26.9.09

யாருமற்ற ஒருவனும், மோடியும்!

சோம்பேறித்தனம் கெட்ட குணம்தான். ஆனால் ஒரு நன்மை இருக்கிறது. திரையரங்குகளுக்கு செல்லாமல் இருப்பது. ஆக, ‘உன்னைப் போல ஒருவ’னையும் பார்க்கவில்லை.

முன்பெல்லாம் திரைப்படம் பார்க்காவிட்டாலும், தொலைக்காட்சிகளில் துண்டு துண்டாக பார்த்து மனதில் கதையை ஒட்டிக் கொள்ளமுடியும். தற்பொழுது அந்த வசதியும் இல்லை. ஆனாலும், ‘உன்னைப் போல ஒருவ’னைப் பொருத்தவரை வலைப்பதிவுகளில் எழுதிக் குவிப்பவற்றைப் படித்து படித்து, ஏதோ படம் பார்த்தது போலவே இருக்கிறது.

கமல்ஹாசனின் ஆழ்மனதில் இருப்பதை பிய்த்துப் பிடிங்கி வெளியே எடுத்து, ‘பார், இந்துத்வா’ என்று ஒரு பக்கமும், ‘இல்லை, இல்லை முற்போக்குத்தனம்’ என்று இன்னொரு பக்கமுமாக நின்று பதிவர்கள் விவாதித்து வருவது என்னைப் போல வாசகர்களின் மனதை பெண்டுலம் போல இங்கேயும் அங்கேயும் அல்லாட வைக்கிறது!

‘இந்துத்வாவும் இல்லை, முற்போக்குத்தனமும் இல்லை. கமல் ஒரு வியாபாரி. அவருக்கென்று பெரிய கருத்து எல்லாம் அவரிடம் இல்லை. அவ்வப் பொழுது சந்தையில் எந்தக் கருத்து விலை போகுமோ, அதை வைத்து படமெடுப்பது அவரது தந்திரம்’ என்றும் சிலர்.

கலப்பு மணத்தை ஆதரிக்கும் எவரும், வகுப்புவாதியாக இருக்க முடியாது என்று நான் கருதுவதாலும், கமல் ஹாசன் என்றுமே ஒரு கருத்தினை தெளிவாக வெளிப்படுத்தியது இல்லை என்பதாலும்...நான் ‘வியாபாரி’ வகுப்பில் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கமல் திரைப்படங்களை வைத்து, பெரிதாக சொத்து சேர்க்க நினைக்கவில்லை என்றால், ஒரு வியாபாரி தனது வெற்றியை வெறுமே தான் பெறும் பண லாபத்தை வைத்து மட்டுமே கணக்கிடுவதில்லை என்பதுதான் என்னுடைய பதில்.

‘கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்...’ என கமல் எப்பொழுதெல்லாம் வேறு மொழித் திரைப்படமோ அல்லது காட்சியோ அவரை பாதிக்குமோ, உடனே அதனை தமிழில் எடுக்க முயலுவார். அப்படியே ‘வெட்னஸ்டே’ படக் கருத்தால் அல்ல, படத்தால் பாதிக்கப்பட்டே உபோஒ தயாரித்துள்ளார் என்று, பாவம் ஒரு பெனிபிட் ஆப் டவுட் கொடுத்து விடலாமே!

-oOo-

‘காமன் மேன்’ என்ற பொதுப்புத்திக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றும் அதற்கு வெடிகுண்டு வைத்த பயங்கரவாதம்தான் தெரியும் என்றும் அதற்கு முன் நடந்த பயங்கரவாதங்கள் தெரியாது என்றும் வாதிடுபவர்கள் கூறுவதைத்தானே, திரைக்கதையிலும் சொல்லப்படுகிறது. நடைமுறையில் என்ன இருக்கிறதோ, அதை மாற்றாமல் கமல் எடுத்திருக்கிறாரே!

-oOo-

தீவிரவாதிகளாக, இஸ்லாமியர்களை காட்டியுள்ளாராம். குண்டு வைத்த குற்றத்திற்காக, இஸ்லாமியர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டதே இல்லையா? இல்லாத ஒன்றை  படமெடுக்கவில்லையே. நிசத்தை பிரதிபலிப்பதுதானே திரைப்படமும்.

ஆனால் இந்த வாதத்திற்கு எதிராக ‘இஸ்லாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் இல்லை. ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்கள்’ என்று ஒரு சந்திராயன் கண்டுபிடிப்பு எடுத்து வைக்கப்படுவதுதான் விந்தை!



அரசிடமும், நிலுவையிலுள்ள சட்ட அமைப்புகளிலும் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று (தவறாக) நினைப்பவர்களால்தான், மற்றவர்களின் கவனத்தை கவர பயங்கரவாதம் முன்னெடுக்கப்படுகிறது.

‘அந்நியனி’ல் இருந்து ‘உபோஒ’ வரை இதைத்தானே சொல்கிறார்கள். ஏன், கமலே ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வரும் பாடல் காட்சியில் ‘டுமீல் டுமீல்’ என்று சும்மா நிற்பவர்களைக் கூட போட்டுத் தள்ளுகிறாரே.

வேடிக்கை என்னவென்றால், காமன் மேனை, படத்தில் ஒரு இந்து என்று அந்தப்பக்கமும், இல்லை முஸ்லீம் என்று இந்தப்பக்கமும் வாதிடுகிறார்கள். ஆனால், மயிரினைப் பிளப்பது போல் ஆராய்ந்து, ‘...ம் காமன் மேன் குண்டு வைக்குமளவுக்கு துணிவதால்தான் அவரை முஸ்லீமாக காட்டியுள்ளார்கள்’ என்ற அளவிற்கு வாதம் வளரவில்லை!

எனவே படம் யதார்த்தத்தை பிரதிபலிப்பதுதான்...

-oOo-

அப்படியாயின், படத்தில் வரும் முஸ்லீம் தீவிரவாதிக்கு மூன்று மனைவிகளாமே? இங்கு இடிக்கிறது.

படத்திலுள்ள காமன் மேனுக்கு குண்டு வைப்பது மட்டுமே தீவிரவாதமாக தெரிந்தது யதார்த்தம். அவரது கேரக்டரை சிதைக்க கதாசிரியருக்கு உரிமை இல்லை. ஆனால் கதையில் வரும் ஒரு முஸ்லீம் பாத்திரத்திற்கு மூன்று மனைவியை உருவாக்குவது கதாசிரியர். ‘ஹம் பாஞ் அவுர் ஹமேன் பச்சீஸ்’ என்று குஜராத் முதல்வர் மோடியால் உருவாக்கப்பட்ட பொதுப்புத்தியால் கட்டமைக்கப்பட்டவர்தான் கதாசிரியர் என்று யாராவது வாதிட்டால்...என்னிடம் எதிர்வாதம் இல்லை.

வசனம் எழுதியவர் எனக்குத் தெரிந்தவரை அப்பழுக்கு இல்லாத மனிதாபிமானி. அவருக்குதான் முஸ்லீம் நண்பர்கள் நிறைய இங்கு உண்டே...கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். எத்தனை முஸ்லீம்கள் இங்கு மூன்று, வேண்டாம் இரண்டு மனைவியாவது வைத்திருக்கிறார்கள் என்று.

எனக்குத் தெரிந்து இரண்டு மனைவிகள் கட்டியவர் எழுத்தாளர் பாலகுமாரன். ஆனால் அவர் இந்து. கலைஞர் இஸ்லாமியர் இல்லை.

கமல்?

அவர் யாருமற்றவர்

-oOo-

உபோஒனில் ஒரு நாளில் தீவிரவாதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கமல் கேட்டு அவர்கள் கமலிடம் ஒப்படைக்கப்படுவதாக கதை செல்கிறது என்று அனுமானிக்கிறேன்.

ஒரு நாளில் அது சாத்தியமில்லை. காந்தகாரில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த விமான பயணிகளை மீட்க இந்திய சிறையில் இருந்த தீவிரவாதிகள் நாம் விடுவிக்கவில்லை. ஏனெனில் இவ்வாறு விடுவிப்பதற்கு சட்டம் இடம் கொடுக்காது. அவர்களுக்காக மனு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் விடப்பட்டார்கள். எதையும் சட்டப்படி செய்ய வேண்டுமே!

பொதுவாக தீவிரவாதிகளோடு பேரம் பேசுவது ஒரு கலை. அந்தக் கலையின் வெற்றி தீவிரவாதிகளோடு பேசி எவ்வளவு நேரம் வாங்க முடியுமோ அவ்வளவு நேரம் வாங்குவதில் இருக்கிறது. காந்தகார் விமான நிலைய கடத்தலில் அவர்களோடு தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த உரையாடல்களை படித்திருக்கிறேன்.

மோகன்லால் சட்டச்சிக்கலை எல்லாம் கமல்ஹாசனிடம் எடுத்துச் சொன்னாரா என்பது தெரியவில்லை. அதற்காக படத்தை பார்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால் ரவி சிரீனிவாஸ் இங்கு அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது புரியாமல் எடுக்கப்பட்ட படம் என்று வாரியிருப்பதிலிருந்து, ஏமாற்றம்தான் மிஞ்சும் என நினைக்கிறேன்.

மதுரை
26/09/09


பி.கு. ‘அவர் யார் என்ற கேள்விக்கு யாருமற்றவர் என்பதுதான் பதிலாக இருக்க முடியும்என்று யார் யாரைப் பற்றி குறிப்பிட்டார் என்ற கேள்விக்கு பதில் யாரிடமாவது உள்ளதா?

க்ளூ: ஈழத்தமிழர்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ளலாம். 

20.9.09

பிரபலங்களும், சங்கடங்களும்...



நீதிபதி கண்ணன் தனது வலைப்பக்கத்திற்கு மூடு விழா நடத்திக் கொண்டிருக்கிறார். வலையுலகம், பிரபலமானவர்களுக்கு என்று தனி இருக்கை தருவதில்லை. அங்குதான் தர்மசங்கடமே!

பிரபலமானவர்கள், சாமான்யர்களை விட்டு விலகியிருப்பதே நல்லது. இல்லை, சசி தரூர் மாதிரி ஏடாகூடமாக மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். ஏதோ டிப்ளமோட் என்கிறார்கள். எதிரிலிருப்பவரின் மனநிலையினை படித்து, அவரை வசியம் செய்யும் வகையில் பேசும் திறமை வேண்டும் என்கிறார்கள். இவர்களது டிப்ளமோடிக் திறமை இவ்வளவுதானா என்று இருக்கிறது.

முன்பு ஒரு ‘டிப்ளமேட்’ தலையறுந்த கோழிகள் (headless chicken) என்று கூறி மாட்டிக் கொண்டார். இந்த ‘டிப்ளமேட்’ மாட்டுத் தொட்டில் (cattle class) என்று கூறி சிக்கலில் உள்ளார்.

மொழி அறிவு என்பது அவரவர் மனதிற்குள் பேசி மகிழ்வதற்கு அல்ல. மாறாக மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் சாதனம் அல்லவா? எனவே இந்த வார்த்தைகள் யாரை சென்று அடையப் போகிறது என்பதை தீர்மானித்து அதற்கு ஏற்ற மொழியினை பயன்படுத்துவதே சிறந்தது.

