி டிலாஃப்டருக்கும் (Bobby DeLaughter) மிட்சலின் கட்டுரை பெரிய பிரச்னையாகி விட்டது. " எவர்ஸ் கொலை மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்" எனவும்.... " கூடவே கூடாது, அது பல பழைய புண்களைக் கிளறும் ஒரு செயல்" என்றும் அநேக குரல்கள், தொலைபேசி வேண்டுதல்கள். ஒரு சட்ட வல்லுஞரின் பார்வையில் 25 வருடங்களுக்கு பின்னர் மறுவிசாரணை என்பது ஒரு கேலிக்கூத்து. மேலும் ஒரே குற்றத்திற்காக ஒரு நபர் இரண்டு முறை விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடாது. எது எப்படியாயினும் குறைந்த பட்சம் புதிய சாட்சிகளாவது வேண்டும்.

ஆனால், சட்டச் சிக்கல்கள் மக்களுக்கு புரிய வேண்டுமே. பாபியும் அவரது மேலதிகரியான நகர அட்டார்னி எட்டும் (Ed) இனவாதிகள் என்று பொறுமையிழந்த சிலர் குற்றம் சாட்டினர். பாபிக்கு மக்களை திருப்திப்படுத்த வேண்டியாவது எவர்ஸ் விசாரணை மறுவிசாரணை செய்யப் படவேண்டியது அவசியம் என்று பட்டது. எட், 'உன்பாடு. எதுவும் செய்துகொள்' என்று சொல்லி விட்டார்.

இந்த வழக்கை தான் கையிலெடுப்பதே, வழக்கறிஞர்கள் வட்டத்தில் தன்னை நோக்கி கேலிக்கணைகளை செலுத்தும் என்பதை பாபி அறிந்திருந்தாலும், அவர் பிரச்னை அதுவல்ல. எங்கு விசாரணையினை ஆரம்பிப்பது என்று அவருக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.

வழக்கில் பங்கெடுத்த ஜூரர்களின் பெயர்களைத் தவிர எவர்ஸ் வழக்கினைப் பற்றிய வேறு எந்த விபரமும் அவரிடம் இல்லை. ஜூரர்களில் சிலரை விசாரணை செய்ததில் அவருக்கு எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை. வழக்கு சம்பந்தமாக சிலருக்கு அவர் விசாரணைக்காக கடிதம் எழுதியிருந்தார். அவற்றில் ஒருவர் மைரில்லே. மைரில்லே தனது அலுவலகத்துக்கு வருவார் என்று பாபி எதிர்பார்க்கவே இல்லை. வந்தது பெரிய ஆச்சர்யம். மைரில்லேவிடம், பாபி எவர்ஸ் வழக்கு சம்பந்தப்பட்ட எந்த ஒரு ஆவணச் சாட்சி, அதாவது துப்பாக்கி, புகைப்படங்கள், தோட்டா போன்ற எதுவும் தன்னிடம் இல்லையென்றும், முக்கியமாக சாட்சிகளை எங்கு சென்று தேடுவது என்றும் மெல்லக் கூறினார். ஆனால் அந்த சந்திப்பின் முடிவில் மைரில்லேவின் உறுதி பாபியை முற்றிலும் மாற்றியிருந்தது. 'விசாரணையின் எந்தவொரு புதிய முன்னேற்றத்தினையும் தனக்குத் தெரிவிக்குமாறு' வேண்டி மைரில்லே பாபியின் கைகளை தன் கைகளால் மெல்ல அழுத்தி விடை பெற்றுக்கொண்டார்.

ஒரு புலன் விசாரணை

மைரில்லே பாபியை சந்தித்த பின் நடந்த காரியங்கள்தான், அமெரிக்க குற்றவியல் வரலாற்றிலேயே ஆச்சர்யமூட்டும் விஷயங்கள் அடங்கிய ஒரு புலன் விசாரணை.

மிட்செல்லின் கட்டுரை வெளிவந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. டிசம்பர் ஐந்தாம் தேதி, ஜாக்ஸன் காவல்துறை புகைப்பட நிபுணர் தனது அலுவலக அலமாரிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அவர் கண்ணில் பட்டது ஒரு போட்டோ. அது 1963-ம் வருடம் எவர்ஸ் கொலை நடந்த பின் எடுக்கப்பட்ட, கொலை நடந்த இடமான அவரது வீடு, மற்றும் வழக்கோடு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள். உடனடியாக அவர் தொடர்பு கொண்டது பாபி. விரைந்து வந்தார் பாபி. புகைப்படத்தை பார்த்த பாபியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனாலும் இது ஒரு சிறிய ஆரம்பம்தான் என்பதும் அவருக்கும் தெரிந்திருந்தது.

வழக்குக்கு அடுத்த முக்கிய தேவை...துப்பாக்கி. நீதிமன்ற அலுவலரை விசாரித்ததில், அந்த நாட்களில் வழக்கு முடிந்தவுடன் முக்கியமான பொருட்களை நீதிபதிகள் தங்களுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுவர் என்ற செய்தி கிடைத்தது. உடனடியாக எவர்ஸ் வழக்கை விசாரித்த நீதிபதியின் பேரனை அணுகினார். அதனால் பயன் எதுவும் இல்லை.

சோர்ந்து போன பாபிக்கு கிறிஸ்மஸுக்கு பிறகு திடீரென தோன்றியது, 'அவரது மாமனார் வீட்டில் சில துப்பாக்கிகளை பார்த்ததான' ஞாபகம். அவர் மாமனார் ஒரு நீதிபதி. பாபி உடனடியாக அங்கு விரைந்தார். உயிருடன் இருந்த அவரது மாமியாரோ, தனது கணவரின் பொருட்கள் வீட்டின் மேலே மாடியில் இருப்பதாக கூறினார். அங்கிருந்த ஒரு பழைய பெட்டியில் சில துப்பாக்கிகள் இருந்தன. அதில் ஒன்றை பார்த்த மாத்திரத்திலேயே பாபிக்கு தெரிந்து போனது...அதுதான் அந்த துப்பாக்கி என்று.....அதில் ஒட்டப்பட்டிருந்த துண்டுச்சீட்டில்....OML 6/12/63 என்று எழுதியிருந்தது. OML எவர்ஸ் வழக்கை விசாரித்த டிடக்டிவ் ஒ.எம்.லூக். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட எவர்ஸ் வழக்கின் துப்பாக்கி என்பதை பாபி முழுவதுமாக உண்ர்ந்த போது....தனது மயிர்க்கால்கள் குத்திட்டதாக பின்னர் கூறியுள்ளார்.

இதுவும் போதாது என்பது பாபிக்குத் தெரியும். இதற்கிடையில் தற்போது எழுபது வயதினைக் கடந்திருந்த பெக்வித் தன் பொருட்டு நடந்து கொண்டிருக்கும் கூத்தினை கிண்டல் செய்து கொடுத்த பேட்டி டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்து பாபிக்கு மேலும் கடுப்பேற்றியது.

இந்த வழக்கின் அடுத்த அதுவும் முக்கியமான முன்னேற்றத்துக்கு நன்றி சொல்ல வேண்டியது கூ-க்ள்க்ஸ்-க்ளானுக்கு. 1964ம் வருடம் கொல்லப்பட்ட வேறு சில கறுப்பினத்தவரைப் பற்றிய 'Mississippi Burning' என்ற திரைப்படம் ஓரியன் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. அதில் க்ளான் பற்றிய தகவல்கள் தவறானது என்று க்ளான் ஓரியன் நிறுவனம் மீது ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் ஒரியனுக்காக வழக்காடிய வக்கீல் ஜேக் ஏப்ளஸ், பாபியின் நண்பர். க்ளான் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஜேக் படித்துக் கொண்டிருந்த பல புத்தகங்களில் ஒன்று "Klandestine"

டெல்மர் டென்னிஸ் (Delmer Dennis) முதலில் ஒரு பாதிரியார். பின்னர் க்ளான் உறுப்பினர். கடைசியில் மனது மாறி எஃப்.பி.ஐ ஆள்காட்டியாக மாறி ஒரு வழக்கில் க்ளான் உறுப்பினர்களுக்கு எதிரான முக்கிய சாட்சியாக மாற்றப்பட்டார். அவரைப் பற்றியதுதான் அந்த புத்தகம். அதில் ஒரு பக்கத்தைப் படித்ததும் ஜேக்குக்கு ஞாபகம் வந்த நபர் பாபி. உடனடியாக பாபிக்கு போன் செய்து, அந்த பக்கத்தை படித்தார்...

அந்தப் பக்கத்தில் டெல்மர் ஒரு க்ளான் கூட்டத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். அதில் பெக்வித் கலந்து கொண்டு பேசியது, "நமது மனைவியர் குழந்தை பெறுவதற்க்காக எவ்வளவு சிரமப்படுகிறார்களோ...அந்த நீக்ரோவைக் கொன்றதில் அதை விட அதிகமாக, என் மனதில் வலி எதுவும் இல்லை"

முதல் முறை நடந்த விசாரணையில் இல்லாத, முதல் சாட்சி! அப்படித்தான் பாபி நினைத்திருக்க வேண்டும். ஆனால் டென்னிஸை எப்படித் தேடுவது. அவர் க்ளான் தீவிரவாதிகளுக்கு பயந்து எங்கோ மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி பாபி யோசித்துக் கொண்டிருந்த போது, மிட்செல்லிடம் இருந்து தொலைபேசி அழைப்பு, 'என்ன, வழக்கில் எதாவது முன்னேற்றமுண்டா?'. பாபி அவரிடம் டென்னிஸ் பற்றி சொன்னார்.

'அப்படியா? இதோ, டென்னிஸின் தொலைபேசி எண் தருகிறேன். எழுதிக் கொள்ளுங்கள்' பாபி தன்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டார்.

டென்னிஸ் இருந்தது செவியர்வில்லெ என்ற பகுதியில். அங்கு போவதற்கு நாள் குறித்துக் கொண்ட பின், பாபிக்குத் தோன்றியது, பெக்வித்தைப் பார்த்தால் என்ன? என்று. பெக்வித் போனில் சிரித்ததாக கூறுகிறார். வழக்கின் இரண்டு தரப்பு கருத்தையும் கேட்க வேண்டி, அவரைப் பார்க்க முடியுமா? என்று கேட்டதற்கு பெக்வித்தின் பதில், "தாங்கள் ஒரு காக்கேசிய வெள்ளை இனத்தவரைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் என்னைக் காண வரலாம். உங்களுடன் வருபவர்களும் அப்படியே" பின்னர் பெக்வித் தான் சொல்லும் இடத்துக்கு தனியாக வருவதனால் பாபியினை சந்திப்பதாக சொல்ல அந்த சந்திப்பு நிகழவேயில்லை.

டென்னிஸ், தனது வீட்டிலிருந்து வெகுதூரத்தில் உள்ள காட்டின் உட்புறம், ரகசியமாக பாபியை சந்தித்தார். புத்தகத்தில் எழுதப்பட்ட விஷ்யங்கள் உண்மைதான் என்றார். தன்னை ஃஎப்.பி.ஐ வேறு கொலைகளுக்கான சாட்சியாக தயார்படுத்தி வந்ததால், எவர்ஸ் வழக்கில் தான் யாரென்று காட்டிக்கொள்ளும் வண்ணம் போலீஸிடம் தெரிவிக்க முடியவில்லை என்றார். ஆனால், தற்போது பாபியின் அழைப்பில் நீதிமன்றம் வர தயங்கினார்.

"நான் 25 வருடங்கள் கஷ்டப்பட்டு விட்டேன். அவன் கிழவனாக இருக்கலாம். ஆனால் மிகவும் பயங்கரமான கிழவன்'. சரி, கோர்ட் மூலம் சம்மன் அனுப்பிவிட்டால் போகிறது என்று பாபி நினைத்தார்.

பாபிக்கு மற்றொரு பெரிய பிரச்னை, எவர்ஸ் வழக்கு ஆவணங்கள். அவை நீதிமன்றத்தில் இல்லை. பழைய ஆவணங்களை அழித்து விட்டார்கள். 'எவர்ஸ் வழக்கு' என்ற ஒரு வழக்கு நடைபெற்றதற்கான சட்டபூர்வமான ஆவணங்கள் இருந்தாலொழிய எந்த வழக்கின் மறு விசாரணைக்காக நீதிமன்றத்தினை அணுக முடியும். ஒருநாள் மிட்செல் பாபியிடம் ஒரு பார்சலைத் தந்தார். திறந்து பார்த்தால் மிசிசிபி அரசு எதிர் பைரன் டி ல பெக்வித் என்ற 1964-ம் ஆண்டு வழக்கின் முழு விபரங்களின் நகல்.

'அசல், எவர்ஸ’ன் மனைவி மைரில்லேவிடம் உள்ளது. அதனை யாரிடமும் கொடுக்க அவருக்கு பயம்'

'இதுவே போதும்...வழக்கு நடைபெறும் போதுதான் அசல் தேவைப்படும்' பாபி. பின்னர் மைரில்லே அசலையும் பாபியிடம், முழு நம்பிக்கை கொண்டு தந்து விட்டார். எந்த சக்தி மைரில்லேவை, அந்த ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க உதவியது?

பின்னர், பெக்வித்துக்கு அலிபியாக நின்ற காவலர்களை பாபி சந்தித்தார். பெக்வித் வழக்கறிஞர்களால் சரிகட்டப்பட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். இவர்களை குறுக்கு விசாரணை செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

இந்த விசாரணைகளைப் பற்றிய பத்திரிக்கை செய்திகள், பாபியை மிகவும் பாதித்தன. அவருக்கும் மற்றவர்களுக்கும் அநேக மிரட்டல்கள் வேறு. பலர், ஏன் அநாவசியமாக இதனை கிளறி அரசு பணம் வீணாக்கப்படுகிறது என்று ஆதங்கப்பட்டனர். ஒருமுறை, தனது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மிரட்டலால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர் தனது பெற்றோர் வீட்டில் தங்க வேண்டி வந்தது. விரைவில் மேலும் ஆச்சர்யங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கழ்ந்தன.

1990 செப்டம்பரில் பாபிக்கு ஒரு தொலைபேசி. அழைத்தவர் தன்னை பெக்கி மார்கன் என்று சொல்லிக் கொண்டார். பல வருடங்களுக்கு முன்னர் பெக்வித் அவரது தெருவில் வசித்தவர். ஒருமுறை சிறைக்கு தனது கணவரின் தம்பியை பார்க்க சென்ற மார்கனின் காரில் பெக்வித்தும் தொத்திக் கொண்டாராம். பின்னர் தான் சிறைக்கு வந்த விஷயத்தை யாரிடமும் மார்கன் சொல்லக்கூடாது என்ற மிரட்டலில், ' நான் அந்த நீக்ரோவைக் கொன்றேன். ஆனால் யாராலும் அதனை நிரூபிக்க முடியவில்லை. எனவே, நீங்களும் வாயை மூடிக் கொள்வது நலம்' என்றாராம். மற்றுமொரு புதிய சாட்சி. துள்ளிக் குதித்தார் பாபி.

விரைவில் மற்றுமொரு தொலைபேசி, மேரி ஆன் ஆடம்ஸ் என்பவரிடம் இருந்து. அவர் ஒருமுறை தனது நண்பருடன் உணவகத்தில் இருந்த போது, அவரது நண்பருக்குத் தெரிந்த சிலர் அங்கு வந்து, அவர்களுடன் வந்த ஒரு நபரைக் காட்டி, 'இது யார் தெரிகிறதா? இவர்தான் அந்த எவர்ஸ் என்ற விலங்கைக் கொன்றவர்' என்றவுடன் அந்த நபரும் அதனை ஆமோதிக்கும் வண்ணம் தலை ஆட்டினாராம். அவர்தான் பெக்வித். பின்னர் ஆடம்ஸ், 'ஒரு கொலைகாரனுடன் நான் கைகுலுக்க முடியாது' என்று மறுக்க அவருக்கும் பெக்வித்துக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

பாபிக்கு தனது அதிஷ்டத்தினை நம்ப முடியவில்லை. எப்படி இந்த சாதாரண மனிதர்கள், தங்கள் உயிரையும் பற்றிக் கவலைப்படாமல் வலிய, நீதிக்கு துணை நிற்க முன் வருகிறார்கள். இந்தியர்கள் இவர்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் இத்துடன் முடியவில்லை சாட்சிகள். பெக்வித் மீதான இரண்டாவது நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பித்த பின்னர், இவ்வாறாக முன்வந்த மற்றொரு சாட்சி மிக முக்கியமானது.

மார்க் ரெய்லி 1979-ல் ஒரு சிறை அலுவலர். அந்த சிறையில் வேறு ஒரு குற்றத்திற்காக பெக்வித் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது ரெய்லிக்கும் பெக்வித்துக்கும், அப்பா-மகன் போன்ற உறவு ஏற்பட்டு பெக்வித் அவரிடம் தனது கொள்கைகளை சொல்லிக் கொண்டு இருப்பாராம்.

