24.6.10

தமிழ் வழக்காடு மொழியாகலாம், ஆனால்...

‘உயர்நீதிமன்றத்தில் ஏன் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்’ என்ற கேள்விக்கு ஏன் இருக்கக் கூடாது என்பதுதான் பதிலாக இருக்க முடியும். ஏனெனில் தமிழ் இங்கு பேசப்படும் மொழியாகவும், அலுவல் மொழியாகவும் இருக்கும் பட்சத்தில், வழக்காடு மொழியாகவும் இருப்பதுதான் இயல்பானது.

ஆங்கிலம் வழக்காடு மொழியாக தமிழகத்தில் இருப்பதுதான் விதியினை மீறிய செயல். அந்த விதிவிலக்கிற்கான காரணங்களுக்குள் தற்பொழுது யாரும் செல்லவில்லை. உலக அளவில் நமது தொடர்பின் எல்லைகளை விரித்துக் கொள்ளும் வகையிலும், இந்திய அளவில் ஒரு தொடர்பு மொழி என்ற வகையிலும் ஆங்கில பயன்பாட்டிற்கான முக்கியத்துவத்தைக் கருதி, நீதிமன்றங்களில் அதன் இருப்பிடத்தை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

ஆனால், தமிழுக்கும் ஏன் இடமில்லை என்பதுதான் கேள்வி?

‘தமிழுக்கு இங்கு இடமில்லை’ என்று வைராக்கியம் கொண்டவர்கள் கூட, அதற்கான தகுந்த காரணத்தை கூற முயலாமல், ‘தமிழ் இருக்கலாம். ஆனால்...’ என்றுதான் தங்களது வாதத்தினை வைக்க முன் வருகிறார்கள். தமிழ் இருக்கலாம் என்று அனைவரும் ஏற்றுக் கொண்டால், பின் ஏன் அடுத்த கட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதில் மெத்தனம் என்பது புரியவில்லை. அங்குதான் இந்த ‘ஆனால்...’ களுக்குப் பின் உள்ள நோக்கம் வெளிப்படுகிறது.

இதே ‘ஆனால்...’கள்தாம் இடப்பங்கீடு விடயத்திலும், அதனை எவ்வாறேனும் தடுத்து நிறுத்த முன்னிறுத்தப்பட்டன. ‘இடப்பங்கீடு தேவைதான். ஆனால் பிற்ப்படுத்தப்பட்டவர்கள் எத்தனை சதவீதம் என்ற புள்ளியியல் விபரங்கள் இல்லாத வகையில் அதனை எப்படி செயல்படுத்துவது’ என்பது போன்ற ‘ஆனால்’கள்தாம் அவை. புள்ளியியல் விபரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட அதே குரல்கள்தாம் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியா, என்றும் புலம்புகின்றன.

இதற்கெல்லாம் காலம், நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழகத்தில் எப்படி செயல்படுத்தினார்களோ அப்படியே செயல்படுத்த வேண்டியதுதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும்.

தமிழ் விடயத்திலும், ஆனால்... என்று இழுப்பவர்கள்களால்தான் பிறச்சினை. தமிழ் கூடாது என்று கூறுபவர்களை எதிர்கொள்வது எளிது. ஆனால்... என்று இழுப்பவர்களிடம்தான், எளிதில் ஏமாறிவிடுவோம். ஆனால் என்பவர்களுக்கு கூடாது என்று கூறுபவர்களை விட வேறு நோக்கம் இல்லை என்பதுதான் உண்மை. இல்லையெனில், ‘அது என்ன புடலங்காய் உள்கட்டமைப்பு’ என்று அடுத்து ஆக வேண்டியதை பார்த்திருப்பார்கள்.

ஏனெனில், தமிழுக்காக என்று உருவாக்க முடியாத உள்கட்டமைப்பு என்று பெரிதாக ஒன்றும் இருக்கப் போவதில்லை. நமது முன்னாள் தலைமை நீதிபதி உள்கட்டமைப்பை பற்றி கூறியது ’ஒரு கண்கட்டி வித்தை’ என்று நான் உணர்ந்திருந்தேன். தமிழில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்று கூறியது முதல் முட்டுக்கட்டை. மாவட்ட நீதிமன்றங்கள் முதல் முன்சீப் நீதிமன்றங்கள் வரை எந்த புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்க்காமல், தமிழில் வழக்குகள் நடத்தப்படுகிறது என்பதுதான் உண்மை.

இந்திய தண்டனைச் சட்டத்தையோ, சொத்துரிமை மாற்றுச் சட்டத்தையோ தமிழில் மொழிபெயர்த்தாலும், அது ஒரு படிப்பனுபவமாக மட்டுமே பயன்படுமேயன்றி, நீதிமன்றத்தில் அதனை மட்டுமே அடிப்படையாக வைத்து வழக்கு நடத்தப்பட இயலாது. சட்டப்பிரிவுகளின் ஒவ்வொரு வார்த்தையும் என்ன அர்த்தத்தில் அந்த வாக்கியத்திலும், பிரிவிலும் பயன்படுத்தப்படுகின்றது என்று பல சமயங்களில் நீதிமன்றங்களில் வாதிடப்படுகையில், மொழிபெயர்த்த சட்டத்தினை வைத்து அதனை விளக்க (interpret) முடியாது. எனவே, தமிழில் புத்தகங்கள் இல்லை என்பது ஒரு தடையே அல்ல!

புதிதாக கணணிகள் வேண்டும் என்று கூட கூறப்படுகிறதாம். எத்தனை மொழிகளையும் எளிதாக தட்டச்சு செய்யும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்பட்ள்ள சூழ்நிலையில், கணணி ஒரு பிரச்னையே இல்லை. தமிழில் வழக்குரை (pleadings) தாக்கல் செய்யப்படும் பொழுது வழக்குகளின் புள்ளியியல் விபரங்களை சேகரிப்பதில் பிரச்னை இருக்கலாம். அதனைக் கூட வழக்குரை (pleadings) தமிழில் தாக்கல் செய்யப்பட்டாலும், வழக்குரை தலைப்பு (cause title) மற்றும் வழக்குரை அட்டை (docket) ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூட விதி வகுப்பதால், தீர்க்கலாம். இதனை எழுதும் இந்த அரை மணி நேர சிந்திப்பில் இந்த வழிமுறை புலப்படுகையில், நீதிமன்ற நிர்வாகத்தில் கற்றுத் தேர்ந்த அனுபவம்மிக்க அலுவலர்களால் எளிதில் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும்.

கணணியில், ஃபோனடிக் முறை தட்டச்சு இருப்பதால், தமிழ் தட்டச்சர்கள் தேவை என்பது எல்லாம் இல்லை. ஆனாலும் கூட, நீதிபதிகள் தாங்களாகவே விரும்பி தமிழில் தீர்ப்பு பகர விரும்பினால் மட்டுமே தமிழ் சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தட்டச்சர்களின் தேவை இருக்கும். தகுந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் வரையில், நீதிபதிகள் ஆங்கிலத்திலேயே தீர்ப்புகளை கூறலாம். தமிழும் வழக்காடு மொழி என்பதால், தமிழில்தான் தீர்ப்பு கூற வேண்டும் என்று யாரும் நீதிபதிகளை கட்டாயப்படுத்த முடியாது. எப்படியாயினும், உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் தமிழில் தீர்ப்பு பகர குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் ஆகலாம்.

தமிழ் இருக்கலாம்தான் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட  சூழ்நிலையில் தமிழ் தெரியாத நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்படுகிறார்களே என்ற வாதம் அர்த்தமற்றது என்றாலும், ஏன் தமிழ் தெரியாத நீதிபதிகள் இங்கு மாற்றப்பட வேண்டும் என்பதுதான் அதற்கு பதில். நேர்மையான, துணிச்சலான நீதிபதிகளுக்கு அந்த நேர்மைக்கு தண்டனையாகவும், அல்லது நேர்மையற்ற நீதிபதிகள் ஏதாவது பிறழ்ச்சினையில் சிக்கிக் கொள்கையில் அதிலிருந்து அவரை விடுவிக்கும் (relieve) நோக்கத்துடனும்தானே நீதிபதிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுகிறார்கள். உண்மையான அந்த காரணத்திற்கு எந்த சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்க இயலும்.

தலைமை நீதிபதி வெளிமாநிலத்திலிருந்து வருவது என்பதும் உபயோகமற்ற ஒரு சடங்கு என்றாலும், அவரைப் பொறுத்தவரை வேண்டுமானால் தனக்கென ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்துக் கொள்ள வேண்டியதுதான். எட்டு கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கான சம்பளம் ஒரு பொருட்டல்ல.

உச்ச நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் கூறியுள்ள மொழிபெயர்ப்பு பிரச்னையும், ஒரு தடையல்ல. ஏனெனில், தற்பொழுது கூட ஒரு உரிமையியல் வழக்கோ அல்லது குற்றவியல் வழக்கோ, உச்ச நீதிமன்றம் செல்லும் பொழுது அனைத்து கீழமை நீதிமன்ற நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. உயர்நீதிமன்ற தீர்ப்பு, வழக்கு ஆவணங்களில் பத்து சதவீத இடமே பிடிக்கிறது. ஏன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நீதிப்பேராணை மனுக்களிலும் () அனைத்து ஆவணங்களும் தமிழில் உள்ளன. எனவே உச்ச நீதிமன்றம் செல்கையில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது புதிதாக எழும் பிரச்னையல்ல.

இவை எதுவும் சாத்தியமில்லை என்றாலும், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்ப்படும் வரை தமிழில் வழக்குரைகளை ஏற்றுக் கொள்வதையாவது நிறுத்தி வைக்கலாம். ஆனால், எதுவுமே இல்லையென்பதில்தான் இந்த ஆனால்கள் மீது சந்தேகம் ஏற்ப்படுகிறது. அவர்கள் உண்மையில், தமிழ் கூடாது என்று கூற வருகிறார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தமேயன்றி வேறு அல்ல.

பலர் நேரிடையாக ‘அது என்ன தமிழ் வந்தால் நீதிமன்றத்தின் டிகோரம் என்னாவது, டீசன்ஸி என்னாவது?’ என்கிறார்கள் சமூக நீதி பிரச்னையில், ‘ரிசர்வேஷன் கூடாது, மெரிட்தான் கரெக்ட்’ என்று அதனால் பயனடைந்த அல்லது பயனடையப் போகும் ஒரு கூட்டம் சலித்துக் கொள்ளும். அதே போன்று இங்கும், தமிழில் வழக்காடுவதால், பயன்பெறப் போகும் நபர்கள்தாம் மற்ற ஆனால்களைப் போல அல்லாமல் நம்மிடம் நேரிடையாக இப்படி நக்கலடிக்க முற்ப்படுகிறார்கள்.

நேற்று கூட என்னிடம் அப்படிக் கேட்ட என்னிடம் ஒரு வழக்கினை நடத்த ஒப்படைக்க வந்த ஒரு ஜூனியர் வழக்குரைஞரிடம் ‘என் கடவுளே என்று இறைஞ்சுவது எப்படியிருக்கிறது’ என்றேன். ‘தாய்மொழியில் கேட்டால் வார்த்தையின் அர்த்தம் அதன் முழு வீரியத்தோடும் மனதை துளைக்கிறது அல்லவா? வாதங்களை தமிழில் வைப்பதன் பயன் அதுதான்’ என்றேன்

எது எப்படியோ, இந்த சட்டச்சிக்கல், கட்டமைப்புச் சிக்கல் அனைத்தையும் சற்றுத் தள்ளி வைத்து சிந்திதோமென்றால், நமது உயர்நீதிமன்றத்தினை அணுகும் 90 சதவிகித வழக்காடிகள் தங்களது பிரச்னைகளை தமிழில் சிந்திக்கிறார்கள். தமிழில் ஆவணங்களை எழுதுகிறார்கள், தமிழில் சண்டையிடுகிறார்கள். தமிழில் தங்களது வழக்குரைஞருடன் விவாதிக்கிறார்கள், தமிழில் தங்களது சாட்சிகளை விசாரிக்கிறார்கள். அப்படியிருக்கையில், முக்கியமாக அந்த 90 சதவிகிதத்தில் 80 சகவிகிதம் வழக்காடிகளுக்கு ஆங்கிலம் தெரியாத சூழ்நிலையில் ஏன் தங்களது வழக்குகளை தமிழில் நடத்தக் கூடாது? அதுதான் நியாயமென்றால், அதுதான் சிறந்தது என்றால் அதனை ஏன் ஆனால்களால் தள்ளிப்போட வேண்டும்.

ஆனால்களை தவிர்ப்போம். தமிழுக்கு ‘ஆம்’ என்போம்.

பிரபு ராஜதுரை
17/06/10

21.6.10

ஞாநி கொடுத்த பத்மஸ்ரீ!

You are incorrigible

என்று ‘மாஸ்க்படத்தில் காவலர் மீது ஜிம் கேரி பாய்வாரே, அப்படிப் பாய வேண்டுமென்று இருக்கிறது, பத்தி எழுத்தாளர் ஞாநி மீது!


அவரது இந்தத் தகவ்லுக்கு ஆதாரம் என்னவென்று தெரியவில்லை. இணையத்தில் தேடினால், இந்தியாவின் மக்கள் தொகையினை பெருமளவில் குறைக்க உதவிய ஆண்டர்சனுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கக்பட்டு அதற்கு ஓபாமா வாழ்த்தியதாகவும் ஒரு கிண்டல்தான் கண்ணில் பட்டது.

ஞாநி இவ்வளவு நல்லவரா?
-oOo-
யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தின் தலைவரான கேசுப் மஹிந்திரா பலரால் மதிக்கப்படும் ஒரு தொழில் அதிபர். அவரது சேவையினை பாராட்டி மத்திய அரசு ‘பத்ம பூசன்விருது அளிக்க முன் வந்தது. ஆனால் தன் மீது போபால் விபத்து குற்றவியல் வழக்கு நிலுவையிலுள்ளது என்று கூறி அவர் அதனை மறுத்து விட்டார்.
-oOo-

மற்றவர்கள் பலருக்கும் நிகழக்கூடிய அனுபவம் ஒன்று எனக்கு நிகழ்ந்ததேயில்லை. எனக்கு அதில் வருத்தமா இல்லை பெருமிதமா என்று தெரியாது. ஆனால் அப்படியொரு அனுபவம் வாய்க்க எனக்கு வாய்ப்பில்லை என்றுதான் நினைத்து வந்தேன்.

ஒன்றும் பெரிதாக் இல்லை... என்னைப் போலவே பெயர் கொண்ட மற்றொரு நபரை சந்திக்கையில் ஏற்ப்படக்கூடிய அசட்டுத்தனமான ஒரு உணர்வுதான் அது.

பிரபு என்ற பெயரும் ராஜதுரை என்பதும் பிரபலமான பெயர்கள்தான் என்றாலும், பிரபு ராஜதுரை என்று சேர்த்து விளிக்கையில் சற்று பிசிறு தட்டும் ஒரு பெயருடைய வேறு யாரும் இருப்பார்கள் என்று நான் நினைத்ததில்லை. யாதோங்கி பாராத் வகை திரைபப்டங்களில் வருவது போல ஏதோ சிறு வயதில் தொலைந்து போன சகோதரனை தேடுவது போல அவ்வப்பொழுது மற்றொரு பிரபு ராஜதுரையை தேடி வந்தாலும், உலகில் வேறு யாருக்கும் இல்லாத தனிப் பெயர் என்ற பெருமைக்கு பங்கம் வந்துவிடும் அபாயத்தை எண்ணி பயமாகவும் இருக்கும்.

அதற்கு வந்து விட்டது வேட்டு!

சமீபத்தில் இணையத்தில் வலை விரித்ததில் சிக்கியது இந்த தினமணி செய்தி


தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவர் எனது கட்சிக்காரர். அதனால் ஏதேனும் என்னுடைய பெயர் தவறுதலாக வந்து விட்டதா என்று தெரியவில்லை. விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.


உங்களுக்கும் யாரையாவது தெரியுமா? அல்லது பேஸ்புக்கில் இருப்பவரையாவது தெரியுமா?

Madurai
21/06/10

20.6.10

நீதிமன்றத்தில் தமிழ்!


என்ன அர்த்தத்தில் அப்படி கூறினார் என்பது தெரியவில்லை.

ஏனெனில் உயர்நீதிமன்றம் தவிர்த்து மற்ற அனைத்து கீழ் நீதிமன்றங்களிலும் தமிழ் அனைத்து வகைகளிலும் பயன்பாட்டிலுள்ளது. தமிழில் வழக்குரைகள் தாக்கல் செய்வதிலிருந்து தீர்ப்பு வழங்குவதை வரை முழு அளவில் அனுமதிக்கப்படுகிறது.

1956ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு அலுவல் மொழி சட்டத்தின்படி தமிழ்தான் கீழ் நீதிமன்றங்களின் அலுவல் மொழி. ஆயினும் அதனை செயலுறுத்தும் அறிவிப்புகள் (Notification) திமுக ஆட்சிக்காலத்தில்தான் வெளியிடப்பட்டு 1976ம் குற்றவியல் நீதிமன்றங்களிலும் 1982ம் ஆண்டு உரிமையியல் நீதிமன்றங்களிலும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முதன்முதலில் தமிழ் அறிமுகப்படுத்தப்படுகையில் பலத்த கேலிக்கும், கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டது. ஆனால் 25 வருடங்கள் கடந்த சூழ்நிலையில், தமிழ் நிலையான ஒரு இடத்தினை தற்பொழுது பிடித்துள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன் நீதிமன்ற வரலாற்றை 25 ஆண்டுகள் பின்னால் தள்ள நினைக்கிறாரா?

-oOo-

உயர்நீதிமன்றத்தில் தமிழ் கூடாது என்று தமிழக அரசின் கோரிக்கையினை நிராகரித்த முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனும் ஏற்றுக் கொள்ள்வியலாத ஒரு காரணத்தை கூறியுள்ளார். 'உயர்நீதிமன்றத்தில் தமிழ் வந்து விட்டால் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்கையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியிருக்கும் என்றும், அதனால் ஏற்ப்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாது' என்றும் கூறியதாக ஹிந்துவில் கூறப்பட்டுள்ளது.

முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒரு வழக்கின் வழக்குரைகள் 10 பக்கம் இருக்கலாம். சாட்சி விசாரணை 20 பக்கம் இருக்கும். தீர்ப்பு 20 பக்கம் இருக்கும். மேல் முறையீட்டு தீர்ப்பு 20 பக்கம் இருக்கும். உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மேல்முறையீட்டு தீர்ப்பு, ஐந்து பக்கங்களுக்கு மிகாது. ஆக இன்று கூட உச்ச நீதிமன்றம் செல்லும் ஒரு உரிமையியல் வழக்கின் 90 சதவீத ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக ஆனாலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்த நீதிபதியும் தமிழில் தீர்ப்பு சொல்லப்போவதில்லை. எனவே இன்றுள்ள நிலைதான் நீடிக்கும்.

குற்றவியல் நீதிமன்றங்களில் முதல் தகவல் அறிக்கை, குற்றச்சாட்டுரை (Charge Sheet) தொடங்கி சாட்சி விசாரணை தீர்ப்பு அனைத்தும் இன்று தமிழில்தான் உள்ளன. அவை உச்ச நீதிமன்றம் செல்கையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகின்றன.

தலைமை நீதிபதி, உண்மை நிலையை அறிந்து கொள்ளாமல் ஏதோ காரணம் சொல்ல வேண்டும் என்று பொருந்தாத ஒரு காரணத்தை கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாவதை மத்திய அரசு விரும்பாததற்கு காரணம் வேறு. காபினட் மந்திரி பதவி பெறுவது போல இது சுலபமான காரியம் அல்ல என்பது கலைஞருக்கும் தெரியும்.
அதனால்தான், சக வழக்குஞர்களிடம் நான் குறிப்பிட்டேன். ‘தெலுங்கான போராட்டம் சாதிக்காததை நீங்கள் சாதித்துவிட முடியாது என்று...

பிரபு ராஜதுரை
மதுரை
20/06/10

18.6.10

போபால், நீங்களே தீர்ப்பளியுங்கள்...


போபால் வழக்கில், நீதிபதி முன்பு இருந்த வழக்கு ‘கவனக்குறைவான ஒரு செயலால், மரணத்தை ஏற்ப்படுத்துதல்’. அதற்கான அதிகபட்ச தண்டனை இரண்டு வருடங்கள். அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அதிக தண்டனை அளிக்க இயலாது. எனவே வேறு என்ன வகையான தீர்ப்பினை நீதிபதியிடம் இருந்து ஊடகங்கள் எதிர்பார்த்தன என்பது புரியவில்லை.

குற்றவாளிகள் புரிந்த குற்றத்தினை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304Aல் காணலாம்


மேற்கண்ட சட்ட பிரிவு இந்திய தண்டனை சட்டம் 1860ம் ஆண்டு இயற்றப்பட்ட பொழுது இல்லை. பத்து ஆண்டுகள் கழித்து 1870ம் ஆண்டு சட்ட திருத்தத்தின் மூலமாக கொண்டு வரப்பட்டது. மோட்டார் கார் மூலம், முதல் மரணம் ஏற்ப்பட்ட ஆண்டு 1869. எப்படியோ, மோட்டார் கார்களின் வரத்து இந்தப் பிரிவிற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

-oOo-


முதலில் குற்றவாளிகள், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304(II) கீழ் 10 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்படக்கூடிய கொலை இல்லை என்றாலும் தண்டனைக்கு ஏதுவான மரணத்தை விளைவித்தல் (culpable homicide not amounting to murder) என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். பிரிவு 304(II) கூறுவதாவது:


இங்கு மரணத்தை ஏற்ப்படுத்தும் நோக்கம் தேவையில்லை. ஆனால் ஒருவர் செய்யும் செயலானது மரணத்தை ஏற்ப்படுத்தலாம் என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அது மட்டும் போதாது. அந்த செயல் ஒரு தண்டிக்கப்படக்கூடிய மரணம் விளைவித்தலாக இருத்தல் வேண்டும்.

அவ்வாறு குற்றம் சாட்டியது தவறு என்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தினை அணுகினர். உச்ச நீதிமன்றம் அரசு தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், பிரிவு 304(II)ல் விளக்கப்படும் குற்றத்திற்கான கூறுகள் அவற்றில் இல்லை. ஆனால் பிரிவு 304Aன் கூறுகள் உள்ளன என்று கூறி மற்ற குற்றப் பிரிவுகளை நீக்க ஆணையிட்டது.

எனவே குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள்தான் தண்டனை என்பது 1996ம் ஆண்டே உச்ச நீதிமன்றத்தாலேயே தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயம்.

-oOo-

தீர்ப்பிலிருந்து, நஷ்டத்தில் இயங்கி வந்த தொழிற்சாலையினை மூடி இந்தோனேசியாவிற்கு எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டதால், தகுந்த பராமரிப்பு இல்லாமல் இறந்து கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையில் இவ்வளவு அபாயகரமான நச்சுப் பொருட்களை கையாண்டிருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.

விபத்து நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் போபால் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கை அதன் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நடக்கப் போகும் விபத்தினை துல்லியமாக எச்சரித்துள்ளதை படிக்கையில் நமது தண்டுவடம் சிலிர்க்கிறது...

(a) It appears that it would be possible to contaminate the tank with material from the vent gas scrubber. Although the arrangement of lines connecting the tank and vent scrubber appears to be adequate to prevent back flow of liquid, it appears possible to back reactive quantities of water vapors and other gases from the scrubber to the feed tank when it is depressurized.

(b) Location of the tank inside a room and lack of water spray protection facilities create a situation where a toxic and flammable vapor cloud could be formed and confined without provision for knockdown or dispersal. There is mechanical ventilation in the room, but the same circumstances that could result in a leak or overfill (power failure, for instance) could result in the ventilation being inoperative. Also, it appears that a sizeable spill would not be readily dispersed by the system.
(c) There is some question about the adequacy of the tank relief valve to relive a runaway reaction or fire exposure, particularly since the tank has been enlarged.
(d) Manual control of filling of the tank, with no instrumentation backup, creates a possibility of accidental overfilling

ஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு பாதுகாப்பினை மேம்படுத்த செலவு செய்ய எந்த நிர்வாகம் முன் வரும். அதுவும் இந்தியாவில்! அதுவும் 25 வருடங்களுக்கு முன்னர்!!

உச்ச நீதிமன்றம், விபத்து நடந்த அன்று நிகழ்ந்தவைகளை மட்டுமே, குற்றச்செயல்களாக கருதி “அன்று அந்த தொழிற்சாலையினை இயக்கிய பொழுது அதனை இயக்கியவர்களுக்கு அதனை இயக்குவதால் மனிதர்கள் உயிரிழக்க நேரிடலாம் என்ற எண்ணம் (knowledge) இருந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறி பிரிவு 304(II)ஐ நீக்கியது.

சட்ட முறைகளை அறிந்தவர்கள் உச்ச நீதிமன்றம் கூறியது ஒரேடியாக தவறு என்று கூற மாட்டார்கள். ஆனாலும், மக்களின் மனநிலையை கருதி, உச்சநீதிமன்றம் ‘குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த கேள்விக்கான விடையினை வழக்கினை விசாரிக்கும் நடுவரே (Judicial Magistrate) தீர்மானிக்கட்டும்’ என்று கூறியிருக்கலாம். சாட்சிகளை பின்னர் விசாரிக்கையில் மேலும் பல உண்மைகள் வெளி வந்திருக்கலாம்.

