Showing posts with label film. Show all posts
Showing posts with label film. Show all posts

23.3.12

‘எ செப்பரேஷன்’ நம் கதை...


இன்று ஒரு சிறிய தவறு செய்து விட்டேன். ஒரு நல்ல திரைப்படத்திற்கு நாம் தரும் மரியாதை, எவ்வித இடையூறும் முக்கியமாக மின்விசிறி ஓடும் சத்தம் உட்பட வெளிப்புற சத்தம் ஏதுமின்றி, எவ்வளவு இருட்டு முடியுமோ அவ்வளவு இருட்டில் பார்ப்பதுதான். ஆனால், இவ்விதமான சூழலுக்கு எதிர்மாறான மத்தியான நேரத்தில் குடும்பத்தோடு ஆஸ்கர் விருது வாங்கிய ‘எ செப்பரேஷன் என்ற ஈரானிய திரைப்படத்தை பார்க்க நேர்ந்ததைத்தான் தவறு என்று சொல்கிறேன்.


ஈரானில் நிலவும் சூழலால், வெளிநாட்டில் சென்று குடியேற விரும்புகிறார் ‘சிமின்’. அவரது கணவரான ‘நாதர்க்கோ, அல்சீமியர் நோயால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையை விட்டு பிரிய இயலாத நிலை. அவர்களது பதினொரு வயது மகள் ‘தெர்மா யாரிடமிருப்பது என்ற பிரச்னையால் எழும் போராட்டம்தான் கதையென்றால், இல்லை அதையொட்டி எழும் வேறு பிரச்னைகள், அதன் சம்பவங்கள்தான் படம். மனைவி பிரிந்தவுடன் தந்தையை கவனித்துக் கொள்ள வேலைக்கு நியமித்த ‘ரெசியாவை அவர் செய்த தவறுக்காக, நாதர் பிடித்துத் தள்ள ரெசியாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை இறக்கிறது. தொடர்ந்த நீதிமன்றப் போராட்டம், ரெசியாவின் கணவரின் இயலாமையால் எழும் வெறுப்பு. அவர்களது குட்டிக் குழந்தை என எவ்வளவோ இருக்கிறது.

இப்படத்தின் கதையை விவரித்துக் கொண்டிருப்பதை விட, அதனை பார்ப்பவர்களின் அனுபவத்திற்கு விடுவதே சிறந்ததாயிருக்கும். ஏனெனில், கதை என்பதை விட படத்தில் வரும் சம்பவங்கள், நம் வீட்டில், குடும்பத்தில் நிகழ்வதைப் போலவே எளிதில் நம்மால் தொடர்புபடுத்திக் கொள்வதை தவிர்க்க இயலாது. பக்கவாதம் அல்லது மூப்பின் காரணமாக படுக்கையில் விழும் முதியவர்களைச் சமாளிக்க நேரும் குடும்பம் ஒவ்வொன்றிலும் எழும் போராட்டங்கள்தான் படத்தில் காட்சிகளாக விரிகிறது.

மகளுக்கு பாடம் சொல்லித் தரும் ‘நாதர்குறிப்பிட்ட வார்த்தைக்கு பெர்சிய மொழியிலான அர்த்தத்தைக் கேட்க, மகள் கூறும் வார்த்தை அரேபிய வார்த்தை என்று மறுத்து பெர்சிய வார்த்தையை சரியான பதிலாக சொல்லிக் கொடுக்கிறார். மகளோ ‘ஆசிரியை இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார், தந்தை கூறும் பதிலைக் கூறினால் ஆசிரியை மதிப்பெண்களை குறைப்பார் என்று சிணுங்க, இங்குள்ள எந்தத் தந்தையையும் போலவே, ‘மதிப்பெண் போனாலும் பரவாயில்லை, தான் சொல்வதைத்தான் மகள் கேட்க வேண்டும்என்று சீறும் காட்சி போதும்.

ஈரானின் அரசியலும், வளரும் நாடுகளின் நடுத்தரவர்க்க பொதுவான மனப்பான்மையும் ‘ஈரானில் நிலவும் சூழலால், வெளிநாடு போக விரும்புவதாகவிவாகரத்து நீதிபதியிடம் கூறும் ‘சிமினிடம் ‘என்ன வகையான சூழல்என்று நீதிபதி கேட்கும் ஒற்றைக் கேள்வியில் இருப்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒவ்வொரு ஈரானியப் படம் பார்க்கையிலும் எழும் முக்கியமான கேள்வி இந்தப் படத்திலும் எழுந்தது. அது எப்படி ஈரானில் குட்டிக் குழந்தைகளை இப்படி இயல்பாக நடிக்க வைக்கிறார்கள்?

நான் முதலில் கூறிய சூழலில் படத்தினைப் படத்தினைப் பார்க்கையில் படம் முடிந்ததும், அதன் கருவை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் இசையை கேட்டபடியே உறங்கச் செல்கையில் படத்தின் பாத்திரங்கள் நம் ஆழ்த்தூக்கம் வரை நம்மைத் தொடர்வதை வைத்து படம் நம்மை பாதித்திருக்கும் அளவை உணர இயலும்.

ஆனால் ‘எ செப்பரேஷன்படம் முடிந்த வெப்பம் மிகுந்த மாலைச்சூழலில் அது சாத்தியமில்லை. ஆனாலும் ஒரு மணி நேர குட்டித்தூக்கம் போடலாமென்று தூங்கி பின் விழிக்கையில்தான் புரிந்தது படத்தின் தாக்கம்!


கனவா, இல்லை நினைவா என்ற நிலையில் படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் ஏதோ கலீடாஸ்கோப் தோற்றம் போல ஏதேதோ சம்பவங்களாக விரிய, இதனை எழுதும் இந்தக் கணம் வரை மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறார்கள். மூன்று வாசல்மணி, இரண்டு தொலைபேசி அழைப்பு இடையூறுகளையும் கடந்து படம் இந்த அளவிற்கு பாதிப்பினை ஏற்ப்படுத்தியிருக்கிறது என்றால், நான் இங்கு எழுதாத மற்றும் பல காட்சிகளும், பாத்திரங்களுமே காரணம்!

அதனை உணர, ‘எ செப்பரேஷன்படத்தைப் பார்ப்பதுதான் சரியான முறை!

மதுரை
23/03/12

15.1.12

ஞாயிற்றுக் கிழமை படுக்கையில் காப்பி!

பார்த்து ஒரு நாள் கழிந்துவிட்டது. ஆனாலும் ‘லாசே’யும் அவர் வேலை பார்த்த டென்மார்க் தேசத்து ‘ஸ்டோன் பண்ணையும்’ சக வேலையாட்களும், அதன் முதலாளியும் இன்னமும் மனதை விட்டு அகலமாட்டேன் என்கிறார்கள். நேற்றுப் பார்த்த ‘Pelle the conqueror’ என்ற டேனிஷ் திரைப்படம் பற்றிதான் குறிப்பிடுகிறேன். கதாநாயகன் என்னவோ, துரதிஷ்டம் பிடித்த லாசேவின் குட்டிமகன் பெல்லேதான். ஆயினும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே ஏதாவது ஒருவகையில் அவ்வப்பொழுது நினைவில் வந்து போகிறார்கள்.

ஒருவேளை படத்தின் கதாபாத்திரங்களை, அந்த பள்ளிக்கூட வாத்தியார் உட்பட அவர்களின் மிகைப்படுத்தப்பட்ட வகையில் பல தமிழ்ப்படங்களில் நாம் பார்த்தவர்களாயிருப்பதால், எழுந்த தாக்கமாகவும் இருக்கலாம்.