'கறுப்பர்கள், வெள்ளையர்களுக்கு அடிமைத்தனம் செய்வதற்காக படைக்கப்பட்டவர்கள். அவர்கள் அதனை மீறிச் செல்லும் போது அவர்களை கொல்வதில் தவறு ஒன்றும் இல்லை'.

ஒருமுறை பெக்வித் சிறை மருத்துவமனையில் அடைக்கப்பட்டிருந்த போது அவருக்கு பணிவிடை செய்வதற்கு வந்த கறுப்பின செவிலியரை பார்த்து பெக்வித், வேறு வெள்ளை செவிலியரை அனுப்பச் சொன்னாராம். அதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பெக்விக் கோபத்தில் கத்தினாராம், ' அவ்வளவு பெரிய ஆள்னு நினைத்துக் கொண்டிருந்த அந்த நீக்ரோவை, தீர்த்துக் கட்டிய எனக்கு...நீயெல்லாம் எம்மாத்திரம்' இதனை கேட்டுக் கொண்டிருந்த ரெய்லியோடு சேர்த்து பெக்வித்துக்கு எதிரான புதிய வாய்மொழிச் சாட்சிகள் நான்கு. முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த நால்வருமே பெக்வித்துக்கு ஏதோ ஒரு வகையில் நெருக்கமான வெள்ளையர்கள். இவர்களது மனச்சாட்சிக்கு இவர்கள் அடிபணிந்தது என்னை ஒரு இந்தியனின் கண்ணோட்டத்தில் ஆச்சர்யப்பட வைக்கிறது. ஆச்சர்யங்கள் இன்னும் முடியவில்லை...


மறு விசாரணை


1990, டிசம்பரில் பெக்வித் மீது மறுபடியும் கொலைக்குற்றசாட்டுகள் புனையும் பொருட்டு க்ராண்ட் ஜூரர்களை கிடைத்த ஆதாரங்களின் பெயரில் பாபி அணுகினார். அவர்கள் அனுமதியின் பேரில்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஜூரர்களின் அறையிலிருந்து வெளியே வந்த பாபியின் முகத்திலிருந்த பெரிய புன்னகையிலிருந்தே....முடிவை, இதற்காக நீதிமன்றம் வந்திருந்த மைரில்லே தெரிந்து கொண்டார். பாபியை கட்டி அணைத்து விசும்பினார், 'நாம் வெகு தூரம் வந்து விட்டோம்'.

பாபி நினைத்தார்,'அமாம்..ஆனால் நாம் வெகு தூரம் இன்னும் போக வேண்டி உள்ளது'.

மூன்று நாட்களில் பெக்வித் எவர்ஸ் கொலை வழக்கின் விசாரணைக் கைதியாக சிறைக்கு அனுப்பப்பட்டார். பெக்வித்தின் மனைவி தன்னுடைய விடுமுறைக் காலத்தை பாபி கெடுத்து விட்டதாக கூறி, அதற்காக அவர் தண்டிக்கப்படுவார் என்று மிரட்டினார்.

ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ள வந்த புகழ் பெற்ற டாக்டர்.மைக்கேல் பேடன் என்ற தடயவியல் நிபுணரை பாபியும் எட்டும் சந்தித்து, எவர்ஸ் வழக்கு பற்றிக் கூறினர். பேடன், ' உயர் சக்தி வாய்ந்த ரைபிள் தோட்டா, எலும்பில் பட்டிருக்கும் வேளையில் அதில் நட்சத்திர வடிவிலான ஒரு துளையிருக்கும்' என்றார். பாபி, மைரில்லே அனுமதியுடன் மறு பிரேத பரிசோதனை செய்துவிடலாம் என்று தீர்மானித்தார். தந்தையின் முகமே அறியாத எவர்ஸின் கடைசி மகன் எவர்ஸின் உடலைப் பார்க்க விரும்பினார். உடல் பார்க்கத் தகுந்த நிலையில் இருக்கும் பட்சத்தில் அனுமதிப்பதாக பாபி கூறினார்.

அவர்களுக்கு மிகப் பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது எவர்ஸின் பெட்டியில். பெட்டியில் எவர்ஸின் உடல், நேற்றுத்தான் மரித்தது போல எவ்வித அப்பழுக்கும் இன்றி புத்தம் புதிதாக இருந்தது. அருகில் ஹோட்ட்லில் தங்கியிருந்த எவர்ஸின் கடைசி மகன் வரவழைக்கப்பட்டார். உடல் புகைப்படம் மற்றும் எக்ஸ்ரே படம் எடுக்கப்பட்டது, எலும்பில் உள்ள நட்சத்திர துளைக்காக...