மாறாக என்னுடைய அகராதியில் இந்த பதத்திற்கு அர்த்தமே வேறு என்று எவ்வளவுதான் உரக்கக் கூறினாலும், யார் காதில் விழப் போகிறது?

தினகரன் போன்ற பத்திரிக்கைகளில், ‘சசி தரூர் விமான எகனாமி கிளாஸில் பயணிப்பது, மாட்டுத் தொழுவத்தில் இருப்பது போன்றது’ என்றார் என்று தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.


-oOo-

தினகரனின் மொழி பெயர்ப்பு குயுக்தியானதா என்று தெரியாது. ஆனால், நீதிபதி தினகரன் மீது சென்னை வழக்குரைஞர்கள் சிலர் அளித்த ஒரு புகாரில் குயுக்தியான (mischievous) மொழி பெயர்ப்பு ஒன்றினை கண்டேன்.

அந்த புகார் நகல் ஏதோ வலைப்பக்கத்தில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு இடத்தில், அவரது நிலத்திற்கு செல்லும் சாலைக்கு ‘Emperor of Justice P.D.Dinakaran Road’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கண்டேன். என்னடா, இவ்வளவு அருவெறுக்கத்தகுந்த பெருமை கொண்டவரா அவர் என்று நினைத்தேன். மீண்டும் ஒரு இடத்தில் அவ்வாறாக குறிப்பிடப்பட்டு அடைப்புக்குறிக்குள் ‘Needhi Arasar’ என்று இருந்தது.

ஐஸ்டிஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘நீதி அரசர்’ என்று இங்கு குறிப்பிடுகிறார்கள். அவலட்சணாக உள்ள அந்த பட்டத்தினை நீதிபதிகள் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றனரோ? ஈழத்தில் ‘நீதி நாயகம்’ என்று ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் குறிப்பிடுகிறார்கள். எனினும், நீதி அரசர் என்பதை தமிழ் நன்கு அறிந்த அந்த வழக்குரைஞர்கள் ‘Emperor of Justice’ என்று தங்களது புகாரில் மொழி பெயர்த்து இருந்தது, அவர்களது நோக்கத்தினை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஏனெனில் அந்தப் புகாரினை படிக்கும் தமிழ் தெரியாத எவருமே, இப்படிப்பட்ட அகங்காரம் கொண்டவரா, இந்த தினகரன்’ என்று நினைக்க வைக்கும். படிப்பவர்களின் மனதில் தினகரனைப் பற்றிய எண்ணம் ஒன்றினை ஏற்றி விட்டால், பின்னர் மற்ற விடயங்கள் அந்த எண்ணப்பாட்டுடனே அணுகப்படும்.

புகார் எழுதியவர்கள் சற்று கவனமுடனிருந்திர்க்கலாம்!

-oOo-

ஆனாலும் நமது நீதிபதிகள் பலரின் படோடாபகம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், வெளிப்படையாக இங்கு எழுதுவதற்கு நான் ஒன்றும் சசி தரூர் அல்ல!

மதுரை
20/09/09

நீதிபதிகள், அச்சங்கள்...



நீதிபதிகளைப் பற்றி என்க்குள் எழுந்த அச்சங்களில், எனது முந்தைய வலைப்பக்கங்களில் தெரிவித்திருந்த சில விடயங்கள் உண்மையாகி வருகிறது என்றாலும், அவை மகிழ்ச்சியளிப்பதாக இல்லை!


சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகள் தங்களது சொத்துக் கணக்கினை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறிய பொழுது, மத்தியதர வர்க்கம் முழுவது எழுந்து நின்று கை தட்டியதில், உச்ச நீதிமன்றம் பெருமிதப்பட்டது. ஆனால், அத்தகைய விபரங்கள் வெறுமே வெட்டிப் பேச்சு (gossip) பேசுவதற்கு மட்டுமன்றி வேறு யாதொன்றுக்கும் பலனளிக்காத ஒரு கட்டுப்பாடாக மட்டுமே இருக்கப் போவதல்லாமல், வேறொன்றுக்கும் உதவப் போவதில்லை என்று உணர்ந்த நான், அந்த தீர்ப்பினை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினேன்.




-oOo-


கடந்த வருடம் உச்ச உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் வெளிப்படையான அணுகுமுறை (Transparency) வேண்டும் என்ற கோரிக்கை பற்றி குறிப்பிட்ட நான், ‘ஆனால், மேலும் மேலும் நீதிபதிகளைப் பற்றிய தர்ம சங்கடமான செய்திகள் வெளி வர நேரிட்டால், நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறை மாற வேண்டும் என்ற பொதுக்கருத்து வலுப்பெறலாம்.’ என்று கூறியிருந்தேன்.


தற்பொழுது நீதிபதி. தினகரன் அவர்களைப் பற்றிய சர்ச்சையில், நீதிபதிகள் நியமனத்தில் கொலேஜியம் முறை தோற்று விட்டது. நீதிபதிகள் ஆணையம் (Judicial Commission) ஒன்றினை ஏற்ப்படுத்தி நீதிபதிகள் நியமிக்கப்படும் வண்ணம் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன!


-oOo-


நமது மத்தியதர வர்க்க ‘அம்பி’கள் எப்பொழுதும் ‘அந்நியனை’ தேடிக் கொண்டேயிருப்பார்கள். அவ்வப் பொழுது சில அந்நியன்கள் தோன்றி பின்னர் மறைந்து போவார்கள். பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் அப்படி ஒரு அந்நியனாக சமீபத்தில் முன்னிறுத்தப்பட்டார்.


விளைவு......அதற்கு முன்னர் வெளியே பலர் அறிந்திராத அவரது வலைப்பக்கத்தின் ஹிட்டுகள் எகிறியது. நான் சில மாதங்களுக்கு முன்னர் ‘வலைபதியும் நீதிபதிகள்’ என்ற எனது வலைப்பதிவில் "ஆயினும் குடிமக்களாகிய உங்களுக்கும் எனக்கும் உள்ள பேச்சுரிமை, அதை நமக்கு உறுதிப்படுத்தும் நீதிபதிகளுக்கு இல்லை, பாவம்!' என்று அச்சப்பட்டபடியே, தர்மசங்கடங்கள்


இறுதியில் ‘தொடர்ந்து வலைப்பதிவதா? வேண்டாமா?’ என்று ஹாம்லெட் குழப்பத்தில் இருக்கிறார்.


மதுரை
200909


10.7.09

பெண், பாவமா?

‘டோண்டு ராகவன்’ என்ற வலைப்பதிவாளர் தனது ‘ யாருக்கும் வெட்கமில்லை - SITA is ultravires of the Constitution of India’ என்ற தலைப்பிட்ட வலைப்பதிவில் கீழ்கண்ட கேள்வியினன எழுப்புகிறார்,


விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.
.................................. நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது. இவ்வாறு யாராவது ரிட் பேட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?


திரு.ராகவனது கேள்வியினை குறித்து 2003ம் ஆண்டு மரத்தடி மற்றும் ராகாகி குழுமங்களில் நான் எழுதிய கட்டுரை ஒன்று அலசுகிறது...அதனை இங்கு மீண்டும் பதிவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்...

***
கடந்த வாரம் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படக் காட்சியொன்றில் கதாநாயகன் பிரபு ‘ஸில்க்’ ஸ்மிதாவை கைது செய்ய வேண்டும் என்று சொல்லி காவலரை ஸ்மிதாவின் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அங்கே ஸ்மிதாவின் அறைக்குள் இருந்து அவரோடு வெளியே வருபவர் பிரபுவின் மாமாவான ராதாரவி! காவலர் அவர்களை விபச்சார குற்றத்திற்காக கைது செய்யப் போவதாக சொல்ல அதற்கு ராதாரவி ஏதோ கேட்க, அந்த ய்வாளர் கூறுகிறார், "திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் தனியறையில் தகாத முறையில் இருந்தாலே அது விபச்சாரம்தான்"

கதைப்படி அந்தக் காவலருக்கு எப்படியாவது ராதாரவியை கைது செய்ய வேண்டும். எனவே அப்படி கூறுகிறார் என்று வைத்துக் கொள்ளலாம் என்றாலும் பலருக்கும் இந்த விஷயத்தில் சந்தேகங்கள் உண்டு என அறிகிறேன். அதே போல அடிக்கடி திரைப்படங்களில் பேசப்படும், 'விபச்சாரத்தில் பெண்ணுக்கு மட்டும்தனா தண்டனை. ஆணுக்கு இல்லையா?' என்ற வசனமும் குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கிறது.

முதலிலேயே சொல்லி விடுகிறேன். விபச்சாரம் என்பது இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் குற்றம் என்று சொல்லப்படவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் தாங்களாகவே இசைந்து உறவு கொள்ளும் பட்சத்தில் எந்தவித குற்றமும் இல்லை. னால் சிறிது கவனம் தேவை. ஏனெனில் பெண்ணுக்கு பதினாறு வயதுக்கு குறைவான பட்சத்தில், பெண்ணின் இசைவு இருந்தாலும் அது பாலியல் பலாத்கார குற்றமாகும்.

சரி, விபச்சாரம் என்பது, 'ஒரு பெண் பணத்திற்காக அல்லது பொருட்களுக்காக உடலுறவுக்கு இசைவது' இதுவும் குற்றமல்ல. குற்றம் எங்கு வருகிறது என்று சொல்வதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பு. விபச்சாரத்தின் மூலம் சம்பாதித்த பணம் வருமான வரிக்கு உட்பட்டது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் ஒரு விபச்சார விடுதி பங்குச் சந்தையில் ஈடுபட்டு பணம் முதலீட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆஸ்திரேலிய விவகாரம் இந்தியாவில் சாத்தியமல்ல. ஏனெனில் விபச்சார விடுதி நடத்துவது என்பது இங்கு குற்றமாகிறது. இந்திய குற்றவியல் சட்டம் (Indian Penal Code'1860) என்ற குற்றங்களையும் அவற்றிற்கான தண்டனைகளையும் வரையறுக்கும் ஒரு சட்டம் இருப்பது அனைவரும் அறிந்தது. இந்தச் சட்டம் 1860ம் ண்டு இயற்றப்பட்ட சட்டமாதலால், அதன் பின் பெருகிப் பரவியுள்ள புதியவகை குற்றங்களுக்கு என தனிப்பட்ட சட்டங்கள் இயற்றப்படுதல் அவசியமாகிறது.

உதாரணமாக போதைப் பொருட்களின் வீச்சமும், பயங்கரவாத செயல்களும் அறியப்படாத காலம் அது. எனவேதான், செய்தித்தாள்களில் அடிபடும் ‘கமிஷனர் கருப்பன் புகழ் எண்டிபிஎஸ், தடா, பொடாவெல்லாம் இந்திய தண்டனைச் சட்டத்தில் இல்லாமல் தனியாக புழங்குகிறது. விபச்சாரமும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு வாழ்க்கை முறையாகவே பழங்காலத்தில் கருதப்பட்டது. வாழ்க்கை முறையாக மட்டுமேயிருந்த விபச்சாரம், பின்னாளில் பெரும் வியாபாரமாக, பல நாடுகளும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய சுரண்டலாக உருவெடுத்த காரணத்தால்ல் அதனை தடுக்கும் பொருட்டு அமெரிக்காவில் 1950ம் வருடம் ஒரு பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. அந்த மநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் இந்தியாவில் 1956ம் ஆண்டு இவ்வாறு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சுரண்டுவதை (trafficking) தடுக்கும் எண்ணத்துடன் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் The Suppression of Immoral Traffic Act'1956.

எஸைடி சட்டம் என்று நீதிமன்றங்களில் அழைக்கப்படும் இந்தச் சட்டத்தில் விபச்சாரம் என்பது குற்றமல்ல. ஆனால் விபச்சார விடுதி நடத்துவது, அதற்கு உதவி செய்வது குற்றம். வீட்டினை தெரியாத நபர்களிடம் வாடகைக்கு விடுகையில் சிறிது கவனம் தேவை. அதுவும் நல்ல வாடகையென ஆசை காட்டும் தரகரை நம்பி இங்கே வீட்டை வாடகைக்கு விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இந்த ஆபத்துக்கு நிகழ வாய்ப்பு அதிகம்.

சரி, எது விபச்சார விடுதியாகிறது? எந்த ஒரு பகுதியும் விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு அந்த விபச்சாரத்தின் பலன் வேறு நபருக்கோ அல்லது ஒன்றுக்கு மேலான விபச்சாரிகள் தங்களுக்கிடையே பலனடைந்தலோ அது விபச்சார விடுதியாகிறது. புரிகிறதா? அதாவது ஒரு பெண் வேறு யாருடைய துணையுமின்றி தனியாக தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் அது விபச்சார விடுதியாகாது. அப்படி செய்வதில் குற்றமுமில்லை. ஆனால் இரு பெண்கள் தங்கியிருந்து தங்களுடைய வருமானத்தைப் பகிர்ந்து கொண்டால் அது குற்றமாகிறது. மேலும் ஒரு விபச்சாரியை அண்டி அவர் விபச்சாரம் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் வாழும் நபர், பதினெட்டு வயது நிரம்பியர் என்றால் அதுவே ஒரு குற்றமாகிறது. இதில் மகன், மகள் கூட அடக்கம்.

இதிலிருந்தே இந்தச் சட்டத்தின் நோக்கம் விபச்சாரத்தை தடுப்பதல்ல மறாக விபச்சாரம் செய்பவரைத் தவிர வேறு நபர்கள் பலனடைவதை தடுப்பதே என்பதை அறியலாம். எனவே நமது பத்திரிக்கைகள் 'விபச்சாரத் தடை சட்டம்' என்று குறிப்பிடுவதே தவறான பதமாகும். ஆங்கில பெயர் அப்படி அர்த்தம் கொள்ளவே கொள்ளாது.

எனவே இங்கு பணமளிக்கும் நபர் எந்தவித குற்றமும் செய்யவில்லை. எனவேதான் ஆணுக்கு தண்டனையில்லை. ஆனால் அவரும் ஒரு சந்தர்ப்பத்தில் குற்றவாளியாக முடியும். அதாவது, விபச்சாரம் நடைபெற்ற இடம் கோவில், கல்விக்கூடம், விடுதி, மருத்துவச்சாலை போன்றவற்றிற்கு 200 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கையில் இரண்டு நபர்களும் குற்றவாளியாகின்றனர்.

இதில் ஒரு வேடிக்கை. திரைப்படங்களில் வில்லன்களை கைது செய்வது வரைதான் காண்பிக்க முடியும். அவர்கள் செய்த குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது பெரிய தலைவலி! விபச்சாரம் நடந்ததற்கு சாட்சிக்கு என்ன செய்வது. காவலர்களே கஸ்டமர்களை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான். அப்படிப் போன கஸ்டமர் மீது ஒரு சென்னை நீதிபதி என்ன பொறாமையாலோ ஏகக் கடுப்பாகி, 'நீயும்தான்ன் தவறு செய்திருக்கிறாய். போ! சாட்சிக்கூண்டிலிருந்து குற்றவாளிக்கூண்டுக்கு' என்று விட்டார். பின்னர் மனிதர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வெளியே வரவேண்டியதாகிவிட்டது (1972 MadLW (Cri) 211).

காவலர் புலன் விசாரணையை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த 'போலி கஸ்டமர்க'ளே போலி என்பது புரியும். உண்மையான கஸ்டமர்களை சாட்சித் தேவைக்காக இப்படி போலியாக்குவது உண்டு. இரண்டாவது உண்மையான கஸ்டமர்களை விட்டு....காவலர் கவனிப்பில் இருக்கும் நபர்களை போலிச்சாட்சியாக்குவதும் உண்டு.

விபச்சார விடுதியில் இப்படி ஆயிரம் பிரச்னைகள் இருக்க காவலர்கள் தினசரி எப்படி அநேகரை விபச்சார குற்றத்திற்காக நீதிமன்றம் கொண்டு வருகிறார்கள்? இருக்கவே இருக்கு இன்னும் ஒரு குற்றம். யாராவது பொது இடத்தில் ஒரு நபரை விபச்சாரத்திற்காக கண் ஜாடையில் அழைத்தால் கூட அது ஒரு குற்றம். கவனிக்கவும் இங்கும் ண் குற்றவாளியல்ல.

காவலர் யாராவது உங்களுக்கு நண்பராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தினமும் எழுதிக் குவிக்கும் முதல் தகவல் அறிக்கையை (FIR) பாருங்கள். எல்லாவற்றிலும் ஒரே வாசகம்தான் இருக்கும், "நான் பஸ்ஸ¥க்காக நின்று கொண்டிருந்தேன். அப்போது பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய பெண் என் அருகே வந்து, 'வருகிறாயா ஜாலியாக இருக்கலாம்' என்று அழைத்தாள். நான் உட்னே அங்கிருந்த காவலரிடம் புகார் செய்தேன்" இதற்கு மேல் வசனம் கண்டுபிடிக்க அவர்களது கற்பனை வளம் இடம் கொடுக்காது. அந்த "நான்" பெரும்பாலும் ஏற்கனவே பார்த்த காவலர்களின் கவனிப்பில் இருக்கும் நபர்கள்.

இது தவிர விபச்சார விடுதிகளில் விருப்பத்துக்கு மாறாக இருக்கும் பெண்கள், சிறுமிகள் (21 வயதுக்கு குறைவானவர்கள்) ஆகியோரை மீட்க தனி நடைமுறைகள் இருக்கின்றன. நீங்கள் யாருக்காவது உதவ விரும்பினால் சம்பந்தப்பட்ட மாஜிஸ்டிரேட்டிடம் ஒரு மனு கொடுங்கள் போதும். ஆனால், மும்பையில் மிகப் பிரபலமான ஜி..ஆர்.கெய்ர்னார் போன்றவர்களே இதில் ஆர்வமாக ஈடுபட்டு அதிக பலனின்றி சோர்ந்து விட்டனர். விபச்சார விடுதிகள் சமுதாயம் முழுமைக்கான பிரச்னை....இதில் சட்டம் என்ன சாதித்து விடும் என்பது புரியவில்லை...

பி.கு. இக்கட்டுரை எழுதி ஒரே வாரத்தில், நியூசிலாந்து பாராளுமன்றம் ‘விபச்சார விடுதிகளை’ குற்றமென்ற சட்ட ஷரத்தினை ரத்து செய்யும் சட்டம் குறைந்த பெரும்பான்மையில் நிறைவேற்றியது. ஆஸ்திரேலியாவைப் போலவே நியூசிலாந்திலும் தற்போது விபச்சார விடுதிகள் நடத்துவது குற்றமல்ல. விபச்சாரத்துக்கு எதிராக அரசு சட்டம் மூலம் நடத்திய போரின் தோல்வி என இதைக் கூறலாமா?

இன்றைய (24.08.03) சண்டே டைம்ஸில் இணையக கருத்துக் கணிப்பு ‘விபச்சாரம் அனுமதிக்கப்படவேண்டுமா?’ என்பது. 68 சதவீதம் ஆம் என்கிறனர். ஆனால் ‘should prostitution be legalized?’ என்ற டைம்ஸின் கேள்வி தவறு!

30.6.09

வாமனன்...


இன்று காலை தினகரன் நாளிதழில் கண்ட விளம்பரம்....
நான் மேலே ஒரு வரி எழுதினால், பதிவர் சுரேஷ் கண்ணன் திரைப்பட விளம்பரத்தை எப்படி ரசிக்க வேண்டுமென்று ஒரு பக்கத்திற்கு வகுப்பெடுப்பார்.... :-)

18.6.09

‘ஈழ’த்தமிழர்களுக்கு உண்டு, இந்தியாவில் உயர்கல்வி!

இலங்கையிலிருந்து சுமதி இந்தியாவிற்கு குடி பெயர்ந்த பொழுது, அவளது வயது எட்டு. இலங்கையில் நிகழ்ந்த போர்ச்சூழலுக்கு பயந்து, அவளது பாட்டிதான் முதலில் ‘வாழ்ந்தது போதும்’ என்று சுமதியை அழைத்து கொண்டு அவளது பூர்வீக ஊரான புதுக்கோட்டைக்கு வந்தார்.

பின்னர் சுமதியின் தாயும், தந்தையும் இலங்கையின் ஞாபகங்களை மட்டுமே சுமந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து விட்டனர்.

வரும் பொழுது அவர்கள் அனைவரும் இலங்கை குடிமக்கள் (citizens). அவர்களிடம் இருந்த கடவுச் சீட்டினை (Passport) வைத்து அப்படித்தான் முடிவு செய்ய வேண்டியிருந்தது.

1920ம் ஆண்டு வாக்கில் இந்தியாவிலிருந்து, இலங்கைக்குச் சென்று குடியேறிய சுமதியின் தாத்தா, இலங்கை சுதந்திரம் பெற்றதும் அதன் குடியுரிமையைப் பெற்றார். சுமதியின் பெற்றோர்கள் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள்.

-oOo-

இந்திய குடிமக்கள் இல்லை எனினும், சுமதியின் பெற்றோர்களுக்கு இங்கு குடியேறவோ, தங்களுக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டவோ, முக்கியமாக சுமதிக்கு நல்லதொரு பள்ளியில் தனது கல்வியை தொடரவோ ஏதும் பிரச்னை இல்லை.

பொறியியற் கல்லூரியில் சேரும் பொழுது தேவைப்பட்ட பிறப்பிட சான்றிதழ் (Nativity Certificate) கூட சுமதி புதுக்கோட்டையில் சுமார் 12 ஆண்டுகளாக வசித்து வந்த சூழலில் தாசில்தார் வழங்கியிருந்தார்.

-oOo-

பொறியியற் கல்லூரியில், முதல் செமஸ்டர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுதுதான் சுமதி மேலும் தனது கல்வியை தொடர முடியாது என்ற செய்தி வந்தது. சுமதியின் பள்ளி ஆவணங்களில் அவளது மதமாக ‘சிறீலங்கன் கிறிஸ்டியன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காரணமாக வைத்து தமிழக தொழில்நுட்ப கல்வித் துறை (Department of Technical Education) சுமதி வெளிநாட்டினைச் சேர்ந்தவர் (Foreign National) என்பதால் அவர் பொறியியற் கல்லூரியில் சேர தகுதியில்லாதவர் (ineligible) என்று கூறி அவரது சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.

கல்வியை தொடர அனுமதி வேண்டி, சுமதி நீதிமன்றங்களின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறார்.

தொழில்நுட்ப கல்வித் துறையோ, ‘மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பிலேயே ‘Foreign National’ஆக இருப்பவர்கள் சேரத்தகுதியில்லாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதே’ என்று கூறுகிறது.

சுமதிக்கு இந்தியாவில் உயர்கல்வி மறுக்கப்படுவது சரிதானா? என்ற எனது சிறிய ஆய்வில் கிடைத்த பதில் ‘அவ்வளவு தூரம் இந்திய சட்டங்கள் இரக்கமற்றுப் போகவில்லை’ என்பதுதான்.

சுமதியைப் போன்று மேலும் பலர், அச்சத்தில் இருக்கலாம் என்பதால், சுமதியின் வழக்கு நிலுவையில் உள்ள பொழுதே இதனை இங்கு பதிந்து வைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

-oOo-

1950ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதன் பண்பட்ட தன்மையில், உலகின் எந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத்திற்கும் குறைந்தல்ல என்பதற்கு சாட்சியாக அதன் பிரிவு 14 மற்றும் 21ஐ குறிப்பிடலாம்.

பிரிவு 14 அரசு இந்திய எல்லைக்குள் அனைவரையும் சட்டத்தின் முன் சமமாக நடத்த வேண்டும் என்றும், சட்டம் அளிக்கும் பாதுகாப்பினை அனைவருக்கும் சமமாக அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.

பிரிவு 21 எந்த ஒரு மனிதனுடைய உயிரும், தனிப்பட்ட சுதந்திரமும் சட்டம் ஏற்ப்படுத்தியுள்ள நடைமுறையை கைக் கொள்ளாமல் பறிக்கப்பட முடியாது என்று கூறுகிறது.

இவை இரண்டும் அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் பல்வேறு அடிப்படை உரிமைகளில் முக்கியமானவை. இந்த உரிமைகளில் அடங்கியுள்ள உயரிய கோட்பாடுகளால் மட்டும் இந்த முக்கியத்துவம் ஏற்ப்படவில்லை.

மாறாக, சில அடிப்படை உரிமைகள் இந்த குடிமகன்களுக்கு மட்டுமே உரியதாகும். இந்த இரு உரிமைகள் மற்றும் பிரிவு 20, 22ல் கூறப்பட்ட உரிமைகள் மட்டும் ‘அனைவருக்கும்’ உரியதாகும். அதாவது, இந்திய குடிமகனாக இல்லாத (non-citizen) இல்லாத ஒருவருக்கும் இந்த உரிமைகளை மறுக்க முடியாது.

குடியுரிமை பெற்றிருந்தாலும், சிலருக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அதிபராகும் தகுதி கிடையாது. பாக்கிஸ்தானில் முஸ்லீம் அல்லாத ஒருவர் அதிபராக முடியாது. 1962 வரை சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை கிடையாது. சமீபகாலம் வரை தென்னாப்ரிகாவின் பூர்வ குடிகளுக்கு ஓட்டுப் போடும் உரிமை கிடையாது. இந்த நிலையில் நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தும் மேற்கண்ட உரிமைகள், நாம் பெருமை கொள்ளத்தக்கவை!

எனவே சுமதி வெளிநாட்டினர் என்பதால், தனக்கு கல்வி மறுக்கப்படுவது, அரசியலமைப்புச் சட்டம் தனக்கு உறுதிப்படுத்தும் சம உரிமையை பாதிப்பதாகும் என்று இந்திய குடிமகளாக இல்லையெனினும், நமது நீதிமன்றங்கள அணுக முடியும்.

ஆனால், சம உரிமையினை பாதிக்கும் வண்ணம் அரசு சட்டமியற்ற இயலும். அவ்வகையான பாகுபாடு ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருப்பின் அவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும். உதாரணமாக, மருந்து தயாரிப்பதற்கு வரி (excise tax) கிடையாது. ஆனால் சிகரெட்டிற்கு உண்டு என்றால் அதை ஏற்றுக் கொள்ளத்தக்க பாகுபாடு (reasonable classification) என்று நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும்.

எனவே, இந்திய குடிமகன் அல்லாதவர் இந்தியாவில் கல்வி பயில இயலாது என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அதனை இந்தவிதமான அடிப்படையில் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும். ஏனெனில் தகுதியுள்ள இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் உயர்கல்வியளிக்க நமது பொருளாதாரம் இடம் கொடுக்காத சூழ்நிலையில் இந்திய குடிமகன் அல்லாதவருக்கு பாகுபாடு காட்டும் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவினை பாதிக்காது என்றே நீதிமன்றங்கள் கருதும்.

எனவே இந்திய குடிமகன் அல்லாதவருக்கு உயர்கல்வியினை மறுக்கும் ஏதாவது சட்டம் உள்ளதா என்று ஆராய வேண்டியுள்ளது.

-oOo-

வெளிநாட்டினர் சட்டம் (Foreigners Act’1946) என்ற சட்டத்தின் பிரிவு 2(a) ‘வெளிநாட்டினர் என்பது இந்திய குடிமகன் அல்லாதவரை குறிக்கும்’ என்று விளக்கமளிப்பதை வைத்து இந்திய குடிமகன்கள் அல்லாதவரின் உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி இயற்றப்பட்டுள்ள ஒரு சட்டம் என்பதை அறியலாம்.

இதன் பிரிவு 3(2)(e)(vii) குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் வெளிநாட்டினர் ஈடுபடுவதை தடைசெய்து மத்திய அரசானது உத்தரவு பிறப்பிக்கலாம் என்று அனுமதியளிக்கிறது.

ஆனால் மத்திய அரசு இதுவரை ‘வெளிநாட்டினருக்கு இங்கு பொறியியல் கல்வி பயில தடை’ என்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவில்லை.

இந்தியா முழுவது பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அமைப்பான ‘தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கழக’மும் (AICTE) அவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக தெரியவில்லை.

மாறாக தொழில்நுட்ப கல்விக் கழகம் 21.01.04 அன்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் நடைமுறைப்படுத்திய விதிமுறைகளின்படி (Regulations) வெளிநாட்டைச் சேர்ந்தவர் (Foreign Nationals), இந்திய வம்சாவழியினர் (Person of Indian Origin) மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு தொழிநுட்ப கல்லூரிகளில் தனியே இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்கிறது.

கவனிக்கவும். இந்த விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படுவது இட ஒதுக்கீடு. எனவே பொது ஒதுக்கீட்டில் வெளிநாட்டினர் இடம் பெறுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

எனவே இந்திய குடிமகன்களாக இல்லாதிருப்பவர்கள் தகுதியிருப்பின் மற்ற இந்திய குடிமகன்களோடு இந்தியாவில் உயர்கல்வி பெற தடை ஏதும் மத்திய அரசோ அல்லது அதன் அமைப்பான தொழில்நுட்ப கல்விக்கழகமோ விதிக்காத வகையில், சுமதி இங்குள்ள பொறியியற் கல்லூரிகளில் இடம் பெற உரிமை உண்டு.

இந்திய அரசு 1983ம் ஆண்டு, சுகாதார அமைச்சம் அனுமதியளித்தால் (clearance) மட்டுமே மருத்துவ கல்லூரிய்களில் வெளிநாட்டினரை சேர்க்க முடியும் என்று உத்தரவிட்டது. கீர்த்தி தேசுமனாகர் எதிர் யூனியன் ஆப் இந்தியா ((1991) 1 SCC 104) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் கல்லூரியில் சேருவதற்கு முன்பு அவ்விதமான தடையின்மைச் சான்றிதழை சுகாதார அமைச்சகத்திடம் இருந்து பெற்றுக் கொடுத்து, தேவையான மதிப்பெண்களை பெற்றுள்ள வெளிநாட்டினர் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

சுமதியின் வழக்கிலோ, தமிழக தொழிநுட்பக் கல்வித் துறை (DTE) தனது அறிவிப்பில் (Prospectus) வெளிநாட்டினைச் சேர்ந்தவருக்கு (Foreign national) பொறியியற் கல்லூரில் இடம் வேண்ட தகுதியில்லை என்று கூறியுள்ளது. அது ஏற்றுக் கொள்ளத்தக்கதான வாதமா என்பதையும் அடுத்து ஆராய வேண்டியுள்ளது.

-oOo-

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் (Seventh Schedule) மூன்று முக்கியமான பட்டியல்கள் (Lists) உண்டு. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 246ன் படி முதலாவது பட்டியலில் (Union List) குறிப்பிடப்படும் விடயங்களைப் பற்றி மத்திய அரசு மட்டுமே சட்டமியற்ற முடியும். உதாரணமாக வருமான வரி. இரண்டாவது பட்டியலில் (State List) கூறப்படும் விடயங்களில் மாநில அரசு மட்டுமே சட்டமியற்ற முடியும். உதாரணமாக விற்பனை வரி. மூன்றாவது பட்டியலில் (Concurrent List) கூறப்படும் விடயங்களைக் குறித்து இரு அரசுகளும் சட்டம் இயற்ற முடியும். உதாரணமாக கல்வி.

வெளிநாட்டினர் பற்றிய சட்டமியற்றும் அதிகாரம் முதலாவது பட்டியலில் 17வது இலக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளதால், வெளிநாட்டினரை பாதிக்கும் சட்டம் எதுவும் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

மாநில அரசுக்கு சட்டமியற்றும் அதிகாரமே இல்லை என்ற பொழுதில், மாநில அரசின் அங்கமான தொழிற்நுட்ப கல்வித் துறைக்கு (DTE) வெளிநாட்டைச் சேர்ந்தவர் (Foreign National) தமிழக தொழிற்நுட்பக் கல்லூரிகளில் இடம் கோர தகுதியற்றவர்கள் என்று கூறும் அதிகாரம் கிடையாது.

எனவே, பொறியியற் கல்லூரி சேர்க்கை கையேட்டில் (Prospectus) கூறப்பட்டுள்ள நிபந்தனை செல்லுபடியாகாது. அந்த நிபந்தனையை காட்டி சுமதிக்கு இடம் மறுக்க முடியாது.