ஏனெனில், மிக அரிதான வழக்குகளில் மட்டுமே இவ்வாறு குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுகளை (charges) நீக்க உச்ச நீதிமன்றம் முன் வரும்.

பிரிவு 304(II)ஐ பொறுத்து தற்பொழுது செய்வதற்கு ஏதுமில்லை. இரண்டு வருடங்கள் அளிக்கப்பட்ட தண்டனையே இறுதியில் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே!

இவ்வளவு பயங்கரமான நச்சுப் பொருட்கள் இருக்கையில், எவ்வித பராமரிப்பும் இல்லாமல் செத்துக் கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையினை, பாதுகாப்பு தொழிற்நுட்பத்தில் குறைபாடுகளுடன் இயக்குவதால் நச்சுப் பொருள் வெளியேறி மரணம் ஏற்ப்படலாம் என்ற அறிவு (knowledge) அதனை இயக்குபவர்களுக்கு இருந்திருக்குமா? என்ற கேள்வியினை எதிர்காலத்தில், இவ்விதமான பயங்கரங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் மக்கள் மன்றத்தில் ஆராயப்படலாம்.

Prabhu Rajadurai
Madurai
19/06/10









  

15.6.10

போபாலும் ஆங்கில காந்திமதிகளும்!

கடந்த சில நாட்களாக, போபால் விஷவாயு விபத்தின் குற்ற வழக்கு தீர்ப்பு குறித்து நமது ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை எரிச்சல் ஏற்ப்படுத்துவதாய் உள்ளது.

வழக்கின் தன்மை பற்றியோ, குற்றவியல் நடைமுறை பற்றியோ சிறிதும் சிந்திக்காமல் ‘நீதி செத்து விட்டதுஎன்றும் வாரன் ஆண்டர்சன் தப்பித்து விட்டார் என்றும் கூக்குரலிடுவதில் ஏறக்குறைய நமது தமிழ்ப்படங்களில் காந்திமதி மண்ணை வாரி தூற்றி சாபம் விடும் இயலாமைதான் தெரிகிறது.

-oOo-

தற்பொழுது தண்டனை பெற்றவர்களின் மீதான குற்றச்சாட்டு கவனக்குறைவான செயலால் மரணம் ஏற்ப்படுத்தியது. அந்த குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகள்தான். அதையும் கொடுத்தாயிற்று. பின்னர் எங்கிருந்து நீதி செத்தது என்பது தெரியவில்லை.

வேறு கடுமையான குற்றச்சாட்டு ஏற்கனவே நீக்கப்பட்டு கவனக்குறைவினால் மரணம் ஏற்ப்படுத்துதல் என்ற வகையிலே மட்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது கடந்த பல ஆண்டுகளாக அனைவருக்கும் தெரிந்த நிலையில், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஊடகங்கள் தற்பொழுது ஏன் இப்படி அலறுகின்றன என்பது புரியவில்லை. (எனது போபால் பற்றிய கட்டுரையில் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்)

ஆண்டர்சன், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர், அவரைப் தனியே பிரித்து மற்றவர்களைப் பற்றி மட்டும் வழக்கு நடைபெற்ற சூழலில், தீர்ப்பில் ஆண்டர்சனைப பற்றி குறிப்பிடவில்லை என்று தனியே ஒரு புலம்பல்!


காங்கிரஸ் என்ன செய்தது, பிஜேபி என்ன செய்தது என்று தற்பொழுது கேட்கும் ஊடகங்கள், இது வரை தாங்கள் என்ன செய்தோம் என்பதையும் கூறினால் நல்லது. இதில் வேடிக்கை என்னவென்றால், டைம்ஸ் நவ் ‘இதோ நாங்கள் ஆண்டர்சனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்டோம்என்று ஒரு தம்பட்டம். விட்டால், காப்டன் பிரபாகரன் போல அவரை சங்கிலியில் கட்டி அட்லாண்டிக் வழியே கூட்டி வந்து விடுவார்கள் போல.

ஆண்டர்சன் எங்கு வசிக்கிறார் என்பது, எந்தக் காலத்திலும் யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. பல வருடங்களுக்கு முன்னரே அவர் வசிக்கும் வீட்டின் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியானது.