எவர்ஸின் உடலைப்பற்றி பாபி கேட்டதற்கு மைக்கேல் பேடன், 'உடல் சிறந்த முறையில் பதப்படுத்தப்பட்டது (embalm) மற்றும் பெட்டி நாலு மீட்டர் ஆழத்தில், ஈரப்பதமின்றி வைக்கப்பட்டதால் இருக்கலாம்' என்றார்.

தனியே பாபியிடம் பேடன், 'நான் விஞ்ஞானி. இது விஞ்ஞான விளக்கம். அதற்கு மேலே நான் சொல்லக்கூடியதெல்லாம்....நீங்கள் கடவுளை நம்புபவரா? அப்படியெனில் உங்களால் விஞ்ஞானமற்ற விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியும்'. ஆரம்பமுதலே....பல ஆச்சர்யங்களை இந்த வழக்கில் பார்த்துவிட்ட பாபியால் பேடனில் விளக்கத்தை ஆமோதிக்க முடிந்தது.

என்ஸ்ரே முடிவு நட்சத்திர துளையை உறுதி படுத்தியது.

நீதியின் வெற்றி

ஒருவழியாக, வழக்கு விசாரணை 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பித்தது. முதல் சாட்சியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் மைரில்லே. தனது கணவர், அவரது கொள்கைகள் மற்றும் கொலை பற்றி அவர் அளித்த சாட்சியே ஜூரர்களை அவர் பக்கம் ஈர்த்தது. பின்னர் புதிய சாட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக, பெக்வித் எவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களிடம் எவர்ஸ் கொலையை ஒத்துக் கொண்டதாக கூறினர். ஆனாலும் பெக்வித் அதீத நம்பிக்கையுடன், அரசுத்தரப்பை தினமும் கேலி செய்து கொண்டிருந்தார்.

பிப்ரவரி மாதம் நான்காம் தேதி பாபி தனது வாதத்தை தொடங்கினார்.

'பெக்வித்தின் துப்பாக்கி, அதில் பொருத்தப்பட்டிருந்த தொலைநோக்கி, அவரது கைரேகை, அவரது கார் எல்லாம் அவருக்கு எதிராக இருந்தாலும் இதையெல்லாம் மீறி அவருக்கு எதிரான பெரிய சாட்சி அவரது வாய்.........ஆவணங்கள் அதிகம் அவருக்கு எதிராக இருக்கிறது ஆனால் இதையெல்லாம் மீறி அவர் தனது வாய் மூலம் கக்கிய விஷம்...அதை நாங்கள் சமர்ப்பிக்கிறோம். அவர் கக்கிய விஷம் இன்று அவருக்கு பாதகமாக வந்துள்ளது......'

அடுத்த நாள் தீர்ப்பு. ஜூரர்கள் வழக்கத்தை விட அதிகமான நேரம் எடுத்துக் கொண்டனர். அனைவர் முகத்திலும் தவிப்பு. இறுதியில் நீதிபதி ஹ’ல்ப்ர்ன் பெக்வித்தை குற்றவாளி என்று அறிவித்து....தண்டனைக்காக எழுந்து நிற்க சொன்னபோது நீதிமன்றமே அதிர்ந்தது......நீதிமன்றத்துக்கு வெளியே அதை விட அதிக ஆரவாரம்.

பெக்வித்தின் முகத்தில் முதல் முறையாக கேலிப் புன்னகை மறைந்து போனது. மைரில்லே பாபியை கட்டிக் கொண்டார். அவர் முகத்தில் 25 வருடங்களுக்கு முன் தொலைந்து போன ஒரு மலர்ச்சி வந்து புதிதாக ஒட்டிக் கொண்டது போல இருந்தது.....


பின் குறிப்பு:-

மிசிசிபி உச்ச நீதிமன்றம் 1997 ம் வருடம், ஜாக்ஸன் நகர நீதிமன்றம் பெக்வித்துக்கு அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. எவர்ஸ் வழக்கு அறுபதுகளில் ஊற்றி மூடப்பட்ட வேறு சில கறுப்பினத்தவரின் மீதான் குற்ற வழக்குகளை உயிர் பெற்று எழ செய்து....இறுதியில் மிசிசிபி நீதித்துறை தனது கேவலமான வரலாற்றுக்கு பரிகாரம் தேடிக் கொண்டது.

பாபி எவர்ஸ் வழக்கு எப்படி தனது சொந்த வாழ்க்கையினை பாதித்தது என்றும் மற்ற பல விபரங்களையும் 'Never Too Late" என்ற புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தின் சுருக்கத்தினன ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்து அதனையும் சுருக்கி மொழிபெயர்த்துள்ளேன். இந்த வழக்கின் காரணமாக மனைவியே வெறுத்துப் போய் அவரையும் அவரது குழந்தைகளையும் பிரிந்து விட, பாபி அவரைப் புரிந்து கொண்ட புதிய மனைவி தேடிக் கொண்டார். தற்போது அவர் ஒரு நீதிபதி.

எவர்ஸ் வழக்கு 'The Ghosts of Mississipi' என்ற திரைப்படமாக வெளிவந்துள்ளது. மைரில்லேவாக நடித்தது... வேறு யாராக இருக்கும்? ஊஃபி கோல்ட்பெர்க்!

14 comments:

dondu(#11168674346665545885) said...

இதே கதையை சற்றே மாறுதல்களுடன் படித்திருக்கிறேன். என்ன, முடிவில் குற்றவாளிக்கு விஷ வாயு அறை. அவனுக்கு அப்போது வயது 70-க்கும் மேல்.

எழுதியது John Grishom. தலைப்பு Chamber என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

'தெய்வம் நின்று கொல்லும்'
என்பது இதுதான்.

அருமையாக எழுதி இருக்கீங்க.

வடுவூர் குமார் said...

இப்படி எழுதத்தான் இத்தனை நாள் காணாமல் போனீர்களா?
நல்ல வழக்கு.படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.
அங்கும் சில புல்லுருவிகள் இருக்கிறார்களே??

Unknown said...

தெரிந்த / சினிமாவுல பார்த்த நிகழ்வுன்னாலும், உங்கள் அருமையான மொழி / நடை / சட்ட-நுணுக்கம் இவை பிரமாதம்.

கெ.பி.

Sivabalan said...

சார்

நல்ல பதிவு

நன்றி

ஓகை said...

மெய்சிலிர்க்க வைத்த பதிவு. ஒரு வழக்கறிஞரால் மட்டுமே செய்ய முடிகிற பதிவு.

நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

Nakkiran said...

மிக அருமை..கொஞ்சம் பெரிசாயிருந்தது.. இருந்தாலும் ஒரே மூச்சில படிச்சிட்டோமில்ல...

PRABHU RAJADURAI said...

Dear Readers,

I am encouraged by your kind compliments. My sincere thanks to all of you.

Prabhu Rajadurai

ROSAVASANTH said...

அன்புள்ள பிரபு ராஜதுரை, தற்போது விவாதத்தில் அடிபட்டு கொண்டிருக்கும் அஃப்ஸலின் தூக்கு தண்டனை குறித்த உங்கள் கருத்துக்களை - நேரம் அனுமதிக்குமாயின் - எழுத இயலுமா? இது எனது வேண்டுகோள். நன்றி!

அன்புள்ள வசந்த்.

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்லா எழுதியிருகீங்க. பாராட்டுக்கள்.

கிட்டத்தட்ட எல்லா பதிவுளுக்குமே இப்படி பின்னூட்டம் போட வச்சுட்டீங்க

:)

Thangamani said...

அன்புள்ள பிரபு ராஜதுரை, நல்ல கட்டுரை. இது போன்ற நிகழ்வுகள் மூலம் நாம் கற்றுக்கொள்வன அதிகம்.

நன்றி.

ச.சங்கர் said...

இன்றுதான் படித்தேன்

மிக நேர்த்தியாக எழுதப்பட்ட பதிவு

வாழ்த்துக்கள்

PRABHU RAJADURAI said...

இந்த சம்பவத்தைப் போலவே, சமீபத்தில் இரண்டாவது முறையாக மேலும் வலிமையான சாட்சிகளுடன் விசாரணை நடத்தப்பட்டு கறுப்பின இளைஞர் ஒருவரை கொன்ற இருவருக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் தண்டனை வழங்கப்பட்ட செய்தி 15/01/12 தேதியிட்ட ஹிந்துவில்
http://www.thehindu.com/opinion/columns/Bill_Kirkman/article2801079.ece

யாத்ரீகன் said...

witness for the prosecution போன்றதொரு படம் பார்த்த உணர்வு..