இந்த கருத்திற்கு ஆதரவாக நமது உயர்நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளை சுட்டிக் காட்ட முடியும். முதலாவது செவந்திநாத பண்டாரசன்னதி எதிர் தமிழ்நாடு அரசு ((2006) 1 MLJ 134) என்ற வழக்கில் தமிழக அரசு, இந்து சமய அறநிலைய சட்டத்தில் (Hindu Religious and Charitable Endowment Act) “இந்து சமய நிறுவனங்களில் இந்திய குடிமகன் அல்லாதவர் அறங்காவலராக (Trustee) இருக்க முடியாது” என்று ஏற்ப்படுத்திய சட்டத்திருத்தம் செல்லுமா என்று ஆராயப்பட்டது. நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியம் அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பட்டியலில் கூறப்பட்டிருப்பதால், சமய நிறுவனங்களை பாதிக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கும் இருந்தாலும், மேற்கண்ட சட்ட திருத்தமானது அடிப்படையில் வெளிநாட்டினரின் உரிமை சம்பந்தப்பட்டதாக இருப்பதால், மாநில அரசுக்கு இவ்விதமான சட்ட திருத்தம் கொண்டு வர அதிகாரம் இல்லை’ என்று தீர்ப்புக் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பின் 16 பத்தியில் நீதிபதி கூறும் ஒரு கருத்து கவனிக்கத்தகுந்தது. “This can be elucidated further by posing a question as to whether a State can bar the admission of a foreigner into an educational institution or a professional institution, in view of the fact that education falls under Entries 25 and 26 of the Concurrent List”

அடுத்த தீர்ப்பு நீதிபதி கற்பகவிநாயகம் ரவிக்குமார் எதிர் சுரேஷ் குமார் (2002 (3) CTC 616) என்ற வழக்கில் கூறியது. போதிய பணமின்றி காசோலை கொடுத்த குற்றத்திற்காக காசோலைகள் குறித்தான சட்டத்தின் (Negotiable Instruments Act) கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு நபர், தமிழக அரசு அளித்த தண்டனை தள்ளுபடியினால் (remission) விடுதலை செய்யப்பட்டார். அது முறையானதா என்று விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் கீழ் தண்டனை தள்ளுபடி அளிக்க அதிகாரம் இருந்தாலும், குற்றவாளிக்கு தண்டனையானது காசோலைகள் குறித்தான சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. காசோலைகள் குறித்தான சட்டம் இயற்றுவதற்கு மத்திய அரசிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளபடியால், மாநில அரசு அந்தச் சட்டத்தின் கீழ் அளித்த தண்டனையில் தலையிட முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மேற்கண்ட இரு தீர்ப்புகளிலிருந்து, வெளிநாட்டினருக்கு இங்கு கல்வி பயில தடை என்று சட்டமியற்ற/ உத்தரவிட தமிழக அரசிற்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவாகும். எனவே தமிழக தொழில்நுட்ப கல்வித் துறை, மத்திய அரசோ அல்லது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகமோ ஏதும் கூறாத நிலையில், தன்னிச்சையாக இவ்வாறு ஒரு தடையை விதிக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரம் இல்லை.

இந்தக் கருத்தினை ஒட்டியே சனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி தொடர்ந்த ஒரு வழக்கிலும், சென்னை உயர்நீதிமன்றம் 21.11.03 அன்று தீர்ப்புக் கூறியுள்ளது. அந்த வழக்கில் (WP No.26463 / 2003) இலங்கையிலிருந்து இங்கு குடிபெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அளித்து இடம் கொடுக்க உத்தரவிட வேண்டுமென்று கோரப்பட்டது. அகதிகளைப் பொறுத்து அவ்வாறு உத்தரவிட மத்திய அரசிற்குதான் அதிகாரம் உண்டு என்று கூறி வழக்கினை முடித்து வைத்தது.

-oOo-

அடுத்து வெளிநாட்டினருக்கு இங்கு உயர்கல்வியினை மறுக்க, மத்திய அரசிற்கு அதிகாரம் இருப்பினும், அவ்வாறான ஒரு தடையினை உருவாக்குவது தார்மீக ரீதியில் முறையான ஒரு செயலாக இருக்காது. ஏனெனில் ‘கல்வியில் பாகுபாட்டிற்கு எதிரான அறிக்கை’ (Convention against Discrimination in Education) என்று பாரீசுவில் 14.02.60 அன்று நடைபெற்ற யுனெஸ்கோ (UNESCO) கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

அந்த அறிக்கையின் Article 3(e) கூறுவதாவது:
“In order to eliminate and prevent discrimination within the meaning of this Convention, the states Parties thereto undertake:

(e) To give foreign nationals resident within their territory the same access to education as that given to their own nationals”


வெளிநாட்டினருக்கும், இந்தியருக்கு இணையாக கல்வியில் வாய்ப்பு வழங்குவதாக உறுதியளிக்கும் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்ட இந்தியா எவ்வாறு வெளிநாட்டினருக்கு உயர்கல்வியில் தடை விதிக்க முடியும்?

-oOo-

அடுத்தது, தமிழக தொழிற்நுட்ப கல்வித்துறை வெளிநாட்டினருக்கு (Foreign Nationals) இங்கு கல்வி பயில தடை என்று கூறியுள்ளது முறையானது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், சுமதியை அந்தத் தடை பாதிக்குமா என்று ஆராய்ந்தால், பாதிக்காது என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

முதலில் சுமதியை வெளிநாட்டினர் என்பதற்கு ஆதாரமாக அவளது பள்ளி ஏடுகளில் அவள் ஒரு ‘சிறீலங்கன் கிறிஸ்டியன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆதாரமாக கூறப்படுகிறது. ஒருவர் தன்னை சிறீலங்கன் கிறிஸ்டியன் என்று கூறிக்கொள்வதால் அவரை வெளிநாட்டினர் என்று கருத முடியாது. இந்தியாவில் சிரியன் கிறிஸ்டியன் என்பவர்கள் இருக்கின்றனர். அதற்காக கள் சிரியா நாட்டினை சேர்ந்தவர்கள் இல்லை. கத்தோலிக்கர்கள் தங்களை ரோமன் கத்தோலிக்கர் என்றுதான் அழைத்துக் கொள்கின்றனர்.

இலங்கை கடவுச்சீட்டுடன் இந்தியாவிற்கு வந்த சுமதி இலங்கை குடிமகள்தானே? அவ்வாறு என்றால் அவர் வெளிநாட்டினர்தானே? என்ற கேள்வி எழலாம்.

கடவுச்சீட்டு என்பது ஒருவரின் குடியுரிமையை யூகிக்கும் ஒரு ஆவணமே தவிர அதை வைத்து மட்டுமே அவரது குடியுரிமையை முற்றாக தீர்மானிக்க முடியாது என்றாலும், நமது வாதத்திற்காக சுமதி இந்திய குடிமகள் இல்லை என்று வைத்துக் கொள்ளலாம்.

குடியுரிமையை வைத்து மட்டுமே ஒருவரின் தேசியத்தை தீர்மானிக்க முடியாது என்பதுதான் இதற்கு பதிலாக இருக்க முடியும். ஏனெனில் பலர் நினைப்பது போல, பலமுறை சட்டம் இயற்றுபவர்களாலும், ஏன் நீதிமன்றங்களாலும் ஒன்றுக்கொன்று இணையாக பயன்படுத்தப்பட்டாலும் Citizenship மற்றும் Nationality என்ற பதங்கள் வெவ்வேறானவை.

இந்த இரு பதத்திற்கும் உள்ள வேற்றுமையை உணராமல், சுமதியின் வழக்கில் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் எழுப்பப்படும் கேள்வி, சுமதி இலங்கை குடிமகளாக இருக்கும் பட்சத்தில் அவள் வெளிநாட்டினர்தானே என்பதுதான்.

அதற்கு பதில் தொழிற்நுட்ப கல்வித்துறை உயர்கல்வியை தடுத்தது Foreign Citizensக்கு அல்ல மாறாக Foreign Nationalsக்கு. எனவே குடியுரிமை என்பது இங்கு ஒரு பொருட்டே அல்ல!


இதற்கு ஆதாரமாக நமது உச்ச நீதிமன்றம் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிட் எதிர் வர்த்தக வரி அலுவலர் (AIR 1963 SC 1811) என்ற வழக்கில் கூறியுள்ள தீர்ப்பில் கூறப்படும் சில கருத்துரைகளை (observations) எடுத்துக் கூறலாம். ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்சால் தீர்மானிக்கப்பட்ட இந்த வழக்கில், நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் பிளவுபட்டாலும் (divided) இந்த கருத்தினைப் பற்றி ஏதும் வேற்றுமை இல்லை. இந்த தீர்ப்பின் பல்வேறு இடங்களில் citizenship என்பதும் nationality என்பதும் வேறு வேறு என்று எடுத்துக் கூறும் நீதிபதிகள் அதன் 18வது பத்தியில்,

‘Hence all citizens are nationals of a particular state but all nationals may not be citizens of the State. In other words citizens are those persons who have full political rights as distinguished from nationals who may not enjoy full political rights and are still domiciled in that country’
என்று கூறுவதை வைத்து சுமதியின் வழக்கில் சுமதி இந்திய குடிமகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை மட்டும் வைத்து அவள் இந்திய தேசிய இனத்தை சேர்ந்தவர் இல்லை என்று கூற முடியாது என்று வாதிட வழி இருக்கிறது.

எது எவ்வாறாக இருப்பினும், வெளிநாட்டு தேசிய இனத்தை (Foreign National) சேர்ந்தவரா? இல்லையா? என்பது, பொருண்மை சார்ந்த ஒரு கேள்வி (Question of fact). அதனை சுமதியின் கடவுச்சீட்டினை மட்டுமே வைத்து கணிக்க இயலாது என்பதையும் பார்த்தோம். எனவே, அவ்வாறான நிலையில் முதலில் சுமதி, தான் இந்திய தேசிய இனத்தை சேர்ந்தவர் என்று நிரூபிக்கும் வண்ணம் அவளுக்கு தகுந்த வாய்ப்பளித்து, அதற்குப் பின்னரே அரசு, சுமதி இங்கு உயர்கல்வி பெற தகுதி உள்ளவரா? இல்லையா? என்று தீர்மானிக்க இயலும்.

மாறாக, எவ்வித அறிவிப்பும் இன்றி, எவ்விதமான விசாரணையும் நடத்தப்படாமல், திடுமென ஒரு நாள், ‘உனக்கு தொழிற்கல்வி பயில தகுதியில்லை’ என்று கூறுவது சட்டத்திற்க் புறம்பானதாகும்.

-oOo-

தேசிய இனம் என்பது வேறு, குடியுரிமை என்பது வேறு என்பதற்கு பல்வேறு அரசியல் விஞ்ஞான (Political Science) விளக்கங்கள் இருப்பினும், மேலே கூறியபடி ஒரு விசாரணையானது நடத்தப்பட்டால், சுமதியால் தான் ‘foreign national’ இல்லை என்று நிரூபிக்க முடியுமா என்றால், அரசியல் விஞ்ஞானப்படி எப்படியோ ஆனால், தமிழக தொழிற்கல்வித் துறையினை கட்டுப்படுத்தும் வண்ணம் சுமதியால் எளிதாக நிரூபிக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

நாம் மேலே பார்த்தபடி, தொழிற்கல்வியினை முழுவதுமாக கட்டுப்படுத்துவது தொழிற்கல்விக்கான அகில இந்திய குழுமம் (AICTE) என்ற அமைப்பு.

அதன் ‘The All India Council for Technical Education (for Admission under Foreign Nationals/ Persons of Indian Origin category/ quota in AICTE approved institutions) Regulations 2000 என்ற விதிமுறைகளில் Foreign National என்பதற்கான விளக்கம் இவ்வாறு கூறுகிறது
“3.12 Foreign National in this context means an individual having citizenship of a foreign country (citizens of all countries other than India) and not having the status of NRI and/or Persons of Indian Origin (PIO)”

இந்த விளக்கத்தின் மூலம் ஒருவர் வெளிநாட்டு குடிமகனாக இருப்பினும், இந்திய வம்சாவழியினராயிருப்பின் foreign citizen என்று கருதப்படமாட்டார் என்று அறியலாம்.

அதே விதிமுறைகளில் இந்திய வம்சாவழியினர் (PIO) என்பதற்கான விளக்கமாவது:
“3.11 Persons of Indian Origin in this context means a person having foreign citizenship without NRI status, but who holds a Foreign Passport at the time of sending application, consideration for admission and during the period of study and he or anyone of his parents or anyone his grandparents is (or was) citizen of India.

சுமதியின் தாத்தா/ பாட்டி முன்னொரு காலத்தில் இந்திய குடிமகனாக இருந்திருக்கும் பட்சத்தில் சுமதி இந்திய வம்சாவழி என்று கோர முடியும்.

ஏஐடிசியின் விதிமுறைகள் தமிழக தொழிற்கல்வித்துறையினை கட்டுப்படுத்தும்.

ஆக, சுமதி எல்லாவகையிலும் தனது வழக்கில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருக்கிறது.

-oOo-

தமிழக அரசின் தொழிற்கல்வித்துறை சுமதியின் துர்பாக்கியமான நிலையை கருதியாவது, இப்படிப்பட்ட ஒரு உத்தரவினை பிறப்பிக்காமல் இருந்திருக்கலாம்.

சற்றும் சிந்திக்காமலும், எவ்வித விளக்கத்தினை பெறாமலும் கூறப்பட்ட ஒரு உத்தரவின் மூலம், இன்று ஒரு அப்பாவிச் சிறுமியின் எதிர்காலமே கேள்விக்குறியாக நிற்கிறது!

மதுரை
17.06.09

3.5.09

சு.சுவாமியின் வெற்றி!

ஸ்ரீதரன் : இதுவரை உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீங்கள் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்துள்ளீர்கள்?

சுசுவாமி : எண்ணிலடங்காதது (I have lost count). ஆனால் அவையனைத்திலும் நான் வென்று விட்டேன். அவையனைத்தும் பொதுநல வழக்குகள்
. சுப்பிரமணியன் சுவாமி, சிபி (sify) இணையதள அரட்டையில்...

-oOo-

ஆமாம் வென்றுதான் விட்டார்...

22/12/03 தேதியிட்ட ஏசியன் டிரிபியூன் (Asian Tribune) இதழில் வெளிவந்த ‘சுவாமி, சிறீலங்கா தமிழ் அகதிகளுக்காக மற்றொரு வழக்கினை வென்றெடுத்துள்ளார் (Swamy wins another legal battle for Sri Lankan Tamil Refugees)’ என்ற தலைப்புச் செய்தியின்படி, வென்றுதான் விட்டார்.

அட! இலங்கைத்தமிழ் அகதிகளுக்காக அப்படியென்ன சட்ட சிக்கலை தீர்த்து விட்டார் என்ற ஆர்வம் ஏற்படாமல், வெறுமே செய்தியை மட்டும் படித்தால் சுவாமி தனது எண்ணிலடங்கா பொதுநல வழக்கு வெற்றிகளில், இந்த ‘வெற்றி’யையும் சேர்த்துக் கொள்வது நியாயமாகத்தான் இருக்கும்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பது, அதே செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் வழக்கின் தீர்ப்பினையும் படித்தால்தான் புரியும்.

வழக்கம் போலவே இந்த முறையும் சுவாமி தன்னை ஒரு ‘நன்கு அறியப்பட்ட அரசியல்வாதியாகவும், ராஜதந்திரியாகவும் (statesman)’ மதராசு நீதிமன்றம் முன்பு அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘2003-04ம் ஆண்டிலும் அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் (கல்லூரிகள்) தமிழகத்திலுள்ள சிறீலங்கா தமிழ் அகதி மாணவர்களுக்காக தனியே இடங்களை உருவாக்கி, அவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும்’ என்ற பரிகாரம் வேண்டி, பேராணை மனு எண் 26463/03 என்ற வழக்கினை தாக்கல் செய்கிறார்.

அதாவது தமிழக அரசு தானாகவே 1996ம் ஆண்டு முதல் கல்லூரிகளில், அவைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கும் அதிகமாக இடங்களை உருவாக்கி அவற்றை சிறீலங்கா தமிழ் அகதிகளுக்கு ஒதுக்கி வந்ததாகவும், 2003ம் ஆண்டிலிருந்து அந்த ஒதுக்கீடு (reservation) நிறுத்தப்பட்டதால் அதனை தொடர வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வழக்கு.

எந்த ஒரு சட்டரீதியிலான அல்லது நிர்வாக ரீதியிலான ஆய்வினையும் மேற்கொள்ளாமல், வெறுமே இந்துவிற்கு எழுதும் ஆசிரியருக்கான கடிதம் பாணியில் அமைந்த சுவாமியின் மற்றொரு பேராணை மனு!

முக்கியமாக, அரசியலமைப்புச் சட்டப்படி இம்மாதிரியான விடயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்ற சிறிய கவனம் கூட இன்றி, மாநில அரசு மீது வழக்கினை தாக்கல் செய்த அலட்சியம் குறிப்பிடத்தக்கது. பின்னர், நிதிமன்றம் இந்த தவறினை சுட்டிக் காட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தனியே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு மத்திய அரசாங்கம் பேராணை மனுவில் எட்டாவது எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.

சரி, மத்திய அரசினை எதிர்மனுதாரராக சேர்த்த பின்னர் என்ன நடந்தது?

பெரிய வாதப் பிரதிவாதம் எல்லாம் இல்லை. ‘இந்த விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஏற்கனவே கூறியபடி மத்திய அரசிடம் உள்ளது. மாநில அரசு விரும்பினால், கல்லூரிகளில் இடங்களை அதிகரித்து சிறீலங்கா தமிழ் அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசினை வேண்டிக் கொள்ளலாம்’ என்பதுதான் உத்தரவு.

பல சமயங்களில், வழக்கு தள்ளுபடி என்று கூறினால் வழக்காடிகள் வருத்தப்படுவார்களே என்பதால், அவர்கள் மீது மனமிரங்கும் நீதிமன்றம் தள்ளுபடி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், இவ்வாறு சட்டப்புத்தங்களில் ஏற்கனவே உள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தி வழக்கினை முடித்து வைக்கும்.

ஆனால் தற்பொழுது இந்த வகையான உத்தரவுகளை ‘வெற்றி’ என்று வழக்குரைஞர்களை அணுகும் படிக்காத பாமரர்களே ஏற்றுக் கொள்வதில்லை. ஏசியன் டிரிபியூன் தனது வாசகர்களின் தரம் பற்றி கொண்டிருக்கும் மதிப்பீடு வியப்பளிக்கிறது!

-oOo-

சரி, தீர்ப்புக்கு பின்னர் என்னதான் நடந்தது. ஒன்றும் நடக்கவில்லை.

சுவாமிக்கு இந்த விடயத்தில் உண்மையான ஆர்வம் இருந்திருந்தால், மத்திய மாநில அதிகார மையங்களில் தனக்குள்ள வலிமையை (influence) பயன்படுத்தி, அது கூட வேண்டாம் தமிழக முதல்வரை பொதுவில் வேண்டுவதன் மூலம் எளிதில் இதனை முடித்திருக்கலாம்.

அரசின் கொள்கை முடிவுகளில், நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை என்றாலும் கூட அவருக்கு வேண்டியது, நீதிமன்றம் என்ற பொது மேடை, அதைப் பயன்படுத்த ஒரு வழக்கு, ஒன்றுக்கும் உதவாத தீர்ப்பு என்றாலும் ‘சுவாமிக்கு வெற்றி’ என்ற பத்திரிக்கைச் செய்தி...

செய்தி உண்மைதான்....சுவாமிக்கு வெற்றிதானே!

மதுரை
03.05.09

6.4.09

கேவலமான நடத்தையுள்ள ஒரு பெண்!




சரசுவதி பாய், கணவனால் கைவிடப்பட்ட பின்னர் அமோல் சிங் என்பவருடன் மத்திய பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். ஆனாலும் அமோல் சிங்கின் எதிரியான ராஜு சேத் என்பவரிடம் கூட்டுக் குத்தகைக்கு நிலம் விவசாயம் செய்து வந்ததால், அமோல் சிங் அவரிடம் சண்டையிட்டு வந்தார்.

சம்பவம் நடந்த 17.03.92 அன்று இரவு 8.00 மணிக்கு சரசுவதியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் வசித்தவர்கள் பலர் அவரது வீட்டை நோக்கி ஓடினர். அவர்களில் சிலர், சரசுவதியின் வீட்டிலிருந்து கோபால் ஓடி வருவதைப் பார்த்தனர்.

வீட்டினுள் சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி!

அங்கு சரசுவதிபாய், தீக்காயங்களோடு விழுந்து கிடந்தார். ‘கோபாலும், அமோல் சிங்கும் தன் மீது கெரோசின் ஊற்றி தீ வைத்ததாக’ விசாரித்தவர்களிடம் சரசுவதி கூறினார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த உதவி ஆய்வாளர், சரசுவதியின் மரண வாக்குமூலத்தை மற்ற சாட்சிகளின் முன்னிலையில் பதிவு செய்தார். நிலம் விவசாயத்துக்கு எடுத்த பிரச்னையில் அமோல்சிங்கும், கோபாலும் தன் மீது தீ வைத்து கொளுத்தியதாக சரசுவதி கூறினார்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரசுவதியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்த, மருத்துவர் சரசுவதியின் மரண வாக்குமூலத்தை (Dying Declaration) பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவலருக்கு கூறவே, தாசில்தார் (Executive Magistrate) அதிகாலை 4.30 மணிக்கு பதிவு செய்தார். பின்னர் காலை 9.10 மணிக்கு சரசுவதி இறந்து போக, வழக்கு கொலை வழக்காக மாறியது.

இறக்கும் பொழுது சரசுவதி மூன்று மாத கர்ப்பிணி!


-oOo-


எதிரிகள் (Accuseds) இருவரும் கைது செய்யப்பட்டனர். அமோல் சிங்கின் உடலில் தீக்காயங்கள், மருத்துவரால் கண்டறியப்பட்டது. அமர்வு நீதிமன்றம் (Sessions Court) அனைத்து சாட்சிகளையும் விசாரித்த பின்னர் எதிரிகள் குற்றம் புரிந்ததாக கூறி தண்டனையளித்தது. உயர்நீதிமன்றமும் (High Court) அந்த தீர்ப்பினை உறுதி செய்தது.

வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது.

உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட வாதம், ‘சரசுவதி அளித்த இரு மரண வாக்குமூலங்களும் முரண்படுகின்றன’ என்பதுதான். ஏற்கனவே இந்த வாதம் உயர்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டு இரண்டுக்குமிடையில் உள்ள முரண்பாடுகள் பெரிய அளவிலில்லை (insignificant) என்பதால், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறில்லை என்று கூறப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் ‘இரு மரண வாக்குமூலங்கள் வேறுபட்டால், வழக்கின் மற்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அவற்றை நீதிமன்றம் ஆராய வேண்டும்’ என்ற சட்ட கருத்தினை வலியுறுத்தி சரசுவதியின் வழக்கில் இரு மரண வாக்குமூலங்களிலும் கொலைக்கான காரணங்கள் மாறுபடுவதாகவும், எவ்வாறு சரசுவதியின் மீது கெரோசின் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்ட முறையிலும், வித்தியாசங்கள் இருப்பதாகவும் அவ்வகையான வித்தியாசங்கள், சரசுவதியின் வழக்கில் முக்கிய காரணிகள் என்று கூறி எதிரிகளை விடுதலை செய்துள்ளது.

