Showing posts with label Bhopal. Show all posts
Showing posts with label Bhopal. Show all posts

18.6.10

போபால், நீங்களே தீர்ப்பளியுங்கள்...


போபால் வழக்கில், நீதிபதி முன்பு இருந்த வழக்கு ‘கவனக்குறைவான ஒரு செயலால், மரணத்தை ஏற்ப்படுத்துதல்’. அதற்கான அதிகபட்ச தண்டனை இரண்டு வருடங்கள். அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அதிக தண்டனை அளிக்க இயலாது. எனவே வேறு என்ன வகையான தீர்ப்பினை நீதிபதியிடம் இருந்து ஊடகங்கள் எதிர்பார்த்தன என்பது புரியவில்லை.

குற்றவாளிகள் புரிந்த குற்றத்தினை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304Aல் காணலாம்


மேற்கண்ட சட்ட பிரிவு இந்திய தண்டனை சட்டம் 1860ம் ஆண்டு இயற்றப்பட்ட பொழுது இல்லை. பத்து ஆண்டுகள் கழித்து 1870ம் ஆண்டு சட்ட திருத்தத்தின் மூலமாக கொண்டு வரப்பட்டது. மோட்டார் கார் மூலம், முதல் மரணம் ஏற்ப்பட்ட ஆண்டு 1869. எப்படியோ, மோட்டார் கார்களின் வரத்து இந்தப் பிரிவிற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

-oOo-


முதலில் குற்றவாளிகள், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304(II) கீழ் 10 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்படக்கூடிய கொலை இல்லை என்றாலும் தண்டனைக்கு ஏதுவான மரணத்தை விளைவித்தல் (culpable homicide not amounting to murder) என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். பிரிவு 304(II) கூறுவதாவது:


இங்கு மரணத்தை ஏற்ப்படுத்தும் நோக்கம் தேவையில்லை. ஆனால் ஒருவர் செய்யும் செயலானது மரணத்தை ஏற்ப்படுத்தலாம் என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அது மட்டும் போதாது. அந்த செயல் ஒரு தண்டிக்கப்படக்கூடிய மரணம் விளைவித்தலாக இருத்தல் வேண்டும்.

அவ்வாறு குற்றம் சாட்டியது தவறு என்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தினை அணுகினர். உச்ச நீதிமன்றம் அரசு தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், பிரிவு 304(II)ல் விளக்கப்படும் குற்றத்திற்கான கூறுகள் அவற்றில் இல்லை. ஆனால் பிரிவு 304Aன் கூறுகள் உள்ளன என்று கூறி மற்ற குற்றப் பிரிவுகளை நீக்க ஆணையிட்டது.

எனவே குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள்தான் தண்டனை என்பது 1996ம் ஆண்டே உச்ச நீதிமன்றத்தாலேயே தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயம்.

-oOo-

தீர்ப்பிலிருந்து, நஷ்டத்தில் இயங்கி வந்த தொழிற்சாலையினை மூடி இந்தோனேசியாவிற்கு எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டதால், தகுந்த பராமரிப்பு இல்லாமல் இறந்து கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையில் இவ்வளவு அபாயகரமான நச்சுப் பொருட்களை கையாண்டிருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.

விபத்து நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் போபால் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கை அதன் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நடக்கப் போகும் விபத்தினை துல்லியமாக எச்சரித்துள்ளதை படிக்கையில் நமது தண்டுவடம் சிலிர்க்கிறது...

(a) It appears that it would be possible to contaminate the tank with material from the vent gas scrubber. Although the arrangement of lines connecting the tank and vent scrubber appears to be adequate to prevent back flow of liquid, it appears possible to back reactive quantities of water vapors and other gases from the scrubber to the feed tank when it is depressurized.

(b) Location of the tank inside a room and lack of water spray protection facilities create a situation where a toxic and flammable vapor cloud could be formed and confined without provision for knockdown or dispersal. There is mechanical ventilation in the room, but the same circumstances that could result in a leak or overfill (power failure, for instance) could result in the ventilation being inoperative. Also, it appears that a sizeable spill would not be readily dispersed by the system.
(c) There is some question about the adequacy of the tank relief valve to relive a runaway reaction or fire exposure, particularly since the tank has been enlarged.
(d) Manual control of filling of the tank, with no instrumentation backup, creates a possibility of accidental overfilling

ஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு பாதுகாப்பினை மேம்படுத்த செலவு செய்ய எந்த நிர்வாகம் முன் வரும். அதுவும் இந்தியாவில்! அதுவும் 25 வருடங்களுக்கு முன்னர்!!

உச்ச நீதிமன்றம், விபத்து நடந்த அன்று நிகழ்ந்தவைகளை மட்டுமே, குற்றச்செயல்களாக கருதி “அன்று அந்த தொழிற்சாலையினை இயக்கிய பொழுது அதனை இயக்கியவர்களுக்கு அதனை இயக்குவதால் மனிதர்கள் உயிரிழக்க நேரிடலாம் என்ற எண்ணம் (knowledge) இருந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறி பிரிவு 304(II)ஐ நீக்கியது.

சட்ட முறைகளை அறிந்தவர்கள் உச்ச நீதிமன்றம் கூறியது ஒரேடியாக தவறு என்று கூற மாட்டார்கள். ஆனாலும், மக்களின் மனநிலையை கருதி, உச்சநீதிமன்றம் ‘குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த கேள்விக்கான விடையினை வழக்கினை விசாரிக்கும் நடுவரே (Judicial Magistrate) தீர்மானிக்கட்டும்’ என்று கூறியிருக்கலாம். சாட்சிகளை பின்னர் விசாரிக்கையில் மேலும் பல உண்மைகள் வெளி வந்திருக்கலாம்.

ஏனெனில், மிக அரிதான வழக்குகளில் மட்டுமே இவ்வாறு குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுகளை (charges) நீக்க உச்ச நீதிமன்றம் முன் வரும்.

பிரிவு 304(II)ஐ பொறுத்து தற்பொழுது செய்வதற்கு ஏதுமில்லை. இரண்டு வருடங்கள் அளிக்கப்பட்ட தண்டனையே இறுதியில் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே!

இவ்வளவு பயங்கரமான நச்சுப் பொருட்கள் இருக்கையில், எவ்வித பராமரிப்பும் இல்லாமல் செத்துக் கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையினை, பாதுகாப்பு தொழிற்நுட்பத்தில் குறைபாடுகளுடன் இயக்குவதால் நச்சுப் பொருள் வெளியேறி மரணம் ஏற்ப்படலாம் என்ற அறிவு (knowledge) அதனை இயக்குபவர்களுக்கு இருந்திருக்குமா? என்ற கேள்வியினை எதிர்காலத்தில், இவ்விதமான பயங்கரங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் மக்கள் மன்றத்தில் ஆராயப்படலாம்.

Prabhu Rajadurai
Madurai
19/06/10









  

15.6.10

போபாலும் ஆங்கில காந்திமதிகளும்!

கடந்த சில நாட்களாக, போபால் விஷவாயு விபத்தின் குற்ற வழக்கு தீர்ப்பு குறித்து நமது ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை எரிச்சல் ஏற்ப்படுத்துவதாய் உள்ளது.

வழக்கின் தன்மை பற்றியோ, குற்றவியல் நடைமுறை பற்றியோ சிறிதும் சிந்திக்காமல் ‘நீதி செத்து விட்டதுஎன்றும் வாரன் ஆண்டர்சன் தப்பித்து விட்டார் என்றும் கூக்குரலிடுவதில் ஏறக்குறைய நமது தமிழ்ப்படங்களில் காந்திமதி மண்ணை வாரி தூற்றி சாபம் விடும் இயலாமைதான் தெரிகிறது.

-oOo-

தற்பொழுது தண்டனை பெற்றவர்களின் மீதான குற்றச்சாட்டு கவனக்குறைவான செயலால் மரணம் ஏற்ப்படுத்தியது. அந்த குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகள்தான். அதையும் கொடுத்தாயிற்று. பின்னர் எங்கிருந்து நீதி செத்தது என்பது தெரியவில்லை.

வேறு கடுமையான குற்றச்சாட்டு ஏற்கனவே நீக்கப்பட்டு கவனக்குறைவினால் மரணம் ஏற்ப்படுத்துதல் என்ற வகையிலே மட்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது கடந்த பல ஆண்டுகளாக அனைவருக்கும் தெரிந்த நிலையில், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஊடகங்கள் தற்பொழுது ஏன் இப்படி அலறுகின்றன என்பது புரியவில்லை. (எனது போபால் பற்றிய கட்டுரையில் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்)

ஆண்டர்சன், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர், அவரைப் தனியே பிரித்து மற்றவர்களைப் பற்றி மட்டும் வழக்கு நடைபெற்ற சூழலில், தீர்ப்பில் ஆண்டர்சனைப பற்றி குறிப்பிடவில்லை என்று தனியே ஒரு புலம்பல்!


காங்கிரஸ் என்ன செய்தது, பிஜேபி என்ன செய்தது என்று தற்பொழுது கேட்கும் ஊடகங்கள், இது வரை தாங்கள் என்ன செய்தோம் என்பதையும் கூறினால் நல்லது. இதில் வேடிக்கை என்னவென்றால், டைம்ஸ் நவ் ‘இதோ நாங்கள் ஆண்டர்சனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்டோம்என்று ஒரு தம்பட்டம். விட்டால், காப்டன் பிரபாகரன் போல அவரை சங்கிலியில் கட்டி அட்லாண்டிக் வழியே கூட்டி வந்து விடுவார்கள் போல.

ஆண்டர்சன் எங்கு வசிக்கிறார் என்பது, எந்தக் காலத்திலும் யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. பல வருடங்களுக்கு முன்னரே அவர் வசிக்கும் வீட்டின் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியானது.

ஆண்டர்சன் அரச மரியாதையுடன் இந்தியாவை விட்டு சென்றது அன்றே தொலைக்காட்சியாலும் பத்திரிக்கைகளாலும் ஆவணமாக்கப்பட்ட ஒரு விடயம். இவ்வளவு வருடங்கள், அதைப் பற்றி எதுவும் கவலைப்படாத இந்த ஊடகங்கள், தற்பொழுது அர்ஜுன் சிங் தாத்தாவைப் போட்டு இப்படி காய்ச்சுவது என்ன நியாயம் என்று புரியவில்லை.

தர்ம அடி என்பது இதுதான். யார் வேண்டுமானாலும் ஒரு தடியை எடுத்து அர்ஜுன் சிங்கை ஒரு போடு போட்டு விட்டுப் போகலாம் போல. ஆண்டர்சனை இங்கிருந்து அனுப்ப வேண்டுமென்றால், ஒரே ஒரு மனிதர்தான் அதற்கு உத்தரவிட்டு இருக்க முடியும். அவரை குறிப்பிட முடியாது. அர்ஜுன் சிங் என்றால் பிரச்னை இல்லை!

-oOo-

‘குற்ற மனமில்லாச் செயல் குற்றமல்லஎன்பது குற்றவியலின் முக்கியமான ஒரு விதி. எந்த ஒரு தவறான செயலையும் தண்டனைக்கேதுவான குற்றச்செயலாக கருதுவதற்கு ‘mens reaஎனப்படும் குற்றமனம் தேவை.

கவனக்குறைவான் ஒரு செயலால் மற்றொரு நபருக்கு ம்ரணத்தையோ அல்லது காயத்தையோ விளைவித்தல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம். கவனக்குறைவான ஒரு செயலில், மேற்கண்ட குற்ற மனம் இல்லை என்பது போலத் தோன்றினாலும் அந்த வகையில் கவனக்குறைவாக இருத்தலுக்கு ஒரு குற்ற மனம் தேவை.


எனினும், இந்த வகை குற்றத்திற்காக சட்டம் அளிக்கும் தண்டனை மிகக் குறைவு. அதிக பட்சம் இரண்டு வருடங்கள்!

இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட பொழுது பெரிய வாகனங்களும் இல்லை. நச்சு தொழிற்சாலைகளும் இல்லை. எனவே கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியோ அல்லது நச்சுப்புகை தொழிற்சாலை நடத்தியோ ஒருவரை கொன்றாலும் சரி, ஆயிரம் பேரை கொன்றாலும் சரி அதே சிறிய தண்டனைதான்.

போபால் விபத்திலும் சரி, தொடர்ச்சியாக காரை ஏற்றி பல பேரை கொன்று போட்ட சல்மான்கான், நந்தா வழக்குகளிலும் இந்த தண்டனை போதாது என்று கொலை இல்லை என்றாலும் தண்டிக்கத்தகுந்த வகையில் மரணத்தை ஏற்ப்படுத்துதல் ( Culpable homicide not amounting to murder) என்ற் அதிகபட்சம் பத்து வருடம் தண்டனை தரத்தக்க ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எதிர்ப்பார்த்தது போல, போபால் வழக்கிலும், அந்த குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது.

எனவே, போபால் தீர்ப்பில் அதிர்ச்சி தெரிவிக்க புதிதாக என்ன இருக்கிறது என்று புரியவில்லை!

-oOo-

குற்ற வழக்கை விடுங்கள். உண்மையில் நாம் கோட்டை விட்டது நஷ்ட ஈடு வழ்க்கில்.(எப்படி என்ற விபரம் எனது போபால் கட்டுரையில் உள்ளது) எனெனில் தொழிலதிபர்கள் தூக்கு மேடைக்கு கூட போவார்கள். ஆனால் தாங்கள் திவாலாவதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கும் தவறிழைத்தவர்களின் இரத்தத்தினை விட, வளமான எதிர்காலத்திற்கான தகுந்த பாதுகாப்பே சிறந்த நிவாரணமாக இருக்க இயலும்.

தொழில் நடத்த வேண்டும் என்றால், அந்த தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத ஏழைகள் அதனால் பாதிக்கப்பட்டால் அதற்கான முழு நஷ்ட ஈடும் அளிக்க தொழில் நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும்.


அந்த வகையில், இப்படி உணர்ச்சிகரமாக பிரச்னையை கிளப்பியதற்கு வேண்டுமானால் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களிற்கு நமது நன்றியினை தெரிவிக்கலாம்!

மதுரை
16/06/10

3.12.09

நள்ளிரவு பூதங்களும் ஒர் அமெரிக்க பின் லேடனும்...



இன்னும் இரு நாட்களில் துயரமான ஒரு சம்பவத்தில் முதல் வருட அஞ்சலி. ஏற்கனவே உலகின் கவனமும் முழுவதையும் நியூயார்க்கின் பக்கம் திருப்புவதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டது. யாரும் எதனையும் மறந்துவிடக்கூடாது என்னும் அமெரிக்காவின் ஆதங்கம் புரிகிறது. நாமும் மறக்கவில்லை. உயிரையும், உறவினர்களையும் இழந்த அனைவரும் உங்களையும் என்னையும் போன்ற வானரர்கள்தான். அவர்கள் அனைவருக்கும் நமது அஞ்சலி.

முஷாரஃபோடு போட்டி போட்டுக் கொண்டு அமெரிக்கா கிளம்பி விட்ட வாஜ்பேயி இன்றய செய்தித்தாளின் ஒரு மூலையில் சின்னதாக வந்திருக்கும் ஒரு பெட்டிச் செய்தியினை பார்த்திருக்க வாய்ப்பில்லை. பார்த்திருந்தாலும், பல வருடங்களுக்கு முன்னர் ஒரு இந்திய நகரத்து மக்கள் சந்தித்த துயரம், அமெரிக்காவின் துயரத்திற்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை என்றும் ஆனால் சம்பந்தப்பட்ட பின் லேடன்கள் இன்னமும் வெளியே என்றும் ஒரு விநாடி சிந்தித்திருப்பாரா என்பதும் சந்தேகம்தான்.

அந்தச் செய்தியின் தலைப்பு 'Warren Anderson's Extradition: Government will make effort'. யார் இந்த வாரன் ஆண்டர்சன்? என்று உங்களில் யாரவது கேட்டால், உங்களை தவறு சொல்ல மாட்டேன். அது மூன்றாம் உலக நாடுகளின் தலைவிதி. ஒரு பதினெட்டு வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது.

நான் சிறுவனாக இருக்கையில் கேட்ட கதைகளில் கொள்ளி வாய்ப் பிசாசுகள் நடு இரவில் முழித்துக் கொண்டு உலா வரும் என்று கூறப்படுவதுண்டு. அப்படி ஒரு நாள் நிஜமாகவே நடந்தது, போபாலில். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து நாலாம் வருடம், டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி, சரியாக நள்ளிரவு தாண்டி அரை மணி நேரத்தில் 'மெத்தில் ஐசோசயனைடு' என்ற ரூபத்தில் பிசாசுகளும், பூதங்களும், பேய்களும், யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவன தொழிற்சாலையில் இருந்த தொட்டியில் இருந்து கிளம்பி நகரம் முழுவதும் கோர தாண்டவம் ஆடியது.

காலை விடிவதற்குள் ஏற்கனவே 2500 உயிர்கள், பெரும்பாலும் குழந்தைகள் பலியாகியிருந்தது. இரண்டொரு நாட்களில் பலியான உயிர்கள் 4000. நிரந்தர ஊனமடைந்தோர் எண்ணிக்கை குறைந்தது 20,000. அதற்கு இரண்டு மடங்கு மற்ற பல வகைகளில் காயமடைந்தவர்கள். வரப் போகும் பின் விளைவுகளையும், ஊனமுடன் பின்னர் பிறந்த குழந்தைகளையும் நான் சேர்க்கவில்லை. இதுதான் 'போபால் விஷ வாயு விபத்து'. விபத்தினை விட அதற்குப் பின்னர் நிகழ்ந்ததுதான் கவனத்துக்கு குறியது. முதலில் நடந்தது விபத்தா?

விபத்து நடந்து சில நாட்களிலேயே, Ambulance Chasers என்று கேலியாக அழைக்கப் படும் அமெரிக்க விபத்து சம்பந்தமான வக்கீல்கள் இந்திய மண்ணில் குமிந்து விட்டனர். இங்கு ‘நீர்மாலை வக்கீல்கள்’ என்று கிண்டல் செய்யப் படும் வக்கீல்கள் இவர்கள்தான். ஆனால் இதையெல்லாம் மீறி, இவர்களால் சாதாராண மக்கள் அடைந்த பலன்கள் ஏராளம்.

அந்த வக்கீல்களின் செலவிலேயே நூற்றுக் கணக்கான வழக்குகள் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன. வெற்றி பெற்றால் கிடைக்கும் நஷ்ட ஈட்டுத்தொகையில் ஒரு பகுதி வக்கீலுக்கு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில். அத்தகைய ஒரு ஏற்பாடு பிரிட்டிஷ் சட்டத்தினைப் பின்பற்றும் இந்தியாவில் குற்றம். இந்திய அரசாங்கம் சும்மா இருக்காதல்லவா? வழக்கம் போல Bhopal Gas Leak Disaster (Processing of Claims) Act என்ற சட்டம் கொண்டு வந்தது. அதன்படி எல்லா வழக்குகளையும் அரசுதான் நடத்த வேண்டும் என்று சொன்னது. பின்னர் தன் பங்குக்கு தானும் ஒரு வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்தது. எல்லா வழக்குகளும் ஒரே நீதிமன்றதின் முன்பு கொண்டு வரப்பட்டது.

யூனியன் கார்பைடு விபத்து இந்தியாவில் நடந்ததால் அமெரிக்க நீதிமன்றங்கள் அந்த வழக்குகளை விசாரிக்க கூடாது என்று வாதிட்டது. காரணம் அனைவரும் அறிந்தது. பாவம், இந்திய அரசாங்கம் தனது அட்டானி ஜெனரல் மூலமாக, 'இந்திய நீதிமன்றங்களை விட அமெரிக்க நீதிமன்றங்களில்தான் இத்தகைய விபத்து இழப்புகளுக்கு முழுமையான நீதி கிடைக்கும்' என்று வாதிட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இறுதியில் அமெரிக்க நீதிமன்றம் யூனியன் கார்பைடுக்கு சாதகமாக, 'வழக்கு இந்தியாவில்தான் நடக்க வேண்டும்' என்று தீர்ப்பளித்தது.

அது ஒரு தவறான தீர்ப்பு என்பது எனது கருத்து. அதோடு விட்டதா, இந்திய நீதித்துறை வழங்கப் போகும் தீர்ப்பை, 'சரியான நெறிமுறை கையாளப்படவில்லை' என்ற காரணத்தில் யூனியன் கார்பைடு பின்னர் அமெரிக்க நீதிமன்றத்தில் எதிர்க்கும் உரிமையினையும் அதற்கு தந்தது.

