8.7.08

நீதிமன்ற புறக்கணிப்பும்...சோம்பேறி மனதும்





கடந்த ஒரு வாரமாக வழக்குரைஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களை புறக்கணித்து வருகின்றனர். இவ்வாறான் தொடர்ச்சியான போராட்டங்களில் வழக்கமாக பங்கு எடுக்காத, மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞர்களும் நீதிமன்றங்களை புறக்கணிப்பதால், தமிழக நீதித்துறையில் பெரும் பிரச்னை எழுந்துள்ளது.

வழக்குரைஞர்கள் இவ்வாறு நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது, முறையல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறினாலும், இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது இது வரையில், தமிழகத்தை பொறுத்தவரை நீதித்துறை அறியாத ஒன்று.

ஏனெனில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நீதித்துறையினரும் வழக்குரைஞர் சமுதாயத்திலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதால், இருவருக்கும் இடையில் நிலவும் நெருக்கமான உறவு கடினமான நடவடிக்கைகளை எடுக்க தடையாக உள்ளது.

பல சமயங்களில், நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கை என்பது மிகச்சிலரான வழக்குரைஞர்களால் முன் வைக்கப்பட்டு மற்றவர்கள் எதற்கு வம்பு என்று ஒதுங்கிக் கொள்ள நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஓரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை...தொடர்ந்த புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது, கட்சிக்காரர்கள் பலரின் அடிப்படை உரிமையினை பாதிக்கும் ஒரு செயல் என்பதை பல வழக்குரைஞர்கள் அறிந்திருந்தாலும்...ஏதும் செய்ய இயலாத நிலையில் உள்ளனர்.

-oOo-

வழக்குரைஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்கள் பலமுறை வெற்றி பெருவதில்லை. ஓரளவிற்கு பிறகு வழக்குரைஞர்கள் சோர்ந்து...போராட்டங்கள் நீர்த்துப் போகிறது. வழக்குரைஞர்களும் அதற்காக வெட்கப்படுவதில்லை.

லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினால், அது பொது மக்கள் அனைவரையும் பாதிக்கிறது. போராட்டம் தொடங்கும் முன்னே பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகி...அரசு நடவடிக்கை எடுக்க முன் வருகிறது.


ஆனால் வழக்குரைஞர் போராட்டங்களில், நீதிமன்றத்தை அணுகும் மிகச் சிறிய அளவிலான, அதிலும் குற்றவியல் நீதிமன்றங்களை அணுகும் மக்கள் கூட்டத்தினரே பாதிக்கப்படுகின்றனர்.

தற்பொழுதும், ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வந்தாலும்...பெரிய செய்தி ஏதும் இல்லை. இறுதியில் வழக்குரைஞர்கள் அமைச்சர்களாக இருக்கும் தங்களது சமுதாயத்தை சார்ந்தவர்கள் மூலமாக காரியத்தை முடித்துக் கொள்வார்கள்...அதுதான் புத்திசாலித்தனமும் கூட!

-oOo-

கடந்த வாரம் எழுந்த தசவதார இரைச்சலில் அதிகமாக கேட்டது ‘ஹாலிவுட் படங்களுக்கு நிகரான உலகத்தரம்’ என்ற வார்த்தை!

‘அமெரிக்காதான் உலகம்’ என்று அமெரிக்கர்கள்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்...நாமும் கூடவா?

70 கோடியில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தொழில் நுட்பத்தில் எடுக்க முடியுமென்றால்...அந்த மடையர்கள் ஏன், 1000 கோடியினை படமெடுப்பதற்கு வீணாக்குகிறார்கள்?

-oOo-

வலைப்பதிவர்கள் அரைவேக்காடுகள் என்ற ரகசியம் உட்பட தமிழகத்தில் எல்லாவற்றையும் அறிந்த ‘ஞாநி’ இந்த வார குமுதத்தில் ஊட்டி மலையில் அமைக்கப்படும் ஆராய்ச்சி மையத்தினால் வனப்பகுதிக்கு ஏற்ப்படப் போகும் பாதிப்பினைப் பற்றி கவலைப்படுகிறார்.

ஆனால், ஊட்டி வனப்பகுதிக்கு பேரழிவை ஏற்ப்படுத்தியது அங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் என்பது புரியாமல்...புகைப்படங்களில் மட்டுமே அழகாகத் தோன்றும் தேயிலைத் தோட்டத்தின் படத்தை கட்டுரைக்கு பின்புலமாக பயன்படுத்தி கட்டுரையின் நோக்கத்தையே கேலிக்குறியதாக்கியதால், குமுதத்திற்கும் ஒரு குட்டு!

-oOo-

யார் கேள்வி கேட்டாலும், பக்கம் பக்கமாக எழுதி தன் ஞானத்தை முன்னிறுத்தும் ஜெயமோகன், வலைப்பதிவர்கள் சிலர் தர்மசங்கடமான கேள்விகளை எழுப்பியதற்கு மட்டும் ‘ஞாநி’யைப் போல பொங்கி பின் குமுதம் போல கேலி செய்து முடித்து விட்டார்.

கருணாநிதியின் ‘இலக்கியத்தை’ கேள்விக்குறியதாக்கிய பொழுதும், எம்ஜிஆர் சிவாஜியைப் பற்றி சுவராசியமாக கிண்டலடித்த பொழுதும்...ஜெயமோகனுக்கு அரணாக நின்றது வலைப்பதிவர்கள்தான்...

ஆனாலும், பயந்து போய் கட்டுரையைத் தூக்கி, ஆதரித்தவர்களை நட்டாற்றில் விட்டார் என்பது வேறு கதை!

-oOo-

உலக மகா இலக்கியம், சினிமா பேசும் சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்றவர்கள் இந்திய மசாலா திரைப்படங்களை அவ்வப்போது சற்று தடவிக் கொடுப்பது அவர்களின் நோக்கத்தினை சந்தேகிக்க வைக்கிறது.

தமிழ் வாசிக்கும் என் ஆர் ஐ இளைஞர்களை அடுத்து அவர்களது நம்பிக்கை......தமிழ் திரைப்படங்களாக இருக்குமா என்ற சந்தேகம்...

Lazy mind is devil’s workshop என்று சும்மாவா சொன்னார்கள்...I blame it on Advocate’s strike.

மதுரை
10.07.08




TERRACOTA IN MUMBAI BAZAR

24 comments:

Boston Bala said...

---‘அமெரிக்காதான் உலகம்’ என்று அமெரிக்கர்கள்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்..---

கலக்கல் :)

manikandan said...

ஆனாலும் உங்களுக்கு ஞானி மேல ஒரு கண்ணு சார். தேயிலை தோட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பை பற்றி ஒரு லிங்க் தரலாமே.

PRABHU RAJADURAI said...

இது WWF வலைப்பக்கத்தில் கிடைத்தத்ஹு

http://www.panda.org/about_wwf/what_we_do/policy/agriculture_environment/commodities/tea/environmental_impacts/index.cfm

முதல் முதலில் தேயிலைத்தோட்டத்தை பார்த்த என்க்கு green desert என்ற சொற்றொடர் ஞாபகத்திற்கு வந்தது...பின் என் நண்பர் அவைகள் அவ்வாறு அழைக்கப்படுவதாக் கூறினார்

புருனோ Bruno said...

முதல் படம் மகாபலிபுரமா ??

PRABHU RAJADURAI said...

முதல் படம் மகாபலிபுரமா ??

ஆமாம்

PRABHU RAJADURAI said...

முதல் படம் மகாபலிபுரமா ??

ஆமாம்


sorry ஆம்

தூத்துக்குடியில் அப்படித்தானே சொல்வார்கள்:-)

Anonymous said...

பிரபு ராஜதுரை!

தங்களின் கருத்தை ஞாநிக்கு மடலிட்டிருக்கிறேன் (gnanisankaran [at] hotmail. தாங்களே இதை செய்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.) அவரின் பதில் வரும்வரை காத்திருப்போம்.

அன்புடன்
வெங்கட்ரமணன்.

Anonymous said...

//வலைப்பதிவர்கள் அரைவேக்காடுகள் என்ற ரகசியம் உட்பட//
இது கொஞ்சம் அதிகபட்சமானதும், தேவையில்லாததாகவும் படுகிறது.
அவர் சொன்னது -
//எனக்கு இணைய உலகில் பிடிக்காத அம்சம், அங்கு சரி பாதியாக நிலவும் அரைவேக்காட்டுத்தனம்தான்.// (சரிபாதியாக என்பது அடிக்கோடிடப்பட வேண்டிய விஷயம்!) ஏனென்றால் வலைப்பதிவர்கள் மொத்தத்தையும் கணக்கில் கொண்டோமேயானால், இது அப்பட்டமான உண்மை (சற்றே கசந்தாலும்!)

அன்புடன்
வெங்கட்ரமணன்

PRABHU RAJADURAI said...

நன்றி வெங்கட்ரமணன்,

அது ஒரு அழுத்தத்திற்காக எழுதியது. அவ்வளவுதான்...அப்படியே பொருள் கொள்ள வேண்டாம்.

ஆயினும், வலைப்பதிவர்கள் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. அவரவர் மன அழுத்தத்தினை குறைத்துக் கொள்ளவும் எழுதுகிறார்கள். அவர்கள் முழு வேக்காடாக இருக்க வேண்டுமென்றோ, முழு ஆய்வு செய்ய வேண்டுமென்றோ யாரும் எதிர்பார்க்க முடியாது.

'குயில்கள் மட்டும்தான் பாட வேண்டுமென்றால் கானகம் அமைதியாக இருக்கும்'

மற்றபடி அவர் எந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு குமுதத்தில் எழுதினார் என்பது முக்கியமானது. அவரைப் பற்றிய தீவிரமான விமர்சனங்கள் வலையகத்தில் எழுந்த சமயத்தில் இப்படி பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாட்டினை கூற முற்ப்பட்டார்.

ஜெயமோகனுக்கு கூறியது இவருக்கும் பொருந்தும். கருணாநிதியைப் பற்றி இவர் எழுதியதை கண்டித்து 'முற்போக்கு' எழுத்தாளர்கள் கூட்டம் போட்டு கண்டித்தார்கள். ஆனால், வலையகத்தில் மட்டுமே, சில ஆதரவுக் குரல்கள் கேட்டன. ஆனால் அவர்களை விமர்சித்தால், அவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை!

Boston Bala said...

வெங்கட்ரமணன்,

ஞாநி சொல்லும் பாதி கருத்துகள் அரைவேக்காட்டுத்தனம்தான் என்று சொன்னால், 'ஏதோ... ஒன்றிரண்டு நல்ல விஷயங்களும் சொல்றார் இல்ல' என்னும் சிந்தனைக்கு பதில், 'ஞாநி வேஸ்ட்பா' என்பது பலரின் முடிவாக அமையும்.

ஓ பக்கங்கள் 17 - இதில் ஆரம்பிக்கும் கருத்து தவறானது. ட்விட்டரில் புலம்பிய மாதிரி 'கொண்டாட்டம், விளம்பரம் எல்லாம் அரசியல்வாதி ஒபாமா முதல் சக அமெரிக்க உழைப்பாளி வரை எல்லோருக்கும் பொது' என்று மொத்த கட்டுரையின் பின்னணியே தவறு எனலாம்.

எனினும் இறுதியில் முத்தாய்ப்பான 10% (புத்திசாலித்தனமல்ல, நேர்மைதான் நமக்கு தேவைப்படும் முதல் ஆயுதம்..) நியாயமானது என்பதால் சொல்லப்பட்ட பின்னணியை கண்டுக்காமல் போய் விடுவது போல் நம்பிக்கை தரும் பதிவர்களை வைத்து(ம்!) மதிப்பிட்டிருக்கலாமே :)

Anonymous said...

பிரபு ராஜதுரை!
//ஆயினும், வலைப்பதிவர்கள் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. அவரவர் மன அழுத்தத்தினை குறைத்துக் கொள்ளவும் எழுதுகிறார்கள்//
நம் தனிப்பட்ட அனுபவங்களை எழுதுவது பற்றி நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன். ஆனால் ஒரு பொது கருத்து (இடப்பங்கீடு, அணு ஆயுத ஒப்பந்தம்,...) குறித்து எழுதும்போது குறைந்தபட்ச ஹோம்வொர்க் கூட இல்லாமல் எழுதுபவர்கள்தான் (Armchair Journalist மாதிரி) அதிகம். மேலும் அந்த குறிப்பிட்ட கட்டுரைக்கு வந்த எதிர்வினைகள் பெரும்பாலும் அரைவேக்காட்டுத்தனமாகவே ("இவர் சொல்றது கரெக்டுங்கறேன்" அல்லது "புத்தியைக் காட்டிட்டான்யா!")இருந்தன. நானறிந்தவரை சொல்கிறேன் (இவரின் ஞாநி பேசுகிறேன், 3 கட்டுரைத் தொடர்கள், திண்ணைக் கட்டுரைகள், 3 வருட ஓ.பக்கங்கள் என ஓரளவு இவரை அனுகியிருக்கிறேன்), இருக்கும் பத்திரிக்கையாளர்களில் ஓரளவு (இல்லை அதற்கும் மேலும்) நம்பத்தகுந்தவர் ஞாநி!

பதிலுக்கு நன்றி.
ஞாநியின் பதிலுக்கு பொறுத்திருப்போம்.

அன்புடன்
வெங்கட்ரமணன்

Anonymous said...

பாலா
நான் முக்கியமாய் குறிப்பிட நினைத்தது:

1. பிரபுவே (கிட்டத்தட்ட) சொன்னமாதிரி 'போகிறபோக்கில்' சொல்லப்பட்ட விதம் ("வலைப்பதிவர்கள் அரைவேக்காடுகள் என்ற 'ரகசியம்' உட்பட" என்றால் நக்கல்தானே!)

2. ஞாநி மீது (சற்று அதிகமாகவே) வலையுலகின் கரித்து கொட்டல்! எம்.எஸ். முதற்கொண்டு அவரின் விமர்சனங்கள், கருத்துக்கள் பலவும் வலையுலகில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு (அல்லது அப்படி திரித்து பரப்பிவிடப்பட்டுள்ளனவா என்று தெரியலை. எம்.எஸ். குறித்தான இவரது விமர்சனத்தின் தவறான பார்வையை இட்லிவடையில் கூடப் பார்த்திருக்கிறேன்) அவரைப் பலரும் "மவனே மாட்டினான்டா" என்று புரட்டி எடுப்பது! (எனக்குமே அவரிடம் பல கேள்விகள் உண்டு - ஏன் அவர் பிற மதத்தினர்களையோ, அந்த சடங்குகளையோ அதிகம் கேள்வியெழுப்புவதில்லை, இன்ன பிற. ஆனால் அது வேறு. அதற்காக அவரது எல்லா கருத்துக்களையும் எதிர்க்கத் தேவையில்லை)

நீங்கள் சொன்னதிலும் கூட அவர் டிஸ்க்ளெய்மர் போட்டிருக்கார்னு தான் தோணுது(//சுமார் 50 நாடுகள் சுற்றிய அனுபவத்தில் அவர் அதைச் சொன்னார்//) மற்றும் அவரது முக்கியமான கருத்து - "திருமணம், நிச்சயதார்த்தம் - இரண்டும் பெரும் பொருட் செலவில் பிரும்மாண்டமாக நடந்தன" என்பதுதான்.

And திரும்பவும் சொல்றேன் - அவரின் இந்த வலையுல flippancy தொடர்பான கருத்து எனக்கு தப்புனு தோணவேயில்லை (வலையுலகில் ஆரோக்கியமான விவாதங்களும், கருத்துக்களும் இருக்குங்கறதை நான் கண்டிப்பா மறுக்க மாட்டேன்! மறுத்தா அது அபத்தம்! ஆனா மொத்தமா கணக்கெடுத்தோம்னா அது பாதிக்கும் கம்மிதான்) எத்தனையோ தனிமனித துவேஷங்கள், ஊசிப்போன மத,சாதிச்சண்டைகள், சித்தாந்தச் சர்ச்சைகள், பைசா பிரயோஜனமில்லாத விஷயத்துக்கு (வெட்டுக்குத்து ஒண்ணுதான் இல்லை) அடிச்சுக்கறாங்க! அதுக்காக இதெல்லாம் பத்திரிக்கைகளில் இல்லைனு சொல்லலை - நாமளும் அப்படியிருக்கறப்ப, எதுக்காக ஒருத்தர் குத்தம் சொன்னா கோவம் வருதுனு கேக்கறேன்

//புத்திசாலித்தனமல்ல, நேர்மைதான் நமக்கு தேவைப்படும் முதல் ஆயுதம்.// இதுவும் இங்கே (comparatively) கம்மி, அவரிடம் அதிகம்!

அன்புடன்
வெங்கட்ரமணன்

புருனோ Bruno said...

//ஆனால் ஒரு பொது கருத்து (இடப்பங்கீடு, அணு ஆயுத ஒப்பந்தம்,...) குறித்து எழுதும்போது குறைந்தபட்ச ஹோம்வொர்க் கூட இல்லாமல் எழுதுபவர்கள்தான் (Armchair Journalist மாதிரி) அதிகம்.//

வலைப்பதிவில் எழுதுபவர்களை விட பல நேரங்களில் ஞானி அரை வேற்காட்டுத்தனமாக எழுதியுள்ளார் என்பது உண்மை

--

நீங்கள் உதாரணமாக குறிப்பிட்டுள்ள இரு உதாரணங்கள் பற்றி வந்த இடுகைகள் “ஜஸ்ட் லைக் தேட்” எழுதப்படவில்லை.

சில விஷயங்களில் “கருத்தாழமில்லாத” இடுகைகள் வந்தது உண்மை. சமிபத்திய உதாரணம், தசாவதாரம், அதற்கு முன்னர் கட்டாய கிராமப்புற திட்டத்தை எதிர்த்த மருத்துவர்களின் போராட்டம் குறித்த இடுகைகள்.

ஆனால் கட்டாய கிராமப்புற திட்டத்தை பற்றி ஞாநியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை ஒப்பிட்டு பார்த்தால் வலைப்பதிவுகள் பரவாயில்லை.

எனக்கு அனைத்து விஷயங்களும் தெரியாது. எனக்கு தெரிந்த விஷயங்கள் பற்றி ஞாநி எழுதியதெல்லாம் உண்மைக்கு எவ்வளவு தொலைவில் உள்ளது என்று எனக்கு தெரிந்ததால் அவர் மீது (இப்படிதான் மற்ற விஷயங்களிலும் ரீல் சுத்துகிறாரோ என்று) மதிப்பு குறைந்தது உண்மை.

