திரைப்பட நடிகர்களின் பின்னே விசிறி என்று சுற்றுவது முட்டாள்களின் வேலை என்று முகத்திலடிக்கும்படி கூறுகிறார் பிரகாஷ்ராஜ். ‘ஸ்பேடை ஸ்பேட்’ என்று கூறக்கூடிய ஒரு நடிகர் தமிழ் திரையுலகில் இருப்பது அதிசயம். ஆனந்த விகடனில் வெளிவரும் பிரகாஷ்ராஜின் கட்டுரைகள் பற்றி கடந்த கிறிஸ்துமஸ் ஆராதனையில் பாதிரியார் குறிப்பிட்டார். அவ்வப்போது படிக்கையில் அவர் மீதான மதிப்பு கூடும். தற்பொழுது இன்னும் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.
முட்டாள்தனம் என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அவ்விதமான அறியாமைகளுக்கு மன்னிப்பும் இல்லை என்று அண்டன் செகோவ் கதையை உதாரணம் காட்டுகிறார்.
பிரகாஷ்ராஜ் தனது திறமையினை நம்புகிறார். பிறகு ஏன் ரசிகர் என்ற சோம்பேறிக் கூட்டங்கள் என நினைத்திருக்கலாம். பல நடிகர்களுக்கு அவ்வாறு தோன்றலாம். தங்கள் மீது கொண்ட அவநம்பிக்கையின் காரணமாக இவற்றை பொறுத்துக் கொள்கிறார்கள் என்பது எனது அனுமானம். முன்பு ஒருமுறை குறிப்பிட்டேன். சரக்கு குறையும் இடத்திலெல்லாம், இவ்விதமான விளம்பர யுக்திகள் தேவைப்படும் என்று. சரக்கு எவ்வளவு தூரம் குறைகிறதோ அவ்வளவு தூரம் ரசிகர்களை முட்டாளாக்குவதும் அதிகமாகும். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்று தொடர்பு படுத்திப் பார்த்தால் விளங்கலாம்.
கமலஹாசன் அவ்வப்போது, தன்னை இப்படியான கூட்டங்களிலிருந்து விடுபடுத்திக் கொள்ளப்பார்ப்பார். பின்னர் தனது வெற்றியின் மீது நம்பிக்கையில்லாமல் நற்பணி மன்றம் என்று காம்பிரமைஸ் செய்து கொள்வார். குருதிப்புனல் படத்தில், கமலுக்கும் நாசருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களில், தீவீரவாதமெல்லாம் இங்கே செல்லாது என்று நாசருக்கு புரிய வைக்க ‘ரசிகர் பட்டாளங்களைப்’ பற்றி சில கூறுவார். எவ்வித வெட்கமுமின்றி அந்த வசனங்களுக்கு தேவி தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டிக் கொண்டிருந்தார்கள்.
பிரகாஷ்ராஜ் வேண்டாம், கவுண்டமணியிடம் இருந்தாவது தமிழக ஹீ(ஜீ)ரோக்கள் கற்றுக் கொள்வது நல்லது.