26.2.12

வேளாச்சேரியும், ப்ரமக்குடியும்…


முதலில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனில் ஆரம்பிக்கும். பின்னர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலைகாரனை போட்டுத் தள்ளினால் என்ன என்ற எண்ணம் பிறக்கும். அடுத்து கொள்ளைக்காரன்

கோவையில் கடந்த வருடம் நடைபெற்ற ‘மோதல்சாவு பற்றிய எனது கட்டுரையொன்றில்தான் இவ்வாறு நான் குறிப்பிட்டேன். நான் கூறியது போல கடந்த வாரம் கொள்ளைக்காரர்களையும் சுட்டுத்தள்ளியாயிற்று. இனி தனிப்பட்ட நபர்களின் சொத்துப் பிரச்னையில் தலையிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்ட வேண்டியதுதான் பாக்கி.

ஆனாலும், நம்பிக்கையளிக்கும் ஒரு விடயம், காவல்துறை இந்த முறை நடந்து கொண்ட முறை. பத்திரிக்கைச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, தனது ‘ஈகோவுக்கான சவாலாக வங்கிக் கொள்ளையை எடுத்துக் கொண்ட காவல்துறை அவசரகதியில் செயல்பட்டு பல ஓட்டைகளை விட்டுள்ளது. இம்மோதல் சாவுகள் குறித்து நாளை நீதிமன்றத்தில் அல்லது மனித உரிமை ஆணையத்தில் நடக்கப் போகும் விசாரணையில், காவல்துறை பல தர்ம சங்கடமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

முக்கியமாக, தேவையில்லாமல் ஊடகங்களின் வாயிலாக கசியவிடப்படும் ‘வட இந்தியர்கள்தாம் இங்கு பெரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்என்பது போன்ற கருத்துகள் கொள்ளையர்களின் மாநிலமான பீகாரில் தமிழகத்திற்கு எதிரான பொதுக்கருத்தினை உருவாக்கி, மோதல்சாவு குறித்து நடக்கவிருக்கும் விசாரணையில் காவலர்களுக்கு எதிரான நிலையை பீகார் அரசே எடுக்க வேண்டிய சூழல் கூட ஏற்ப்படலாம்.

இத்தாலியர் ஒருவர் இந்தியாவில் சிறைபிடிக்கப்படுகையில், இத்தாலிய அரசு அவருக்கான சட்டப்பாதுகாப்பினை முழுமையாக அளிக்க முன் வருகையில், பீகார் அரசு அப்படிச் செய்யாது என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

மோதல் சாவு நிகழ்வுகளில் காவலர்களின் பாதுகாப்பு அரசுத்தரப்பில் கிடைக்கும் ஆதரவு. ஆனால் தேவையில்லாமல் ‘வட இந்தியர்கள் என்ற ரீதியில் பிரச்னையை கொண்டு செல்வதன் மூலம், ஒரு மாநில அரசு காவலர்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தால், சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு பிரச்னை ஏற்ப்படலாம்.

இதனை எதிர்பார்த்துதான் நேற்று, ‘கொள்ளையர்களுக்கு நக்ஸலைட் தொடர்பு என்ற செய்தி கசியவிடப்பட்டது என்று நினைக்கிறேன்.

சைலேந்திரபாபுவுக்கு சமர்ப்பித்த முதலில் குறிப்பிட்ட எனது பதிவினை திரிபாதிக்கும் சமர்ப்பிக்கிறேன்.

-oOo-

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் கூட இப்படித்தான். முதலில் சம்பந்தப்பட்ட காவலர்கள் ‘கெத்தாகத்தான் இருந்தார்கள். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தற்பொழுது சிபிஐ விசாரணையை துவக்கியுள்ளது. முறையாக புலன் விசாரணை நடத்தப்பட்டால் சிலருக்கு பிரச்னை ஏற்ப்படலாம் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

முக்கியமாக, மரணமடைந்த ஐவரில் இருவரின் மரணம் பிரச்னை ஏற்ப்படுத்தலாம். கலவரத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஐவர் பலியானார்கள் என்பது காவல்துறையின் வாதம். அப்படியானால் இருவர் மரணமடைந்தது கைகள் மற்றும் கால்களின் எலும்புகள் முறியும் வண்ணம் தாக்கப்பட்டதால் என்று அவர்களின் பிணக்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. யார் இவர்களை இவ்வாறு தாக்கினார்கள் என்று ஆராயப்பட்டால், சம்பந்தப்பட்டவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்ப்படலாம்.

-oOo-

நேற்று ஹெராயின் பற்றிய நேஷசனல் ஜியாகிரபி ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையே எனது எட்டு வயது மகள் கேட்ட கேள்வி, ‘டிரக்ஸ் அவங்க பெர்சனல் பிராப்ளம், அதுக்கு எதுக்கு போலீஸ் அவங்களை புடிக்கணும்

தூக்கி வாரிப் போட்டது எனக்கு!

மதுரை
26/02/12

17.2.12

ஏன் ஆ.ராசா, கடவுள்?


‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேசியை எடுக்கும் அவர், ‘ஹலோ’ ‘ஹலோ’ என்று கத்திவிட்டு வெறுப்பாக காலி சட்டியில் அலைபேசியை வீசி எறிவார்’

தற்போதய சூழ்நிலையில் எவ்விதமான சுவராசியமுமில்லாத இத்திரைப்பட காட்சியமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியில் அடிக்கடி காண்பிக்கப்பட்டு நம் மனதில் உறைந்து போன நகைச்சுவைக் காட்சி!

ஆனால், அந்த நகைச்சுவையின் பின்னே ஒளிந்திருக்கும் குரூரமான மனநிலைதான் இன்றும், ‘விலைமதிப்பற்ற அலைக்கற்றையை இலவசமாக சிலர் கொள்ளையடிப்பதா? வாங்கிக் கொள்ளட்டும் அதனை வசதியிருப்பவர்கள்’ என்று தர்ம அடிக்கும்பல் (lynching mob) போல ‘பொது ஏலம்’ ‘பொது ஏலம்’ என்று வலியிறுத்தும் ஊடகங்களை ஆட்டுவிக்கிறது.

சமூகத்தில் நடுநிலையில் இருப்பவர்களான பால் விற்பனையாளர்களையெல்லாம் தாண்டி அலைபேசிகள் இன்று அடிமட்டம், ஏன் எந்தமட்டத்திலும் இல்லாத பிச்சைக்காரர்கள் வரை புழக்கத்திற்கு வந்து விட்டது என்றால், அலைக்கற்றை ஏறக்குறைய இலவசம் என்ற அரசின் கொள்கையன்றி வேறெதுவும் இல்லை.

-oOo-

வளர்ச்சிக்கான முக்கியத் தேவை, தொலைதொடர்பும், போக்குவரத்தும் என்பது நமது நாட்டில் பல ஆண்டுகளாக உணரப்படவே இல்லை. தொலைபேசி என்பது ஆடம்பரமாகவே கருதப்பட்டு, சமூகத்தின் நடுத்தர வர்க்கத்தினருக்கே அவ்வசதி மறுக்கப்பட்டு வந்ததை நாற்பது வயதை கடந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

தொலைபேசி வசதியில்லாத ஒருவன், தான் நிற்கும் சமூக அடுக்கிலிருந்து இருந்து மேல் அடுக்கிற்கு செல்ல முன்பு எடுத்த முயற்சியில் இன்று தன் கையில் அலைபேசியை வைத்திருக்கும் ஒருவன், நூற்றில் ஒரு பங்கு முயன்றால் போதும். அதே வளர்ச்சியை எட்ட முடியும்.

வசதி வாய்ப்பு அற்றவர்களின் வளர்ச்சியில் அலைபேசி எவ்வாறு பங்கெடுக்க முடியும் என்பதை நான் அடிக்கடி நினைவு கூறும் ஒரு உதாரணத்தைக் கொண்டே விளக்க முடியும். மும்பையில் இருக்கையில் பல இளம் வழக்குரைஞர்கள் அலைபேசியை மட்டும் வைத்துக் கொண்டு தங்கள் கட்சிக்காரர்களுடன் அனைத்து தொடர்புகளையும் ஏற்ப்படுத்திக் கொண்டு தங்கள் தொழிலை புரிவதை கவனித்திருக்கிறேன். இவர்கள், வழக்குரைஞர் குடும்பங்களில் பிறந்தவர்கள் இல்லை. அலுவலகம் வாடகைக்கு பிடிக்கும் அளவுக்கு வசதியான குடும்பங்களில் பிறந்தவர்களும் இல்லை. பெரிய சட்ட நிறுவனங்களில் இணைந்து பணியாற்ற இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. வேறு ஒரு வழக்குரைஞரின் அலுவலகத்தில் போதிய வருமானம் இன்றி இளைய வழக்குரைஞராக பணியாற்றுவதற்கு அவர்களது குடும்ப சூழ்நிலை இடம் கொடுக்காது.

சமூகத்தின் கடைக்கோடியில் நிற்கும் இவர்களைப் போன்ற வழக்குரைஞர்களும், வசதிமிக்க எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் மற்ற வழக்குரைஞர்களுக்கு நிகராக தொழில் செய்ய முடிகிறதென்றால், அதற்கு காரணம் ஏறக்குறைய இலவசமாக கிடைக்கும் தொலைத் தொடர்பு வசதிதான்.

இந்த உதாரணம் அனைத்து தொழிலுக்கும் பொருந்தும். ஏன், இன்று எழுத ஆர்வமுள்ள எவருக்கும் தமது கருத்தினை இணையத்தில் பதிந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தால், தங்களது ஆக்கத்தை புத்தகமாகவும் பதிப்பித்து அடுத்த கட்டத்துக்கு போவது எளிதாக உள்ளது. பெரிய எழுத்தாளர்கள் என்று அறியப்படுபவர்களோடும் சரிக்கு சரியாக நின்று வாசகர்கள் விவாதம் செய்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் இயங்கும் பத்திரிக்கை நிறுவனங்களோடு அறிமுகமில்லாத ஒரு எளிய எழுத்தாளருக்கு கிடைக்காத வாய்ப்பு தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள எழுத்தாளன் ஒருவனுக்கும் இன்று கிடைக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொலைத்தொடர்பு வசதியை மக்களிடமே விலை பேசும் கொள்கையை அரசு கை விட்டதினால்தான்.

-oOo-

தொலைபேசி நிறுவனங்களுக்கு விற்க்கப்படும் அலைக்கற்றை இறுதியில் விற்க்கப்படுவது நாட்டின் வளர்ச்சியில் தங்களின் பங்கினைப் பெற நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாதாரண மக்களிடம்தான். அலைபேசி சேவை கட்டணங்களை தீர்மானம் செய்ய ‘டிராய்’க்கு (TRAI) அதிகாரமுண்டு. தற்பொழுது நிலவும் போட்டியின் காரணமாக, விலை குறைவாக இருப்பதை கவனத்தில் கொண்டு விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஆயினும், எந்தக் காலத்திலும் டிராய் சேவையின் அதிகபட்ச விலை அல்லது குறைந்தபட்ச விலை ஆகியவற்றை நிர்ணயிக்கலாம். அவ்வாறு நிர்ணயிப்பது, சேவை நிறுவனம் அந்த சேவைக்காக செய்துள்ள முதலீட்டிற்கான நியாயமான வட்டி விகிதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமென டிராய் நெறிமுறைகள் கூறுகின்றன.

அவ்வாறான நிலையில், அலைக்கற்றையை பெறுவதற்கு ஒரு நிறுவனம் அரசிற்கு செலுத்தும் தொகையையும் அதன் முதலீடாக கணக்கில் எடுக்கப்படும். அலைக்கற்றை இலவசமாக அளிக்கப்படும் பட்சத்தில், சேவை நிறுவனத்தின் செலவினங்கள் மட்டுமே முதலீடாக கணக்கில் எடுக்கப்படும். எனவே, 1.75 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை விற்று இருக்க முடியும் என்றால், அந்த கோடியை இறுதியில் செலுத்தப் போவது, சேவையை பயன்படுத்தும் சாதாரண மக்கள்தான்.

டிராய் இவ்வாறு சேவைக்கட்டணத்தை நிர்ணயிக்கையில், அலைக்கற்றையை குறைந்த விலைக்கு பெற்ற நிறுவனம், தான் லஞ்சமாக செலுத்திய பணத்தை முதலீடாக காண்பிக்க முடியாது. ஏன், உரிமம் பெற்ற நிறுவனம் தனது பங்குகளை வேறு நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்றதையும் செலவுத் தொகையாக காட்ட முடியாது. அனைத்தும் விதிப்படி நடக்கும் என்ற ஒரு சட்டக் கற்பனையில் (legal fiction), அலைக்கற்றைக்கு கொடுக்கப்படும் லஞ்சமானது, சேவை நிறுவனங்களின் லாபத்திலிருந்து கொடுக்கப்படும் பங்குதானேயொழிய வாடிக்கையாளர்களின் பணமல்ல, என்பதுதான் உண்மை!

பேருந்து வழித்தட உரிமங்களையே எடுத்துக் கொள்வோம். மதுரையிலிருந்து தேனி, கம்பம் செல்லும் வழித்தடத்தின் மதிப்பு ஒரு கோடியை எட்டுகிறது. ஆனால், வழித்தடமானது இலவசமாகவே அரசால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படுகிறது. வழித்தட உரிமையை ஏலம் விட்டால், அரசுக்கு பல கோடி கிடைக்கும்தான். ஆனால், இதுதான் பேருந்து கட்டணம் என்று அரசு நிர்ணயிக்க முடியாது.


தற்பொழுது, எனக்குள்ள பயம் அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் யாராவது, தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள பேருந்து வழித்தட உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து விடுவார்களோ என்பதுதான்!

மதுரை
17/02/1

4.2.12

சோனியா தேசத்துரோகியா?


Sonia's govt has not only looted the nation, it has also brought disrepute to a non-controversial Army and its general - the greatest treason” S.Gurumurthy in Twitter

தினம் தினம் இந்தியாவின் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் எழுப்பப்படும் ஒரு சாதாரண சட்டப்பிரச்னை எப்படி சோனியா மீதான தேசத்துரோக குற்றமாக உருப்பெருகிறது என்பதை பார்க்கும் பொழுது, இந்தியாவில் கவலைப்படுவதற்கும், நீதிமன்றங்கள் தங்களது பொன்னான நேரத்தை செலவழிப்பதற்கும் வேறு பிரச்னைகளே இல்லையா, என்று தோன்றுகிறது.

இன்று ஆங்கில பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில், மத்திய அரசு ஏதோ படுகொலை செய்து விட்டு உச்ச நீதிமன்றத்தின் முன் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதைப் போலவும், நீதிபதிகள், ’இத்தோடு நீ தொலைந்தாய் போ’ என்று எச்சரித்துக் கொண்டிருப்பதைப் போலவும் தலைப்புச் செய்திகள்!



இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங், 1951ம் ஆண்டில் பிறந்தவர். ஆனால் தேசிய பாதுகாப்பு கல்லூரி (National Defence Academy) சேர்வதற்கான தனது மனுவில் தனது பிறந்த வருடத்தை 1950 என ‘தவறுதலாக’ அளிக்க அந்த வருடமே அவர் பிறந்த வருடமாக அவரது பணிப்பதிவேட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் பணியில் சேர்வதற்கு முன்னரே, பிறந்த வருடத்தை சரி செய்வதற்காக மனு கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் இது நாள் வரை தவறு சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் வி.கே.சிங் இந்த வருடமே பணிமூப்பு அடைந்து விடுவார்.

சரி செய்யப்பட்டால் அடுத்த வருடம்தான் பணிமூப்பு அடைவார். அவ்வாறு அவருக்கு மேலும் ஒரு ஆண்டு கிடைக்கும் பொழுதில் அவருக்கு பின்னே ‘இதோ அடுத்து நாம்தான் தலைமை தளபதி’ என்று காத்திருக்கும் நபர் முதல் அவருக்கு பின்னே மற்றவர் என சங்கிலித் தொடர் போல நின்று கொண்டிருக்கும் பலரின் எதிர்பார்ப்பில் மண்!

முன்னரே இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டிருந்தால், பலர் இவ்வளவு ஆர்வமுடன் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், கடைசி நேரத்தில் செய்யப்படும் மாற்றம் ராணுவத்தின் மற்ற தளபதிகளிடையே அதிருப்தியை ஏற்ப்படுத்தலாம் என்பதால் அரசு கையை பிசைந்து கொண்டு நிற்கிறது.

இந்தப் பிரச்னை அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருப்பதுதான். உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் இப்படி கடைசி நேரத்தில் பிறந்த தேதியை மாற்றி பணிக்காலத்தை நீட்டித்துக் கொள்வதை தடுத்து பல தீர்ப்புகளைக் கூறியுள்ளது.

வி.கே.சிங் பிரச்னையில் ’அவர் உடனடியாக தேதியை மாற்ற மனு கொடுத்து விட்டார். ஆனால், ராணுவம்தான் அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது’ என்ற வாதம் அவருக்கு சாதகமாக இருந்தாலும், இவ்வளவு நாட்கள் கழித்து நீதிமன்றத்தை அணுகியதால் (Latches) பரிகாரம் ஏதும் அளிக்க இயலாது என்று கூறும் வண்ணமும் பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.

எனவேதான், அரசு தலைமை வழக்குரைஞர் வாஹனாவாட்டி அவர்கள், தற்சமயம் சிங் அவர்களின் பிறந்த தேதியை அவரது பணிப்பதிவேட்டில் மாற்ற இயலாது என்று சட்டக்கருத்தினை அரசுக்கு தெரிவித்துள்ளார்.



வாஹனவாட்டியின் சட்டக்கருத்தினை ஏற்றுக் கொண்ட அரசும் தளபதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இரண்டு வருடம் தலைமை தளபதியாக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை ஒரு பெருமையாக ஏற்றுக் கொண்டு தளபதி கெளரவமாக பதவி மூப்பு அடைந்திருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தை அணுகி விட்டார்.

எது எப்படியிருப்பினும், ராணுவ சேவை விதிகளில் கூறியுள்ளபடியும் ஏற்கனவே பிறந்த தேதி மாற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் கூறியுள்ள பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில் ஒரு சட்டப்பிரச்னையாக தீர்க்க வேண்டிய ஒரு விடயம், ஊடகங்களின் அளவுக்கு மீறிய ஆர்வத்தாலும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் சிலரின் பொறுப்பற்ற பேச்சுகளாலும் அரசியலாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இதே பிஜேபி அரசுதான், இந்தியாவின் அறிவுஜீவி அட்மிரல் என்று போற்றப்பட்ட கப்பற்படை தலைமை தளபதியான (Chief of Naval Staff) விஷ்ணு பகவத்தை அவரது பணிக்காலத்திலேயே பதவி நீக்கம் (Dismiss) செய்தது. சிறீகிருஷ்ணா கமிஷன் முன்னர் கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஆஜரான அவரது மனைவியான நிலோபரை ‘அரை-முஸ்லீம்’ என்று தேவையின்றி குறிப்பிட்டு அரசுக்கு கடிதமெழுதிய தளபதிக்கு பதவி உயர்வும் கொடுத்தது!



ராணுவத்தை அரசியலாக்கியதில் காங்கிரசை விட பிஜேபிக்கு பெரும் பங்கு உண்டு.  

-oOo-

நேற்று கூட நீதிமன்றத்தில் நடைபெற்றது ஒரு சாதாரண விடயம். தளபதியின் மனுவை தள்ளுபடி செய்வதற்கு அரசு தன்னுடைய காரணத்தை கூறியிருக்க வேண்டும். மாறாக, தலைமை அரசு வழக்குரைஞரின் ஆலோசனையின்படி தள்ளுபடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். வழக்குரைஞர் கூறுவது ஆலோசனை. அதன் அடிப்படையில் ஏன் தளபதியின் மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூற வேண்டும். இல்லையென்றால், அரசு வழக்குரைஞர் ஏதோ முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தது போல ஆகி விடும்!

அப்படி ஒரு விரும்பத்தகாத நிலையினை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள், ‘இந்த உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளனர். திரும்பப் பெறவில்லையென்றாலும், அந்த உத்தரவை தள்ளுபடி செய்யும் நீதிபதிகள், அரசை மீண்டும் மனுவை பரிசீலித்து புதிய உத்தரவு பிறப்பிக்க கோர வேண்டும். அப்படியான சூழலில் தளபதி புதிய உத்தரவை எதிர்த்து மீண்டும் ஒரு பேராணை மனுவுடன் நீதிமன்றத்தை அணுக வேண்டும். வீண் கால விரயம்.

எனவேதான் நீதிபதிகள் தங்களது எரிச்சலை காட்டினர். வேறு ஒன்றும் இல்லை!

நீதிமன்றமே, இந்தப் பிரச்னையை மற்றுமொரு சட்டப்பிரச்னையாக தீர்க்கட்டும் என மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வதுதான், நாட்டின் நன்மைக்கான செயலாக இருக்கும்.

மதுரை
04/02/12

3.2.12

அலைக்கற்றை தீர்ப்பும் கொண்டாட்டமும்!


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அதன் முக்கிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் வழக்குரைஞர்களுக்கான அறைகள் அமைந்துள்ளன. அந்த அறைகள் போதுமானதாக இல்லை என்பதால் புதிதாக வழக்குரைஞர் வளாகம் ஒன்று கட்டப்பட்டது. புதிய வளாகத்திலுள்ள அறைகளும் காணாத நிலையில், அனைவரிடமும் மனுக்களைப் பெற்று அதற்கான குழு ஒன்று தனது நடைமுறைப்படி அறைகளை ஒதுக்கியது.

அறைகளைப் பெறுவதற்காக போட்டி நிலவிய அந்தச் சூழலில், அனைவருக்கும் சமவாய்ப்பளிக்கும் வண்ணமும், அறைகளை கட்டிய அரசிற்கு முழு வருமானம் பெரும் முறையுமாக ஒன்று இருக்குமாயின் அது பொது ஏலமாகத்தான் இருக்க முடியும்.

அப்படியான ஒரு பொது ஏலமானது அறைகளை விரும்பும் அனைவருக்கும் சம வாய்ப்பளித்திருக்கும். மற்றும், நகரின் மிகமிக முக்கியமான இடத்தில் அரசிடம் உள்ள மிகச் சொற்பமான கட்டிடத்திற்கு, அதன் மதிப்பிற்கு ஈடான வருமானத்தை அரசிற்கு பெற்று தந்திருக்கும்.

ஆனாலும், புதிதாக கட்டிய வழக்குரைஞர் அறைகள் பொது ஏலத்தில் விடப்படவில்லை.

ஏனெனில், ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் முக்கிய கட்டிடத்தில் அமைந்துள்ள அறைகள், சந்தை மதிப்பிலான வாடகை இன்றி, உயர்நீதிமன்ற குழு நிர்ணயித்த வாடகையினை கொடுத்து வரும் சூழலில், புதிய அறைகளை பெரும் வழக்குரைஞர்களிடம் இருந்து சந்தை மதிப்பிலான வாடகை பெறுவது, அவர்களுக்கிடையேயான சமநிலையை (Level Playing Field) பாதிக்கும். அதாவது ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரரிடம் இருந்து பெறும் கட்டணத்தில், அந்த வழக்கிற்கான அலுவலக செலவும் அடங்கும். ஒரே வகையிலான சேவைக்கு, தனது கூடுதலான அலுவலக செலவினால் புதிய அறையில் இருக்கும் வழக்குரைஞர் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க நேரிடும், அல்லது தனது நிகர கட்டணத்தை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் வழக்குரைஞர்களிடம் என்ன வாடகை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதையேதான் புதிய அறைகளுக்கும் நிர்ணயிப்பது நியாயமான செயலாக இருக்க முடியும்.

வழக்குரைஞர்கள் தங்களது தொழிலை கைக்கொள்ளுவதற்கு, அரசிடம் அரிதாக உள்ள முக்கிய இடம், குறைந்த வாடகைக்கு கொடுக்கப்பட முடியுமா? பொது ஏலத்தில் அறைகள் கொடுக்கப்படாதலால், எவ்வளவு நட்டம்?

அது நட்டம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

தனது குடிமக்களுக்கு நீதியை வழங்க வேண்டியது அரசின் முக்கிய கடமை. நீதியைப் பெறுவதற்காக பல குடிமக்களுக்கு வழக்குரைஞரின் உதவி தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் கட்டணம் பெறும் வழக்குரைஞர்கள் முதல் ஐம்பது ரூபாய் வாங்கும் வழக்குரைஞர்கள் வரை இருக்கிறார்கள். ஆனால், அந்த ஐம்பது ரூபாயைக் கூட கொடுக்க முடியாத மக்களும் நமது நாட்டில் உண்டு. அவர்களுக்கும், நீதியை அளிப்பதற்காகவே, அரசு இலவச சட்ட உதவியை அளிக்கிறது. அதாவது, வழக்குரைஞர் கட்டணத்தை தானே செலுத்த வேண்டிய கட்டாயம், மக்கள் நலம் பேணும் அரசிற்கு (Welfare State) உண்டு.

இந்தச் சூழ்நிலையில் சந்தை மதிப்பில் வழக்குரைஞர்கள் அறைகள் ஒதுக்கப்பட்டால், நூறு ரூபாய் கட்டணம் வாங்கும் வழக்குரைஞர் நூற்றி ஐம்பது ரூபாயும், ஐம்பது ரூபாய் வாங்கிய வழக்குரைஞர் நூறு ரூபாயும் வாங்க நேரிடும். அதுவரை ஐம்பது முதல் தொண்ணூற்று ஒன்பது ரூபாய் வரை கட்டணம் செலுத்த வசதி படைத்த குடிமக்களும் இலவச சட்ட உதவி மையத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும். இறுதியில் சந்தை மதிப்பில் பெற்ற வாடகையினை அரசு இலவச சட்ட உதவி மைய வழக்குரைஞர் கட்டணமாக திருப்பிச் செலுத்தும்!

-oOo-

சென்னை மாநகராட்சி அதற்குச் சொந்தமான இடங்களில், கட்டிடங்களை கட்டி கடைகளாக வாடகைக்கு விட்டுள்ளது. அந்தக் கடைகளுக்கும் போட்டி நிலவும் சூழலில், பொது ஏலம் நடத்தி சந்தை மதிப்பினை வாடகையாக பெறுகிறது. ஆனால், அதற்கான காரணம் இருக்கிறது.

வீட்டு வசதி வாரியம், தான் கட்டும் வீடுகளையும், மனைகளையும் அதிகளவில் மனுக்கள் இருக்கும் சூழலில் லாட்டரி (Lot) மூலம் ஒதுக்குகிறது. அதற்கான காரணம் தனியே இருக்கிறது.

அதைப் போல, முதலில் வருபவருக்கு முன்னுரிமை ( First come First serve) என்ற முறையும் நமது நாட்டில் சுதந்திரம் கிடைத்த நாள் முதலே ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு முறைதான். உதாரணமாக சிறுகனிம வளங்களை (Minor Minerals) எடுப்பது சம்பந்தமான உரிமங்கள் இந்த முறையில் கொடுக்கப்படுவதுண்டு. அப்படியான முறையில் உரிமங்களை அளிப்பதற்கும் விசேட காரணங்கள் உண்டு. அந்த முறையும் மற்ற முறைகளைப் போலவே, சமத்துவ உரிமையை (Right to equality) பாதிப்பதாக நீதிமன்றங்கள் கருதியதில்லை.

-oOo-

எந்த எந்த உரிமம் எந்த எந்த முறையில் கொடுக்கப்படலாம் என்பது அரசின் கொள்கை முடிவு. அரசு நிர்வாகம் மக்களுக்கு நேரிடையாக பதில் சொல்ல கடமைப்பட்டது. பல்வேறு காரண காரியங்களை ஆராய்ந்த பின்னரே அரசு ஒரு கொள்கை முடிவினை தீர்மானிக்கிறது. எனவேதான், நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவில் தலையிடுவதில்லை.

கண்மாய் பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளவாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குடிசை கட்டி வாழ்பவர்களை, அகற்றி நீர்வளத்தினைப் பெருக்குங்கள் என்று எளிதில் நீதிமன்றங்கள் நிர்வாகத்திற்கு கட்டளையிடலாம். ஆனால், அரசால் அப்படி கண்ணை மூடிக்கொண்டு தனது குடி மக்களை தூக்கி எறிந்து விட முடியாது. பல்வேறு காரணிகளையும், விளைவுகளையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். எனவேதான் நீதிமன்றங்கள் அரசு நிர்வாகத்தில் எளிதில் தலையிடுவதில்லை.

இதன் காரணமாகவே, இனி அலைக்கற்றை (Spectrum) உரிமத்தினை பொதுஏலம் மூலமாகவே அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், அதற்கெனவே அமைக்கப்பட்ட டிராய் (TRAI) க்கு கட்டளையிட்டுள்ளது எவ்வளவு தூரம் சரியான ஒரு தீர்ப்பாக இருக்க முடியும் என்பதில் எனக்கு ஐயமுண்டு!

ஏனெனில், 2003ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு புதிய உரிமங்களை ‘முதலில் வருபவருக்கு முதலில் உரிமம்’ என்ற அடிப்படையில் அளிக்க வேண்டும் என்று தீர்மானித்ததற்கு பிரத்யேக காரணங்கள் உண்டு. முக்கியமாக அரசு, அலைக்கற்றை உரிமத்தினை, தகவல் தொடர்பு மூலம் வளர்ச்சிக்கான ஒரு காரணியாகத்தான் பார்த்ததேயொழிய அரசின் வருவாயை பெருக்கும் ஒரு வளமாக கருதவில்லை.

’How would you empower citizens? There could be all sorts of technologies – one is cellphonesஇக்பால் காதிர் என்ற வங்காள தேச தொலைதொடர்பு தொழில்முனைவோர் கூறிய மேற்க்கண்ட கருத்தினை இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தனது தலையங்க பக்கத்தில் பிரசுரித்துள்ளதற்கு காரணமுண்டு!

இதனை உணர்ந்து கொண்டதாலேயே, டிராய் 2007ம் ஆண்டிலும், சிறு நகர, கிராமப்புறங்களிலும் அலைபேசிச் சேவை பரவலாக்கப்பட வேண்டும் என்றால் 2ஜி அலைக்கற்றை உரிமம் மட்டுமாவது ஏற்கனவே நிலுவையில் இருந்து வரும் முறையிலேயே அளிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுத்தது. ஏற்கனவே அதே முறையில் உரிமம் பெற்று அலைபேசி சேவை அளித்து வரும் நிறுவனங்களோடு புதிதாக உரிமம் பெறும் நிறுவனங்கள் போட்டியிட வேண்டுமாயின், புதிய உரிமங்களுக்குமான கட்டணமும் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகவே இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தது. டிராயின் இந்த முடிவு தவறான நோக்கத்துடன்  (Ulterior Motives) எடுக்கப்பட்டது என்றோ அல்லது கெட்ட எண்ணத்துடன் (Malafide) எடுக்கப்பட்டது என்றோ உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறவில்லை. அப்படியான ஒரு வாதமும் வைக்கப்பட்டதாக தெரியவில்லை.


2003ம் ஆண்டு தொடங்கி பொது ஏலம் மூலம் கிடைக்கும் அபரிதமான பணத்தை துறந்து உரிமங்கள் அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், 2ஜி உரிமங்கள் மட்டும் பொது ஏலம் மூலம் அளிக்கப்படாதலால் அரசுக்கு 1.7லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்றால், அந்தக் கூற்று பிழையானதாகும் (Fallacious). எனினும் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையிலும் தீர்ப்பிலும் தணிக்கையாளரின் (CAG) அறிக்கைக்குள் செல்லவில்லை!

வேடிக்கை என்னவென்றால், 2001ம் ஆண்டில் மத்திய அரசு பொது ஏலம் தவிர்த்து குறைந்த தொகைக்கு அலைக்கற்றை உரிமத்தை வாரி வழங்கி அரசுக்கு 11,000/- கோடி நட்டம் ஏற்ப்படுத்தி விட்டதாக நமது உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு உட்பட நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசின் வாதம் பொது மக்களின் நலனை முன்னிட்டு தொலை தொடர்பு வளர்ச்சிக்காக பொது ஏலம் கூடாது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றங்கள் அதில் தலையிட முடியாது என்பதாகும். இவ்வாறு வாதிட்டது காங்கிரஸ் அரசு அல்ல. மாறாக தற்பொழுது 1.7லட்சம் இழப்பு என்று உரக்கக் கத்தும் பிஜேபி அரசு!

பிஜேபி அரசுக்கு எதிராக 2001ம் ஆண்டில் 11ஆயிரம் கோடி என்று நமது உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்ட வாதம், மக்கள் நலனுக்கான கொள்கை முடிவிற்கு எதிராக பொது நலவழக்கா? என்று நிராகரிக்கப்பட்டதை யார் இன்று நினைவில் கொள்ளப் போகிறார்கள்.

எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக இரு அரசுகளாலும் பொதுமக்களின் நலனை முன்னிட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையினை உச்ச நீதிமன்றம், கூடாது என்பதோடு ஏற்கனவே அளிக்கப்பட்ட உரிமங்களையும் யார் தவறு செய்தவர்கள் யார் உரிமையோடு பெற்றவர்கள் என்று முழுவதும் ஆராயாமல் மொத்தமாக ரத்து செய்தது, ஒரு சரியான தீர்ப்பாக இருக்க முடியாது என்பது என் பணிவான கருத்து. இனி நிகழப் போகும் குழப்பங்களாலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படப் போகின்ற மறுஆய்வு (Review) மனுக்களாலும் எனது கருத்து நிலைபெறும் (vindicate) என்று நம்புகிறேன்.

-oOo-

1.7 லட்சம் கோடி!

இந்த தொகைதான் ராஜாவுக்கு எதிராக ஊடகங்களையும், மக்களையும் அதன் விளைவாக நீதிமன்றங்களையும் கொதித்து எழ வைத்தது. மற்றபடி இந்தத் தொகையினை மறந்துவிட்டு பார்த்தால், அலைக்கற்றை ஊழல் என்பது இந்தியா எங்கும் வியாபித்திருக்கும் ஊழல்களில் மற்றுமொரு ஊழல் என்ற வகையிலேயே இருந்திருக்கும்.



ராஜா எவ்வாறு சில நிறுவனங்களுக்கு சார்பாகவும், சில நிறுவனங்களை போட்டியிலிருந்து விலக்கும் வண்ணமும் முடிவுகளை எடுத்தார் என்பதை உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான காரணங்களை தனது தீர்ப்பில் கூறியுள்ளது. தீர்ப்பின் முடிவுகள் ராஜா மீது நடைபெறும் குற்ற வழக்கை பாதிக்காது என்று நீதிபதிகள் கூறியிருப்பினும், அமர்வு நீதிமன்றத்தை பொறுத்தவரை ராஜாவின் விதி மூடி முத்திரையிடப்பட்டது போலவே தோன்றுகிறது. ராஜா தன் மீதான குற்ற வழக்கிலிருந்து விடுதலையடைவது, இனி இறுதியில் அவர் தனது மேல்முறையீட்டிற்காக அணுகப் போகிற உச்ச நீதிமன்றத்தின் கைகளில்தான் உள்ளது.

ஆயினும், சில நிறுவனங்களுக்கு சார்பாக ராஜா செயல்பட்டார் என்பது தீர்ப்பிலிருந்து உறுதியாகத் தெரிந்தாலும், ஏற்கனவே கூறிய காரணங்களால், அவர் நேர்மையாக நடந்து கொண்டிருந்தாலும் அரசுக்கு இதே வருவாய்தான் கிடைத்திருக்கும்.

ஏனெனில் தொடர்ந்த அரசின் கொள்கைப்படியும், டிராய் நெறிமுறைகள்படியும், யார் உரிமம் பெற்றிருந்தாலும் தற்பொழுது கிடைத்திருக்கும் உரிமத் தொகைதான் வசூலிக்கப்பட்டிருக்கும்.

எனவே, ராஜா நேர்மையாக நடந்து கொண்டிருந்தால், பொது ஏலம் தவிர்த்த உரிமம் வழங்குதல் முறையால் அரசுக்கு இழப்பு என்பது வெறும் கோஷமாகவே முடிந்து போயிருக்கும்.

ராஜாவின் தவறுகளுக்காக, அரசு சில காரணங்களுக்காக கடந்த பத்தாண்டுகளாக கைக்கொண்டு வரும் உரிமம் முறையை மாற்றக் கூறுவது, அலைக்கற்றையை ஒரு வருவாய் ஈட்டும் வளமாக பார்ப்பதும் சரியான ஒரு செயலாக இருக்கப் போவதில்லை. எதிர்காலத்தின் இதன் விளைவுகளை நாம் உணரலாம்.

மற்றபடி பொது ஏலத்திலும், உச்ச நீதிமன்றம் பட்டியலிட்ட ராஜாவின் மீறுதல்கள் மிகச் சாதாரணம். போபார்ஸ் ஊழலோ, ஹெச்டிடபிள்யூ நீர்மூழ்கி ஊழலோ, காமன்வெல்த் போட்டி ஊழலோ அல்லது இந்தியாவெங்கும் நித்தம் நித்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல்களோ பொது ஏலமோ இல்லை ஒப்பந்தப் புள்ளி முறையிலான தேர்ந்தெடுப்பில்தான் நடைபெறுகின்றன.

தமிழகத்தினைப் பொறுத்தவரை ஆளும்கட்சியின் ஆதரவு பெறாத எவரும், டாஸ்மாக் மதுக்கடை ஏலத்திலோ அல்லது பொதுப்பணித்துறை ஏலத்திலோ வெற்றி பெறவே முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவற்றைத் தடுக்க ஏதும் இயலாத ஊடகங்கள், பொது ஏலமே தீர்வு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினைக் கொண்டாடுவது குரூர நகைச்சுவை!

நீதித்துறையில் நேர்மையின் உருவமாக விளங்கிய ஏ.கே.கங்கூலி நேற்றோடு ஓய்வு பெற்று விட்டார். உச்ச நீதிமன்றத்தை விட்டு தன் வீட்டிற்கு செல்லும் வழியின், முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் சதீஷ் சர்மாவிற்கு எதிராக 1996ல் முன்னாள் நீதிபதி குல்தீப் சிங் கூறிய தீர்ப்பை கொண்டாடிய ஊடகங்களும் நினைவுக்கு வந்திருக்கும்.

ஆனால் 1999ல் அந்த தீர்ப்பிற்கு என்ன நேர்ந்தது என்பதும் நினைவுக்கு வந்த கங்கூலி ஒரு கணம் மனதிற்குள் புன்னகைத்திருப்பார்.

Anyway, well done Sir, your parting judgment is like the other Ganguly reaching his century with a sixer!

மதுரை
03/02/12