28.9.06

ஓசாமா பிழைக்கும் வழி!

ஆப்ரிக்க நாடான ‘ருவாண்டா’வின் பாராளுமன்றம் விரைவில் தங்களது சட்டத்திலிருந்து மரண தண்டனையினை நீக்குவது குறித்து விவாதிக்கவுள்ளது. ருவாண்டா குடிமக்களில் பெரும்பான்மையினரின் எதிர்ப்பினையும் மீறி இவ்வாறு அதன் பாராளுமன்ற அங்கத்தினர்கள் மரண தண்டனையினை ஒழிப்பது குறித்து விவாதிக்க முன்வந்ததற்கு ஏதோ மனித உரிமைக் காவலர்களாக அவர்கள் மாறியதல்ல காரணம். மாறாக அவ்வாறு மரண தண்டனையினை ஒழித்தால்தான் ஐரோப்பிய நாடுகளோடு ருவாண்டா ஒரு எக்ஸ்ட்ராடிஷன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இயலும். ஏன் ருவாண்டாவுக்கு ஐரோப்பிய நாடுகளோடு இவ்வாறான ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய அவசியம்?

சில வருடங்களுக்கு முன்னர் ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையினை தொலைக்காட்சி செய்தியினை பார்ப்பவர்கள் மறந்திருக்க இயலாது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வாள்களை உபயோகித்தே வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையினை பின்னிருந்து இயக்கிய பல சூத்ரதாரிகள் ஐரோப்பிய நாடுகளில்தான் பதுங்கியுள்ளனர். அவர்களை ருவாண்டாவாக்கு கொணர்ந்து தனது சட்டத்தின் முன் நிறுத்த ருவாண்டா இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. ஏனெனில் பல ஐரோப்பிய நாடுகளில் மரணதண்டனை என்பது ஒழிக்கப்பட்டுள்ளது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான அபு சலேமை கூட போர்ட்ச்சுக்கலில் இருந்து இங்கு தருவிக்க அவருக்கு அதிகபட்சம் 25 வருடங்களுக்கு மேலான சிறைத்தண்டனை வழங்கப்பட மாட்டாது என்று இந்திய அரசு ஒரு உறுதிமொழியினை அளிக்க நேரிட்டது. இதே காரணத்திற்காகவே ருவாண்டாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான ஒரு சட்டத்திருத்தத்தினை ஏற்படுத்தும் நிலைக்கு நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர்!

அபு சலேம் எக்ஸ்ட்ராடிஷன் வழக்கு லிஸ்பனில் நடைபெற்ற பொழுது எனக்கு ஏற்ப்பட்ட சந்தேகம் மீண்டும் எழுகிறது..... பேசாமல் ஒசாமா பின் லேடன் போர்ட்சுகலுக்கு நழுவி விட்டால் வாஷிங்டன் என்ன செய்யும்?

மதுரை
280906

No comments: