Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

10.7.10

கே.எம்.விஜயனின் பிழைப்புவாதம்!

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரி வழக்குரைஞர்களில் ஒரு ‘சிறு பிரிவினர்’ சமீபத்தில் நடத்திய போராட்டத்தினைப் பற்றி மூத்த வழக்குரைஞர் திரு.கே.எம்.விஜயன் அவர்கள் ’தினமணி’ பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் அனுமதிக்கப்படலாமா? என்பது பற்றி தனது கருத்துகளை பதிவு செய்வதற்கு திரு.விஜயனுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், தமிழ் அனுமதிக்கப்பட வேண்டும் என்பவர்களை ‘சிறு பிரிவினர்’ என்றும் ‘அரசியலாக்கினர்’ என்றும் ‘உண்மை பேசத்துணிவில்லாத பொய்யர்கள்’ எனவும் ‘சட்டம் தெரியாதவர்கள்’ என்றும் அநாகரீகமான வார்த்தைகளில் கிண்டல் செய்வதற்கு அவருக்கு தார்மீக உரிமை இல்லை.

அதே போன்ற சாக்கடை மொழியில் அவரையும் திருப்பி மற்றவர்களால் கிண்டலடிக்க முடியும் என்பதை அவர் உணர வேண்டும்.

எந்த ஒரு உரிமைக்காகவும், வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் இருப்பதிலும், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதிலும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. ஆயினும் உண்ணாவிரதம் இருந்தவர்களில் சிலரை எனக்கு தெரியும் என்ற அளவில், தங்களை உயிரை பணயம் வைக்கும் அளவில் அவர்கள் சென்றனர் என்பதை நான் அறிவேன். தமிழுக்காக இல்லையென்றாலும், அவர்களது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ’விரைவில் யாராவது தலையிட்டு இவர்கள் உடல் நலன்’ காக்கப்படவேண்டும் என்பதற்காக நானும் இந்தப் போராட்டத்தில் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்தேன்.

எனவே இந்தப் போராட்டத்தில் அரசியல் காரணங்கள் ஏதுமில்லை என்று என்னால் கூற முடியும். ஏனெனில், அமைச்சர் மு.க.அழகிரி அவர்களை அவமானப்படுத்தியதால் விளையும் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்ற அச்ச உணர்வையும் மீறி போராட்டத்தில் சிலர் பங்கெடுத்ததையும் நான் அறிவேன்.

-oOo-

தமிழுக்காக வழக்குரைஞர்களில் ஒரு ’சிறுபிரிவினர்’ போராடினர் என்று விஜயன் கிண்டலடிப்பதில்தான் இந்தப் போராட்டத்தின் முழு அவசியம் புரிகிறது. சட்டத்தை படிக்க முடிந்தாலும், ஆங்கிலத்தை படிக்க முடியாது என்ற மனப்பான்மையால், இளம் வழக்குரைஞர்களில் ஒரு பெருங்கூட்டம் உயர்நீதிமன்றத்திலிருந்தே ஒதுங்கியிருக்கையில், உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் ‘பெரும்பிரிவினருக்கு’ இந்தப் போராட்டத்தில் என்ன அவசியம் இருக்கப் போகிறது.

உலக மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில், இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் ஒரு சிறு பிரிவினர்தான். ஏன இந்திய மக்கள் தொகையோடு ஒப்பிடுகையிலும் போராடியவர்கள் ஒரு சிறுபிரிவினர்தான் என்பதை திரு.விஜயன் மறந்துவிட்டார் போலும்.

-oOo-

அடுத்தது, விஜயனின் கட்டுரை எங்கும் பரவிக்கிடக்கும், ‘நான் சட்டம் அறிந்தவன்’ என்ற ஆணவமும் ‘மற்றவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள்’ என்ற ஏளனமும்தான்.

இந்தச் சுற்றறிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. இதை இன்றுவரை யாரும் எதிர்த்து வழக்குப் போடவில்லை. அப்படி ஒன்று இருப்பதே தெரியாதவர்கள்தான் உயர் நீதிமன்றத்தில் தமிழ் பற்றிப் பேசுகிறார்கள்

என்று கீழமை நீதிமன்ற நீதிபதில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தீர்ப்பு கூறலாம் என்ற உயர்நீதிமன்ற சுற்றறிக்கையினைப் பற்றி கூறுவதிலிருந்தே இவரது இந்த மனப்பான்மையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழுக்காக போராடி வரும் திரு.சோலை சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் இதற்கான பொது நல வழக்கு ஒன்றை கடந்த பெப்ருவரி மாதமே தாக்கல் செய்து, உயர்நீதிமன்றத் தரப்பு பதிலுக்காக நிலுவையில் உள்ளது என்பதை தனது கட்டுரைக்கு முன்பாக சற்று ஆய்வினை மேற்கொண்டிருந்தால், விஜயன் தெரிந்து கொண்டிருப்பார் (W.P.(MD)No.2394 of 2010)

’தினமணி’ பத்திரிக்கையினை வழக்குரைஞர்கள் யார் படிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில் எழுதியிருக்கலாம். ஆனால் கட்டுரை இணையத்திலும் வெளியாகியுள்ளது.

அடுத்து ‘தமிழர்கள், சட்டத்தின் முன்பாக உண்மையறியாத அப்பாவிகளாக இருக்கிறார்களே என்கிற ஆதங்கமே இக்கட்டுரைஎன்று ஒரு ஆதங்கத்தை அதே மேட்டிமைத்தனத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்படி ஒன்றும் தெரியாத அப்பாவிகளான தமிழர்களை இவர் கருதுவதால்தான், கீழமை நீதிமன்றங்களில் 80 விழுக்காடு மனுக்கள் ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்படுவதாக துணிந்து ஒரு பொய்யை இவர் கூற முயன்றுள்ளார். விஜயன் எந்த ஒரு கீழமை நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தியதில்லை. கீழமை நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பெருவாரியாக தாக்கல் செய்யப்படும் உரிமையியல் மற்றும் குற்றவியல் மேல்முறையீடுகள், சீராய்வு மனுக்கள் போன்ற எந்த ஒரு வழக்கினையும் எனக்குத் தெரிந்தவரை விஜயன் அவர்கள் நடத்தியதில்லை. நடத்தியிருந்தால் கீழமை நீதிமன்றங்களில் பெருவாரியான தீர்ப்புகள் தமிழில் கூறப்படுவதை அறிந்திருக்கலாம்.

நான் வழக்குரைஞர் தொழிலில், எனது முதல் வாதத்தினை தமிழில்தான் எடுத்து வைத்தேன். இன்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் வாதிட்டாலும் எனது எழுத்துபூர்வமான வாதத்தினை தமிழில்தான் தாக்கல் செய்கிறேன்.

எப்படியாயினும், 20 வருடங்களுக்கு முன்பு தமிழுக்கு இடமே இல்லாதிருந்த கீழமை நீதிமன்றங்களில் இன்று தமிழ் பெருவாரியாக இடம் பெற்றிருப்பதே, தமிழால் உயர்நீதிமன்றத்திலும் தாக்குப்பிடிக்க முடியும் என்பதற்கு சாட்சி!

ஏன், இன்று அரசு ஆணைகள், உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படுகின்றன. விஜயன் என்ன அரசு ஆணைகள் ஆங்கிலத்தில் இருந்தால்தான் என்னால் வழக்கு நடத்த முடியும் என்று கூறுகிறாரா என்ன? அல்லது அவர் நடத்திய எத்தனை வழக்குகளில் அரசு ஆணைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பின் நடத்தினார்?

விஜயன் பங்கு கொள்ளும் நீதிப்பேராணை மனுக்களை (Writ Petition) விட கீழமை நீதிமன்றங்களில் நடைபெறும் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் சட்டங்கள் நுணுக்கமாக அலசி ஆராயப்படுகின்றன. ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களையும், முன் தீர்ப்புகளையும் (Judicial Precedents) வாசித்து தமிழில் மனுதாக்கல் செய்வதிலோ, வாதிடுவதிலோ அல்லது தீர்ப்பு கூறுவதிலோ யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாது இருக்கையில், விஜயனின் ஆதங்கம் தமிழர்களுக்கானது அல்ல. மாறாக தனது பிழைப்பு சார்ந்தது என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

-oOo-

உயர் நீதிமன்றத்தில் தமிழ் என்று கேட்கும் வாதத்தில் உள்ள நடைமுறை ஓட்டைகளைப் பார்ப்போம். என்று கூறும் விஜயன் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தீர்ப்பை தன் மொழியில் எழுதினால், சட்ட பரிபாலனத்தில் மொழி வேற்றுமை காரணத்தால், பல மொழி சட்டத்தில் பல தீர்ப்புகள் முரணாக அமையும்என்ற ஓட்டை வாதத்தை வைக்கிறார்.

முதலில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரிதான் போராட்டமே தவிர தமிழில் தீர்ப்பு எழுத வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல. ஆங்கிலத்தில் தடையின்றி பேச அல்லது தவறில்லாமல் எழுதத் தெரியாத ஒரே காரணத்திற்காக வழக்குரைஞராக தொழில் புரியும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காகவும், வாதங்கள் தமிழில் வைக்கப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கைகள் எளிதாக இருக்கும் என்பதாலும், வந்திருக்கும் பெரும்பாலான பொதுமக்களுக்கு நீதிமன்றத்தில் நடப்பது புரிய வேண்டும் என்பதற்காகவும்தான் இந்தக் கோரிக்கை. எனவே உயர்நீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்படுவதில் யாருக்கும் ஆட்சேபணையில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு அது சாத்தியமுமில்லை.

ஆயினும், தீர்ப்புகள் வேறு வேறு மொழியில் இருந்தால் முரண்படும் என்பதுதான் நகைச்சுவை. ஒரே மாதிரியான தீர்ப்புகளை ஒரே உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் இரு நீதிபதிகள் தருவதில்லை. வேறு வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள் கூற முடியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். எனினும், தமிழுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

-oOo-
அடுத்த வேடிக்கை, “ இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காடினாலும் அதன் தீர்ப்பு தமிழில் இருக்காது. ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அப்படியானால், தமிழில் வாதாடி, ஆங்கிலத்தில் தீர்ப்பா? ஒரேமொழி ஒழுங்காகத் தெரிந்தவர்களே குறைவு என்கிறபோது, தமிழில் பேசி ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதும்போது வரும் "இடைவெளி மாற்றம், புரிதல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு?என்று புலம்பியிருப்பது.
இன்று கீழமை நீதிமன்றங்கள் அனைத்திலும் ஆங்கிலத்தில் வாதாடி தமிழில் தீர்ப்புகள் எழுதுவதிலும், தமிழில் வாதாடி ஆங்கிலத்தில் தீர்ப்புகள் எழுதுவதிலும் எவ்வித சிரமமுமில்லை என்பதை விஜயன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இன்றும் வழக்காடிகள் நேரிடையாக ஆஜராகி நடத்தும் வழக்குகளில், தமிழில்தான் வாதிடுகிறார்கள். நீதிபதிகள் யாரும் புரிதல் இல்லை என்று சொல்வதில்லையே!
சாட்சிகள், தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதனை புரிந்து கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருவரை தூக்குமேடைக்கே அனுப்புகின்றனர். அங்கு இடைவெளிமாற்றம், புரிதல் எல்லாம் இல்லையா? உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தவறா? எதற்கெடுத்தாலும் பொதுநல வழக்கு போடும் விஜயன், உச்சநீதிமன்றத்தில் நீதி இல்லை என்று ஒரு பொதுநல வழக்கு போடட்டுமே!
விஜயன் இத்தோடு நிற்காமல் வழக்கமான உச்சநீதிமன்றத்தில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டுமே என்ற வழக்கமான பல்லவியையும் பாடியுள்ளார். “உயர் நீதிமன்றத்தின் மொழியானால் அதை மொழிமாற்றம் செய்து ஒரே மொழியான ஆங்கிலத்தில் பரிபாலனம் செய்வது தேவையா? நேரம், பொருள், நிதி விரயம் இல்லையா?”
இதனை எத்தனை முறை விளக்கினாலும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். சுருக்கமாக கூறினால் தற்பொழுதும் ஒரு உரிமையியல் அல்லது குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றம் செல்கையில் அனைத்து ஆவணங்களும் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. ஏன், நீதிப்பேராணை மனுக்களிலும் வழக்குரை தவிர வழக்கு ஆவணங்கள் தமிழில் இருப்பதால் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது.
-oOo-
சட்டம் சம்பந்தமான எவ்வித வாதங்களும் இல்லாத நிலையில், ‘ இன்று 80 நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆங்கில அறிவு இல்லாதிருந்தால் இன்று அவர்களுக்கு ஜீவாதாரமே இல்லைஎன்ற வாதம் வேறு. தமிழர்கள் வெளிநாட்டில் பிழைப்பதற்கும் இங்கு நீதிமன்றங்கள் நடத்தப்படுவதற்கும் என்ன சம்பந்தம். ஒரு மருத்துவரோ அல்லது பொறியாளரோ வெளிநாடுகளில் சென்று தொழில் புரிய முடியும். ஆனால் இங்குள்ள வழக்குரைஞர்கள் அங்கு தொழில் புரிய முடியாது. உலகமயமாக்கலில் அது சாத்தியமானாலும், 99 விழுக்காடு வழக்குரைஞர்களுக்கு இங்குதான் தொழில். உச்ச நீதிமன்றம் செல்ல முடியாது என்று கூறியிருந்தால் பொருத்தமாயிருக்கும்.
நீதிமன்றங்களில் தமிழ் என்பது வழக்குரைஞர்களின் தொழில் சார்ந்த விடயம் மட்டுமல்ல. வழக்காடிகளின் உரிமை சார்ந்த விடயமும் கூட. எனவே ஆங்கிலம் தெரிந்தால் அமெரிக்கா செல்லலாம் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
தமிழ் முழுமையான அளவில் இங்கு ஆட்சி மொழியானால், தமிழகத்தில் வசிக்கும் வேறு மாநிலத்தை சார்ந்தவர்களின் அடிப்படை உரிமைகளை அது பாதிக்கும் என்பதும் சொத்தை வாதம். தமிழ்தான் உயர்நீதிமன்ற மொழி என்று கேட்கவில்லை. தமிழிலும் வாதிட அனுமதி கொடுங்கள் என்பதுதான் கோரிக்கை என்ற பின்னரும் ஏன் இந்த சந்தேகம் என்பது புரியவில்லை.
இறுதியாக, வழக்கமான உள்கட்டமைப்பு முட்டுக்கட்டைகள். "எல்லா சட்டங்களின் தமிழாக்கம், தீர்ப்புகளின் தமிழாக்கம், தமிழ் சட்டமொழி, மொழியாக்கத்தில் வல்லுநர்களாக உள்ளோரின் தேர்வு இவை அனைத்தையும் செய்யாமல் வழக்காடு மொழியாக தமிழை அறிவிப்பது அரிசி இல்லாமல் வெறும் பாத்திரத்தில் சோறு வடிப்பதைப் போன்றது
தமிழ் வழக்காடு மொழியாவதற்கு இவை ஏன் தேவை என்பது புரியவில்லை. இன்று எந்த சட்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினை வைத்து கீழமை நீதிமன்றங்களில் வாதிடுகிறார்கள். ஏன் விஜயனே சட்ட நுணுக்கம் சம்பந்தமான இந்தக் கட்டுரையினை தமிழில்தானே எழுதியுள்ளார். அரசியலமைப்பு சட்டப் பிரிவு இவ்வாறு கூறுகிறது என்று கூறவில்லையா? சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு என்று இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டவில்லையா?
மற்றவர்களை பொய்யர்கள் என்றும் பேதமை என்றும் குருட்டு நம்பிக்கை என்றும் ’செம்மொழி’யில் சட்டம் சம்பந்தமான ஒரு கட்டுரையில் இவரால் சாட முடிகிறதே!
விஜயனின் அனைத்து வாதங்களையும் விட ‘நீதிமன்றத்தில் தமிழ் அனுமதிக்கப்படுவதால், பாதிப்படையப் போவது பொதுமக்கள்தான்’ என்று இறுதியில் அவர் அச்சுறுத்துவது அவரது பிழைப்புவாதம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
ஊடக பலம் அவர் வசம் உள்ளது. யாரையும் பொய்யர் என்று அவர் குற்றம் சாட்டலாம். சட்டம் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடலாம். ஏன், தனது நலத்தை பொதுமக்கள் நலம் என்று அச்சுறுத்தலாம்...

மதுரை
101710

24.6.10

தமிழ் வழக்காடு மொழியாகலாம், ஆனால்...

‘உயர்நீதிமன்றத்தில் ஏன் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்’ என்ற கேள்விக்கு ஏன் இருக்கக் கூடாது என்பதுதான் பதிலாக இருக்க முடியும். ஏனெனில் தமிழ் இங்கு பேசப்படும் மொழியாகவும், அலுவல் மொழியாகவும் இருக்கும் பட்சத்தில், வழக்காடு மொழியாகவும் இருப்பதுதான் இயல்பானது.

ஆங்கிலம் வழக்காடு மொழியாக தமிழகத்தில் இருப்பதுதான் விதியினை மீறிய செயல். அந்த விதிவிலக்கிற்கான காரணங்களுக்குள் தற்பொழுது யாரும் செல்லவில்லை. உலக அளவில் நமது தொடர்பின் எல்லைகளை விரித்துக் கொள்ளும் வகையிலும், இந்திய அளவில் ஒரு தொடர்பு மொழி என்ற வகையிலும் ஆங்கில பயன்பாட்டிற்கான முக்கியத்துவத்தைக் கருதி, நீதிமன்றங்களில் அதன் இருப்பிடத்தை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

ஆனால், தமிழுக்கும் ஏன் இடமில்லை என்பதுதான் கேள்வி?

‘தமிழுக்கு இங்கு இடமில்லை’ என்று வைராக்கியம் கொண்டவர்கள் கூட, அதற்கான தகுந்த காரணத்தை கூற முயலாமல், ‘தமிழ் இருக்கலாம். ஆனால்...’ என்றுதான் தங்களது வாதத்தினை வைக்க முன் வருகிறார்கள். தமிழ் இருக்கலாம் என்று அனைவரும் ஏற்றுக் கொண்டால், பின் ஏன் அடுத்த கட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதில் மெத்தனம் என்பது புரியவில்லை. அங்குதான் இந்த ‘ஆனால்...’ களுக்குப் பின் உள்ள நோக்கம் வெளிப்படுகிறது.

இதே ‘ஆனால்...’கள்தாம் இடப்பங்கீடு விடயத்திலும், அதனை எவ்வாறேனும் தடுத்து நிறுத்த முன்னிறுத்தப்பட்டன. ‘இடப்பங்கீடு தேவைதான். ஆனால் பிற்ப்படுத்தப்பட்டவர்கள் எத்தனை சதவீதம் என்ற புள்ளியியல் விபரங்கள் இல்லாத வகையில் அதனை எப்படி செயல்படுத்துவது’ என்பது போன்ற ‘ஆனால்’கள்தாம் அவை. புள்ளியியல் விபரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட அதே குரல்கள்தாம் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியா, என்றும் புலம்புகின்றன.

இதற்கெல்லாம் காலம், நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழகத்தில் எப்படி செயல்படுத்தினார்களோ அப்படியே செயல்படுத்த வேண்டியதுதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும்.

தமிழ் விடயத்திலும், ஆனால்... என்று இழுப்பவர்கள்களால்தான் பிறச்சினை. தமிழ் கூடாது என்று கூறுபவர்களை எதிர்கொள்வது எளிது. ஆனால்... என்று இழுப்பவர்களிடம்தான், எளிதில் ஏமாறிவிடுவோம். ஆனால் என்பவர்களுக்கு கூடாது என்று கூறுபவர்களை விட வேறு நோக்கம் இல்லை என்பதுதான் உண்மை. இல்லையெனில், ‘அது என்ன புடலங்காய் உள்கட்டமைப்பு’ என்று அடுத்து ஆக வேண்டியதை பார்த்திருப்பார்கள்.

ஏனெனில், தமிழுக்காக என்று உருவாக்க முடியாத உள்கட்டமைப்பு என்று பெரிதாக ஒன்றும் இருக்கப் போவதில்லை. நமது முன்னாள் தலைமை நீதிபதி உள்கட்டமைப்பை பற்றி கூறியது ’ஒரு கண்கட்டி வித்தை’ என்று நான் உணர்ந்திருந்தேன். தமிழில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்று கூறியது முதல் முட்டுக்கட்டை. மாவட்ட நீதிமன்றங்கள் முதல் முன்சீப் நீதிமன்றங்கள் வரை எந்த புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்க்காமல், தமிழில் வழக்குகள் நடத்தப்படுகிறது என்பதுதான் உண்மை.

இந்திய தண்டனைச் சட்டத்தையோ, சொத்துரிமை மாற்றுச் சட்டத்தையோ தமிழில் மொழிபெயர்த்தாலும், அது ஒரு படிப்பனுபவமாக மட்டுமே பயன்படுமேயன்றி, நீதிமன்றத்தில் அதனை மட்டுமே அடிப்படையாக வைத்து வழக்கு நடத்தப்பட இயலாது. சட்டப்பிரிவுகளின் ஒவ்வொரு வார்த்தையும் என்ன அர்த்தத்தில் அந்த வாக்கியத்திலும், பிரிவிலும் பயன்படுத்தப்படுகின்றது என்று பல சமயங்களில் நீதிமன்றங்களில் வாதிடப்படுகையில், மொழிபெயர்த்த சட்டத்தினை வைத்து அதனை விளக்க (interpret) முடியாது. எனவே, தமிழில் புத்தகங்கள் இல்லை என்பது ஒரு தடையே அல்ல!

புதிதாக கணணிகள் வேண்டும் என்று கூட கூறப்படுகிறதாம். எத்தனை மொழிகளையும் எளிதாக தட்டச்சு செய்யும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்பட்ள்ள சூழ்நிலையில், கணணி ஒரு பிரச்னையே இல்லை. தமிழில் வழக்குரை (pleadings) தாக்கல் செய்யப்படும் பொழுது வழக்குகளின் புள்ளியியல் விபரங்களை சேகரிப்பதில் பிரச்னை இருக்கலாம். அதனைக் கூட வழக்குரை (pleadings) தமிழில் தாக்கல் செய்யப்பட்டாலும், வழக்குரை தலைப்பு (cause title) மற்றும் வழக்குரை அட்டை (docket) ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூட விதி வகுப்பதால், தீர்க்கலாம். இதனை எழுதும் இந்த அரை மணி நேர சிந்திப்பில் இந்த வழிமுறை புலப்படுகையில், நீதிமன்ற நிர்வாகத்தில் கற்றுத் தேர்ந்த அனுபவம்மிக்க அலுவலர்களால் எளிதில் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும்.

கணணியில், ஃபோனடிக் முறை தட்டச்சு இருப்பதால், தமிழ் தட்டச்சர்கள் தேவை என்பது எல்லாம் இல்லை. ஆனாலும் கூட, நீதிபதிகள் தாங்களாகவே விரும்பி தமிழில் தீர்ப்பு பகர விரும்பினால் மட்டுமே தமிழ் சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தட்டச்சர்களின் தேவை இருக்கும். தகுந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் வரையில், நீதிபதிகள் ஆங்கிலத்திலேயே தீர்ப்புகளை கூறலாம். தமிழும் வழக்காடு மொழி என்பதால், தமிழில்தான் தீர்ப்பு கூற வேண்டும் என்று யாரும் நீதிபதிகளை கட்டாயப்படுத்த முடியாது. எப்படியாயினும், உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் தமிழில் தீர்ப்பு பகர குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் ஆகலாம்.

தமிழ் இருக்கலாம்தான் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட  சூழ்நிலையில் தமிழ் தெரியாத நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்படுகிறார்களே என்ற வாதம் அர்த்தமற்றது என்றாலும், ஏன் தமிழ் தெரியாத நீதிபதிகள் இங்கு மாற்றப்பட வேண்டும் என்பதுதான் அதற்கு பதில். நேர்மையான, துணிச்சலான நீதிபதிகளுக்கு அந்த நேர்மைக்கு தண்டனையாகவும், அல்லது நேர்மையற்ற நீதிபதிகள் ஏதாவது பிறழ்ச்சினையில் சிக்கிக் கொள்கையில் அதிலிருந்து அவரை விடுவிக்கும் (relieve) நோக்கத்துடனும்தானே நீதிபதிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுகிறார்கள். உண்மையான அந்த காரணத்திற்கு எந்த சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்க இயலும்.

தலைமை நீதிபதி வெளிமாநிலத்திலிருந்து வருவது என்பதும் உபயோகமற்ற ஒரு சடங்கு என்றாலும், அவரைப் பொறுத்தவரை வேண்டுமானால் தனக்கென ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்துக் கொள்ள வேண்டியதுதான். எட்டு கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கான சம்பளம் ஒரு பொருட்டல்ல.

உச்ச நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் கூறியுள்ள மொழிபெயர்ப்பு பிரச்னையும், ஒரு தடையல்ல. ஏனெனில், தற்பொழுது கூட ஒரு உரிமையியல் வழக்கோ அல்லது குற்றவியல் வழக்கோ, உச்ச நீதிமன்றம் செல்லும் பொழுது அனைத்து கீழமை நீதிமன்ற நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. உயர்நீதிமன்ற தீர்ப்பு, வழக்கு ஆவணங்களில் பத்து சதவீத இடமே பிடிக்கிறது. ஏன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நீதிப்பேராணை மனுக்களிலும் () அனைத்து ஆவணங்களும் தமிழில் உள்ளன. எனவே உச்ச நீதிமன்றம் செல்கையில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது புதிதாக எழும் பிரச்னையல்ல.

இவை எதுவும் சாத்தியமில்லை என்றாலும், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்ப்படும் வரை தமிழில் வழக்குரைகளை ஏற்றுக் கொள்வதையாவது நிறுத்தி வைக்கலாம். ஆனால், எதுவுமே இல்லையென்பதில்தான் இந்த ஆனால்கள் மீது சந்தேகம் ஏற்ப்படுகிறது. அவர்கள் உண்மையில், தமிழ் கூடாது என்று கூற வருகிறார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தமேயன்றி வேறு அல்ல.

பலர் நேரிடையாக ‘அது என்ன தமிழ் வந்தால் நீதிமன்றத்தின் டிகோரம் என்னாவது, டீசன்ஸி என்னாவது?’ என்கிறார்கள் சமூக நீதி பிரச்னையில், ‘ரிசர்வேஷன் கூடாது, மெரிட்தான் கரெக்ட்’ என்று அதனால் பயனடைந்த அல்லது பயனடையப் போகும் ஒரு கூட்டம் சலித்துக் கொள்ளும். அதே போன்று இங்கும், தமிழில் வழக்காடுவதால், பயன்பெறப் போகும் நபர்கள்தாம் மற்ற ஆனால்களைப் போல அல்லாமல் நம்மிடம் நேரிடையாக இப்படி நக்கலடிக்க முற்ப்படுகிறார்கள்.

நேற்று கூட என்னிடம் அப்படிக் கேட்ட என்னிடம் ஒரு வழக்கினை நடத்த ஒப்படைக்க வந்த ஒரு ஜூனியர் வழக்குரைஞரிடம் ‘என் கடவுளே என்று இறைஞ்சுவது எப்படியிருக்கிறது’ என்றேன். ‘தாய்மொழியில் கேட்டால் வார்த்தையின் அர்த்தம் அதன் முழு வீரியத்தோடும் மனதை துளைக்கிறது அல்லவா? வாதங்களை தமிழில் வைப்பதன் பயன் அதுதான்’ என்றேன்

எது எப்படியோ, இந்த சட்டச்சிக்கல், கட்டமைப்புச் சிக்கல் அனைத்தையும் சற்றுத் தள்ளி வைத்து சிந்திதோமென்றால், நமது உயர்நீதிமன்றத்தினை அணுகும் 90 சதவிகித வழக்காடிகள் தங்களது பிரச்னைகளை தமிழில் சிந்திக்கிறார்கள். தமிழில் ஆவணங்களை எழுதுகிறார்கள், தமிழில் சண்டையிடுகிறார்கள். தமிழில் தங்களது வழக்குரைஞருடன் விவாதிக்கிறார்கள், தமிழில் தங்களது சாட்சிகளை விசாரிக்கிறார்கள். அப்படியிருக்கையில், முக்கியமாக அந்த 90 சதவிகிதத்தில் 80 சகவிகிதம் வழக்காடிகளுக்கு ஆங்கிலம் தெரியாத சூழ்நிலையில் ஏன் தங்களது வழக்குகளை தமிழில் நடத்தக் கூடாது? அதுதான் நியாயமென்றால், அதுதான் சிறந்தது என்றால் அதனை ஏன் ஆனால்களால் தள்ளிப்போட வேண்டும்.

ஆனால்களை தவிர்ப்போம். தமிழுக்கு ‘ஆம்’ என்போம்.

பிரபு ராஜதுரை
17/06/10

20.6.10

நீதிமன்றத்தில் தமிழ்!


என்ன அர்த்தத்தில் அப்படி கூறினார் என்பது தெரியவில்லை.

ஏனெனில் உயர்நீதிமன்றம் தவிர்த்து மற்ற அனைத்து கீழ் நீதிமன்றங்களிலும் தமிழ் அனைத்து வகைகளிலும் பயன்பாட்டிலுள்ளது. தமிழில் வழக்குரைகள் தாக்கல் செய்வதிலிருந்து தீர்ப்பு வழங்குவதை வரை முழு அளவில் அனுமதிக்கப்படுகிறது.

1956ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு அலுவல் மொழி சட்டத்தின்படி தமிழ்தான் கீழ் நீதிமன்றங்களின் அலுவல் மொழி. ஆயினும் அதனை செயலுறுத்தும் அறிவிப்புகள் (Notification) திமுக ஆட்சிக்காலத்தில்தான் வெளியிடப்பட்டு 1976ம் குற்றவியல் நீதிமன்றங்களிலும் 1982ம் ஆண்டு உரிமையியல் நீதிமன்றங்களிலும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முதன்முதலில் தமிழ் அறிமுகப்படுத்தப்படுகையில் பலத்த கேலிக்கும், கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டது. ஆனால் 25 வருடங்கள் கடந்த சூழ்நிலையில், தமிழ் நிலையான ஒரு இடத்தினை தற்பொழுது பிடித்துள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன் நீதிமன்ற வரலாற்றை 25 ஆண்டுகள் பின்னால் தள்ள நினைக்கிறாரா?

-oOo-

உயர்நீதிமன்றத்தில் தமிழ் கூடாது என்று தமிழக அரசின் கோரிக்கையினை நிராகரித்த முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனும் ஏற்றுக் கொள்ள்வியலாத ஒரு காரணத்தை கூறியுள்ளார். 'உயர்நீதிமன்றத்தில் தமிழ் வந்து விட்டால் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்கையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியிருக்கும் என்றும், அதனால் ஏற்ப்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாது' என்றும் கூறியதாக ஹிந்துவில் கூறப்பட்டுள்ளது.

முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒரு வழக்கின் வழக்குரைகள் 10 பக்கம் இருக்கலாம். சாட்சி விசாரணை 20 பக்கம் இருக்கும். தீர்ப்பு 20 பக்கம் இருக்கும். மேல் முறையீட்டு தீர்ப்பு 20 பக்கம் இருக்கும். உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மேல்முறையீட்டு தீர்ப்பு, ஐந்து பக்கங்களுக்கு மிகாது. ஆக இன்று கூட உச்ச நீதிமன்றம் செல்லும் ஒரு உரிமையியல் வழக்கின் 90 சதவீத ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக ஆனாலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்த நீதிபதியும் தமிழில் தீர்ப்பு சொல்லப்போவதில்லை. எனவே இன்றுள்ள நிலைதான் நீடிக்கும்.

குற்றவியல் நீதிமன்றங்களில் முதல் தகவல் அறிக்கை, குற்றச்சாட்டுரை (Charge Sheet) தொடங்கி சாட்சி விசாரணை தீர்ப்பு அனைத்தும் இன்று தமிழில்தான் உள்ளன. அவை உச்ச நீதிமன்றம் செல்கையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகின்றன.

தலைமை நீதிபதி, உண்மை நிலையை அறிந்து கொள்ளாமல் ஏதோ காரணம் சொல்ல வேண்டும் என்று பொருந்தாத ஒரு காரணத்தை கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாவதை மத்திய அரசு விரும்பாததற்கு காரணம் வேறு. காபினட் மந்திரி பதவி பெறுவது போல இது சுலபமான காரியம் அல்ல என்பது கலைஞருக்கும் தெரியும்.
அதனால்தான், சக வழக்குஞர்களிடம் நான் குறிப்பிட்டேன். ‘தெலுங்கான போராட்டம் சாதிக்காததை நீங்கள் சாதித்துவிட முடியாது என்று...

பிரபு ராஜதுரை
மதுரை
20/06/10

18.6.09

‘ஈழ’த்தமிழர்களுக்கு உண்டு, இந்தியாவில் உயர்கல்வி!

இலங்கையிலிருந்து சுமதி இந்தியாவிற்கு குடி பெயர்ந்த பொழுது, அவளது வயது எட்டு. இலங்கையில் நிகழ்ந்த போர்ச்சூழலுக்கு பயந்து, அவளது பாட்டிதான் முதலில் ‘வாழ்ந்தது போதும்’ என்று சுமதியை அழைத்து கொண்டு அவளது பூர்வீக ஊரான புதுக்கோட்டைக்கு வந்தார்.

பின்னர் சுமதியின் தாயும், தந்தையும் இலங்கையின் ஞாபகங்களை மட்டுமே சுமந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து விட்டனர்.

வரும் பொழுது அவர்கள் அனைவரும் இலங்கை குடிமக்கள் (citizens). அவர்களிடம் இருந்த கடவுச் சீட்டினை (Passport) வைத்து அப்படித்தான் முடிவு செய்ய வேண்டியிருந்தது.

1920ம் ஆண்டு வாக்கில் இந்தியாவிலிருந்து, இலங்கைக்குச் சென்று குடியேறிய சுமதியின் தாத்தா, இலங்கை சுதந்திரம் பெற்றதும் அதன் குடியுரிமையைப் பெற்றார். சுமதியின் பெற்றோர்கள் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள்.

-oOo-

இந்திய குடிமக்கள் இல்லை எனினும், சுமதியின் பெற்றோர்களுக்கு இங்கு குடியேறவோ, தங்களுக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டவோ, முக்கியமாக சுமதிக்கு நல்லதொரு பள்ளியில் தனது கல்வியை தொடரவோ ஏதும் பிரச்னை இல்லை.

பொறியியற் கல்லூரியில் சேரும் பொழுது தேவைப்பட்ட பிறப்பிட சான்றிதழ் (Nativity Certificate) கூட சுமதி புதுக்கோட்டையில் சுமார் 12 ஆண்டுகளாக வசித்து வந்த சூழலில் தாசில்தார் வழங்கியிருந்தார்.

-oOo-

பொறியியற் கல்லூரியில், முதல் செமஸ்டர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுதுதான் சுமதி மேலும் தனது கல்வியை தொடர முடியாது என்ற செய்தி வந்தது. சுமதியின் பள்ளி ஆவணங்களில் அவளது மதமாக ‘சிறீலங்கன் கிறிஸ்டியன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காரணமாக வைத்து தமிழக தொழில்நுட்ப கல்வித் துறை (Department of Technical Education) சுமதி வெளிநாட்டினைச் சேர்ந்தவர் (Foreign National) என்பதால் அவர் பொறியியற் கல்லூரியில் சேர தகுதியில்லாதவர் (ineligible) என்று கூறி அவரது சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.

கல்வியை தொடர அனுமதி வேண்டி, சுமதி நீதிமன்றங்களின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறார்.

தொழில்நுட்ப கல்வித் துறையோ, ‘மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பிலேயே ‘Foreign National’ஆக இருப்பவர்கள் சேரத்தகுதியில்லாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதே’ என்று கூறுகிறது.

சுமதிக்கு இந்தியாவில் உயர்கல்வி மறுக்கப்படுவது சரிதானா? என்ற எனது சிறிய ஆய்வில் கிடைத்த பதில் ‘அவ்வளவு தூரம் இந்திய சட்டங்கள் இரக்கமற்றுப் போகவில்லை’ என்பதுதான்.

சுமதியைப் போன்று மேலும் பலர், அச்சத்தில் இருக்கலாம் என்பதால், சுமதியின் வழக்கு நிலுவையில் உள்ள பொழுதே இதனை இங்கு பதிந்து வைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

-oOo-

1950ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதன் பண்பட்ட தன்மையில், உலகின் எந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத்திற்கும் குறைந்தல்ல என்பதற்கு சாட்சியாக அதன் பிரிவு 14 மற்றும் 21ஐ குறிப்பிடலாம்.

பிரிவு 14 அரசு இந்திய எல்லைக்குள் அனைவரையும் சட்டத்தின் முன் சமமாக நடத்த வேண்டும் என்றும், சட்டம் அளிக்கும் பாதுகாப்பினை அனைவருக்கும் சமமாக அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.

பிரிவு 21 எந்த ஒரு மனிதனுடைய உயிரும், தனிப்பட்ட சுதந்திரமும் சட்டம் ஏற்ப்படுத்தியுள்ள நடைமுறையை கைக் கொள்ளாமல் பறிக்கப்பட முடியாது என்று கூறுகிறது.

இவை இரண்டும் அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் பல்வேறு அடிப்படை உரிமைகளில் முக்கியமானவை. இந்த உரிமைகளில் அடங்கியுள்ள உயரிய கோட்பாடுகளால் மட்டும் இந்த முக்கியத்துவம் ஏற்ப்படவில்லை.

மாறாக, சில அடிப்படை உரிமைகள் இந்த குடிமகன்களுக்கு மட்டுமே உரியதாகும். இந்த இரு உரிமைகள் மற்றும் பிரிவு 20, 22ல் கூறப்பட்ட உரிமைகள் மட்டும் ‘அனைவருக்கும்’ உரியதாகும். அதாவது, இந்திய குடிமகனாக இல்லாத (non-citizen) இல்லாத ஒருவருக்கும் இந்த உரிமைகளை மறுக்க முடியாது.

குடியுரிமை பெற்றிருந்தாலும், சிலருக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அதிபராகும் தகுதி கிடையாது. பாக்கிஸ்தானில் முஸ்லீம் அல்லாத ஒருவர் அதிபராக முடியாது. 1962 வரை சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை கிடையாது. சமீபகாலம் வரை தென்னாப்ரிகாவின் பூர்வ குடிகளுக்கு ஓட்டுப் போடும் உரிமை கிடையாது. இந்த நிலையில் நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தும் மேற்கண்ட உரிமைகள், நாம் பெருமை கொள்ளத்தக்கவை!

எனவே சுமதி வெளிநாட்டினர் என்பதால், தனக்கு கல்வி மறுக்கப்படுவது, அரசியலமைப்புச் சட்டம் தனக்கு உறுதிப்படுத்தும் சம உரிமையை பாதிப்பதாகும் என்று இந்திய குடிமகளாக இல்லையெனினும், நமது நீதிமன்றங்கள அணுக முடியும்.

ஆனால், சம உரிமையினை பாதிக்கும் வண்ணம் அரசு சட்டமியற்ற இயலும். அவ்வகையான பாகுபாடு ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருப்பின் அவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும். உதாரணமாக, மருந்து தயாரிப்பதற்கு வரி (excise tax) கிடையாது. ஆனால் சிகரெட்டிற்கு உண்டு என்றால் அதை ஏற்றுக் கொள்ளத்தக்க பாகுபாடு (reasonable classification) என்று நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும்.

எனவே, இந்திய குடிமகன் அல்லாதவர் இந்தியாவில் கல்வி பயில இயலாது என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அதனை இந்தவிதமான அடிப்படையில் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும். ஏனெனில் தகுதியுள்ள இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் உயர்கல்வியளிக்க நமது பொருளாதாரம் இடம் கொடுக்காத சூழ்நிலையில் இந்திய குடிமகன் அல்லாதவருக்கு பாகுபாடு காட்டும் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவினை பாதிக்காது என்றே நீதிமன்றங்கள் கருதும்.

எனவே இந்திய குடிமகன் அல்லாதவருக்கு உயர்கல்வியினை மறுக்கும் ஏதாவது சட்டம் உள்ளதா என்று ஆராய வேண்டியுள்ளது.

-oOo-

வெளிநாட்டினர் சட்டம் (Foreigners Act’1946) என்ற சட்டத்தின் பிரிவு 2(a) ‘வெளிநாட்டினர் என்பது இந்திய குடிமகன் அல்லாதவரை குறிக்கும்’ என்று விளக்கமளிப்பதை வைத்து இந்திய குடிமகன்கள் அல்லாதவரின் உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி இயற்றப்பட்டுள்ள ஒரு சட்டம் என்பதை அறியலாம்.

இதன் பிரிவு 3(2)(e)(vii) குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் வெளிநாட்டினர் ஈடுபடுவதை தடைசெய்து மத்திய அரசானது உத்தரவு பிறப்பிக்கலாம் என்று அனுமதியளிக்கிறது.

ஆனால் மத்திய அரசு இதுவரை ‘வெளிநாட்டினருக்கு இங்கு பொறியியல் கல்வி பயில தடை’ என்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவில்லை.

இந்தியா முழுவது பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அமைப்பான ‘தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கழக’மும் (AICTE) அவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக தெரியவில்லை.

மாறாக தொழில்நுட்ப கல்விக் கழகம் 21.01.04 அன்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் நடைமுறைப்படுத்திய விதிமுறைகளின்படி (Regulations) வெளிநாட்டைச் சேர்ந்தவர் (Foreign Nationals), இந்திய வம்சாவழியினர் (Person of Indian Origin) மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு தொழிநுட்ப கல்லூரிகளில் தனியே இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்கிறது.

கவனிக்கவும். இந்த விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படுவது இட ஒதுக்கீடு. எனவே பொது ஒதுக்கீட்டில் வெளிநாட்டினர் இடம் பெறுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

எனவே இந்திய குடிமகன்களாக இல்லாதிருப்பவர்கள் தகுதியிருப்பின் மற்ற இந்திய குடிமகன்களோடு இந்தியாவில் உயர்கல்வி பெற தடை ஏதும் மத்திய அரசோ அல்லது அதன் அமைப்பான தொழில்நுட்ப கல்விக்கழகமோ விதிக்காத வகையில், சுமதி இங்குள்ள பொறியியற் கல்லூரிகளில் இடம் பெற உரிமை உண்டு.

இந்திய அரசு 1983ம் ஆண்டு, சுகாதார அமைச்சம் அனுமதியளித்தால் (clearance) மட்டுமே மருத்துவ கல்லூரிய்களில் வெளிநாட்டினரை சேர்க்க முடியும் என்று உத்தரவிட்டது. கீர்த்தி தேசுமனாகர் எதிர் யூனியன் ஆப் இந்தியா ((1991) 1 SCC 104) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் கல்லூரியில் சேருவதற்கு முன்பு அவ்விதமான தடையின்மைச் சான்றிதழை சுகாதார அமைச்சகத்திடம் இருந்து பெற்றுக் கொடுத்து, தேவையான மதிப்பெண்களை பெற்றுள்ள வெளிநாட்டினர் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

சுமதியின் வழக்கிலோ, தமிழக தொழிநுட்பக் கல்வித் துறை (DTE) தனது அறிவிப்பில் (Prospectus) வெளிநாட்டினைச் சேர்ந்தவருக்கு (Foreign national) பொறியியற் கல்லூரில் இடம் வேண்ட தகுதியில்லை என்று கூறியுள்ளது. அது ஏற்றுக் கொள்ளத்தக்கதான வாதமா என்பதையும் அடுத்து ஆராய வேண்டியுள்ளது.

-oOo-

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் (Seventh Schedule) மூன்று முக்கியமான பட்டியல்கள் (Lists) உண்டு. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 246ன் படி முதலாவது பட்டியலில் (Union List) குறிப்பிடப்படும் விடயங்களைப் பற்றி மத்திய அரசு மட்டுமே சட்டமியற்ற முடியும். உதாரணமாக வருமான வரி. இரண்டாவது பட்டியலில் (State List) கூறப்படும் விடயங்களில் மாநில அரசு மட்டுமே சட்டமியற்ற முடியும். உதாரணமாக விற்பனை வரி. மூன்றாவது பட்டியலில் (Concurrent List) கூறப்படும் விடயங்களைக் குறித்து இரு அரசுகளும் சட்டம் இயற்ற முடியும். உதாரணமாக கல்வி.

வெளிநாட்டினர் பற்றிய சட்டமியற்றும் அதிகாரம் முதலாவது பட்டியலில் 17வது இலக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளதால், வெளிநாட்டினரை பாதிக்கும் சட்டம் எதுவும் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

மாநில அரசுக்கு சட்டமியற்றும் அதிகாரமே இல்லை என்ற பொழுதில், மாநில அரசின் அங்கமான தொழிற்நுட்ப கல்வித் துறைக்கு (DTE) வெளிநாட்டைச் சேர்ந்தவர் (Foreign National) தமிழக தொழிற்நுட்பக் கல்லூரிகளில் இடம் கோர தகுதியற்றவர்கள் என்று கூறும் அதிகாரம் கிடையாது.

எனவே, பொறியியற் கல்லூரி சேர்க்கை கையேட்டில் (Prospectus) கூறப்பட்டுள்ள நிபந்தனை செல்லுபடியாகாது. அந்த நிபந்தனையை காட்டி சுமதிக்கு இடம் மறுக்க முடியாது.

இந்த கருத்திற்கு ஆதரவாக நமது உயர்நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளை சுட்டிக் காட்ட முடியும். முதலாவது செவந்திநாத பண்டாரசன்னதி எதிர் தமிழ்நாடு அரசு ((2006) 1 MLJ 134) என்ற வழக்கில் தமிழக அரசு, இந்து சமய அறநிலைய சட்டத்தில் (Hindu Religious and Charitable Endowment Act) “இந்து சமய நிறுவனங்களில் இந்திய குடிமகன் அல்லாதவர் அறங்காவலராக (Trustee) இருக்க முடியாது” என்று ஏற்ப்படுத்திய சட்டத்திருத்தம் செல்லுமா என்று ஆராயப்பட்டது. நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியம் அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பட்டியலில் கூறப்பட்டிருப்பதால், சமய நிறுவனங்களை பாதிக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கும் இருந்தாலும், மேற்கண்ட சட்ட திருத்தமானது அடிப்படையில் வெளிநாட்டினரின் உரிமை சம்பந்தப்பட்டதாக இருப்பதால், மாநில அரசுக்கு இவ்விதமான சட்ட திருத்தம் கொண்டு வர அதிகாரம் இல்லை’ என்று தீர்ப்புக் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பின் 16 பத்தியில் நீதிபதி கூறும் ஒரு கருத்து கவனிக்கத்தகுந்தது. “This can be elucidated further by posing a question as to whether a State can bar the admission of a foreigner into an educational institution or a professional institution, in view of the fact that education falls under Entries 25 and 26 of the Concurrent List”

அடுத்த தீர்ப்பு நீதிபதி கற்பகவிநாயகம் ரவிக்குமார் எதிர் சுரேஷ் குமார் (2002 (3) CTC 616) என்ற வழக்கில் கூறியது. போதிய பணமின்றி காசோலை கொடுத்த குற்றத்திற்காக காசோலைகள் குறித்தான சட்டத்தின் (Negotiable Instruments Act) கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு நபர், தமிழக அரசு அளித்த தண்டனை தள்ளுபடியினால் (remission) விடுதலை செய்யப்பட்டார். அது முறையானதா என்று விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் கீழ் தண்டனை தள்ளுபடி அளிக்க அதிகாரம் இருந்தாலும், குற்றவாளிக்கு தண்டனையானது காசோலைகள் குறித்தான சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. காசோலைகள் குறித்தான சட்டம் இயற்றுவதற்கு மத்திய அரசிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளபடியால், மாநில அரசு அந்தச் சட்டத்தின் கீழ் அளித்த தண்டனையில் தலையிட முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மேற்கண்ட இரு தீர்ப்புகளிலிருந்து, வெளிநாட்டினருக்கு இங்கு கல்வி பயில தடை என்று சட்டமியற்ற/ உத்தரவிட தமிழக அரசிற்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவாகும். எனவே தமிழக தொழில்நுட்ப கல்வித் துறை, மத்திய அரசோ அல்லது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகமோ ஏதும் கூறாத நிலையில், தன்னிச்சையாக இவ்வாறு ஒரு தடையை விதிக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரம் இல்லை.

இந்தக் கருத்தினை ஒட்டியே சனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி தொடர்ந்த ஒரு வழக்கிலும், சென்னை உயர்நீதிமன்றம் 21.11.03 அன்று தீர்ப்புக் கூறியுள்ளது. அந்த வழக்கில் (WP No.26463 / 2003) இலங்கையிலிருந்து இங்கு குடிபெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அளித்து இடம் கொடுக்க உத்தரவிட வேண்டுமென்று கோரப்பட்டது. அகதிகளைப் பொறுத்து அவ்வாறு உத்தரவிட மத்திய அரசிற்குதான் அதிகாரம் உண்டு என்று கூறி வழக்கினை முடித்து வைத்தது.

-oOo-

அடுத்து வெளிநாட்டினருக்கு இங்கு உயர்கல்வியினை மறுக்க, மத்திய அரசிற்கு அதிகாரம் இருப்பினும், அவ்வாறான ஒரு தடையினை உருவாக்குவது தார்மீக ரீதியில் முறையான ஒரு செயலாக இருக்காது. ஏனெனில் ‘கல்வியில் பாகுபாட்டிற்கு எதிரான அறிக்கை’ (Convention against Discrimination in Education) என்று பாரீசுவில் 14.02.60 அன்று நடைபெற்ற யுனெஸ்கோ (UNESCO) கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

அந்த அறிக்கையின் Article 3(e) கூறுவதாவது:
“In order to eliminate and prevent discrimination within the meaning of this Convention, the states Parties thereto undertake:

(e) To give foreign nationals resident within their territory the same access to education as that given to their own nationals”


வெளிநாட்டினருக்கும், இந்தியருக்கு இணையாக கல்வியில் வாய்ப்பு வழங்குவதாக உறுதியளிக்கும் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்ட இந்தியா எவ்வாறு வெளிநாட்டினருக்கு உயர்கல்வியில் தடை விதிக்க முடியும்?

-oOo-

அடுத்தது, தமிழக தொழிற்நுட்ப கல்வித்துறை வெளிநாட்டினருக்கு (Foreign Nationals) இங்கு கல்வி பயில தடை என்று கூறியுள்ளது முறையானது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், சுமதியை அந்தத் தடை பாதிக்குமா என்று ஆராய்ந்தால், பாதிக்காது என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

முதலில் சுமதியை வெளிநாட்டினர் என்பதற்கு ஆதாரமாக அவளது பள்ளி ஏடுகளில் அவள் ஒரு ‘சிறீலங்கன் கிறிஸ்டியன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆதாரமாக கூறப்படுகிறது. ஒருவர் தன்னை சிறீலங்கன் கிறிஸ்டியன் என்று கூறிக்கொள்வதால் அவரை வெளிநாட்டினர் என்று கருத முடியாது. இந்தியாவில் சிரியன் கிறிஸ்டியன் என்பவர்கள் இருக்கின்றனர். அதற்காக கள் சிரியா நாட்டினை சேர்ந்தவர்கள் இல்லை. கத்தோலிக்கர்கள் தங்களை ரோமன் கத்தோலிக்கர் என்றுதான் அழைத்துக் கொள்கின்றனர்.

இலங்கை கடவுச்சீட்டுடன் இந்தியாவிற்கு வந்த சுமதி இலங்கை குடிமகள்தானே? அவ்வாறு என்றால் அவர் வெளிநாட்டினர்தானே? என்ற கேள்வி எழலாம்.

கடவுச்சீட்டு என்பது ஒருவரின் குடியுரிமையை யூகிக்கும் ஒரு ஆவணமே தவிர அதை வைத்து மட்டுமே அவரது குடியுரிமையை முற்றாக தீர்மானிக்க முடியாது என்றாலும், நமது வாதத்திற்காக சுமதி இந்திய குடிமகள் இல்லை என்று வைத்துக் கொள்ளலாம்.

குடியுரிமையை வைத்து மட்டுமே ஒருவரின் தேசியத்தை தீர்மானிக்க முடியாது என்பதுதான் இதற்கு பதிலாக இருக்க முடியும். ஏனெனில் பலர் நினைப்பது போல, பலமுறை சட்டம் இயற்றுபவர்களாலும், ஏன் நீதிமன்றங்களாலும் ஒன்றுக்கொன்று இணையாக பயன்படுத்தப்பட்டாலும் Citizenship மற்றும் Nationality என்ற பதங்கள் வெவ்வேறானவை.

இந்த இரு பதத்திற்கும் உள்ள வேற்றுமையை உணராமல், சுமதியின் வழக்கில் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் எழுப்பப்படும் கேள்வி, சுமதி இலங்கை குடிமகளாக இருக்கும் பட்சத்தில் அவள் வெளிநாட்டினர்தானே என்பதுதான்.

அதற்கு பதில் தொழிற்நுட்ப கல்வித்துறை உயர்கல்வியை தடுத்தது Foreign Citizensக்கு அல்ல மாறாக Foreign Nationalsக்கு. எனவே குடியுரிமை என்பது இங்கு ஒரு பொருட்டே அல்ல!


இதற்கு ஆதாரமாக நமது உச்ச நீதிமன்றம் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிட் எதிர் வர்த்தக வரி அலுவலர் (AIR 1963 SC 1811) என்ற வழக்கில் கூறியுள்ள தீர்ப்பில் கூறப்படும் சில கருத்துரைகளை (observations) எடுத்துக் கூறலாம். ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்சால் தீர்மானிக்கப்பட்ட இந்த வழக்கில், நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் பிளவுபட்டாலும் (divided) இந்த கருத்தினைப் பற்றி ஏதும் வேற்றுமை இல்லை. இந்த தீர்ப்பின் பல்வேறு இடங்களில் citizenship என்பதும் nationality என்பதும் வேறு வேறு என்று எடுத்துக் கூறும் நீதிபதிகள் அதன் 18வது பத்தியில்,

‘Hence all citizens are nationals of a particular state but all nationals may not be citizens of the State. In other words citizens are those persons who have full political rights as distinguished from nationals who may not enjoy full political rights and are still domiciled in that country’
என்று கூறுவதை வைத்து சுமதியின் வழக்கில் சுமதி இந்திய குடிமகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை மட்டும் வைத்து அவள் இந்திய தேசிய இனத்தை சேர்ந்தவர் இல்லை என்று கூற முடியாது என்று வாதிட வழி இருக்கிறது.

எது எவ்வாறாக இருப்பினும், வெளிநாட்டு தேசிய இனத்தை (Foreign National) சேர்ந்தவரா? இல்லையா? என்பது, பொருண்மை சார்ந்த ஒரு கேள்வி (Question of fact). அதனை சுமதியின் கடவுச்சீட்டினை மட்டுமே வைத்து கணிக்க இயலாது என்பதையும் பார்த்தோம். எனவே, அவ்வாறான நிலையில் முதலில் சுமதி, தான் இந்திய தேசிய இனத்தை சேர்ந்தவர் என்று நிரூபிக்கும் வண்ணம் அவளுக்கு தகுந்த வாய்ப்பளித்து, அதற்குப் பின்னரே அரசு, சுமதி இங்கு உயர்கல்வி பெற தகுதி உள்ளவரா? இல்லையா? என்று தீர்மானிக்க இயலும்.

மாறாக, எவ்வித அறிவிப்பும் இன்றி, எவ்விதமான விசாரணையும் நடத்தப்படாமல், திடுமென ஒரு நாள், ‘உனக்கு தொழிற்கல்வி பயில தகுதியில்லை’ என்று கூறுவது சட்டத்திற்க் புறம்பானதாகும்.

-oOo-

தேசிய இனம் என்பது வேறு, குடியுரிமை என்பது வேறு என்பதற்கு பல்வேறு அரசியல் விஞ்ஞான (Political Science) விளக்கங்கள் இருப்பினும், மேலே கூறியபடி ஒரு விசாரணையானது நடத்தப்பட்டால், சுமதியால் தான் ‘foreign national’ இல்லை என்று நிரூபிக்க முடியுமா என்றால், அரசியல் விஞ்ஞானப்படி எப்படியோ ஆனால், தமிழக தொழிற்கல்வித் துறையினை கட்டுப்படுத்தும் வண்ணம் சுமதியால் எளிதாக நிரூபிக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

நாம் மேலே பார்த்தபடி, தொழிற்கல்வியினை முழுவதுமாக கட்டுப்படுத்துவது தொழிற்கல்விக்கான அகில இந்திய குழுமம் (AICTE) என்ற அமைப்பு.

அதன் ‘The All India Council for Technical Education (for Admission under Foreign Nationals/ Persons of Indian Origin category/ quota in AICTE approved institutions) Regulations 2000 என்ற விதிமுறைகளில் Foreign National என்பதற்கான விளக்கம் இவ்வாறு கூறுகிறது
“3.12 Foreign National in this context means an individual having citizenship of a foreign country (citizens of all countries other than India) and not having the status of NRI and/or Persons of Indian Origin (PIO)”

இந்த விளக்கத்தின் மூலம் ஒருவர் வெளிநாட்டு குடிமகனாக இருப்பினும், இந்திய வம்சாவழியினராயிருப்பின் foreign citizen என்று கருதப்படமாட்டார் என்று அறியலாம்.

அதே விதிமுறைகளில் இந்திய வம்சாவழியினர் (PIO) என்பதற்கான விளக்கமாவது:
“3.11 Persons of Indian Origin in this context means a person having foreign citizenship without NRI status, but who holds a Foreign Passport at the time of sending application, consideration for admission and during the period of study and he or anyone of his parents or anyone his grandparents is (or was) citizen of India.

சுமதியின் தாத்தா/ பாட்டி முன்னொரு காலத்தில் இந்திய குடிமகனாக இருந்திருக்கும் பட்சத்தில் சுமதி இந்திய வம்சாவழி என்று கோர முடியும்.

ஏஐடிசியின் விதிமுறைகள் தமிழக தொழிற்கல்வித்துறையினை கட்டுப்படுத்தும்.

ஆக, சுமதி எல்லாவகையிலும் தனது வழக்கில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருக்கிறது.

-oOo-

தமிழக அரசின் தொழிற்கல்வித்துறை சுமதியின் துர்பாக்கியமான நிலையை கருதியாவது, இப்படிப்பட்ட ஒரு உத்தரவினை பிறப்பிக்காமல் இருந்திருக்கலாம்.

சற்றும் சிந்திக்காமலும், எவ்வித விளக்கத்தினை பெறாமலும் கூறப்பட்ட ஒரு உத்தரவின் மூலம், இன்று ஒரு அப்பாவிச் சிறுமியின் எதிர்காலமே கேள்விக்குறியாக நிற்கிறது!

மதுரை
17.06.09

31.3.08

‘ஞாநி’களும் மேற்போக்காக மேய்தலும்...

திருமணத்தை ரத்து செய்வதற்கான உரிமை குரான் விதிகளின்படி இஸ்லாமியப் பெண்களுக்கும் உண்டு என்று அறிவித்து அதற்கான விதிமுறைகளை வெளியிட்டிருப்பதற்காக அனைந்திந்திய முஸ்லீம் சட்ட வாரியத்துக்கு இ.வா.பூச்செண்டு” - எழுத்தாளர் ஞாநி!

‘ஞாநிகளுக்கு எதற்கு அறிவு? என்ற எனது பதிவினை தொடர்ந்து, தனது கருத்துகளை ‘செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்’ என்று தனது வலைப்பதிவில் எழுதிய வெங்கட் “அது பின்நவீனத்துவமோ, மரபு மாற்றமோ, சூடேற்றமோ, சூடான் அரசியல் விவகாரமோ இவர்கள் பல சமயங்களில் மேம்போக்காக மேய்ந்துவிட்டு அடுத்தவாரமே தங்கள் மேதமையை அச்சிலேற்றிவிடுவார்கள்” என்று எழுதியதற்கு ஒரு உதாரணம்தான் மேலே காணும் பூச்செண்டு!

முதலில் ஞாநி குறிப்பிடுவது முஸ்லீம் சட்ட வாரியம் அல்ல. மாறாக முஸ்லீம் பெண்கள் சட்ட வாரியம். அடுத்து மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது விதிமுறைகள் அல்ல. மாறாக, இஸ்லாமியர்களின் திருமண ஒப்பந்தமான நிக்காநாமாவின் வடிவம் (model form).

இஸ்லாமிய சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board) என்பது 1973ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு. ‘அனைத்திந்திய’ ‘வாரியம்’ என்ற வார்த்தைகள் அதன் பெயரில் இருந்தாலு அரசு சார்ந்த ஒரு அமைப்பல்ல. மாறாக பொது சிவில் சட்டம் என்ற அரசின் கொள்கைக்கு எதிரான ஒரு அமைப்பு (pressure group).

2005ம் ஆண்டு நிக்காநாமா இவ்வாறு இருக்கலாம் என்று ஒரு வடிவத்தினை இந்த அமைப்பு வெளியிட்டது. இந்த அமைப்பின் தீர்மானங்கள் இஸ்லாமியப் பெண்களின் பிரச்னைகளை போக்குவதாக இல்லை என்று சில இஸ்லாமியப் பெண்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இஸ்லாமியப் பெண்கள் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board). இரு அமைப்புகளையும் இங்குள்ள இஸ்லாமியர்கள் சீந்துவதில்லை.

இரு வாரங்களுக்கு முன்னர் இந்த பெண்கள் அமைப்பு தனது நிக்காநாமாவை வெளியிட்டது. உடனே, மற்ற நிறுவனத்திடம் இருந்து, தேவையற்றது (irrelevant) என்ற கண்டனம் வந்து விட்டது!

ஆனால் ‘ஞாநி’ நடப்பது என்ன ஏது என்று புரியாமலேயே கண்டனம் தெரிவித்த அமைப்பிற்கு பூச்செண்டைக் கொடுத்துவிட்டார்.

-oOo-

நான் மேலே கூறும் விபரங்கள் அனைத்தும், சிறிது நேரம் செலவழித்து இணையத்தில் தேடினாலேயே கிடைக்கும். எழுதும் விஷயத்தில் சிறு ஆராய்ச்சி கூட செய்ய விரும்பாதவர்கள்தான் இன்றைய தமிழ் பத்தி எழுத்தாளர்கள்.

சாருநிவேதிதா தனது கட்டுரையொன்றில் துருக்கி இந்தியாவை விட மிகவும் ஏழை நாடு என்று குறிப்பிடுகிறார். பின்னர் ஒரு முறை வெறுமே துருக்கியை ஏழை நாடு என்று தனது மற்றொரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டதையும் வாசிக்க நேர்ந்தது.

இந்தியாவிற்கு எதிரான துருக்கியின் பொருளாதார வலிமையினை சுமார் பத்து விநாடி நேரத்தில் இணையத்தில் கண்டுபிடித்து விடலாம். ஆனால், யார் எம்மை கேள்வி கேட்பது என்ற தைரியம்தானே இவ்வாறு இவர்களை எழுத வைக்கிறது.

சுசூகியும், யமாஹாவும் வரும் வரை இந்திய பஜாஜும், ராஜ்தூத்தும் இப்படித்தான் ‘வாகனம் என்றால் இரு சக்கரத்தில் சென்றால் போதும்’ என்ற வகையில் நடந்து கொண்டன. தற்பொழுது அவைகள் இருக்கும் இடம் தெரியவில்லை.

-oOo-

எழுத்தாளர் சுஜாதா கூட இதற்கு விதிவிலக்கல்ல... ‘சுஜாதா வீட்டு லாண்டிரிக்கணக்கை கூட வெளியிடுவார்கள்’ என்று வைக்கப்பட்ட ஒரு விமர்சனத்தை கிண்டல் செய்யும் நோக்கோடு, சாவி இதழ் ஒருமுறை தனது பக்கங்களில் ஒன்றினை ‘லாண்டிரிக் கணக்கு’ ஒன்றினை வெளியிட்டது. யாரையோ நக்கல் செய்கிறோம் என்ற பெயரில், மறைந்த சா.விஸ்வநாதன் காசு கொடுத்து, தனது பத்திரிக்கை வாங்கியவர்களை அவமானப்படுத்தினார்.

அந்நியனுக்காக சுஜாதா செய்த ‘ஆராய்ச்சி’யினை இங்கு குறிப்பிட்டுள்ளேன்!

-oOo-

இறுதியாக தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது குறித்து விவாதங்கள் நடைபெற்ற காலத்தில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ‘தீராநதி’ யில் எழுதிய கட்டுரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைப் பற்றி கூறுவதைப் பார்க்கலாம்

இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. தமிழ் மொழி செம்மொழி என்று கிவிட்டால், அரசியல் சட்டம் எட்டாம் பிரிவின்படி, நவீன இந்திய மொழி என்று அதற்குக் கிடைத்து வரும் உரிமைகளும் சலுகைகளும் பாதிக்கப் படமாட்டா என்பது என்ன நிச்சியம்? ஒரே மொழி இரண்டு தகுதிகளுக்கும் உரியது காது என்று, மனித வள மேம்பாட்டுத் துறை கூறாது என்பது உறுதியா?

எழுத்தாளரின் கட்டுரை ‘ராயர் காபி கிளப்’ என்ற வலைக்குழுமத்தில் விவாதப் பொருளாகிய பொழுது நான் எழுதியது

தேர்ந்த எழுத்தாளரான கட்டுரையாசிரியர், இந்தக் கருத்துக்காக எந்த ஆராய்வின் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார் என்பது புரியவில்லை. அரசியல் சட்டத்தின் எட்டாம் பிரிவில் கண்ட மொழிகள் முதலில் நவீன இந்திய மொழிகள் என்று கூறப்படவில்லை. மேலும் அந்த அட்டவணையில் 14வது மொழி சமஸ்கிருதம். நான்காவது மொழி ஹிந்தி! அரசியலமைப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளில் பல சிறப்பு இடங்கள் ஹிந்திக்கும் சில சிறப்பு இடங்கள் சமஸ்கிருதத்திற்கும் உள்ளன. ஹிந்திக்கு அட்டவணைத்தகுதியும் ஆட்சி மொழித் தகுதியுமாக இரு தகுதிகள் இருக்கையில் தலையிடாத மனித வள மேம்பாட்டுத் துறை தமிழைக் கண்டதும் தலையிடுமோ?

அடுத்து அரசியல் சட்டத்தின் எட்டாம் பிரிவில் ஒரு மொழி இடம் பெறுவதால் அதற்கு ரூபாய் நோட்டில் இடம் பெறுவதை தவிர வேறு பெரிய உரிமையும், சலுகையும் இருப்பதாக நான் அறியேன். இல்லாத உரிமையும், சலுகையும் எவ்வாறு பாதிக்கப்படும் என ஆசிரியர் கூறுகிறார்? அரசியல் அமைப்புச் சட்டத்தில்இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளுக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் கூறப்படாத நிலையில் இந்த அட்டவணையில் குறிப்பிடாத மொழிகள் கூட தங்கள் வளர்ச்சிக்கான தொகையினை வேண்டிப் பெறலாம்.
இந்த எட்டாவது அட்டவணையே ஒன்றுக்கும் உதவாத, பயனற்ற அட்டவணை என்று முன்பு 'இந்திய ஆட்சி மொழி' என்ற கட்டுரையில் விளக்கமாக எழுதியிருந்தேன். என்னிடம் தற்பொழுது இல்லை. இராயர் கிட்டங்கியில்
எங்காவது புதைந்து கொண்டிருக்கலாம்.

தமிழ் செம்மொழி என்று அறிவிப்பதால் நன்மை ஏதாவது இருக்கிறதோ இல்லையோ தீமை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கட்டுரையாசிரியர் தனது கட்டுரையில் ஏதாவது தீமையை சுட்டிக்காட்டும் எண்ணத்துடன் பொதுவாக எழுதியது போல இருக்கிறது மேற்கண்ட வாசகம்


இன்று வரை எனது கருத்திற்கு யாரிடமிருந்தும் பதிலில்லை. எனது கருத்து தவறாகக் கூட இருக்கலாம். ஆனால், தகுந்த ஆய்வினன மேற்கொண்ட பின்னரே நான் எனது கருத்தினை எழுத துணிந்தேன். ஆனால், இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஏதும் ஆய்வினை புரியாமலேயே, தனது கருத்தினை எழுதினார் என்றே இன்றளவும் நம்புகிறேன்.

மதுரை
31.03.08


THERMAL POWER STATION, THOOTHUKUDI

30.3.08

‘ஞாநி’களுக்கு எதற்கு அறிவு?

மும்பையில் இருக்கையில், மிட் டே (Midday) டைம்ஸ் ஆப் இந்தியா (times of India) ஆகிய தினசரிகளில் ரஜ்தீப் சர்தேசாய், ஷோபா டே, கங்காதர், சுவாமிநாத ஐயர் மற்றும் பல பத்தி எளுத்தாளர்கள் (columnists) எழுதும் கட்டுரைகளை (column) மிகவும் ஆர்வமுடன் படிப்பேன். நாமும் இப்படி எழுதிப் பார்த்தால் என்ன என்ற ஆசை அவ்வப்பொழுது எழுந்தாலும், அவர்களைப் போல மொழியின் மீது ஆளுமையும், அறிவும் நமக்கு வாய்க்குமா என்ற பயத்தில், வெறுமே ஆசிரியருக்கு எழுதிய சில கடிதங்களோடு நிறுத்திக் கொண்டேன்.

முக்கியமாக எதாவது ஒன்றிற்கு பொருத்தமான ஆங்கில வார்த்தை என்னவென்று தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது?

மதுரைக்கு வந்த கடந்த சில வருடங்களில் நான் இழந்தது, ஆங்கில பத்தி எழுத்தாளர்களின் கட்டுரைகளை. ஆயினும் தமிழிலும் பாமரன், ஞாநி, சாருநிவேதிதா போன்றவர்கள் தொழில் முறையில் பத்தி எழுதுகிறார்கள். பாமரன் சாரு நிவேதிதா போன்றவர்களைப் போல ஞாநி எனக்கு சுவராசியமாக இருந்ததில்லை எனினும், அவரது கருத்துகள் இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

ஆனால், நேற்று குமுதத்தில் வாசிக்க நேர்ந்த ஞாநி அவர்களது கட்டுரை, மும்பையில் நான் கொண்டது எத்தனை அர்த்தமற்ற பயம் என்பதை விளக்கியது.

மனிதர் மொழி ஆளுமை, தமிழ் அறிவு எதுவும் பற்றிக் கவலைப்படாமல், தானும் ஒரு பத்தி எழுத்தாளன் என்று கூறிக்கொண்டு, எங்கெல்லாம் முடியவில்லையோ அங்கெல்லாம் ஆங்கில வார்த்தைகளை உபயோகித்தே எழுதியிருக்கிறார்.

ஆரம்பத்திலேயே ‘அவையெல்லாம் ‘சப்ஜெக்ட்டுக்கு’ முழு நியாயம் செய்யவில்லை’ என்கிறார். தான் நினைப்பதை எழுத்தில் வடிக்க சிரமப்படும், இயலாதவர்களும் இங்கு தொழில் முறை எழுத்தாளர்கள் என்று கூறிக்கொள்ள முடியுமென்றால், அவரது அரைகுறை எழுத்தினை காசுக்கு விற்கும் பத்திரிக்கை வாசகனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பது அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்?

ஹீரோ, சினிமா’ போன்ற வார்த்தைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு இன்று கதாநாயகன், திரைப்படம் என்ற வார்த்தைகள் சரளமாக எழுத்து உலகில் புழங்கி வந்தாலும் பாவம், அவருக்குத் தெரியவில்லை போலும். முரணாக, பின்னர் கதாநாயகன் என்ற வார்த்தையினை அவரே உபயோகிக்கிறார்.

கால்ஷீட் நேரத்துக்கு நடிக்க செல்லாமல்’ என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன என்பது ஏதோ, தன்னார்வர்த்தில் எழுதும் வலைப்பதிவாளர்களுக்கு தெரியாமல் இருப்பதில் அர்த்தமுண்டு. ஆனால், காசுக்கு எழுதும் ஞாநி போன்ற எழுத்தாளர்கள் அவசியம் அதனை கற்று பின் எழுத முயல வேண்டும்.

‘எழுப்பியிருக்கும் கேள்வி ஒரு படத்தின் கேப்டன் இயக்குஞரா? ஸ்டாரா? நடைமுறையில் அது ஸ்டார்தான் என்று இருந்த போதும் எல்லோருமே நியாயப்படி டைரக்டர்தான் கேப்டனாக இருக்க வேண்டும்’

தொடர்ந்து ஒரு விஞ்ஞானியைப் பற்றி எழுத முயல்பவர் ‘கணிதம், பயோமெடிக்கல், எஞ்ஜினீயரிங், மருத்துவம் சர்ஜரி................கார் டிரைவர், மெக்கானிக், டாக்டர், சினிமா இயக்குஞர், டி.வியில் வானிலை அறிவிப்பாளர்’ என்று இஷ்டத்துக்கு பண்பலை வானொலி அறிவிப்பாளர் மாதிரி பொளந்து கட்டுகிறார்.

பின்னர் கற்பிதங்கள் என்ற அதிகம் தெரிந்திராத வார்த்தையினை பயன்படுத்துபவருக்கு ‘பிரிலியண்ட்’ என்ற வார்த்தைக்கு தமிழில் தெரியாமல் தடுமாறுகிறார்.

இறுதியாக, ‘காற்றுப் பிரிதல்’ என்று எந்த மருத்துவரும், விஞ்ஞான மாணவரும் இயல்பாக பயன்படுத்தும் வார்த்தையினை தமிழில் எழுதினால், அதுவும் விஞ்ஞான ஆராய்ச்சியினைப் பற்றி எழுதுகையில் ‘பாரம்பரியம் மிக்க குமுதம்’ இதழுக்கு பொருந்தி வராது என்பதால் ‘farting’ என்று ஆங்கிலத்தில் எழுதுவதாக ஒரு சப்பைக்கட்டு வேறு!

அண்ணாமலையாரே இந்தப் புகழுரையினை கேட்டு சற்று, மேலுலகத்தில் நெளிந்திருப்பார்!

-oOo-

எனது சந்தேகம் இதுதான்.

பணம் வாங்கிக் கொண்டு எழுதும் ‘எழுத்தாளரான’ ஞாநிக்கு இருக்கும் தமிழ் அறிவினை விட எனது ஆங்கில அறிவு சற்று அதிகம் இருக்கலாம். ஏனெனில் நான் தமிழ் வார்த்தைகளை உபயோகித்து ஆங்கில கட்டுரை எழுதியதில்லை. ஹிந்துவில் எனக்கு பத்தி எழுத வாய்ப்பு தருவார்களா?

மதுரை
30.03.08

“Some men are born Mediocre, some men achieve mediocrity, and some men have mediocrity thrust upon them”


MY BELOVED THOOTHUKUDI

29.3.08

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி III

தனது கட்டுரையில் வெங்கட் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மொழிகளில் கிடைக்கிறதா? என்று ஒரு கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

பல சட்டங்களின் தமிழ் வடிவம் கிடைக்கும் என்றாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் எழலாம். உதாரணமாக சட்ட பிரிவுகளில் காணப்படும் 'shall', 'may', 'as' போன்ற வார்த்தைகளின் நுணுக்கமான அர்த்தம் பற்றிக் கூட பல சமயங்களில் விவாதம் நடைபெறுவதுண்டு. மொழி பெயர்ப்புக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் இவ்வாறு
நுணுக்கமாக ஆராய்கையில் குழப்பத்தை விளைவிக்கும். எனவே தமிழ் மொழிபெயர்ப்பு வெறுமே படிப்பு உபயோகத்திற்கே பயன்படும். ஆங்கில வடிவம் மட்டுமே செயல் வடிவம் பெறும். தமிழிலேயே சட்டமியற்றப்பட்டால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக, சட்ட வரைவுக்குழு டாக்டர்.ராஜேந்திர பிரசாதை அதனை ஹிந்தி மொழியாக்கம் செய்து வெளியிட அனுமதியளித்தது.

அதன்படி ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு சட்ட வரைவுக்குழு உறுப்பினர்கள் 1950ம் வருடம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியாக்கம் இரண்டிலும் கையெழுத்திட்டனர். மொழியாக்கத்தைப் படித்த நேரு, 'தான் அதில் ஒரு வார்த்தையை கூட புரிந்து கொள்ள முடியவில்லை' என்று கடிதம் எழுதினார்.

பின்னர் ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலையில்....ஹிந்தி வடிவம் இறுதியாக 1988ம் வருடம் முழுமை பெற்று அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்திய பிரிவு ஆர்டிகிள் 394Aன் படி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஹிந்தி தவிர்த்த மற்ற மொழிகளுக்கு இந்த உரிமையில்லை.

பொதுவாக சட்டங்கள், நீதிமன்ற முறைகள் தமிழிலோ அல்லது ஹிந்தியிலோ ஏற்படுத்தப்படுவதோ கடினமான காரியம். ஆனால் இயலாத காரியமல்ல. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும், முன்னேற்றமும் தேவை.

பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் லத்தீனே படித்தவர்களின் மொழியாக இருந்து பின்னர் ப்ரெஞ்சு அந்த இடத்துக்கு வந்தது. மெல்ல மெல்ல பின்னர் ஜெர்மன், ரஷிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க பல வருடங்கள் பிடித்தது.

-oOo-

இறுதியாக, நீதிமன்றங்கள் எவ்வாறு இந்த மொழிப் பிரச்னையில் வேறுபட்ட நிலையினை எடுத்து நீதிபதிகளும் ரத்தமும் சதையுமான மனிதர்கள் என்று உணர வைக்கிறது என்பதற்கு உதாரணமான வழக்குகள் இரண்டினைப் பார்க்கலாம்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்ற ‘தியாகி’களுக்கான ஓய்வூதிய (pension) திட்டம் ஒன்றினை அறிவித்தது.
உடனடியாக சுதந்திரப் போராட்ட ‘தியாகி’யான திரு.தளவாய் அவர்கள் இந்த ஓய்வூதிய திட்டம் 'ஹிந்தியை மேம்படுத்தி பரப்புமாறு மைய அரசினை வேண்டும்' அரசியலமைப்புச் சட்டத்தின் 351ம் பிரிவை பாதிக்கிறது என்ற வாதத்துடன் ஒரு நீதிப்பேராண்மை மனுவை தாக்கல் செய்தார்.

சென்னை நீதிமன்ற நீதிபதிகள், 'நிதிப் பகிர்வு சட்டத்தின் மூலம் மாநில அரசுக்கு இவ்விதமான திட்டத்திற்கு நிதி ஒதுக்க அதிகாரம் இருக்கிறது' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

தளவாய் உச்ச நீதிமன்றம் சென்றார்.

உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, 'இவ்விதமான ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி தமிழக அரசின் திட்டத்தினை செல்லாது என அறிவித்தனர்.

நீதிபதிகள் முக்கியமாக தீர்ப்பில் கூறிய வாசகங்கள் கவனிக்கத்தக்கது. 'தமிழக அரசின் இந்த திட்டம் பிளவுபடுத்தும் பிரிவினைவாத சக்தியினை உள்ளடக்கியது. ஏதாவது மாநிலம் ஹிந்திக்கு அல்லது வேறு மொழிக்கு எதிரான உணர்வுகளை தூண்டி விட முயன்றால் அத்தகைய முயற்சியானது மக்கள் விரோத, தேச விரோத செயல்கள். அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்' (AIR 1976 SC 1559)

எனவே தமிழக அரசின் திட்டம் செல்லாக் காசாகியது!


-oOo-

இவ்வாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் தில்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் வேறுபட்ட கோணங்களில் மொழிப் பிரச்னையை அணுகியது மற்றொரு வழக்கிலும் நேர்ந்தது.

1960ம் ஆண்டு கையெழுத்தான குடியரசுத் தலைவரின் உத்தரவினைத் தொடர்ந்து பல மைய அரசுத் துறைகள் தமது பணியாளர்களுக்கு கட்டாய ஹிந்தி பயிற்சி அளிக்கும் அறிவிப்பினை வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம். இவற்றை எதிர்த்து அப்போது நாடாளுமன்றத் தலைவராக இருந்த முரசொலி மாறனும் தபால் துறையில் வேலை பார்த்த ஒரு உதவி மேலாளரும் தனித் தனியே ரிட் மனுக்களை தொடர்ந்தார்கள். முரசொலி மாறனின் ரிட் மனு அவர் அந்த அறிவிப்பினால் பாதிக்கப்படுபவர் அல்ல என்ற காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் தபால் துறை உதவி மேலாளரின் ரிட் மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவுகள் அரசு மொழிகள் சட்டத்தின் பிரிவுக்கு மாறாக இருப்பதாக கூறி அவற்றை செல்லாது என அறிவித்தது. பிரச்னை உச்ச நீதிமன்றம் சென்றது.

தளவாய் வழக்கினை விசாரித்த அதே நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்சு, குடியரசுத் தலைவரின் உத்தரவும், அரசுத் துறை நிறுவனங்களின் அறிவிப்புகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணமாகவே உள்ளன. அவை அரசு மொழிகள் சட்டத்தின் பிரிவுகளை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக அவற்றிற்கு இசைந்தே உள்ளது' என்று கூறினர்.

மேலும், 'கட்டாய பயிற்சியானது வேலை நேரத்தின் பகுதியாகவே வழங்கப்படுகிறது. எனவே கட்டாயமாக அதில் கலந்து கொள்வது அவர்களது கடமை. இவற்றில் தேற வேண்டிய அவசியமில்லை. தேறாதலால் ஏதும் பாதிப்பில்லை. தேறிய்வர்களூக்கு ஊக்கத் தொகை (incentive like prizes and increase in pay) வழங்கப்படுவதால் மட்டுமே சமநிலை பாதிக்கப்படுகிறது என்பதல்ல' என்று கூறி மைய அரசு அலுவலக பணியாளர்களுக்கான கட்டாய ஹிந்தி பயிற்சியும் அதில் தேறுவதால் கிடைக்கும் ஊக்கத் தொகைகளும் சட்டத்திற்கு உட்பட்டதே என்று தீர்ப்பளித்தனர். (AIR 1977 SC 231)

இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி மட்டுமே.... ஆட்சி மொழி மட்டுமல்ல. அரசுப் பணிக்கான மொழியாகவும் அதனை முழுவதும் மாற்றும் வண்ணம் இந்திய மக்களாகிய நாம் செயல்பட நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் இந்தியர்கள் அனைவருக்கும் அறிவுறுத்துகிறது.

இனி உங்களது கருத்துகளை எதிர்நோக்கி...

மும்பை
26.12.03




OLD LIGHT HOUSE, RABBIT ISLAND, THOOTHUKUDI

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி II


ஹிந்தி வேண்டாம் என்றால் ஆங்கிலம் மட்டும் அந்நிய மொழியில்லையா? அதன் தேவை என்ன? உணர்வு பூர்வமாக அணுகினால் இந்த வாதம் சரியே! ஆனால் நடைமுறையில், இந்தியா ஒன்றுபட்டிருப்பதற்கு ஆங்கிலம் முக்கியமான ஒரு காரணம் என்று நான் உணர்கிறேன். இதை நான் சந்தித்த பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 345வது பிரிவின் படி மாநில அரசுகள் ஹிந்தியையோ அல்லது அந்தந்த மாநிலத்தில் பயன்படுத்தப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழியையோ தனது அலுவலகப் பணிகளுக்கான மொழியாக பயன்படுத்த அனுமதியளிக்கிறது.

348வது பிரிவின் படி குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று மாநில அரசு ஹிந்தியையோ அல்லது அந்த மாநிலத்தில் அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மொழியையோ அந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. இவ்வாறான ஒரு நிலையில் என்ன நிகழும்?

நீதிமன்றத்துக்கு நீதிமன்றம் குழப்பம் நிலவும். உயர் நீதிமன்றங்களில் இருந்து மேல் முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் செல்கையில் மேலும் குழப்பம். ஏறக்குறைய இவ்வாறான நிலையை கிறிஸ்தவர்களின் வேதத்தில் கூறப்படும் 'பாபேல் கோபுர' நிலைக்கு சட்ட மேதை எச் எம் சீர்வாய் ஒப்பிடுகிறார்.

ஆங்கிலம் ஒன்றே இந்த நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாக, நாட்டின் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்திருக்கும் பலர் அறிவர்.

-oOo-

1952ல் ஹிந்தியும், தேவநாகரி எண்களும் மாநில ஆளுஞர்கள், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிக்கும் உத்தரவில் பயன்படுத்தப்படலாம் என்பது நடைமுறைக்கு வந்தது.

1955ல் பிற அரசுப் பணிகளுக்காகவும் ஹிந்தி பயன்படுத்தப்படலாம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.

1956ல் அரசியலமைப்புச் சட்டம் விரும்பியபடி, ஹிந்தியின் பயன்பாட்டை அதிகரிக்க ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பி.ஜி.கெர் ஆணையம் தனது அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.

1959ல் கெர் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கோபிந் வல்லப் பந்த் தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற குழு தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆட்சி மொழியினைப் பற்றிய விவாதம் தொடங்கியது.

விவாதம் சூடு பிடிக்க, நேரு 'இந்தியாவின் அனைத்து மொழிகளும் அதன் தேசிய மொழிகளாக சமமாக மதிக்கப்படும். ஆங்கிலம் ஹிந்தியோடு தொடர்ந்து அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும். அதனை நீக்குவதற்கான கால அவகாசம் ஏதும் கிடையாது' என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.

ஆனால் தேசிய மொழி என்பது உணர்வு பூர்வமான பதம். சட்டபூர்வமான அங்கீகாரம் அதற்கு கிடையாது.

-oOo-

1960ல் ஹிந்தியை பரப்புவதற்காகவும், மைய அரசு அதிகாரிகளுக்கு ஹிந்தி பயிற்சி அளிப்பதற்காகவும், ஹிந்தி கலைச்சொற்கள், நடைமுறை வழக்கத்திற்காக ஹிந்தி கையேடுகள் உருவாக்கவும் மற்றும் உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் வண்ணம் ஹிந்தி சட்ட வரைவுகளை எழுதவும் அதிகாரமளித்து குடியரசுத் தலைவரின் உத்தரவு கையெழுத்தானது.

இந்த உத்தரவின்படி 45 வயதுக்கு குறைவான மைய அரசு அதிகாரிகள் கண்டிப்பான ஹிந்தி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். அதில் தேறாவிட்டால் தண்டனை ஏதும் கிடையாது என்றாலும் தேறியவர்களுக்கு ஊக்கத் தொகை போன்றவை வழங்கப்படும். ஹிந்தி பேசும் பகுதிகளில் உள்ள மைய அரசு பணிக்கான பணியாளர்களை நியமிக்கையில் அவர்களுக்கு தேவையான ஹிந்தி அறிவு இருத்தல் வேண்டும்.

1962ல் வெளியான ரயில்வே போர்டு அறிவிப்பு, 'ஹிந்தி பயிற்சி மிகவும் மந்தமாக இருப்பதாக கவலைப்பட்டு பயிற்சிக்கு வராத அலுவலர்கள் வேலைக்கு வராதவர்களாக கருதப்படுவார்கள்' என்று எச்சரித்தது.

போதாதா? தமிழக அரசியல் மொழிப் பிரச்னையில் மெல்ல மெல்ல புகையத் தொடங்கியது.

இதற்கிடையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பதினைந்து வருட கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. நேருவுக்கோ இரு பக்கமும் நெருக்கடி!

-oOo-

பதினைந்து ஆண்டுகள் ஆனாலும், ஆங்கிலத்தின் பிடியை நீக்க முடியவில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு 1965ம் வருடம் ஆட்சி மொழிகள் சட்டம்'1963 நடைமுறைக்கு வந்தது.

ஆட்சி மொழி என்னவோ ஒன்றுதான் என்றாலும் ஆட்சி மொழிகள் சட்டம் என்று பன்மையில் இந்த சட்டத்தின் தலைப்பு அமைந்திருப்பது சட்டத்தை இயற்றியவர்களுக்கே வெளிச்சம்!

இதன் மூலம் ஹிந்தி ஆட்சி மற்றும் அரசுப் பணிகளுக்கான மொழியென்றாலும், ஆங்கிலம் ஹிந்தியோடு சேர்ந்து பயன்படுத்தப் படலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் போராட்டம் தீவிரப்பட நேரு, 'ஹிந்தி பேசாத மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் நீக்கி ஹிந்தி மட்டுமே அரசு பயன்பாட்டு மொழியாக மாற்றப்பட மாட்டாது' என்று உறுதி கூறினார்.

இந்த உறுதிக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வகையில் 1968ல் ஆட்சி மொழிகளின் சட்டத்தில் 'அனைத்து சட்ட மன்றங்களும் ஆங்கிலத்தை நீக்கி ஹிந்தியை மட்டும் அரசு பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வரை, ஆங்கிலமும் ஹிந்தியோடு பயன்பாட்டு மொழியாக நடைமுறையில் இருக்கும்' என்று ஒரு திருத்தம் கொண்டு வரப்பட தமிழகம் அமைதியடைந்தது.

அதற்கிடையே இங்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய தி.மு.க ஆட்சிக்கும் வந்திருந்தது.

இதற்கிடையில் இந்த மொழிப்பிரச்னை முக்கியமான ஒரு மனிதரின் பதவியை காவு வாங்கியது. 1967ன் இறுதியில் 'ஆங்கிலத்தை விடுத்து ஹிந்திக்கு முதலிடும் கொடுக்கும் மந்திரி சபையின் கல்விக் கொள்கை' மீதான முடிவினை எதிர்த்து முன்பு கல்வி அமைச்சராக பணியாற்றிய வெளியுறவு மந்திரியும் சட்ட மேதையுமான எம்.சி. சாக்ளா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எது எப்படியோ, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஹிந்திக்கு மட்டுமே "முதலிடம்" என்று சொல்வதை விட ஹிந்திக்கு மட்டுமே "இடம்" என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும்.

அடுத்து இந்த மொழிப் பிரச்னை எப்படி நீதிபதிகளையும் பாதிக்கிறது என்று பார்க்கலாம்.

மும்பை
26.12.03