பிற சந்தர்ப்ப சாட்சிகளைப் (circumstantial evidence) பற்றி அதிகம் ஆராயாமல், இந்த ஒரே காரணத்திற்காக இரு நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த முறையில் சில விமர்சனங்கள் இருப்பினும், முழுமையான வழக்கின் விபரங்கள் இல்லாத நிலையில் அவ்வாறான விமர்சனம் பொறுப்பான ஒன்றாக இருக்காது.


-oOo-

ஆனால் பிரச்னை என்னவென்றால், தீர்ப்பின் முதலாவது பத்தியை படித்ததுமே, முடிவு எப்படியிருக்கும் என்று என்னையறியாமலேயே யூகிக்க முடிந்தது. சில நாட்களுக்கு முன்னர்தான் மற்றொரு வலைத்தளத்தில், நீதிபதிகள் தங்களது தீர்ப்பினை ஆரம்பிப்பதை வைத்தே, எவ்வாறு அதன் போக்கை கணிக்க முடிகிறது என்பதைப் பற்றி அலசியிருந்தனர்.

தீர்ப்பை நீதிபதி பசாயத் இவ்வாறு ஆரம்பிக்கிறார், ‘நீதி விசாரணையில் விவரிக்கப்பட்ட அரசுத் தரப்பு வழக்கானது : இறந்து போன சரசுவதி பாய் தகாத நடத்தையுள்ள ஒரு பெண். தனது கணவனால் கைவிடப்பட்ட பின்னர், அமோல் சிங் என்பவருடன் தகாத உறவு கொண்டு, அவருக்கு ஆசை நாயகியானார்’ (Prosecution version as unfolded during trial is as follows: Saraswati Bai-deceased was a woman of questionable character)


-oOo-


எனக்குப் புரியாதது, ‘இறந்தவர் அரசின் பார்வையில் நடத்தை கெட்டவராகவே இருக்கட்டும், வழக்கின் சாரத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்’ என்பதுதான். குற்றம் நடைபெற்றது, சுயமாக ஒரு பெண்மணி விவசாயம் செய்ய விழைந்ததின் காரணமாகவே தவிர, அவரது நடத்தை கெட்டுப் போனதால் அல்ல.

அரசுத் தரப்பும் அதை வலியுறுத்தியிருக்க வேண்டாம். நீதிபதியும் அதனைக் குறிப்பிட்டிருக்க வேண்டாம். துரதிஷ்டம் பிடித்த சரசுவதிக்கு செய்யப்பட்ட ‘இறுதி’ மரியாதையாகவாவது அது இருந்திருக்கும்.


-oOo-


சரி, வருண்காந்தி வழக்கு ஒருவேளை உச்ச நீதிமன்றம் சென்றால், தீர்ப்பு எப்படி ஆரம்பிக்கும். ‘The detenue is the great grand son of a man of questionable character’ என்றா?


மதுரை
060309

20.3.09

அமெரிக்காவைப் பார்...

நடந்து முடிந்த வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தத்தைப் பற்றி 19/03/09 தேதியிட்ட ‘இந்து’வில் அதன் அமெரிக்க வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் கவனத்தை ஈர்ப்பதாயிருந்தது. அதாவது அமெரிக்காவில், ஒரு வழக்காடி தன்னுடைய வழக்கினை தானே நடத்தக்கூடிய உரிமை உள்ளதாம். வழக்குரைஞர் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழ்நாட்டிலும் வழக்காடிகள் தங்களுடைய வழக்கினை தாங்களே நடத்தும் உரிமையினைப் பெற்றுள்ளார்களாம்.

இந்த கடிதத்தை பிரசுரித்ததன் மூலம், ‘இந்து’ பத்திரிக்கை ஒரு இந்திய வழக்காடிக்கு தனது வழக்கினை தானே வாதிடும் உரிமை இல்லை என்பது போன்ற தோற்றத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது. வாசகரும் சரி, இந்துவும் சரி அறியாத ஒரு விடயம் நமது நாட்டில் நிலவும் சட்டங்கள் நாகரீகத்திலும் மனித உரிமையைப் பேணுவதிலும், அமெரிக்க நாட்டிலுள்ள எந்த ஒரு சட்டத்திற்கு குறைவான ஒன்றல்ல. இங்கும் ஒரு வழக்காடிதான், தன்னுடைய வழக்கினை நடத்தும் முதல் உரிமை உள்ளவர். வேண்டுமானால் அவர் ஒரு வழக்குரை நியமித்துக் கொள்ளலாம். எனவே இந்த ஒரு சாதாராண உரிமைக்கு கூட அமெரிக்காவை தேடி ஓட வேண்டியதில்லை...

பல சமயங்களில், இங்கும் வழக்காடிகள் தங்களுடைய வழக்குகளை தாங்களே நடத்துவதுண்டு. ஒரு வழக்குரைஞருக்கு கிடைக்கும் உரிமையை விட சற்று மேலான உரிமை, ‘Party in Person’ என்று அழைக்கப்படும் அவர்களுக்கு உண்டு. வழக்கினை வாதிடுகையில், தனது வழக்கின் சாரத்தை விட்டு வெளியே சஞ்சரிக்கும் வழக்குரைஞர், நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்படுவார். ஆனால், வழக்காடி வாதிடுகையில், அவ்வித கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட முடியாது. எவ்வளவு தர்மசங்கடம் என்றாலும், நீதிபதி அவரது வாதத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். இல்லை, கதவுக்கு வெளியே சென்று ‘எனக்கு இங்கே நீதியில்லை. எனது வழக்கினை பேச எனக்கு உரிமை இல்லையா?’ என்று கத்த ஆரம்பித்து விடுவார்கள்.

அது மட்டுமில்லாமல், சட்ட ரீதியிலும் சில உரிமைகள் உண்டு. உரிமையியல் வழக்கில், கூறப்படும் தீர்ப்பில் அந்த தீர்ப்பினை எதிர்த்து எங்கு எவ்வளவு நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்று கூற வேண்டியதில்லை. நாமே, சட்டப்புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், வழக்காடி தானே வழக்கினை நடத்துகையில் தீர்ப்பில் அவற்றை குறிப்பிட்டாக வேண்டும். (Order 20 Rule 5A CPC)

சட்டமும், குடிமகன்கள் அனைவரும் சட்டத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்றே கருதுகிறது. சட்டம் இவ்வாறு கூறுகிறது என்பது எனக்குத் தெரியாது என்று வாதிட்டு யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.

சுப்பிரமணிய சுவாமி, கே.எம்.விசயன் ஆகியோர் தங்களது வழக்குகளை தாங்களே நடத்திய சில முக்கியமானவர்கள்.

ஆனால், எதற்கு பேராணை மனு (Writ), எதற்கு உரிமையியல் வழக்கு (Civil Suit), எதற்கு மனு (Original Petition), எதற்கு நுகர்வோர் மனு (Consumer Complaint) என்ற விடயங்களை மெத்தப் படித்தவர்களே அறிந்து கொள்ள நேரம் செலவழிக்க விரும்பாத நமது நாட்டில், சாதாரண பொது மக்கள் தங்களது வழக்கினை தாங்களே நடத்தினார்கள் என்ற பத்திரிக்கைச் செய்திகளில், விக்கிரமாதித்யன் கதைகளை விட சற்று அதிக அளவில் உண்மையிருக்கலாம், அவ்வளவுதான்.

-oOo-

சட்ட சம்பந்தமான விடயங்களில் தாங்கள் ஆர்வமுடையவராக இருப்பின் கீழ்கண்ட சரியா, தவறா என்பதை யூகிக்கவும். பின்னர் ஒரு வழக்குரைஞரை தொடர்பு கொண்டு தங்களது சட்ட அறிவினை சரி பார்த்துக் கொள்ளலாம். எனது மற்ற பதிவுகளிலும், பதில்கள் இருக்கலாம்.

(எச்சரிக்கை: advocacy is an art of impossibility என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் நான். எனவே சரியா, தவறா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை)

(1) உங்களது வீட்டினை 3 வருடங்கள் கழித்து கண்டிப்பாக காலி செய்து தர வேண்டுமென்று ஒப்பந்தம் கையெழுத்திட்டு, வாடகைக்கு விடுகிறீர்கள். 3 வருடம் கழித்து வாடகைதாரர் ஒப்பந்தப்படி காலி செய்தாக வேண்டும்.

(2) உங்களது வங்கிக் கணக்கில் (Bank Deposit) தங்களது மனைவி பெயரை மட்டும் நாமினி (nominee) என காட்டியுள்ளீர்கள். உங்களது மரணத்துக்குப் பின்னர் உங்களது மகனுக்கும் உங்களது மனைவியோடு இந்து மத சட்டப்படி வாரிசுதாரர் என்ற வகையில் டிபாசிட் பணத்தில் உரிமை உண்டு.

(3) அதுவே காப்பீட்டு தொகைக்காக கொடுக்கப்படும் நாமினியாக இருந்தாலும் அதே உரிமை உண்டு

(4) உங்களது நிறுவனம், 3 வருடங்களுக்குள் வேலையை விட்டு செல்வதாயிருந்தால், 1 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்ற உறுதியினை பெற்று உங்களை வேலைக்கு அமர்த்துகிறது. அதற்கு ஆதரவாக (security) உங்களது சான்றிதழ்களை நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளீர்கள். ஒரு வருட காலத்தில் வேலையை ராசினாமா செய்து சான்றிதழ்களை பெற வேண்டுமென்றால் 1லட்சம் செலுத்தினால்தான் சான்றிதழ்கள் கிடைக்கும்.

(5) உயில் பத்திரத்தில் முத்திரைக் கட்டணம் (stamp duty) செலுத்த தேவையில்லை.

(6) உங்கள் நண்பருக்கு கடன் உறுதிச் சீட்டு (promissory note) மூலம் கடன் கொடுத்துள்ளீர்கள். மூன்று வருடம் காலம் முடியும் முன், கடனை திருப்பிச் செலுத்த மேலும் ஒரு வருட காலம் அவகாசம் வேண்டுகிறார். நீங்கள் கொடுக்க நினைத்தாலும், மற்றொரு நண்பர் 3 வருட காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் அவ்வளவுதான் என்கிறார்.

மேற்கண்ட விடயங்களில் தங்களது புரிதல்களையும், இந்த விடயம் சார்ந்த பிரச்னைகள் எழும் பொழுது, ஒரு வழக்குரைஞரின் ஆலோசனை பெறாமல் தங்களால் செயல்பட முடியுமா என்பதையும் சற்று சிந்தியுங்கள். பின்னர் உங்களுடைய இடத்தில் ஒரு சாமான்ய குடிமகனை வைத்து பாருங்கள்.

-oOo-

இந்துவில் நான் மேலே குறிப்பிட்ட கடிதத்தினை எழுதிய வாசகர், சம்பந்தப்பட்ட வழக்காடிகள் plead செய்ததாக குறிப்பிடுகிறார். ப்ளீடு என்ற வார்த்தையினை உரிமையியல் சட்டப்படி எழுத்து பூர்வமாக முதலில் தாக்கல் செய்யப்படும் வழக்கினை குறிக்கவே பயன்படுத்துவோம். பொதுவாக, நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெறும் பொழுது ‘ப்ளீடிங்’ முதலியவற்றை வழக்குரைஞர்களே பார்த்துக் கொள்வார்கள். வழக்கினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அலுவலகத்தில் அதன் ஆய்வினை (scrutiny) முடித்து அதற்கு எண் வாங்கி நீதிமன்றம் முன்பும் கொண்டு வருவார்கள். பின்னர் வழக்காடியை உள்ளே அனுப்பி, வழக்கினை விசாரணைக்கு அனுமதிக்க (admit) வேண்டி இடைக்கால தடை உத்தரவும் (interim injunction, stay, direction etc.,) கோர வைப்பார்கள். அவ்வளவுதான்.

மற்றபடி வழக்காடிகளை இறுதி விசாரணைக்கு எல்லாம் அனுப்புவதில்லை.

வழக்குரைஞர்களின் போராட்டம் என்பது, நீதிமன்ற புறக்கணிப்புதான். வேலை நிறுத்தமல்ல. இதனால்தான், வழக்குரைஞர்கள் தங்களுடைய போராட்டத்தினை நாட்கணக்கில் தாங்க (sustain) முடிகிறது.

தொழிலாளர் போராட்டத்திற்கும், வழக்குரைஞர்களின் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இது புரியாமல், இந்து வாசகர்கள் அனைத்து வகைகளிலும் ஆதங்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக கடிதம் எழுதித் தள்ளி விட்டார்கள்.

-oOo-

மேற்கண்ட கடிதம் எழுதிய ரெக்சு அருள் (Rex Arul) அமெரிக்காவில் பொறியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தமிழார்வம் மிக்கவர். திருக்குறளில் மரண தண்டனை பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி வாசித்துள்ளார். என்னை பெயர் சொல்லி அழைக்க தயங்கி uncle என்று கூப்பிடுவார். உறவில் எனக்கு சகலை :-)

மதுரை
20.03.09

3.3.09

தீர்ப்புகள் விமர்சிக்கப்படலாம், முழுவதும் படித்த பின்னர்...




கடந்த மாதம், தில்லி உயர்நீதிமன்றம் ‘பாலியல் பலாத்கார’ வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனைக் காலத்தை 5 1/2 ஆண்டுகளாக குறைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பினை ரத்து செய்ய வேண்டுமென்று மகளிர் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மனுச்செய்யும் அளவிற்கு இந்த தீர்ப்பின் சாரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு, வழக்கம் போலவே இதனைப் பற்றிய செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள்தான் காரணம்.

‘குற்றவாளி இ.ஆ.ப (IAS) தேர்வில் தேர்ச்சி பெற்றதால், பலாத்கார வழக்கின் குற்றவாளியின் தண்டனையை 5 1/2 ஆண்டுக் காலமாக தில்லி உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது’ என்ற வகையிலே பத்திரிக்கை தலைப்புகள், ஏன் செய்தியே வெளியிடப்பட்டது.

நேற்று ‘இந்து’வில் கூட அதிர்ச்சி (shocking) ஏற்ப்படுத்தக்கூடியதாக உள்ளது என்று ஆசிரியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி அலைகள் யாவும், ஒரு குற்ற வழக்கில் தண்டனையளிக்க நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தினை (jurisdiction & discretion) சரிவர ஆராயமல் ஒரு தீர்ப்பினை புரிந்து கொள்ள முயல்வதால் ஏற்ப்படுவது.

வழக்கில் பாதிக்கப்பட்டவர் 21 வயது நிரம்பிய பெண். குற்றவாளி 29 வயது நிரம்பிய ஆண். தன்னிடம் பாடம் படிக்க வந்த பெண்ணை தனது ‘ஆசை வார்த்தைகளால்’ மயக்கி பலமுறை உடலுறவு கொண்டிருக்கிறார். இடையில் தனக்கு ஏதோ காரியம் ஆக வேண்டுமென்று வேறு ஒரு ஒருவரின் ஆசைக்கும் இணங்கச் சொல்லியிருக்கிறார். பின்னர் தான் வாக்களித்தபடி அந்தப் பெண்ணை திருமணம் செய்யாதலால், விரிவாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு அந்தப் பெண் தற்கொலை செய்திருக்கிறார். கீழமை நீதிமன்றம் தற்கொலைக்கு தூண்டுதல், மற்றும் பாலியல் பலாத்காரம் என்ற இரு குற்றங்களுக்காக, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளித்தது.

உயர்நீதிமன்றம் வழக்கின் முழு விபரத்தை அறிந்து குற்றவாளி பாதிக்கப்பட்டவருக்கு ஏற்ப்பட்ட மன உளைச்சலை ஏற்ப்படுத்தியதைத் தவிர தற்கொலையினை நேரடியாக தூண்டவில்லை என்று கூறி தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவிலிருந்து குற்றவாளியை விடுவித்துள்ளது. பின்னர் நடந்து ‘பாலியல் பலாத்காரம்’ என்ற பிரிவில் ஆராய்ந்து சற்றுத் தயக்கத்துடனே குற்றவாளி என்று தீர்மானித்துள்ளது.

தீர்ப்பில் இருந்து பார்க்கையில், பாதிக்கப்பட்டவர் இறப்பதற்கு முன் எழுதிய கடிதமே (suicide note) இந்த வழக்கின் முக்கிய ஆவணமாக உள்ளது. என்னுடைய பார்வையில் அந்தப் பெண் தெள்ளத் தெளிவாக சிந்தித்து, குற்றவாளியை தப்பிக்கவே முடியாத வகையில் சிறைக்குள் தள்ள வேண்டுமென்ற முடிவோடு எழுதியுள்ளது போலத் தெரிகிறது. மற்றொரு நபரின் ஆசைக்கும் இணங்க வற்புறுத்தியதாக கூறியது மட்டும் அந்தக் கடிதத்தில் இல்லையெனில், காதலித்து ஏமாற்றியது என்ற வகையோடு இந்த தவறு நின்றிருக்கும். ஆயினும், இவ்வளவு தெளிவாக மற்ற விடயங்களை எழுதிய அந்தப் பெண், யார் அந்த மூன்றாவது நபர் என்ற விடயத்தை எழுதாமல் விட்டது, அதன் உண்மைத் தன்மையை பற்றிய சந்தேகத்தினை எழுப்புகிறது.

கடிதத்தில் ‘I had to attend to that person and make him happy’ என்று இருப்பினும் வற்புறுத்தப்பட்டார் என்ற அளவிலேயே அரசின் வாதமும் அமைந்தது.

ஆயினும் நீதிபதிகள், குற்றவாளிக்கு முதலிலிருந்தே அந்தப் பெண்ணை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்ற அடிப்படையில் நடந்தது பாலியல் பலாத்காரம் என்று தீர்மானித்துள்ளார்கள். இதுவும் எவ்வளவு தூரம் இதச பிரிவு 375ன் கீழ் வருகிறது என்று தெரியவில்லை.

மேற்கண்ட விடயங்கள், இரு தரப்பினரின் வயது போன்றவற்றை ஆராய்ந்த நீதிபதிகள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை என்பது மிக அதிகம் என்று தீர்மானித்து, அவர் அது வரை சிறையில் கழித்த 5 1/2 ஆண்டுகளை மட்டும் போதுமானது என்று அவரை விடுதலை செய்துள்ளனர்.

நீதிபதிகள் பாலியல் பலாத்காரத்திற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்பதை கருத்தில் கொள்ளவில்லை. ஆயினும், குற்றவாளிக்கு சிறையில் அளிக்கப்படும் தண்டனைக் குறைப்பு (remission) போன்றவற்றை அனுசரித்தே 5 1/2 ஆண்டுகள் என்று கூறுகின்றனர்.

தீர்ப்பினை முடிக்கும் முன்னர், சிறையிலும் தண்டிக்கப்பட்டவர் நல்ல முறையில் நடந்து கொண்டார் என்பதை எடுத்துக் காட்டவே அவர் இஆப தேர்விலும் தேறியுள்ளார் என்று போகிற போக்கில் குறிப்பிடுகிறார்கள்...அவ்வளவுதான், அந்த ஒற்றை வரி ‘ஏதோ இஆப தேர்வில் தேறினால் தண்டனைக் குறைப்பு, அதுவும் வன்புணர்வு குற்றவாளிக்கா?’ என்று கண்டனத்தை ஏற்ப்படுத்தி விட்டது.

தண்டனை எவ்வளவு என்பதை கணிதம் (mathematical precision) மூலம் கூற முடியாது. வழக்கு விசாரணையில் நீதிபதியும் முன் வைக்கப்படும் பல்வேறு காரணிகளை ஆய்ந்து, அவை நீதிபதியிடம் ஏற்ப்படுத்தும் தாக்கத்தினைப் பொறுத்து அமைவது. அவையனைத்தையும், தெளிவாக தீர்ப்பில் கூற முடியும் என்பதும் இயலாதது. எனவே இவ்விதமான ஒற்றைப் பரிமாண விமர்சனங்கள், நீதிபதிகளை தட்டையான தீர்ப்பினைக் கூறும் இயந்திரங்களாக மாற்றி விடக்கூடும்!

நீதிபரிபாலனம் என்பது மூளை மட்டும் சார்ந்த விடயமல்ல...இதயத்திற்கும் கொஞ்சம் பங்கு உண்டு!

மதுரை
03.03.09


நேற்று இந்துவில் வெளிவந்த கடிதத்திற்கு நான் எழுதிய எதிர்வினை...



It is unfair on the part of the press to criticize the Delhi High Court, for its judgment, reducing the sentence of Ashok Rai, convicted for the offence of rape. It seems no one, including your reader who expressed shock in his letter published on 02.02.09 bothers to read the judgment before pouring vitriol on the Learned Judges, who only after weighing the entire circumstances of the case, in their wisdom thought fit to release the convict after 5 ½ years of incarceration. The much maligned observation on the ‘convict qualifying for IAS’ is made only as a passing reference at the end of Judgment to bolster the point that the convict had shown good conduct while in jail. It is another matter whether he is fit or legally entitled to work as a civil servant or not.

Instead, what weighed most in the mind of the Learned Judges was that what had happened between the victim and the culprit was not technically rape but a consensual sex, obtained on a false promise of marriage. The culprit was aged 29 and the victim 21 and had she exhibited a little more strong will, she could have succeeded in bringing the culprit into book, without losing her life. The way in which the suicide note was written, creates a suspicion in my mind that the victim, in a fit of rage and spirit of revenge has laid a well thought out plan to send the cheater for a long period behind the bars. Well, 5 ½ years is not a small period but still the Learned Judges could have stuck to the minimum period of 7 years and leaving the remission period to the concerned authorities.

In any case, it is not correct that convict’s qualifying for IAS was not cited by the Delhi High Court as the only reason for reducing the sentence.