கொடுமை! இந்திய நீதித்துறையில் ஆயிரம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், சரியான நெறிமுறை இல்லை என யாரும் கூறி விட முடியாது. பிரதிவாதி மற்றும் குற்றம் சாட்டப் படுபவர்களுக்கும் இந்திய சட்டத்தில் கிடைக்கும் பாதுகாப்பு வேறு எங்கும் கிடையாது. கடந்த ஒரு வருடமாக அமெரிக்க அரசு செய்வது போல, எந்த வித வெளிப்புற தொடர்பும் இன்றி கைது செய்வதெல்லாம் இங்கு நடக்காது.

இந்திய மண்ணுக்கு வந்த பிறகு அமெரிக்க வக்கீல்களுக்கு வேலையில்லாமல் போய் விட்டது. இந்திய அரசுதான் ஒரே வாதி. வழக்குத் தொகையோ 3.3 பில்லியன் டாலர்!

-oOo-

ஐந்து வருடங்கப்ள் ஓடியது. டிரையல் கோர்ட் இடைக்கால வாரணமாக யூனியன் கார்பைடு 350 கோடி இந்திய ரூபாய்கள், தர வேண்டும் என உத்தரவிட்டது. யூனியன் கார்பைடு செய்த அப்பீலில், உயர்நீதிமன்றம் அதனை 250 கோடியாக குறைத்தது. யூனியன் கார்பைடு உச்ச நீதிமன்றம் சென்றது. இடைக்கால நிவாரணத்தை பற்றித்தான் மேல்முறையீடு.

மேல்முறையீடு நிலுவையில் இருக்கையில், திடீரென ஒரு சமரசம். யூனியன் கார்பைடுவுக்கும் இந்திய அரசுக்கும். பாதிக்கப் பட்ட யாருக்கும் இதில் சம்பந்தமில்லை. நீதிமன்றமும் அதனை ஒத்துக் கொண்டது. அதாவது யூனியன் கார்பைடு மொத்தமாக 470 மில்லியன் யு.எஸ் டாலர்கள் (1989-ல் ஒரு டாலர் 25 ரூபாய் என்று னைக்கிறேன்) வழங்க வேண்டும்.

இந்த சமரசம் பெரிய சர்ச்சையினை கிளப்பியது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டி மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. உச்ச நீதிமன்றமோ ஒன்றும் செய்ய இயலாது என்று கையை விரித்து விட்டது. அதாவது இந்த தீர்ப்பின் படி இறந்தவர்களுக்காக சுமார் 4000 முதல் 12000 டால்ர்கள் வரையும், நிரந்தர ஊனமடைந்தவர்களுக்காக சுமார் 2000 முதல் 8000 டாலர்கள் வரையும், காயமடைந்தவர்களுக்கு சுமார் 1000 முதல் 2000 டாலர்கள் வரை கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் கூறியது. ஈட்டுத் தொகையில் ஒரு தொகையினை பாதிக்கப் பட்டவர்களுக்காக ஒரு மருத்துவமனை கட்டவும் ஒதுக்கியது.

ஆனால் வருங்காலத்தில் பாதிக்கப் படபோகிறவர்களுக்காகவும், பாதிப்புடன் பிறக்கப் போகும் குழந்தைகளைப் பற்றியும் ஏதும் இல்லை. யூனியன் கார்பைடு இந்த தீர்ப்பினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது. ஏனெனில் இந்த சமரசம் இல்லையெனில், யூனியன் கார்பைடு திவாலாகி இருக்கும். இந்த திடீர் சமரசத்திற்கும், யூனியன் கார்பைடுவின் மகிழ்ச்சிக்கும் வேறு ஒரு காரணம் இருந்தது.

