17.1.13

தி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்





பள்ளிக்கூடம் இல்லாத கிராமத்திற்கு நகரத்திலிருந்து வருகிற ஆசிரியர். அவர் வந்த நாள் முதலே, ஆசிரியர் மீது காதல் கொள்ளும் 18 வயது கிராமத்துச் சிறுமி. அதுவரை உள்ளூர் மாப்பிள்ளைகளை நிராகரித்து வந்த, அக்கிராமத்திலிலேயே அழகிய அந்தப் பெண்ணுக்கு ஆசிரியர் மீது காதலென்றால் அப்படியொரு காதல். மெல்ல இருவருக்குமிடையே புரிதல் ஏற்ப்படுகையில் நகரத்திற்கு திரும்பிச் செல்லும் ஆசிரியர். அவருக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் காதலி. அதுவரை பெற்றோர் பார்த்து ஏற்ப்பாடு செய்யும் திருமணமே நடைமுறையாக இருந்த கிராமத்தில் இச்சிறுமியின் காதல் மெல்லத் தெரியவர, நம்ம படங்களைப் போல அருவாளைத் தூக்குவார்கள் என்றால்….இல்லை. ஆசிரியர் திரும்பி வந்து கல்யாணமாகிவிடுகிறது.

காதல் வயப்படும் பாரதிராஜா கதாநாயகிகளின் அதே படபடப்பு, ஆனால் கவித்துவமாக!

அப்பாவின் மரணச்செய்தி கேட்டு கிராமத்திற்கு வரும் மகன் வாயிலாக பெற்றோரின் கதை சொல்லப்படுகிறது. கணவரின் பிணத்தில் போர்த்துவதற்கு தன் கையால் துணி நெய்தாக வேண்டும் என்று சாதிப்பதிலும் வெளியூரில் இறந்து போனவரின் உடலை அவர்களது வழக்கப்படி கால்நடையாக தூக்கியபடி ஊருக்கு கொண்டு வந்தால்தான் ஆயிற்று கிழவி பிடிவாதம் பிடிக்கையில் நமக்கே எரிச்சல் ஏற்ப்படுகிறது. ஆனால் கதைப் போக்கில் அதே பிடிவாதம்தான் ரசிக்கத்தக்க வகையில் அவளது காதலின் அடிப்படையாக இருக்கிறது.

பிணத்தை கால்நடையாக கொண்டு வரும் வழக்கம் உட்பட படத்தில் வரும் பல கலாச்சார அடையாளங்கள் இன்னமும் சில ஆண்டுகளில் அழிந்து போகலாம். அவற்றை கதையினூடே ஆவணப்படுத்துவதில்தான் உலகப்படங்கள் தனிச்சிறப்பு பெறுகின்றன. அந்த வகையில், மதுரையில் இப்போது பெருமளவில் குறைந்து போன கோவில் திருவிழாக்களை ஆவணப்படுத்திய சுப்பிரமணியபுரம் தமிழில் முக்கியமான ஒரு திரைப்படம்.

தமிழ்ப்படங்களைப் போல எதிர்பாரத திருப்பங்கள் ஏதுமில்லாமல், மெதுவாக நகரும் கதை என்றாலும் தமிழர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கலாம்.

மதுரை
17/01/13

No comments: