13.8.06

சோனியா காந்தியின் தியாகம்?

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இணையத்தினை பற்றி பத்திரிக்கைகளில் படிக்க நேர்ந்த நான், அதனை மற்றவர்களிடம் கூறுகையில், ‘உலகத்திலுள்ள அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய பெரிய நூலகம்’ என்று கூறி வந்தேன். பின்னர் இணைய பரிச்சயம் நேரிடையாக ஏற்ப்பட்ட பின்னர் அது ஒரு ‘பெரிய குப்பைத்தொட்டி’ என்று தோன்றினாலும் தவறு என் பக்கமும்தான் என்று புரிய பல நாட்களானது. குப்பைத்தொட்டியினை கிளறுவது சில சமயங்களில் சுகம்தான். எப்போது எது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு வகையில் சுவராசியமாக இருக்கும். ஆனால் தவறான முடிவுகளுக்கு பல சமயங்களில் நம்மை வழி நடத்துகையில் ஏமாற்றம் மிஞ்சுகிறது. அச்சுப் பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தார்களுக்குறிய கடப்பாடு (accountability) ஏதும் இங்கு எழுதுபவர்களுக்கு இல்லை என்ற சுதந்திரம் பல தவறான செய்திகள் மக்களை சென்று அடைய இணையம் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் எனக்கு உண்டு!

இந்த அச்சத்தின் காரணமாகவே இணையத்தில் நான் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கும் என்னால் இயன்ற வரை அதிக நேரம் செலவழித்து எவ்வித தவறும் நேராத வரை பார்த்துக் கொள்ள முயல்கிறேன். சில சமயங்களில் சந்தேகம் இருக்கையில் கூடுமான வரை எனது எண்ணமாகவே பதிகிறேன். பெருமைக்காக கூறவில்லை, சட்டத்தினை பற்றி நான் மற்றவர்களுக்கு எழுதுவதற்கும் மேலாக ஒவ்வொரு பதிவிற்கும் எடுக்கும் முயற்சியில் நான் அதிகமாக கற்றுக் கொள்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறுதான் ஒரு இலக்கிய குழுமத்தில் செம்மொழி பற்றி நடை பெற்ற விவாதத்தில் திரு.இந்திரா பார்த்தசாரதி என்ற எழுத்தாளர் "தமிழ் செம்மொழி என்று ஆகிவிட்டால், அரசியல் சட்டம் எட்டாம் பிரிவின்படி, நவீன இந்திய மொழி என்று அதற்குக் கிடைத்து வரும் உரிமைகளும் சலுகைகளும் பாதிக்கப் பட மாட்டா என்பது என்ன நிச்சியம்? ஒரே மொழி இரண்டு தகுதிகளுக்கும் உரியது ஆகாது என்று மனித வள மேம்பாட்டுத் துறை கூறாது என்பது உறுதியா?" என்று ஒரு கேள்வியினை எழுப்பியிருந்தார். இதனைப் படிக்கும் யாருமே ‘நவீன இந்திய மொழி என்று ஒரு பிரிவு உண்டு எனவும், எட்டாவது அட்டவணையில் இடம் பெற்ற மொழிகளுக்கு சலுகைகள் உண்டு’ எனவும் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் நவீன இந்திய மொழி என்று அரசியலமைப்பு சட்டப்படியோ அல்லது வேறு சட்டங்களிலோ எங்கும் ஒரு அங்கீகாரம் இல்லை. மேலும் அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாம் பிரிவில் ஒரு மொழி இடம் பெறுவதால் அதற்கு ரூபாய் நோட்டில் இடம் பெறுவதை தவிர வேறு எந்த பெரிய உரிமையும், சலுகையும் இல்லை என்பதும் இந்த எட்டாவது அட்டவணையே ஒன்றுக்கும் உதவாத, பயனற்ற அட்டவணை என்பதனையும் அவர் அறிந்திருந்தாரா என்பதும் தெரியவில்லை. ஹிந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் வேறு பிரிவுகளில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அட்டவணையிலும் மற்ற மொழிகளோடு ஹிந்தியும் சம்ஸ்கிருதமும் இடம் பெற்றுள்ளன! தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் என்று அவர் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்த சிறு விடயத்தில் எவ்வித ஆராய்ச்சியும் செய்யாமல் போகிற போக்கில் எழுதியதற்கு காரணம், இணையம் தரும் சுதந்திரமே தவிர வேறில்லை!

இதனைப் போலவே குடியுரிமை பற்றிய சட்டப் பிரிவுகளை தனது வலைப்பதிவில் எழுத முயன்ற ஒரு வலைப்பதிவாளர், “ஒரு வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெற்று தேர்தலில் நின்று பிரதமர் ஆக முடியுமா? முடியும். அவர் பிறந்த நாட்டில் அதே சட்டமிருந்தால். இத்தாலியில் ஒரு குடியேற்ற உரிமை பெற்ற வெளிநாட்டவர் அமைச்சர் பதவிகளை பெற முடியாது. அதனால் தான் சோனியா காந்தி அம்மையார் இந்திய பிரதமர் ஆக முடியவில்லை. அவர் தியாகம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை” என்று எழுதியிருந்தார்.

இந்த வாக்கியத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட தவறுகள் உள்ளதாக நான் கற்ற வரையில் அறிகிறேன். முதலில் இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் ஒருவர் இந்தியாவின் பிரதமராக ஆவதற்கு அவர் பிறந்த நாட்டின் சட்டத்திலும் அவ்வாறே ஒரு சலுகை இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்திலோ அல்லது இந்திய குடியுரிமை சட்டத்திலோ எங்கும் கூறப்படவில்லை. ஒருவர் இந்தியாவின் குடிமகனாவதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் குடிமகனாக மாறி விட்ட நிலையில் அனைவருக்கும் ஒரே உரிமைதான். ஒரே ஒரு வித்தியாசம் பிறப்பு தவிர மற்ற வழிகளில் குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையினை அரசு சட்டத்தில் கூறப்பட்ட சில காரணங்களுக்காக பறிக்கலாம். அவ்வளவுதான். மற்றபடி, இத்தாலிய சட்டம் எப்படியிருப்பினும், இந்திய சட்டப்படி இந்திய குடியுரிமை பெற்ற பின்னர் சோனியா பிரதமராவதற்கு சட்ட ரீதியில் தடை ஏதுமில்லை.

அடுத்து இத்தாலிய அரசியல் சட்டம் மற்றும் இத்தாலிய குடியுரிமை சட்டத்தினையும் நான் ஆய்ந்த வரையில் இத்தாலிய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் அங்கு பிரதமர் ஆவதற்கு ஏதும் தடை இருப்பதாக தெரியவில்லை. இத்தாலிய சட்டங்கள் இந்திய சட்டம் போலவே குடிமகன் என்றுதான் கூறுகிறதே தவிர அவற்றில் பிரிவினை எதனையும் குறிப்பிடவில்லை. நான் வலையில் தேடிப்பிடித்த இத்தாலிய சட்டங்களில் பின்னர் ஏதும் திருத்தம் (amendment) ஏற்பட்டதா என்று தெரியவில்லை. ஏனெனில் சட்டங்களைப் படிப்பதில் இந்த ஆபத்தும் உள்ளது. நான் மேலே குறிப்பிட்ட வலைப்பதிவாளர் தனது பதிவில் ஆதாரமாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் வலைத்தளத்தின் சுட்டியினை அளித்துள்ளார். ஆனால், உள்துறை வலைத்தளத்தில் 2004ம் ஆண்டு வாஜ்பாய் அரசினால், இந்திய குடியுரிமை சட்டம் பெருமளவில் திருத்தப்பட்ட விபரங்கள் இல்லை. அதனாலாயே நண்பரும் சட்டப்படி இந்தியாவில் 12 ஆண்டுகள் வசிக்கும் ஒருவர் குடியுரிமை (by naturalisation) பெற முடியும் என்று கூறுகிறார். திருத்தப்பட்ட சட்டப்படி 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்!

சோனியாவின் குடியுரிமை பிரச்னை இரு முறை உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது. 1999ம் வருடம் அமேதி தொகுதியில் இருந்து அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் தோற்றவர் அலகபாத் உயர் நீதிமன்றத்தில் மனு (election petition) செய்ய அந்த மனுவே முறையற்றது என்று கூறி சோனியா தரப்பு வாதாட எடுத்த எடுப்பிலேயே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எதிர் தரப்பினர் உச்ச நீதிமன்றம் செல்ல, உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டினை தள்ளுபடி செய்தது (Hari Shanker Jain Vs Sonia Gandhi (2001) 8 SCC 233). இரண்டாவது முறை சோனியா 2004ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேரிடையாக ஏறக்குறைய அதே காரணத்திற்காக ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே தீர்க்கப்பட்ட வழக்கினை சுட்டிக்காட்டி எடுத்த எடுப்பிலேயே அதனையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதலாவது வழக்கினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு காரணம், மனுவிற்கு தேவையான தெளிவான விபரங்களை அளிக்காமல், பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன என்பதற்காகத்தான். முக்கியமாக வைக்கப்பட்ட ஒரு வாதம், இத்தாலிய சட்டப்படி சோனியா தனது இத்தாலிய குடியுரிமையினை துறக்க முடியாது என்பதாகும். இந்தியாவில் இத்தாலியச் சட்டங்களின் செல்லுபடித்தன்மை ஒரு புறம் இருந்தாலும், ‘எவ்வளவு கேட்டும் மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட இத்தாலிய சட்டத்தினை நீதிமன்றத்தின் முன் வைக்கவில்லை’ என்று தீர்ப்பில் கூறப்படுகிறது. மனுதாரர் இணையத்திலேயே கிடைக்கும் இத்தாலிய குடியுரிமை சட்டத்தினை நீதிபதி முன் வைத்திருக்கலாம். அதிலுள்ள ஷரத்துபடி ஒரு இத்தாலிய குடிமகன் வேற்று நாட்டு குடியுரிமை பெற்றாலும் இத்தாலிய குடியுரிமையினை இழக்க முடியாது. ஆனால் இதுவும் பலன் தராது. ஏனெனில், அதே ஷரத்தின் அடுத்த வரியில் ‘வெளிநாட்டில் குடியேறும் அல்லது வசிக்கும் ஒருவர் இத்தாலிய குடியுரிமையினை துறக்கலாம்’ (renounce) என்று அனுமதியளிக்கிறது. ஆனால் இரண்டுமே இங்கு தேவையற்றது. ஏனெனில் இந்த சட்டமே 1992ம் வருடம் இயற்றப்பட்டது. சோனியா இந்திய குடிமகனான 1983ம் வருடம் நிலுவையிலிருந்த இத்தாலிய குடியுரிமை சட்டப்படி ஒரு இத்தாலியர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றாலே இத்தாலிய குடியுரிமையினை இழப்பார் என்று செய்தித்தாள்களில் படித்துள்ளேன்.

எனினும் வெளிநாட்டவர் ஒருவர் இந்திய குடிமகனாக மாறுவதற்கு அவரது முந்தைய குடியுரிமையினை துறக்க (renounce) வேண்டும். ஏனெனில் இந்திய குடிமகன் ஒருவர் வேற்று நாட்டின் குடிமகனாக இருத்தல் இயலாது. 2004ம் ஆண்டு வாஜ்பாய் அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தின்படி சில நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவழி வெளிநாட்டவருக்கு மட்டும் வெளிநாட்டு குடிமகன் (overseas citizen) என்ற தகுதி வழங்கப்படுகிறது. இத்தகைய குடிமகன்களைப் பொறுத்து மட்டுமே உரிமையின்மை என்பது கூறப்படுகிறது. உதாரணமாக இவர்கள் இந்தியாவில் வாக்காளர்கள் ஆக முடியாது.

ஆக, சோனியா இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பதாக தனது இத்தாலிய குடியுரிமையினை துறந்திருக்க வேண்டும். (2004 சட்ட திருத்தத்தின்படி இந்திய குடியுரிமை கிடைக்கும் பட்சத்தில் துறப்பதாக உறுதி (undertaking) அளித்தாலே போதுமானது). சோனியா அவ்வாறு துறக்கவில்லை என்று வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பதில் இல்லை. இத்தாலிய குடியுரிமை சட்டம் (Citizenship Act) மட்டுமே நான் பார்த்தது. விதிமுறைகளில்தான் (Citizenship Rules) எவ்வாறு துறக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். உதாரணமாக இந்திய விதிமுறைகளின்படி அதற்கென உள்ள படிவத்தினை நிரப்பி உள்துறை அமைச்சகத்திடம் கொடுக்க வேண்டும். இத்தாலியர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள தூதரகத்திற்கு சென்று குடியுரிமையினை துறப்பதாக வாக்குமூலம் அளித்து கையெழுத்திட்ட வேண்டும் என்றும் படித்தேன். 1992க்கு முந்தைய இத்தாலிய சட்டப்படி இந்திய குடியுரிமை பெற்ற பின்னர் தனது இத்தாலிய குடியுரிமையினை அவர் இழந்தாலும் 2004க்கு முந்தைய இந்திய விதிமுறைப்படி அதற்கு முன்னதாகவே ஏதாவது ஒரு முறையில் அவர் தனது இத்தாலிய குடியுரிமையினை துறந்திருக்க வேண்டும். சோனியா எவ்வாறு இத்தாலிய குடியுரிமையினை துறந்தார் என்பது தெரியாது. ஆனால், நான்கு ஆண்டுகள் உள்துறையினை தனது கையில் வைத்திருந்த லால் கிருஷ்ண அத்வானிக்கு தெரியாமல் இருக்காது. எனவே அது முறையானதுதான் என்பது எனது கணிப்பு.

இறுதியாக, எதன் அடிப்படையில் ‘இத்தாலியில் அவ்வாறு சட்டமிருந்தால் இந்திய குடியுரிமை பெற்ற இத்தாலியர் பிரதமராகலாம்’ என்ற கருத்து கூறப்படுகிறது என்பதை ஆராய்ந்தால், அதற்கு விடை ஓரளவுக்கு இந்திய குடியுரிமை சட்டம் பிரிவு 12ல் கிடைக்கலாம். அதாவது வேறு ஒரு நாடு தனது சட்டத்தில் இந்திய குடிமகன்களுக்கு ஒரு சலுகை அளிக்கும் பட்சத்தில் இந்தியாவும் அந்த நாட்டு குடிமகன்களுக்கு அதே சலுகையினை அளிக்க முன்வரலாம் என்பதாகும். அதாவது இந்திய பொறியாளர்களை இத்தாலிய அரசு நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்த அவர்கள் சலுகை அளிக்கும் பட்சத்தில் இந்திய அரசு நிறுவனங்களில் இத்தாலியர்களை வேலைக்கு அமர்த்த சலுகையளிக்கலாம். இந்தப் பிரிவு இங்கு பொறுத்தமில்லை. முதலாவது ‘லாம்’தான். சலுகை அளிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இரண்டாவது சலுகை வேற்று நாட்டு குடிமகன்களுக்கு. இந்திய குடிமகனாக மாறியவர்களுக்கில்லை. மூன்றாவதும் முக்கியமானதுமான காரணம் 2004ம் ஆண்டு சட்ட திருத்தத்தில் இந்த சட்டப் பிரிவே முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது (repealed). ஆனால் இந்திய உள்துறை அமைச்சகத்தின் வலைத்தளம் அளிக்கும் இந்திய குடியுரிமை சட்டத்தினை படிப்பவர்களுக்கு சட்டத்தில் இந்த மாற்றங்கள் ஏற்ப்பட்டது தெரிய வாய்ப்பில்லை!

மெய்ப்பொருள் காண்பதறிவு!!


மதுரை
130806

6 comments:

கருப்பு said...

அன்புள்ள ராஜதுரை அவர்களுக்கு,

நிறைகுடம் என்பதை பறைசாற்றும் அற்புதமான பதிவு. நன்கு விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள்.

சட்டமும், விளக்கமும் தெரியாத சில மதிகெட்ட மூடர்கள் ஜாதிவெறி கண்ணை மறைக்க எழுதிய கருத்துக்கு தங்களின் விளக்கங்கள் புரிந்தால் சரிதான்.

சோனியா படிக்கவே இல்லை, இலங்கை சென்று பிரபாகரை சந்தித்தார் சோனியா என்றெல்லாம் சொன்ன மதுரை முருகன் இட்லிக்கடை புகழ் சூனாசாமி போன்றவர்களும் படிக்க வேண்டிய கட்டுரை இது.

PRABHU RAJADURAI said...

கருப்பு சார்,

நன்றி! ஆனால், மதிகெட்ட மூடர்கள் என்ற சொற்கள் வேண்டாமே... நீதிமன்ற வாதங்களில் 'the statement is wrong' என்று எழுதுவதற்கு பேசுவதற்கு பதிலாக 'the statement is not correct' என்று கூறுவதுதான் முறை. வெற்றி வாய்ப்பை தவற விடுதல் போல...

ராஜகுமார் said...

It is very nice page

Nakkiran said...

even i have read the quoated post and i was under the same understanding... unfortunately i used to tell many people that Soniya lagally not eligible to become PM... Today i have got the clear picture..

Thanks a lot...

Anonymous said...

Soniya is a wife of Rajiv.
Congressmen are Fools. they worship Neru Family. Soniya is not a Freedom fighter.

Anonymous said...

Your blogs are very, very informative. Thank you for info.