28.4.08

பொதுநல வழக்குகள், நீதிபதிகள் மற்றும் தமிழ்!


உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளைக் குறித்து, சட்ட நிபுணர்கள் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் பதிவு ஒன்றினைப் பற்றி எனது முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டேன். சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்கள் பொதுநல வழக்குகளைக் குறித்து தெரிவித்த கருத்துகளைக் குறித்து சில பதிவுகளை அங்கு கண்ணுற நேர்ந்தது.

ஒரு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே வழக்கினை தாக்கல் செய்ய முடியும் என்பது பொது விதி.. பொதுநல வழக்கு என்பது, இந்த எல்லையினை உடைத்து வெளிக்கிளம்பியதாகும். அதாவது வழக்கில் நேரிடையாக சம்பந்தப்படாத ஒரு நபர் பொது நலனுக்குக்காக தொடரும் வழக்கே பொதுநல வழக்காகும் (Public Interest Litigation PIL).

பொதுநல வழக்குகளால் நீதிமன்றங்கள் மக்களிடையே அடைந்த புகழ் குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் அவ்வப்போது, இவற்றை Paisa Interested Litigation அல்லது Publicity Interested Litigation என்று நீதிமன்றங்கள் நிராகரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

முக்கியமாக, பல சமயங்களில் இவ்வகையான வழக்கினை நிராகரிக்கையில் பொதுநல வழக்கு என்றால் என்ன என்று நீதிபதிகள் இவற்றை எந்த எல்லையினை மீறி இவை தோன்றியதோ அதே போன்றதொரு எல்லைக்குள் இதனை அடைத்து வரைமுறைப்படுத்த முயல்வதுதான் வேடிக்கை!

பொதுநல வழக்கு என்பதற்கு வரைமுறையினை (definition) ஏற்ப்படுத்த முயலும் நீதிபதிகளைப் பார்த்தால் எனக்கு பதினெட்டாம் நூற்றாண்டில் ‘முடிவில்லாமல் இயங்கும் இயந்திரத்தை’ உருவாக்குகிறேன் என்று அலைந்த பெளதீகவியலாளர்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

பொதுநல வழக்குகளை எந்த வரையறைக்குள்ளும் கொணராமல், அவற்றை அதன் போக்கில் நடை போட விடுவதுதான் சட்டத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யக்கூடியது.

-oOo-

மார்கண்டேய கட்ஜூ நமது உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கையிலும், அரசினை பல்வேறு பேராண்மை மனுக்களில் (writ petition) பாதுகாத்தார். ஆனால் அவரது உத்தரவுகள் செல்லாது என்று மூத்த வழக்குரைஞர் ஒருவர் கூறினார்.

‘அவருக்குதான் வயது பதினாறை தாண்டாதே...மைனர் தீர்ப்பு செல்லுமா?’ என்றாரே பார்க்கலாம்!

-oOo-

தீர்ப்பு என்றதுதான் நினைவுக்கு வருகிறது. இரு நாட்களுக்கு முன்னர் மேல்முறையீட்டு மனு (Appeal) தயாரிப்பதற்காக சார்பு நீதிபதி (Sub Judge) ஒருவரின் தீர்ப்பினை படித்த எனக்கு தீர்ப்பில் ஒரு வரி பிடிபடவில்லை. ‘இறந்தவர் இரும்பு முதலிய உலோகத்தால் செய்யப்பட்ட சாமான்கள் சம்பந்தப்பட்ட கணணியில் பட்டயப் படிப்பு படித்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது’ என்ற வரிதான் அது.

Metallurgy ஆ? தென்காசியில் அதெல்லாம் படிக்கிறார்களா என்று குழம்பி பின்னர் வழக்கு கட்டினை முழுவதும் புரட்டிய பின்னர்தான் அது என்ன படிப்பு என்று புரிந்தது. Diplomo in Computer Hardware!

வாகன விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட பல தீர்ப்புகளில் ‘இயற்பியல் சிகிச்சை’ என்ற வார்த்தை இடம் பெறும். எனக்கு தற்பொழுது பழக்கப்பட்ட அந்த வார்த்தையின் ஆங்கில மொழியாக்கம் ‘Physiotherapy’!

நீதிபதிகளுக்கான பயிற்ச்சிக் களத்தில் தமிழ் மொழியாக்கம் பற்றி, இராமகி ஐயாவை வகுப்பெடுக்க வேண்டுகோள் வைக்கலாம்.

-oOo-

‘என் வருகையை அறிவித்தவர் சுஜாதா’ என்று ஜெயமோகன் கூறியதை ‘இது போன்றவர்களின் வருகையை அறிவிக்கும் அபோஸ்தலராக எப்போது மாறினார் சுஜாதா?’ என்று சாருநிவேதிதா தனது கட்டுரையொன்றில் கிண்டலடித்திருக்கிறார்.

மற்றொருவரின் வருகையினை உலகுக்கு அறிவிக்கும் நபரைக் குறிக்க அப்போஸ்தலரை உதாரணப்படுத்துவது சரியாக வருமா? கிறிஸ்தவ விவிலியத்தை படித்தவர்கள்தான் கூற வேண்டும்.

பிரபு ராஜதுரை
28.04.08

17.4.08

சாய் பாபாவும் இராமரின் மோதிரமும்!

கடந்த மாதம் ஏதோவொரு தொலைக்காட்சியில், புட்டபர்த்தி சத்திய சாய்பாபாவை பற்றிய அவரது நிறுவனம் தயாரித்த ஆவணபடம் ஒன்றினை பார்த்தேன். இறுதியில் பொது நிகழ்ச்சியில், தனது வாயிலிருந்து பெரிய பச்சைக்கல் பதித்த மோதிரமொன்றினை எடுத்துக் காட்டி, ‘திருமணத்தின் பொழுது ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம்’ என்று தெரிவித்தார். கூட்டம் வியப்பிலாழ மோதிரத்தினை அவரது முன்னே வைத்தார்.

ஆவணப்படத்தில் வர்ணனை வழங்கியவர், அது பின்னர் மறைந்துவிடும் என்று கூற தொலைக்காட்சித் திரை முழுவதுமாக மங்க மோதிரம் மறைந்து போனது!

இவ்வாறாக சாய்பாபா நகைகளை கொணர்வது பற்றிய விபரங்கள் அவர்களது வலைத்தளத்திலும் கண்ணுற்றேன்.

-oOo-

ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம் என்றால் அரிய பழம் பொருள் ஆயிற்றே. அரசுக்கு தெரிவிக்காமல் அதனை வைத்திருக்கலாமா என்ற இயல்பான சந்தேகம் எழுந்தது.

1958ம் வருடம் இயற்றப்பட்ட ‘The Ancient Monument and Archeological Sites and Remains Act’ என்ற புராதான சின்னங்களைப் பற்றிய சட்டத்தில் பழம்பொருட்கள் பற்றியும் கூறப்படுகிறது. ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரமென்றால், இந்த சட்டப்பிரிவில் பழம்பொருள் (antiquity) என்று விளக்கப்படும் பதத்திற்குள் வரும். ஆனால் இந்தச் சட்டப்பிரிவுகளின்படி, மத்திய அரசாங்கம் ஏதாவதொரு பழம்பொருளானது ஒரிடத்திலிந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படக்கூடாது எனில் அவ்வாறு அறிவிக்கலாம். அவ்வாறான உத்தரவு மீறப்பட்டாலே அது தவறாகும்.

எனவே சாய் பாபா ராமரின் மோதிரத்தினை வைத்திருப்பதில் ஏதும் தவறில்லை!

-oOo-

பின்னர் 1972ம் ஆண்டில், ‘The Antiquities and Art Treasures Act’ என்று பழம்பொருட்கள் மற்றும் கலைச்செல்வங்களுக்காக தனியே ஒரு சட்டமியற்றப்பட்டது.

இந்த சட்டப்பிரிவுகளின்படி பழம்பொருட்களை ஏற்றுமதி செய்தல், விற்றல் ஆகியவற்றில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. முக்கியமாக பழம்பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை மத்திய அரசிடம் தெரிவித்து அதனைப் பற்றிய விபரங்களை பதிய (register) வேண்டும்.

ஆனால் மத்திய அரசு எந்த எந்த வகையான பழம்பொருட்களை பதிய வேண்டும் என்று அறிவிக்கிறதோ அவற்றை பதிந்தால் போதுமானது.

ராமர் சீதைக்கு அணிவித்தது, தங்க நகை/ ஆபரணம். இதனை பதிவு செய்ய வேண்டுமா என்று பார்த்தால் மத்திய அரசு இதற்காக 1976ம் ஆண்டு GSR 280(E) என்ற அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகள்’ பதிவு செய்யப்பட வேண்டிய பழம்பொருட்கள் பட்டியலில் வருகிறது.

ஆக, சாய்பாபா இந்தச் சட்டத்தின்படி தன்னிடம் உள்ள பழம்பொருளான நகை பற்றிய விபரத்தினை மத்திய அரசிடம் பதியாமல் விடுவது தவறுதான்.

ஆனால், 1980ம் வருடம் மத்திய அரசு S.0. 397(E) என்ற அறிக்கை மூலம் பதிவு செய்ய வேண்டிய பழம்பொருட்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நகைகள் விடப்பட்டுள்ளது. எனவே சாய் பாபா தான் எடுக்கும் நகைகளை பதிய வேண்டியதில்லை.

எனவே 1976ம் ஆண்டிலிருந்து 1980ம் ஆண்டு வரைதான் இந்தப் பிரச்சினை. பின்னர் இல்லை. சாய்பாபா நகைகளை வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை!

-oOo-

இந்த வெட்டி ஆராய்ச்சிக்காக வலையினை மேய்கையில், இதை விட வெட்டி ஆராய்ச்சி செய்து ‘சாய்பாபா’ பக்தர்களுக்கு அளிக்கும் தங்க நகைகள் மூலம் தங்க கட்டுப்பாடு சட்டத்தினை மீறுகிறார் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்த விபரம் கிடைத்தது

-oOo-

ஞாநி பிரச்சினை விடாது போலிருக்கிறது. சுடுவது சுகம் என்ற வலைப்பதிவில் காப்பிரைட் பற்றிக் கவலைப்படாமல் ஞாநியின் கட்டுரையொன்றினை பதிந்திருக்கிறார்கள். அதில் ஞாநி இவ்வாறு ஆரம்பிக்கிறார்

தனிநாடு கோருவது சட்ட விரோதம என்ற சட்டத்தை மத்திய அரசு 1963ல் கொண்டு வந்ததும, அதுவரை தன் திராவிடநாடு கோரி வந்த திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது

நானறிந்த வரையில் அவ்வாறு 1963ம் வருடம் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை!

இந்தியா - சீனா போர் சமயத்தில் நாடு முழுவதும் எழும்பிய தேசபக்தி அலையிலும், இம்மாதிரியான கொள்கைகளை கொண்டிருக்கும் கட்சிகள் தடை செய்யப்படலாம் என்ற மறைமுகமான மிரட்டல்களாலும்தான் திமுக பிரிவினை கோரிக்கையினை கைவிட்டது என்பது எனது அனுமானம்.

அவ்விதம் ஏதும் சட்டம் இயற்றப்பட்டு, யாரேனும் ‘பாபா’ உட்பட (சாய்பாபா இல்லை நம்ம பாபா) தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

-oOo-

இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளை பற்றி சட்டபூர்வமாக அலசும் ஒரு ஆங்கிலப்பதிவில் சுட்டியினை பத்ரி தந்துள்ளார். மணற்கேணியினைப் போல இல்லாமல் மேலும் ஆழமாக சட்டத்தினை ஆழமாக படிக்க விரும்புவர்களுக்கு உதவும்.
http://lawandotherthings.blogspot.com/

மதுரை
18.04.08