வக்கீலும் தற்பொழுது (சட்டங்கள் குறித்த ஞாநியின் வாதங்களை பார்த்து) அந்த எண்ண நிலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
--
வலைப்பதிவுகள் அரைவேற்காடாக இருக்கலாம். ஆனால் ஞாநி அதை கூறுவது கண்ணாடி விட்டிலிருந்து கல்லெறிவது போல்.
--

புருனோ Bruno said...

//ஓ பக்கங்கள் 17 -
ஏன் முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின், தலித் தலைவர் திருமாவளவன் எல்லாரும் முதுகுவலி, கழுத்துவலிக்கே தனியாரின் ராமச்சந்திரா மருத்துவமனைக்குப் போகிறார்கள்?

அரசு மருத்துவமனையை இவர்களே பயன்படுத்தத் தயங்கினால், எப்படி மக்களுக்கு அவற்றின் மீது நம்பிக்கை வரும்?//

அப்படி யாராவது மருத்துவமனை வந்து சேர்ந்தால், பிற நோயாளிகளின் நிலை குறித்து ஞாநி ஒரு நிமிடமாவது யோசித்து பார்த்தாரா.

சில காலம் முன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் மனைவிக்கு புதுக்கோட்டை ராணி மருத்துவமனையில் பிரசவம் நடந்தபோது என்ன ஆயிற்று என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவரின் மனைவி வந்தாலே இந்த நிலைமை என்றால், மாவட்ட ஆட்சித்தலைவர் (உள்நோயாளியாக) சேர்ந்தால் என்ன வாகும், தலைமைச்செயலர் அரசு மருத்துவமனை வந்தால் என்ன நடக்கும், அமைச்சர் வந்தால் என்ன நடக்கும், முதலமைச்சர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தால் என்ன நடக்கும் என்று உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

--
அது சரி, அதன் பின் ஞாநி என்ன எழுதுவார் தெரியுமா “அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் போன்ற ”க்ரீமி லேயர்” நபர்கள் ஏழைகளுக்கு அரசு ஒதுக்கும் பணத்தை வீணாக்குகிறார்கள்” என்று எழுதுவார்.

புருனோ Bruno said...

//தூத்துக்குடியில் அப்படித்தானே சொல்வார்கள்:-)//

ஆம் :) :) :)

Anonymous said...

>>>> 'குயில்கள் மட்டும்தான் பாட வேண்டுமென்றால் கானகம் அமைதியாக இருக்கும்'

'நச்'!

>>>> தமிழ் வாசிக்கும் என் ஆர் ஐ இளைஞர்களை அடுத்து அவர்களது நம்பிக்கை......தமிழ் திரைப்படங்களாக இருக்குமா என்ற சந்தேகம்...

எனக்கும் இந்த சந்தேகம் - ரெண்டுபேரும் பேசிவச்சி பப்ளிசிட்டி செய்வதாக தோனுது! அப்புறம் இதெல்லாம் பின்நவினத்துவக் கூறுன்னு ஒதறிதள்ளீட்டு போயிக்கினே இருப்பாக!

அதுவும் சுஜாதாவிற்கு இருந்த என்.ஆர்.ஐ வாசகர்களை தன் வசம் இழுக்க சாரு தலகிழ நின்னு தண்ணி குடிக்கறத பார்க்க தமாஷாத்தானிருக்கு! ;)

.:டைனோ:.

PRABHU RAJADURAI said...

"எனக்கு அனைத்து விஷயங்களும் தெரியாது. எனக்கு தெரிந்த விஷயங்கள் பற்றி ஞாநி எழுதியதெல்லாம் உண்மைக்கு எவ்வளவு தொலைவில் உள்ளது என்று எனக்கு தெரிந்ததால் அவர் மீது (இப்படிதான் மற்ற விஷயங்களிலும் ரீல் சுத்துகிறாரோ என்று) மதிப்பு குறைந்தது உண்மை"

டாக்டர்,
என் மனதில் பலநாட்களாக நான் நினைத்து வந்ததை தாங்கள் கூறி விட்டீர்கள்...ஆனால் எண்ணியது 'ஞாநி' பற்றியதல்ல...பல சுஜாதா உட்பட தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியது!

புருனோ Bruno said...

//ஆனால் எண்ணியது 'ஞாநி' பற்றியதல்ல...பல சுஜாதா உட்பட தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியது!//

பல வருடங்களுக்கு முன் சில சுஜாதாவின் கட்டுரைகளை படித்தவுடன் தோன்றியது “நல்ல எழுத்தாளர், மோசமான பத்திரிகையாளர்”, மேம்போக்கான தகவலகளை தீர ஆராய்ந்தது போல் அவரது நடையை வைத்து எழுதிவிடுவார் :) :)

சுஜாதாவின் அபார எழுத்து நடையால் (மற்றும் அன்று தகவல் என்பது எளிதில் கிடைக்காத பொருள் என்பதால்) அவரது “பொருட் குற்றங்கள்” கண்டுபிடிக்கப்படவில்லை

1980ல் லேசர் குறித்து அறிவதற்கான புத்தகங்கள் தமிழகத்தில் கல்லூரிகளின் பௌதிகநூலகங்களை தவிர எங்கு இருந்தது ??

ஞாநியின் கெட்ட நேரம். தகவல் என்பது தேடியவுடன் கிடைக்கும் காலத்தில் இப்படி எழுதி மாட்டிக்கொள்கிறார்.

Anonymous said...

புரூனோ மற்றும் பிரபு

தற்போதைக்கு என் புரிதல்களில் நிறைய திருத்திக்கொள்ளவேண்டிய தவறுகள் இருப்பதாகவே படுகிறது! பொறுத்திருந்து பார்ப்போம்!

அன்புடன்
வெங்கட்ரமணன்.

manikandan said...

prabu,

I always wanted to ask you this question but someone how did not remember whenever i came to your blog.

If someone expresses his opinion/displeasure on a supreme court judgement or on the judges through print media or in private discussions, is it punishable by court ?

I agree with you on your comments on gnani. And i am sure that noone knows everything that goes on in the world. Or one need not have a opinion on everything. But it is hard for journalists to realise that and not express their opinions on every single issue. They tend to do it and miss it and it happens in every facet of life and not just journalism. But journals are read by a lot of people. That is the only difference but considering on how we treat the magazines article, it does not really matter.

I saw the recent episode of ஞாநி பேசுகிறேன், he raised the same question to a TV anchor "Rose" asking her on why she is found out on several issues !! she explained that she does not get a lot of time to understand/prepare for the interview. And probably that holds good for Gnani too.

PRABHU RAJADURAI said...

"If someone expresses his opinion/displeasure on a supreme court judgement or on the judges through print media or in private discussions, is it punishable by court ?"

Our Supreme Court welcomes constructive criticisms, which you can find in law journals. My recent article ‘உச்ச நீதிமன்றமும் குழப்பமான தீர்ப்புகளும்’, in my opinion is a constructive criticism.

Though SC may not like someone to express displeasure, it may not amount to contempt. Arunthathiroy’s tirade against the Judgment in Afsal Guru’s case may fall in this category.

However, when you impute motive on a Judge for his Judgment, the same can be termed as contempt. Still the shoulders of the SC are broad enough to bear even such remarks.

Contempt is a whip in the hands of a ringmaster...

Sundar Padmanaban said...

பிரபு அண்ணாச்சி

மொதப் படம் சூப்பரு!

//‘அமெரிக்காதான் உலகம்’ என்று அமெரிக்கர்கள்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்.//

அது சரி. நீங்க ரொம்ப நல்லவருன்னு தெரியுது! :-)

manikandan said...

Thanks for your explanation prabu

ISR Selvakumar said...

"---‘அமெரிக்காதான் உலகம்’ என்று அமெரிக்கர்கள்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்..--"

'நச்' கமெண்ட். மிகவும் இரசித்தேன்