27.12.08

'கஜினி'யும், ஹிட்லர் சொன்னதும்...


கஜினி.....

மும்பை பயங்கரவாத தாக்குதலாலும் அதனைத் தொடர்ந்த தொலைக்காட்சி ஊடகத்தாக்குதல்களாலும் ஏற்ப்பட்டுள்ள விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம். அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் புதிய பட வெளியீடுகளை ஹாலிவுட்டு நிறுவனங்களே தள்ளிப் போட்டன என்று படித்திருக்கிறேன்.

ஆனாலும், கஜினி தயாரிப்பாளர்கள் நம்புவது, படத்தில் செலவில் சுமார் 30 சதவீதத்தினை முழுங்கிய விளம்பரத்தினை.

சும்மாவா பின்னே...நமது தொலைக்காட்சி ஊடகங்கள் தேசபக்தியை வளர்ப்பதில் மிஞ்சிய நேரத்தை கஜினியை விற்பதில் செலவிடுகின்றன. அந்த ஊடகத்தாக்குதலில், இந்தியர்கள் மறந்து போனது ‘இந்திய திரைப்பட உலகின் மகா தயாரிப்பான (magnum opus) கஜினி’ மெமண்ட்டோ (Memento) என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்’ என்பதை.

இந்த ‘தழுவல்’ என்பது காப்பி என்பதன் நாகரீகமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் இந்திய காப்பி ரைட் சட்டப்படி ‘தழுவுதல்’ (adaptation) என்பதும் ஒரு காப்பிரைட் மீறல்தான். சட்டத்தை தள்ளுங்கள்...தார்மீக உரிமை?

ஐயா, தழுவுங்கள் அல்லது காப்பியடியுங்கள்...ஆனால் தயவு செய்து அதனை ஒத்துக் கொள்ளுங்கள். இணையத்தில் தேடினால்...அமீர் கான் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல், ‘கஜினி மெமண்டோவின் தழுவல் கூட இல்லை’ என்கிறார். இதற்கு பேசாமல், கஜினி பார்க்க காசு கொடுப்பவர்களுக்கு ஆளுக்கொரு செருப்படி கொடுத்திருக்கலாம்.

***

நம்ம ஊர் இயக்குஞர் மணிரத்னம் ‘இந்தியாவின் ஸ்பீல்பெர்க்’ என்று புகழப்படுவதும், கொஞ்சம் சங்கோஜமாகத்தான் இருக்கிறது. ஏனெனில், மற்ற திரைப்படங்களிலுள்ள சிறப்பான காட்சிகளை தழுவுவதும், காப்பிரைட் முறைகேடுதான்

இந்த ஒரு காரணத்திற்காகவே, எந்த ஒரு ராமராஜன் படமும், இந்தியாவின் முக்கிய படங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்ட நாயகன் படத்தை விட சிறந்த படம் என்று என்னால் கூற முடியும்.

கரகாட்டக்காரன் தவிர, ஏனெனில் அது தில்லானா மோகனாம்பாளின் தழுவல்!

***

தமிழகத்தின் தலைசிறந்த திரைப்பட அறிவுஜீவியாக புகழப்படும் கமல்ஹாசன் கூட தனது ‘அவ்வை சண்முகி’ படம் என்பது ஆங்கிலப்பட தழுவல் என்பதை தனது ரசிகர்களுக்கு துணிச்சலாக தெரியப்படுத்தினாரா என்பது தெரியவில்லை.

பிக்காசோவின் எந்த ஒரு ஓவியத்தையும், அசலைப்போலவே உருவாக்கும் ஓவியர்கள் உண்டு. ஆனால் அவர்கள் யாருக்கும் பிக்காசோவின் புகழில் ஒரு சதவீத பங்கினைக் கூட உலகம் அளிப்பதில்லை.

***

இந்தியாவின் முக்கிய திரைப்படமும், மூத்த இயக்குஞரும், முன்னணி நடிகரும் இப்படியென்றால்...என்ன சொல்வது?

நம்மவர்கள் வெள்ளையர்களை விட அறிவில் கொஞ்சம் குறைந்தவர்கள் என்றா?


மதுரை
271208

22.12.08

பயங்கரவாதமும், சட்ட உதவியும்...


மும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ‘பிடிபட்ட தீவிரவாதிக்கு வழக்குரைஞரின் உதவி அளிக்கப்படலாமா, கூடாதா?’ என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டு ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தானாக முன்வந்து மனு தாக்கல் செய்த வழக்குரைஞரின் வீடு சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது.

சிவசேனை தொண்டர்கள், நாட்டுப்பற்றினை தங்களது செயலுக்கு காரணமாக கூறினாலும், அவர்களது கோரிக்கை தொலை நோக்குப் பார்வையில் (in long term) நாட்டு நலனுக்கு சாதகமாக இருக்கப் போகிறதா என்றால், சந்தேகமே!

-oOo-

எந்த ஒரு சட்டமுறையின் அடிப்படை விதி ‘Audi Altrem Partem’ என்பதாகும். இதன் அர்த்தம் ‘இரு தரப்பிரனரையும் கேட்க வேண்டும்’ (hear the other side). இந்த விதியினை மீறி சர்வாதிகாரமென்றாலும் சரி, மக்களாட்சியென்றாலும் சரி ஒரு விசாரணையை நடத்தி விட முடியாது.

எனவே மும்பையில் பிடிபட்ட தீவிரவாதிக்கும் தனது தரப்பு வாதத்தினை வைக்க வாய்ப்பளித்துதானாக வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் வாய்ப்பானது, உண்மையான ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு சட்டமுறையினை அறிந்த ஒரு வழக்குரைஞரின் உதவி தேவை.

அவ்வாறான உதவி வழங்கக் கூடாது என்பது, ஏறக்குறைய ‘விசாரணையே கூடாது. அப்படியே தூக்கில் போட்டுவிட வேண்டியதுதான்’ என்று கூறுவதற்கு சமமானது. பயங்கரவாதத்திற்கு எதிரான வலிமை மிக்க ஆயுதம் சட்டத்தின் முறையே (due process of law) தவிர கங்காரு நீதிமன்றங்கள் இல்லை. அவை உடனடி வலி நிவாரணி போல செயல்படலாம். ஆனால் நோய் தீர்க்கும் மருந்து இல்லை.

குற்றம் சாட்டப்படுபவருக்கு, ஒரு வழக்குரைஞரின் உதவி மறுக்கப்படும் விசாரணை முறையும் உண்டு. அதாவது அலுவலர் (Employee) ஒருவர் மீது எடுக்கப்படும் ஒழுங்கீன நடவடிக்கை விசாரணைகளில் (disciplinary proceedings/ domestic enquiry) வழக்குரைஞரின் உதவியினை ஒரு உரிமையாக கோர இயலாது. ஆனால், நிறுவனம் (Management) ஒரு வழக்குரைஞரை தனக்கு உதவியாக வைத்துக் கொண்டால், குற்றம் சாட்டப்பட்டவரும் (delinquent) வழக்குரைஞரின் உதவியினை உரிமையாக கோர இயலும்.

மும்பை பயங்கரவாதி விடயத்திலும், அரசு தனது வழக்குரைஞர் (Public Prosecutor) மூலம் வழக்கு நடத்துகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்குரைஞரின் உதவி கூடாது என்றால், அந்த விசாரணை ஒரு கண்துடைப்பாகவே உலகின் கண்களில் பார்க்கப்படும்.

-oOo-


மேலும் இந்த விடயம், விவாதத்திற்குறிய ஒன்றாக வைக்கப்படுவது, ஒரு வழக்குரைஞரின் பணி என்பது சரிவர புரிந்து கொள்ளப்படாத நிலையினையே உறுதிப்படுத்துகிறது என எண்ணுகிறேன்.

நமது நாட்டிலுள்ள சட்ட முறையின்படி ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள்ளாக மட்டுமே வாதிட கடமைப்பட்டவர். ஆனால், தற்பொழுது இங்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளைப் போல, வழக்குரைஞர்கள் தொலைக்காட்சி முன் தங்களது கட்சிக்காரருக்காக பேட்டி கொடுக்கும் ஒரு விரும்பத்தகாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய மூத்த வழக்குரைஞர்கள் கூட இதை உணர்வதில்லை!

நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு வழக்குரைஞர், தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று கூறினால், அடுத்த கணமே அவர் அந்த கட்சிக்காரருக்காக ஆஜராகும் உரிமையை இழப்பார் என்பதுதான் உண்மை. தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று அவரால் கூற முடியுமென்றால், அவரது கட்சிக்காரர் செய்த செயலைப் பற்றி அறிந்த ஒரு சாட்சியாக மாறுகிறார். அந்த வழக்கில் அவரே ஒரு சாட்சியாக மாறும் பொழுது, அதில் வழக்குரைஞராக நீடிக்கும் அருகதை அவருக்கு கிடையாது. ஆயினும் வழக்குரைஞர்களில் விளம்பர மோகத்தில், இத்தகைய ஒரு போக்கு இங்கு வளர்ந்து வருகிறது.

இவ்வாறாக ஒரு வழக்குரைஞர், கட்சிக்காரரின் நலனுடன் தன்னுடைய நலனினையும் (identifyin with the cause of the client) பொருத்தும் ஒரு நிலையில், இத்தகைய விவாதங்கள் எழுவது இயல்பே!

ஆனால் ஒரு வழக்குரைஞர் என்பவர் சட்ட முறைகளை அறியாத ஒருவருக்காக பின்னணி (அல்லது முன்னணி) குரல் கொடுப்பவர் மட்டுமே.

-oOo-


வழக்குரைஞர்களின் தொழிலை வரைமுறைப்படுத்தும் சட்டம் வழக்குரைஞர்கள் சட்டம் (The Advocate’s Act’1961) இந்த சட்டத்தின் கீழ் வழக்குரைஞர்களுக்கான நடத்தை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன (Standards of Professional Conduct and Etiquette). இந்த விதிகளில் ‘ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரர் செய்த குற்றத்தினைப் பொருத்து தனது சொந்தக் கருத்து எதுவாக இருப்பினும், யாரும் தகுந்த ஆதாரங்கள் இன்றி தண்டிக்கப்படக்கூடாது என்பதை மனதில் வைத்து, தனது கட்சிக்காரரை பாதுகாக்க வேண்டும்’ என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

(15. It shall be the duty of an advocate fearlessly to uphold the interests of his client by all fair and honourable means without regard to any unpleasant consequences to himself or any other. He shall defend a person accused of a crime regardless of his personal opinion as to the guilt of the accused, bearing in mind that his loyalty is to the law which requires that no man should be convicted without adequate evidence)

இனியும், பயங்கரவாதிக்கு வழக்குரைஞர் உதவி கூடாது என்பது, நமது நாடு எவ்விதமான சட்ட முறைகளினால் உலகின் கண்களில் உயர்ந்து நிற்கிறதோ, அதற்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு வாதமே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

-oOo-

இறுதியில், இந்த விடயத்தில் சுப்பிரமணியசுவாமி கூறிய ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. ‘பிடிபட்டவரை வெளிநாட்டு எதிரி (enemy alien) என்று அறிவித்து விடுங்கள். அவ்வாறு அறிவித்து விட்டால் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் (Constitution of India) பிரிவு 22(1)ன்படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தனக்கு பிடித்தமான வழக்குரைஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையினை பிடிபட்டவருக்கு மறுத்து விடலாம்’ என்பதாகும்.

உண்மைதான். ஆயினும் இதன் மூலம் பயங்கரவாதி தனது வழக்குரைஞரை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையினை மறுக்கலாம். ஆனாலும், அரசு அவருக்காக ஒரு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும். வழக்குரைஞரின் உதவியே கூடாது என்று கூற முடியாது!

அது இயற்கை விதிக்கு (Natural Justice) மாறானது!

மதுரை
221208