இந்த சமரசத்துக்கு சில தினங்கள் முன்பு, யூனியன் கார்பைடுவின் அமெரிக்க தொழிற்ச்சாலையினை சோதனையிட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் (legal formalities) முடிந்தது. இதில் என்ன யூனியன் கார்பைடுவிற்கு கவலை? அந்த சோதனை நடந்திருந்தால் யூனியன் கார்பைடுவின் அமெரிக்க தொழிற்சாலைக்கும் இந்திய தொழிற்சாலைக்குமான பாதுகாப்பு நெறிமுறைகளின் (safety standards) வித்தியாசம் வெட்ட வெளிச்சமாகியிருக்கும். இந்திய தொழிற்சாலையில் குறைவான பாதுகாப்பு நெறிமுறைகள் கையாளப் பட்டதாக (அதில் சந்தேகமும் இல்லை) ஆதாரம் கிடைத்தால் யூனியன் கார்பைடுவை அந்த ஆண்டவனே காப்பாற்றியிருக்க முடியாது. ஆனால் இன்றும் அது ஒரு சக்தி வாய்ந்த நிறுவனம்.

அத்தகைய ஒரு ஆதாரத்தின் விளைவு ஈட்டுத்தொகைக்கான சிவில் வழக்கினை விட யூனியன் கார்பைடு நிறுவன அதிகாரிகள், முக்கியமாக அதன் தலைவர், முதலில் கூறப்பட்ட வாரன் ஆண்டர்சன் மீதான கிரிமினல் வழக்கில் அதிகம். இந்த சமரசத்தில் இடம் பெற்றிருந்த ஒரு சாரம்சம் சம்பந்தபட்ட நபர்கள் மீதான அனைத்து கிரிமினல் வழக்குகளும் வாபஸ் வாங்கப்பட வேண்டுமென்பதுதான்.

இத்தகைய ஒரு சாரம்சம் இந்திய குற்றவியல் சட்டத்திற்கே மாறானது. சில சிறிய கிரிமினல் வழக்குகளைத்தான் வாபஸ் பெற முடியும். இதனை நமது சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் ஒத்துக் கொள்ள, மறு பரிசீலனை மனுவில் இந்தச் ஷரத்து நீக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அனைத்தும் வீணாகி விட்டது. அதன் பிறகு நடைபெற்றிருக்க வேண்டிய சோதனை நடந்ததாகத் தெரியவில்லை.

எனவேதான் நேற்று காலை வந்த செய்தியினை படித்ததும் எனக்கு சிரிப்பதா இல்லை அழுவதா என்ப்று தெரியவில்லை. ஆண்டர்சனிடம் இப்போது போய் கூறினால் போபாலா? அது எங்கிருக்கிறது? என்பார். எக்ஸ்ராடிஷன் எல்லாம் நடக்கிற சமாச்சாரமா? உலக வர்த்தக மைய தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா என்ன எக்ஸ்ரடிஷன் நடவடிக்கையா எடுத்தது. ரஷ்யா முதல் எல்லாருக்கும் ஒரே கேள்விதான். நீங்கள் எங்கள் பக்கமா? இல்லை அவர்கள் பக்கமா? ஒசாமாவை, முல்லா ஓமர் ஒப்படைக்க மறுத்த போது ஜியார்ஜ் புஷ்ஷை விட சந்தோஷமடைந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரே கல்லில் பல மாங்காய்களென எல்லாவற்றையும் பொளந்து கட்டிவிட்டார். அவருக்கு தெரியுமா? அமெரிக்காவில் ஒரு பின் லேடன் இருக்கிறார் என்றும் பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு அவர் இங்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்றும்.

வாரன் ஆண்டர்சனின் நாய்க்குட்டியினைக் கூட இங்கு பிடித்து வர முடியாது.

பி.கு. எற்கனவே கிரிமினல் வழக்கின் கடுமையான சட்டப் பிரிவுகள், இந்த வழக்கில் இருந்து நீக்கப் பட்டு விட்டன. தற்போது வெறும் அஜாக்கிரதை (negligence) வழக்குதான் என்று நினைக்கிறேன். இதற்காக ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் தலைவரைப் போய் தண்டிப்பதா என்றால், கையை பின்புறமாக கட்டி விலங்கிடப் பட்டு கூட்டிச்செல்லப் பட்டார்களே, என்ரான் நிறுவன அதிகாரிகள், அவர்களை கோவில் கட்டி கும்பிடலாம். அமெரிக்க மக்கள் என்ரான் ஷேர்களில் இழந்த பணத்தை விட இந்திய உயிர்கள் ஒன்றும் கேவலமானதல்ல...