வறுமையால் ஸ்வீடனில் இருந்து துரத்தப்படும் லாசேவும் அவரது மகனும், வேலை தேடி டென்மார்க் தேசம் வந்தாலும், ‘குடியிருக்க ஒரு சிறு வீடு’ ‘ஞாயிற்றுக்கிழமை காலையில் படுக்கையில் கிடைக்கும் காப்பி’ என்ற அவர்களது ஆசை எட்டாக்கனியாகவே இருந்தாலும், நம்பிக்கையுடனே படம் முடிகிறது.


1910ம் ஆண்டு எழுதப்பட்ட புகழ்பெற்ற டென்மார்க் தேசத்து நாவலை படமாக்கியிருக்கிறார்கள். எனவே நாவலின் கிளைக்கதையில் இடம்பெற்றிருக்கும் பல பாத்திரங்கள் சுருக்கமாக வந்து போனாலும், அவர்களைப் பற்றிய முழுக்கதையையும், நம் மனதில் உணர்வுகளாக எழ வைத்தது இயக்குஞரின் திறமை என்றால், கண்ணை மூடிக்கொண்டாலும் படம் பார்ப்பது போன்ற உணர்வை அளித்தது, இசையமைப்பாளரின் திறமை!

ஆனால் படத்தில் அனைத்தையும் மிஞ்சி நிற்பது, லாசேவாக நடித்த மாக்ஸ் வான் சிடோ என்ற ஸ்வீடன் நடிகரின் நடிப்பு. லாசேவின் இயலாமையும், தோல்வியும், அவநம்பிக்கையும் அவரது உடல்மொழியிலேயே தெறிக்க அவ்வளவு இயல்பான நடிப்பு.

1989ம் வருடத்திற்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற பெல்லே எரொபிரென், (உச்சரிக்க சிரமப்படவேண்டாம். படத்தில் வரும் ஒரு சிறுவனின் பெயரை அவனது அம்மாவே சரியாக உச்சரிக்க முடியாதாம்) திரைப்பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்.

மதுரை
15/01/12

8.2.08

COMMERCIAL (S)HIT





'காளை' என்ற தமிழ்ப்படத்திற்கு எத்தனையோ விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய செய்தித்தாளில் படத்தயாரிப்பாளர்களே செய்து கொண்ட விமர்சனத்தை விட பொறுத்தமான விமர்சனம் யாரும் செய்திருக்க முடியாது!

மதுரை
09.02.08

29.5.07

விகடன் - உண்மைக் கலைஞனின் கோபம்

திரைப்பட நடிகர்களின் பின்னே விசிறி என்று சுற்றுவது முட்டாள்களின் வேலை என்று முகத்திலடிக்கும்படி கூறுகிறார் பிரகாஷ்ராஜ். ‘ஸ்பேடை ஸ்பேட்’ என்று கூறக்கூடிய ஒரு நடிகர் தமிழ் திரையுலகில் இருப்பது அதிசயம். ஆனந்த விகடனில் வெளிவரும் பிரகாஷ்ராஜின் கட்டுரைகள் பற்றி கடந்த கிறிஸ்துமஸ் ஆராதனையில் பாதிரியார் குறிப்பிட்டார். அவ்வப்போது படிக்கையில் அவர் மீதான மதிப்பு கூடும். தற்பொழுது இன்னும் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.

முட்டாள்தனம் என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அவ்விதமான அறியாமைகளுக்கு மன்னிப்பும் இல்லை என்று அண்டன் செகோவ் கதையை உதாரணம் காட்டுகிறார்.

பிரகாஷ்ராஜ் தனது திறமையினை நம்புகிறார். பிறகு ஏன் ரசிகர் என்ற சோம்பேறிக் கூட்டங்கள் என நினைத்திருக்கலாம். பல நடிகர்களுக்கு அவ்வாறு தோன்றலாம். தங்கள் மீது கொண்ட அவநம்பிக்கையின் காரணமாக இவற்றை பொறுத்துக் கொள்கிறார்கள் என்பது எனது அனுமானம். முன்பு ஒருமுறை குறிப்பிட்டேன். சரக்கு குறையும் இடத்திலெல்லாம், இவ்விதமான விளம்பர யுக்திகள் தேவைப்படும் என்று. சரக்கு எவ்வளவு தூரம் குறைகிறதோ அவ்வளவு தூரம் ரசிகர்களை முட்டாளாக்குவதும் அதிகமாகும். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்று தொடர்பு படுத்திப் பார்த்தால் விளங்கலாம்.

கமலஹாசன் அவ்வப்போது, தன்னை இப்படியான கூட்டங்களிலிருந்து விடுபடுத்திக் கொள்ளப்பார்ப்பார். பின்னர் தனது வெற்றியின் மீது நம்பிக்கையில்லாமல் நற்பணி மன்றம் என்று காம்பிரமைஸ் செய்து கொள்வார். குருதிப்புனல் படத்தில், கமலுக்கும் நாசருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களில், தீவீரவாதமெல்லாம் இங்கே செல்லாது என்று நாசருக்கு புரிய வைக்க ‘ரசிகர் பட்டாளங்களைப்’ பற்றி சில கூறுவார். எவ்வித வெட்கமுமின்றி அந்த வசனங்களுக்கு தேவி தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டிக் கொண்டிருந்தார்கள்.

பிரகாஷ்ராஜ் வேண்டாம், கவுண்டமணியிடம் இருந்தாவது தமிழக ஹீ(ஜீ)ரோக்கள் கற்றுக் கொள்வது நல்லது.

7.5.07

காட் பாதர் - நாயகன் = தேவர் மகன்!

மணிரத்னத்தின் இரவல் சிந்தனைகள் என்ற கட்டுரையினை சென்னைக் கச்சேரி என்ற தனது வலைப்பதிவில் பதிவர் தேவ் எழுதியிருக்கிறார். பின்னூட்டங்களும் சுவையானவை! படித்ததும் நானும் எனது அனுமானம் ஒன்றினை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ஏற்கனவே எனது இணைய நண்பர்களிடம் கேட்டதுதான்...யாரும் இதுவரை எனது அனுமானம் சரிதான் என்று கூறாததால், எனது விடாமுயற்சியும் தொடர்கிறது!

நாயகன் படம் காட்பாதர் கதையின் உல்டா என்பதை மணிரத்தினமே மறுக்க மாட்டார். நாயகனில் தமிழர்களுக்கு தொல்லை தரும் காவலரை வேலு நாயக்கர் கொல்வது போல, காட் பாதரில் இத்தாலியர்களிடம் வட்டிக்கு கடன் கொடுத்து தொல்லை கொடுப்பவரை டான் கார்லியோன் கொல்வார். அடுத்த நாள் டீக்கடையில் காசு வாங்க மறுப்பது போல காட் பாதரிலும் ‘கொன்றது யாருக்கும் தெரியாது’ என்று நினைத்திருந்தாலும் எல்லாம் இலவசமாக கிடைக்கும்.

கார்லியோனுக்கு மூன்று மகன்கள். வேலு நாயக்கருக்கு ஒரே மகன். ஆனால் கார்லியோனின் மூத்த மகனும், நாயக்கரின் மூத்த மகனும் முரட்டு குணம் படைத்தவர்கள்...இருவருமே தங்களது தந்தையின் விருப்பத்தையும் மீறி தங்களை அப்பாவின் தொழிலில் இணைத்துக் கொள்வார்கள். தங்களது முரட்டு குணத்தால் ஒரே மாதிரி அழிவார்கள்! அப்பாக்களும் ஒரே மாதிரி அழுவார்கள்!!

கார்லியோன் சுடப்பட்டு மருத்துவமனையில் இருக்கையில், மீண்டும் அவர் மீதான கொலை முயற்சியினை தடுக்க அவரைக் காப்பாற்றும் காட்சியினை ஏற்கனவே மணிரத்னம் தனது மற்றொரு படத்தில் திருடியிருப்பதால், நாயகனில் இல்லை!

ஆக, பழி வாங்கப்படுபவரின் ரத்தம் கண்ணாடியில் தெரிக்கும் காட்சி உட்பட நாயகன், காட் பாதரின் காப்பிதான். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளும் அன்பர்கள் காட்பாதரின் அப்பட்டமான inspired movie ‘தேவர் மகன்’ என்ற எனது அனுமானத்தினை ஏற்றுக் கொள்ள யோசிக்கிறார்கள்.



***


நாயகனின் முதல் மகன் ஏற்கனவே செத்துப் போனதால், தேவருக்கு கிடைத்தது, டான் கார்லியோனின் அடுத்த இரண்டு மகன்கள்!

கார்லியோனின் இரண்டாவது மகன் சரியான குடிகாரன். தந்தையின் ஆளுமைக்கு சற்றும் தகுதியில்லாதவன். பின்னர் எவ்வித தயக்கமுமின்றி தந்தையின் இடத்தினை நிரப்ப தம்பியே தகுதியானவன் என அவனுக்கு விட்டுக் கொடுக்கிறான். தேவர் மகனிலும் அவ்வாறே!

இரு படங்களிலும் கதாநாயகனான கடைசி மகனோ, தான் பிறந்த கலாச்சாரத்தினை விட்டு உயர்கல்விக்காக விலகியிருக்கிறார்கள். கத்தோலிக்க பிரிவினை சேர்ந்த இத்தாலிய கார்லியோனின் மகன், புரொட்டஸ்டாண்ட் பிரிவினை சேர்ந்த ஆங்கிலேய பெண்ணை காதலிக்கிறார். அவர்களுக்கிடையேயான கலாச்சார வித்தியாசம் போலவே, தேவர் மகனுக்கும் அவரது காதலிக்கும் வித்தியாசம்.

இருவருக்குமே தங்கள் காதலியுடன் தங்கள் கலாச்சாரத்தினை விட்டு விலகி செட்டிலாகிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

இரு கதைகளும் கடைசி மகன் தனது காதலியினை தனது வீட்டிற்கு வந்து அந்த சூழ்நிலைக்கே பொருத்தமில்லாத நபர்களையும் பழக்க வழக்கங்களையும் காதலிக்கு அறிமுகப்படுத்துவதில் தொடங்கும்.

தெளிந்த நீரோடை போல அமைதியாக பயணிக்கும் கதை ஒரு சிறிய பொறியில் ‘ஜெட்’ போல வேகம் பிடிக்கும்.

கதையில் ஏற்ப்படும் வேகமான திருப்பங்களில், இரு கதாநாயகர்களும் காதலியினை தற்காலிகமாக பிரிய, சந்தர்ப்ப சூழ்நிலையில் கிராமத்து பெண்ணை மணக்க நேரிடும்.

கடைசி மகன் மீதான கொலை முயற்சியில் காட்பாதர் படத்து மனைவி இறக்கிறார். தேவர் மகன் மனைவி பிழைத்துக் கொள்கிறார்.

பிறந்த இடத்து கலாச்சாரம் பிடிக்காத இரு கதாநாயகர்களும்...கதையின் போக்கில் அதே கலாச்சாரத்திற்குள் தள்ளப்படுவார்கள்.

இருவரது அப்பாக்களும் பேரப்பிள்ளைகளுடன் விளையாடுகையில் மாரடைப்பு ஏற்ப்பட்டு மரிப்பார்கள்.

தந்தையின் பாத்திரத்தை மகன் ஏற்றதன் அடையாளமாக காட்பாதரில் தந்தையைப் போலவே தாடையில் ஏற்ப்படும் அடி! தேவர் மகனில் மீசை!!

தேவர் மகன் திரைக்கதை எழுதியது யாரென்று தெரியாது...சந்தித்தால் கேட்க வேண்டும்...

மதுரை
07.05.07