ஆண்டர்சன் அரச மரியாதையுடன் இந்தியாவை விட்டு சென்றது அன்றே தொலைக்காட்சியாலும் பத்திரிக்கைகளாலும் ஆவணமாக்கப்பட்ட ஒரு விடயம். இவ்வளவு வருடங்கள், அதைப் பற்றி எதுவும் கவலைப்படாத இந்த ஊடகங்கள், தற்பொழுது அர்ஜுன் சிங் தாத்தாவைப் போட்டு இப்படி காய்ச்சுவது என்ன நியாயம் என்று புரியவில்லை.

தர்ம அடி என்பது இதுதான். யார் வேண்டுமானாலும் ஒரு தடியை எடுத்து அர்ஜுன் சிங்கை ஒரு போடு போட்டு விட்டுப் போகலாம் போல. ஆண்டர்சனை இங்கிருந்து அனுப்ப வேண்டுமென்றால், ஒரே ஒரு மனிதர்தான் அதற்கு உத்தரவிட்டு இருக்க முடியும். அவரை குறிப்பிட முடியாது. அர்ஜுன் சிங் என்றால் பிரச்னை இல்லை!

-oOo-

‘குற்ற மனமில்லாச் செயல் குற்றமல்லஎன்பது குற்றவியலின் முக்கியமான ஒரு விதி. எந்த ஒரு தவறான செயலையும் தண்டனைக்கேதுவான குற்றச்செயலாக கருதுவதற்கு ‘mens reaஎனப்படும் குற்றமனம் தேவை.

கவனக்குறைவான் ஒரு செயலால் மற்றொரு நபருக்கு ம்ரணத்தையோ அல்லது காயத்தையோ விளைவித்தல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம். கவனக்குறைவான ஒரு செயலில், மேற்கண்ட குற்ற மனம் இல்லை என்பது போலத் தோன்றினாலும் அந்த வகையில் கவனக்குறைவாக இருத்தலுக்கு ஒரு குற்ற மனம் தேவை.


எனினும், இந்த வகை குற்றத்திற்காக சட்டம் அளிக்கும் தண்டனை மிகக் குறைவு. அதிக பட்சம் இரண்டு வருடங்கள்!

இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட பொழுது பெரிய வாகனங்களும் இல்லை. நச்சு தொழிற்சாலைகளும் இல்லை. எனவே கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியோ அல்லது நச்சுப்புகை தொழிற்சாலை நடத்தியோ ஒருவரை கொன்றாலும் சரி, ஆயிரம் பேரை கொன்றாலும் சரி அதே சிறிய தண்டனைதான்.

போபால் விபத்திலும் சரி, தொடர்ச்சியாக காரை ஏற்றி பல பேரை கொன்று போட்ட சல்மான்கான், நந்தா வழக்குகளிலும் இந்த தண்டனை போதாது என்று கொலை இல்லை என்றாலும் தண்டிக்கத்தகுந்த வகையில் மரணத்தை ஏற்ப்படுத்துதல் ( Culpable homicide not amounting to murder) என்ற் அதிகபட்சம் பத்து வருடம் தண்டனை தரத்தக்க ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எதிர்ப்பார்த்தது போல, போபால் வழக்கிலும், அந்த குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது.

எனவே, போபால் தீர்ப்பில் அதிர்ச்சி தெரிவிக்க புதிதாக என்ன இருக்கிறது என்று புரியவில்லை!

-oOo-

குற்ற வழக்கை விடுங்கள். உண்மையில் நாம் கோட்டை விட்டது நஷ்ட ஈடு வழ்க்கில்.(எப்படி என்ற விபரம் எனது போபால் கட்டுரையில் உள்ளது) எனெனில் தொழிலதிபர்கள் தூக்கு மேடைக்கு கூட போவார்கள். ஆனால் தாங்கள் திவாலாவதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கும் தவறிழைத்தவர்களின் இரத்தத்தினை விட, வளமான எதிர்காலத்திற்கான தகுந்த பாதுகாப்பே சிறந்த நிவாரணமாக இருக்க இயலும்.

தொழில் நடத்த வேண்டும் என்றால், அந்த தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத ஏழைகள் அதனால் பாதிக்கப்பட்டால் அதற்கான முழு நஷ்ட ஈடும் அளிக்க தொழில் நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும்.


அந்த வகையில், இப்படி உணர்ச்சிகரமாக பிரச்னையை கிளப்பியதற்கு வேண்டுமானால் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களிற்கு நமது நன்றியினை தெரிவிக்கலாம்!

மதுரை
16/06/10